தீண்டவே ஃபைனல்

சில நேரங்களில் அப்படி தான்.

நம் உயிருக்கு உயிரானவரின் கண்ணீரைக் கண்டு அடக்கி வைத்த கண்ணீர் உடைப்பெடுத்துவிடும்.

அப்படி தான் மிதுராவின் விழியில் இருந்த வலி, தீரனின் விழிநீரை உடைத்தது.

கலங்கிய கண்களுடன் “மிது” என்றவனை அந்நிய பார்வைப் பார்த்தாள்.

அதைக் கண்டு நொறுங்கியவன், “ப்ளீஸ் மிது, அப்படி யாரோ மாதிரி பார்க்காதே. என்னாலே தாங்க முடியல” என்றான் வேதனை குரலில்.

“நீ தானே தீரன், என்னை இப்படி பார்க்க வைச்ச.என்னை விட்டுப் போகனும்ன்றதுக்காக நீ இதுக்கு முன்னாடி சொன்ன காரணத்தை எல்லாம் என்னாலே பொறுத்துக்க முடிஞ்சது. ஆனால் நீ கடைசியா சொன்ன காரணம் என்னை உடைச்சு போட்டுடுச்சு தீரா. எப்படி என்னையும் ராஜ்ஜையும் அப்படி நினைக்கலாம்? அப்போ நீ என்னை  சந்தேகப்பட்டு இருக்க ரைட்” என்றவளுடைய வார்த்தைகள் சாட்டையாய் சுழல இவன் இதயத்தில் பல சவுக்கடிகள்.

“மிது, நான் உன்னை சந்தேகப்படலடா. ராஜ்க்கு உன்னை ரொம்ப  பிடிக்கும் ஒரு வேளை அது காதலா மாறுனா இடையிலே நான் நந்தியா நிற்கக்கூடாதுனு தான் விலகி விலகி ஓடுனேன். பட் ராஜ் வேற ஒரு பொண்ணை காதலிக்கிறானு தெரிஞ்சதும் நான் போட்டிருந்தா போலி முகமூடியைக் கழட்டி எறிஞ்சுட்டு உன் கிட்டே ஓடி வந்துட்டேன் மிது. உன்னைக் காதலிக்கிறதை ஒத்துக்கிட்டேன். ஆனால் மறுபடியும் அந்த மெயில் ஐடி விஷயத்தாலே குழம்பி தப்புப் பண்ணிட்டேன்டா.” என்றவனை அவள் கோபத்தோடு முறைத்தாள்.

“தீரா நான் பண்ண பெரிய தப்பு, இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஹேப்பி நியூ இயர்னு விஷ் பண்ணி மெயில் பண்ணது தான். அந்த ஒரு மெயிலாலே எவ்வளவு கஷ்டப்படனுமோ அவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன்” என்றாள் வருத்தமாக.

“மிது,என் மனசுலே ஆழமா பதிஞ்சுப் போனது உதிரத்துடிக்கும்பூன்ற வார்த்தை தான். அவங்க பகிர்ந்த பதிவு என் மனசையும் ராஜ் மனசையும் ரொம்ப பாதிச்சுடுச்சு. பட் நீ அனுப்பின மெயில் ஐடியோட நேம் கூட நான் பார்க்கல மிது. பத்தோட பதினொன்னா வாசிச்சுட்டு போயிட்டேன்” என்றவனை கண்களில் கனலைப் பொருத்திப் பார்த்தாள்.

“சூப்பர் தீரா. அப்போ நான் உனக்கு பத்தோட பதினொன்னாவது ஆளு ரைட்.” என்றவளை சட்டென்று அணைத்தவன்

“நோ நோ மிதுமா. நீ பத்தோட பதினொன்னு இல்லை. எனக்கே எனக்காக படைக்கப்பட்ட ஒரே ஒருத்தி” என்று சொல்லி மேலும் இறுக்கி அணைத்தவனை வேகமாக  தள்ளிவிட்டாள்.

“ஏன்டா அப்படி உனக்கே உனக்காக படைக்கப்பட்ட ஒருத்தியை தான் இவ்வளவு அசால்டா விட்டுக் கொடுப்பியா?” என்றுக் கேட்டவள் சுள்ளென்று அவன் கன்னத்தில் ஒரு அறைவிட அது வரை கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தவனின் இதழ்களில் இப்போது புன்னகை மொட்டு.

தனக்கு சொந்தமானவர்களின் மீது மட்டும் தான் மனம் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும்.

ஆக மிதுரா என்னை வெறுக்கவில்லை கோபம் மட்டுமே கொண்டிருக்கிறாள்!

அடி வாங்கிய கன்னத்தை மிருதுவாக வருடி ரசித்தவன் இன்னொரு கன்னத்தையும் காட்ட அதிலும் மிதுரா ஒன்று வைத்தாள்.

சுகமாக அதை வாங்கிக் கொண்டவன் தலையை குனிந்து நிற்க அவளும் புரிந்துக் கொண்டு நங்கென்று கொட்டினாள்.

வேகமாக திரும்பி தன் முதுகை காண்பிக்க, அதிலும் பளாரென்று ஒன்று வைத்துவிட்டு நிமிர்ந்தவளோ கோபத்தில் படபடக்க துவங்கினாள்.

“ஏன்டா லூசுப்பையலே நீயா ஏதாவது நினைச்சுக்கிட்டு நீயா ஏதாவது முடிவு பண்ணுவியா? நீ என்ன ப்ரேக்-அப் சொல்றது? நான் இப்போ ப்ரேக்-அப் சொல்றேன். லெட்ஸ் ப்ரேக்-அப். லெட் எண்ட் திஸ். நான் உனக்கு வேண்டாம்.. நாம பிரிஞ்சுடலாம்” என்று அவன் சொன்ன வார்த்தைகளையே திரும்பி அவனுக்குப் படித்து காண்பித்தாள்.

ஆனால் அவனோ சிறிதும் அசராமல்
“ஓகே மிதுமா. நாம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்.” என சொல்ல ரௌத்திரமான முறைப்பு அவளிடம்.

“ப்ரேக்-அப் பண்ணிட்டு மறுபடியும் முதலிலே இருந்து காதலிக்கலாம்னு சொல்ல வந்தேன் மிதுமா.”

“அடேய் தீரா ஒரு தடவை உன்னை காதலிச்சு நான் பட்டது போதாதா? இன்னொரு தடவை அதே தப்பை நான் பண்ணமாட்டேன்” முடிவாக சொன்னவளை வருத்தத்தோடு பார்த்தான்.

“சாரி மிது. ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங் பெரிய சம்பவம் பண்ணிடுச்சு.ராஜ் மறுபடியும் காயப்படக்கூடாதுன்றது மட்டும் தான் என் மனசுலே இருந்ததுடா. உன்னை விட்டு விலகி ஓடும் போதும் உன்னை வேண்டாம்னு சொல்லும் போதும் எவ்வளவு காயப்பட்டேன் தெரியுமா?”

“நான் காதல் முக்கியமா இல்லை நட்பு முக்கியமான்னு சில்லியான கேள்வி எல்லாம் கேட்க மாட்டேன் தீரா. நீ ராஜ்ஜோட நட்புக்கு மதிப்பு கொடுத்தது எனக்கு வருத்தமே இல்லை. ஆனால் ஏன் என் காதலுக்கு மதிப்பு கொடுக்காம போன?” என்றவளது கேள்வி கூர்மையாய் விழ அவனிடம் பெரும் மௌனம்.

