imk-28

imk-28

௨௯(29)

காதல் பரிசு

தமிழச்சி மதியிடம் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் முதலில் சிம்மவிற்கு சற்று குழப்பமாய் இருந்தாலும் பின் தெள்ளத்தெளிவாய் விளங்கிற்று.

‘ஒ! அப்போ உன் மனசலையும் நான்தான் இருக்கேனா மதி?’ தனக்குள்ளேயே கேட்டு மகிழ்ந்து கொண்ட சிம்மா கதவின் இடுக்கில் இருந்து வெளியே பிரசன்னமாக, மதி தவிப்போடு அவன் முகத்தை பார்த்திராவண்ணம் எதிர்புறமாய் திரும்பி நின்று கொண்டாள்.

‘ச்சே! இந்த தமிழச்சி பேசுனதை எல்லாம் கேட்டு என்னை பத்தி என்ன நினைச்சிக்கிட்டாரோ? அவளுக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை’ என்று மனதார தன் தோழியை வைதுக் கொண்டிருக்க,

“மதி” என்ற சிம்மாவின் அழைப்பு அவளின் எண்ணவோட்டத்தை கலைத்தது. அதேநேரம் அவனின் அந்த அழைப்பு முன்பு போல் அல்லாது சற்றே வித்தியாசமான தோரணையில் ஒலித்தது.

பதட்டத்தில் நின்றவள் அவனை திரும்பியும் பாராமல், “தமிழச்சி சும்மா விளையாட்டுக்கு அப்படி எல்லாம் சொன்னா… நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க” என்று சமாளிக்க முற்பட்டு, ‘என் அப்பன் புதருக்குள் இல்லை’ என்று அவள் தானே வலிய சென்று சிக்கி கொண்டாள்.

சிம்மாவின் கம்பீரமான சிரிப்பு ஒலி மதியின் காதில் ஒலிக்க, அவன் மனதில் தன்னை குறித்து என்னவெல்லாம் எண்ணி கொண்டிருப்பானோ என்று அவளுக்கு படபடப்பானது. அ

ப்போது சிம்மா அவள் பின்னோடு வந்து நின்று,  “ஏன் மதி என் முகத்தை பார்க்காம திரும்பியே நிற்கிற… என்னவோ இன்னைக்குத்தான் என்ன புதுசா பார்க்கிற மாறி… உஹும்ம்…ஏதோ சரியில்லையே” என்றவன் சூசகமாய் சொல்லி சிரிக்க,

அந்த நொடியே அவன் புறம் திரும்பியவள், “அப்படியெல்லாம் இல்ல… நான் சரியாதான் இருக்கேன்… உங்க தங்கச்சி ஏதோ லூசாட்டம் உளறிட்டு போனா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்றவள் திக்கி திணறி உளறிய அதே நேரம் அவனை பார்த்து முறைத்து கொண்டே பேசிய விதத்தில் அவளின் கோபமான மனநிலையை அவன் ஒருவாறு உணர்ந்து கொண்டான்.

“என்னாச்சு மதி… ஏன் இவ்வளவு கோபம்?” என்று அவன் நிதானமாய் கேட்க,

“எனக்கு என்ன கோபம்… அதெல்லாம் இல்ல” என்றவள் வேகமாய் சென்று தன் பெட்டியை நிமிர்த்தி பிடித்து கொண்டு, “ஃப்ளைட்டுக்கு டைமாச்சு… நான் கிளம்பினோம்” என்று சொல்லி கொண்டே அந்த அறையை விட்டு வெளியேற முனைந்தாள்.

சிம்மா அவளை வழிமறித்து நின்று கொண்டு, “எங்க மதி கிளம்புற?” என்று கேட்க,

“வேறெங்க? மும்பைக்குத்தான்” என்றவள் முறுக்கி கொண்டு பதிலளிக்க, “சொல்லவே இல்ல” என்று அவன் அதிர்ச்சியோடு நின்றான்.

