Kaatrukena Veli-04

ei7UR8419219-4d37d027

Kaatrukena Veli-04

காற்று 04

அந்திமாலை வானம் இருட்டினை தொடுத்து, மழை பெய்வதற்கான அறிகுறியாக மேக மூட்டங்கள் இருட்டடைந்து கொண்டு இருந்தது.

இங்கு நிலாவோ அமைதியாக அவளது இருக்கையில் தலையில் கை வைத்தவாறு அமர்ந்து இருக்க, அவளை கண்ட மணி “ஏன் டி இப்படி உக்காந்துட்டு இருக்க வீட்டுக்குக் கிளம்பளையா ? ” என்றபடி காலையில் அவளிடம் வாங்கிச் சென்ற டிஃபன் பாக்ஸை கொடுத்தாள்.

“இதோ கிளம்ப போறேன் டி.அதுக்கு முன்னாடி ஹெச்சோடி சார பாக்க போகனும் அதான் இங்க உட்காந்துட்டு இருக்கேன் “என்றாள் விட்டேத்தியாக.

“அடியே நீயெல்லாம் எப்படி அசிஸ்டன்ட் ப்ரோஃபசர் ஆன, உனக்கெல்லாம் எந்த மடையன் வேலை போட்டுக் குடுத்துச்சி” என்று அவளின் பதிலில் அவளை கலாய்க்க,

“உனக்கு எந்த மடையன் வேல போட்டுக் கொடுத்துச்சோ அதே மடையன் தான் எனக்கும் வேலை போட்டுக் கொடுத்தான்” என்று கடு கடுத்தாள் நிலா.

“இப்போ எதுக்கு உனக்கு இந்த டவுட்” என்று நிலா அவளை கேள்வியாய் நோக்க,

“விச்சு சாச்சாவ பாக்கனும்னா, நீ அவரோட ரூம் முன்னாடி போய் வெயிட் பண்ணனும் டி. அது என்ன இங்க உன்னோட ப்ளேஸ்ல வெயிட் பண்றது. இது தான் நீ சாச்சாவுக்கு கொடுக்கிற மரியாதையா டி.அவரு இப்போ நம்மளோட ஹெச்சோடி சோ மேடம் நீங்கத் தான் அங்க போய் வெயிட் பண்ணனும். அவரு உன்ன தேடி வரமாட்டாரு.”

“பச், அது எனக்கும் தெரியும் டி எரும ஹெச்சோடிக்கு எல்லாம் மீட்டிங்ன்னு சார் போயிருக்காரு அதான் இங்க உட்காந்துருக்கேன்.”

“சரி சீக்கிரமா பாத்துட்டு வா நான் கிளம்புறேன். இன்னைக்கு வேற எங்க மம்மி சிக்கன் வாங்கிட்டு வரச் சொன்னாங்க வாங்கிட்டு சீக்கிரமா போலைன்னா என்னையவே சமைக்க விட்டுருவாங்க அதுனால நான் கிளம்புறேன் நிலா” என்று சொல்லிக் கிளம்பிவிட்டாள்.

போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த நிலா எந்திரித்து அவனது அறைக்கு முன்பு சென்று நிற்பதும் மீண்டும் தன் இடத்திற்கே வரவதும் என நடை பயிற்சி பயின்றுகொண்டிருந்தாள்.

அவள் முதல் முறை கதவு அருகே வரும்போதே கவனித்து விட்டான் விஷ்வேந்தர். ஆனாலும் அமைதியாகத் தான் இருந்தான் அவளே கதவைத் திறந்து வரட்டும் என்று. ஆனால் நொடிகள் நிமிடங்களாகக் கடந்ததே தவிர அவள் வர மாதிரி தெரியவில்லை. அதனால் அவனே கதவைத் திறந்து உள்ளே அழைத்து வரலாம் என்று முடிவெடுத்து கதவருகே சென்றான்.

