idhayam – 35

idhayam – 35

அத்தியாயம் – 35

காமாட்சியிடம் வெளியே செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பிய சிவரத்தினம் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று தன் பேத்தியின் பின்னாடி சுற்றுவதாக ஆதித்யாவின் மீது கேஸ் கொடுக்க, “நாங்க விசாரிக்கிறோம்” என்று அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு வந்த கணவனின் முகம் பார்த்த காமாட்சி, “என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க” என்று கணவனை விசாரிக்க சோர்வுடன் சோபாவில் அமர்ந்தவர்,

“எனக்கு வேற வழி தெரியல காமாட்சி அதன் ஆதி மேல் போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்துட்டேன்” அவரின் குரலில் வலி வெளிப்படையாகவே தெரிந்தது.

“என் பேத்தி பிறந்ததில் இருந்தே ரொம்ப கஷ்டத்தை அனுபவிக்கிற இல்ல காமாட்சி. அவங்களை சேர்த்து வைக்க நினைத்த என் கையால் இப்படியொரு பாவத்தை செய்ய வெச்சுட்டா அந்த மேனகா” என்றவரின் கை முஷ்டி இறுகியது.

சிவரத்தினம் அந்த காலத்து மனிதர் என்றாலும் அவர் காதலுக்கு எதிரி கிடையாது. கிட்டதட்ட எண்பதை நெருங்கும் வயதிலும் இன்னும் இரும்பு போல உடம்பை வைத்திருந்தவருக்கு மேனகாவை அடித்து நொறுக்க வேண்டும் என்று தோன்றியது.

அவர் கம்பிளைன்ட் கொடுத்தும் அவனைத்தேடிசென்றது போலீஸ். அவன் நண்பர்களோடு வழக்கமாக பேசும் இடத்தில் நின்றிருப்பதை கண்டு ஜீப்பை நிறுத்தி கீழே இறங்கியவர்,

“நீதான் ஆதியா” என்றதும் அவன் ஒப்புதலாக தலையசைக்க, “உன் மேல் புகார் கொடுத்து இருக்காங்க விசாரிக்கணும் வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம்” என்றார் இன்ஸ்பெக்டர் பைரவன்.

அவர் சொன்னதைக்கேட்டு அதிர்ந்த ஆதி, “என்மேல் யார் கம்பிளைன்ட் கொடுத்தாங்க” என்று கேட்க அதற்கு பதில் சொல்லாமல் அவனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்வதில் குறியாக இருந்தனர்.

“நீங்க காரணத்தை சொன்னால் நான் வருவேன்” ஆதியின் குரல் உறுதியுடன் ஒலித்தது.

“நீ அபூர்வா என்ற பெண்ணை டார்ச்சர் பண்றதா அவங்க தாத்தா உன்மேல் கம்பிளைன்ட் கொடுத்திருக்காங்க. இப்போ போலாமா போலீஸ் ஸ்டேஷன்” என்றார் பைவரன் கோபத்தை கட்டுப்படுத்தியபடி.

அவன் சரியென தலையசைத்து அவர்களோடு செல்ல ஆதியை போலீஸ் அழைத்து செல்வதைப் பார்த்த பிரவீன் இந்த விஷயத்தை உடனே அபூர்வாவிடம் சொல்ல பைக்கை எடுத்துகொண்டு ஸ்கூலுக்கு சென்றான்.

அவன் பைக்கை ஸ்கூல் முன்னாடி நிறுத்திவிட்டு திரும்பும்போது அபூர்வா தேர்வை முடித்துவிட்டு வருவதைக் கண்டவன், “அபூர்வா உங்க தாத்தா ஆதிமேல் கேஸ் கொடுத்துட்டார். அவனை விசாரிக்க போலீஸ் கூட்டிட்டு போயிருக்கு” என்று விவரத்தை கூறிட அவள் அதிர்ந்தாள்.

“இப்போதான் அவரை கூட்டிட்டு போறாங்களா” என்றவள் கேட்க, “ம்ம்” என்றான்.

அவள் அங்கிருந்து வேகமாக நகர, “அபூர்வா” என்று மற்றொரு குரல் அவளின் அருகே கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்க்க சிவா புன்னகையோடு அவளை நோக்கி வந்தான்.

