Imk-22

௨௩ (23)

எல்லாம்  சிவமயம்

இந்திய பிரதமருக்கு பிரத்தியேக முறையில் பாதகாப்பு தரும் ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூபால் (எஸ்.பி.ஜி) சோதனைக்கு உட்படுத்தப்பட்டான் விக்ரம். அதுவும் ஒன்று இரண்டல்ல. பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களை கடந்து அவன் பிரதமரின் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டான்.

எப்போதும் சம்யுக்தா ராய்அவனை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து  சந்திப்பதுதான் வழக்கம். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாய் அவன் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டது கொஞ்சம் அதிர்ச்சியாகவும் கூடவே குழப்பமாகவும் இருந்தது. அந்தளவுக்கு ஏதேனும் முக்கியமான விஷயமா என்ற யோசிக்க தொடங்கினான்.

சற்று முன்தான் மனோகரன்  மற்றும் தங்கள் கட்சி சார்பான சிலரோடு சென்னையில் இருந்து புறப்பட்டு டில்லி வந்து சேர்ந்திருந்தான். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திர பாரத் கட்சி தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களை பிடிப்பது எப்படி? மற்றும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கவே அந்த பயணம்.

அடுத்த நாள் காலை பத்து மணி வாக்கில்தான் சுதந்திர பாரத் கட்சி வளாகத்தில் சம்யுக்தா ராயுடனான சந்திப்பு. அந்த சந்திப்பிற்கு சம்யுக்தா அவர்கள் வழங்கிய நேரப்படி ஒரு நாள் முன்னதாகவே  மனோகரன், விக்ரம் மற்றும் கட்சி சார்பில் அவர்களுடன் வந்தவர்கள் பயணப்பட்டு நம் தலைநகரம் வந்து சேர்ந்தனர்.

சம்யுக்தாவுடன் விக்ரமுக்கு இது ஒன்றும் முதல் சந்திப்பு அல்ல. நான்கு வருடங்களுக்கு முன்னதாக ஒரு முறை கட்சி சார்பில் அவனும் ஒரு ஓரமாய் உடன் வந்தான். அவனுக்கு ஹிந்தி, ஆங்கிலம் நன்றாக தெரியும் என்ற ஒரு காரணத்திற்காக கிட்டிய வாய்ப்பு அது. கிடைத்த வாய்ப்பை சரியாய் பிடித்து கொள்ளும் வல்லவனாயிற்றே அவன். அதுவும் அவன் பயன்படுத்திய அரசியல் சாணக்கியத்தனங்கள் சரியாகவே வேலை செய்தது.

அதன் விளைவாக சம்யுக்தாவின் நன்மதிப்பை அவன் பெற்றிருந்த்தான். அது அவனுக்கும் கூட அன்று தெரியாது. அவனுக்கே தெரியாமல் அவரின் கண்காணிப்பில் வந்திருந்தான்.

விக்ரமின் குடும்பம் அதோடு அவனை பற்றிய மற்ற எல்லா தகவல்களையும் சேகரித்த பின் சம்யுக்த்தாவிற்கு அவன் மீது நம்பகத்தன்மை உண்டாகியிருந்தது.

அப்படியான சூழ்நிலையில் விக்ரம் தமிழச்சியுடன் டில்லியில் தங்கிய போது கட்சி சார்பில் நேரடியாக அவனிடம் பேச அழைத்திருந்தார் சம்யுக்தா! கிடுகிடு என்று உலகமே ஒரு நொடி ஆடிய உணர்வுதான். ஆனால் தன் மனநிலையை சம்யுக்தாவிடம் காட்டி கொள்ளாமல் மிக நேர்த்தியாக அதேநேரம் திடமாகவும் புத்திகூர்மையாகவும் பேசியவிதத்தில் அவரிடம் மீண்டும் தன் திறமையை நிருபித்து நம்பிக்கையும் பாராட்டையும் பெற்றிருந்தான்.

அதன் பின் சம்யுக்தா அவரின் தமிழக கட்சியின் செயல்பாடுகளை இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கும் உளவாளியாக அவனை வைத்து கொண்டார்.

