AnthaMaalaiPoluthil-22
AnthaMaalaiPoluthil-22
அந்த மாலை பொழுதில்…
அத்தியாயம் – 22
கண்களை கட்டியபடி ரகுநந்தனின் தோள்களை இறுக பற்றி கொண்டு, நெருக்கத்தில் நின்று கொண்டிருந்த அபிநயாவின் காதில், “கண்ணை மட்டும் தான் மூடி இருக்கீங்களா? இல்லை எனக்கான, மனக்கதவையும் மூடி தான் வச்சிருக்கீங்களா வாத்தியாரம்மா?” அவன் குரல் ஏக்கமாக ஒலித்தது.
அவன் ஏக்கத்தை மிஞ்சி கொண்டு அவள் முகமும் அவள் மன ஏக்கத்தை பிரதிபலித்தது.
அவள் கண்களை அவனால் ஊடுருவி பார்க்க முடியலை. ஆனால், அவள் கண்கள் கூறும் செய்தியை அவன் மனக்கண்கள் அளவிட்டு கொண்டது.
அவள் கண்களை சுற்றியிருந்த துணியை கழட்ட எத்தனிக்க, “அபிநயா…” என்று பவானியம்மாளின் குரல் ஓங்கி ஒலித்தது.
“அம்மா கூப்பிடுறாங்க போ.” என்றான் ரகுநந்தன் அழுத்தமாக. அந்த அழுத்தத்தில், அவள் அவன் கட்டளையை உணரவில்லை. மாறாக, அவளை பார்ப்பதை தவிர்ப்பது போல் அவள் உணர்ந்தாள்.
‘நான் இவுகளுக்கான மனக்கதவை மூடி வைத்திருக்கிறேனா? இவுக ஏன் இப்படி சொல்லுதாக? நான் இவுக மேல் வச்சிருக்கிற, அன்பை நம்பிக்கையை அவுக உணரவே இல்லையா?’ என்று அவள் கண்களை சுற்றி இருந்த துணியை கழட்டியபடி வீட்டிற்குள் நுழைந்தபடி சிந்தித்தாள்.
“ம்… ச்…” அவன் குரல் சலிப்பை காட்டியது. ‘நான் ஏன் இப்படி சொன்னேன் வாத்தியரம்மா கிட்ட. அவ முகமே வாடி போச்சு.‘ தன்னை தானே நொந்து கொண்டு, தோட்டத்தில் இருந்த கல்லின் மீது சோர்வாக அமர்ந்தான்.
அவன் தலை விண் விண்ணென்று வலித்தது. இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம், அவனுக்கு சலிப்பை தட்டியது. ‘நான் என்ன செஞ்சிட்டு இருக்கேன்?’ என்ற கேள்வி அவனுள் எழுந்தது.
‘மனைவினா என்னை கேள்வி கேட்பாளா? நான் ஏன் அவளிடம் எல்லாத்தையும் சொல்லணும்?’ என்ற எண்ணம் , ‘ஏன் என் மனைவி என்னை கேள்வி கேட்கலை? ஏன், நான் அவளிடம் இத்தனை நாட்கள் அனைத்தையும் மறைத்து வைத்திருக்கேன்?’ என்ற எண்ணமாக மாறி கொண்டிருந்தது.
அவன் வழக்கமாக கூறும் வார்த்தைகள் இன்று அவன் மனதை தொட்டது.
‘ஐ ஹேட் கேர்ல்ஸ் பிரெண்ட்ஷிப். இட் இஸ் இஞ்சுரியஸ் டு ஹெல்த்.‘ இந்த வரிகள் நினைவு வர, ரகுநந்தன் புன்னகைத்து கொண்டான். “எஸ்… கேர்ல்ஸ் பிரெண்ட்ஷிப் இஸ் இஞ்சுரியஸ் டு ஹெல்த். ஆனால், என் தேவதை இந்த கேர்ல்ஸில் அடக்கம் இல்லை. அவ எனக்கு பிரெண்டும் இல்லை. ஷி இஸ் பியாண்ட் தட். மை லைஃப்.” என்று தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டு அவன் இதயத்தை தட்டி கொண்டான்.
அப்பொழுது அவன் சிந்தனையை கலைத்தது ரேவதியின் குரல்.
