ishq wala love 5

ishq wala love 5

அத்தியாயம் 5

           காதலும் கடவுளும் ஒன்று தான்.இரண்டும் கண்ணுக்கு புலப்படாத ஒரு மந்திரகயிற்றால் ஒன்றோடோன்று பிணைக்கப்பட்டிருக்கின்றன.  இரண்டும் திட,திர,வாயு பொருளாகவோ அல்லது எதுவாகவோ நமது கண்களுக்கு தெரிவதில்லை. எதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மால் உணரமட்டுமே முடிகிறது. உணரும் வரை யாரும் நம்புவதுமில்லை. உணரும் நொடியிலிருந்து அதன் கரங்களில் அடைக்கலமாகி நமது வாழ்க்கையை அதன் காலடியில்அர்ப்பணித்துவிட்டு ஒரு பார்வையாளனாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம். என்னை தண்டிக்கவும், கொண்டாடவும் உனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பதைப் போல் பித்தாகி அதன் மேல் உன்மத்தம் கொண்டு திரிகிறோம்…

           -தோழர் எழில்மதி..

 

            தன்னிடமிருந்து எழிலை சட்டென்று பிரித்து இழுத்தவனை நீ தானா? ஏன்ற அலட்சிய பார்வையுடன் நோக்கினான் டாம். நிரஞ்சனும் அவனை தான் முறைத்துக் கொண்டு  எழிலின் கரத்தை பற்றியவாறு நின்றிருந்தான்.

                 நிரஞ்சனது  கரங்களை பார்த்த டாம் அதிர்ந்து ‘#### ஷிட்.. தொலைஞ்சான் இவன் … விக்ரம் டேய் சொதப்பிராதே…!’ என்று சிறு முனுமுனுப்புடன் சட்டென்று திரும்பி விக்ரமை பார்க்க, டாம் நினைத்தது போலவே நிரஞ்சனை வெட்டவா குத்தவா என்ற பார்வையுடன் முறுக்கிய கைகளுடன் நின்றிருந்தான் விக்ரம்.

                       டாம் எதோ முனங்கியவாறு அருகிலிருந்தவனை திரும்பி பார்க்கவும் அவனையை பார்த்துக்கொண்டிருந்த நிரஞ்சனும் எழிலும்  விக்ரமை நோக்கி தங்களது பார்வையை திருப்பினர்.

             ‘இவன் ஏன் இப்படி வெள்ளை அய்யனாரு மாதிரி நிக்குறான்?’ என்று நினைத்தவாறு விக்ரமை குழப்பத்துடன் எழில் பார்க்க.

                விக்ரமின் கொலைவெறி பார்வையை, புருவத்தில் விழுந்த முடிச்சுடன் நோக்கினான் நிரஞ்சன். ‘இவன் ஏன் தன்னை எதோ ஜென்ம விரோதியை பார்க்குற மாதிரி பார்க்குறான்’ என்று யோசிக்கும்போதே,

         அவன் பார்வை நிலைத்திருக்கும் இடத்தை பார்த்தவன் ‘இவ கையை பிடிச்சா உனக்கு என்ன?’ என்ற கேள்வியுடன் கூடிய அலட்சிய பார்வையுடன் விக்ரமை நோக்கியவனது  கரங்கள் தன்னாலே எழிலின் கரங்களில் அழுத்ததை கூட்டியது.

          நிரஞ்சனின் அலட்சிய தோரணையில் டாமிற்கும் விக்ரமிற்கும் கோவம் பல்மடங்கு பெருகுவது அவர்களது உடல் மொழியிலே தெரிய, அதற்கும் நக்கலான சிரிப்பை உதிர்த்தவன் எழிலை இறுக பற்றினான் நிரஞ்சன்.

