sippayinmanaivi 12
sippayinmanaivi 12
இருளிர் கூடல்
முகிலன் சித்திரையிடம் நடந்த அனைத்தையும் சொன்னான். சித்திரை அதை பொருட்படுத்தவில்லை ஆனால் இதற்கான பதிலை மலையமான் சொல்லியே ஆக வேண்டுமென்று மனதில் நினைத்துக்கொள்கிறாள். அடுத்த நாள் காலையில் முக்கிய ஊர் தலைவர்கள் கூடி இருந்தனர், மலைநாடுகள் சார்பாக சித்திரை இருக்கையில் இருந்தாள், கூட்டத்தில் சிறு சலசலப்பு, மலையமான் அதை கண்டுகொள்ளாதது போல் நின்றிருந்தான், இது போன்ற சலசலப்புகள் வரும் என்று எச்சரித்தேன் அல்லவா என்பது போல் முகிலனை பார்த்தான் மலையமான். மலையமான் சிறிது நேரத்தில் சலசலப்பை அடக்கினான். ‘இதுவே முதல் முறை ஒரு பெண் ஊரின் தலைவராக அவையில் இருப்பது. நாமும் நாகர் போல் அனைத்து மக்களையும் அவர்கள் குல வழக்கங்களையும் ஏற்று நடப்போம். மலை நாடுகளில் தலைவிகள் தான் தலைமை’ மலையமான் சொன்னான். கூட்டத்தில் அனைவர் முகத்திலும் குறு நகைப்பு ஆனால் அதையும் பொருட்படுத்தவில்லை சித்திரை. ‘அடுத்த திங்களில் தனி நாடாக பிரியும் பெருங்கலூர் அரசில் தலைவராக நான் பொறுப்பேற்க உள்ளேன்.’ மலையமான் சொன்னான். கூட்டத்தில் ஆரவாரம் பெருகியது. ‘முகிலன் நம் தளபதி’ என்று அறிவித்தான் மலையமான். ஆரவாரம் குறையாமல் இருந்தது. ஏற்கனவே படையில் மிகச் சிறந்த வீரனாக பல போர்களில் தன்னை நிலைநாட்டிக்கொண்ட முகிலனை அனைவருக்கும் பிடித்திருந்தது அதுவே எதிர்பார்க்கப்பட்டது என்று அவர்களில் ஆரவாரங்களில் தெரிந்தது. ‘இன்னும் சில தினங்களில் ஆருடம் கேட்டு பச்சைமலையிலிருக்கும் பழைய கடவுள் நீலியை பார்க்கப்போகிறோம்’ மலையமான் சொல்லிமுடித்தபின்னர் கூட்டம் கலைந்து சென்றது அவரவர் ஊருக்கு செல்ல தயார் ஆக வேண்டுமென்று விரைந்தனர். மலையமானும் சித்திரையும் மற்றும் முகிலனும் மட்டுமிருந்தனர்.
மலையமானை அருகில் அழைத்தாள் சித்திரை ‘சொல் சித்திரை’. ‘எங்கள் ஊர் சார்பாக நா இருப்பது உங்கள் இடையூறாக இருந்தாள் நீங்கள் எங்களை இணைத்துக்கொள்ளவேண்டாம் நாங்கள் நாகருடனே இருக்கிறோம்’ சித்திரை சொன்னாள். ‘அவ்வாறு இல்லை பெருங்கலூர்க்கு முகிலனின் பங்கும் மலைநாடுகள் பங்கும் மிகப் பெரியது. இந்த நகர நாகரிகம் சிறு குழப்பத்தில் இருக்கிறது. இதை பொருட்படுத்தாதீர் சித்திரை’ மலையமான் சொன்னான். சித்திரை புன்னகையை மட்டும் பதிலாகச் சொல்லி சென்றாள்.