“நீ என்னையும் என் காதலையும் எவ்வளவு காயப்படுத்தி இருக்க தெரியுமா? எப்படிடா அது ஆறும். அப்படி ஆறுனாலும் அந்த தழும்பு இருந்து மனசை உறுத்திக்கிட்டே இருக்குமே” என்று கேட்டவளை  ஆற்றுப்படுத்தும் வழி அறியாது நின்றான்.

ஒரு சமாதானத்தில் அடங்கிவிடக்கூடியது அல்ல மிதுராவின் ஆதங்கமும் வருத்தமும் என்று உணர்ந்தவனுக்குள் நிர்கதியாய் நிற்கும் நிலை.

அவனை திரும்பியும் பாராமல் வெளியே சென்றவள் வேகமாய் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

மிதுரா மட்டும் தனியாக வந்ததைக் கண்ட ராஜ், வேகமாக மீட்டிங் ஹாலிற்குள் சென்றான். அங்கே தீரன் ஒளியிழந்த கண்களோடு மௌனமாய் நின்றிருந்தான்.

வேகமாக அவன் அருகில் சென்றவன் “மிதுரா இன்னும் சமாதானம் ஆகலையா?” என்றுக் கேட்க உதட்டைப் பிதுக்கினான் தீரன்.

“மிதுரா இன்னும் சமாதானம் ஆகாததைப் பார்த்தா உங்களுக்குள்ளே பெரிய பிரச்சனை நடந்திருக்குனு புரியுதுடா.  நீ எந்த ரீசனாலே ப்ராப்ளம் வந்ததுனு சொல்லு. நான் மிதுராவை சமாதானப்படுத்த ட்ரை பண்றேன்” என ராஜ் கேட்க தீரனிடம் திணறல்.

எப்படி சொல்வான் அந்த ப்ரச்சனையை தன் நண்பனிடம்?

தலையாட்டி மறுத்த தீரன் “இல்லைடா, அது பெரிய பிரச்சனை தான். ஆனால் சரி பண்ண முடியாத பிரச்சனையில்லை. மிது என்னை வெறுக்கல, அவளுக்கு என் மேலே கோபம் மட்டும் தான். சீக்கிரமா அவளை சரி பண்ணிடுவேன்” என தீரன் நம்பிக்கையாக சொல்ல ராஜ்ஜும் சரி என்று தலையாட்டினான்.

“எல்லாம் சீக்கிரமா சரியாகிடும். பெரிய ப்ரச்சனைக்கு பின்னாடி தான் பெரிய சந்தோஷம் காத்துக்கிட்டு இருக்கும். சோ இதுக்கு மேலே உன் லைஃப்லே ஹேப்பி மட்டும் தான் தீரா” என்றான் ராஜ் அவனது தோளை ஆறுதலாக அணைத்து.

ஆம் உண்மை தானே!

சில நேரங்களில் பெரிய வலிகளுக்கு பின்பு தான் பெரிய மீட்பினை அடைவோம்.

அப்படி மீண்ட தீரனின் உள்ளத்தில் இப்போது ஒரே ஒரு வருத்தம் மட்டுமே.

இன்னும் ராஜ்ஜின் வாழ்க்கை மீளவில்லையே!

கவலையுடன் ராஜ்ஜைப் பார்த்தான்.

“மச்சான் இன்னும் உதிரத்துடிக்கும் பூ மெயில் ஐடி யாருனு கண்டுபிடிக்கலையே. உன் வாழ்க்கையிலே எந்த பிரச்சனையும் தீராம இருக்கும் போது என்னாலே எப்படிடா என் வாழ்க்கையை மட்டும் பார்க்க முடியும்.” என்று தீரன் கேட்க முறைப்பாய் பார்த்தது ராஜ்ஜின் விழிகள்.

“நீ சந்தோஷமா இருந்தா போதும்டா  நல்லவனே. நானும் சந்தோஷமா இருப்பேன். ஒழுங்கா மிதுவை சமாதானப்படுத்தி ஹேப்பியா லைஃப் ஸ்டார்ட் பண்ணுடா. அவளை மறுபடியும் அழ வைச்சேனு தெரிஞ்சுது உன்னை தூக்கிப் போட்டு மிதிப்பேன். ” என்ற ராஜ்ஜின் வாயசைவைப் படித்ததும் தீரனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“மச்சான் இந்த டயலாக்கை, நியாயமா நீ சொல்ல வேண்டியது மிதுரா கிட்டே. என்னா அடி அடிக்கிறா தெரியுமா? முடியலைடா. எப்படி தான் சமாளிக்கப் போறேனோ” என்று  தீரன் சொல்ல ராஜ்ஜின் முகத்தில் புன்னகை.

“அதெல்லாம் என் மிது உன்னை கண்கலங்காம பார்த்துப்பா. நீ தான் அவளை அழ வெச்சுட்டே இருக்கே. அதான் இப்போ உன்னை சுத்தலிலே விட்டிருக்கா. நான் பெங்களூர் ஆஃபிஸ்க்கு போனா அப்புறம் மிதுவை அழ வைச்ச அவ்வளவு தான். ட்ரைன் ஏறி வந்து உன்னை மிதிப்பேன்” என்ற வார்த்தைகளைக் கேட்டு தீரன் அதிர்ந்தான்.

சட்டென ராஜ் பெங்களூர் போகப் போவதாய் பெரிய குண்டை அமைதியாக தூக்கிப் போட தீரனின் முகத்திலிருந்த சந்தோஷம் சுவடின்றி மறைந்திருந்தது.

“வாட்! பெங்களூர் ஆஃபிஸ்கு போறியா, எதனாலே, எதுக்காக? நீ பெங்களூர்லாம் போகக்கூடாது என் கூட தான் இருக்கணும்.” என்றான் தீரன் முடிவாக.

“நோ தீரா, நான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன். ப்ளீஸ் என்னை தடுக்காதே” என்ற ராஜ்ஜின் வார்த்தைகளிலும் தீர்க்கம்.

“டேய் உன்னை விட்டுட்டு நான் எப்படிடா இருப்பேன்.” என்று கலக்கமாக கேட்டவனை கண்டு நட்பாய் மலர்ந்தது ராஜ்ஜின் முகம்.

“மச்சான் அந்த முருகய்யா இன்சூரன்ஸ் கம்பெனியை நம்ப முடியாது. நாம சென்னையிலே இருக்கும் போது அவங்க அங்கே பெங்களூர்லே இருக்கிற கம்பெனியிலே காய் நகர்த்த ப்ளான் பண்ணலாம். சோ நீ சென்னை ஆஃபிஸ் பார்த்துக்கோ. நான் பெங்களூர் ஆஃபிஸ் பார்த்துக்கிறேன்”

“இல்லை ராஜ், உன்னை தனியாவிட எனக்கு மனசில்லை. அந்த உதிரத்துடிக்கும் பூ மெயில் ஐடியை கண்டுபிடிக்கிற வரை நான் உன் கூட அங்கே பெங்களூர்ல இருக்கிறேனே.” என்ற தீரனின் வார்த்தைகளைக் கேட்டதும் ராஜ்ஜின் முகத்தில் அசாத்திய மாற்றம்.

“தீரா எனக்கு அந்த உதிரத்துடிக்கும் பூ ன்ற மெயில் ஐடி சொன்ன வாழ்க்கைப் பதிவை பிடிக்கும். அந்த பொண்ணு மேலே ஃபீலிங்க்ஸ் இருக்கு. ஆனால் காதல் இருக்கானு கேட்டா இல்லைனு தான் சொல்லுவேன்.” என்றான் அழுத்தமாக.