மனோகரன் தமிழக சுதந்திர பாரத் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பதாக தெரிவதெல்லாம் வெறும் பிம்பம். அப்படியான முட்டாள்களை முன்னிருத்தி புத்திசாலிகளை பின்னே வைத்திருந்து காய் நகர்த்துவதுதான் பெரிய தலைகளின் அரசியல் சூட்சமம். அத்தகைய சூத்ரதாரியாய் சம்யுக்தா செயல்பட, அவரின்  சூட்சமங்களின் மூலாதாரமாய் விளங்கினான் விக்ரம்.

விக்ரம் அந்தளவுக்கு சம்யுக்தாவின் நம்பிக்கையை பெற்ற காரணத்தாலேயே அன்று ரகசியமாய் அமிர்தாவை அழைத்து வரவும் அனுப்பப்பட்டான். ஆனால் எப்போதும் இல்லாமல் இன்று ஏன் அவர் தன்னை வீட்டிற்கே சந்திக்க வர சொன்னார் என்ற குழப்பத்தோடு அங்கே அவனுக்கு நடந்த சோதனைகளை எல்லாம் சற்று கடுப்போடே எதிர்கொண்டான்.

அதுவும் அங்கிருந்த பாதுக்காப்பு அதிகாரிகள் அவனை இப்படியும் அப்படியுமாய் புதுப்புதுக் சோதிக்கும் யுக்திகளை எல்லாம் அவன் மீது சோதித்து கற்று கொண்டிருகின்றனரா என்று தோன்றியது.

கண்ணாமூச்சி விளையாடும் போது கண்ணை கட்டி சிலமுறை இடவலமும் சிலமுறை வலஇடமும் சுற்றிவிடுவார்களே,  அப்படித்தான் அவனையும் சுற்றலில் விட்டு கடைசியாய் அவனை வீட்டிற்குள் அனுமதித்தார்கள்.

சம்யுக்த்தாவை கட்சி அலுவலகத்தில் சந்திக்க சென்ற போதெல்லாம்  கூட இத்தனை கெடுபிடிகள் இல்லையே என்று எண்ணி கொண்டவனுக்கு இப்போது தலை தாறுமாறாய் சுற்றி சுழன்றது. பின் சுழலாமல் என்ன செய்யும்? காலையில் எதோ ஒரு வீம்பில் சாப்பிடாமல் புறப்பட்டவன் அவசர அவசரமாய் விமான நிலையத்துக்கு வர, அங்கே சில பத்திரிக்கைகளில் படையெடுப்புகள் அவனை சிக்கி சின்னாபின்னமாக்கின.

எப்படியோ அவற்றை எல்லாம் கடந்து விமானம் ஏறி டில்லியில் வந்து இறங்கினான். இறங்கிய கையோடு அவர்கள் தங்கும் இடம் போய் சேர அங்கே விரைவாய் வந்த பிரதமரின் குடியிருப்பில் வேலை செய்யும் அலுவலர் அவனை அழைத்து கொண்டு… என்று சொல்ல முடியாது. இழுத்து கொண்டு போய்விட்டார்.

மனோகரனுக்கு உள்ளுர பற்றி எரிய காது வழியாய் இரயில் இன்ஜின்  கணக்காய் புகை வந்து கொண்டிருந்தது. அதென்ன அவனுக்கு தனிப்பட்ட உரிமை மற்றும் சந்திப்பு. அப்போது அவர் உடன் இருந்த எடுபிடிகள், “டிவில சொல்றத எல்லாம் நீங்க கேட்கலையா தலைவா? அந்த அமிர்தா பொண்ணுக்கும் இவனுக்கும்” என்று அவர்கள் குரல் அடித்தொண்டையில் இறங்கிவிட,

“லூசு மாறி உளாறதே… பத்திரிக்கைக்காரனுங்க விட்டா ஒபாமா பொண்ணுக்கும் ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்புன்னு கூட எழுதுவானுங்க” என்றார்.

அதென்னவோ உண்மை. அமிர்தா செய்த சில ட்வீட்களுக்கு விக்ரமை அவளின் காதலனாகவே மாற்றிவிட்ட பத்திரிக்கைகளின் புத்திகூர்மை அலாதியானது.