சித்திரை, முகிலன் மற்றும் கதிரவன் பெருங்கலூரிலிருந்து இருளிர் காட்டிற்கு செல்லும் பயணத்தை தொடங்கினர். மெல்லிய ஆடை அணிந்தவர்கள் எவருமில்லா பெருங்கலூர் நகரை தாண்டி பச்சைமலைக்கு கீழ் உள்ள சமதளத்தில் புரட்டாசி திங்கள் என்பதால் தானியங்களின் பட்டமும் வெங்காய பட்டமும் ஆரம்பமாகி இருந்தது. நிலத்தை விட்டு சில அடிகள் மட்டும் துளிர்விட்டிருந்தது. ‘கதிரவன் இந்த ஆடி திங்களில் மாரியின் அளவு குறைத்திருந்ததால் இப்பொழுது தான் பட்டம் ஆரம்பித்திருக்கிறது, மாரி சரியாக பெய்த்திருந்தால் ஆடி திங்களில் ஆரம்பமாகியிருக்கும் விதைப்பதற்கான பட்டம். கதிரவனும் அதை கூர்ந்து கவனித்தவாறே வந்துகொண்டிருந்தான். முகிலன் ஏதோ எண்ணத்தில் சிறிது பின்வாங்கி வந்துகொண்டிருந்தான். முகிலன் சித்திரைக்கு சைகை செய்தான், குயில் போல் ஒளி எழுப்பினான். சித்திரை முகிலனை பார்த்தாள் புரவியை நிறுத்தினாள். காதுகளை காட்டி சைகை செய்தான். சித்திரை வாளை வெளியில் எடுத்தாள், புரவியை விட்டு கீழ் இறங்கினாள். முகிலனும் கதிரவனும் குத்தீட்டியை எடுத்தனர். எந்த சலசலப்பும் இல்லை, பொறுமையாக ஒரு மரத்தின் கீழ் கதிரவன் நகர்ந்தான் சித்திரை கையை காட்டி நிறுத்தினாள். அப்படியே சில மணி துளிகள் நின்றிருந்தனர். சித்திரை ஓங்கி நிலத்தில் ஒரு தட்டு தட்டினாள் கரும்பு காட்டினுள் இருந்து சிறுத்தை அவள் தலைக்கு பின்னல் பாய்வதை உணர்ந்தாள் சித்திரை. திரும்பி பார்க்கும் சிறு பொழுதில் சித்திரைக்கு மிக அருகிலிருந்தது. வாளை வான் நோக்கி வீசினாள் சித்திரை. சிறுத்தையின் நகங்கள் சித்திரை கன்னத்தில் கீறியிருந்தது. வாள் சிறுத்தையின் கீழ் பகுதியில் நுழைந்து வாளில் தொங்கியவாறு இருந்தது சிறுத்தை.
கதிரவன் இந்த சிறுத்தையை இருளிர் காட்டிற்கு எடுத்து செல்லலாம் என்றான். ‘இல்லை கதிரவா இதன் இறைச்சி மனதிற்கு நிறைய மிருகங்கள் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும் நாம் இங்கிருந்து விரைவாக செல்லவேண்டுமென்று சொன்னாள் சித்திரை. புரவிகள் காற்றின் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. கீறிய இடங்களில் காற்றுப்பட்டு எறியத் துடங்கியது சித்திரைக்கு. கதிரவன் மறைந்து கீழ் வானம் தங்கம் போல் மின்னிக்கொண்டிருந்தது. இருளிர் காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தனர். ஒரு காத தூரத்திற்கு சென்ற பின்னர் இருளிர் எல்லைக்குள் வந்துவிட்டதை உணர்த்தும்விதமாக இரு இருளிர் வீரர்கள் பாறையிடுக்கில் மறைந்திருந்தனர்.
‘ஓய்’ என்று முகிலன் புன்னகையுடன் அழைத்தான். பழக்கமான அந்த குரலை கேட்டு மறைந்திருந்த வீரர்கள் மகிழ்ச்சியாக வெளியில் ஓடிவந்தனர். முகிலனை இருக்க அணைத்து தூக்கினார்கள். சித்திரையின் முகத்தில் இனம்புரியா மகிழ்ச்சி அவர்களைக் கண்டு கதிரவனும் மகிழ்ச்சி அடைந்தான். ‘என்ன தோடி ஒரே ஆரவாரமாக இருக்கிறது’ சித்திரை கேட்டாள். ‘தாயி நம்ம இருவது வீட்டுகாரங்க பையன் கூர்முகனுக்கும் நாப்பது வீட்டுக்காரங்க பொண்ணு அலரிக்கும் முடிச்சிபோடுகிறார்கள், இன்று இரவு அலரிக்கு தலைவர் தலைமையில் நம்ம அம்மன்கிட்ட இருந்து “இடங்கொடு” நடக்கவிருக்கிறது’ தோடி சொன்னான். வந்தவர்களை வழிஅனுப்பிவிட்டு அந்த இரு வீரர்களும் இருளிர் காட்டிற்கு காவலாக மீண்டும் மறைந்து நின்றனர்.