“அந்த பசுபதி என்ன பெரிய ஆளா? அவன் மிரட்டினா, நீங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பீங்களா?” ரகுநந்தன் கல்லின் மீது அமர்ந்திருப்பது தெரியாமல், தன் கணவனிடம் ஏறி கொண்டிருந்தாள் ரேவதி.
‘தன் கணவனை ஒருவன் மிரட்டுவாதா?’ என்ற ஆதங்கம் ரேவதியின் குரலில்.
ரகுநந்தன் எழுந்து செல்ல எத்தனிக்க, சுரேஷின் குரல் அவனை அங்கே அமர செய்தது.
“பசுபதி மிரட்டினானு யாரு சொன்னா?” அசட்டையாக கேட்டான் சுரேஷ்.
“இந்திரா.” ரேவதி கூற, “நான் அப்படி சொல்லலைனா, இந்திரா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டா.” சுரேஷ் கூற, ரேவதி அவனை அதிர்ச்சியாக பார்க்க, தன் கணிப்பின் அளவை நினைத்து ரகுநந்தனின் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்து கொண்டது.
“எதுக்கு இந்த கல்யாணம் நடக்கணும்?” என்று ரேவதி கடுப்பாக கேட்டாள்.
“உன் தம்பி கல்யாணம் பண்ணிப்பானா இந்திராவை?” என்று நேரடியாக கேட்டான் சுரேஷ்.
ரேவதி இப்பொழுது தடுமாறினாள். ‘திருமணம் மீது நம்பிக்கை இல்லாதவனை, அபிநயாவிடம் ஒன்ற விடாமல் தடுத்து விடலாம்‘ என்ற எண்ணம் பிசுபிசுத்து கொண்டிருப்பதை ரேவதியால் இப்பொழுது உணர முடிந்தது.
ரேவதியிடம் மௌனமே எஞ்சி நிற்க, “நம்மால, இந்திரா செலவை ஏத்துக்க முடியாது. உன் தம்பினா எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைச்சோம். அது மட்டுமில்லை, நமக்கும் பிடிமானம் அதிகமாகும்னு நினைச்சோம்.” என்று நிறுத்தினான் சுரேஷ்.
ரேவதி கணவனை யோசனையாக பார்க்க, “இப்ப நம்மளை விடு, இந்திராவை பசுபதியே விரும்பி கேட்குறான். எல்லா செலவையும் அவனே பாத்துக்கிறேன்னு சொல்றான். நிச்சயம் அபிநயா குடும்பத்தை சேர்ந்தவன் மோசமானவனா இருக்க முடியாது. இந்திராவுக்கு கல்யாணம் செஞ்சி தானே ஆகணும். எனக்கு இது சரின்னு பட்டுது.” சுரேஷ் நேரடியாக கூறினான்.
ரேவதி இடைமறிக்க, “அபிநயாவை, பார்த்த அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன். அவ, அவள் உரிமையை விட்டு கொடுக்க மாட்டான்னு. இப்ப, ரகு அவ உயிர். நிச்சயம் விட்டு கொடுக்க மாட்டா. அதை விட, உன் தம்பிக்கு, அபிநயா உயிர். நீ யோசிக்குறது தெரிஞ்சாலே வினை தான்.” என்று சுரேஷ் கூற, ரகுநந்தன் சிரித்து கொண்டான்.
‘நம்மை விட, நம் அன்யோன்யத்தை இவர்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.’ என்ற எண்ணம் தோன்ற ‘இனி காலம் தாழ்த்த கூடாது.‘ என்ற முடிவோடு, அவன் அறை நோக்கி சென்றான் ரகுநந்தன்.
அபிநயா, இரவு உணவு வேளையில் மும்முரமாக இருந்தாள்.
அன்றிரவு, ரகுநந்தன் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
அவன் கூறிய மனக்கதவு, நினைவு வர, ஜன்னல் கதவை விசாலமாக திறந்தாள் அபிநயா.
ரகுநந்தன் அவளை கேள்வியாக பார்க்க, “மனக்கதவை தான் திறக்க முடியலை, ஜன்னல் கதவையாவது விசாலமா திறக்கலாமுன்னு பார்க்குறேன்.” நெட்டி முறித்தது அவள் குரல்.
“ஹா… ஹா…” பெருங்குரலில் சிரித்தான் ரகுநந்தன்.