          நிரஞ்சனும் அவர்களை அலட்சியபடுத்த வேண்டும் என்று நினைக்கவெல்லாம் இல்லை. ஆனாலும் ஏனென்றே தெரியாமல் அவர்கள் இருவரையும் பார்த்தவுடனே தன்னை அறியாமலே அவனுக்கு ஒரு அலட்சிய தோரணை அவனது உடலில் வந்தமர்ந்தது.

                  எழிலுக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. மூவரும் ஏன் இப்படி ஹாலிவுட் படத்திற்கு போஸ் கொடுப்பது போல் ஒருவரை ஒருவர் முறைத்தவாறு நிற்கிறார்கள் என்பதும், இந்த நிரஞ்சன் ஏன் இப்படி தனது கையை இரத்தம் ஒட்டம் கூட போக முடியாத அளவுக்கு பிடித்து இருக்கிறான் என்பதும்.

               என்னவோ இருந்து விட்டு போகட்டும் என்று நினைத்தவள் நிரஞ்சனிடமிருந்து தனது கரத்தை விலக்க முயல முடியவில்லை. மிக அழுத்தமாக பற்றியிருந்தான் இது எனது எனக்கே எனக்கான உடைமை அல்லது எதனிடமிருந்தோ காப்பாற்றுபவது  போல் அவனது அழுத்தம் இருந்தது.

“டேய் பச்சி…..ச்ச்… நிரஞ்சன் என்ன பண்ற? கையை விடு… வலிக்குது” என்று  அவனிடமிருந்து கையை விடுவிக்க போராடிக் கொண்டே எழில் கேட்க,

         அவ்வளவு நேரம் மூவரும்  “வாடா! நீ தான் தைரியமான ஆளாச்சே வந்து தான் பாரு டா…” என்பது போல் கண்ணாலே போருக்கான அறை கூவல் விட்டுகொண்டிருந்தவர்கள் எழிலது குரலில் அவளை நோக்கி பார்வையை திருப்பினர்.

         அவளது முகத்தில் வலியின் சாயல் தெரியவும் பதறி சட்டென்று கரத்தை விட்டான் நிரஞ்சன். அவன் பிடித்திருந்த இடம் கண்டி சிவந்திருந்தது. அதை பார்த்தவுடனே என்னவென்று சொல்ல தெரியமால் விக்ரமிற்கு கோவம் எல்லையை கடக்க, நிரஞ்சனை நோக்கி ஒரு எட்டு முன்னெடுத்து வைக்க, நிரஞ்சனும் விக்ரமை நோக்கி ஒரு எட்டு முன்னெடுத்து வைக்க அங்கே ஒரு தற்காலிக மினி குருஷேத்திரம் உருவாக இருந்தது.

        அதற்குள்  பிரவாகம் எடுத்து பொங்கி வரும் பாலில் ஒரு தூளி தண்ணீர் பட்டால் எப்படி புஸ்ஸென்று போகுமோ அதைப் போல் தங்களுக்கு பின்னிருந்து ஒலித்த “எழில்ல்ல்….” என்ற அதிர்ந்த குரலில் குருஷேத்திரத்தை டீலில் விட்டுவிட்டு  திரும்பி பார்த்தான் நிரஞ்சன்.

     எழிலுக்கு திரும்பாமலே வந்திருப்பது யாரென்று தெரிந்து விட “அப்பா…” என்ற முனங்கலுடன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்தவாறு மெதுவாக திரும்பியவளது கண்கள் மங்கலாக தெரிய ஆரம்பிக்க காலிற்கு கீழ் நிலம் தட்டுப்படாமல் போக நிரஞ்சனின் கரங்களில் மயங்கி சரிந்தாள் எழில்.  

