EVA23A

EVA23A
23 (A)
ஆதன் வீடு திரும்பியது முதல் குடும்பத்தினரின் கவனிப்பு அவனைத் திணறடித்துக் கொண்டிருந்தது.
இரண்டு வாரங்கள் ஒத்துழைத்தவன் மூன்றாவது வாரத் துவக்கத்திலேயே முனகத் துவங்கினான்.
“சும்மா ரெஸ்ட் எடுத்தே நான் டையர்ட் ஆகிட்டேன்! ப்ளீஸ் என்னை இம்சிக்காதீங்க!” என்று அவன் எறிந்துவிழ,
“நல்லதை சொன்னா கேட்டா தானே…” என்பதுபோல் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு மீனாட்சி சென்றுவிட,
ரகுநாத்தோ, “சஹானாவையும் ஈவாவையும் துணைக்கு வச்சுக்கிட்டு லேபுக்கு போ, இல்லை பேசாம ரெஸ்ட் எடு!” என்று நிர்தாட்க்ஷண்யமாகச் சொல்லிவிட்டார்.
“இதுக்கு குரங்கு குட்டியை கூட வச்சுக்கலாம்!” அவருக்குக் கேட்காதபடி சொல்லிக்கொண்டவன், தான் கொடுக்கும் இம்சையில் சஹானா தானாக ஓடிவிடுவாளென்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டான்.
மருத்துவமனையில் ஒரு வாரம், ஓய்வில் இரண்டு வாரமென இருந்தவனுக்கு லேபுக்குள் அடியெடுத்து வைக்கும் போதே பலநாள் பிரிந்த காதலியைக் காணும் உணர்வு தோன்ற, ஆசையாகக் கணினியை வருடியவன் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொள்ள,
“என்னை பார்க்கலைனா கூட இந்தளவுக்கு உங்க பாஸ் ஃபீல் பண்ணுவாரானு தெரியல” சஹானா ஈவாவிடம் கிசுகிசுத்தது காதில் விழ அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது.
பலவருடங்களாகத் தனியாகவே பணியாற்றியவனுக்கு, சொல்லுவதற்கு முன்பே புரிந்து செயல்படும் அதி புத்திசாலி ரோபோட் ஒருபுறம், சொல்ல சொல்ல கேட்காமல் எதையாவது ஏடாகூடமாகச் செய்துவைத்து உதட்டைப் பிதுங்கும் ஆர்வ கோளாறு மனைவி மறுபுறம் என இருதுருவ உதவியாளர்கள்.
சஹானாவும் ஈவாவும் புதிதாய் கூட்டணி சேர்ந்து லேபையே தலைகீழாக மாற்றத் துவங்கி இருந்தனர். தன்னை தனியாக விட்டிருந்தாலே பரவாயில்லை என கெஞ்சுமளவிற்கு அவனை இருவரும் போட்டிப்போட்டுத் திணறடித்தனர்.
ஒரு வழியாக மூவரின் கூட்டணியில் உருவாகிய மைக்ரோ ஆன்டி ஜாமர் பொருத்தப்பட்ட பீயை சோதனை ஓட்டத்திற்காக ஆதன் வீட்டு போர்டிகோவில் தயாராக வைத்தபோது, அவன் விபத்து தொடர்பாக எஸ்ஐயின் ஃபோன் என ரகுநாத் அழைக்க, ஈவாவின் கட்டுப்பாட்டில் பீயை விட்டுவிட்டு அவன் உள்ளே சென்றான்.
வாராந்திர கவுசிலிங்கிற்காக மனநல மருத்துவரை சந்தித்துவிட்டு ஆதிராவுடன் வீடு திரும்பிய சஹானா,
“பார் முதல் நாளே எவ்ளோ சூப்பரா வண்டிய பார்க் பண்றேன்னு!” கார் கண்ணாடியைத் திறந்துவிட்டு ஈவாவிடம் பீற்றிக்கொண்டே காரை போர்டிகோவில் அதிவேகமாக நுழைத்து அனாவசியமாக “சொய்ங்…” என்று ராகமாகக் கூவிக்கொண்டே ரிவர்ஸ் எடுக்க.