“அண்ணா” என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“அபூர்வா எப்படி இருக்கிற வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க” என்று அவன் விசாரிக்க, “நல்ல இருக்காங்க அண்ணா” தாமதமாகும் ஒவ்வொரு நொடியிலும் நிலைமை கைமீற வாய்ப்பு உள்ளது என்று உணர்ந்தவள்,

“அண்ணா நான் இப்போ போயே ஆகணும். உங்களோட பேச எனக்கு இப்போ நேரமில்ல. நான் போனால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும்” நில்லாமல் வேகமாக ஓடுவதை சிந்தனையோடு பார்த்தான் சிவா.

அதே வேகத்துடன் வீடு வந்து சேர்ந்த அபூர்வாவின் பார்வை வீட்டை சுற்றி வந்தது. சிவரத்தினம் –  காமாட்சி இருவரும் ஹாலில் அமர்ந்திருப்பதைக் கண்டு, “தாத்தா ஆதிமேல் ஏன் கேஸ் கொடுத்தீங்க” என்று கோபத்துடன் கேட்டாள்.

அவளின் மனநிலை புரிந்தபோதும், “அபூர்வா தாத்தா உன் நல்லதுக்கு தான் பண்ணுவேன்னு உனக்கு தெரியாதா?” என்றார் நேர்கொண்ட பார்வையோடு.

“அதுக்கு ஆதியை தூக்கி உள்ளே வைப்பீங்களா” என்று அவளும் அந்த விஷயத்தை விடுவதாக இல்லை.

“அவங்க சித்தி என்ன பேசினான்னு தெரிந்தும் நீ இப்படி பேசுவது சரியில்லம்மா” என்றார் பொறுமையை இழுத்து பிடித்தபடி.

“ஆதியின் அம்மா சொல்லி இருந்தால் நானே அவரைவிட்டு ஒதுங்கி போயிருப்பேன். எந்தவிதமான உரிமையும் இல்லாத அவங்களுக்காக நான் ஏன் ஆதியைவிட்டு பிரியணும்?” என்று அவள் காரணத்தை கேட்டாள்.

அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல், “நீ அவனோட சேர்ந்து வாழ நினைச்சாலும் அதை அந்த மேனகா விடமாட்டா கண்ணம்மா.” அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தார் பெரியவர்.

அவர் என்ன சொல்லியும் அவளின் மனம் ஆற மறுத்தது. ஆதி எந்தவிதமான குற்றமும் செய்யாமல் ஜெயிலுக்கு போவதை அவள் விரும்பவில்லை. தன்னை காதலித்த பாவத்திற்கு அவன் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.

அவன் ஜெயிலுக்கு போனபிறகு அவனின் தாயின் நிலை என்ன? அவன் தண்டனை முடிந்து வெளியே வரும்போது அவனை நம்பி யார் வேலை கொடுப்பார்கள்? என்றெல்லாம் எண்ணியபடி நின்ற அபூர்வா தாத்தாவின் அருகே வந்து அவரின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தாள்.

“தாத்தா அந்த மேனகா உங்களை பகடைக்காயாக மாற்றி அவள் காரியத்தை ஜாதிச்சிக்க வழிவகுத்துட்டான்னு புரியாமல் நீங்களே போய் கேஸ் கொடுத்து இருக்கீங்க” அவரின் தவறை தெளிவாக புரிய வைக்க முயன்றாள்.

பெரியவர்கள் இருவரும் அவளை கேள்வியாக நோக்கிட, “நீங்க கேஸ் கொடுத்தால் அவ தன் பணபலத்தை யூஸ் பண்ணி அவனை வெளியெடுத்து நல்லவள் ஆகிருவா. அவரை உயிருக்கு உயிராக காதலிச்ச என்னோட நிலை என்னன்னு யோசிங்க தாத்தா” என்றாள் மெல்லிய குரலில் கண்ணீரோடு.

அவள் சொன்னபிறகு தான் சிவரத்தினம் தன் தவறை உணர்ந்தார். அவர் அமைதியாக சிந்திப்பதைக்கண்டு அவள் எதிர்ப்பார்ப்போடு அவரின் பதிலுக்காக காத்திருந்தாள். சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

“அபூர்வா நீ சொல்வது சரி என்றபோதும் உன்னை வளர்த்தது ரோஹித் மதுமிதா தான். அவர்களின் பெயரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு. அதனால் எந்த முடிவாக இருந்தாலும் யோசித்து எடு”  மனைவியிடம் சொல்லிவிட்டு பேத்தியை அழைத்துக்கொண்டு கேஸ் வாபஸ் வாங்க சென்றார்.