ராஜ்ஜின் மனவோட்டத்தை  அவன் வார்த்தைகளில் அறிந்ததும் தீரனின் முகத்தில் அப்பட்டமான சோர்வு.

எப்படியாவது அந்த மெயில் அனுப்பிய பெண்ணை கண்டுபிடித்து ராஜ்ஜுடன் ஜோடி சேர்த்துவிட வேண்டும் என்ற தீரனின் எண்ணத்தில் இப்போது பெரும் அடி.

“மச்சான் ஆனாலும் நீ தனியா இருக்கும் போது எப்படிடா என்னாலே மிதுராவை சமாதானப்படுத்தி டூயட் பாட முடியும்” என தீரன் அப்போதும் சமாதானம் ஆகாமல் கேட்க அவனது தோளைத் தட்டிய ராஜ்

“டேய் என்னைப் பத்தின கவலையை விடு. முதலிலே இது உன்னோட கதை. இதுலே நீ ஹேப்பியா இருக்கனும் அதான் எனக்கு முக்கியம். எனக்கான கதை கண்டிப்பா இருக்கும். அந்த செகண்ட் பார்ட்ல எனக்கு துணையா யார்  வராங்கன்றதை  பின்னாடி பார்த்துக்கலாம். பட் இது இப்போ உன்னோட கதை. சோ ஃபோகஸ் முழுக்க இனி உன் பக்கம் தான் இருக்கனும்” என்ற ராஜ்ஜின் வார்த்தைகளைக் கேட்டு அவன் மனது அப்போதும் முழுமையாக சமாளிக்கவில்லை.

“மச்சான் அந்த உதிரத்துடிக்கும்பூவை கண்டுபிடிக்கிற வரைக்குமாவது உன் கூட இருக்கேன்” என தீரன் மீண்டும்  அதே கேள்வியில் வந்து நிற்க ராஜ்ஜோ சலிப்பானான்.

“தீரா ஐ யம் டெல்லிங் அகெய்ன். நான் அந்த உதிரத்துடிக்கும் பூ வை காதலிக்கல. பட் அந்த பொண்ணு மேலே எனக்கு ஃபீலிங்க்ஸ் இருக்கு. பிகாஸ் என்  வாழ்க்கையிலே பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துனது அந்த பொண்ணு தான். அது என்னன்றதுலாம் அப்புறமா சொல்றேன். இப்போ நீ உன் கதையை மட்டும் பாரு” என்று சொல்லிவிட்டு சொல்ல தீரனின் மனம் துவண்டுப் போனது.

ஆக இவன் அந்த உதிரத்துடிக்கும்பூ பெண்ணையும் காதலிக்கவில்லை. அப்படியென்றால் இனி தான் வேறொரு பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும்.

இவனுக்குப் பொருத்தமாக யார்  இருப்பார்கள் என்று யோசித்தபோது
அவன் மனதில் சட்டென வந்து விழுந்தது அதிதியின் முகம்.

ராஜ்ஜின் வறண்ட நிலத்தில், தென்றலாய் அதிதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று இங்கே இவன் யோசித்த நேரம்  அங்கே பெங்களூர் அலுவகத்தில் புயலாய் நுழைந்து கொண்டிருந்தாள் ஒருத்தி.

பார்க்கலாம் இதில் எந்த காற்று ராஜ்ஜின் இதயத்தை நோக்கி காதலாய் தீண்டப் போகிறதென்று.

கால காற்றின் திசையை  அறிந்தவர் எவரோ?

மீட்டிங் ஹாலிலிருந்து வெளியே வந்த தீரன் மிதுராவைப் பார்த்தான். ஆனால் தீரனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தீரன் வருத்தத்துடன் கணினித்திரையைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம்  ராஜ் வேகமாக வந்து கட்டி அணைத்தான்.

குழம்பியபடி தீரன் பார்க்க ராஜ்ஜோ தன் கையிலிருந்த அலைப்பேசியை தீரனை நோக்கி நீட்டினான்.

அதில் முருகய்யா இன்சூரன்ஸ் என்ற கம்பென சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதால் அந்த கம்பெனியின் லைசென்ஸ் முறியறிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி படர்ந்து கிடந்தது.

இவர்கள் சமார்த்தியமாக காய் நகர்த்தியதால் முருகய்யா இன்சூரன்ஸ், இதோ இப்போது அதளபாதளத்தில்!

துரோகத்தின் வாளை வைத்து தன்னை நெஞ்சுக்கு நேராக குத்தியவளை பழிவாங்கிவிட்ட சந்தோஷம் ராஜ்ஜின் முகத்தில் அலையாடியது.

“மச்சான் இந்த சந்தோஷத்தை இப்பவே கொண்டாடுவோம் வா. கொஞ்சம் சிரிச்சபடி போஸ் கொடு” என ராஜ் தன் ஃப்ரென்ட் கேமராவை ஆன் செய்தபடி வாயசைக்க தீரனின் இதழ்களில் புன்னகை.

இருவருடைய வெற்றிச் சிரிப்பையும் புகைப்படத்தில் சேமித்த ராஜ் வேகமாக கயலின் நம்பருக்கு அதை அனுப்பி வைத்து, “இந்த தடவை நாங்க ஜெயிச்சுட்டோம், கயல் என்கிற சிவானி” என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.

அதைப் படித்த கயலின் கண்களில் இயலாமையும் குரோதமும் ஒரு சேரப் போட்டி போட அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற கோபம் பெருகியது.

ஆனால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் காலம் நிறுத்தி அவளைப் பார்த்து சிரிக்கின்றதே.

💐💐💐💐💐💐💐💐💐

சில நாட்களாக மிதுராவின் முகத்தினில் புன்னகையே எட்டிப் பார்ப்பது இல்லை.

கனத்த மௌனத்துடனும் வருத்தம் பூசிய முகத்துடனும் வேலையை முடித்து வீட்டிற்குள் நுழைந்த மிதுராவையே கவலையாகப் பார்த்தது விஸ்வத்தின் விழிகள்.

“என்னடா ஆச்சு ரொம்ப வேலையா?” என்று தலைமுடியை வாஞ்சையாய் கோதியபடி கேட்க மௌனத்தைப் பிடித்துக் கொண்டு நின்றாள் அவள்.

அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்த அதிதி எதுவும் பேசாமல் தன்னறைக்குள் நுழைந்துக் கொள்ள, இரண்டு நிமிடத்திலேயே சீமா காஃபி கப்போடு வந்து நின்றார்.

“காஃபி குடிச்சுட்டு ரிஃப்ரெஷ் ஆகுமா” என்று சீமா சொல்ல மௌனமாய் தலையாட்டினாள் அதிதி.

உணவுக்கு முன்பு அவள் எப்போதும் காஃபி குடிப்பது வழக்கம். இங்கே வந்த புதிதில் அதை கவனித்துவிட்ட சீமா, அதற்கு பின்பு வந்த நாட்களில் அவளுக்கு தானே காஃபி போட்டு கொடுக்க அதிதியின் கடினமான வேர்கள் மெல்ல அசைந்தது.

மாற்றாந்தாய்க்கு பிறந்த தன்னை எப்படி எந்த கசடும் கபடும் இல்லாமல் பார்க்கிறார்கள் என பல முறை வியந்ததுண்டு.

இப்போதும் அதே போல ஒரு முறை வியந்துவிட்டு அந்த காப்பியை உதடுகளுக்குள் உள்ளிழுத்தாள்.

ஆஹா தேவாமிர்தம்!

💐💐💐💐💐💐💐💐💐💐

மௌனமாய் நின்று கொண்டிருந்த மிதுராவையே கண்ணீர் திரையிட பார்த்தார் விஸ்வம்.

