Rose – 15

images - 2022-06-14T143813.532-a8ff6807

Rose – 15

அத்தியாயம் – 15

யாழினியின் முதல்நாள் தமிழ் வகுப்பு. அமெரிக்கா நாட்டில் பிறந்து வளர்ந்தவளுக்கு ஆங்கில மொழியைக் கரைத்துக் குடித்தவளுக்கு தமிழை அரிச்சுவடில் இருந்து கற்றுத்தருவது என்பது சாதாரண விஷயம் அல்லவே!

ஒரு நோட் மற்றும் பேனாவுடன் ஸ்டைலாக வந்த யாழினி, தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தாள். மற்ற மாணவர்களுக்கு ஓரளவு பயிற்சி இருந்ததால், யாழினிக்கு மட்டும் தனியாக சொல்லித் தர தொடங்கினார் வைஜெயந்தி.

“யாழினி நம்ம முதலில் எழுத்துகளைப் பற்றி தெரிஞ்சிக்க போறோம். அது இருந்தால் தான் நம்ம பேசவும், எழுதவும் முடியும் ஓகே” ஆங்கிலத்தில் விளக்கம் தர, அவளும் சரியென்று தலையாட்டினாள்.

தன் முன் இருந்த ப்ரஜெக்டரில் தமிழ் எழுத்துகள் டிஸ்ப்ளே ஆக, “உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, உயிர்மெய் எழுத்துகள் 216, ஆயூத எழுத்து 1” வைஜெயந்தி எழுத்துகளின் வரிசையை விவரிக்க, “247 லெட்டர்ஸ்… ஓ மை காட்!” இரு கைகளாலும் தலையில் கைவைத்து அமர்ந்தாள் யாழினி.

அவளைத் தேற்றும் விதமாக, “இதுக்கே பயந்தால் எப்படி… இன்னும் நீ கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கும்மா” அவர் அடுத்த குண்டைத் தூக்கிப் போட, வைஜெயந்தி பேசும் தமிழ் புரியாமல் திருதிருவென விழித்தாள் யாழினி.

யாழினிக்கு ஒவ்வொரு எழுத்தையும் எழுத சொல்லி கொடுத்தார் வைஜெயந்தி. அவர் எழுத்துகளை உச்சரிக்கும்போது உன்னிப்பாக கவனித்து, அதை மனதில் பதிய வைத்தாள்.

முதல் நாளே, ‘ல,ள,ழ,’ என்பதில் தொடங்கி ‘ண, ந, ன’ மற்றும் ‘ர, ற’ என்பது எல்லாமே ஒரே உச்சரிப்பு வருவதாக சொல்லி முற்றிலும் குழம்பிப் போனாள். அன்றைய வகுப்புகள் முடிய, “நாளைக்கு இதை பிராக்டீஸ் செய்து பார்த்துட்டு வா” என அவளை அனுப்பி வைத்தார்.

அங்கே நடந்த விஷயத்தை தோழியிடம் பகிர்ந்த யாழினி, “ஐ கான்ட் மிரு! யூ நோ ஒன் திங்! இங்கிலீஸ் வெரி ஈஸி! ஒன்லி 26 லெட்டர்ஸ் தான்” எழுத்துகளைக் கண்டு பயந்தபடி கூறியவளை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தவித்தாள்.

அவளை மறுநாள் வகுப்பிற்கு அனுப்பியே தீர வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவள், “இங்கே பாரு! உன்னால் முடியாதுன்னு நீயே நினைக்காதே! நான் உனக்கு சொல்லித் தர்றேன்” ப்ரீ டைம் கிடைக்கும்போது, அவளுக்குப் புரியும்படி கற்றுத் தர தொடங்கினாள்.

அன்று வீட்டிற்குச் சென்ற யாழினி அவற்றை எழுதிப் பார்த்தபோதும், தமிழ் கற்றுக் கொள்வது அவளுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் அவள் இருக்கும் நாடு. அங்கே அனைவரும் ஆங்கிலத்தில் பேச, அவர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடியே பழகியிருந்தாள்.

திடீரென்று தமிழைக் கற்றுகொள்ள கஷ்டமாக இருக்க, மிருதுளா பேசும்போது முகபாவனைகளை வைத்து தமிழில் கற்றுக்கொள்ள முயன்றாள். சிலர் தன்னை முன்விட்டு பின்னே கேலி செய்வதையும் கவனித்தாள்.