       அவளை கீழே விழவிடாமல் தனது நெஞ்சோடு தாங்கி கொண்டான் நிரஞ்சன். சின்னதம்பி பதறி இரண்டே எட்டில் எழிலை அடைந்தவர் நிரஞ்சன் கரங்களிருந்து பிரித்து மகளை தனது கரங்களில் தாங்கி கொண்டவரது கரங்களும் மனமும் நடுங்கி கொண்டிருந்தது. அன்று ஒரு நாள் இப்படி தான் குணா கரங்களில் மயங்கி விழுந்து அதற்கு பின்பு நடந்தது எல்லாம் கண்களில் ஊர்வலம் செல்ல பயந்து போனார் சின்னதம்பி.

             விக்ரமுக்கும் டாமிற்கும் ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு நேரம் நன்றாக தானே பேசிக் கொண்டிருந்தாள். தீடிரென்று என்ன ஆகி விட்டது இவளுக்கு என்று நினைத்தனர்.

     நிரஞ்சன் சட்டென்று தன்னை சுதாரித்துகொண்டவன் “நான் போய் கார் எடுத்துட்டு வந்துரேன்.. ஹாஸ்பிட்டல் போயிரலாம்..” என்றவாறு  மருத்துவமனைக்கு செல்ல வேகமாக காரெடுக்க சென்று விட,

         சின்னதம்பிக்கு கைகள் நடுங்க அவரும் மயக்கத்திற்கு செல்வது போல் தடுமாற உடனே அவரது அருகில் நெருங்கிய  டாம் “ஜெர்ரியை எங்கிட்ட கொடுங்க அங்கிள்… விக்ரம் நீ இவரை பிடி..” என்று தூயதமிழில் கூற சின்னதம்பியும் தனது நிலையை உணர்ந்து யார் மீது கொலை வெறியில் இருக்கிறாரோ அவர்களிடமே தன்னையும் தனது மகளையும் ஒப்படைத்தார்.

          இந்த பதட்டத்தில் வெள்ளைக்காரன்  தமிழில் பேசுகிறான் என்பது அவரது மூளையில் பதிந்துவிடாமல் போய்விட்டது.

             விக்ரம் சின்னதம்பியை தோளோடு அணைத்தவாறு பிடிக்க “ஓன்னுமில்ல தம்பி ..விடுங்க.. எதோ சட்டுன்னு அவ மயக்கத்துல பயந்துட்டேன்…” என்றவாறு விக்ரமிடமிருந்து விலகி நின்றார் சின்னதம்பி. இப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே ,

             டாம் எழிலை தோளோடு அணைத்து அவளது சிரத்தை தனது நெஞ்சின்  மீது சாய்த்து கொண்டவன் எதோ வித்தியாசத்தை உணர்ந்தான். எழிலது மேனி சிலிர்த்ததோ… மயக்கத்தில் இருப்பவள் எப்படி சிலிர்க்க முடியும்? ஒருவேளை தனது மேனி சிலிர்த்துஇருக்குமோ?  என்று நினைத்துகொண்டு குனிந்து அவளது முகத்தை கூர்ந்து நோக்க, சட்டென்று கண்களை திறந்தவள் டாமை பார்த்து கண்ணடித்துவிட்டு மீண்டும் மூடிக்கொள்ள டாம் குழம்பிவிட்டான்.

                     நாம் எதாவது கனவு கண்டோமா அல்லது இவள் நிஜமாவே கண் அடித்தாளா என்பது போல் பார்க்க கண்கள் மூடி மயக்கத்தில் இருந்தாள்.

               வெளியே நடப்பது அனைத்தையும்  ஏற்கனவே உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த லதா அம்மாவும் சந்தியாவும் எழில் மயங்கி விழ வேகமாக அவர்களை நெருங்கினர்.

