Rose – 13

49d8c-kadal2balai-637229a0

Rose – 13

அத்தியாயம் – 13

மதுர யாழினியின் முன்பு அவளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று நேர்மறையான விஷயத்தைக் கூறிய மருத்துவர், சின்னவளை வெளியே அனுப்பிவிட்டு ரவீந்தரிடம் பேசினார். அவரின் பேச்சிலிருந்தே மகளின் மனநிலையைப் புரிந்துகொண்டார் ரவீந்தர்.

அன்றிலிருந்து அவரின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிப் போனது. தன்னுடைய மகளை காலை ஸ்கூல் செல்லும் வரை உடன் இருப்பவர், மாலை அவள் வீடு திரும்பிய கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்.

சில நேரங்களில் மிருதுளாவும் அவர்களுடன் இணைந்து வெளியிடங்களுக்கு செல்வதுண்டு. ரவீந்தர் ஒவ்வொரு விஷயத்தையும் அவளுக்காக பார்த்து அக்கறையுடன் செய்ய, அவளிடம் எந்தவிதமான மாற்றமும் இதுவரை வரவில்லை.

அவளின் முகத்தில் இருக்கின்ற இறுக்கம் கண்ட மிருதுளாவின் மனமோ, ‘நம்ம சைகார்ட்ஸ்ட்டாக இருந்தால், இந்த பெண்ணோட மனதைப் படித்து, அவளை சீரான நிலைக்கு கொண்டு வந்திருக்கலாம்’ அதை நினைத்தபடியே தோழியின் அருகே அமர்ந்திருந்தாள்.

சாலையில் செல்கின்ற வாகனங்களை வேடிக்கைப் பார்த்த யாழினியிடம், “என்னடி தினமும் டேப்லெட் போடுறீயா? ஏதாவது சேஞ்சஸ் தெரியுதா?” அக்கறையுடன் விசாரித்தாள்.

“நோ மிரு. வழக்கத்தைவிட நல்ல தூக்கம் வருது” சலிப்புடன் கூற, அவளைப் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதை உணர்ந்து வேகமாக சிந்தித்தாள்மிருதுளா.

சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோதிட, அவளின் மனதில் அந்த சிந்தனை உருவானது. ஒருவர் மற்றொருவரிடம் பேச மொழி முக்கியம் என்றாலும், மொழியைக் கடந்து பல மனங்கள் இசையில் மூழ்கி திளைப்பதுண்டு.

இசைக்கு நிறம், வடிவம், மொழி இவைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இசை இல்லாமல் உலக மக்கள் இயக்கம் இருப்பதில்லை என்பதை நன்கு அறிந்தவள் மிருதுளா.

இசையைப் பற்றி நினைக்கும்போது,

“மூங்கில்களை கருவறுக்க நினைக்கும்

வண்டுகள் போடும் துளைகளின்

வழியாக நுழையும் காற்று

இசையாக பரிமாணமடைய…

வண்டுகளின் நயவஞ்சகத்தில்

நல்லதொரு ஆரம்பமாய்…

காட்டில் இருக்கும் மூங்கில்கள்

மானுடரின் கையில் புல்லாங்குழலானதே!

மாயவனின் திருவிளையாடல்தானோ?!” அவளது சிந்தையில் உதயமானது கவிதை.

ஒவ்வொரு பாடலையும் கேட்டுவிட்டு நகராமல், அந்த வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் ஆயிரம் அர்த்தங்களைப் புரிந்து கேட்பவள். மிருதுளாவின் தனிமையான நேரங்களில் அவள் தஞ்சம் அடைவது, இசையின் மடியில் தான்.

தன்னிடம் இருந்த கைபேசியின் உதவியினால், அடிக்கடி தான் விரும்பிக் கேட்கும் பாரதியார் பாடலைத் தேடியெடுத்து அதை ஒலிக்கவிட்டாள் மிருதுளா.

நல்லதோர் வீணைசெய்தே – அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

சொல்லடி சிவசக்தி – நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறுபந்தினைப் போல் – உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,

நசையறு மனங் கேட்டேன் – நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் – சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் – இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? ” அந்த பாடலின் வரிகளும், மொழியும் புரியாமல் போனாலும் கூட, யாழினியின் மன இறுக்கம் மெல்ல குறைந்தது.