“நான் அத்தை மாமாகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்… அதுவும் இல்லாம அத்தைதான் இப்போ குணமாயிட்டாங்க இல்ல… இனிமே என்னகென்ன இங்க வேலை” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே உணர்சிவசத்தாலும் ஏமாற்றத்தாலும் அவள் விழியில் நீர் தளும்பி நிற்க சிம்மா பதறி கொண்டு, “என்ன மதி? இப்படி எல்லாம் பேசுற… நம்ம வீட்ல யாரச்சும் உன்னை காயப்படுத்திற மாறி நடந்திக்கிட்டோமா” என்று வினவினான்.

அவள் தன் கண்ணீரை துடைத்து கொண்டபடி, “சேச்சே… அப்படி எல்லாம் இல்ல… எனக்கு போக வேண்டிய வேலை… அதான்” என்றவள் குரல் தழுதழுத்தது.

அவள் ஏன் தன்னிடம் இப்படியெல்லாம் பேசுகிறாள் என்ற யோசனையோடு அவன் தயங்கி அங்கேயே நிற்க  அவள் புறப்பட வேண்டும் என்று முடிவோடு, “டைமாச்சு… நான் கிளம்பிறேன்” என்றாள்.

“நான் வேணா டிராப் பண்ணவா?” என்றவன் கேள்வியாய் அவளை பார்க்க, “இல்ல இல்ல… அப்பா வருவாரு… நான் போயிக்கிறேன்” என்று அவன் முகம் பார்க்க கூட தவிர்த்துவிட்டு அவள் செல்லவும் அவனால் அந்த நிராகரிப்பை தாங்க முடியவில்லை. அவன் மௌனமாய் நின்றுவிட… அவள் முன்னேறி சென்ற சமயம்,

“உன்னை காணாது நான் இங்கு நானில்லையே!

விதையில்லாமல் வேர் இல்லையே!”

என்ற இந்த பாடலின் ஒலி கேட்டு மதி அப்படியே நின்று தன் கைப்பையை துழாவி பேசியை எடுத்து பார்ததாள். ஆனால் அழைத்தது அவள் பேசி அல்லவே.

சிம்மாவினுடையது. அவன் தன் சட்டை பேக்கெட்டில் இருந்த தன் பேசியின் அழைப்பை ஏற்று காதில் வைத்து கொண்டு, “சரி மதி… பார்த்து போயிட்டு வா” என்று சொல்லி கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

ஏனோ அந்த பாடலை கேட்ட பின் அவளுக்கு போகவே மனம் வரவில்லை. ஏதோ ஒன்று அவளை தடுத்து நிறுத்தியது. மீண்டும் பின்வாங்கி தன் படுக்கையின் மீது தலையை சாய்த்து பிடித்து கொண்டு அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்கிளில், “ஏ அழகி” என்று கோபமாய் குரல் கொடுத்து கொண்டே தமிழச்சி  உள்ளே வந்தாள். மதி பதில் பேசாமல் இருந்த நிலையிலேயே கிடந்தாள்.

“ஆமா… நீ மும்பை கிளம்பிறியாமே…?” என்று அடுத்த கேள்வியோடு மதி முன்னே வந்து தமிழச்சி நிற்க,  மதி தன் தோழியை ஏறிட்டு பார்க்கும்  போதே அவள் கண்ணீர்  மடை திறந்தது.

“அழகி என்னாச்சு?” என்று சொல்லிவிட்டு தமிழச்சி அப்படியே மண்டியிட்டு அவள் முன்னே அமர, தோழியிடம் எதையும் மறைக்க விரும்பாமல் தன் வேதனைகளை முழுவதுமாய் கொட்டி தீர்த்தாள்.

அவள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாய் கேட்டிருந்த தமிழச்சி முறைப்போடு எழுந்து நின்று, “சரியான லூசு கூமுட்டையா இருப்ப போல… என் அண்ணனை பார்த்தா வெளிநாட்டில இருந்து ஒரு வெள்ளைகாரியை தள்ளிட்டு வர மாறியா தெரியுது” என்று கேட்க,

“அப்படி இல்ல” என்று பதில் சொல்ல முடியாமல் மதி தடுமாறினாள்.