                    “எழில்…எழில் என்ன ஆச்சு..?” என்று பதட்டத்துடன் சந்தியா எழிலை உலுக்க, குரலின் மூலம் வந்திருப்பது சந்தியா என்று அறிந்துக் கொண்ட எழில் லேசாக கண்களை திறந்து டாமை பார்த்து செய்ததைப் போல் இவளை பார்த்தும் கண்ணடிக்க, அதில் சட்டென்று எதோ எழில் பிளான் செய்கிறாள் என்று புரிந்து கொண்ட சந்தியா இல்லாத பதட்டத்தை இருப்பது போல் பார்த்துக்கொண்டவள் எழிலின் கரத்தை தேய்த்துவிட,

                அதற்குள் நிரஞ்சன் காரை எடுத்துக் கொண்டு வந்துவிட, “பாப்பாவை தூக்குங்க தம்பி… ஹாஸ்பிட்டல் போலாம்” என்று சின்னதம்பி பதறியவாறு டாமிடம் கூற, அதில் எழில் ஜெர்கானாள்.

                 சின்னதம்பி டாமை நோக்கி எழிலை தூக்குங்கள் என்று கூறுவதைப் பார்த்த நிரஞ்சன் உடனே வண்டியிலிருந்து இறங்கி எழிலை தூக்க எழிலிடம் வந்தவன் “மாமா நான் தூக்குறேன்…” என்று கூறியவாறு அவளை தொட வர, விக்ரம் வேகமாக நிரஞ்சனை நெருங்க அதை உணர்ந்தவன் போன்று டாம் தனது இடக்கரத்தால் அவனை பிடித்து நிற்பாட்டினான்.

              எழில் வேண்டாம் என்பதைப் போல் தனது கரத்தை பிடித்திருந்த சந்தியாவின் கரத்தில் அழுத்தத்தை கொடுக்க அதை புரிந்துக் கொண்ட சந்தியா “ஓரு நிமிஷம் இருங்க சுமால் ப்ரோ அண்ட் பச்சிலை.. காலையிலிருந்து சாப்பிடதாதுனால மயக்கம் போட்டுருப்பா..” என்று கூற,

        சின்னதம்பி “என்னாது இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்குதா? பிள்ளை..”என்றவர் லதா அம்மாவை பார்த்து முறைத்தார். அவரை பொறுத்தவரை குறைந்த அளவு சம்பளத்தை கொடுத்துவிட்டு எழிலிடம் நிறைய வேலை வாங்குபவர் இந்த லதா அம்மா.

       அதை கண்டுக்கொள்ளாத சந்தியா தனது கைப்பையிலிருந்து தண்ணீர் பொத்தலை எடுத்து மயங்கியவாறு நடித்து கொண்டிருந்தவளது முகத்தில் நீரை  தெளிக்க மயக்கத்திலிருந்து எழுபவள் போல் முடிய இமைகளுக்குள் கண்மணிகளை உருட்டி மெதுவாக இமைகளை திறந்தவள், தனது இடக்கையை கொண்டு தலையை தாங்கியவாறு “நான் எங்கே இருக்கேன்?” என்று ஒவர் ஆக்டிங்கை போட்டுவிட சின்னதம்பி அவளை கூர்ந்து பார்த்தார்.

          ‘இது உலக மகா நடிப்பு டா சாமி…’ என்று நினைத்த சந்தியா,   “ஹான்…உன் மாமியார் வீட்ல இருக்க…” என்று நக்கலாக கூற அவளை அப்பொழுது தான் பார்ப்பதை போல் பார்த்தவள் “சந்து பேபி மா… நீ எப்ப…” என்று கூற வந்தவள் அடுத்து நின்றிருந்த சின்னதம்பியை பார்த்து “அப்ப்ப்பா…நீங்க எங்கே இங்கே?” என்றவாறு டாமிடம் இருந்து பிரிந்து சின்னதம்பியை நோக்கி எட்டு எடுத்து வைக்க சின்னதம்பி ஒடிவந்து தன்னை பிடிக்காமல்  அசையாமல் பார்த்துகொண்டிருந்தவரது கண்களில் சந்தேகத்தை பார்த்தவள் ‘அடியே எழிலு ஒவர் ஆக்டிங்க் போட்டு சிக்கிட்டியே டி.. சமாளிப்போம்…சிறுத்தை சிக்கும்… இந்த சிலுவண்டு சிக்காதுல..’ என்று மைண்ட் வாய்ஸ்சை போட்டவள்  திரும்பி மயங்கி விழுவதைப் போல் சிறிது தடுமாறுவது போன்று நடிக்க சின்னதம்பி சட்டென்று வந்து அவளை தாங்கி கொள்ள, ‘எழிலா கொக்கா…’ “அப்பா…பசிக்குது அப்பா…” என்று உதட்டை பிதுக்கிகொண்டு வசமான செண்டிமெண்ட் சீனை போட மீன் வசமாக சிக்கிக்கொண்டது.