அந்த எழுத்துகளை மனப்பாடம் செய்யவே, அவளுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலானது. அடுத்த கட்டமாக உறவு முறைகள் என்ற பெயரில், “அப்பா, அம்மா, அண்ணா, தம்பி” ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு அவளை தாவ வைப்பதற்குள் வைஜெயந்திக்கு போதும் போதுமென்று ஆனது.

இத்தனைக்கும் நடுவே ஒருநாள்கூட அவள் தமிழ் கற்க வரவில்லை என்று சொல்லாதே அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுக்கு முக்கிய காரணமே மிருதுளா தான். தன தோழிக்கு செல்போன் மூலமாக தமிழ் படங்களை ஒளிபரப்பினாள்.

தன்னுடன் பேசும்போது தமிழில் பேச வேண்டும் என்றவள், அடுத்தடுத்த நாட்களில் நியூஸ் பேப்பர் ரீடிங் முக்கியம். அதனால் பேப்பரில் வாசித்தும், தினசரி மறக்காமல் எழுதி பார்க்க வேண்டுமென்றும் வற்புறுத்தினாள்.

அன்று விடுமுறை நாள் என்பதால் லேப்டாப்பில் பஞ்சதந்திரம் தமிழ் மூவி போட்டுவிட்டு, யாழினியின் அருகே சென்று அமர்ந்தாள் மிருதுளா. அந்தப்படம் வெகு சுவாரசியமாக நகர, “ஐயோ எவ்வளோ பெரிய மாத்திர…” தேவயானி கூறினார்.

தமிழ் எழுத்துகளை மனதில் கொண்டு வந்த யாழினியோ, “ஐயோ தமிழ எவ்வளவு எழுத்து” திடீரென்று சொல்ல, இதை எதிர்பார்க்காத மிர்ய்துளா பக்கென்று சிரித்துவிட்டாள்.

“அப்படியே ஒரு கதை சொல்லு ராம்…” அவள் திரையில் சொல்ல, “அப்படியே தமிழை சொல்லி கொடு மிரு!” என்றாள் யாழினி.

அவள் செய்யும் சேட்டையைக் கண்டு மிருதுளா வயிற்றைப் பிரித்துக்கொண்டு சிரிக்க, “ராமண்ணா… ராமண்ணா…” என்று வீடே அதிரும் அளவுக்கு கத்தினாள் யாழினி.

“தேவயானி மாதிரி எவ்வளவு அழகாக ராமண்ணான்னு சொல்றா?!” மிருதுளாவோ வாயில் விரல் வைத்து வியக்க, வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய ரவீந்தர் மகள் தமிழைக் கொலை செய்வது பொறுக்கவில்லை.

“யாழினி என்ன இது? இந்த லட்சணத்தில் நீ தமிழ் கத்துக்கலன்னு யார் அழுதா?” என்றார்.

தன் தோழியின் விடாமுயற்சியைப் பாராட்டாமல் திட்டும் ரவீந்தர் மீது மிருதுளாவிற்கு கோபம் வந்தது. அதற்குள் நிமிர்ந்த யாழினியோ, “அப்பா இங்கே யாரும் இங்கிலீஷ் தவறாகப் பேசும்போது கிண்டல் செய்ய மாட்டாங்க. அந்த நபருக்கு புரியும்படி நிறுத்தி நிதானமாக பேசுவாங்க.” இடைவெளிவிட்டாள்.

யாழினி தடுமாற்றம் இல்லாமல் ஒரு வாக்கியத்தை பேசியதை வியப்பாக மிருதுளா பார்க்க, “ஆனால் தெளிவாக தமிழ் பேச தெரியல என்றாலும், நான் தவறாக பேசவில்லையே. அப்புறம் எதுக்கு என்னை திட்டுறீங்க?” கோபமாக கேட்க, ரவீந்தர் மகளை விழிவிரிய நோக்கினார்.

“அம்மாடியோ!” மிருதுளா வாய்மீது விரல் வைக்க, “குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்” திருக்குறளைக் கூறிய ரவீந்தரின் விழியோரம் கண்ணீர் கசிந்தது.