அவன் சிரிப்பின் தொடர்ச்சியாக, “பேசணும் வாத்தியரம்மா.” என்று ரகுநந்தன் தீவிரமாக கூறினாலும், ‘இத்தனை நாள் மௌன விரதம் இருந்த மாதிரி,’ அவள் மனம் இன்று அலட்சியமாக தான் இருந்தது.
அவன் பேசினான். அவன் தந்தையின் மரணத்தை பற்றி. அபிநயாவின் அலட்சியம் மறைந்து போனது. அவன் மேல் அக்கறை வந்தமர்ந்து.
அவன் அருகே நின்று கொண்டாள்.
அதே இடைவெளி! அவர்கள் அதை அதிகரிக்க விரும்பவில்லை. குறைக்க, அவர்களுக்குள் ஏதோவொன்று தடுத்தது.
யார் முதல் அடியை எடுத்து வைப்பது? என்ற கேள்விக்கான பதிலோ?
தந்தையை பற்றி பேசும் பொழுது, ரகுநந்தனிடம் ஓர் இறுக்கம். இதுவரை, அபிநயா கண்டிராத இறுக்கம்.
அவள் அருகாமையே அவனுக்கு ஆயிரம் யானை பலத்தை கொடுப்பது போல் அவன் தொடர்ந்தான்.
அவனை குழந்தையாக தாலாட்ட அவள் மனம் விரும்பியது. அவன், மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் இருந்த பொழுது, தன் தந்தையின் கடைசி நொடிகளை தான் இழந்துவிட்ட வருத்தத்தை கூறினான்.
அவர்கள் தொழிலில், ரேவதி சுரேஷின் கையாடல்கள் பற்றி கூறினான். படித்து முடித்துவிட்டு புது தொழில் தொடங்கும் கனவோடு வந்த அவனுக்கு, இங்கு இருந்த பண குழப்பம் பற்றி கூறினான்.
குடும்ப தொழிலை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்தான்.
அபிநயா பொறுமையாக கேட்டு கொண்டிருந்தாள். ‘தீண்டல் மட்டும் தான் ஆறுதல் கொடுக்குமா என்ன? பார்வை போதும், உன் சுமையை நான் தாங்க‘ என்று பார்வையால் அவன் விழி துயரை கண்பார்வையில் ஏந்தி கொண்டாள் அவள்.
ரேவதி, சுரேஷின் முகம் தெரிந்தும், தந்தையின் உடல் நிலை கருதி அவரிடம் அதை பகிர முடியாத தாயின் வேதனையை பற்றி பேசினான்.
ரகுநந்தன், மொத்த படிப்பையும் முடித்துவிட்டு வருவதற்குள், தொழிலும், குடும்பமும் சுரேஷ், ரேவதி கைக்கு இடம் மாறியது பற்றி விளக்கினான்.
அனைத்திற்கும் முற்று புள்ளி போல் இந்திராவை இவனுக்கு மனைவியாக்க திட்டமிட்டதை தடுமாற்றத்தோடு கூறினான்.
‘இந்திரவை திருமணம் செய்தால், எல்லாம் கைமீறிவிடும்’ என்ற எண்ணத்தில் அவளை மறுத்ததை கூறினான். திருமணத்தின் மீது அவன் பற்றின்மையை எடுத்துரைத்தான்.
தான் குடிபோதையில் இருந்த பொழுது, இந்திராவே தாலி கட்டிக்கொண்டு, ஏதேதோ போட்டோ எடுத்து உருவாக்கிய குழப்பத்தை கூறினான் ரகுநந்தன்.
அதன் பின் தாயின் வற்புறுத்தலில், திருமணத்திக்கிற்கு சம்மதித்ததை கூறி முடித்தான் ரகுநந்தன்.
“இவ்வளவு நடந்தும், திருமணத்திற்கு முதல் நாள் குடிச்சீங்களா?” நிதானமாக கேட்டாள் அபிநயா.
‘நான் சொன்ன இத்தனை விஷயத்தில், இவளுக்கு இந்த சந்தேகம் தான் வந்ததா?’ என்பது போல் அவளை அப்பாவியாக பார்த்தான் ரகுநந்தன்.
“அது பேட்சலர்ஸ் பார்ட்டி.” அவன் கண் சிமிட்ட, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.
“கல்யாணத்துக்கு அப்புறம் நான் குடிக்கவே இல்லை.” சத்தியம் செய்யாமல் சத்தியம் பேசினான் அவன்.