               “இவ்ளோ நேரம் சாப்பிடாம அப்படி என்ன உனக்கு வேலை வேண்டி கிடக்கு…வா..வா… உள்ளே போய் சாப்பிடலாம்…” என்றவர் சந்தியாவையும் ஒரு முறைமுறைத்துவிட்டு அங்கிருக்கும் யாரையும் கண்டுக்கொள்ளாமல் எழிலை கைதாங்கலாக உள்ளிருந்த உணவகத்தை நோக்கி அழைத்துசென்றார்.

         “சுமால் ப்ரோ நக்கலை பார்த்திங்களா… முப்பத்து ரெண்டு வயசு எருமைமாடுக்கு இருவத்து ஐஞ்சு வயசு பச்சை பிள்ளை சோறுவூட்டி விடனுமாம்…” என்று தலையிலடித்துக் கொண்டு புலம்ப,

         ‘ஹோலி கிறிஸ்ட்… பயங்கரமான ஆளா இருப்பா போலயே’  என்று செல்லும் அவளையை பிரமித்து பார்த்துக் கொண்டிருந்தான் டாம்.

            விக்ரமும் நிரஞ்சனும் கண்களாலிலே கத்திசண்டை போட்டுக்கொண்டிருக்க லதா அம்மா இப்பொழுது என்ன செய்வது என்பதை போல் நின்றிருக்க அனைவரையும் ஒரு பார்வை பார்த்த சந்தியா, 

            “மிஸ்டர் பச்சிலை கண்ணாலே கபடி விளையாடுனது போதும். போய் காரை நிப்பாட்டிட்டு வாங்க…”என்று கூறி அவனை அனுப்பி விட்டவள்

       “லலிதா அம்பாள் எப்ப இவங்களை வரவேற்குறாதா இருக்கீங்க…” என்று கேட்டவாறு அவரது கரங்களிலிருந்த இரு பூங்கொத்தை வாங்கியவள் விரிந்த சிரிப்புடன் ,

                 ஒரு பூங்கொத்தை நீட்டி “வெல்கம் டூ சென்னை மிஸ்டர் பாஞ்சாலி…” என்று டாமை வரவேற்க,  அவன் சிரிப்புடன் “வாட்? பாஞ்சாலி…மீ” என்று கேட்க,

                     “ஆமாம்.. நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க..” என்று சிரிப்புடன் அவனுக்கு ஐஸ்வைத்துவிட்டு  தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள சந்தியா கையை நீட்ட டாம் இருகரம் குவித்து வணக்கம் வைக்க சந்தியா வாயில் விரல் வைத்தாள்.

             அவளது கண்களிலே தெரிந்தது. அவ்ளோ நல்லவனா நீ? என்ற கேள்வி…

      விக்ரமை நோக்கி திரும்பியவள் “வெல்கம் விக்….ரம் சார்…” என்று நீட்டி முழக்கி வரவேற்க டாமும் விக்ரமும் அவசரமாக ஒரு பார்வையை பறிமாறி கொண்டனர்.