முதலில் சில குடிசைகள் இருந்தது அங்கிருந்தே எல்லைத் தோரணங்கள் தொங்க விடப்பட்டிருந்தது மக்கள் கூடி சித்திரையையும், முகிலனையும் மற்றும் கதிரவனையும் வரவேற்றனர். சிறிது தூரம் சென்றதும். பல குடிசைகள் இருந்தது அதன் நடுவில் பெரிய குடிசை அதை நோக்கி சென்றார்கள் மூவரும். இரண்டு அடுக்கு குடிசை தரைத்தளத்தில் பெரிய அறை அதில் பிரிவுகள் இல்லை. ஏணி போல படிகள் மேல் தளத்திற்கு சென்றது. அதில் ஏறிச் சென்றனர். தலைவர் ஒரு மூங்கில் இருக்கையில் இருந்தார், மேல் ஆடை இல்லாத பெரிய முலைமார்கள் மற்றும் இடையில் இல்லை சிறுஉடை, வயிறு லேசாக பெருத்திருந்தது, கழுத்தில் கூழாங்கற்களால் ஆன இரு மாலைகள். கையில் ஒரு காட்டு பூனை மற்றோரு கையில் தேறல் கிண்ணம். காதில் சில வளையங்கள் அதில் ஒன்று காது மடல்களை பிரித்து உள்ளூர தைக்க பற்றிருந்தது. கையில் ஒரு முத்து மாலை அணிந்திருந்தாள்.
‘தலைவரே’ சித்திரை புன்னகைத்தவாறு மாரி முன் மண்டியிட்டாள். ‘நீயும் ஒரு ஊருக்கு தலைவர் தான் மண்டியிட வேண்டாம்’ மாரி சொன்னாள். ‘மாறும் நாட்களில் மாறா சில இருப்பது நல்லது தான்’ சித்திரை சொன்னாள். கதிரவன் திகைத்து போய் நின்றான். பெண்கள் ஆளுமையில் இருப்பது புதிதல்ல ஆனால் தலைவராக இருக்க வேண்டுமென்றால் உடல் வலிமையையும் மன வலிமையையும் இருந்தாக வேண்டும். அடுத்த தலைவராக வரவிரும்புபவர் இப்பொழுது இருக்கும் தலைவருடன் போட்டி போட வேண்டும் அதன் முடிவில் வெற்றி பெறுபவரே தலைவராக நீடிப்பதோ அல்லது புது தலைவரா என்ற முடிவெடுக்கப்படும். ஆனால் இருளிர் பெண்களை பார்த்தாள் மிகத் திடமாக இருக்கிறார்கள் யாரும் போட்டிபோடவில்லையா இல்லை யாரு போட்டி போட விருப்பமில்லையா என்று தான் கதிரவன் திகைத்திருந்தான். ‘கதிரவா’ மாரி அழைத்தாள். ‘என்னுடைய பெயர் உங்களுக்கு தெரியுமா?’ கதிரவன் கேட்டான். ‘தலைவராக இருப்பதற்கு வீரம் மட்டும் போதாது, இந்த காட்டிற்க்கே தாயாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளைகள் பற்றியும் தெரியவேண்டும். அவர்கள் குளம் பெறுக உதவியாய் இருக்கவேண்டும்.’ மாரி சொல்லி சிரித்தாள், மாரியின் சிரிப்பு கணீரென அனைவரின் காதுகளில் சிறிது நேரத்திற்கு இசைத்துக்கொண்டிருந்தது. மாரியின் அருகில் இருக்கவே கொஞ்சம் அச்சமாக தான் இருந்தது கதிரவனுக்கு.