இப்படியாக விக்ரம் பற்றி இவர்கள் விவாதம் மேற்கொண்டிருக்க அங்கே அவன் எதற்காக, யாருக்காக அழைத்து வரப்பட்டோம் என்று தெரியாமலே அலைகழிக்கப்பட்டான். இத்தனை ஆர்பாட்டத்தில் அவன் எங்கே சாப்பிட்டான். பசி மயக்கத்தில் பார்க்கும் இடமெல்லாம் மங்கி ஒரே நிறமாய் தெரிந்தது.

இந்நிலையில் அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டு விட, கடைசி கட்ட சோதனையில் அவன் செல்பேசியை கேட்கும் போது அமிர்தா கோபமாய், “போதும்… அவரை அனுப்புங்க” என்று அவள் மொழியில் உரைத்து அந்த அதிகரிகளை காட்டமாய் முறைக்க, “மேடம்” என்று தயங்கியவனிடம் மீண்டும் கறாராய் ஒரு பார்வை பார்த்து மிரட்டினாள்.

அப்போதே விக்ரமிற்கு தான் அமிர்தாவை பார்க்க அழைத்துவரப்பட்டோம் என்று புரிந்தது. ‘இவளை பார்க்கவா நம்மல இப்படி டார்ச்சர் பண்ணானுங்க’  என்று விக்ரம் அந்த நொடி கடுப்பின் உச்சத்திற்கு சென்றிருந்தான்.

அவளோ புன்னகைவழிய, “கம் ஆதி!” என்று அவன் கரத்தை பிடிக்க,

அப்போது அங்கே இருந்து செல்லாமல் நின்றிருந்த பாதுக்காப்பு அதிகாரிகளை பார்த்து அவன் துணுக்குற்றான். ஆனால் அவள் அதை குறித்தெல்லாம் கவலை கொள்ளவில்லை. நேராய் அவனை அவள்அறைக்கு அழைத்து சென்றாள்.

அவனுக்கு அவள் செயல் மேலும் கடுப்பாக்க, ‘செஞ்சதெல்லாம் பத்தாதுன்னு இவ திரும்பியும் தேரை இழுத்து தெருவுல வுட்ருவா போலையா?’ என்று எண்ணி கொண்டே அரை மயக்கத்தில் அவன் அவள் அறைக்கு இழுத்து செல்லப்பட்டான்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன விஷயம்?” என்று அவன் தடுமாற்றத்தோடு கேட்க, அவளோ அவசமாய் போய் அறைகதவை தாளிட்டாள்.

“அமிர்தா ப்ளீஸ்… கதவை திறங்க… யாராச்சும் பார்த்தா… தப்பா நினைப்பாங்க… ஏற்கனவே பத்திரிக்கையில எல்லாம் கண்ட மேனிக்கு எழுதிட்டு இருக்காங்க… நீங்க கூப்பிட்ட விஷயத்தை சொல்லுங்க… நான் கிளம்பறேன்” என்றவன் அவள் விட்டால் போதும் ஓடிவிடலாம் என்ற  நிலைமையில் இருந்தான்.

ஆனால் அவளோ அவனை விடும் நிலைமையில் இல்லை.

“அதெல்லாம் பரவாயில்ல… நான் உங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும்” என்று உரைக்க,

‘உனக்கு பரவாயில்ல… ஆனா எனக்கு… ஐயோ! ஏற்கனவே ஒருத்தி கடுப்பில என்னை காயிச்சிட்டிருக்கா?’ என்றவன் மனதிற்குள் புலம்ப அமிர்தா அவனை ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தாள்.

அவனோ அவள் முகத்தை கூட பார்க்காமல், “சரி விஷயத்தை சொல்லுங்க அமிர்தா!” என்று கேட்க,

அவளோ கிறக்கமாய் அவன் கழுத்தை கட்டி கொள்ள விக்ரம் அதிர்ந்து, “அமிர்தா என்ன இதெல்லாம்” என்றவள் கரத்தை பிரித்துவிட முயல, “எத்தனை ட்வீட் பண்ணேன் நான் உங்களுக்காக… ம்ம்கும்… பத்திரிக்கைகாரங்களுக்கு புரிஞ்சது கூட உங்களுக்கு புரியலையா ஆதி!” என்று அவள் குழைவாய் கேட்க அவனால் முடியவில்லை.

அவளை இழுத்து தள்ள முற்பட்டவன் அவள் செய்த சேட்டையில் படுக்கையில் விழ அவளும் அதுதான் வாய்ப்பு என்று அவன் மீதே விழுந்தாள்.