                 விக்ரமும் சிரிக்க “தாங்க் யூ மிஸ் சந்தியா…” என்று அவன் கூற “நோ மிஸஸ் சந்தியா பிரேம் குமார்…” என்று அவள் திருந்த சாரி என்றவாறு அவனும் கை கூப்பி வணங்க இருவரையும் சந்தேகமாக பார்த்துவைத்தாள்.

                “உங்க படம் எல்லாம் பார்த்துருவேன் சார்… நீங்க வேற லெவல்  சார்.” என்று பாராட்டியவள்..

                  “ஸார்… ஒரு நேயர் விருப்பம் சார்.. நீங்க நம்ம தலயை வைச்சு ஒரு படம் பண்ணனும் சார்… கண்டிப்பா பாகுபலியை ஒவர்டேக் பண்ணிரும் சார். 700 கோடி வசூல் வரும்..”

                       “எந்த தல?” என்று புரியாமல் விக்ரம் கேட்க,

                        “ஸார்.. என்ன சார்.. நம்ம தல டி ஆர் சார்… செம டெலண்ட் லெஜண்ட் ஆக்டர். RDJக்கு ஒரு எண்ட் கேம் மாதிரி…லியோனார்டோ டிகாப்ரியோக்கு ஒரு  தி ரெவனன்ட் மாதிரி ரஜினிக்கு ஒரு எந்திரன் மாதிரி…கமல்க்கு ஒரு விஸ்வரூபம் மாதிரி… நம்ம தலக்கு நீங்க ஒரு படம் பண்ணனும் சார்…”  என்று சந்தியா எப்பொழுதும் போல் தனது தலைவன் டி ஆரை பற்றி பேச ஆரம்பித்தவுடனே இடம் பொருள் ஏவல் எல்லாம் மறந்து மடை திறந்த வெள்ளமாக மாற லதா அம்மா மானசீகமாக தனது தலையில் அடித்துக் கொண்டார்.

                     “ஹான்.. போதும் போதும் சந்தியா…” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறியவர் தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டிருக்கும் போதே நிரஞ்சனும் வந்துவிட அவனையும் அறிமுகம் படுத்தி வைத்தவர் அவர்களை விடுதியின் உள்ளே அழைத்து சென்றார்.

                 முதலில் இவர்கள் இருவரையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தள்ளிவிடுவோம் என்று நினைத்தவர் அறைக்களுக்கு செல்லும் பகுதி நோக்கி செல்ல,

                “மேம்… எதாவது சாப்பிட்டு போகலாமே…” என்று விக்ரம் கேட்க வேறு வழியில்லாமல் உணவகத்தை நோக்கி சென்றனர்.

              அங்கு ஏழு நபர்கள் அமரக்கூடிய ஒரு டேபிளில் அமர்ந்திருந்தனர் சின்னதம்பியும் எழிலும்.. சின்னதம்பி சாப்பிடும் எழிலின் தலைமுடியை ஒதுக்கிவிட்டவாறு பேசிக்கொண்டிருக்க எழில் அவருக்கு தலையாட்டியவாறு கைக்கும் வாய்க்குமிடையே சண்டை இட்டுக்கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு அவளது நாடியில் ஒட்டி விட தனது தோளில் அணிந்திருந்த வெள்ளை துண்டினால் அதை துடைத்துவிட்டார். அந்த காட்சி பார்க்கவே ஒரு கவிதை போல் இருந்தது.

                அவர்கள் இருவரையும் நெருங்கியவர்கள் சின்னதம்பியிடம் பெயருக்கு என்று அனுமதி கேட்டுவிட்டு அவர் சரியென்று சொல்வதற்குள்ளே அங்கு அமர்ந்துவிட்டனர் டாமும் விக்ரமும்.. அதனால் அனைவரும் அந்த மேஜையிலே அமர்ந்தனர்..