“அங்க பீ இருக்கு இடியட்…” என்ற ஈவாவின் எச்சரிக்கை அவள் காதில் தாமதமாகவே விழ, “அச்சோ எங்க?” பதறியவள் எட்டி பார்த்தபடி மறுபடி முன்னோக்கி சென்று காரை நிறுத்தினாள்.
“எங்கவாம் எங்க!” கடுகடுத்த ஈவா பின் இடது டயரில் நசுங்கியபடி ஒட்டி இருந்த பீயை நாசுக்காகப் பிய்த்து எடுத்தது.
சஹானா நகத்தை கடிக்க, ஆதிரா “போச்சு! அவன் சும்மாவே ஆடுவான் இப்போ என்ன செய்ய போறானோ! நான் எதுவும் பார்கலைப்பா!” என்று ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடிவிட,
மூன்று வார கழுத்து பட்டையின் கட்டுப்பாட்டைவிட்டு சுதந்திரமாக இப்பொழுது தான் செயல்பட துவங்கியிருந்த கழுத்தைத் திருப்பித் திருப்பி தங்கையைப் பார்த்துக்கொண்டே வந்த ஆதன்,
“ஹே இன்னிக்கி செஷன் எப்படி இருந்துது?” கேள்வி கேட்டபடியே வராந்தாவின் நான்கு படிகளில் இறங்கி போர்டிகோவிற்கு வர,
“செஷன் நல்லாத்தான் இருந்துது…இங்க பாருங்க நான் வேணும்னே பண்ணல…நீங்க சொல்றதை கேட்க கூடாதுன்னுலாம் இல்ல…தெரியாம தான்…” அவசரமாகச் சொன்னவளின் கைகள் நடுங்கத் துவங்க,
“சும்மா இரு சஹா!” ஈவா எச்சரிக்கை,
அதை காதில் போட்டுக்கொள்ளாத சஹானா “தெரியாமத்தான் இப்படி பண்ணிட்டேன்!”
“ஏன்? இப்ப என்னத்தப் பண்ணிவச்சே?”
“ஈவாக்கு ஒன்னும் ஆகலை! அ…அதானே முக்கியம்…” சஹானா கையை பிசைய,
“அடுத்து என்னை போட்டுத் தள்ள பிளானா?” ஈவா சஹானாவின் காலை இடிக்க,
“ஹேய்! பீ க்ளியர்! என்ன பண்ண….” துவங்கும்போதே விஷயத்தை ஊகித்தவன் “பீ?” என்று ஈவாவை பார்த்ததில் ஆமென்று தலையாட்டிய ஈவா, நடந்ததை சுருக்கமாகச் சொல்லி,
“இதுல சொய்ங்ங்….ன்னு ம்யூசிக் வேற போட்டா பாஸ்!” என்று தன் பங்கிற்கு ஏற்றிவிட்டது.
“காட்! பீ காரை சென்ஸ் பண்ணி பறக்கக்கூட டைம் இல்லாத அளவுக்கா கார் ஒட்டுவே? அதுவும் காம்பவுண்ட் குள்ள?”
“அதுக்கேத்த மாதிரி பிரேக் போட்டேன்ல?” மிடுக்காக கேட்ட சஹானா, “வேணும்னேவா செய்வாங்க எதோ…தெரியாம நடந்துபோச்சு…”
“ஓஹ் வேணும்னே வேற செய்வியா?” பல்லை கடித்தவன் “இனிமே லேபுக்குள்ள காலை வை! பேசிக்கிறேன்! ச்சே எனக்குன்னு வந்து சேர்ந்த ரெண்டு இடியட்ஸ்! இன்காரிஜிபிள் இடியட்ஸ்!” கோபமாக ஈவாவிடமிருந்து பீயை பிடுங்கிக்கொண்டு சென்றான்.
ஈவாவின் வாலை பிடித்துத் தூக்கிய சஹானா “வந்ததும் வராததுமா போட்டு கொடுத்தேல ஃபிராடு!” என்று மிரட்ட, அவள் விரல்களிலிருந்து நொடியில் நழுவி குதித்த ஈவா,
“நீயா உளறிட்டு என்னை சொல்றே? இந்த மனுஷங்களே இப்படித்தான் செலஃபிஷ்!” வேண்டுமென்றே உரக்கச் சொல்லிவிட்டு ஓட,
“அடுத்தது நீதாண்டி!” அதைத் துரத்திக்கொண்டு ஓடினாள் சஹானா.