கதிரவன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்தது. மணப்பெண்ணான அலரியை ஊரில் வயது முதிர்ந்த பெண்கள் அலங்காரம் செய்தனர். அவளின் முகத்தில் வெள்ளை கோடுகள் இட்டனர், தலை முடியை பின்னி சிறு பூக்களை வைத்தனர். இருளிர் வழக்கப்படி பனை ஓலை மலை அணியவைத்தனர், கைகளிலும் கால்களிலும் பூ வளையங்கள் போட்டுவித்தனர். தொப்புளில் அதை சுற்றி வெள்ளை புள்ளி ஒன்று வைத்து அதை சுற்றி நீள்வட்ட வளையங்களை வரைந்தனர். கருப்பு நிற கீழ் ஆடை அணிவித்தனர். வேர்கள் கட்டை கட்டையாய் வெளியில் தெரிய கனமாக இருக்கும் ஆலமரம் ஒன்றில் பல விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் நடுப்பகுதியில் ஒரு கல் இருந்தது. அந்தக் கல்லில் ஒரு நிலவு ஒரு கதிரவன் மற்றும் பல விண்மீன்கள் பொறிக்கப்பட்டிருந்தது. கல்லின் கீழ் பகுதியில் இரு மனிதர்கள் போல் சில கோடுகள் கொண்டு கீறப்பட்டிருந்தது. அந்தக் கல்லில் மஞ்சளை பூசினார்கள் பொறிக்கப்பட்டிருந்தவை தனியாக தெரிந்தது. பெண்கள் ஆண்கள் என அனைவரும் கொலவியிட்டனர். மணப்பெண்ணை அழைத்து வந்தனர், ஆனால் அந்த பெண்ணின் வயிறு இயல்பாக இல்லை பேறுகாலபெண்ணின் வயிறுபோல் இருந்தது. இருளிர் வழக்கப்படி முதலில் பெண்ணை கருத்தரிக்க வைக்கவேண்டும் அதன் பின்னர் தான் திருமணம். ஒரு ஆணுக்கு மூன்று முறை வாய்ப்பளிக்கப்படும் அதில் ஒருமுறை கூட பெண் கருத்தரிக்கவில்லை என்றால் காலம் முழுவதும் திருமணம் ஆகாமல் தான் இருக்க வேண்டும். அவர்கள் புலிகாடு சிறைக்கு காவல் ஆளாக அனுப்பப்படுவார்கள். கூர்முகன் அலரியை கருத்தரிக்க வைத்ததால் ஐந்து மாதம் கழித்து திருமணம் நடக்கவுள்ளது. நாளை மீண்டும் ஒரு போட்டி உள்ளது. கூர்முகன் காட்டிற்கு சென்று சில அம்புகளை புதிதாக செய்து வரவேண்டும் அதுமட்டுமல்லாமல் அந்த அம்பை வைத்து ஒரு விலங்கை வேட்டையாட வேண்டும். புதிதாக தயாரித்த அந்த அம்பையும் வேட்டையாடப்பட்ட விலங்கையும் கூர்முகன் அலரியிடம் தரவேண்டும் அதன் பின்னர் அலரி கூர்முகனை ஏற்கவேண்டும் அப்பொழுதுதான் திருமணம் முடிந்தது என்று முடிவு செய்யப்படும். ஒரு வேலை கூர்முகனின் அம்பு அலரிக்கு பிடிக்கவில்லை என்றால் அந்தக் குழந்தையும் புலிகாடு சிறைக்கு காவல் ஆளாக அனுப்பப்படும். பெரும்பாலும் இதுபோன்று நடந்ததில்லை எந்த குழந்தையையும் புலிகாடு சிறைக்கு அனுப்பியதில்லை.
அலரியை அந்த ஆலமரத்தின் கீழ் இருக்கவைத்தனர், அலரியை சுற்றிப் பெண்கள் வளையமாக மண்டியிட்டு ஒருவர் கையை மற்றோருவர் கோர்த்துக்கொண்டனர், முதலில் ‘ஓ….’ என்று ஓலமிட்டனர் அதன் பிறகு சிறு பறை இசைக்கப்பட்டது கூட்டு பாடல் பாட ஆரம்பித்தனர் அந்த பெண்கள்.