‘அடிப்பாவி!’ என்று வாய்க்குள் முனகியவன், “எழுந்திறீங்க அமிர்தா? இதெல்லாம் சரியில்ல” என்று சொல்ல அவள் காதில் அவன் சொன்னதெல்லாம் ஏறவில்லை. மோகநிலையில் அவனை மேலும் நெருங்கி, “நம்ம ஃப்ர்ஸ்ட் மீட்லையே உங்கள எனக்கு பிடிச்சு போச்சு….” என்று தொடங்கியவள் பிளா… பிளா… பிளா என்று அவள் காதல் வசனத்தை நீட்டி முழக்க, ஏற்கனவே சோர்வின் உச்சத்தில் இருந்தவன் அந்த பஞ்சணையில் முடியாமல் கிட்டத்தட்ட மயக்கநிலைக்கு போய் கொண்டிருந்தான்.

‘விட்டா இவ நம்மல கற்பழிசிடுவா போலயே… என்னடா விக்ரம் உன் கண்ணியத்துக்கு வந்த சோதனை’ என்றவன் சிரம்மப்பாட்டு தன் சுயநினைவை இழுத்து பிடித்து கொண்டிருக்க, அவள் பேசிய வார்த்தைகள் யாவும் ஒன்றும் பாதியுமாகத்தான் அவன் செவிகளில் விழுந்து துளைத்தது. அதுவும் படுநாராசமாக!

“உனக்காக நான் எது வேணா செய்வேன் ஆதி!” என்று மிச்சம் மீதியாய் அவள் பேசியது காதில் விழ மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, “அப்படின்னா ப்ளீஸ்… ஒரு டம்ளர் ஜூஸ் ஆர்டர் பண்ணும்மா… எனக்கு கண்ணை இருட்டுது… காலையில் இருந்து சாப்பிடல” என்று வெட்கத்தை விட்டு தனக்கு வேண்டியதை கேட்டுவிட்டான்.

அவனை வித்தியாசமாய் பார்த்து அவள் புருவத்தை நெறிக்க விக்ரம் அவள் முகத்தை பார்த்து, “எது செய்றதா இருந்தாலும் கொஞ்சம் தெம்பு வேணும்ல” என்று சொல்ல அவளுக்கு இந்த வார்த்தை நன்றாய் எட்டியது போல!

பட்டென அவன் மீதிருந்து எழுந்து ஜூஸ் எடுத்து வர சொல்லி தகவல் அனுப்ப, ‘தப்பிச்சேன்டா சாமி… பூரி கட்டை மாறி… இப்படி மேல ஏறி திரட்டிட்டாளே… பாவி!’ என்றவன்  உள்ளுக்குள் ஆவேச நிலையில் இருந்தாலும் உடம்புக்கு அப்போதைக்கு அதனை காட்டுமளுவுக்கான தெம்பு இல்லை.

பசியில் அடைத்திருந்த காதிரண்டையும் இறுக மூடி கொண்டு தியான நிலைக்கு போயிருந்தான்.

அவளோ அவன் அருகில் அமர்ந்து, “என்னாச்சு ஆதி? என்ன பண்ணுது?” என்று அவனை சுற்றி சுற்றி வர, ‘அட ராமா! இவ பண்ற டார்ச்சருக்கு எனக்கு வாந்தி வந்திரும் போலயே’ என்று மனதில் பொருமி கொண்டிருக்கும் போது ஒரு பெரிய தட்டில் சில உணவு பதார்த்தங்களோடு ஆரஞ்சு ஜூஸ் அவள் அறைக்கு வந்தது.

அத்தனை உணவு பண்டங்களையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டவன் அந்த ஜூஸையும் இறுதியாக அருந்தி முடிக்க, “போதுமா ஆதி? வேறெதாச்சும் வேணுமா?” என்று கேட்க அவன் வேண்டாம் என்பது போல் தலையசைக்க, அவன் கை அலம்பி கொள்ள உதவியவள் டிஷு ஒன்றையும்  அவனிடம் நீட்டினாள்.