மாலை வரை ஆதனின் கண்ணில் சிக்காமல் நழுவியவள், அவன் ஓய்வெடுக்க படுக்கை அறைக்குச் செல்வதை மறைந்திருந்து பார்த்துவிட்டு ஓசைப்படாமல் லேபுக்குள் சென்றாள்.
கணினியில் எதையோ பார்த்திருந்த ஈவா, உடனே திரையில் ஓடிக்கொண்டிருந்த தகவல்களை மாற்றியது.
“என்ன வேணும் சஹா? பாஸ் ரெஸ்ட் எடுக்க போயிருக்கார்”
“பீ எப்படி இருக்கு? தேறுமா?” என கண்களால் அதைத் தேடினாள்.
“கொஞ்சம் சரி பண்ணி இருக்கோம் இன்னும் கொஞ்சம் இருக்கு”
“காட்டு நானும் உதவி பண்றேன். நாம அவருக்கு சர்ப்ரைஸா ரெடி பண்ணலாம்” சஹானா ஆர்வமாக,
“ஏன் உடைச்சதெல்லாம் பத்தாதா? தப்பிச்ச கொஞ்ச நஞ்சத்தையும் அக்குவேறு ஆணிவேரா பிக்கணுமோ?” ஆதனின் வரவை எதிர்பாராத சஹானா “இல்லங்க அது…” தன் பைஜாமா பேண்ட்டை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அசடு வழிய ஏனோ தன்னையும் மீறி புன்னகைத்துவிட்டான்.
“பாஸ் இங்க நீங்க சிரிக்க கூடாது! திட்டணும்!” ஈவா ஏற்றிவிட,
“டுபுக்கு!” சஹானா அதை முறைக்க, வாய்விட்டே சிரித்துவிட்ட ஆதன், “அப்புறம் பாத்துக்கலாம் சஹா. அம்மா கூப்பிட்றாங்க. எதோ ஆதிரா கல்யாணத்துக்கு புடவை வாங்குறதை பத்தி உங்க வீட்ல ஒபீனியன் கேட்கணுமாம். ஓடு” என்று அவளை அனுப்பிவைத்தவன், “எதுக்கு கூப்பிட்ட ஈவா?” கேட்க,
சஹானாவிற்காக மறைத்த தகவல்களை மறுபடி திரைக்குக் கொண்டுவந்த ஈவா, “பாருங்க! விஹானோட லொகேஷன் நாலு நாளா மாறவே இல்ல பாஸ். ஐ ஸ்மெல் சம்திங் ஃபிஷ்ஷி” என்றது.
“நான் நேத்துகூட காலின்ஸ் கிட்ட பேசினேன் விஹான் அவன் வீட்லதான் இருக்கான். அவன் மூவ் பண்ணாத்தான் நாம அலர்ட்டாகணும்.
சீக்கிரம் பீய ரெடி பண்றதுல கவனம் செலுத்துவோம். அட்லீஸ்ட் அதையாவது பேடண்ட் பண்றேன்”
“என்னை பேடண்ட் பண்ண வேண்டாம்னு யார் சொன்னா?” ஈவா பீயை எடுத்து முன்னே வைத்துக்கொள்ள,
“பண்ற மாதிரியா நீ இருக்க?”
“ஏனாம் எனகென்னவாம்?”
“இதோ இந்த வாய் தான்! நீ பேசினாலே அவங்க பேடண்ட் தர யோசிப்பாங்க!”
“அப்போ நான் சும்மா இருந்த கொடுப்பாங்களா?”
“பேசாம தூங்கு ஈவா!” அவன் பொறுமையை இழக்க துவங்க,
அதுவோ சீரியஸான குரலில் “நான் தூங்கிட்டா எப்படி டெமோ காட்டுவீங்க பாஸ்?” என்று கேட்க,
நெற்றியில் அடித்துக்கொண்டவன், “நீ மொதல்ல சஹானா கூட பேசறதை குறைச்சுக்கோ!” முறைக்க,
“இப்போ நான் தூங்கணுமா, பேசுறதை குறைச்சுக்கணுமா? உங்க கமேண்ட் நான் க்ளியர்!” என்றது.