“மிதுமா எந்த கவலையும் தீண்டாம உன்னை பத்திரமா பார்த்துக்கனும்னு நினைச்சேன்டா. ஆனால் நான் தவறுதலாவிட்ட ஒரு வார்த்தை உன் சந்தோஷத்தை இப்படி வேரோட பறிச்சு போட்டுடும்னு எதிர்பார்க்கலை.  இவ்வளவு காலமா நான் காட்டுன பாசத்தை எல்லாம், அந்த வார்த்தை ஒன்னுமில்லாம ஆக்கிடுச்சே” என்று உடைந்துப் போய் அழுதவர் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு

“அப்பா உன் மேலே வெச்ச பாசம் பொய்யில்லைடா. நம்புமா”  என்று கெஞ்சினார்.

தன் முன்பே கலங்கி நின்ற தன் தந்தையை காண சகியவில்லை அவளுக்கு.

அந்த ஒரு நாள்… அந்த ஒரு சொல்! அந்த ஒரு கணம்.

அந்த மூன்றை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் விஸ்வம் மிதுராவின் மீது வைத்த அன்பிலும் பாசத்திலும் எந்த கலங்கமும் இல்லையே!

உடைந்து நின்ற தன் தந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவள்,

“அப்பா நீங்க என் மேலே வெச்ச பாசம் பொய்யில்லைனு எனக்கு தெரியும். ஆனாலும் அந்த வார்த்தையோட வீரியத்தைத் தாங்க முடியாம தான் இத்தனை நாளா ஒதுங்கிப் போனேன். உங்க அன்பை சத்தியமா சந்தேகப்படலை. என்னை நீங்க பெத்து எடுக்கலைனாலும் நீங்க தான் என்னோட அப்பா” கண்களில் வடிந்த நீரோடு சொன்னவளை நெகிழ்வோடு அணைத்துக் கொண்டார் விஸ்வம்.

தந்தையின் தோள் ஆதரவாய் கிடைத்ததும், அதுவரை உடைந்து கிடந்த மிதுராவிற்குள் புதியதாய் ஒரு தெம்பு.

தந்தையின் தோள்களிற்கு ப்ரத்யேக சக்தி இருப்பது உண்மே தானே.

கண்ணை அழுந்த துடைத்துக் கொண்டவள் பல நாட்கள் கழித்து அவரைப் பார்த்து அன்பாய் புன்னகைத்தாள்.

அவளையே கண்களில் வழிந்த அன்போடு வாஞ்சையாய் பார்த்தார் விஸ்வம்.

“அப்பா, இப்படியே என்னை பார்த்துட்டு இருந்தா அடுத்து அதிதி அக்கா வந்து முறைப்பாங்க, அப்புறம் நீங்க அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகனும். அலார்ட் அலார்ட்” என்று இவள் சிரித்தபடி சொல்வதற்கும் அதிதி காப்பி கப்போடு வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

முறைப்பாக மிதுராவையும் விஸ்வத்தையும்  பார்த்தவள் சீமாவிடம் திரும்பி, “காப்பி ரொம்ப நல்லா இருந்ததுமா.” என்றாள் புன்னகையுடன்.

அவர்கள் இருவரும் பேசுவதை ஏக்கமாய் பார்த்தார் விஸ்வத்தை தோள் தட்டி திருப்பினாள் மிதுரா.

“அப்பா யூ டோன்ட் வொர்ரி. சீக்கிரமா அதிதி அக்கா உங்க கூட பேசுவாங்க. ” என்று அவருக்கு ஆறுதல் சொல்ல அவரிடமும் நம்பிக்கை துளிர் விடத் துவங்கியது.

பார்க்கலாம் அதிதி விஸ்வத்திடம் பேசுகிறாளா என்று.

 

💐💐💐💐💐💐💐

தீரனும் மிதுராவும் அதற்கடுத்து வந்த நாட்களில் அதிகமாக பேசிக் கொள்ளவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.

தீரனுக்கு தெரியும் அவளது காயம் அத்தனை சீக்கிரத்தில் ஆறாது என்று.

அவளை சமாதானப்படுத்துகிறேன் என்ற பெயரில் பல குட்டி கரணங்களை நிகழ்த்தி அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை அவன்.

நீ பேசாததால் நான் சோகமாக இருக்கிறேன் பார், என்னை குடிக்க வைத்துவிட்டாய் பார், நான் நானாக இல்லை பார், என்னை அழித்துக் கொண்டேன் பார் என்று அவன் எதுவும் செய்து அவளை குற்றவுணர்வுக்கு ஆளாக்கவில்லை.

அவன் அவளுக்கான நேரத்தைக் கொடுத்தான்.

அவளை அதிகமாக தொந்தரவு செய்யாமல் அதே சமயம் தனியாகவும் விடாமல் அவள் அருகில் ஆறுதலாக நிழல் போல தொடர்ந்து கொண்டிருந்தான்.

உடைந்துப் போன தன்னை ஒட்டி மீட்டி எடுத்து கொண்டிருந்தவளை சில்லுகள் குத்திவிடாமல் கவனத்துடன் அருகில் நின்று பார்த்துக் கொண்டான்.

தீரனின் செயலில் தெரிந்த அன்பும் பாசமும் மிதுராவிற்கு புரியாமல் ஒன்றும் இல்லை. புரிந்தது தான்.

ஆனால் மன்னிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

மனதோடு போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருந்தவளின் முன்பு லிஃப்ட் வந்து நிற்க உள்ளே ஏறிக் கொண்டவள் ஆறாவது எண்ணை அழுத்திவிட்டு திரும்ப அருகிலோ தீரன்.

அப்போது தான் அந்த லிஃப்ட்டில் தானும் தீரனும் மட்டும் தனித்து நின்றுக் கொண்டிருப்பதையே கவனித்தாள்.

அதே நேரம் பார்த்து மின்சாரமும் சென்றுவிட லிஃப்ட் பாதியிலேயே நின்றுவிட்டது.

அதைக் கண்டு மிதுராவின் இதழ்கள் ஏளனத்துடன் வளைந்தது.

“தீரா ஏன் இப்படி சினிமாத்தனமா பண்ற. லிஃப்ட்டை பாதியிலேயே நிறுத்தி வைச்சு இப்போ எனக்கு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து ரொமான்ஸ் பண்ணி சமாதானப்படுத்தப் பார்க்கிறியா. நான் அதுக்குலாம் சமாதானம் ஆகமாட்டேன்.” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தீரன் இடைமறித்தான்.

“மிது, நிறைய படம் பார்த்து கெட்டு போய் இருக்க. காதலியோட அனுமதியில்லாம அவளை அப்படி கட்டிப்பிடிச்சு சமாதானம் பண்றது ரொமான்ஸ் இல்லை ஹராஸ்மென்ட். அதை நான் கண்டிப்பா பண்ணமாட்டேன்.” என்றான் தீர்க்கமாக.

தீரனின் இந்த வார்த்தைகள் அவள் இதயத்தை அசைத்துப் பார்த்தது தான். அவன் மீது  காதல் கணக்கில்லாமல் வழிந்து கொண்டிருந்தது தான்.

ஆனால் உள்ளுக்குள் இருக்கும் காயத்தின் வடுக்கள் இன்னும் அழியவில்லையே, என்ன செய்ய!

“ம்ம்ம் இதெல்லாம் நல்லா வக்கணையா பேசு. ஆனால் லவ் பண்றதுல மட்டும் கோட்டையை விட்டுடு.” என்று சொன்னவளின் புருவங்கள் கேள்வியாக  அவனைப் பார்த்து உயர்ந்தது.