“பேசாதே… அறைஞ்சு பல்லை கழட்டிடுவேன்… ஜெஸ்சி யார் தெரியுமா?… சிம்மா ஸ்கூல் ஃப்ரெண்ட் நந்துவோட வொய்ஃப்” என்று சொல்லி முடித்தாள்.

மதி அதிர்ச்சி நிறைந்த பார்வை பார்க்க தமிழச்சி மேலும், “என்ன எதுன்னு கூட விசாரிக்காம அதுக்குள்ள ஊருக்கு போகவே கிளம்பிட்ட… சரியான லூசுடி நீ” என்று சீற்றமாய் உரைக்க,  “ச்சே… எனக்கு அறிவே இல்ல” என்றபடி மதி தலையிலடித்து கொண்டாள்.

“அதான் தெரியுமே… அதானால்தான் நானும் முகிலும் உன் பேர்ல இருக்க மதியை கட் பண்ணிட்டு அழகின்னு கூப்பிடுறோம்” என்று தமிழச்சி இப்போது கிண்டல் தொனியில் சொல்லி சிரித்தாள்.

“ப்பே” என்று நொடித்து கொண்டாள் மதி.

“செய்றதெல்லாம் செஞ்சிட்டு… இப்போ எதுக்கு என்கிட்ட கோவிச்சுக்கிற” என்று தமிழச்சி கேட்க மதி நிதான நிலைக்கு வந்து, “சரி அதை விடு… இப்போ நான் என்ன பண்ணட்டும்… அதை சொல்லு” என்ற கேட்டாள்.

“ஒழுங்கா ஊர் போய் சேர வழிய பாரு” என்று தமிழச்சி கடுப்பாய் சொல்லிவிட்டு செல்ல, மதி தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி தொடர்ச்சியாய் தலையிலடித்துக் கொண்டாள். வேறென்ன செய்வதென்றே அவளுக்கு புரியவில்லை.

‘அத்தை மாமா கிட்ட எல்லாம் கிளம்பிறேன்னு சொல்லியாச்சு… இப்ப எப்படி போகாம’ என்று தனியாக புலம்ப, “மதி டைமாச்சு… இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க” என்று பரபரப்பாய் கேட்ட தந்தையின் குரலில் அவள் மேலும் பதட்டமானாள்.

“ராமு… இந்த பெட்டியை எடுத்துட்டு போய் கீழே கார்ல வையுங்க” என்று ரவி அப்போது வேலையாளிடம் பணிக்க மதி பதறி கொண்டு, “எதுக்கு… அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நீங்க போங்க ராமு”என்றாள்.

ரவி புரியாமல் மகளை பார்க்க ராமுவோ அவரை பார்த்து கொண்டு தயங்கி நின்றார்.

மதி மீண்டும், “ஏன் நிற்கறீங்க ராமு? போங்க” என்று மிரட்டாலாய் குரல் கொடுக்க, அந்த வேலையாளும் விரைந்து அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

ரவி மகளை குழப்பமாய் பார்த்து, “டைமாச்சு மதி… கிளம்ப வேண்டாமா?” என்று சொல்ல,

“பேசாதீங்க ப்பா… நான் போகணும்னு சொன்னா… நீங்க உடனே டிக்கெட் புக் பண்ணிடுவீங்களா?” என்று அவரிடம் ஆவேசமாய் பொங்கினாள்.

“நீதானேமா… உடனே டிக்கெட் புக் பண்ணுங்கன்னு அடம் பிடிச்ச”

“அடம் பிடிச்சா… அதுக்கு சொல்லி புரிய வைக்கணும்… அதை விட்டுட்டு”

“நான்தான் வேண்டாம்னு உன்கிட்ட சொன்னேனே” என்று ரவி மகளை பெரும்குழப்பத்தோடு பார்க்க,

“பண்றதெல்லாம் பண்ணிட்டு பேசாதீங்கப்பா” என்று அவள் சொல்லி அவர் வாயை அடைத்தவள், “ஒழுங்கா டிக்கெட் கேன்சல் பண்ணுங்க சொல்லிட்டேன்” என்று மிரட்டல் விடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேற, ரவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. மொத்தத்தில் அவளுக்கு போக விருப்பமில்லை. அதுவரைக்கும் கொஞ்சமாய் அவருக்கு புரிந்து போனது.