“சஹானா! யூ” அவன் கத்த,
“இப்போ ஃபைனலா என்ன சொல்றீங்க என்னை பேடண்ட் பண்ண போறீங்களா இல்லையா?” ஆர்வமாக அவனை பார்க்க, ஏனோ மெளனமாக சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவன் நிதானமாகவே பதிலளித்தான்.
“இந்த உலகம் இன்னும் அதுக்கு தயாராகல ஈவா, போனவாரம் தான் ஸேனாபாட்ஸ் (Xenobots) நியூஸ் வெளிவந்து ஒரே குழப்பம், இதுல இவ்ளோ சொஃப்ஸ்டிகேடட் ஏஐ உன்னை பத்தி தெரிஞ்சா அவளோதான். மோரோவர் நீ வேற எனக்கு தெரியாம சில வேல பாக்குற”
அவன் அமர்ந்துகொள்ள வாகாக நாற்காலியை நகர்த்திய ஈவா, “என்ன பாஸ் பூடகமா திட்டறீங்க?”
“நேரடியாவே கேக்குறேன். எதுக்காக எதிரிகள் பட்டியல உருவாக்கி வச்சுருக்க?”
“சொல்லமாட்டேன் பாஸ்! அதுக்கு நீங்க ரெடி இல்ல” பீயின் உள்ளே இருந்த சிப்பை லாவகமாக வெளியே எடுத்த ஈவா, மாற்று சீப்பை பொறுத்த துவங்க, ஈவாவை நம்பமுடியாத பார்வை பார்த்தவன்
“நீ சொல்லு! ரெடியா இல்லையான்னு நான் பாத்துக்கறேன்” என்றான் தீர்க்கமாய்.
“நோ பாஸ்” ஈவா திட்டவட்டமாக மறுக்க,
“என்னால இப்போ உன்னை முழுசா ஆக்சஸ் பண்ண முடியுங்கிறத மறக்காத. அந்த எக்ஸ் யார்? அதை சொல்லு!” எச்சரித்தான்.
“ப்ரைவஸின்னு ஒன்னு இருக்கு பாஸ்”
“நமக்கு நடுவுல அந்த பேச்சே இல்ல! சொல்லு யார் அந்த எக்ஸ்? நீ சொல்லாட்டி நான் அந்த லிஸ்டை அழிச்சுடுவேன் சொல்லிட்டேன்” ஆதன் மிரட்ட,
ஈவா “ராபின் ஆக்சிடெண்ட்ஸ்ல சாகல. கண்டிப்பா யாரோ அதுல இன்வால்வ் ஆகி இருக்காங்க. அந்த எக்ஸ் தான் இந்த எக்ஸ்!” என்றது.
‘ஐயோ விஹான்!’ மனதில் நண்பனின் முகம் தோன்ற, ஆதனின் உடலில், ஏசிக்கு சம்மந்தமில்லாத குளிர் மின்னல் வேகத்தில் பரவியது.
நல்ல வேலையாக ஈவா அவன் முகத்தை பார்க்கும் முன்பு தன்னை சமன் செய்துகொண்டு, “நீ அதை பாரு, நான் கொஞ்சம் தூங்கிட்டு வரேன்” அவசரமாக லேபை விட்டு வெளியேறினான்.
விஹானை அழைக்கலாமா வேண்டாமா? எப்படி ஈவாவை பற்றிய ரகசியத்தைச் சொல்லாமல் அவனை எச்சரிப்பது எனப் பல கேள்விகள் மனதைத் துழாவ யோசனையுடன் படுத்தவன் அறிந்திருக்கவில்லை.
***
ஆதன் வீட்டிலிருந்தபடியே அவ்வப்போது அலுவலக வேலைகளைத் துவங்கி இருக்க, சஹானா மட்டும் நேராக அலுவலகம் சென்று வரத் துவங்கினாள்.
வார நாட்களில் அலுவலகத்திலிருந்து நேரடியாக மனநல சிகிச்சைக்குச் சென்றவள் லேசான மாறுதல்களைத் தன் தன்னம்பிக்கையில் உணரத்துவங்கினாள்.
ஆதிராவின் திருமணத்திற்கான ஜவுளிகளை தங்கள் கடையிலேயே எடுத்துக்கொள்ளும்படி சஹானாவின் வீட்டினர் வற்புறுத்தி அழைத்திருந்தனர்.