அதன் வெளிப்பாடாக அவளது விழியோரம் கண்ணீர் வடிய, மீண்டும் ஒருமுறை பாடலைப்போட சொல்லி செய்கை செய்தாள். அவளிடம் கண்ட மாறுதலை எண்ணி வியந்த மிருதுளா பாடலை ஒலிக்கவிட, அதை மறுபடியும் ஒருமுறை முழுமையாகக் கேட்டு முடித்தாள்.

அவன் பக்கம் திரும்பி அமர்ந்து, “விச் லாங்குவேஜ் இன் தின் சாங்?” உதடு துடிக்க உணர்ச்சியுடன் கேட்டவளின் முகத்தில் ஒரு தேஜஸ் வந்தது.

அது பாரதியாரின் பாடல் செய்த மாயை என்பது புரிய, “தமிழ்!” என்றாள் மிருதுளா.

ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் பேசி தன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும், விவாதிக்கவும் தான் மொழி பயன்படுகிறது. ஆனால் ஒருவரின் மனதினை படிக்க இசை மட்டுமே போதுமென்று யாழினியின் மூலமாக உணர்ந்தாள் மிருதுளா.

ஆவலுடன் பழகிய இடைப்பட்ட வருடங்களில், இன்று அவளிடம் பார்க்கும் மாறுதல் மிருதுளாவை வியப்பில் ஆழ்த்தியது. அதற்குள் செல்போன் உதவியுடன் பாரதியாரின் பாடலைத் தேடி எடுத்து, அதை இங்கிலீஷ் லாங்குவேஜ் ட்ரான்ஸ்பர் செய்து அந்த பாடலின் கருத்தை உள்வாங்கிக் கொண்டாள் மதுர யாழினி.

அவளது விழிகளில் கண்ணீர் அருவியாக பெருகிட, “தேங்க்ஸ் மிரு!” என்றாள்.

தன் தோழியிடம் இதுநாள்வரை மனம்விட்டு பேசியதில்லை. இன்று ஏனோ அவளிடம் பேச வேணுமென்ற எண்ணம் தலைத்தூக்க, “பிறந்த அன்றே அம்மாவை இழந்த எனக்கு அப்பாதான் உலகம். ஆனால் அவர் என்னுடன் அதிகநாள் இருந்ததே கிடையாது” ஆங்கிலத்தில் சொல்ல, அதை மெளனமாக உள்வாங்கினாள்.

யாழினியின் இந்த மாற்றமே மிருதுளாவிற்கு சந்தோசத்தை தந்தது. இத்தனை நாளாக தன்னிடம் மறைத்த உண்மையை அவளே செல்வது, அவளின் மனதிற்கும் உடலிற்கும் நல்லது என்றே நினைத்தாள்.

அன்று ரவீந்தரிடம் பேசும்போதுகூட, கொஞ்சநாளாக அவள் சரியில்லை என்பதால் சைகார்டிஸ்ட்டிடம் அழைத்துச் செல்ல சொன்னாள். ஆனால் யாழினியின் மனக்காயம் ஆழமானதென்று, அவள் பேச தொடங்கிய போதே புரிந்து கொண்டாள் மிருதுளா.

“அப்பாவுக்கு ஹோட்டல் பிஸ்னஸ். சோ அதில் அவர் ரொம்ப பிஸி. கொஞ்சம் கொஞ்சமாக இந்த இயந்திர வாழ்க்கை என்னையும் உள்ளே இழுத்திடுச்சு” இலக்கின்றி வானத்தை வெறித்தபடி, தன்னிலையை மனம் போன போக்கில் சொல்ல தொடங்கினாள் யாழினி.

“உணர்வுகள் இல்லாத ஜெடம்போல இருப்பதுபோல ஒரு எண்ணம். ஸ்கூலில் பசங்க டேட்டிங் கூப்பிடும்போது அவ்வளவு அருவருப்பாக இருக்கு. எனக்கு பிடிக்காத விஷயத்தை சிலர் போர்ஸ் பண்ணும்போது சத்தியமா ஃலைப் பிடிக்கல” என்றவளின் கண்ணில் ஏனோ கண்ணீர் அழையாத விருந்தாளியாக வந்தது.