கதவருகே வந்தவன் கதவைத் திறக்க அதேநேரத்தில் நிலாவும் கதவைத் திறந்ததால் சமநிலையின்றி இருவரும் கீழே விழுந்தனர்.

விழுந்த வேகத்தில் விஷ்வா கீழேயும் அவளின் உடல் முழுவதும் அவனின் மீதும் இருந்தது. விழுந்த அடுத்த நொடியிலே அவள் கீழேவும் அவன் மேலவும் இருந்தான்.

நிலாவிற்கு அவனின் இந்த செய்கை மூச்சு முட்டுவது போல் இருந்தது. அவளால் ஒழுங்காக மூச்சு விடக் கூட முடியவில்லை. ஆனாலும் அவன் விழியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மொழி” என்று விஷ்வா மெல்லிய குரலில் அழைக்க, நிலா எதுவும் பேசாமல் அமைதியாகப் பார்த்திருந்தாள்.

“மொழி” என்று மீண்டும் அழைக்க, அதில் சுயநினைவு பெற்ற நிலா அவனைத் தள்ளி விட்டு எழுந்து நின்றாள்.

“இப்ப எதுக்கு டி என்ன தள்ளி விட்ட ?” என்று எழுந்து நின்ற படி விஷ்வா கேட்க,

ஒரு நொடி அமைதியாக நின்றவள், “இங்க பாருங்க சார் மொதல எதுக்கு கூப்பிட்டிங்கன்னு சொல்லுங்க” என்று அவனிடமிருந்து சிறிது தள்ளி நின்றாள்.

“இங்க பாரு மொழி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவள் பக்கத்தில் வர,

“சார் முழு பேர் சொல்லிக் கூப்பிடுங்க” என்று காட்டமாகக் கூறியவள் சிறிது பின் தள்ளி நின்றாள்.

“எனக்கு நீ எப்போதுமே மொழி தான் சரியா நான் உன்ன விட்டுட்டு போயிருக்க கூடாது தான், அதுக்கு போய் எதுக்கு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை கொடுக்கிற மொழி”

“சார்! நீங்க என்ன பேசுறீங்க? எனக்கு உங்கள இதுக்கு முன்னாடி தெரியவே தெரியாது நான் உங்கள பார்த்தது கூட இல்ல. அப்படி இருக்கும்போது விட்டுட்டு போயிருக்க கூடாது அது இதுன்னு சொல்றீங்க. எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது” என்றாள் நிலா அவன் பேசியது புரியாமல்…

“மொழி” என்று கோபத்தில் கத்த,

“யாழ்மொழி” என்று திருத்திச் சொன்னாள்.

“எதுக்கு கூப்பிட்டிங்க சார் எனக்கு லேட்டாகுது வீட்ல பாட்டி தனியா இருக்காங்க” என்று கடிகாரத்தை பார்த்த படி கேட்க,

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா மொழி” என்றான் பட்டென்று.

இவனின் பதிலில் நிலா உறைந்தே போய்விட்டாள். அதுவும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் அவன் இப்படி கேட்டதை நினைத்துக் கூனி குறுகி போய் நின்றாள்.

அவனின் கேள்வியில் அப்படியே கீழே அமர்ந்து விட்டாள். இப்படியொரு கேள்வியை அவள் எதிர் பார்க்கவேயில்லை.

“மொழி” என்று அவளின் பக்கத்தில் செல்ல,

“அங்கேயே நில்லுங்க சார், பொண்ணுங்கன்னா உங்களுக்கு எப்படி தெரியுது. அவளுக்குன்னு ஒரு மனசு இருக்காதா? எந்தத் தைரியத்துல நீங்க என்ன பாத்து இப்படியொரு கேள்வி கேட்டீங்க? ” என்று கோபத்தில் அவள் கத்த,

“மொழி அமைதியா இரு நான் ஒன்னும் தப்பா ஏதும் கேக்கலையே கல்யாணம் பண்ணிக்கிலாமான்னு தான கேட்டேன்”

“என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அந்த வார்த்தைய சொல்லிகிட்டு திரும்ப என் கண்ணு முன்னாடி வராதீங்க” என்றவளின் கண்ணில் அவள் பட்ட வேதனைகள் அவள் முன் தோன்ற, பித்து பிடித்தவள் போல்” வராதீங்க வராதீங்க ப்ளிஸ் வராதீங்க” என்று கைகளை ஆட்டியவாறு அழுகையோடு கெஞ்சினாள்.