அவள் முகத்தில் ஒரு பெருமித புன்னகை. அவள் புன்னகையில் அவனை ஈர்க்க, “முதல் நாளில், இதெல்லாம் உன்கிட்ட ஏன் சொல்லணும்ன்னு தோணுச்சு. இப்ப உன் கிட்ட ஏன் சொல்லம்மா இருக்கேன்னு தோணுச்சு. எல்லாத்தையும் சொல்லிட்டேன்.” அவன் சொற்களால் அவளை ஈர்த்தான்.
அபிநயா, அனைத்தும் மறந்து அவனை பார்த்து கொண்டிருந்தாள். அவன் முகம், ஏதேதோ சொல்ல துடிக்க, அதை கண்டுகொண்டவள் சிறிது தடுமாறினாள்.
அவள் தடுமாற்றத்தை உணர்ந்தவன், தன் தலையை வலது பக்கமும், இடது பக்கம் அசைத்து, “உனக்கும் ஒரு நாள் தோணும். என் கிட்ட நீ நினைக்குறதெல்லாம் பேசணுமுன்னு. அன்னைக்கு பேசினா போதும்.” அவன் உதட்டை மடித்து சிரித்து புன்னகைத்தான். அபிநயா, சம்மதமாக தலை அசைத்தாள்.
அவர்கள் நாட்கள் இனிதாக நகர்ந்தது. பசுபதி திருமணத்தை நிறுத்தும் இவர்கள் முயற்சி மட்டும் தோல்வியில் முடிந்து, பசுபதியின் திருமண நாளும் வெற்றிகரமாக வந்தது. யாரும் சிந்திக்க கூட சரியான நேரம் கொடுக்காமல், திருமணத்தை விரைவாக ஏற்பாடு செய்துவிட்டான் பசுபதி.
வேறு வழியின்றி அபிநயா திருமணத்திற்கு சென்றாள். பசுபதிக்காக இல்லை. சுரேஷின் அழைப்பிற்காக. கவினின் அத்தை திருமணத்திற்காக. இந்திராவிற்காக!
அபிநயாவின் தந்தை குடும்ப பகையை காரணம் காட்டி, திருமணத்திற்கு வரவில்லை.
அபிநயா பசுபதியிடம் மருந்துக்கும் பேசவில்லை. பசுபதி அதை எல்லாம் கண்டுகொண்டது போலவே இல்லை. “அம்முக்குட்டி… அம்முக்குட்டி…” என்று வாஞ்சையோடு வரவேற்று இன்முகமாக பேசினான்.
ரகுநந்தன், தான் பசுபதியிடம் பேசினான். அபிநயா, கடனே என்று நின்று கொண்டிருந்தாள். பட்டு சேலை, நகை எல்லாம் பொலிவோடு தான் இருந்தது. முகம் மட்டும், அவள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக வீங்கி கொண்டு இருந்தது.
‘இந்திராவை கட்டிக்கிட்டு இவளை திருத்த, அத்தான் என்ன காந்தியா? புத்தரா?’ என்ற கடுப்பு, அபிநயாவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“வாத்தியாரம்மா, பிரம்பு மட்டும் தான் பாக்கி. எடுத்திட்டு வந்து தரவா? ரொம்ப பொருத்தமா இருக்கும்.” என்று ரகசிய குரலில் கேட்டான் ரகுநந்தன்.
“பிரம்பு மட்டும் என் கையில் கிடைச்சது, இந்த கல்யாணம் தேவையா? தேவையான்னு அத்தானை நாலு போடுவேன். இது நிறுத்த உங்களால முடியலையான்னு உங்களுக்கு ஒரு எட்டு போடுவேன்.” என்று பற்களுக்கு இடையே நறநறதாள் அபிநயா.
“இது என்ன அநியாயம்? உங்க அத்தானுக்கு நாலு, எனக்கு மட்டும் எட்டு?” என்று சண்டைக்கு தயாரானான் ரகுநந்தன்.
“அடுத்தவ புருஷனை, ஒரு அளவுக்கு மேல அடிக்க முடியாது. எம் புருஷனை அடிக்கலாமில்லை. எனக்கு உரிமை இருக்கில்ல?” அபிநயா முணுமுணுக்க, “அடேங்கப்பா! புருஷன் மேல என்ன ஒரு பாசம். நான் அப்படியே புளங்காகிதம் அடைஞ்சுட்டேன்.” என்று ரகுநந்தன் நக்கல் பேசினான்.