ஆனால் நடந்தவற்றின் முழு சூட்சுமமும் தெரிந்த தமிழச்சி அறை வாசலில் நின்று மதியை பார்த்து கேலி செய்து அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தாள்.

மதி கடுப்போடு, “சிரி சிரி… உனக்கு என் கஷ்டமும் வலியும் சத்தியமா புரியாது” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள்.

“கோபப்படறத விட்டுட்டு முதல உன் மனசுல இருக்கிறதை போய் அண்ணாகிட்ட சொல்லு” என்று தமிழச்சி சிரிப்பை நிறுத்திவிட்டு நிதானமாய் சொல்ல, “அது எப்படி… அவர்கிட்ட நான்” என்று தயக்கமாய் பார்த்து முகத்தை சுருக்கினாள்.

“உஹும்… நீ இப்படியே இரு… ஒரு நாள் இல்ல ஒரு நாள்… எங்க அண்ணன்… ஏதோவது ஒரு கோவில் குருக்கள் பொண்ணையோ இல்ல அர்ச்சனை கூடை விற்கிற பொண்ணையோ தள்ளிட்டு வர போறான்” என்று சொல்லவும், “கொன்னுடுவேன்” என்று மதி சீற்றமாய் கத்தினாள்.

“இந்த சவுண்டெல்லாம் இங்க கொடுக்காத… முடிஞ்சா உன் ஆள்கிட்ட போய் கொடு” என்று தமிழச்சி கடுப்பாய் வார்த்தைகளை வீச மதி ஆவேசமாய், “நான் இப்பவே போய் அவர்கிட்ட பேசுறேன்” என்றாள்.

“பேசுவியா இல்ல போன வேகத்தில ரீவர்ஸ் கீர் போட்டு திரும்பி ஓடி வந்திருவியா?” என்று தமிழச்சி கேலியாய் நகைத்து கொண்டே கேட்க, மதி ஏறஇறங்க பார்த்துவிட்டு நேராய் சிம்மாவின் அறைக்குள் சென்று நின்றாள்.

அவன் மும்முரமாய் தன் லேப்டாப்பை ஆராய்ந்து கொண்டே தன் பேசியில் உரையாடி கொண்டிருந்தான். இவள் வந்து நின்றதை அவன் கவனிக்கவில்லை. இந்த சமயத்தில் தான் எப்படி பேசுவது என்று யோசித்து கொண்டே மதி பின்வாங்க எத்தனிக்க தமிழச்சியின் கேலி வார்த்தைகள்அவள் காதில் ஒலித்தன.

‘உஹும்… எந்த காரணத்தை கொண்டும் பின்வாங்க கூடாது… கண்டிப்பா இன்னைக்கு சொல்லிடணும்’  என்று அவள் தீர்க்கமாய் எண்ணி கொண்டிருக்கும் போதே சிம்மா அவள் வாசலில் நிற்பதை பார்த்து,
“உள்ளே வா மதி… ஏன் அங்கேயே நிற்கிற” என்றவன்

தான் அலைபேசியில் உரையாடி கொண்டிருந்த நபரிடம், “நான் திரும்பியும் கூப்பிடுறேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

அவளோ அவன் முகத்தை பார்க்க கூட தயங்கி நிற்க,

“என்ன மதி… அப்பவே கிளம்பணும்னு சொன்ன… இன்னும் டைம் ஆகலையோ?” என்றவன் அவளிடம் கேட்க அவள் தவிப்போடு, “அது வந்து… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவள் தடுமாறி கொண்டே சொல்ல அவன் முறுவலித்து, “அதுகென்ன பேசலாமே… நீ முதல்ல உட்காரு” என்று தன் அறையிலிருந்த இருக்கையை காண்பித்தான்.