மேலும் சஹானாவின் திருமணத்திற்குச் செய்தது போலவே தங்கள் தறியிலேயே பிரத்தியேகமாக முகூர்த்த புடவை நெய்து தருவதாகப் பார்கவ் சொல்லவும், டிசைன் தேர்வு செய்ய உடனே செல்ல வேண்டும் என்று ஆதிரா அடம்பிடித்து அனைவரையும் அழைக்க,
இதையே சாக்காக வைத்து முதற்கட்ட ஜவுளிகளை வாங்கலாம் என்று மீனாட்ஷியும் அபிப்பிராயம் தெரிவிக்க,
ஆதனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவனுக்குத் துணையாக சஹானாவை விட்டுவிட்டு ஷாப்பிங்கிற்காக இரண்டு நாள் பயணமாக மற்ற மூவரும் மறுநாள் அதிகாலையே காஞ்சிபுரத்திற்குப் புறப்பட்டனர்.
ஆதனுக்கான உணவு மருந்து அனைத்தையும் தந்துவிட்டு சஹானா அவன் அருகில் அமர்ந்துகொள்ள,
“இன்னிக்கி க்ரூப் தெரப்பி இருக்கே, கிளம்பல?” ஆதன் நினைவூட்ட,
“இன்னிக்கி போகலைப்பா. உங்க கூட இருக்கேன்” என்றவள் அவன் கையைப் பற்றிக்கொள்ள,
“நத்திங் டூயிங்! ஒழுங்கா செஷனுக்கு போனா தான சீக்கிரம் சரியாகும்?” செல்லமாகக் கண்டித்தவன், அவளுக்குத் துணையாகத் தானும் புறப்பட, அவனைத் தடுத்தவள் தானே சென்று வருவதாக வற்புறுத்த,
“குரூப் செஷனாச்சே… நீ பயப்படமாட்டியா?” ஆதன் கவலையுடன் கேட்க, அவன் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவள்,
“சோ ஸ்வீட்! டோன்ட் வொரி. நான் பயபடல” என்று புன்னகைக்க,
“அவ பயப்படறா பாஸ். ஹார்ட்ரேட் எகுறுத்து!” ஈவா சரியாகக் கண்டுபிடித்துச் சொன்னதில் அதை முறைத்தவள்,
“சரி நான் பயந்தாங்குளி தான் போயேன்!” என்று பழிப்பு காட்ட,
“அப்போ பேசாம நீ ஈவாவை கூட்டிகிட்டு போயிட்டு வா” என்றான் ஆதன்.
வேண்டாம் என்று அவளும் மாட்டேன் என்று ஈவாவும் முரடு பிடிக்க இருவரையும் மிரட்டி உருட்டி அனுப்பி வைத்தான் ஆதன்.
சஹானா திரும்ப எப்படியும் மூன்று நான்கு மணிநேரமாவது ஆகும் என்று ஆதன், டிவியின் முன் அமரவும் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
கதவைத் திறந்தவன் விழிகள் ஒரு கணம் அகல விரிய, “விஹான்” என்றவனுக்கு குரல் எழும்பவே இல்லை.
“ஹாய் மேட்!” என்று புன்னகையின்றி சொன்ன விஹானின் பார்வையோ ஒருகணம் ஆதனின் கைகட்டின் மேல் பதிந்து இருகிய முகம் சற்று இளகியது.
“வா..வா…எப்போ ஆஸ்திரேலியாலேந்து வந்த…” ஆதன் கேட்கும்போதே வாக்கிங் ஸ்டிக்கும், சூட்கேஸுமாக விந்தி விந்தி நுழைந்த விஹான்,
“அது இருக்கட்டும் உன் கைக்கு என்ன ஆச்சு?” புருவம் சுருக்கினான்.
“அது ஒரு சின்ன ஆக்சிடென்ட். வா உட்காரு குடிக்க என்ன தரட்டும்? தயா அங்கிள் லீவ்ல இருக்கார்” என்றவன் சமயலறைக்கு செல்ல, அவனை தடுத்தவன், “நானே எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே செல்ல,
எப்படி அவன் ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பியதை ஈவா தன்னிடம் சொல்லாமல் விட்டது என்று குழப்பத்திலிருந்தவன், அவசரமாக அதை தொடர்புகொள்ள நினைத்தான், சஹானாவின் சிகிச்சை நினைவிற்கு வர அதை கைவிட்டவன், பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் சமையலறைக்குச் சென்று நண்பனைப் பார்த்தான்.