அபிநயா, அவனை கோபமாக முறைத்தாள். சுரேஷ், இன்று அண்ணனாக ஒழுங்காக வேலை பார்த்து கொண்டிருந்தான்.
இந்திரா, சகலமும் தொலைத்தவள் போல், விட்டதை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
இந்திராவின் செவிகளில், அவள் அண்ணன் சுரேஷ் கூறியது மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருந்தது.
‘நீ ஆசை படுற வசதியான வாழ்க்கை, பசுபதிகிட்ட இருக்கு. ரகுநந்தனை விட பணக்காரன். ஆள், தான் கிராமத்தான். ஆனால், படிச்சவன். விவசாயம் பத்தி படிச்சவன். விரும்பி விவசாயம் செய்றான். நாம்ம வாழறதும், பெரிய ஹைடேக் சிட்டி கிடையாது. இங்க இருந்து இருபது நிமிடம் போனா வர்ற ஊரு தான். சூதானமா நடந்து பொழைச்சுக்கோ.‘ சுரேஷ் கூறிய வார்த்தைகளை அசை போட்டு கொண்டிருந்தாள் மணமேடையில்.
“கெட்டிமேளம்… கெட்டிமேளம்….” இந்த குரல் அவளை நனவுலகத்திற்கு அழைத்து வந்தது.
பசுபதி இந்திராவின் கழுத்தில் தாலியை கட்டினான்.
வடிவம்மாள், நிறைவாக உணர்ந்தார். ‘அபிநயாவோடு, பசுபதியின் வாழ்வு முடிந்துவிடுமோ?’ என்ற கவலை நீங்கி சந்தோஷமாக காட்சி அளித்தார்.
அனைவரும் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
தாய் இல்லாத தனிமையையும், சகோதரி இல்லாத வெறுமையையும் இந்திரா உணர்ந்தாள்.
பசுபதியின் வீட்டிற்கு வந்திருந்தனர். வடிவம்மாள், பசுபதியோடு தனித்து விடப்பட்டிருந்தாள் இந்திரா.
இந்திரா, வீட்டை கண்களால் அளவிட்டாள். கிராமத்து வீடாக இருந்தாலும், சகல வசதியோடு அதன் செழுமையை காட்டியது. பசுபதி, அவன் இல்லை… அவர்கள் அறையில் காத்திருந்தான்.
இந்திராவின் வயிற்றில் பயப்பந்து உருண்டது. அன்றைய பசுபதியின் பேச்சு, செய்கை இந்திராவிற்கு நடுக்கத்தை கொடுத்தது.
வெளியே இருந்த வடிவம்மாளின் உருவமும், அவர் காதில் தொங்கி கொண்டிருந்த குண்டலமும், அவளுக்கு ஓர் அச்சத்தை கொடுத்தது.
‘பசுபதி இருக்கும் அறைக்குள் சென்றாக வேண்டும்‘ என்ற நிதர்சனம் இந்திராவுக்கு புரிந்தது.
அவள் கால்கள் பின்னி கொண்டது. ஏனோ, அவள் விரும்பிய பணமும், அவள் தெனாவட்டும் இன்று தோற்று போனது போல உணர்வு வர, அவள் கண்களை கரித்தது.
‘ச்சீ… ச்ச்சீ…. அழக்கூடாது. வாழ்க்கையில் என்னன்னவோ பார்த்துட்டோம்.‘ என்று கூறிக்கொண்டு, தன்னை தானே திடப்படுத்தி கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் இந்திரா.
இந்திராவின் முகத்தில் தெரிந்த அச்சத்தில், ‘இவ என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கா?’ என்ற எண்ணம் தோன்ற, ‘விளையாடி பாத்திர வேண்டியது தான்.‘ என்று முடிவு எடுத்து கொண்டு இந்திராவை நெருங்கினான் பசுபதி.
“அட! சேலை எம் பொஞ்சாதிக்கு ரொம்ப ஜோரா இருக்கு. அந்த ட்ரெஸ்ஸை விட இது நால்லாருக்கே?” என்று இந்திராவை நெருங்க, அவள் ஒரு எட்டு பின்னே நடந்தாள். அவன் முன்னே செல்ல, செல்ல அவள் பின்னே நடந்து நடந்து சுவரோடு சாய்ந்து நின்றாள்.