          அது ஒரு வட்டவடிவ மேஜை. எழில் சின்னதம்பி ஒரு வளைவில் அமர்ந்திருக்க எழிலுக்கு மறுபுறம் சந்தியா, அவளுக்கு அடுத்து டாம், டாமிற்கு அடுத்து விக்ரம், விக்ரமிற்கு அடுத்து லதா அம்மா, லதா அம்மாவிற்கு அடுத்து நிரஞ்சன் அவனுக்கு மறுபுறம் சின்னதம்பி என்று அமர்ந்திருந்தனர்.

                         விக்ரம் மற்றும் டாம்  எழிலை பார்ப்பது போல் எதிர்த்தாற்போல் அமர்ந்திருந்தனர். வெயிட்டர் வந்து மெனு அட்டையை கொடுத்து என்ன வேண்டும் என்று கேட்க யாருமே மதிய உணவு சாப்பிடமால் இருந்ததால் பிகு பண்ணாமல் அனைவரும் தங்களுக்கு வேண்டியதை கூற சின்னதம்பி மட்டும் எதுவும் சொல்லவில்லை.

                அதை கவனித்து நிரஞ்சன் கேட்க ,” இல்லை வேண்டாம் டா… சாப்பிட முடியாமல் எப்படியும் இவ மிட்சம் வைப்பா அப்ப சாப்பிட்டுக்கிறேன்…” என்று சின்னதம்பி கூற எப்பொழுதும் போல் சந்தியா அவர்களை வெறித்து நோக்கினாள். தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு தந்தை கிடைக்கவில்லை. வாழ்க்கை என்னவென்று அறியும் முன்பே அவள் தனது குடும்பத்திற்கு தந்தையாகி போய்விட்ட விதியை நொந்து கொண்டவளுக்கு தன்னை தாங்கும் கணவணது முகம் கண்முன்பு வந்து செல்ல அவளது முகம் மென்னகை பூசியது.

                 “லதா மேம் நாங்க இங்கே ஸ்டே பண்ணலை…எனக்கு  நீலாங்கரைல ஒரு பீச் ஹவுஸ் இருக்கு அங்கே போறோம்…” என்று விக்ரம் கூற, லதா அம்மாவும் சரியென்று கூறினார். வேறு என்ன கூற முடியும்.  அவர்கள் தான் இங்கு தங்குவதாக முடிவுசெய்து பணம் கட்டி முன்பதிவு செய்தனர், இப்பொழுது அவர்கள் தான் வேண்டாம் என்று செல்கின்றனர். இதில் தாங்கள் சொல்ல என்ன இருக்கிறது என்று லதா அம்மா சரியென்றார்.

                   விக்ரம் ஆங்கிலத்தில் பேசியதால் சின்னதம்பிக்கு புரியாமல் போய்விட நிரஞ்சனிடம் என்னவென்று கேட்க அவன் அவருக்கு மொழிபெயர்ப்பாளன் ஆனான்.

                       ஆர்டர் செய்த உணவு வந்துவிட அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க , “நீங்க எப்ப இங்கிருந்து கிளம்பி விருதுநகருக்கு போறீங்க?” என்று டாம் கேட்க,

                         “இங்கே கேம்ப் முடிஞ்சுட்டு .. அதுனால இன்னைக்கு ஆறு மணிபோல கிளம்பலாம்னு இருக்கோம்… எல்லாம் ரெடி பண்ணிட்டு தான் வந்திருக்கோம்… பசங்க எல்லாம் கிளம்பி இருப்பாங்க..” என்று லதா அம்மா கூற, சிறிது நேரம் தீவிரமாக யோசித்த டாம் “எங்களுக்கு ஒரு அஸிஸ்ட் வேணும்… என்னோட பிஏ வரல.. இவனோட பிஏவும் உடம்பு சரி இல்லைன்னு லாஸ்ட் டைம்ல வர முடியல…” என்று கூற லதா அம்மா யாரை விட்டு செல்வது என்று சிந்திக்க தொடங்கினார்.

