Anima- 35
Anima- 35
மல்லிக் ஈஸ்வரின் வீட்டிலிருந்து சென்றுவிட, அவனது அலுவலக அறைக்குள் நுழைந்த ஜெய்யை பார்த்துவிட்டு, அவனை பின் தொடர்ந்து வேகமாக அங்கே வந்தாள் மலர்.
அவள் வந்த வேகத்தைப் பார்த்துவிட்டு, நக்கலுடன், “என்ன அண்ணா! வீட்டுக்குள்ளேயே சரியான தள்ளுமுள்ளு போல இருக்கு! இங்கேயே பவுன்சரெல்லாம் வராங்க!” என ஜெய் சொல்லவும்,
“ஹா! ஹா! சரியா சொன்ன ஜெய்! என்னாலேயே சமாளிக்க முடியலைன்னா பார்த்துக்கோயேன்!” எனச் சிரித்துக்கொண்டே கிண்டலுடன் சொன்னான் ஈஸ்வர்.
அதில் உக்கிரமான மலர், “என்ன ரெண்டு பெரும் ஒண்ணு கூடிட்டு என்னையே கிண்டல் செய்யறீங்களா! இருக்கு உங்களுக்கு!” என்று எகிறியவள், “முக்கியமா உனக்கு!” என்று ஜெய்யை பார்த்து முறைத்தாள்.
“ஏய் லூசு! அடங்கவே மாட்டியா நீ?” என்றவன் ஈஸ்வரை நோக்கி, “பாருங்க அண்ணா! டிபார்ட்மெண்ட் சீக்ரட், நானே தயங்கித் தயங்கி போன்ல சொன்னா… உணர்ச்சிவசப்பட்டு, ஓவரா பேசிட்டு போறா இவ! அதை சொன்னா கோவம் பொத்துட்டு வருது!” என மலரைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசித்தான் ஜெய்.
“விடு ஜெய்! அவ சொன்னா புரிஞ்சுப்பா!” என்றான் ஈஸ்வர் மனைவிக்குப் பரிந்துகொண்டு.
ஜெய் விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தாலும், ஈஸ்வரைப் பற்றிப் பல சந்தேகங்கள் அவன் மனதிற்குள் ஓடிக்கொண்டேதான் இருந்தது.
அவன் ஈஸ்வரிடம் கொண்டிருந்த மரியாதை காரணமாக, அதுவும் மலர் அங்கு இருக்கவும் அவளுடைய முன்னிலையில் ஈஸ்வரிடம் விசாரணை நடத்துவதுபோல் தோன்றிவிடக் கூடாது என்று எண்ணியே, அந்த சூழ்நிலையைச் சகஜமாகக் கொண்டுசெல்ல விரும்பினான் அவன்.
மலரோ… ஜெய் அங்கே இருக்கும் பொழுது, பாதியிலேயே ஈஸ்வர் சென்றதன் காரணத்தை கேட்பதா வேண்டாமா எனத் தயக்கத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
அவளுடைய முகத்தில் குடிகொண்டிருந்த குழப்ப ரேகையைப் படிக்க முயன்றவாறே, “அண்ணா! பை எனி சான்ஸ்… உங்களுக்கு அந்த டிப்புவோட பாமிலியை தெரியுமா?” என்று எதார்த்தமாகக் கேட்பது போல் கேட்டான் ஜெய்.
அவனிடமிருந்து அப்படி ஒரு மறைமுக விசாரணையை எதிர்நோக்கியே இருந்ததால் கொஞ்சமும் பிறழாமல், “என்ன ஜெய் கிண்டல் பண்றியா? அவங்கள எனக்கு எப்படித் தெரியும்?” என்றான் ஈஸ்வர்.
“இல்ல அன்னைக்கு வீடியோ கால் பேசும் போது, உங்களோட ரியாக்ஷனை பார்த்ததும் எனக்கு அப்படி தோணிச்சு! சாரி!
டிப்பு காணாமல் போனது உங்களை ரொம்பவே பாதிக்க மாதிரி எனக்கு ஒரு பீல்!
சூட்டோட சூடா கருணா மாமா கிட்ட பேசி என்னவெல்லாம் செஞ்சு முடிச்சிருக்கீங்க!
எல்லாமே அந்த பையனைக் கண்டுபிடிக்கத்தானே?!