சின்னஞ்சிறு வயதில் அவள் அனுபவிக்கும் கஷ்டங்களை நினைத்து மனம் வலிக்க, “எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் மதுரா. உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவதற்கு ஒருவன் வருவான். அவனோட நீ சந்தோசமாக வாழ போகிறாய் பாரு” மிருதுளா புன்னகையுடன் சொல்ல, யாழினியின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“நீ சொல்வது நடக்குதோ இல்லையோ? ஆனால் நீ சொல்வது ரொம்ப பிடிச்சிருக்கு” யாழினி மனம்விட்டு சிரிப்பதை, ஒருவிதமான ஆத்மதிருப்தியுடன் பார்த்தாள் மிருதுளா.

மிருதுளாவிடம் பேசியதில் முகத்தின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்து இருப்பதைக் கவனித்துவிட்டு, “ஓகே நம்ம கிளம்பலாமா?! நாளைக்கு கிளாஸில் டெஸ்ட் இருக்கு” யாழினி இயல்பாக கேட்க, அவளும் சரியென்று தலையசைத்தாள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் யாழினியின் முகத்தில் இருந்த இறுக்கம் படிப்படியாக குறைந்தது. ஏனோ தமிழ் மொழியின் மீது உண்டான ஈர்ப்பின் காரணமாக, “நான் தமிழ் கத்துக்கணும்” தன் ஆசையைத் தோழியிடம் வெளியிட்டாள் யாழினி.

“நானே உனக்கு சொல்லித் தரட்டுமா?” மிருதுளா ஆர்வமாகக் கேட்க, மறுப்பாக தலையசைத்தாள். அவள் அந்த மொழியை ஆர்வத்துடன் காத்துக்கொள்ள நினைப்பதைப் புரிந்துகொண்டு, தமிழ் பயிற்சி தரும் பள்ளிக்கு தன் உயிர் தோழியான யாழினியை அழைத்துச் சென்றாள்.

முதல் நாளிலேயே அங்கிருந்த ஆசிரியை வைஜெயந்தியை சந்தித்து, “மேடம் இவளுக்கு தமிழ் நல்ல கத்துக் கொடுங்க. வருங்காலத்தில் தமிழ் நாட்டில் இருக்கும் குடும்பத்திற்கு மருமகளாகப் போகிறாள்” விளையாட்டாக கூற, அது ஒருநாள் உண்மையாகும் என்ற அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அடுத்த வாரத்திலிருந்து மாலை வகுப்பிற்கு வரும்படி வைஜெயந்தி சொல்லிவிட, அவரிடம் விடைபெற்று தோழிகள் இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

***

மற்றொரு பக்கம், தந்தையின் இறப்பு யாதவ் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது. இந்நிலையில் அவனது டென்த் ரிசல்ட் வந்தது. வழக்கம்போலவே டாப் மார்க் வாங்கியிருந்த மகனை நன்றாக படிக்க வைத்து, தன் கணவனின் ஆசையை நிஜமாக்க வேண்டுமென்று நினைத்தாள் மீனா.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக, டீ எஸ்டேட்டை நம்பி கடன் கொடுத்தவர்கள், அதைகேட்டு வந்து வீட்டை முற்றுகையிட்டனர். யாதவ் – மீனா இருவரும் வாசலுக்குச் செல்ல, அங்கிருந்த அனைவரையும் கண்டு தாயின் கரத்தைப் பிடித்தான்.

“இத்தனை நாளாக உங்க கணவனை நம்பி கொடுத்த கடனைத் திருப்பி தரீங்களா? இல்ல எனக்கும் அதுக்கும் சம்மதம் இல்லன்னு சொல்ல போறீங்களா?” ஒருவன் கோபமாகக் கேட்க, மீனாவின் மூளை மரத்துப் போனது.

சிறிதுநேரம் மெளனமாக நின்ற மீனாவின் பார்வை மகனின் மீது படிந்து மீண்டது. நெஞ்சினில் துணிவை வரவழைத்துக் கொண்டு, “என் கணவன் வாங்கிய கடனை நான் அடைக்கிறேன். எனக்கு கொஞ்சநாள் டைம் கொடுங்க” அனைவரிடமும் கண்ணீரோடு மன்றாடினாள்.