                    அவரது சிந்தனையை பார்த்த டாம் “அவங்களுக்கு ஷார்ட் ஹாண்ட் அண்ட் டைப்பிங்க் எல்லாம் தெரிஞ்சு இருக்கனும். இன்னைக்கு ஈவ்னிங் ஒரு மீட்டிங்க் இருக்கு எனக்கு… அங்கு நடக்குறது எல்லாத்தையும் ரைட் பண்ணனும் எங்க வழக்கப்படி…” என்று கூறிவிட, இங்கு இப்படி அனைத்தும் தெரிந்தது எழில் மதி மட்டும் தான் என்பதால் எழிலை தீவிரமாக பார்த்தார்.

                           அவர்கள்  வந்து அமர்ந்தவுடன் ஒரு மரியாதைக்காக நிமிர்ந்து டாம் மற்றும் விக்ரமை பார்த்த எழில் அதற்கு பிறகு யாரையும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிடுவது ஒன்றே குறிக்கோள் என்பது போல் சாப்பிட்டுக் கொண்டே அவர்களது பேச்சினை கவனித்துக் கொண்டிருந்தவள் டாமின் கடைசி வாக்கியத்தில் சட்டென்று நிமிர்ந்து லதா அம்மாவை பார்த்தாள். அவரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

                    அவரும் பார்வையாலே கெஞ்ச, இவளும் பார்வையாலே கெஞ்சிக் கொண்டிருக்க

                              “நீங்க அனுப்புறவங்க எங்க கூடவே ஸ்டே பண்ணிக்கலாம்.. அவங்க துணைக்கு எத்தனை பேர் வேணும்னாலும் இருந்துக்கலாம்… டூ டேய்ஸ் மட்டும் தான்… சாட்டர் டே விருதுநகர் வந்துரலாம்…” என்று விக்ரம் கூறிவிட,

                         சந்தியா லதா அம்மாவிற்கும் எழில்மதிற்கும் இடையில் நடந்துக் கொண்டிருந்த நாடகத்தை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

                  ‘யாரோட கண்களுக்கு பவர் அதிகம்னு பார்க்கனுமே? ஹையோ இப்ப இவங்க எழிலுனு சொன்னவுடனே சுமால் ப்ரோ ரியாக்சனையும் நம்ம லவர் பாய் பச்சிலை புடுங்கி ரியாக்சனையும் பார்க்கனுமே… பார்க்க ஒரு கண்ணு போதாது…’ என்று நால்வரையும் பார்வை விட்டவாறு அமர்ந்திருந்தாள் சந்தியா.

                    கடைசியில் லதா அம்மாவின் கண்கள் வென்று விட, எழில் சரி என்பதைப் போல் தலையாட்ட, “எழில் மதி உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க டாம்…” என்று லதா அம்மா மகிழ்ச்சியுடன் கூறினார்.

                       வந்ததிலிருந்தே கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார் சின்னதம்பி அந்த இருவரது பார்வையும் அதாவது  டாம் மற்றும் விக்ரமின் பார்வையும் நொடிக்கொரு முறை எழிலை தழுவி செல்வதை அதனால் தான் என்ன பேசி கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக நிரஞ்சனிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

            அவனும் நடக்கும் அனைத்தையும் தமிழில் சொல்லிக் கொண்டு வந்தவன் லதா அம்மாவின் பதிலில் அருகில் திரும்பி தனது பெரியம்மாவான லதா அம்மாவை எரிப்பதுப் போல் பார்த்தவன் அதையும் சின்னதம்பியிடம் கூற , அவர் சண்டை போடுவதற்காக எழப் போக அவரிடம் ஒரு பார்வை வைத்திருந்த எழில் அவரது கரத்தை பிடித்து அவரை எழவிடாமல் தடுத்தவள் கண்களாலே கெஞ்சினாள்..

                         

                                  

                               

                

                       

         

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!