ஷூட்டிங்கை வேற சீக்கிரமா முடிச்சிட்டு, அவசரம் அவசரமா கிளம்பி இங்கே வந்துடீங்களா!” எனச் சரியாக அவனது நாடியைப் பிடித்துப் பார்த்தது போல் சொன்ன ஜெய், தொடர்ந்து, “இன்னைக்கு வேற நான் மல்லிக்கை பற்றி சொன்னவுடன், நீங்க அங்கிருந்து பாதியிலேயே போடீங்களா… அதுதான்!” என்று இழுக்கவும், அவனுடைய போலீஸ் புத்தியை நினைத்து அதிர்ந்தாள் மலர்.
ஆனால் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாதது போல், “என்ன ஜெய்! இந்த மாதிரி விஷயங்களைக் கேட்கும்போது எல்லோருக்கும் ஏற்படும் வருத்தம்தான் எனக்கும், மற்றபடி வேற எதுவும் இல்ல!
அந்த பையனுக்காக மட்டும் இல்ல, இப்படி அனாமத்தா கடத்தப்படும் எல்லா குழந்தைகளுக்காகவும் தான் நான் அதைச் செய்தது.
பர்டிகுலர்லி ஜீவன் கொடுத்த எக்ஸ்பீரியன்ஸ்தான் காரணம்!” என வெகு ஜாக்கிரதையுடன் சொல்லி முடித்தான் ஈஸ்வர்.
“ஓஹ்! சாரி அண்ணா! நான்தான் அவசரப்பட்டு என்னென்னவோ திங்க் பண்ணிட்டேன்!‘ என்று விட்டுக்கொடுப்பதுபோல் சொன்ன ஜெய், “ஆனால்… ஏதாவது சூழ்நிலையில் அந்த மல்லிக் பற்றியோ, இல்ல சோமய்யாவை பற்றியோ எதாவது உங்களுக்குத் தெரியவந்தால்… என்னிடம் கொஞ்சம் ஷேர் பண்னுங்க!
ஏன்னா, அவன் கொலை செய்வது கெட்டவங்களையா இருந்தாலும், அவன் ஒரு பெரிய நெட்வொர்க்கோட சேனல் லிங்க்கை கட் பண்ணிட்டு இருக்கான்!
அதுல ஒருத்தன் கிடைச்சாலும் அதோட மாஸ்டர்ப்ரைன் யாருன்னு ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்!” என்றான் ஜெய்.
என்னதான் அவன் சுமுகமாகப் பேசுவதுபோல் பேசினாலும், அவனது காவல்துறை விசாரணையும் அதில் அடங்கி இருப்பது ஈஸ்வருக்கு நன்றாகவே புரிய, மலருக்கோ, ‘ஏன் இவன் நம்ம ஹீரோ கிட்ட இப்படியெல்லாம் பேசறான்!’ என்ற கேள்வி எழுந்தது.
‘என்ன இருந்தாலும் நீ போலீஸ்தான ஜெய்! உன்னை மாதிரி ஒரே ஒரு நல்ல போலீசும், கருணா மாதிரி ஒரே ஒரு நல்ல அரசியல்வாதியும் மட்டும் நம்ம நாட்டுக்கு போறாது!
நல்லது செய்யணும்னு நீங்க நினைச்சாலும் பக்கத்துல இருக்கறவங்க உங்களைத் தொடர்ந்து செய்ய விடமாட்டாங்க!
மல்லிக்கை பற்றி உங்கிட்ட சொன்னால், அவனோட உயிருக்கே ஆபத்தாய் முடியும்! சோ நான் சொல்ல மாட்டேன்!
ஆனால் அவனுக்கும் உனக்கும் நடுவில் இருந்துட்டு… உங்க ரெண்டு பேருக்குமே என்னால நன்மை செய்யமுடியும்!‘ என மனதிற்குள் எண்ணிய ஈஸ்வர், “கண்டிப்பா ஜெய்! இந்த விஷயத்தில் நான் உனக்கு முழு சப்போர்ட் கொடுப்பேன்!” என்றான் மனதிலிருந்து.
ஈஸ்வர் அப்படிச் சொல்லவும், “ஜெய் ஒரு வேளை அந்த மல்லிகார்ஜுன் கிடைச்சான்னா, அவனை என்ன செய்வீங்க?” என தன் மனதில் எழுந்த சந்தேகத்தை மலர் கேட்க,
“வேற என்ன, இருக்கவே இருக்கு குண்டாஸ்! அதுல அவனை அர்ரெஸ்ட் பண்ணி… கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணுவோம்!