“யாழினி குட்டியை இவ்வளவு அழகாக தமிழ் பேச வைத்ததால், இன்னைக்கு ஈவினிங் நம்ம ரெஸ்டாரன்ட் போலாம். இன்னைக்கு அப்பாவோட ட்ரீட்” என்றவர் சந்தோசமாக கூற, அப்போதுதான் அவள் தமிழில் சரளமாக பேசியதை உணர்ந்தாள்.

பிறகு அவர் சொன்னதைக்கேட்டு தோழிகள் இருவரும், “ஹுரே” என்று கத்தி ஆர்பரிக்க தொடங்கினர்.

அன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்க, யாழினி – மிருதுளா மற்றும் ரவீந்தர் மூவரும் அமர்ந்தனர்.

ஒரு பேரர் மசால் தோசை எடுத்து வர, “நெய் மணக்கும் கமகம தோசை! அதுக்கு சைட் டிஷ் சாம்பார், புதினா துவையல், காரசட்னி” அவள் கூறுவதைக் கேட்டு, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்தின் முகம் மலர்ந்தது.

தன் மகள் தமிழில் உரையாடுவதைக் கண்டு வியந்தவர், அதற்கு காரணமான மிருதுளாவை நன்றியுடன் பார்த்தார். அடுத்தடுத்து வந்த நாட்களில் மகளிடம் தமிழில் பேசினார்.

தந்தையின் வாயிலாக தமிழ் மீது இருந்த ஆர்வம் இன்னும் அதிகரிக்க, இந்திய நாட்டின் கலாச்சாரம், பாரம்பரிய உடை, உணவு முறைகள், பழக்கவழக்கங்கள் என்று அனைத்தையும் கற்றுக்கொள்ள தொடங்கினாள்.

நாட்கள் மாதங்களாக மாறி வருடங்களாக உருண்டோடியது.

***

தன் மகன் விலகல் வருத்தத்தைக் கொடுத்தபோதும், ஒருநாள் சரியாகுமென்ற எண்ணத்துடன் கடந்து செல்ல துவங்கினார். வெகுவிரைவில் தொழில் என்னும் மிகப்பெரும் சுழல் மீனாவை உள்ளிழுத்துக் கொண்டது.

இருவருக்கும் நடுவே உண்டான விரிசல் நாளுக்குநாள் வளர்ந்து, பெரிய பிளவையே ஏற்படுத்தியது. தந்தையின் பிரிவைவிட தாயின் விலகல் தான் அவனை வெகுவாக பாதித்திருந்தது. தேயிலை தோட்டமும், டீ எஸ்டேட் இரண்டும் தான், தாயை தன்னிடமிருந்து நிரந்தரமாக பிரித்தது என்ற எண்ணம், அவன் நெஞ்சினில் ஆழமாக வேரூன்றியது.

அந்த வயதிற்கு உண்டான கம்பீரமான அழகுடன் வலம் வந்த யாதவின் மனதில், அமெரிக்கா நாட்டின் கலாச்சாரத்தின் மீதான பிடிப்பு அதிகரித்தது. தன் நண்பர்களுடன்இணைந்து பள்ளிக்கூட பெண்களை ஆசைதீர சைட் அடித்தாலும், எந்தவொரு பெண்ணும் அவர்களின் மனக்கதவைத் தட்டவில்லை.

பண்ணிரெண்டாம் வகுப்பின் இறுதி தேர்வுகள் இனிதே முடிய, அதுவரை பள்ளியை சிறைசாலையாக நினைத்திருந்த மனமோ சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்தது. தன்னுடைய மேல்படிப்பை அமெரிக்காவில் தொடர நினைக்க, அவனுக்கு இருக்கும் நண்பர்களை இழக்கவும் மனம் வராமல் தடுமாறினான்.

அன்று விடுமுறை என்பதால் யாதவும் மட்டும் தனியாக பொட்டானிக்கல் கார்டன் சுற்றிப் பார்க்க சென்றான். அங்கிருந்த பூக்களின் அழகு அவனின் மனதை வெகுவாகக் கவர்ந்தது.

தன்னருகே யாரோ வந்து நிற்கும் ஆரவாரம்கேட்டு சட்டென்று திரும்ப, “உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு யாதவ். ஐ லவ் யூ” பெண்மைக்கே உரிய தடுமாற்றத்துடன் தன் காதலை வெளிபடுத்தினாள் நேத்ரா.