அவன் அவளின் இருபக்கமும், கைகளை ஊன்றி, “சரி, இனி என்ன உத்தேசம்?” என்று புருவங்கள் உயர்த்தினான்.
“உனக்கு என்னை பத்தி தெரியாது?” என்று இந்திரா அவனை மிரட்டினாள்.
“ஓ… சரி சொல்லு. கேட்போம்.” என்று சீட்டியடித்தான் பசுபதி.
இந்திரா இவனை முறைக்க, “ம்… சொல்லு…” அவன் கூற, ‘என்னத்த சொல்ல?’ என்பது போல் அவனை பார்த்தாள் இந்திரா.
இந்திராவால் எங்கும் செல்ல முடியவில்லை. இரண்டு பக்கமும் அவன் கைகள். அதுவும், விவசாயம் செய்யும் வலிமையான கரங்கள். அவள் மனம், “தடக்… தடக்…” என்று வேகமாக ஓடியது.
‘இவன் நினைத்தால்…‘ அதற்கு மேல் இந்திராவால் நினைக்க முடியவில்லை.
“என்னை பார்த்தா வில்லன் மாதிரி இருக்கா?” புருவம் உயர்த்தினான் அவன்.
‘இல்லை…‘ என்பது போல், அவள் மறுப்பாக தலை அசைக்க, “அப்புறம் ஏன் பயப்படுற?” என்று தலை அசைத்தான் பசுபதி.
“நான் பயப்படலை.” இந்திரா உறுதியாக கூறினாள்.
“நம்பிட்டேன்…” அவன் ஒற்றை வார்த்தையில் நக்கல் பேசினான்.
“சரி… அப்ப, நான் வில்லன் இல்லை. நல்லவன் தானே?” என்று பசுபதி இடக்கு பேச, இந்திரா பேசாமல் நின்றாள்.
‘இவன் எப்பொழுது கை எடுத்து, நான் படுத்து?’ என்ற எண்ணம் ஓட, “உன்னை பத்தி எனக்கு தெரியும். நீயே தாலியை கட்டிட்டு, தில்லாலங்கடி வேலை பாக்குற அளவுக்கு தைரியம் உனக்கு உண்டுன்னு எனக்கு தெரியும். என்னை பார்த்து பயப்படுற மாதிரி நடிக்கிற.” என்று பசுபதி ஏறினான்.
“என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சி தான் கல்யாணம் பண்ணிருக்க?” தெனாவட்டாக கேட்டாள் இந்திரா.
“ஆனால், நீ என்னை பத்தி தெரிஞ்சிக்கலை.” என்று பசுபதி அழுத்தமான குரலில் கூறினான்.
“கதையில் நீ வில்லியா இருக்கலாம். நான் ஹீரோ தான். நான் நினச்சா தான் எல்லாம் நடக்கும்.” அவனின் அழுத்தத்தில், எங்கோ பார்த்து கொண்டிருந்த இந்திரா அவன் பக்கம் திரும்பினாள்.
அவள் முகம் பார்த்ததும், அவன் குரல் சற்று இறங்கியது. தன் மீசையை நீவிக்கொண்டான். இந்திராவின் முகத்தை அருகாமையில் பார்க்கும் பொழுது, பசுபதிக்கு அன்றைய நினைவு வர, தன் கண்களை இறுக மூடி திறந்தான்.
இந்திராவின் கண்களில் தெரிந்த ஏதோவொன்றில், ‘இந்திரா எப்படி வேணா இருந்திருக்கலாம். நான் ஏன் அப்படி செய்தேன்?’ அவனுள் ஒரு குற்ற உணர்ச்சி.
“நான் அன்னைக்கு அப்படி பண்ணிருக்க கூடாது. மன்னிச்சிரு.” என்று நிதானமாக மன்னிப்பு கேட்டான் பசுபதி.
மன்னிப்பு கேட்டதில், ‘சற்று முன் இருந்த பசுபதி எங்கே?’ என்ற கேள்வியோடு இந்திரா அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.