“மொழி மொழி உன்ன யாரும் ஒன்னும் பண்ணல டா பயப்படாத” என்று நிலாவை சமாதானம் படுத்த முயன்றான் விஷ்வேந்தர்.

“ப்ளீஸ் வராதீங்க. என்ன விட்ருங்க” என்று விஷ்வாவை தள்ளி விட்டு ஓட முற்பட்டாள்.

கீழே விழுந்த விஷ்வா வேகமாக அவளிடம் சென்று அவளின் செயலைக் கண்டு ஓங்கி அறைந்திருந்தான்.

நிலா கையில் வைத்திருந்த கண்ணாடி குவளை கீழே விழுந்து நொறுங்கியது.

அறைந்த வேகத்திலேயே அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்தினான்.

இதனை இரு ஜோடி கண்கள் பார்த்தது. அதில் ஒரு ஜோடி கண்கள் குரோதத்துடன் பார்த்து விட்டு மறைந்தது. மற்றொரு ஜோடி கண்கள் சிரித்து விட்டுச் சென்றது.

“ஒன்னும் இல்ல மொழி. உனக்கு எதுவும் இல்லை இப்படி பயப்படாத டா.நான் உன் கூடவே இருக்கேன்” என்று அவளின் முதுகை தட்டி கொடுத்தவாறே அவளை சமாதானப்படுத்தினான்.

அவனின் அந்த அணைப்பு அவளுக்கு பாதுகாப்பு உணர்வைத் தொடுக்க அவளுக்கு அது பலத்தையும் தந்தது. அவனை விட்டு விலகி நின்றவள் வேகமாக அந்த இடத்தை விட்டுச் சென்றாள்.

வீட்டிற்கு போகப் பிடிக்காத நிலா, அவள் வீட்டிற்க்கு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்றாள்.

மணிமேகலை சிக்கன் வாங்கிட்டு வர சிறிது தாமதமானதால், அவளது அன்னை பார்வதி” ஏன் டி இன்னைக்கு லேட்டு ?”

“அம்மா சிக்கன் வாங்கிட்டு வர லேட்டாயிடுச்சி மா” என்றவள் “இந்தா பிடி மா எனக்கு இன்னைக்கு பட்டர் சிக்கன் செஞ்சி கொடு மா” என்று அவளது அறைக்குள் செல்லப் பார்க்க,

” நில்லு டி உனக்கு என்ன வேணுமோ அத நீயே பண்ணிக்கோ. எனக்கு இப்போ டைம் இல்ல நான் போய் சீரியல் பாக்கணும்” என்று அவள் கொடுத்த கவரை அவளிடமே கொடுத்து விட்டு டிவி பார்க்கச் சென்றுவிட்டார்.

அவரையே மணி முறைத்து பார்க்க” என்னடி முறைப்பு ஒழுங்கா செய்றியா இல்ல நைட்டுக்கு திரும்பவும் உப்புமா செஞ்சி போடவா” என்று அதட்ட,

“அய்யோ அம்மா நீ சீரியல் பாரு மா நானே இன்னைக்கு சமைக்கிறேன் “என்று சமையலறைக்கு சென்று சமைக்க தொடங்கினாள். சமையல் வேலை பாட்டுக்கு நடந்து கொண்டிருக்க நடு நடுவில் தன் அன்னையை திட்டுவதையும் மறக்க வில்லை.