அவளைப் பார்க்கும்போது எந்தவிதமான உணர்வும் தோன்றாமல் போகவே, ‘காதல் என்ற வார்த்தை உச்சரிக்கும்வேளையில் உள்ளத்தில் மின்னல் வெட்டும். கண்ணோடு கண்பார்க்கும் போதே, இதயத்திற்குள் சில்லென்று சாரல் வீசும் உணர்வு வரும். அதை இலகுவாக சொல்லும் இவளை என்ன செய்வது?’ யோசனையுடன் மெளனமாக நின்றிருக்க, அவனது பதிலை ஆவலோடு எதிர்பார்த்தது பெண்ணின் மனம்.

“சாரி! எனக்கு லிவ்விங் டூ கெதர் லைப் வாழத்தான் ஆசை! எனக்கு அதுமட்டும் இல்லாமல் காதல், கல்யாணம் என்ற சிலந்தி வலைக்குள் சிக்கி உயிரைவிட நான் தயாராக இல்லை.” என்றான்.

அவளது விழிகளில் கண்ணீர் பெருகிட, “ஏன் யாதவ் உனக்கு காதல் மீது இவ்வளவு வெறுப்பு? கிட்டத்தட்ட இரண்டு வருடமாக உன்னையே தான் நினைச்சிட்டு இருக்கேன்” அவள் கூற, அவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

நேத்ராவின் முகத்தை நிதானமாக ஏறிட்ட யாதவ், “பிடிக்கும் வரை சேர்ந்து வாழ்வது, பிடிக்கலன்னா அவரவர் வழிகளில் பிரிந்து செல்வது என்பாத்து என்னோட கொள்கை. மனைவி, குடும்பம், குழந்தை என்ற கமிட்மென்ட் எல்லாம் எனக்கு ஒத்துவராது” தோளைக் குலுக்கியவனின் பதிலில் மனதளவில் திடுக்கிட்டுப் போனாள்.

அறியாத வயதில் விதையாக விழுந்த விஷயம், இப்போது அவன் மனதில் விருச்சமென்று வளர்ந்து நிற்பது அவருக்கு கவலையை ஏற்படுத்த, “ஒருவேளை உனக்கு காதல் வந்தால்…” வேண்டுமென்றே கேட்டு வைத்தாள் நேத்ரா.

“எனக்கு காதல் வர வாய்ப்பே இல்ல!” யாதவ் உறுதியாகக் கூறி முன்னே செல்ல, நேத்ராவிற்கு தான் பைத்தியம் பிடிப்பதுபோல இருந்தது.

காதல் என்பது இரு உள்ளங்களுக்கு நடுவே நிகழும் உணர்வுகளின் அழகிய சங்கமம். அந்த உணர்வைக் கடந்து வராத மனிதர்களே இல்லை. ஆனால் அந்த உணர்வை தவறாகப் புரிந்துகொண்டு வாழ்பவர்கள், வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம்.

அதேபோல தன் உணர்வும் தவறானது என்ற முடிவிற்கு வந்த நேத்ரா, “தேங்க்ஸ் வெளிப்படையாக பேசியதற்கு!” என்று சொல்லி அவனைவிட்டு விலகிச் சென்றாள். அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கைகட்டி பறந்தது.

காலைப்பொழுது அழகாக புலர்ந்திட, உலகை ஆளுமை செய்ய கிழக்கில் இருந்து புறப்பட்டான் பகலவன். காற்றுடன் கலந்திருந்த பனி வெளிச்சம் கண்டு மெல்ல விலகிச் செல்ல, குளிரில் பூத்திருந்த மலர்களை மெல்ல தொட்டு ரசித்தான் யாதவ்.

அன்று ரிசல்ட் என்ற பதட்டம் சிறிதுமின்றி அமைதியாக தோட்டத்தில் உலாவிய மகனை வேடிக்கைப் பார்த்தபடி செடியில் பூவைப் பறித்துக் கொண்டிருந்தார் மீனா.

அவன் வீட்டிற்குள் செல்ல நினைக்கும்போது, “உன்னிடம் கொஞ்சம் பேசணும்” மீனாவின் குரல் அவனைத் தடுக்க, என்ன என்பதுபோல புருவம் உயர்த்தினான் மைந்தன்.