தன் மனைவியுடன் அங்கே வந்த ஆனந்தனுக்கு,வீட்டின் முன்புக்கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்தும் ஓரளவு விஷயத்தை யூகித்தான். தன் மனைவி அழைத்துக்கொண்டு வேகமாக மீனாவின் அருகே சென்றார்.

கடன் கொடுத்தவர்களின் அருகே சென்ற ஆனந்தன், “கணவன் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாதுன்னு சொன்னால், உங்களால் இப்போ என்ன செய்ய முடியும். ஆனால் அவங்கதான் கொடுத்த கடனைத் திரும்ப தருவதாக சொல்றாங்களே! அவங்க கேட்கும் டைம் கொடுங்க” என்றார்.

யாதவ் தாயை அதிர்ச்சியுடன் பார்க்க, கடன் கொடுத்த அனைவரும் தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வந்தனர். மூன்று மாதத்திற்கு தவணை கொடுத்து மொத்த கடனையும் அடைக்க சொல்ல, அந்த கடன் தொகையை நினைத்து ஒரு பக்கம் நெஞ்சம் கனத்துப் போக,“கண்டிப்பாக கொடுப்பேன்” வாக்குறுதி கொடுத்தவளின் விழிகள் கலங்கியது.

அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு வருவதாக சொன்ன ஆனந்தன், தன் மனைவியிடம் கண்ஜாடை செய்தார். அதைப் புரிந்துகொண்ட சௌந்தர்யா, “மீனா வாங்க வீட்டுக்குள் போலாம்” யாதவையும் அழைத்துக்கொண்டு வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

அவர்களின் பின்னோடு வீட்டினுள் நுழைந்த ஆனந்தனைக் கண்டதும், “பணம் இருந்தால் தான் மனுஷங்களை மதிக்கிறாங்க. அவர் வாங்கிய கடனைக்கேட்டு, வீட்டு முன்பு ஆட்கள் வந்து நிக்கிறாங்க. எங்களுக்கு ஆதரவாகப் பேச ஒருத்தரும் வரவில்லை. இந்த நேரத்தில் நீங்க செய்யும் இந்த உதவியை நான் மறக்க மாட்டேன்” கண்கள் கலங்க நன்றி கூறினாள் மீனா.

“என் நண்பனுக்காக இதைக்கூட செய்யல என்றால், நானெல்லாம் மனிதனாக பிறந்ததே வேஸ்ட். உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும், என்னிடம் தயங்காமல் கேளும்மா” ஆனந்தன் கூற, அவளும் சரியென்று தலையசைத்தாள்.

சிறிதுநேரம் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கணவனும் மனைவியும், “நாங்க கிளம்பறோம்! நீயும், பையனும் பத்திரமாக இருங்க!” அவர்கள் விடைபெற்றுக் கிளம்பிச் செல்ல, யாதவ் அவர்களை அமைதியுடன் பார்த்தான்.

அன்றிலிருந்து தன் மகனுக்குத் தேவையான அனைத்தையும் கவனமாக செய்தாலும், ‘அடுத்து என்ன செய்வது?!’ இந்த கேள்வி மட்டும்தான் மனதில் ஓடியது.

எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி பற்றிய எந்த விஷயமும் தெரியாது. அவர் படித்த படிப்பிற்கு கணக்கு வழக்கு மட்டுமே பார்க்கத்தெரியும். அந்த வேலையைக் கற்றுக்கொள்ளும் முன்பே கணவனைக் கரம்பிடித்தது மட்டுமே நினைவில் நின்றது.

திக்குத்தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விட்டதுபோல இருக்க, இப்படியொரு நாள் தன் வாழ்வில் வருமென்று கனவிலும் நினைக்கவில்லை. இவ்வளவு கடன்சுமைக்கு நடுவே எப்போதும் புன்னகையுடன் வலம்வரும் தன்னவனின் முகம் மனதில் வந்து போனது.

அவர்களிடம் பேசி காலக்கெடுவை நீட்டித்தபோதும், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் சிந்தனையில் உழன்றார். அந்த வாரத்தின் இறுதியில் எஸ்டேட் ஊழியர்கள் செய்த வேலைக்கு கூலி வேண்டுமென கேட்க, தன் வசமிருந்த நகைகளை விற்று அவர்களுக்கு சம்பளம் கொடுத்தாள்.

