NIRAL MOZHI -16.1

NIRAL MOZHI -16.1

இரவு, நேரம் 1:30, மருத்துவமனை!

முரளியைக் கைப்பேசியில் அழைத்தான், நிகில்.

“ஹலோ” என்றார் முரளி, தூக்க கலக்கத்தில்!

“முடிஞ்சது முரளி” என்றான் எழுந்து நடந்து கொண்டே!

முரளிக்குத் தூக்கம் பறந்து போயிற்று!!

“சூப்பர் நிகில்! இப்போ அவன் என்ன பண்ணுவான்னு பார்க்கலாம்! கண்டிப்பா ஃபோன் பண்ணுவான்! பண்ணட்டும், அப்புறம் இருக்கு அவனுக்கு!” என்று ஆத்திரம், கோபம் எல்லாம் தீரும் வண்ணம் இன்னும் நிறைய பேசினார்.

ஆனால், நிகில் எதுவும் பேசாமல்… அமைதியாக இருந்தான்.

“என்னாச்சு நிகில்? எதுவும் பேச மாட்டிக்கீங்க?” என்று கேட்டார், அவனின் அமைதியைக் கவனித்து!

“முரளி! போன தடவை என் மேல இருந்த கோபத்தை ஷில்பாகிட்ட காட்டினான். இப்போ திரும்பவும், நான்… அவனைக் கோபப் படுத்தியிருக்கேன். மிலாவும், ஜெர்ரியும் அங்கதான இருக்காங்க. அதான்…” என்று சொல்லி, நிகில் பெருமூச்சி விட்டான்.

“வொரி பண்ணாதீங்க நிகில்! நல் கேர், கண்டிப்பா ஃபோன் பண்ணுவான்” என்று நிகிலிற்கு ஆறுதலாகப் பேசினார்.

“சப்போஸ் அவன் ஃபோன் பண்ணலைன்னா??” என்று கேள்வி கேட்டான்.

“ஏன் அப்படி நினைக்கிறீங்க?”

“லாஸ்ட் டைம்… அவன் என்ன யோசிப்பான்னு, நான் யோசிக்கவே இல்லை. இந்த டைம் அப்படி ஆகிடக்கூடாது முரளி!”

“என்ன சொல்ல வர்றீங்க?”

“முரளி! ‘நான் யாருன்னு?’ அவன் யோசிக்க ஆரம்பிச்சிருப்பான். இப்போ நான் பண்ண விஷயம் தெரிஞ்சப்புறம், ‘நான் என்ன வேலை பார்க்கிறேன்னு?’ யோசிப்பான்! டவுட் பண்ணுவான்!!”

“அப்படி டவுட் பண்ணா… உங்களுக்கு ஃபோன் பண்ண மாட்டான்-ன்னு நினைக்கிறீங்களா??”

“ம்ம்ம்”

“அப்போ என்ன பண்ண நிகில்?”

“கொஞ்சம் டைம் கொடுங்க முரளி!” என்றவன், “எதுக்கும், நீங்க ஃபோன் கால் ட்ரேஸ் பண்ண அரேஞ் பண்ணிடுங்க. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்றான்.

“நான் பார்த்துகிறேன்” என்றவர்,  “நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்றார்.

“ம்ம்ம்” என்று மட்டும் சொன்னான்.

இருவரும் அதன்பிறகு எதுவும் பேசவில்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டது.

நேரம் 1:55

அதற்கு மேல், நிகிலால் நிற்க முடியவில்லை. நடந்து வந்து, கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

யோசிக்க ஆரம்பித்தான்.

கிடைத்த தகவல்களில், எதையோ பயன்படுத்தாமல் இருப்பது போல் தெரிந்தது.

என்ன தகவல்? எங்கே கிடைத்தது? எப்படிக் கிடைத்தது? எதைப் பயன்படுத்தாமல் இருக்கிறோம்? என்று மூளையைக் கசக்கி யோசித்தான்.

பணப் பரிவர்த்தனைப் பற்றிக் கண்டறிந்ததற்கு முன்னர்… கண்டுபிடித்த விடயங்கள் ஒவ்வொன்றையும், மீண்டும் ஒருமுறை கண்களின் முன்னே ஓட விட்டான்.

அடியாட்கள்… சிசிடிவி காட்சிகள்… கேப்… கைப்பேசி எண்… பொய்யான முகவரி….கார்… கார் பெயர் தட்டு…

இங்குதான்! இதில்தான் எதையோ பயன்படுத்தாமல் இருப்பது போல் இருந்தது!

‘என்ன அது? என்ன அது?’ என்று கண்கள் சுருக்கி யோசித்தான்.

முதலில் கைப்பேசி எண்! அதைப் பெறுவதற்காகக் கொடுக்கப்பட்ட முகவரி!