தன் கையில் இருந்த பூக்கூடையை சிமிண்ட் பெஞ்சினில் வைத்துவிட்டு, “இங்கேயே படிக்க போகிறாயா?” அவனின் பதிலை யூகித்தவாறே கேள்வியைத் தொடுக்க, அவன் முகத்தில் கடுமை பரவியது.

“நான் எடுத்த சைன்ஸ் க்ரூப்பிற்கு ஏற்றபடி டாக்டருக்கு தான் படிக்க போறேன்!” தன் முடிவினைத் திட்டவட்டமாக அறிவித்தான் மகன்.

பத்தாம் வகுப்பில் சைன்ஸ் க்ரூப் எடுக்கும்போதே, தன்மீதான வெறுப்பின் அளவை புரிந்து கொண்டாள். அவன் டாக்டருக்கு படிக்க விரும்புவதை வைஜெயந்தி மூலமாக அறிந்துக்கொண்டு, அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவனை நிதானமாக ஏறிட்ட மீனாவோ, “எங்கே படிக்க விருப்பம்?” என்ற தாயை இமைக்காமல் நோக்கிய யாதவ் பெருமூச்சுடன், “அமெரிக்காவில் படிக்க போறேன்” என்றான் எரிச்சலோடு.

“அதை இங்கேயே படிக்க வேண்டியதுதானே?” என்றவரின் பார்வையில் இருந்தது என்னவென்று புரியாதபோதும், அவரின் கேள்விக்கு பொறுமையாகவே பதில் தந்தான்.

“என் படிப்பை எங்கே படிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். பணத்தைக் கொட்டி இவனை வெளிநாடு அனுப்பணுமா என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். எங்கப்பா என்பெயரில் போட்ட பணம் அளவுக்கு அதிகமாகவே இருக்கு. அதில் என் படிப்பு செலவை பார்த்துக் கொள்வேன்” கோபத்துடன் பேசிவிட்டு நகர நினைக்க, “ஒரு நிமிஷம்” என்று அவனைத் தடுத்தார் மீனா.

தன் மகனின் எதிர்காலம் பற்றிய எண்ணத்துடன் கணவன் போட்ட தொகையைவிட இரு மடங்கு அந்த அக்கௌண்டில் டெப்பாசிட் செய்து வைத்திருந்தார் மீனலோட்சனி.

“உன்னை எதற்காகவும் வற்புறுத்த மாட்டேன் யாதவ். உன்னோட மேல்படிப்பை உன் விருப்பபடி ராமோடு தொடர என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்” ஒரு தாயாக அவனை ஆசிர்வதித்து அங்கிருந்து நகர்ந்துவிட, யாதவ் தன்னை மறந்து சிலையாகி நின்றான்.

பிள்ளையின் விருப்பமே, தனது சந்தோசம் என நினைத்த மீனாவும் அவனை எதற்காகவும் வற்புறுத்தவில்லை. தன் கணவன் விட்டுச் சென்ற தொழிலை வெற்றிகரமாக நடத்தியவர், நாளை தன்னால் இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்ய முடியவில்லை எனில் விற்றுவிட முடிவெடுத்தார்.

அவர் சொன்ன மகிழ்ச்சியான தகவலைக் கேட்டு துள்ளிக்குதித்து யாதவிற்கு ரிசல்ட் வர, அதில் அதிக மதிப்பெண் எடுத்து பாஸாகி இருந்தான். அமெரிக்கா செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகன் செய்ய, இனி தள்ளி நின்று கூட பார்க்க முடியாதே என்ற வருத்தத்தில் உழன்றார் மீனா.

அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் செல்ல, யாதவை வழியனுப்பி வைக்கும் நாளும் வந்தது. அவனுக்கு விருப்பம் இல்லை என்றபோதும் கோவை விமான நிலையம் சென்றார் மீனா.

இரண்டடி எடுத்து வைத்த யாதவ் திரும்ப ஓடிவந்து, “அம்மா போயிட்டு வருகிறேன்” கன்னத்தில் முத்தமிட்டு விலகிச் செல்ல, தாயின் மனம் சந்தோசத்தில் ததும்பிட விழிகளில் கண்ணீர் அருவியாக பெருகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!