“உண்மையா நீ தான் ஆதனா? ஊருக்கே லவ்வுக்கு அட்வைஸ் கொடுக்கிற. ஆனால் உன் காதலிலே மட்டும் இப்படி சொதப்புறே. கார்த்திக் என்னாலே உன் மேலே இருக்கிற கோபத்தை சுமக்கல. ரொம்ப கனமா இருக்கு.  ப்ளீஸ் ஏதாவது பண்ணி என்னை சரிப் பண்ணேன்” என்றவள் கெஞ்சல் குரலில் கேட்ட நேரம் போன மின்சாரம் திரும்ப வந்துவிட்டது.

ஆனால் இப்போதோ தீரனின் முகம் மின்சாரம் போன வீதியாக களையிழந்து போய் நின்றது.

முகம் முழுக்க வருத்தத்துடன் லிப்ஃட்டை விட்டு வெளியே சென்றவளைப் பார்த்தவனின் மனதினில் விஸ்தாரமெடுத்து நின்றது அந்த கேள்வி.

“இவளை எப்படி சமாதானப்படுத்தப் போகிறோம்”

அந்த நேரம் பார்த்து அலைப்பேசியில் வெளிச்சம் வர எடுத்துப் பார்த்தவனது முன்னே இப்போது நம்பிக்கை வெளிச்சமாக வந்து விழுந்தது ராஜ்ஜின் முகம். 

நேராக ராஜ்ஜின் முன்பு சென்ற தீரன், “டேய் மச்சான் எப்படியாவது மிதுவை எனக்கு கரெக்ட் பண்ணி கொடுடா” என  உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கேட்க

“ஃப்ரெண்டா போய் தொலைஞ்சுட்ட,  பண்றேன்டா! பண்ணி தொலையுறேன்.” என தலையில் அடித்துக் கொண்டான் ராஜ்.

💐💐💐💐💐💐💐💐💐💐

காலத்துக்கு காயத்தை ஆற்றும் வலிமை இருப்பது உண்மையே.

ஆனால் அதற்கு காயத்தை போக்கும் வலிமை இருத்கிறதா என்று கேட்டால் பதில் இல்லை.

அதிதிக்கு விஸ்வத்தின் மேல் முன்பிருந்த கோபம் இல்லை. ஆனால் அவரிடம் இயல்பாய் பேசவிடாமல் எதுவோ தடுத்தது.

அதைப் புரிந்துக் கொண்டு விஸ்வமும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அவளை சங்கடப்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்திடுவார்.

அந்த வீட்டில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த அதிதியை மிதுரா தான் இழுத்துப் பிடித்து உட்கார வைத்து பேச்சுக் கொடுப்பாள்.

அதிகாலையிலேயே அவளை எழுப்பி மொட்டைமாடிக்குள் தள்ளிக் கொண்டு வருகிறவள் தினமும் ‘தாய்-சி’ என்னும் யோககலையை மனநிம்மதிக்காக செய்ய வைப்பாள்.

வீட்டிலும் அலுவலகத்திலும் தன்னை அன்பாய்ப் பார்த்துக் கொண்ட மிதுராவோடு இப்போது எல்லாம் நட்பாக பழக ஆரம்பித்திருந்தாள் அதிதி.

சீமாவின் மேல் அவளுக்கு முன்பிருந்தே அன்பு உண்டு. ஆனால் இப்போதோ அது பேரன்பாக உருவெடுத்து இருந்தது.

அதுவும் உடம்பு சரியில்லாமல் அறைக்குள் படுத்து இருக்கும் தன்னை நொடிக்கு ஒரு முறை பரிதவிப்போடு பார்த்துவிட்டு செல்பவரின் மீது நேசம் வழிந்தோடியது.

குட்டிப் போட்ட பூனை போல் தவித்துக் கொண்டிருந்த சீமாவை நோக்கி “எனக்கு ஒன்னுமில்லை. லைட்டா தலைவலி. அதனாலே தான் ஆஃபிஸ்க்கு போகலே. கவலைப்படும்படி வேற எதுவும் இல்லை” என்று சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆனாலும் சீமாவின் மனது சமாதனம் ஆகவில்லை.

“நான் மெடிக்கல் ஷாப் போயிட்டு மாத்திரை வாங்கிட்டு வரேன்டா. ஈவினிங் தலைவலி குறையலேனா டாக்டர் கிட்டே போகலாம்.”

அவள் மறுப்பதையும் பொருட்படுத்தாது கிளம்பியவர் கையில் மாத்திரையோடு திரும்ப வந்தார்.

ஆனால் சீமாவின் முகத்தில் செல்லும் போது இருந்த தெளிவு திரும்பி வரும்போது இல்லை.

அப்படமான சோர்வு!

அவரது முகத்தையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்த அதிதியின் முன்பு சீமா தண்ணீரையும் மாத்திரையும் நீட்டினார்.

“இதைப் போட்டுட்டு தண்ணி குடிடா. சீக்கிரமா சரியாகி” என்று முழுவதாய் சொல்லி முடிக்கும் முன்பே சீமாவின் குரல் கடலலை போல உள்ளிழுத்துக் கொண்டது.

வலிகளின் ரேகை படர்ந்து நொடிப் பொழுதில் முகபாவனைகளில் அசாத்திய மாற்றம்.

கைகளில் இருந்த தம்ளர் பிடிமானமில்லாமல் நழுவி விழுந்ததைப் போல சீமாவும் சுயநினைவற்று கீழே விழுந்தார்.

தன் முன்னே மயங்கிவரைக் கண்டு அதிதியிடம் அதிர்வு.

“அம்மா அம்மா. என்னை பாருங்கமா. என்ன ஆச்சுமா?” என்று சீமாவின் கன்னங்களை தட்டியபடி அதிதி கதற அவரிடம் அசைவே இல்லை.

மிதுராவிற்கும் விஸ்வத்திற்கும் அலைப்பேசியில் தகவல் சொன்னவள் துரிதமாக செயல்பட்டு சீமாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவளின் மனதிலோ அத்தனை வலி.

ஏற்கெனவே தாயை இழந்து பரிதவித்தவளின் உள்ளம் மீண்டும் கிடைத்த தாய்ப்பாசத்தை இழக்க பயப்பட்டது.

‘கடவுளே என் அம்மாவை எப்படியாவது காப்பாத்திக் கொடு’ என வேண்டிக் கொண்டிருந்தவளின் முன்பு பதற்றம் ஊறிய முகத்துடன் வந்து நின்றார் விஸ்வம்.

“என்னாச்சுடா சீமாவுக்கு?” என்று தவிப்பாக கேட்டவரின் கைகளை அதுவரை நடுங்கிக் கொண்டிருந்த அதிதியின் கைகள் தன்னிச்சையாக பற்றிக் கொண்டது.

“அப்பா பயமா இருக்குபா. அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது தானே. சந்தியா அம்மா மாதிரி சீமா அம்மாவையும் நான் இழந்திடமாட்டேன்ல” அழுகுரலோடு தன் தோளில் சாய்ந்தவளை தாங்கிய விஸ்வத்தின் கண்களிலும் கண்ணீர்.

“எதுவும் ஆகாதுடா. நம்ம சீமா நம்மளை விட்டு போகமாட்டாடா” மகளுக்கு சமாதானம் சொல்வதைப் போல தனக்கு தானே சொல்லிக் கொண்டவரின் முன்பு மிதுரா வந்து நின்றாள், கூடவே இரண்டு கார்த்திக்கும் அபியும் சிற்பியும்.