‘போலியான முகவரியைத் தந்து, நல் கேர் கைப்பேசி எண் வாங்கியிருக்கிறான்’ என்று முரளி சொன்னார்.

அப்படியென்றால், அது இல்லை!

மீண்டும் யோசித்தான்.

அடுத்து! கார் பெயர் தட்டு! அதில் மறைக்கப்பட்டிருந்த எண்கள்!! அந்த எண்களை மறைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கும் ‘ஆன்டி ரேடார் ஸ்டிக்கர்ஸ்’!!

இங்குதான் ஏதோ இருக்கிறது!

‘யோசி நிகில்! நேரம் குறைவாக இருக்கிறது, யோசி!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே யோசித்தான்.

கார்!

பெயர் தட்டு!

மறைக்கப்பட்ட எண்கள்!

ஸ்டிக்கர்ஸ்!!

சட்டென, ஒரு பொறி தட்டியது!!!

அந்த ஸ்டிக்கர்ஸை எங்கே வாங்கியிருப்பான்? நல் கேரின் பணப் பரிவர்த்தனை எல்லாமே இணையத்தில் மட்டுமே!

இருக்கட்டும்!

ஆனால், இணையத்தில் பொருள் வாங்கியிருந்தாலும்… பொருளைப் பெறுவதற்கு ஒரு விலாசம் கொடுக்க வேண்டுமல்லவா?

அது என்ன விலாசம்? அந்த விலாசத்தில்தான் நல் கேர் இருப்பானா? என்ற கேள்வி வந்தது.

உடனே, முரளியை அழைக்க வேண்டும் எனக் கைப்பேசியை எடுத்தான். ஆனால், அழைக்கவில்லை.

அதற்கு முன், சில விடயங்களை இணையத்தில் தேடி எடுத்துக் கொண்டான்.

பின், முரளியை அழைத்தான்.

இரவு, நேரம் 2:20, நல் கேர் இடத்தில்!

இருள், அந்த வீட்டில் பரவியிருந்தது. கீழிருந்து வரும் விளக்குக் கம்பத்தின் ஒளியில், மெல்லிய கீற்றாய்… வீட்டிற்குள் வெளிச்சம் வந்தது.

வீட்டின் ஒரு மூலையில்… கணினியில் வேலை செய்துவிட்டு… அதே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, கணினி மேசையின் மீது கால்களை நீட்டியபடி… நல் கேர் உறங்கிக் கொண்டிருந்தான்.

மற்றொரு மூலையில், மிலாவும் ஜெர்ரியும் படுத்திருந்தார்கள்.

தான் தூங்கும் போது, மிலா தப்பிச் சென்றுவிடக் கூடாதென்று…  அவளது கைகள், கால்களைக் கயிறுகளால் கட்டிப் போட்டிருந்தான்.

இரவு, நேரம் 2:30, மருத்துவமனை!

நிகில்… இரண்டு மூன்று முறை முயற்சி செய்த பின்தான், முரளி அழைப்பை ஏற்றார்.

ஏற்றவுடன், “ஃபோன் கால் ட்ரேஸ் பண்றதைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தேன் நிகில்” என்று அழைப்பை ஏற்காததற்கு விளக்கம் கொடுத்தார்.

“ம்ம்ம்” என்றவன் குரலில் சோர்வு தெரிந்தது.

“சொல்லுங்க நிகில்… என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“முரளி! கார் நம்பர் பிளேட்-ல, ஆன்டி ரேடார் ஸ்டிக்கர்ஸ் யூஸ் பண்ணியிருப்பான்னு நேத்து பேசினோம்ல?” என்றவன் குரல் கரகரத்துப் போயிருந்தது.

“ஆமா”

“அந்த ஸ்டிக்கர்ஸ் எங்க வாங்கியிருப்பான்? கண்டிப்பா ஆன்லைன் பர்ச்சேஸாதான் இருக்கும். அப்போ, அங்க ஷிப்பிங் அட்ரஸ் கொடுத்திருப்பான்ல? அது அவனோட அட்ரஸா இருக்க சான்ஸ் இருக்குதுல?”

“கம் ஆன் நிகில்! இங்கதான் வாங்கியிருக்கணுமா?? வேற எங்கேயிருந்தாவது வாங்கிட்டு வந்திருக்கலாமே?”

“இருக்கலாம்! சப்போஸ் இங்க வந்தப்புறம் வாங்கியிருந்தா?”

“50% சான்ஸ் இருக்கு. 50% சான்ஸ் இல்லை”

“50% சான்ஸ் இருக்குன்னு சொல்றீங்கள… அதை நாம யூஸ் பண்ணா என்ன?”

அமைதியாக இருந்தார்.

“என்ன யோசிக்கிறீங்க முரளி?”

“ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ் நிறைய இருக்கு. நீங்க சொல்றமாதிரி தேடுறது, டைம் கன்ஸ்யூமிங் ப்ராசஸ்.  இப்படித் தேடினா லேட்டாகும்” [Online Market Place : Amazon. Flipkart – retailers… e-bay – whole sellers]

“அதுக்கு ஈஸியா ஒரு வழி இருக்கு முரளி?” என்றான்.

“என்ன?”

“ஆன்டி ரேடார் ஸ்டிக்கர்ஸ்… எல்லா ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ்-லயும் கிடையாது. நான் செக் பண்ணிப் பார்த்திட்டேன். e-bay-ல மட்டும்தான்”

“பட், e-bay-ல பிட்காயின் அக்ஸப்ட் பண்ண மாட்டாங்க நிகில்!”

“யெஸ்! ஐ நோ முரளி. பட், e-bay-ல… அவன் ஆன்லைன் பேமென்ட் பிளாட்பார்ம் (Online Payment Platform) அக்கௌன்ட் யூஸ் பண்ணியிருந்தா? அப்போ முடியும்-ல??”

“நீங்க என்ன சொல்ல வர்றீங்க?”

“நல் கேர்… ஏன் தன்கிட்ட இருக்கிற பிட்காயினை, ஏதாவது ஒரு ஆன்லைன் ட்ரடேர் பிளாட்பார்ம்(Online Trader Platform ) யூஸ் பண்ணி… தேவையான அளவு இந்தியன் கரன்சியா மாத்தி… அதை PayPal மாதிரி ஒரு ஆன்லைன் பேமென்ட் பிளாட்பார்ம்(Online Payment Platform) அக்கௌன்ட்-க்கு மாத்திருக்க கூடாது?

அந்த PayPal அக்கௌன்ட் வச்சி… e-bay-ல, ஏன் ஸ்டிக்கர்ஸ் வாங்கியிருக்கக் கூடாது? ஏன்னா e-bay, PayPal அக்ஸப்ட் பண்ணுவாங்க. அன்ட் இந்த மாதிரி ட்ரான்ஸாக்ஷன்-க்கு பேங்க் அக்கௌன்ட் தேவையில்லை. PayPal அக்கௌன்ட் இருந்தா போதும்”

“ஓ!.. அப்போ அந்த ஷிப்பிங் அட்ரஸ் தெரிஞ்சா… அவன் இருக்கிற இடம் தெரியிற மாதிரி. கரெக்ட்??”

“ம்ம்ம்” என்றவன், “ஈவென், அவன் எனக்கு ஃபோன் பண்ணாலும், செல் டவர் வச்சி… அவனோட லோகேஷன எக்ஸ்சாக்ட்-டா லோகேட் பண்ண முடியாது. ஸோ, அப்ராக்ஸிமேட்டா  ஒரு ஏரியா வரும். அதுக்கப்புறம், அந்த ஏரியா ஃபுல்லா சர்ச் பண்ணனும். எனக்கென்னமோ, இதுதான் டைம் அதிகமா எடுக்கும்- ன்னு தோணுது” என்றான்.

“ஓகே.. ஓகே.. நிகில். உங்களுக்கு அப்படித் தோணிச்சின்னா, நான் e-bay ரீட்டைலர்ஸ்-கிட்ட பேசி… ஷிப்பிங் அட்ரஸ் கண்டுபிடிச்சி சொல்றேன். கொஞ்சம் டைம் எடுக்கும், நிகில்”

“ஓகே முரளி! பட், முடிஞ்ச அளவு பார்ஸ்டா பண்ணுங்க! இனிமே லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும்…” என்று பாதியிலே நிறுத்தினான்.

அவன், தன் மனைவி, பையன் பற்றிப் பேசுகிறான் என்று புரிந்தது.

எனவே, “புரியுது நிகில்! நான் பார்த்துகிறேன். ப்ளீஸ், நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்றவர், அழைப்பைத் துண்டித்தார்.

இரவு, நேரம் 3:00, முரளி வீடு!

அதன் பின், அவர் உறங்கவில்லை. எழுந்துவிட்டார்!

நிகில் சொன்னது போல் செய்ய, என்னென்ன செய்ய வேண்டும்? யார் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்?? என்று பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

இரவு, நேரம் 3:15, மருத்துவமனை!

நின்று கொண்டிருந்தவன், கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டான்.

அடுத்து, முரளி தகவல்கள் கொண்டு வரும் வரைக் காத்திருக்க வேண்டும்.

இதுவரை இல்லாமல், இன்றைய காத்திருப்புக் கொஞ்சம் கடினமானதாக இருந்தது.

அப்படியே அமர்ந்த நிலையிலே, கட்டில் கம்பியில் தலையைச் சாய்த்துக் கொண்டு… கண்களை மூடினான்.