அதேநேரத்தில் அங்கே ஆதியிடம் விசாரணை தொடங்கிய பைரவன், “என்ன காரணத்திற்காக அபூர்வாவின் பின்னாடி சுத்திட்டு இருக்கிற” என்று கேட்டார்.

“என்மேல் வேண்டுமென்றே பொய் கேஸ் போட்டு இருக்கார் அவரின் தாத்தா” என்றான் அவன் தெளிவாகவே.

“எதுக்காக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபூர்வாவை சந்திக்க போன?” என்று அவர் குறுக்கே கேள்வி கேட்க அவரின் கேள்விக்கு அவன் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தான்.

“நீ அவங்க வீட்டுக்கு ஆள் இல்லாத நேரத்தில் போனதால் தான் உன்மேல் கம்பிளைன்ட் பண்ணிருக்காங்க” என்றார் பைரவன் தீர்க்கமான பார்வையுடன்.

“அந்த பொண்ணு உன்னை காதலிக்கிற மாதிரி இருந்தால் அவங்க ஏன் இப்படியொரு கம்பிளைன்ட் கொடுக்கணும்” என்றவரின் பார்வை அவனின் மீது படிய அவனும் அதே சிந்தனையோடு அவரை ஏறிட்டான்.

அபூர்வா தன்னை நேசிக்கிறாள் என்று நிரூபிக்க ஆதித்யாவிற்கு ஒரு நிமிடம் போதும். அவனை காதலித்த பாவத்திற்கு அவள் சிலுவையை சுமக்க வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தவன் எதுவாக இருந்தாலும் தானே சமாளிக்க வேண்டும் என்று நினைத்தான்.

சிவரத்தினம் தன் மீது பொய் கேஸ் எதுக்கு கொடுக்க வேண்டும். அவரின் செயலுக்கான காரணம் புரியாமல் அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சமயத்தில் பைவரனுக்கு திடீரென்று ஒரு போன் கால் வந்தது.

அவன் போனை எடுத்து, “ஹலோ” என்றதும், “பைரவன் நான் மேனகா பேசறேன். ஆதிமேல் வந்த கேஸை கொஞ்சம் நல்லா கவனிங்க” என்ற கட்டளையிட்டார்.

“சரிங்க மேடம்” என்று போனை வைத்த பைரவன் ஆதியை ஏறயிரங்க பார்த்தார்.

பிறகு “உன்மேல் கேஸை ஸ்ட்ராங் பண்ண சொல்லி போன் பண்ணி இருக்காங்க. உன்னை உள்ளே தூக்கி போட என்ன செய்யணுமோ அதை செய்ய சொல்றாங்க” என்று அவர் விஷயத்தை மாற்றி சொன்னதும் ஆதியின் கோபம் தலைகேறியது.

“நான்தான் எந்த தப்பும் பண்ணலையே? அப்புறம் எப்படி என்னை தூக்கி உள்ளே வைக்க முடியும்” அவன் எரிச்சலோடு.

“நீ தவறு செய்யலன்னு நிரூபிச்சா போயிட்டே இருக்கலாம்” என்றவர் கறாராக கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார்.

அபூர்வாவை இங்கே வரவழைத்தால் மட்டுமே தன் மீது தவறில்லை என்று நிருபிக்க முடியும் என்று ஒரு எண்ணம் ஓடினாலும், ‘பொய் கேஸ்’ என்று ஊர்ஜிதம் செய்ய ஏதாவது வலி கிடைக்கிறதா என்று அவன் தீவிரமாக யோசிக்கும்போது சிவரத்தினம் தன் பேத்தியுடன் உள்ளே நுழைவதைக் கண்டான்.

கொஞ்சநேரத்திற்கு முன்னால் கேஸை ஸ்டாரங் செய்ய சொல்லி போனில் சொல்லிவிட்டு, ‘இப்போது எதுவும் அறியாதவர் போல அபூர்வாவுடன் வருகிறாரே’ என்று அவளின் தாத்தாவை தவறாக நினைத்தான் ஆதி.

அவர்களை பார்த்தும், “வாங்க சார்” என்று அவரை அமர சொல்லி தன் முன்னே இருந்த சேரைக் காட்டினார் பைரவன்.

பிறகு ஒரு நிமிடம் ஆதியைப் பார்த்தவர், “இவன் உண்மையை சொல்ல மறுக்கிறான் சார். இவனை தூக்கி உள்ளே வைத்து எலும்பை முடித்தால் தான் சரிவரும்” என்றதும் அபூர்வாவின் கண்கள் கலங்கியது.