“இல்ல பரவாயில்லை… நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன்”

“ஏன் இவ்வளவு பதட்டபடுற… என்ன விஷயமா இருந்தாலும் நிதானமா சொல்லு” என்றான்.

“முடியலையே… எனக்கு ரொம்ப ஸ்டிர்ஸ்டா  இருக்கு… உங்ககிட்ட என் மனசுல இருக்கிறதை சொல்ல முடியாம… சொன்னா நீங்க எப்படி எடுத்திப்பீங்களோன்னு… பயந்து பயந்து.. ஆனா இனிமே என்னால முடியாது… நான் என் மனசுல இருக்கிறதை சொல்லத்தான் போறேன்…” என்றவள் அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தவிப்போடு பேசி கொண்டிருக்க அவன் இடையிட்டு எதுவும் பேசாமல் தன் கரங்களை கட்டி கொண்டு மௌனமாய் அவளை பார்த்திருந்தான்.

“நான் உங்களை விரும்புறேன்… இன்னைக்கு நேத்து இல்ல… சின்ன வயசுல இருந்தே… இதை சொல்லணும்னுதான் எனக்குள்ள அவ்வளவு போராட்டம்… இப்போ சொல்லிட்டேன்… இனிமே நீங்க முடியாதுன்னு சொன்னாலும் பரவாயில்ல” என்றவள் தன் விழிகளில் நீரூற்றாய் வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டே பேச,

“ஏ மதி” என்று அவன் உடனடியாய் அவளை நெருங்கி தன் கரங்களால் அவள் கண்ணீர் வழிந்திருந்த கன்னங்களை துடைத்தபடி, “நான் ஏன் முடியாதுன்னு சொல்லணும்… எனக்குதான் உன்னை ரொம்ப பிடிக்குமே” என்க, அவள் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

“உன் மனசுல நான் இருக்க மாறி… என் மனசுலயும் நீதான் மதி இருக்க… இதை நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லி இருப்பேன்… ஆனா அப்போ உன் மனசுல நான் இருக்கேனான்னு எனக்கு சரியா தெரியல… இன்னைக்கு தமிழச்சி பேசுனதை வைச்சுதான் உன் மனசுலையும் நான்தான் இருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்… சரி அம்மாகிட்ட சொல்லிட்டு… உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்… ஆனா நான் சத்தியமா நினைக்கல… நீ என்னை நினைச்சிக்கிட்டு இவ்வளவு கஷட்டபட்டிட்டு இருக்கன்னு…”

என்றவன் அவள் கன்னங்கள் ஏந்தி விழிகள் பார்த்து சொல்லி கொண்டிருக்க  இமைக்கவும் மறந்து அவன் வார்த்தைகளை கேட்டு மெய்மறந்து நின்றுவிட்டாள்.

அத்தனை நெருக்கமாய் அவள் முகத்தை பார்த்திருந்தவனின் மனம் லேசாய் சலனப்பட, முயன்று தன்னை ஒருவாறு சமன்படுத்தி கொண்டவன் அவளை விட்டு விலகி வந்து நின்றான். அவளோ நாணத்தோடு தலைகவிழ்ந்து கொள்ள, இருவருக்கிடையிலும் ஓர் பலத்த மௌனம் சஞ்சரித்தது.

“சரி… நான் கிளம்பிறேன்” என்று மதி அந்த அறையின் நிசப்த நிலையை கலைக்க, “கண்டிப்பா இன்னைக்கே போகணுமா?” என்று அவன் ஏக்கமாய் கேட்க,

“நான் மும்பை போகல… போகிற ப்ளேன் கேன்சலாயிடுச்சு” என்றாள்.

“கேன்ஸலாயிடுச்சா ? எது சென்னை டு மும்பை ஃப்ளைட்டா?” என்று அவன் கேலியாய் கேட்க, “உஹும்… நான் போகிறது கேன்ஸலாயிடுச்சு” என்றாள்.