இந்நிலையில் தாயின் சுமையைக் குறைக்க நினைத்த யாதவ், தன் முடிவைப்பற்றி மீனாவிடம் பேச நினைத்தான். வழக்கம்போலவே மீனா தோட்டத்தில் தனியாக அமர்ந்திருக்க கண்டு, நேராக அவரின் அருகே சென்றான்.

தன் மகனைப் பார்த்தும் மற்றது பின்னுக்குச் செல்ல, “யாதவ் என்னப்பா?” என்றாள் மீனா அக்கறையுடன்.

“அம்மா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” மகனை அவள் கேள்வியாக நோக்கினாள்.

முடிந்தளவு நெஞ்சினில் துணிவை வரவழைத்துகொண்டு, “அம்மா இந்த சொத்தை விற்று கடன் கொடுத்துட்டு, நம்ம வேற ஊருக்குப் போலாம்மா. அங்கே போய் நான் உங்களை நல்ல வச்சு பார்த்துக்கிறேன்” என்றான் மைந்தன்.

அவன் சொன்னதைகேட்டு திடுக்கிட்டுப் போன மீனா, “அப்போ உன்னோட படிப்பு” என்று கேட்க, அந்த கேள்விக்கு மௌனத்தை மட்டும் பதிலாக தந்தான் யாதவ்.

படிக்கின்ற வயதில் மகனின் தலையில் கடன்சுமையைச் சுமத்த மீனாவிற்கு மனம் வரவில்லை. வாழ்க்கை என்பது மேடுபள்ளம் நிறைந்ததாக இருக்கும், அந்த பாதையில் மகனை அனுப்ப முடியாமல் தடுமாறிப் போனார்.

தன் கணவனின் முகத்தை நெஞ்சினில் கொண்டு வந்து துணிச்சலோடு நிமிர்ந்து மகனைப் பார்த்தாள் மீனா. தன்னுடைய முடிவிற்காக காத்திருக்கும் மகனின் முகம் பார்த்து, “இங்கே பாரு! நீ சொல்வதைச் செய்ய என்னால் முடியாது. நான் அந்த நிறுவனத்தை எடுத்து நடத்தத்தான் போறேன்” என்றாள்.

தாயின் குரலில் இருந்த கடுமையைக் கண்டு, “அம்மா அந்த நிறுவனம்தான் நம்ம அப்பாவை பிரிச்சது. நீங்க அதை எடுத்து நடத்த வேண்டாம், அதை வித்துட்டு வாங்க. நம்ம வேற ஊருக்குப் போகலாம். நான் வேலைக்குப் போய் உங்களை நல்ல பார்த்துக்கிறேன்” தன் முடிவில் உறுதியாக நின்றான் யாதவ்.

“சின்னப்பசங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சொல்றது சரிதான். இந்த வயசில் உனக்கு யாரும் வேலை தரமாட்டாங்க, உன்னை நம்பி நான் வர தயாராக இல்ல” மீனாவும் முகத்தில் கடுமையைக் காட்டினார்.

அவரைத் தீர்க்கமாக நோக்கிய மைந்தனோ, “இப்போ முடிவாக என்ன சொல்ல வரீங்க?” என்றான்.

“நான் நிறுவனத்தை எடுத்து நடத்தறேன். நீ படிச்சு முடிச்சிட்டு வந்து அப்பாவின் தொழிலை விரிவுபடுத்துன்னு சொல்றேன்” மீனா தன் முடிவைத் தெளிவாகக் கூற, யாதவ் உறுதியுடன் நிமிர்ந்தான்.

“ஸாரிம்மா! இந்த நிறுவனத்தை எடுத்து நடத்தும் எண்ணம் எனக்கு துளியும் இல்ல, அது சம்மதமாக நான் படிக்கவே மாட்டேன். உங்களையும் இழக்க வேண்டாம்னு தான், உங்களுடன் பேச வந்தேன். அதை நீங்க கேட்கவே தயாராக இல்லம்மா, இந்த எஸ்டேட்டை விற்றுவிட்டு என்னிடம் பேசுங்கம்மா!” அறையைவிட்டு வெளியேற, மீனலோட்சனி அந்த இடத்திலேயே சரிந்து அமர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!