அவள் தடுத்து பேசும் முன்னே, “நான் ஏன் செய்யாத தவறுக்கு உள்ளே போகணும்” என்று கேட்ட ஆதியின் பார்வை அவளின் மீது அழுத்தமாக படிந்தது.

‘நீ எதுக்கு இப்போ இங்கே வந்த?’ என்றவனின் பார்வை அவளை கேள்வி கேட்க கையைப் பிசைந்தபடி அவள் தலைகுனிந்தாள். தான் இங்கே வந்தது அவனுக்கு பிடிக்கவில்லை என்று சட்டென்று உணர்ந்தவள், “நான்” என்று தொடங்க கைநீட்டி தடுத்தவன் அவளை முறைத்தான்.

அதுவும் பைரவன் கண்களுக்கு தவறாக தோன்ற, “என்னடா அந்த பொண்ணை முறைக்கிற” என்றவர் எழுந்து அவனின் அருகே வந்தார்.

“சார் இவர் வேண்டும் என்றே பொய் கேஸ் போட்டு என்னை உள்ளே தள்ள பார்க்கிறார்” என்று அவன் சிவரத்தினத்தை பார்த்தபடி உறுதியாக கூறினான்.

“அப்படி என்னப்பா உனக்கும் அவருக்கும் முன் விரோதம்” என்று கோபத்துடன் கேட்ட பைரவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது ஆதிக்கு சுத்தமாக புரியவில்லை.

“நீ அவரோட பேத்தி பின்னாடி சுத்தி அவள் மன உளைச்சலுக்கு ஆள் ஆகிருக்கிற. அதன் உன்மேல் கேஸ் கொடுத்து இருக்கார்” என்று பைவரன் பேச்சை வளர்க்க சிவரத்தினம் இடையே ஏதோ சொல்ல வந்தார். அவர் சொல்ல வருவதை இருவரும் கேட்கும் நிலையில் இல்லை.

“என்னை தூக்கி உள்ளே வைக்கணுமா” என்று ஆதி முடிவாக கேட்க, “ஆமா” என்றார்.

“ஆதி கொஞ்சம் பொறுமையாக பேசுங்க” என்று அபூர்வா அவனின் அருகே வந்தாள்.

“என்னடி பொறுமையாக இருக்க சொல்ற. உங்க தாத்தா உண்மை தெரிஞ்சே என்மேல் பொய் கேஸ் போடுவாரு. அதை பார்த்துட்டு நான் அமைதியாக இருக்கணுமா” என்றவன் அவளிடம்  எரிந்து விழுந்தான்.

“என் முன்னாடியே அவளை இந்தளவுக்கு மிரட்டும் நீ தனிமையில் என்னன்னா சொல்லி அவளை மிரட்டிருப்ப” என்று அவனின் மீதிருந்த விசாரணை கேஸை ஸ்டாரங் பண்ண சொல்லி தன் கான்ஸ்டபிளிடம் கண்ணால் கூறியதை ஆதி கவனித்துவிட்டான்.

அபூர்வா தவிப்புடன் இருவரையும் பார்த்தபடி நின்றிருக்க தன் பக்கெட்டில் இருந்து மாங்கல்யம் நாணை எடுத்த ஆதி கண்ணிமைக்கும் நொடியில் அவளின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டு நிமிர்ந்தான் ஆதி.

சிறிதுநேரத்திற்கு முன்னால் எத்தனை கனவுகளோடு தாலியை வாங்கி வந்தவன், ‘எங்களின் திருமணம் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்’என்று மனதிற்குள் ஆயிரம் கற்பனை செய்திருந்தான். ஆனால் அந்த திருமணம் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் நடக்குமென்று யாராவது அவனிடம் சொல்லியிருந்தால் சிரித்திருப்பான்.

“ஆதி” என்று சிவரத்தினம் அதிர்ச்சியோடு கத்தினார். அவனின் மீதிருந்த கேஸை வாபஸ் வாங்க வந்த இடத்தில் பைரவனின் பேச்சால் அனைத்தும் தலைகீழாக மாறிப்போனது.

தன் கழுத்தில் கிடந்த தாலியை அதிர்ச்சியோடு பார்த்தாள் அபூர்வா. சிலநொடியில் நடந்துவிட்ட இந்த நிகழ்வு அவளின் மனதில் பிரளயத்தை உருவாக்கியது.