“ஏன்?” என்றவன் கள்ளத்தனமாய் புன்னகையுடன் அவளை பார்க்க அவள் அவன் முகத்தை பாராமல், “அத்தைக்கு நல்லா குணமானதும் போலாம்னு” என்று சொல்ல அவன் சிரித்து கொண்டே, “உன் உதடு சொல்றது பொய்னு உன் கண்ணு அப்பட்டமாய் காட்டி குடுக்குது” என்றான்.

“என்னன்னு” என்று ஏதும் அறியதவளாய் அவனை அவள் நிமிர்ந்து பார்க்கவும் சரியான சமயமாய் பார்த்து சிம்மாவின் பேசி மீண்டும் ரீங்காரமிட்டது.

“உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே

விதையில்லாமல் வேர் இல்லையே!

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே

விதையில்லாமல் வேர் இல்லையே!

கிருஷ்ணா… உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே

விதையில்லாமல் வேர் இல்லையே!

நிதம் காண்கின்ற வான் கூட நிஜம் அல்ல

இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல…

நீயில்லாமல் நான் இல்லையே”

என்று ஒலித்து கொண்டிருந்த பாடலை கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்திருக்க அப்போது அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதில் பாடல் ஒலி நின்றது. ஓர் அழகான கனவு கலைந்தது போன்ற உணர்வு இருவருக்கும்!

மதி அவன் முகத்தை பார்த்து, “என் ஃபோன் ரிங்க்டோனும் இதுதான்… எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும்” என்று சொல்ல அவளை பார்த்து ரசனையாய் சிரித்தவன்,

“எனக்கு உன்னாலதான் இந்த பாட்டு பிடிக்கும் மதி… உன் ஞாபகமாதான் இந்த ரிங்க்டோனை நான் வைச்சிருக்கேன்… நீ அன்னைக்கு தமிழச்சி ரூம்ல இந்த பாட்டுக்காக ஆடினியே…ஞாபகம் இருக்கா?”என்று கேட்டான்.

“நீங்க பார்த்தீங்களா?” என்றவள் அதிர்ச்சியுற, “ஹ்ம்ம்… பார்த்தேன்… உன் நடனமும் முகபாவமும் அவ்வளவு அழகு… திரும்பியும் எனக்கு அந்த பாட்டுக்கு நீ ஆடுறதை பார்க்கணும் போல இருக்கு மதி… ஆட முடியுமா? எனக்காக” என்றவன் கெஞ்சலாய் தொடங்கி கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அவளை ஆழ்ந்து பார்க்க அவளுக்கு மூச்சுமுட்டியது.

வெட்கத்தில் முகம் சிவக்க அவன் கேள்விக்கு பதில் கூறாமல் அவள் அங்கிருந்து சென்றுவிட பார்க்க, “மதி ஒரு நிமிஷம்” என்று அவன் வார்த்தை தடைப்படுத்த அவள் மௌனமாய் நின்றாள்.

சிம்மா சில நிமிடம் கழித்து அவள் முன்னேவந்து, “நான் கேட்டது உனக்கு செய்ய விருப்பமில்லன்னா பரவாயில்ல” என்றவன் சொல்ல,

“சேச்சே… அப்படி எல்லாம் இல்ல… இப்போ வேண்டாம்னு”

“ஆமா… இப்போ வேண்டாம்… அதுக்கான ஒரு டைம் வரும்… அப்போ பார்த்துக்கலாம்” என்றவன் அவன் கரத்தில் வைத்திருந்த சுருட்டப்பட்ட காகிதத்தை நீட்டி, “இது உனக்காக… என் மனம் கவர்ந்தவளுக்கு நான் தர முதல் காதல் பரிசு” என்று சொல்ல அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.

அவனை பார்த்து கொண்டே அதனை பெற்று கொண்டவள் அந்த காகிதத்தை பிரிக்க எத்தனிக்க,

“இங்க பார்க்க வேண்டாம்… ரூமுக்கு போய் பாரு” என்றான்.