கொஞ்சம் நேரத்துக்கு முன்னதாக ஐட்டம் டேன்ஸர் ரேஞ்சுக்கு அவள் செய்த சேட்டையும், இப்போது அன்னை தெரசா லெவலுக்கு காட்டிய அக்கறையும் பார்த்து அவனுக்கு எரிச்சலானது.

“ஆதி!” என்றவள் பேச ஆரம்பிக்க,

“அமிர்தா… நீங்க ஏதோ குழப்பத்தில இருக்கீங்க… எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் உங்களுக்கு தெரியும்” என்று அவன் பேசி கொண்டிருக்கும் போதே, “அதான் நேத்து டிவில உங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு உங்க வொஃய்ப்… சாரி சாரி உங்க எக்ஸ் வொஃய்ப் அறிவிச்சிட்டாங்களே!… அதுவும் நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்கிட் டாலும் பரவாயில்லன்னு ” என்று சொல்லி குத்தலாய் அவனை பார்த்தாள்.

‘எல்லாம் அவளால… அவளை’ என்று மனதிற்குள் தன் மனைவியின் மீது கோபம் கொண்டவன் அதேநேரம் அமிர்தாவை பார்த்து,

“ஆமா சொன்னாதான்… அதுக்காக எங்க உறவு இல்லன்னு ஆயிடுமா அமிர்தா… என்னால அவள தவிர வேறொரு பொண்ணை நினைச்சு பார்க்க கூட முடியாது… ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட்” என்று சொல்ல அந்த வார்த்தை அவளுக்கு அவன் மீதான ஈர்ப்பையும் மரியாதையையும் இன்னும் அதிகமாக்கிற்று. அந்த நொடி விக்ரம் அறையை விட்டு வெளியேறிட கதவை திறக்க சென்றான்.

அதற்குள் அவன் முன்னே வந்து கதவை அடைத்தபடி நின்றவள், “அவளை விட நான் அழகா இல்லையா ஆதி?” என்று கேட்க, அப்போதே அவன் பார்வைக்கு அவள் முகமும் உடையும் தென்ப்பட்டது.

நாகரிகம் என்ற பெயரில் கிழிசலாய் கழுத்துக்கு கீழே இறங்கும் ஒரு இடுப்பளவிலான டாப்… முட்டிக்கும் மேலாய் ஒரு ஒன் பை போர்த் அளவுக்கு ஒரு உடை. வெறுப்பாய் மூச்சை இழுத்து கொண்டவனுக்கு காலையில்  பார்த்த தன் மனைவியின் முகம் முன்னேவர இயல்பாய் ஒரு புன்னகை உதட்டில் வந்து ஒட்டி கொண்டது.

‘அது அழகு… இதுக்கு பேர் அழகா… இதுல அவ கூட கம்பேரிஸன் வேற… ஏரோப்ளேனே வைச்சாலும் இவ என் பொண்டாட்டி காலை கூட தொட முடியாது’ என்று மனதில் குமறியவனுக்கு வார்த்தைகளாய் இவற்றையெல்லாம் கொட்ட வேண்டும் என்று இருந்தாலும் அது முடியவில்லை.

இயலாமையோடு மௌனம் நிலையில் இருந்தவனிடம் அவள் மேலும், “நல்லா யோசிங்க ஆதி! அப்பத்தான் புரியும்… அந்த தமிழச்சி என் கால் தூசக் கூட பெறமாட்டான்னு” என்று சொல்லவும், “அமிர்தா…” என்றவன் அதற்கு மேல கட்டுப்படுத்த முடியாமல் கோபமாய் கத்திவிட்டான்.

அவள் சிரித்து கொண்டே, “ஏன் டென்ஷன்? நான் சொல்றதை யோசிச்சு பாருங்க… அமிர்தா ஆதி… எவ்வளவு பொருத்தமா இருக்கு… தமிழச்சி… அந்த பேரே நல்லா இல்ல… உவேக்… ஓமட்டிட்டு வருது” என்று அவள் பேசி கொண்டே போக விக்ரம் சீற்றத்தோடு, “வாயை மூடிறி… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன… கன்னம் பழுத்திரும்… சொல்லிட்டேன்” என்றவன் அவளை கதவை விட்டு இழுத்து தள்ளிவிட்டு தாழ்ப்பாளை திறந்து வெளியேற போக, ஏதோ பெரிதாய் உடையும் சத்தம்.