அதன் பிறகு, ஜட்ஜ் என்ன சொல்றாரோ, அதுபடி அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையோ இல்ல அதுக்கு மேலயோ கிடைக்கும்!
அவனுக்குப் பண பலம், அரசியல் பாக்ரவுண்ட் எதுவும் இருக்க வாய்ப்பில்லை!
அதனால உணர்ச்சிவசப்பட்டு அவன் செஞ்ச கொலைகளால ஜெயில்லயே அவனோட லைப் முடிஞ்சுபோயிடும்!” என்றான் ஜெய் விரக்தியுடன்.
“ஆனாலும் அவனை நீ அர்ரெஸ்ட் பண்ணியே ஆகணும் இல்ல ஜெய்?
நீ சொன்ன மாதிரி அவன் செஞ்ச கொலைகளுக்காக, ஜெயில்ல உயிரோட இருந்தால்கூட பரவாயில்ல…
எப்படியும் இந்த சைல்ட் ட்ராபிக்கிங்ல இன்வால்வ் ஆகி இருக்கறவங்களுக்கு அரசியல் சப்போர்ட் இல்லாம இருக்காது.
அதனால வேற வழி இல்லாம… அவங்கள தப்ப வைக்க, இந்த மல்லிக்கோட கதையை முடிக்கப்போறீங்க!” என்றாள் மலர் காட்டமாக.
கோபத்தில் அவளது குரல் வேறு ஓங்கி ஒலிக்கவே, அதுவும் அவனுடைய வேலையைப்பற்றி அவள் விமர்சிக்கவும், அதில் அவனது தன்மானம் சீண்டப்பட, “ஷட் அப் மலர்! ரொம்ப அதிகப்படியா பேசற… நான் என்ன செய்ய போறேன்னு, வெயிட் பண்ணி பாரு! இப்பவே எல்லாத்தையும் பேசி முடிச்சிடாத!” என்றான் ஜெய்.
“யாரோ முகம் தெரியாதவனுக்காக, நீங்க ரெண்டுபேரும் ஏன் சண்டை போடுறீங்க?
முதலில் உங்க சண்டையை நிறுத்துங்க!” என்றான் ஈஸ்வர், அந்த மல்லிகார்ஜூன் அவனைப் பொறுத்தவரை ஒரு முகம் தெரியாதவன் என்பதை ஜெய்க்கு உணர்த்தும் விதமாய்.
அவனது வார்த்தைகளில் அமைதி ஆனார்கள் இருவரும்.
ஆனாலும் இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.
அவர்கள் இருவருடைய மனநிலையையும் மாற்ற எண்ணி, “எல்லாமே ஓகேதான்… ஆனா எல்லாரும் சேர்ந்து இப்படி என் லைஃப்ல விளையாடுறீங்களே, இது எந்த விதத்துல நியாயம் ஜெய்?” எனக் கேட்டான் ஈஸ்வர் தீவிரக்குரலில்.
அதில் திடுக்கிட்டவனாக, “சாரி…ணா என்ன சொல்றீங்கன்னு புரியல!” என தடுமாற்றத்துடன் ஜெய் சொல்லவும்,
“இல்ல… இந்த கேஸெல்லாம் முடிஞ்சு நாங்க எப்பதான் ஹனிமூன் போறது… ம்?
அதுக்காகவாவது, நீ இந்த சைல்ட் கிட்னப்பிங் ராக்கெட்டை சீக்கிரம் கண்டுபிடிக்கணும் ஜெய்!” என்று கொஞ்சமும் சிரிக்காமல் சொன்ன ஈஸ்வர், “எது எதுக்கோ அவன்கிட்ட சண்டை போடுற நீ! இதுக்காகவும் கொஞ்சம் அவன்கூட ஃபைட் பண்ணலாமில்ல ஹனி!?” என்றான் மலரைப் பார்த்து கண் சிமிட்டியவாறே!
அவனது பேச்சில் முகம் சிவந்தவளாக, “ஐயோ! விவஸ்தையே இல்லாம இப்படி பேசுறீங்களே!” என்று தலையில் அடித்துக்கொண்டு, அவர்களுக்குப் பழரசம் எடுத்துவருவதாகச் சொல்லிவிட்டு, நாணம் மேலிட அங்கிருந்து ஓடியே போனாள் மலர்.