அவள் குழப்பமாய் அவனை பார்த்து தலையசைத்துவிட்டு தன் அறை நோக்கி சென்றாள். அப்படி என்ன அந்த காகிதத்தில் இருக்க கூடும் என்ற ஆவலோடு தன் அறையின் படுக்கை மீது சாய்ந்து கொண்டு அதனை ஆர்வமாய் பிரிக்க, அவள் விழிகள் சில நொடிகள் அசைவின்றி வியப்பின் மிகுதியோடு அந்த ஓவியத்தையே பார்த்திருந்தது.

அந்த ஓவியத்தில் இருப்பது தான்தானா என்ற சந்தேகத்தோடு பலவாறாக அதனை திருப்பி திருப்பி பார்த்து ஊர்ஜிப்படுத்தி கொண்டவள்  அவனின் கைவண்ணத்தில் ஆடை ஆபரணங்களோடு புதுவித தோற்றத்தில் தன்னையே ஓவியமாய் பார்த்து பூரிப்படைந்தாள்.

பிரதிபலிப்பது தன் உருவம் என்பதை கடந்து அந்த ஓவியத்தில் தெரிந்த அவன் காதலோடு கூடிய ரசனையான பார்வையே அவளை கவர்ந்திழுத்தது. நேரங்கள் கடந்தாலும் அந்த ஓவியத்தை பார்க்க பார்க்க அவளுக்கு சலிப்பு தட்டவேயில்லை. மாயையாய் அந்த ஓவியித்திற்குள்ளாகவே அவள் புகுந்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

********

இரவு நடுநிசியை எட்டி கொண்டிருந்த சமயம்  கதவு தட்டும் ஓசை கேட்டு விஷ்வா வாயில் கதவை திறக்க விக்ரம் சோர்வான விழிகளோடு, “சாரி ப்பா… ஃப்ளைட் கொஞ்சம் டிலே… அதான் லேட்” என்றான்.

விஷ்வா கதவை மூடி கொண்டே, “நீ சாப்பிட்டியா விக்ரம்?” என்று கேட்க, “கிளம்பும் போதே எல்லோரும் சாப்பிட்டுதான் கிளம்பனோம்” என்றான்.

“சரி நீ போய் படு” என்றவர் சொல்லி கொண்டே தன் அறைக்குள் நுழைய எத்தனித்தவர் மீண்டும் திரும்பி, “விக்ரம்” என்று அழைக்க, தந்தையின் அழைப்பை கேட்டு, “சொல்லுங்க ப்பா” என்று அவர் முகம் பார்த்து திரும்பி நின்றான்.

“நாளைக்கு எங்கயும் அவசரமா கிளம்பி போயிடாதே விக்ரம்” என்று அவர் சொல்ல, “ஏன் ப்பா” என்ற கேள்வியோடு தந்தையை ஆழ்ந்து பார்த்தான்.

“தமிழச்சி நீ எப்போ வருவேன்னு எனக்கு கால் பண்ணி கேட்டுகிட்டே இருந்தாடா… நீ இன்னைக்கு நைட் வந்திருவன்னு சொன்னேன்… அதான் நாளைக்கு காலையிலேயே உன்னை பார்த்து பேச வரேன்னு சொன்னா… அதான் நீ எங்கயும் கிளம்பி போயிடாதே” என்றவர் சொல்லி முடிக்கும் போதே அவன் ஆக்ரோஷமாய், “அவ ஒன்னும் என்னை பார்க்க வர வேண்டாம்… நான் அவகிட்ட பேச தயாரா இல்லை” என்றான்.

“கோபப்படாதே… அவ உன்கிட்ட சமாதானமா பேசத்தான் வரன்னு சொன்னா… நீயும் பழைய விஷயதெல்லாம் மறந்துட்டு” என்று விஷ்வா பொறுமையாய் எடுத்துரைக்க,

“எதை மறக்கணும்? அவ மீடியா முன்னாடி என்னை சம்பந்தமே இல்லாதவனு சொன்னாளே அதையா… இல்ல அவங்க அப்பா என்னை யாருன்னு கேட்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாம கல்லு மாறி நின்னாலே… அதையா?” என்று கோபம் பொங்க கேட்டான்.