“அங்க என்ன டி சத்தம்” என்று பார்வதி ஹாலிலிருந்து கத்த,

“சும்மா பாட்டு தான் மா பாடிட்டு இருக்கேன் “

அப்போது அவளது அன்னை யாரையோ ‘வா டா’ என்று அழைக்கும் குரல் வர,” அய்யோ ராமா இந்த நேரம் பாத்து யாரு வந்து தொலைஞ்சாங்களோ இன்னைக்கு புல்லா சமையல் கட்டு தான் போல மணி” என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு இருக்க, அப்போது அவள் பக்கத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

” எதுக்கு இப்படி சமையல் வேலை எல்லாம் பாத்து யார கொல்ல பாக்குற டி “

அந்தக் குரலைக் கேட்டதும் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தியவள் குரல் வந்த திசையைப் பார்க்க அங்கே சிரித்த முகத்துடன் சக்தி நின்றிருந்தான்.

சக்தியைக் கண்டவள் அப்படியே நிற்க” என்ன ஆச்சி பெல் என்ன பாத்து அப்படியே நிக்கிற”

“உன்ன பாத்த ஷாக்கா தான் இருக்கும்” என்றபடி உள்ளே வந்தான் விஷ்வேந்தர்.

“அப்படியா பெல்” என்று கேட்டுக் கண்ணடிக்க, மணியோ கையில் வைத்திருந்த கரண்டியை கொண்டு அவனை அடிக்கத் தொடங்கினாள்.

“அடிக்காத பெல் வலிக்குது” என்று ஓட்டமெடுக்க,

“நில்லு டா எங்க ஓடுற” என்று அவன் பின்னே மணி துரத்த,

“ஆல் வளந்தாலும் இந்த அடிய மட்டும் விடமாட்டேங்கிறீங்களே டி” என்று பார்வதி பின்னே ஒழிந்து கொண்டான் சக்தி.

“ஏன் டி இப்படி தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைய அடிக்கிற? ” என்று பார்வதி சக்திக்காக கேட்க,

“அம்மா இவனையெல்லாம் எதுக்கு வீட்டுக்குள்ள விட்டீங்க? நட்பு நட்புன்னு மட்டும் சொல்லிட்டு சுத்துன்னா பத்தாது மா, எங்கள பார்க்கவும் வந்துருக்கனும். இப்படி இவ்வளோ வருஷம் கழிச்சு நட்புன்னு சொல்லிகிட்டு இங்க வந்துருக்க கூடாது” என்று கோபமாகக் கத்தினாள் மணி.

அவளை சமாதானம் படுத்த பெரிதும் உழைத்தான் சக்திதரன். இதனை எல்லாம் சிரித்த முகத்தோடு விஷ்வா பார்த்துக்கொண்டிருந்தான்.மொழியும் இங்கிருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும் என அவன் மனம் ஏங்கியது.

பின்பு மணிமேகலையின் சமையலில் இரவு உணவை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றனர்…

நிலாவும் சிறிது நேரம் பூங்காவிலிருந்து தன்னை மீட்டெடுத்தவள் கிளம்பி வீட்டிற்கு சென்றாள்…

இரவு உணவை உணவகத்திலிருந்து வாங்கி வந்து இருவரும் அதை சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றனர்.

நிலா மட்டும் அவளது அறையில் உறங்குவது போல் நடித்துக்கொண்டிருந்தாள்.

இங்கே வீட்டிற்கு வந்த விஷ்வேந்தர் அவனது அறையில் படுத்திருக்க அவனுக்கு இன்று பயந்த முகத்தோடு இருந்த நிலாவே நினைவில் ஓடிக்கொண்டிருந்தாள்.

அவனுக்கு அவளின் சிறுவயது சிரித்த முகமும் மாலை கண்ட முகமும் மாறி மாறி நினைவில் வந்துகொண்டிருந்தது.

error: Content is protected !!