“ஐயோ! இந்த ராணி மங்கம்மாவை, செம்மையா டீல் பண்றீங்கண்ணா நீங்க! நீங்கதான் அவளுக்குச் சரியான ஆளு!” என்றான் ஜெய் சிரித்தவாறே.
“இல்லனா அவளை எப்படி சமாளிக்கிறது ஜெய்!” என்றவன், “மீண்டும் உயிர்த்தெழு! படம் ரிலீசான பிறகுதான் இருக்கு என்னோட ரியல் ஷோவே!” என்றான் ஈஸ்வர் உண்மையான திகிலுடன். அதை கேட்டு அதிர்ந்து சிரித்தான் ஜெய், அடக்கமுடியாமல்.
பிறகு மலர் எடுத்துவந்த பழரசத்தை அருந்திவிட்டு, வீட்டில் எல்லோரையும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு,அங்கிருந்து கிளம்பினான் ஜெய்.
அவனை வழி அனுப்ப வந்த மலரிடம், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க வந்திருந்தாரே ஒரு பவுன்சர் அவரோட நேம் என்ன!” என்று கேட்டான் ஜெய்.
‘எதுக்கு அவரோட பேரையெல்லாம் கேக்கறான் இவன்?’ என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், “மாலிக்!” என்று பதில் சொல்லவும் செய்தாள் மலர்.
“அவரோட ஃபுல் பேரே அதுதானா?” என்று ஜெய் அடுத்த கேள்விக்குத் தாவவும், “வேணா அவரோட ஜாதகம் இருந்தால் வாங்கி வந்து தரட்டுமா ஜெய்! கேக்கறான் பாரு கேள்வி!” என்றாள் மலர் நக்கல் கலந்த குரலில்.
“நோ தேங்க்ஸ்! எதாவது பொண்ணோட ஜாதகமா இருந்தாலும் பரவாயில்ல! அவரோட ஜாதகத்தை வெச்சிட்டு நான் என்ன செய்ய போறேன்!” என்றான் ஜெய் அதைவிட நக்கலாக.
“அடப்பாவி! இரு இதை இப்பவே ராசா… ரோசா ரெண்டுபேர் கிட்டயும் சொல்லி உனக்கு ஒரு கால் கட்டுப் போட வழி பண்றேன்!” என்று மலர் தீவிரமாகச் சொல்லவும்…
“தாயே நீ செஞ்சாலும் செய்வ! ஆளை விடு! அப்புறம் உன் ஹீரோ பீல் பண்ற மாதிரி… என்னோட ஹீரோயினும் பீல் பண்ணப்போறா! என்ன விட்டுடு!” என்று சொல்லிக்கொண்டே அவன் பைக்கை கிளப்ப,
“அது! அந்த பயம் இருக்கணும்!” என்று சொல்லி மலர் கலகலத்துச் சிரிக்கவும், அவளுடைய மலர்ந்த முகத்தைப் பார்த்து நிம்மதி அடைந்தவனாக அங்கிருந்து சென்றான் ஜெய்.
***
அன்றைய இரவு முழுதும், டிப்புவையும், மல்லிக்கையும் நினைத்து உறக்கமின்றி தவித்த ஈஸ்வர், ஒரு முடிவுக்கு வந்தவனாக, அதிகாலை கண் விழித்த மறுகணம், அவர்களைப் பற்றிய அனைத்தையும் மலரிடம் சொல்லி முடித்தான்.
“என்ன அந்த ஹாப்பி மேன்தான் டிப்புவோட அப்பாவா?!” என நம்பவேமுடியாமல் அதிசயித்துப் போனாள் மலர்.
சில தினங்களுக்கு இதைப் பற்றி ஜெய்யிடம் எதையும் சொல்லவேண்டாம் என அவளை எச்சரித்தவன், அவள் சொன்னதன்பேரில் தனியார் மருத்துவமனை ஒன்றில், அதன் மனோதத்துவ மருத்துவ பிரிவில், சோமய்யாவின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான்.
சோமய்யா சிகிச்சைக்காக அங்கேயே சில தினங்கள் தங்கியிருக்க வேண்டிய காரணத்தால், அவனுக்குத் துணையாக சக்ரேஸ்வரி அங்கே இருக்கவும் ஏற்பாடு செய்திருந்தான்.