விஷ்வா அதிர்ச்சியோடு, “வீரேந்திரன் ஏன் உன்கிட்ட அப்படி கேட்டாரு?” என்க,

“ஹ்ம்ம்… அவருக்கு அவர் பொண்ணு எது செஞ்சாலும் ஒசத்தி… ஆனா எல்லாருக்கும் நான்னா இளக்காரம்தானே” என்றான்.

“நீ வேறேதோ டெண்ஷன்ல் இருக்க போல… போய் படு… இந்த மேட்டரை காலையில பேசிக்கலாம்” என்றார் விஷ்வா.

“எப்போ பேசனாலும் என் முடிவு இதுதான்… அவக்கிட்ட சொல்லிடுங்க…  இனிமே அவளுக்கும் எனக்கும் ஒத்து வராது” என்று முடிவாய் சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குள் நுழைய, இந்த வார்த்தைகள் உள்ளே இருந்த ஆதியின் செவிகளையும் எட்டி வேதனைப்படுத்தியது. இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வதென்று புரியாமல் ஆதியும் விஷ்வாவும் மகன் மருமகளின் எதிர்காலத்தை எண்ணி தூக்கம் வராமல் தவித்திருந்தனர்.

அதேநேரம் விக்ரம் களைப்போடு தன் படுக்கை அறைக்குள்நுழைய   இவான் அவனை பார்த்து, “ஹாய் விக்ரம்…? ரொம்ப லேட்டாயிடுச்சு போல… ஃப்ளைட் லேட்டா? நீ போன வேலையெல்லாம் முடிஞ்சுதா?” என்று வரிசையாக தன் கேள்விகளை அடுக்க,  விக்ரம் வேண்டா வெறுப்பாய் அவனுக்கு ஒரு தலையசைப்பையும் கசந்த முறுவலையும் தந்துவிட்டு தன் தோளில் மாட்டியிருந்த பேகை ஓரம் வைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவனிடம் ஏதோ சரியில்லை என்று இவானுக்கு தோன்ற அவனிடம் மேலே எதுவும் பேச்சு கொடுக்காமல் மௌனமானான்.

விக்ரம் குளித்து தன் உடல் சோர்வை தணித்த போதும் மனசோர்வு தணிந்தபாடில்லை. அதே மனநிலையோடு அவன் படுத்து கொள்ள எத்தனித்த போது இவான் தன் பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையிலிருந்த ஒரு தாள் கீழே விழ, அதனை விக்ரம் கையிலெடுத்து இவானிடம் கொடுக்க எண்ணும் போதே அதை கவனித்தான்.

அது ஒரு நடராஜர் சிலையின் புகைப்படம். அந்த நொடி அமிர்தாவினை சந்தித்த போது பார்த்த சிலையின் நினைவு வந்தது. அன்று பார்த்த அந்த சிலை குறித்து அவன் அதன் பின் பெரிதாய் யோசிக்கவில்லை. ஆனால் அந்த சிலைக்கும் இந்த சிலையின் படத்திற்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதாய் தோன்றியது. ஆனால் அனைத் எண்ணத்தை அலட்சியப்படுத்தி விட்டு இவானிடம் அந்த புகைப்படத்தை கொடுத்தான்.

தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தின் முக்கியத்துவத்தை விக்ரம் அப்போது அறிந்திருக்கவும் இல்லை. ஆராயவும் முற்படவில்லை. நித்திரையில் ஆழ்ந்தான்.

ஆனால் தமிழச்சியும் சிம்மாவும் அந்த நடுநிசி இரவிலும் தங்கள் உறக்கத்தை தொலைத்துவிட்டு அந்த ரகசியத்தின் ஆணிவேர் எங்கே இருக்கும் என்ற தீவிரமான விவாதத்தில் இருந்தனர்.

 

 

 

 

 

error: Content is protected !!