Kalangalil aval vasantham 18(2)
Kalangalil aval vasantham 18(2)
காரணத்தையும் அதன் கர்த்தாவையும் தெரிந்து கொள்ளாமல் ஷானும் விடப்போவதில்லை. இருவரின் கண் கட்டையும் உருவியவன்,
“வாட்டர் பாட்டிலை எடு ப்ரீத்…” என்று இறுக்கமாக கேட்க, அவள், “ஜாக்கிரதை ஷான்.” என்றவாறு கொடுத்தாள்.
“ம்ம்ம்…” என்றபடி ஒருவனது முகத்தில் தண்ணீரை தெளிக்க, அவன் மருண்டு விழித்தான்.
அவனது வாய்கட்டை அவிழ்த்த ஷான், “உன் பேர் என்ன?” என்று கேட்க, அவன் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டான், பதிலளிக்க முடியாது என்ற தொனியில்!
“அவனையும் எழுப்பு ப்ரீத்தி…” என்று ஷான் கூறவும், இன்னொருவனின் முகத்தில் தண்ணீரை தெளித்தவள், அவன் எழுந்தவுடன் வாய்கட்டையும் பிரித்தாள்.
“டேய் உன் பேர் என்னடா?” என்று ஷான் கேட்க, இவன் அவசரமாக ‘சொல்லாதே’ என்று சைகை காட்டினான். அதை புரிந்து கொண்ட அவனும் மௌனமாகவே இருக்க, ஷானுக்கு ப்ரெஷர் ஏறியது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை அவன்.
“இப்ப யாராவது பேசப் போறீங்களா இல்லையா?” வெகு இறுக்கமாக வெளிவந்த வார்த்தைகளில் அவர்கள் இருவருக்குமே உள்ளே குதிரைகள் ஓடினாலும், அவர்கள் வாய் திறந்தால் அவர்களுக்கு நேரும் ஆபத்தை நினைத்து வாய் மூடிய வாக்கிலேயே இருந்தனர்.
“எனக்கு டைம் வேஸ்ட் பண்றது பிடிக்காது…” என்றவன், அவனது பாக்கெட்டிலிருந்து அவனது பிஸ்டலை எடுத்தான்.
“ஷான்…” பிஸ்டலை பார்த்ததும் ப்ரீத்திக்கு உள்ளே பதறியது. கோபத்தில் இவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதை முன்னரே பார்த்திருந்தவளுக்கு இப்போதும் என்ன வேண்டுமானாலும் செய்ய கூடும் என்ற ஆப்ஷன் பதட்டத்தை தருவித்தது.
“ப்ரீத்தி…” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் எச்சரித்ததில், அவள் அப்படியே தள்ளி நின்று கொண்டாள்.
“இப்ப பேசப் போறியா இல்லையா?” தன் முன் இருந்தவனை மிரட்டலாக கேட்க, அப்போதும் அவன் கண்களில் பயம் தெரிந்ததே தவிர, வாய் திறக்கவில்லை.
“கேட்டுட்டே இருக்கேன்… என்னடா என்னை என்ன கேணைன்னு நினைச்சியா?” என்று அவனை அறைந்தான் ஷான்.
“சர்… நீங்க என்னதான் கேட்டாலும், நாங்க எதுவும் பேச முடியாது. எங்களுக்கு தந்த வொர்க்கை நாங்க பண்ணோம் அவ்வளவுதான்…” இன்னொருவன் சற்று தைரியமாக வாய் திறந்தான்.
அவனை நோக்கி திரும்பிய ஷான், “யார் அந்த வொர்க்கை தந்தது?” என்று நிதானமாக கேட்க,
“அது எங்களுக்கு தெரியாது.”
“அதெப்படி, யார் வொர்க் குடுக்கறாங்கன்னு கூட தெரியாமத்தான் செய்வீங்களா?” கிண்டலாக கேட்டான்.
“நீங்க எவ்வளவு கேட்டாலும் இது தான் சர் பதில். எங்களுக்கு எதுவும் தெரியாது… தெரியாது… தெரியாது…” நிர்தாட்சண்யமாக அவன் மறுத்தான்.
கையிலிருந்த பிஸ்டலை அவனை நோக்கி உயர்த்திப் பிடித்தான் ஷான்.
“ப்ளீஸ்…” ப்ரீத்தி பயந்து போய் பக்கத்தில் வர பார்த்தாள்.
“ப்ரீத்தி…” என்ற அந்த குரலின் தொனியில் அவள் அதே இடத்தில் நின்றாள்.
அவனை நோக்கித் திரும்பியவன், “இப்ப சொல்ல போறியா இல்லையா?” உறுமினான்.
“இல்ல சர். எங்களுக்கு தெரியாது…”
சேப்டி லீவரை ரிலீஸ் செய்தவன், அவனது காலடியை குறி வைத்து சுட்டான்.