“ஒரு கன்னியமானவன் செய்யுற வேலை இல்லை அது. ஆனால், நீ என்னை அயோக்கியன்னு சொன்ன, உனக்கு அயோக்கியத்தனம் என்னனு தெரியலை காட்டணுமுன்னு நினச்சேன்.” அவன் விலகி நின்று கொண்டு கூறினான். “நான் அன்னைக்கு செய்தது தான் அயோக்கியத்தனம்.” உறுதியாக கூறினான் பசுபதி.
“அன்னைக்கு, செய்த தப்பை நான் நியாப்படுத்தலை. அது தப்பு தான். இருந்தாலும் உன்கிட்ட காரணம் சொல்லனுமுனு தோணுச்சு.” பசுபதி, தன் குரலை கரகரத்து கொண்டான்.
மன்னிப்பு கேட்பதெல்லாம் அவனுக்கு பழக்கம் இல்லை என்பது போல் இருந்தது அவன் செய்கை.
இந்திரா அவனை யோசனையாக பார்த்தாள்.
“மத்த பொண்ணுங்க கிட்ட நான் இதை பண்ணிருக்க மாட்டேன். நீ என் மனைவின்னு முடிவு பண்ணிட்டேன். இருந்தாலும், உன் அனுமதி இல்லாமல் தப்பு தான்.” உண்மையான வருத்தம் அவன் குரலில்.
“மனசை தொடாத எதுவும் இல்லறம் இல்லை.” அவன் அழுத்தமாக கூறினான்.
“காதலுக்கும் காமத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அது பலருக்கு தெரியறதில்லை. காதல் ஆசிட் ஊத்தாது. காதல் கற்பை பணையம் வைக்காது. காதல் ஒரு பெண்ணின் பெயரை கெடுக்காது. காதல் கடத்தாது. காதல் அவமான படுத்தாது. இதெல்லாம் வலியோடு அனுபத்தில் கத்துக்கிட்டவன் நான். நான் அதை செய்திருக்க கூடாது.” என்று காதலை பற்றி பேச ஆரம்பித்து, தான் செய்த செயலில் முடித்து மீண்டும் வருந்தினான்.
இந்திராவின் அச்சம் கலந்த பார்வை இன்று பசுபதியை வருந்த செய்தது.
“காதல் கண்ணில் ஆரம்பித்து மனசில் தொடும்.” அவன் வேதாந்தம் பேச, அவள் அவனை குழப்பமாக பார்த்தாள்.
“உன்னை தொந்திரவு பண்ண மாட்டேன். போய் படு. ஆத்தாவுக்கு மட்டும் சந்தேகம் வந்திற கூடாது. நம்ம உசிரை எடுத்திரும்.” அவன் கூட்டு களவாணித்தனத்திற்கு அவளையும் அவன் சேர்த்து கொண்டான்.
‘போ…‘ என்பது போல் செய்கை காட்டி, மெத்தையை சுட்டி காட்டினான். அவள் மெத்தையில் படுத்து கொண்டாள்.
அவன் அந்த காட்டாந்தரையில், பாய் விரித்து படுத்து கொண்டான்.
பசுபதியின் இந்த பரிமாணத்தில், இந்திரா குழம்பி போனாள்.
‘இவன் யார்? இவன் உண்மை முகம் என்ன?’ என்ற கேள்வி அவளுள் எழ, அவன் பேசிய காதல் வசனங்கள் அவள் காதில் ஒலிக்க, தரையில் சுவரை பார்த்தபடி படுத்திருந்த பசுபதியை ஆராயும் விதமாக பார்த்தாள் இந்திரா.
‘இவன் இப்படி எல்லாம் பேசிட்டா, எனக்கு இந்த பட்டிகாட்டானை பிடிச்சிரணுமா? இல்லை இவனோடு குடும்பம் நடத்தணுமா?’ என்று தன்னை பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள் இந்திரா.
‘தன்னை பற்றி சிந்தித்து எந்த பயனும் இல்லை‘ என்ற எண்ணம் தோன்ற தன் கவனத்தை மீண்டும் உறங்க ஆரம்பித்திருந்த பசுபதியின் பக்கம் திருப்பினாள் இந்திரா.
‘இவன் ஏன் அபிநயாவை திருமணம் செய்து கொள்ளவில்லை? இவன் காதலி அபிநயா தானா? இல்லை வேறு யாருமா?’ என்ற சந்தேகமும் இந்திராவுக்கு எழுந்தது.
பொழுதுகள் விடியும்…