விஸ்வத்தின் ஒரு கை அதிதியை அணைத்து இருக்க மறுகை மிதுராவை நோக்கி நீண்டது.

அதில் சரண் புகுந்தவள் “அம்மாவுக்கு என்னாச்சுபா?” என்றாள் கதறியபடி.

அவளின் தலைமுடியை கோதியபடியே, “கார்டியாக் அரெஸ்ட்னு நர்ஸ் சொன்னாங்கடா. டாக்டர் ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. கண்டிப்பா அம்மாவுக்கு ஒன்னும் இருக்காது” என்று ஆறுதலாய் சொல்லியபடி இரண்டு மகள்களையும் தன் தோளில் தாங்கிக் கொண்டவர் தன் மனைவிக்காக தவிப்புடன் காத்து கொண்டிருந்தார்.

ஐ.சி.யூவில் இருந்து வெளியே வந்த மருத்துவர் விஸ்வத்தை தன்னறைக்கு அழைத்து சென்றுவிட அங்கே கதறிக் கொண்டிருந்த அதிதியையும் மிதுராவையும் மற்றவர்கள் தேற்ற முயன்றனர்.

அழுது அழுது சிவந்துப் போன மிதுராவின் முகத்தை துடைத்தபடி தீரன் சமாதானம் செய்து கொண்டிருக்க, ராஜ்ஜோ தன் கைக்குட்டையை எடுத்து அதிதியை நோக்கி நீட்டினான்.

அந்த நிலையிலும் அதை வாங்க மறுத்து அபியை நோக்கி “கர்சீஃப் கொடுடா” என்றவளைப் பார்த்து கோபத்தை சிந்தியது ராஜ்ஜின் விழிகள்.

மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்த விஸ்வத்தின் முகத்தில் முன்பிருந்த கலக்கம் சென்று ஒரு தெளிவு வந்திருந்தது.

தன்னையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த மகள்களின் முன்பு வந்தவர் , “சீமா ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டா. அவளுக்கு இது ஃபர்ஸ்ட் அட்டாக்ன்றதாலே காப்பாத்திட முடிஞ்சுது. இனி அவங்களை பத்திரமா பார்த்துக்க சொன்னாங்க” என்றதும் தான் சென்ற மூச்சு திரும்பி வந்தது அவர்களுக்கு.

அவசரப் பிரிவில் ஒருவர் மட்டுமே இப்போது சென்று பார்க்க அனுமதி தர விஸ்வம் உள்ளே சென்றார்.

அங்கே வாடிய மலராக சீமா!

முணுக்கென்று அவர் கண்களில் நீர் துளிர்க்க, சீமா கண்விழிப்பதை பார்ப்பதற்காக அங்கிருந்து நகராமல் மாலை வரை அவரையே பார்த்துக் கொண்டு இருந்ததார் விஸ்வம்.

அவர் முகத்தில் கடந்த காலத்தின் நினைவுகள்.

சீமாவை முதல்முறையாக பார்த்த நாள் நினைவு வந்தது.

அன்று மட்டும் சீமாவை பார்க்காமல் இருந்து இருந்தால் என்ன நிகழ்ந்து இருக்கும்! நினைக்கும் போதே நெஞ்சு நடுங்கியது.

எதிர்பாராமல் தன் வாழ்வில் வந்த சீமா, தந்தையாய் தவித்து நின்ற தனக்கு மிதுராவைக் கொடுத்து தன் கவலையை போக்கியது நினைத்து இப்போதும் அவருக்குள் நன்றியுணர்ச்சி.

இவர்கள் இருவரும் மட்டும் தன் வாழ்வில் வராது இருந்தால் வாழ்வே சூன்யமாகியிருக்கும். என்ன தான் கணவன் மனைவியாக வாழ்ந்திராவிட்டாலும் தங்களிடையே இருந்த அந்த பெயரிடடப்படாத உறவில் ஒவ்வொரு முறையும் விஸ்லம் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தான் உணர்ந்தார்.

தான் பெற்ற மகளை தன் மகளாக பாவித்து ஏற்றுக் கொண்ட சீமா, இப்போது மிதுராவை விட தாயன்பிற்காக மனதிற்குள் மருகித் தவிக்கும் அதிதியின் மீது தான் அதிகமாக பாசம் காட்டுகின்றாள்.

இவளது நற்குணம் யாருக்கு வரும்?

இவள் என் வாழ்க்கைத்துணைவியாக கிடைக்க தான் என்ன தவம் செய்து இருக்க வேண்டும் என நினைத்த பொழுது
சீமாவிடம் மெல்லிய அசைவு தெரிந்தது.

இமைகளை சுருக்கியபடி விழித்தவரின் கண்கள் விஸ்வத்தின் கண்ணீரை கண்டு தவித்தது.

அவரின் விழிநீரை துடைக்க  ஐவி போடப்பட்ட சீமாவின் கைகள் தன்னிச்சையாக மேலெழ அதை ஆதூரமாகப் பிடித்துக் கொண்டார் விஸ்வம்.

“சீமா ஒரு நிமிஷம் செத்துட்டேன்டா. நீ இல்லைனா நான் என்னாவேன் நினைச்சுயா? இனி நான் உன்னை பத்திரமா பார்த்துக்கிறேன் சீமா. இனி இப்படியொரு நிலையிலே என்னாலே உன்னைப் பார்க்க முடியாது” என்றவரின் விழிநீர் உடைப்பெடுக்க சீமாவின் கண்கள்  தவிப்போடு பார்த்தது.

அங்கே அவர்களுக்குள் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற அந்த உணர்வை காதல் என்னும் ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடமுடியாது.

இது காதலுக்கும் அப்பாற்பட்ட புரிதல், அரவணைப்பு.

அறைக்குள்ளே அடுத்து நுழைந்த அதிதியும் மிதுராவும் “அம்மா” என்ற குரலோடு சீமாவை நோக்கி ஓடி வந்தனர்.

தன் மகள்களின் முகத்தில் கண்ட பரிதவிப்பைப் பார்த்த சீமா மறுகையை அவர்களை நோக்கி ஆதரவாக நீட்ட,
விஸ்வமோ அதிதியைப் பார்த்தவுடன் சங்கடமாக தன் கையை எடுக்க முயன்றார்.

அதைக் கவனித்த அதிதி அவர் விலக்க முடியாதபடி தன் கையை விஸ்வம், சீமா கரத்தோடு சேர்த்துப் பிடித்தவள் அவரைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள்.

“சந்தியா அம்மாவை இழந்தா மாதிரி உங்க ரெண்டு பேரையும் இழக்கமாட்டேன்.   எவ்வளவு தான் உங்க மேல் வருத்தம் இருந்தாலும், நீங்க எனக்கு அப்பா அது மாறப் போறதில்லை.மாறவும் மாறாது. உங்க கிட்டே ஏன் இப்படி பண்ணீங்க, ஏன் விட்டுட்டு போனீங்கனு கேட்க மாட்டேன்.  கடந்தகால வருத்தங்களாலே நிகழ்கால அன்பை இனி நிராகரிக்கமாட்டேன். எனக்கு என் அப்பாவோட அரவணைப்பு வேணும்” என்றாள் அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி.

விஸ்வத்தின் கண்களில் கண்ணீரும் புன்னகையும் ஒரு சேரப் போட்டியிட்டது.

காரணம் சொல்லாமலேயே தன் மகள் தன்னை ஏற்றுக் கொண்ட சந்தோஷம் அவர் முகத்தில் கண்ணாடியாய் பிரதிபலித்தது.