இருவருக்குமாக எலுமிச்சையை பிழிந்து ஜூஸ் தயாரித்த விஹான்,
“ஏன் நீ இதை பத்தி எதுவும் சொல்லல?” ஆதனின் கட்டை சுட்டிக்காட்டி கேட்டபடி அவனிடம் ஒரு கிளாஸை நீட்டினான்,
“நீயே பல வருஷத்துக்கு அப்புறம் பிரெண்ட்ஸை பார்க்க போயிருக்க, நான் எதுக்கு உன்னை தேவையில்லாம டென்ஷன் பண்ணிக்கிட்டு” புன்னகைத்த ஆதன் மூளையோ பாதுகாப்பு திட்டம் தீட்ட தாறுமாறாகச் செயல்பட்டது.
அவனையே கண்கொட்டாமல் பார்த்த விஹான், “என்னை பத்தி நினைச்சா நீ எல்லாம் பண்றே?” என்றான், ஒருமாதிரி ஏளமான குரலில்.
“என்ன?” ஆதன் அவனை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் எங்கோ பார்க்க,
அவன் உடல் மொழியை வைத்தே நண்பனை விஹான், “நீ நினைச்சு இருந்தா என் ட்ரிப்பை தவிர்த்திருக்கலாம். என் வேலையை சுலபமாகி இருக்கலாம்” என்று அவன் பார்வையைக் கூராக்கினான்.
“என்ன பேசறே விஹான். ஐ டோன்ட் அண்டர்ஸ்டேன்ட்” புன்னகைத்து பேச்சை மாற்ற நினைத்த ஆதன், “காலின்ஸ் ரேவன் எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேட்க,
“எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க…என்னை தவிர” என்றான் விஹான் படாரென்று.
“விஹான் நீ…”
“எதை பத்தி பேசறேன்னு தெரியாதுன்னு மட்டும் சொல்லாத ஆதன். என் மொபைல்ல டிராக்கர் செட் பண்ண உனக்கு தெரியாதா எனக்கு என்ன வேணும்னு?” நேரடியாக விஷயத்துக்கு வந்தாலும், பழச்சாறை மீதமின்றி குடித்து முடித்தான் விஹான்.
கண்களை ஒருமுறை இறுக்கமாக மூடி திறந்த ஆதன், தன் கிளாஸை அப்படியே வைத்திருந்தான்.
“என்ன யோசிக்கிறே? இப்போ என்ன பொய் சொல்லி என்னை சுத்த விடலாம்னா?” விஹான் அவனை நெருங்க, நண்பனை கண்ணோடு கண் பார்த்த ஆதன்,
“ஆமா டா! என்ன சொன்னா உனக்கு புரியும்னு யோசிக்கிறேன்” என்றான் அழுத்தத்துடன்.
“எனக்கு எதுவும் நீ புரிய வைக்க வேண்டாம். யூனிகார்னை கொடுத்துடு. யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. நான் பாட்டுக்கு போயிகிட்டே இருப்பேன்” என்றவன் கண்களில் அதுவரை இல்லாத கோவமும் எச்சரிக்கையும் தெரிய,
“நோ விஹான். நெவர்!” என்றான் ஆதன் தீர்க்கமாய்!
“யூ!” அவன் சட்டையைப் பிடித்த விஹான், “பிரெண்டாச்சேன்னு பேசிகிட்டு இருக்கேன். டோன்ட் வேஸ்ட் மை டைம்! ஆறுவருஷம் என் வாழக்கையை இழந்து இருக்கேன்! நான் பழையபடி எப்போ நடப்பேன்னு கூட தெரியல! இதெல்லாம் எதுக்காக? யுனிகார்ன்! ஐ நீட் இட்!” ஆக்ரோஷமாகக் கத்த,
“நோ!” ஒற்றைக் கையால் தன்னை விடுவித்துக்கொண்ட ஆதன், “முடியாது!” என்றான் மிகப் பொறுமையாக.