அவரின் பக்கம் நிதானமாக திரும்பி, “நீங்க கேஸ் கொடுப்பதற்கு முன்னாடி இதுபற்றி கொஞ்சம் யோசிச்சு இருக்கணும்” என்றவன் பைரவனிடம்,

“செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பதை விட செய்துவிட்டு தண்டனை அனுபவிப்பது கூட நல்லாத்தான் இருக்கும். அபூர்வா வயசு பதினேழு. மைனர் பொண்ணுக்கு வல்லுகட்டயமாக தாலி கட்டிட்டேன்னு எழுதி கேஸை ஸ்டாரங் பண்ணுங்க இன்ஸ்பெக்டர்” என்றான் உறுதியான குரலில்.

அவனின் கம்பீரமான பேச்சு சிவரத்தினத்தின் மனதை வலிக்க செய்தது. தான் கொடுத்த கம்பிளைன்ட் தன் பேத்தியின் வாழ்க்கையை திசைதிருப்பிவிட்டதே என்று கவலைப்பட்டார்.

அவனின் குரலில் அவளின் மனம் நடப்பிற்கு திரும்பிட, “அவசரப்பட்டுடிங்க ஆதி” என்றாள் அதிர்ச்சி மாறாத குரலில்.

அந்த பேச்சில் அவனின் கோபம் அதிகரிக்க, “அதுக்காக உன்னைவிட்டு விலகி போக சொல்றீயா? அதெல்லாம் என்னால முடியாது. நம்மள பிரிக்க யார் நினைச்சிருந்தாலும் நான் இதைதான் செய்வேன்” என்றவனின் பார்வை அவளின் தாத்தாவின் மீது படிந்து மீண்டது.

“உங்க முன்கோபத்தால்” அபூர்வா பைரவனின் பக்கம் திரும்பி, “நாங்க கேஸை வாபஸ் வாங்க வந்தோம். எங்கே சைன் பண்ணனும்னு சொல்லுங்க” என்றவள் தாத்தாவின் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

அவரோ கண்களில் வலியுடன் இருவரையும் பார்க்க, ‘அவரை மன்னிச்சிடுங்க தாத்தா’ அவரிடம் பார்வையால் மன்னிப்பு கேட்ட அபூர்வாவின் மனமும் ஆதியின் செயலால் காயம்பட்டு இருந்தது.

அவளின் பேச்சில் பைரவனுக்கு கோபம் வரவே, “என் முன்னாடியே உனக்கு தாலிகட்டி இருக்கான். இவனை சும்மா விடுவதா? இவனை வெளியேவிட்ட இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிப்பானோ” ஆதியை எரித்துவிடுவது போல பார்க்க அவனோ சளைக்காமல் அவனின் பார்வையை எதிர்கொண்டான்.

எங்கோ பறந்த மனதை மூச்சை இழுத்து கட்டுக்குள் கொண்டு வந்து, “சார் அவரு எனக்குதானே தாலிகட்டினார். நானே இந்த பிரச்னையை சரி பண்ணிக்கிறேன். இப்போ கேஸை வாபஸ் வாங்க எங்கே சைன் பண்ணனும்” என்றாள் அபூர்வா உறுதியான குரலில்.

“இல்லம்மா என்னால விட முடியாது. இவனால் நாளைக்கு உன் படிப்புக்கு பிரச்சனை வரும். அதனால் இவனைத் தூக்கி உள்ளே போட்டால்தான் சரிவரும்” என்றவர் ஆதியை உள்ளே வைப்பதில் குறியாக இருப்பதைக் கவனித்த அபூர்வா சட்டென்று சுதாரித்தாள்.

பைரவன் ஆதியை  வைத்து ஏதோ பிளான் பண்ணுவதாக அவளின் மனம் கூறவே, “அப்போ ஒன்னு பண்ணுங்க சார்” என்ற அபூர்வா மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு கூறினாள்.

அவள் அடுத்து சொன்னதைக்கேட்டு ஆதியின் காதல் மனம் கண்ணாடிபோல சுக்குநூறாக உடைந்து சிதறியது.

  

 

 அவனை      

, “நீங்க வேலைக்காக சென்னைக்கு போவது எனக்கும் சந்தோசம் தான். நீங்க போய் வேலை செய்ங்க” என்று எந்தவிதமான தவிப்பும் இல்லாமல் உடனே அவளிடமிருந்து பதில் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!