தன் இரு தோள்களிலும் இரு மகள்களைத் தாங்கியபடி  தன்னுடைய கைவளைவில் தன் மனைவியை அணைத்துக் கொண்டவரின்  இதயத்தில் இதுவரை இருந்த துயரங்களெல்லாம் துகளாய் மாறி உடைய இப்போது தெளிந்த வானமாய் அவர்.

வெவ்வேறு கிளைப் பறவைகள் அன்பென்னும் வானில் சிறகடித்த அற்புத தருணம் இது!

 

💐💐💐💐💐💐💐

வார நாட்களில் எல்லாம் அலுவலகம் அலுவலகம் என ஓடித் திரிபவர்களுக்கு வாரத்தின் இறுதி நாட்கள் என்பது ஒரு வரப்பிரசாதம்.

அந்த வரத்தை முழுமையாக அனுபவிக்கும் நோக்கத்தோடு அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள் மிதுரா.

உள்ளே நுழைந்தவளின் தலையை இளங்காற்று தலைக் கோதி வரவேற்றது.

காற்றில் அலையாடிய கேசத்தை தன் காதோரம் சொருகியபடி பசுமைப் படர்ந்து இருந்த அந்த பூங்காவைத் தன் கண்களால் பருகியவள் வழக்கமாக தான் அமரும் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்.

தன் கைப்பையைத் துழாவி அதில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து விரித்தவளது மனம் அந்த புத்தகத்தில் மூழ்கத் துவங்கிய நேரம் அவளருகே வந்து யாரோ அமர்ந்தார்கள்.

அவள் அதை கவனித்தாலும் புத்தகத்தில் இருந்து  பார்வையை விலக்கவில்லை.

பக்கத்தில் இருந்தவனிடம் அடுத்து லேசாக தொண்டை செருமல். அதையும் அவள் கண்டு கொள்ளவில்லை. 

“சிரி கால் மோஸ்ட் ப்யூட்டிஃபுல் கேர்ள் சிட்டிங் நெக்ஸ்ட் ஆஃப்டர் மீ”  என்று அருகில் இருந்தவன் ஐஃபோனில் சிரி என்னும் சாஃப்ட்வேர் சிஸ்டத்திற்கு கட்டளையிட்டான் தன் குரலால்.

அந்த குரலை வைத்தே அதற்கு சொந்தக்காரனை கண்டுப்பிடித்துவிட்டாள்,  மிதுரா.

அவன் வேறு யாரும் இல்லை தீரனே தான்.

ஆனாலும் நிமிராமல் புத்தகத்திலேயே பார்வையை புதைந்து இருந்தவளுக்கோ  சந்தேகம் துளிரிட்டது.

‘அவன் அருகில் நான் தானே அமர்ந்து இருக்கின்றேன்.  ஒரு வேளை அவன் தனக்கு தான் கால் செய்ய சிரிக்கு கட்டளையிடுகிறானா இல்லை வேறு யாரையாவது சொல்கிறானா?’ என லேசாக மனம் நெருடிய நேரம் மிதுராவின் அலைப்பேசி அலறியது.

ஆக அவன் அழைத்தது தன்னை தான்.

ஆனால் அந்த  சிரி எப்படி சரியாக அழகான பெண் என்றதும் எனக்கு கால் செய்தது என்ற யோசனையோடே தீரனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் உள்ளத்தின் கேள்வியைப் படித்துவிட்டவன் புன்னகையுடன், “சிரிக்கு என் மனசைப் பத்தி தெரியும் தீராமா, இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியறவ நீ மட்டும் தான்னு. அதான் கரெக்டா சொல்லிடுச்சு.” என்றான் கண்களில் காதல் மின்ன.

“டேய் ஆதா. இந்த டயலாக் பேசுனதுலாம் போதும். ஒழுங்கா எப்படி சிரி எனக்கு கால் பண்ணுச்சுனு சொல்லு”  என்றாள் குழம்பியபடி.

“நீ இன்னைக்கு ஈவினிங் காஃபி ஷாப் வந்தா தான் பதில் சொல்லுவேன். வில் சீ யூ இன் காஃபி ஷாப்” என்று சொல்லியவன் அவள் மறுத்துப் பேசும் முன்பு சிட்டாக பறந்துவிட்டான்.

அவளுக்கோ தலையைப் பிய்த்துக் கொள்ளும் நிலை. எப்படி சிரி சரியாக தனக்கு அழைத்தது என குழம்பியபடி யோசித்துக் கொண்டிருக்க சரியாக விமலிடமிருந்து அழைப்பு வந்தது.

எப்போது மிதுரா குழப்பத்தில் இருந்தாலும் சரியான நேரத்திற்கு அழைப்பவன் இப்போதும் சரியாக அழைத்திருந்தான்.

முகத்தில் மலர்ந்த புன்னகையோடு அந்த அழைப்பை ஏற்றவள் தன் சந்தேகத்தைக் கேட்க விமல் சொன்ன பதிலில் அவள் புருவங்கள் உயர்ந்தது.

“ஓ இதான் அந்த ட்ரிக்கா?” என அவள் கேட்க

“இது தான் அந்த ட்ரிக் மிதுமா.” என்று அவள் குழப்பத்தை தீர்த்து வைத்தான் அவன்.

💐💐💐💐💐💐💐

கஃபே காப்பி ஷாப்.

சுற்றி வீசிய குளம்பியின் வாசத்தை நாசியில் நிறைத்துக் கொண்டே பார்வையை அந்த கதவோரம் பதித்திருக்க அவன் செவிகளில் ஒலித்தது அந்த பாடல் வரிகள்

அவள் வருவாளா?
என் உடைந்துப் போன நெஞ்சை
ஒட்ட வைக்க அவள் வருவாளா?

இந்த வரிகளைக் கேட்டுத் திரும்பிய நேரம் சரியாக மிதுரா உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தாள். அவன் இதழ்களில் புன்னகை.

இது தான் டைம்மிங் போல!

“தீரா நான் இங்கே வந்ததுக்காக ரொம்ப சிரிக்காதே. இதை உன் கிட்டே சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.” என்றவள் அவன் செய்ததுப் போலவே தன் அலைப்பேசியை எடுத்து “சிரி கால் த பர்சன் ஐ யம் கோயிங் டூ ப்ரேக் அப்” என்று சொல்ல சரியாக தீரனிற்கு அழைப்பு வந்தது.

தீரனின் விழிகள் திகைப்பில் தெறித்தது.

அவனது அதிர்வைக் கண்டு நகைத்தவள் தன் ஃபோனை அவனின் முன்பு நீட்டினாள்.

அதில் தீரனின் எண் “கால் த பர்சன் ஐ யம் கோயிங் டூ ப்ரேக் அப்” என்றிருந்தது.

ஆஹா! அப்படியானால் இவளுடைய எண்ணை “மோஸ்ட் ப்யூட்டிஃபுல் கேர்ல் சிட்டிங் நெக்ஸ்ட் ஆஃப்டர் மீ” என்று சேவ் செய்ததை கண்டுபிடித்துவிட்டாளா என  திருதிருத்தபடி பார்க்க அவளோ “ஆமாம் கண்டுபிடிச்சுட்டேன்” என்றாள் இவன் மனதைப் படித்தபடி.

“உன் கோக்குமாக்கு வேலை எல்லாம் கண்டுபிடிச்சுட்டேன். அடுத்து என்னை சமாதானப்படுத்த வேற ஏதாவது பெட்டர் ஐடியாவா கொண்டு வா. அப்புறம் வேணா மன்னிக்கிறது பத்தி கன்சிடர் பண்றேன்.  ஐ வான்ட் மோர் எமோஷன்” என்று அவனின் முன்பு முறைப்பாக சொல்லிவிட்டு திரும்பியவளின்  இதழ்களோ புன்னகையை அடக்க சிரமப்பட்டது.