அன்று காலையே கிளம்பி மலரை அழைத்துவந்து சுசீலா மாமி குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாயிலில் அவளை இறக்கி விட்டவன், அங்கே சுருண்டு கிடந்த சோமய்யாவை ஒரு பரிதாப பார்வை பார்த்தவாறு, “இன்னும் கொஞ்ச நேரத்துல அம்புலன்ஸ் வந்துடும் மலர்! சோமய்யாவை ஜாக்ரதையா அம்புலன்ஸ்ல ஏத்திவிட்டுட்டு, நீ மாமி வீட்டிலேயே இரு! நான் என் வேலை முடிஞ்சதும் உன்னை வந்து பிக்கப் செய்துக்கறேன்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் ஈஸ்வர்.
அதன் பின்புதான், சக்ரேஸ்வரியை சந்திக்க, அவர்களுடைய வீட்டிற்கு வந்தான் அவன். முன்பே சொல்லி இருந்த காரணத்தால், அங்கேயே காத்திருந்தான் மல்லிக்.
அவனைப் பார்த்தவுடன், மனம் உடைந்து அழுத சக்ரேஸ்வரியை ஆறுதல் சொல்லித் தேற்றியவன், சோமய்யாவின் சிகிச்சையைப் பற்றி அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னான்.
உடனே அவனது அழைப்பின் பெயரில் அங்கே வந்த தமிழுடன் அவளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் ஈஸ்வர் மற்றும் மல்லிக் இருவரும்.
அதன் பின் தனிமையில், தன்னை பற்றிய உண்மைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஈஸ்வரிடம் சொல்லி முடித்தான் மல்லிக்.
***
தனது தேநீர் விடுதியிலிருந்து, அந்த குடியிருப்பின் முன்பாக கூடியிருந்தவர்களைப் பார்த்துவிட்டு அங்கே வந்த தீனா, மலரை நோக்கி, “என்ன மலரு! இவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கபோறியா?” என்று கேட்கவும், “அம்மாம்ப்பா தீனா! பெரிய ஆஸ்பத்திரில இவனை காமிக்க ஏற்பாடு பண்ணியிருக்கார் நம்ம ஈஸ்வர்!” என அவளை முந்திக்கொண்டு பதில் சொன்னார் அங்கே நின்றுகொண்டிருந்த கோபாலன் மாமா.
இதற்கிடையில், சோமய்யா உச்சரித்த ‘சங்கரய்யா‘ என்ற பெயரில் கொஞ்சம் குழம்பிய மலர், சுசீலா மாமி குடி இருக்கும் பிளாட்டின் எதிர் பிளாட்டில் தங்கி இருக்கும் சங்கரைப் பற்றித்தான் அவன் எதோ சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
ஏனென்றால் அந்த வீட்டின் ஜன்னலை நோக்கித்தான் சோமய்யா முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் நெடுநேரம் காணாமல் போன ஜீவனை, அவனுடைய வீட்டிற்குள் உறங்கிய நிலையில் அவர்கள் கண்டுபிடித்ததும் அவளது நினைவில் வந்தது.
தனது எண்ணங்களிலிருந்து கலைந்த மலர், சோமய்யாவை பார்க்கவும், அவன் மனமின்றி ஆம்புலன்சில் ஏறினான்.
அவனை ஏற்றிக்கொண்டு, அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து விரையவும்,மாமியுடன் அவர்களுடைய வீட்டிற்குப் போனாள் மலர்.
***
பட்டிபுலம் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது, நீச்சல்குளம், ஜிம் என அனைத்தையும் உள்ளடக்கிய அந்த பிரமாண்டமான பங்களா.
அழகிய மிகப்பெரிய தோட்டத்திற்கு நடுவிலிருந்தாலும், ஆள் அரவமே இன்றி சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, பார்ப்பவரை மிரளவைக்கும் விதமாக இருந்தது அந்த இடம்.
கடல் அலைகளின் ஒலி செவிகளில் இரைச்சலைக் கொடுக்க, தலை கீழாகத் தொங்கவிடப்பட்ட நிலையிலிருந்ததால் பலமாகத் துடிக்கும் இதயம் அவனது வாய்வழியாக வெளியில் விழுந்து தெறித்திடுமோ என்பதுபோல், அலறிக்கொண்டிருந்தான் சங்கரய்யா!
உயிர் பயம் அவனது கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.