அதிகாலை, நேரம் 3:30

நல் கேர் இடத்தில்…

எந்த மாற்றமும் இல்லாமல்… வீடு இருள் சூழ்ந்து, அமைதியாக இருந்தது!!

காலை, நேரம் 7:00, மருத்துவமனை!

விடிந்துவிட்டது!

மருத்துவர் மற்றும் செவிலியர் வந்தனர்.

முட்டியின் அசைவுகள், இடுப்புக் காயம்… மற்ற காயங்கள் என அனைத்தையும் பரிசோதித்து விட்டு, ‘இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகிக்கோங்க. அன்ட், ஒரு போர் டேய்ஸ்-க்கு அப்புறம் செக்-அப் வாங்க. மெடிசின், டிஸ்சார்ஜ் டீடெயில்ஸ் சிஸ்டர் சொல்லுவாங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

எடுக்க வேண்டிய மருந்துகள், அவை எடுக்க வேண்டிய நேரங்கள் மற்றும்  டிஸ்சார்ஜ் விவரங்கள் என அனைத்தையும் சொல்லிவிட்டுச் செவிலியர் சென்றார்.

அவர்கள் இருவரும் சென்றதும்…

நிகில் எழுந்தான். கிளம்பத் தயாரானான். மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட உடையிலிருந்து, தன் உடைக்கு மாறிக் கொண்டான்.

அன்று அணிந்திருந்த அதே உடைதான்!

சட்டையில், ஆங்காங்கே ரத்தக் கறை!

கத்திக் குத்தினால் ஏற்பட்ட கிழிசல் வேறு!!

இரண்டு நாட்கள் கழித்து, அறையிலிருந்து வெளியே வந்தான். 

காலை, நேரம் 7:45, ஆணையர் அலுவலகம்!

பரபரப்பு ஏதுமின்று, அமைதியாக இருந்தது. காலை பொழுதல்லவா? ஆதலால்!!

சைபர் கிரைம் ஸ்டேட் கோ-ஆர்டினேட்டர், துணை ஆணையர் மற்றும் ஆணையர்… இவர்கள் மூவரிடம், முரளி சில தகவல்கள் மற்றும் விடயங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.

காலை, நேரம் 8:00, நல் கேர் இடத்தில்!

சூரியனியின் ஒளி, வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தது.

நல் கேர், மெது மெதுவாகக் கண்திறந்தான். மேசையின் மீது நீட்டியிருந்த கால்களைக் கீழிறக்கித் திரும்பிப் பார்த்தான்.

அவன் பார்வை சென்ற இடத்தில், மிலாவும்… ஜெர்ரியும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நன்றாகக் கண்களைத் திறந்து கொண்டு, எழுந்தான்.

பின், அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

சோர்வு… பசி… வேதனை… என எல்லாம் சேர்ந்து கொண்டதால், அருகில் அவன் உட்கார்ந்ததே தெரியாமல், மிலா உறங்கிக் கொண்டிருந்தாள்.

படாரென்று, அவளது கால் மற்றும் கைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டான்.

பயந்து போய், அறக்கப் பறக்க மிலா எழுந்தாள். சுற்றிலும் பார்த்தாள். பயத்தில் மூச்சு வாங்கியது. முகத்தில் வியர்க்க ஆரம்பித்தது. மிரண்டு போய்… அவனைப் பார்த்தாள்.

அவ்வளவுதான்! எழுந்து சென்றுவிட்டான்!!

இன்னும் உறங்கிக் கொண்டிருந்த ஜெர்ரியைப் பார்த்தாள். வெறும் தரையில் கிடந்தவனைத் தூக்கி, தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.

திடீரென்று ஷில்பா நியாபகம் வந்தது. உடனே, மளமளவென்று கண்ணீர் வந்தது!

துடைத்துக் கொண்டாள்!

பின், நிகில் பற்றிய நியாபகம் வந்தது.

அன்று பேசும்போது,  ‘இரண்டு நாளில் சரியாகிவிடும்’ என்று சொன்னானே! அப்படியென்றால், இன்று வீட்டிற்குச் சென்று விடுவானல்லவா!? டெல்லியிலிருந்து வந்திருப்பார்களா? தன்னைத் தேடியிருப்பார்களே? என்ன சொல்லி சமாளித்திருப்பான்?

இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டே இருந்தாள்.

அக்கணம், மற்றொரு அறையிலிருந்து நல் கேர் வெளியே வந்தான். கையில் ஒரு காஃபி கோப்பையுடன் வந்து, கணினி முன்னே அமர்ந்தான்.

புதினா மணத்தை நுகர்ந்தவாறே, கோப்பையிலிருந்த காஃபியை ஒரு மிடறு விழுங்கிக் கொண்டே கணினியை உயிர்பித்தான்.

Leave a Reply

error: Content is protected !!