‘டமால்’ என்ற அந்த சப்தத்தில் ஆடிப் போனவள், பயந்து போய் கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டாள்.
“சொல்லு…”
“தெரியாது சர்…” மீண்டும் அதை மட்டுமே கூறினான் அவன். உள்ளுக்குள் எவ்வளவு நடுங்கினாலும், வெளிப்படையாக அந்த நடுக்கம் தெரிந்தாலும், அவன் பதில் கொடுக்க தயாராக இல்லை.
“எனக்கு தேவை ஆன்சர்…” என்று அழுத்தமாக சொன்னவன், அவனது தொடைகளில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான்.
எப்போது வேண்டுமானாலும் சுட்டு விடும் அபாயம் இருக்கிறது என்பதை சந்தேகமே இல்லாமல் காட்டிக் கொண்டிருந்தான் ஷான். அமர்ந்திருந்தவனுக்கு சகலமும் நடுங்கியது. வியர்த்து வழிந்தது.
இவை எதையும் அனுபவிக்காமலே, இன்னொருவனும் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் இறந்து விட்டால், இவனிடம் தானே வருவார்கள். தங்களுக்கு இது தேவையா என்று தோன்றியது. அதிக பணம் எப்போதும் ஆபத்தைத் தரும் என்ற அவனது அன்னையின் எச்சரிக்கை எல்லாம் அவன் கண்முன் வந்து போனது. நாக்கு உலர்ந்து போனது.
“சொல்லு…” அவனது தொடைகளின் மேலிருந்த அழுத்தம் இன்னும் கூடியது.
“இல்ல… சொல்ல முடியாது…” பிடிவாதமாக மறுத்தான் அவன். எப்படியும் சுட மாட்டான் என்ற தைரியம் எங்கோ ஒட்டிக் கொண்டிருந்தது. எப்படி காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. அவனுக்குக் கொடுக்கப்பட்ட நம்பிக்கை அப்படி!
இன்னொரு முறை துப்பாக்கி வெடித்தது.
ப்ரீத்தி தன் காதுகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
இது தேவையானதுதான் என்று மூளை சொன்னாலும், மனம் சஷாங்கனின் இந்த ரூபத்தை காணும் போதெல்லாம் உருக்குலைந்து விடுகிறது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
ஷானின் முன் இருந்தவன், ‘அம்மாஆஆ’ என கத்த, அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவன், பயத்தில் உளற ஆரம்பித்துவிட்டான்.
“சர். நான் சொல்லிடறேன்… அவனை விட்டுடுங்க…” என்று கதறினான் இவன்.
அவனை விட்டு இவனிடம் வந்தவன், “சொல்லு…” என்று கூற,
“சரண் சிங் பாதல் தான் எங்களுக்கு ஆர்டர் கொடுத்தது சர். வெளிய சொன்னா குடும்பத்தோட கொலை பண்ணிருவேன்னு மிரட்டி இருக்கார். அதான் நாங்க சொல்லல…” என்றவனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“சரண் சிங்கா? யாரது?” என்று ஷான் யோசிக்கும் போதுதான் அவளுக்கு சட்டென்று பொறி தட்டியது.
“ஏடிஜிபி ஷான்…” என்றாள்.
“என்ன சொல்ற?” குழப்பமாக அவளை பார்த்தான்.
“ஒரு தடவை பாட்டியாலா ஹவுஸ்ல மூணு பேரையும் சேர்த்து வெச்சு பார்த்திருக்கேன். ஒன்னு சரண் சிங், இரண்டாவது மாயாவோட ஹஸ்பன்ட் சைலேஷ், மூணாவது ரவி…” என்று கூற,
“இதை ஏன் என்கிட்ட மொதல்லையே சொல்லல…”
“அப்ப நீங்க ஸ்வேதாவோட சீரியஸா ரிலேஷன்ஷிப்ல இருந்தீங்க பாஸ். தேவையில்லாம நான் எதுக்கு இதை சொல்லி… எதாவது பிரச்சனையாச்சுன்னா என்ன பண்ணன்னு யோசிச்சுட்டு…” என்றவள், முடிக்காமல் அவனது முகத்தை பார்க்க,
“மண்ணாங்கட்டி…” என்று அவளை திட்டியவன், “இன்னும் என்னென்ன மறைச்சு வெச்சுருக்க?” அதீத கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.
“வேற ஒண்ணுமில்ல…” என்றவளுக்குள் சிறு நடுக்கம். தலை குனிந்து கொண்டாள்.
“உன்னை அப்புறம் வெச்சுக்கறேன்…” என்றவன், “வேற என்ன நடந்துச்சு. சொல்லு” என்று அவனை பிடித்தான்.