அவன் தடைப்பட்டு மீண்டும் திரும்ப அவள் பழம் வெட்டும் கத்தியை தன் கை நரம்புக்கு நேராய் வைத்து கொண்டு, “இப்போ நீ போன… நான் உயரோட இருக்க மாட்டேன்… என் கையை வெட்டிப்பேன்” என்று சத்தமிட, அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவள் மீது லேசாய் கீறல் விழுந்தாலும் தன்னிலை அவ்வளவுதான் என்று எண்ணி பதறி கொண்டு, “கத்தியை கீழ போடு அமிர்தா!” என்று பல்லை கடித்து சன்னமாய் உரைத்து கொண்டே அவளை நெருங்கினான்.

“கிட்ட வந்த… வெட்டிப்பேன்” என்றவள் அடமாய் சொல்ல அப்போது கேட்ட பூட்ஸ் சத்தம் அவனின் இதய துடிப்பை ஏற்ற, “கீழ போடு… கீழ போடு… ஆபீசர்ஸ் வராங்க” என்றவன் குரலை தாழ்த்தி மெல்லமாய் சொல்ல அவளையும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

அந்த நொடி கத்தியை பிடுங்கி அவன் படுக்கை மீது வீசிவிட அந்த அதிகாரிகள் வாசல்புறம் வந்து, “மேடம் என்னாச்சு? ஏதோ சத்தம் கேட்டுச்சு” என்று விசாரிக்க, அவள் மூச்சை இழுத்துவிட்டு கொண்டாள்.

அந்த நிலைமையை சமாளிக்க எண்ணி கீழே விழுந்த பூஜாடியை காண்பித்து, அவர்களுக்கு விளக்க அந்த நொடி விக்ரமுக்கு உயிர் உயிர் போய் உயிர் வந்திருந்தது.

விக்ரம் அப்படியே அந்த அறையின் பின்னோடு நகர காலில் ஏதோ தட்டுப்பட்டது. உடைந்த பூஜாடியின் துண்டுகள் அங்கேயும் சிதறி கிடக்கிறதோ என்று பார்த்தவனுக்கு அவை வேறெதோ கண்ணாடி துண்டுகள் என்றுப்பட்டது. அதனை குழப்பமாய் பார்த்தவன் நீண்டு தொங்கிகொண்டிருந்த  திரைசீலையை விளக்க அது வேறொரு அறையின் கதவு.

கதவின் மேல்புற கண்ணாடி உடைந்து கிடந்தது. அவன் இன்னும் கொஞ்சம் திரைசீலையை விலக்கி பார்க்க, அவன் கண்ணை பறிக்குமளவுக்காய்  ஓர் மின்னல் வெட்டும் வெளிச்சம்.

அப்படி ஒரு வெளிச்சம் அங்கே உருவானதா அல்லது அது தன் பிரமையா என்று புரியாமல் திகைத்தவன் மேலும் அந்த கதவின் உடைந்த துவாரம் வழி உற்று பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஏதோ மின்னிய உணர்வு!

அவன் விழிகள் அது என்னவென்று இன்னும் ஆழமாய் பார்க்க, பாதி மூடியும் மூடாமலும் இருந்த அந்த வடிவத்தை பார்த்து அவன் உடல் சட்டென்று சிலிர்த்து கொண்டது.

நீயே  நான்…  நானே நீ…

உன்னுள் நானிருக்க…

நீ எதை தேடுகிறாய்?…

நான் எனக்காக எதுவும் செய்வதில்லை…

ஆனாலும் யாவுமாய்  நானே இருக்கிறேன்

என்று முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள் தத்துவத்தை நடன கோலத்தில் உணர்த்தி கொண்டிருந்தான் அந்த ஆடலரசன்  நடராஜன்!

அவனிருக்கும் இடத்தை அவனேயன்றி வேறு யார் காட்டி கொடுக்க  முடியும்?  ஆயிரம் அடுக்கு பாதுக்காப்புகள் போட்டாலும் அந்த அம்பலதரசன் முடிவெடுத்துவிட்டால் யார் அவனை மறைக்க இயலும்?  தரிசனம் தரவேண்டும் என்று யாதுமானவன்  உருத்தறித்தால்  யார் அதை தடுக்க இயலும்?