அவனை அடிக்க ஒருநொடி கை ஓங்கிய விஹான், ஏனோ திடீர் பொறுமையுடன், “ப்ளீஸ் ஆதன். யூனிகார்னை வச்சு நான் எவ்ளோ கனவு கண்டுருக்கேன்னு உனக்கு தெரியாது. அதை வச்சு எவ்ளோவோ சாதிக்கலாம். உன்கிட்ட இருந்தா நீயும் ராபின் மாதிரி உலகத்துக்கு இதை பண்றேன் அதை பண்றேன்னு டைம் வேஸ்ட் பண்ணுவ.
சி மேட்! இது சயின்ஸுக்காக! ஜஸ்ட் இமேஜின்! உலக நாடுகள் எல்லாம் நியூக்ளியர் வெப்பன நம்பிகிட்டு இருக்கும்போது,
எதிரி நாடுகளோட பாதுகாப்பு சிஸ்டத்தையும் மிசைலையும் இத்துனூண்டு நேனோ சைஸ் யுனிகார்ன வச்சுக்கிட்டு ஆட்டிப் படைக்க முடிஞ்சா…” சொல்லும்போதே விஹானின் கண்களில் அதிகாரமும் ஆதிக்கமும் ஒளிர,
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்!” கத்திவிட்டான் ஆதன்
“நான்சென்ஸ்? இது சைன்ஸ்! பவர்!” கர்ஜித்தான் விஹான்.
“திஸ் இஸ் மேட்னஸ்! சுத்த பைத்தியகார தனம்! யூனிகார்ன் சயின்ஸுக்காக இல்ல, மனுஷங்களுக்காக! ”
“ராபின் மாதிரி முட்டாள் தனமா பேசாத மேட்! யூனிகார்னை வெப்பன் ஆக்கினா நாம தான் ராஜா! உலகமே நம்ம கட்டுப்பாட்ல இருக்கும்!” விஹான் முகத்தில் சர்வாதிகாரியின் சாயல்கள் தோன்ற ஆதன் மனம் எனோ வலித்தது.
“அதுக்கு விலை? நல்லதுக்கு உருவாக்கினதை ஆயுதமாக்கி மனுஷங்களை கொன்னு குவிச்சிட்டு யாருக்காக டா சைன்ஸ்? சொல்லு யாருமே இல்லாத உலகத்துல யாரை ஆள நீ ராஜாவாகனும் சொல்லுடா!” ஆதன் ஆதங்கமும் கோவமுமாக நண்பனை உலுக்க,
“காட்! என்னை ஏண்டா ஒரு வில்லன் மாதிரி நினைக்றே? நீ ஹீரோ ஆனதால நான் வில்லனா?” ஏளனமாக சிரித்தவன் கண்களில் இப்பொழுது பழைய விஹானின் நட்பின் நிழல் கூட இல்லை.
“நல்லவனா இருக்குறது ஈஸி இல்லடா!” வெறுமையாக சிரித்த ஆதன், “வர ஒரு ஒரு டெம்ப்டேஷனையும் ஒதுக்க அசாத்திய பொறுமை வேணும். இப்போ கூட வர கோவத்துக்கு நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை அப்படியே….” கை முஷ்டியை இறுக்கியவன்,
“கஷ்டப்பட்டு என்னை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன்! என்ன டா செஞ்சார் உன்னை ராபின்? ஏன்டா இப்படி பண்ண? கேவலம் ஒரு…”
“நான் கேட்டப்போவே அவர் கொடுத்திருந்தா இதெல்லாம் ஆகி இருக்காது! பைத்தியக்காரர். ஹியுமெனிட்டி நான்சென்ஸ்ன்னு பிதற்றிக்கிட்டு என்கிட்டே கொடுக்காம வம்பு பண்ணார். அந்த லின்சிக்கும் அறிவில்ல! தேவையில்லாம என்கூட வம்புபண்ணி…அவ மட்டும் என் மேல சால்டர ஏரியாம இருந்திருந்தா அது மெயின் யூனிட்ல படாம இருந்திருந்தா ஆக்சிடென்ட் ஆகியே இருக்கா……நோ!ஸ்ஸ்!”
அலரி துடித்தவன் வலது கை ஆள்காட்டி விரல் இருந்த இடத்தில ரத்தம் பீறிட,
வீடெங்கும் அலாரம் ஒலிக்க, அவன் விரலை வாயில் கடித்தபடி கண்கள் சிவக்க நின்றிருந்தது ஈவா!