“சரண் சிங் தான் இன்ஃபில்ட்ரேட் பண்ணி ஹேக் பண்ண சொன்னார் சார். அதுக்கு பெரிய அமௌன்ட் குடுத்தார். ஆனா வெளிய சொல்ல கூடாதுன்னு சொன்னார்.” என்றவனுக்கு இன்னும் கண்ணீர் நிற்கவில்லை.
“வேற என்ன தெரியும்?”
“வேற எதுவும் தெரியாது சர்.”
“ரவின்னு ஒருத்தரை பற்றி அவர் பேசி இருக்காரா?” என்று கேட்க, அவன் யோசித்து, “ஒரு தடவை போன்ல பேசும் போது ரவிங்கற பேச்சு வந்துது சர்…” என்றான்.
“வேற?”
“வேற எதுவும் இல்ல சார்…” என்றதும்,
“மகேஷ்…” சப்தமாக அழைத்தான்.
உள்ளே வந்த மகேஷிடம், “ரெண்டு பேரையும் தனியா வை. சீக்ரட்டா இருக்கட்டும். இவங்க ரெண்டு பேரோட குடும்பத்தையும் மானிட்டர் பண்ணு. இவங்க எங்க இருக்காங்கன்னு யாருக்கும் தெரியவே கூடாது. காட் இட்?” அழுத்தமாக கூறிவிட்டு ப்ரீத்தியை பார்த்தான்.
அவள் சற்று பயந்து போயிருந்தாள். முகம் வெளிறி இருந்தது. குளித்து முடித்து சுடிதார் அணிந்து பூவாக வந்த பெண், இப்படி வாடிவிட்டாளே என்று நினைத்தபோது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், மறுபக்கத்தில், இவளது தைரியம் இவ்வளவுதானா என்று மனம் இடித்தும் உரைத்தது.
அவளது தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டவன், “ஈஸி ப்ரீத்…” என்றவன், அவளது கையை மென்மையாகப் பிடித்துக் கொண்டான். அந்த வெம்மை அவளது நடுக்கத்தை குறைத்தது. அதை உணர்ந்தவனின் முகத்தில் சிறு புன்னகை!
“மகேஷ்…” என்று மீண்டும் அழைக்க, அந்த மகேஷ் அவன் முன்னே வந்தான்.
“ஏடிஜிபி சரண் சிங் பாதல், சைலேஷ், ரவி… இவங்க மூணு பேரையும் க்ளோசா வாட்ச் பண்ணு. அவங்களை கண்காணிக்க ஆட்களை போடு, இன்க்ளுடிங் ஃபோன் கால்ஸ், மீட்டிங்க்ஸ். எனக்கு டெய்லி ரிப்போர்ட்ஸ் வரணும், கம்ப்ளீட்டா, இன் அன்ட் அவுட்…” என்றதும்,
“சியூர் சர். கண்டிப்பா” என்றான்.
ப்ரீத்தி புறம் திரும்பி, “மத்த ரெண்டு பேரோட கார்லயும் ட்ராக்கிங் டிவைஸ் இன்ஸ்டால் பண்ணனும்… டெய்லி ரிப்போர்ட்ஸ் எடுத்து பார்க்கணும்… அதுக்கு தனியா ஒரு க்ரூப் அசைன் பண்ணனும் ப்ரீத்தி.”
“ஓகே… ஆல்வின் சர் கிட்ட பேசறேன்.”
“அப்புறம் மகேஷ்…” என்றவன், “ரவியோட ப்ராபர்ட்டில மோஸ்ட் வால்யுபில் என்னன்னு சொன்ன?” என்று கேட்க,
“ஸ்டுடியோ சர். வடபழனில மெயின் எரியால நாலு ஏக்கர்ல இருக்கு. அது அவரோட குடும்பத்துக்கு சொந்தமானது…” என்று கூற,
“இன்னைக்கு நைட் அங்க ஃபயர் ஆக்ஸிடென்ட் நடக்கணும். அட்மினிஸ்ட்ரேஷன் பில்டிங் முழுசா காலியாகனும். ஆனா கேசுவல்ட்டீஸ் எதுவும் இருக்க கூடாது. ஜஸ்ட் பில்டிங்…” என்றதும், ப்ரீத்தி சற்று அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“எதாவது தப்பித் தவறி கேஷுவல்ட்டி ஆச்சுன்னா தப்பாகிடும் ஷான்….”
“நோ… அப்படியெதுவும் ஆகாது. இதுதான் நான் அவனுக்கு கொடுக்கற முதல் அடி…”
அதே போல அன்று இரவு ஸ்டுடியோவின் அட்மினிஸ்ட்ரேஷன் பில்டிங் முழுவதுமாக எரிந்து போனது. யார் செய்தார்கள், இது விபத்தா, திட்டமிடப்பட்ட ஒன்றா என்பது எதுவும் புரியாமல் தீ நடந்த இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் ரவி.
உடன் சரண் சிங்!