இதை அறியாத தீரனோ முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு ஆறிப் போன காஃபி கப்பையே சோகமாக பார்த்துக் கொண்டிருக்க அவனது அலைப்பேசி சிணுங்கி அடங்கியது.

எடுத்துப் பார்க்க ராஜ்ஜிடமிருந்து குறுஞ்செய்தி.

“மச்சான் நான் சொன்ன ப்ளான் வொர்க் ஆச்சா?” என்று கேட்டிருக்க,

“ஊத்திக்கிச்சுடுடா” என்றான் இவன் சோகமாக

“டோன்ட் வொர்ரி மச்சான். ப்ளான் பி எக்ஸிக்யூட் பண்ணிடுவோம்” என ராஜ் சொல்ல தீரனின் முகத்தில் நம்பிக்கைசுடர் படர்ந்தது.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

அன்று  அந்த அலுவலக அறைக்குள் கடுகடுப்பாக நுழைந்தாள் மிதுரா.

பின்னே வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று வரச் சொன்னால் கோபம் வராதா பின்னே?

அதுவும் எல்லாரும் வராமல் குறிப்பிட்ட நான்கு பேரை மட்டும் வர சொன்னால் வெறுப்பாக இருக்காதா என்ன?

அந்த கடுப்புடன் அமர்ந்து இருந்தவளின் அருகே தீரன் வந்து அமர்ந்தான்.

அவனைத் திரும்பியும் பாராமல் கணினியில் கடுப்புடன் தட்டச்சு செய்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து தொண்டையை செருமினான்.

“சாரி என் கிட்டே விக்ஸ் மாத்திரை இல்லை.” என்றாள் கண்களை கணினித்திரையில் இருந்து விலக்காமல்.

“தீராமா என்னை கலாய்க்காதே. நான் பாவம் தானே.” என்றான் முகத்தை சிடுசிடுத்தபடி.

“மிஸ்டர் தீரன். ஆஃபிஸ்லே பர்சனல் விஷயங்களுக்கு இடமில்லைனு உங்களுக்கு தெரியாதா? ஒழுங்கா வேலையைப் பாருங்க” என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

“அது வீக் டேஸ்லே தான் பர்சனலுக்கு இடமில்லை மிதுமா. பட் வீக்-என்ட்ல அனுமதி உண்டே” என சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தவனின் முன்பு கோபமாக வந்து நின்றான் ராஜ்.

“தீரா, உன்னை காதல் பண்ண ஆஃபிஸ்க்கு வர சொல்லைல. ஏகப்பட்ட இஷ்யூ இருக்கு. ஒழுங்கா அதை க்ளியர் பண்ணு” என ராஜ் வாயசைக்க மிதுரா புன்னகையுடன் நிமிர்ந்தாள்.

“சபாஷ் ராஜ் அப்படி சொல்லுங்க, நல்லா அவன்  மூளைக்கு உரைக்கிறா மாதிரி இன்னும் சொல்லுங்க” என்ற மிதுராவைக் கண்டு தீரன் முறைக்க ,

“ஓய் இங்கே பேசிட்டு இருக்கும் போது அங்க என்ன லுக்கு” என தீரனின் கழுத்தைத் திருப்பியபடி சொன்ன ராஜ் “ஒழுங்கா வேலையைப் பாரு” என்றான் கண்டிப்பாக.

இவர்களது சம்பாஷனைகளைக் கண்டு அபி,சிற்பி, அதிதி பதற்றத்துடன் எழுந்து வந்தனர்.

“டேய் நீ என்னடா என்னை வேலை பார்க்க சொல்றது. நான் வேலைப் பார்க்க மாட்டேன்டா. என்ன பண்ணுவ?” என்று தீரன் நெஞ்சை நிமிர்த்திக் கேட்க “என் கிட்டேயே முடியாதுனு சொல்றீயா” என ராஜ், தீரனின் சட்டையைப் பிடித்தான்.

“மச்சான் இந்த சட்டையைப் பிடிக்கிற வேலை எல்லாம் என் கிட்டே வேண்டாம். அப்புறம் இந்த தீரனை நீ வேற மாதிரி பார்ப்ப” என்று இவனும் ராஜ்ஜின் சட்டையைப் பிடித்தான்.

“டேய் என் சட்டையிலேயே கை வைச்சுட்டியா?”
ராஜ் கேட்டபடி தீரனின் கன்னத்தில் தன் ஐவிரல்களை அழுத்தமாகப் பதித்தான்.

அதைக் கண்டு அபி,சிற்பி,அதிதி திகைத்து விழிக்க மிதுராவோ “அப்படி தான் ராஜ். இன்னும் பலமா இரண்டு அடி போடுங்க என் சார்பா” என்றாள் கைத்தட்டியபடி.

“ஓகே மிது” என்று சந்தோஷமாக சொன்ன
ராஜ் தீரனின் மறுகன்னத்தில் இன்னொரு அறை வைத்தான்.

தீரன் பரிதாபமாக முழிக்க மிதுராவோ அப்படியே தலையிலே கொட்டு ராஜ் என்றாள் சப்தமாக.

ராஜ்ஜும் அவளது வேண்டுதலை சிரித்தபடி நிறைவேற்ற தீரனோ ராஜ்ஜின் சட்டைக்காலரைப் பற்றி வெகு அருகில் இழுத்து கிசுகிசுத்தான்.

“மச்சான். நான் உன்னை அடிக்கிறா மாதிரி நடிக்க தானே சொன்னேன். இப்போ என்னடா நிஜமா அடிக்கிற. அதுவும் அவள் என்னை காப்பாத்த வராம நல்லா போட்டு அடிங்கனு சொல்லிட்டு ரெஸ்ட்லிங் மேட்ச் பார்த்துக்கிட்டு இருக்கா?” என்று தீரன் மெல்லிய குரலில் பரிதாபமாக கேட்க,

“மிது கேட்டு என்னாலே செய்யாம இருக்க முடியாது. அவள் என் நண்பி. நீ பதிலுக்கு என்னைப் போட்டு அடிடா. அப்போவாவது ஏதாவது எமோஷன் காட்டுறாளா பார்ப்போம்.” என்று யாரும் பார்க்காதவாறு வாயசைத்த ராஜ் மீண்டும் தீரனின் கன்னத்திலேயே ஒரு அடி வைத்தான்.

“என்னையே அடிக்கிறியா. உனக்கு இருக்குடா” என்ற தீரன் ராஜ்ஜைப் பிடித்துக் கொண்டு தரையில் உருளத் துவங்க

“கமான் தீரா அப்படி தான். இன்னும் நல்லா நாலு அறை கன்னத்துலேயே போடு” என இப்போது அதிதி கத்தினாள்.

“கமான் ராஜ். உங்களையே அடிச்சுட்டான். அவனை விடாதீங்க. அவனைப் போட்டு குமுறி எடுங்க” என மிதுரா இன்னொரு பக்கம் பெருங்குரலோடு சொன்னாள்.

இவர்கள் இருவரின் கத்தலைப் பார்த்து ‘ஙே’ என நின்றுக் கொண்டிருந்தனர் அபியும் சிற்பியும்.

கீழே உருண்டு புரண்டு கொண்டிருந்த ராஜ், அதிதியின் கத்தலைக் கேட்டவுடன் கோபமாக தீரனின் வயிற்றில் ஒரு குத்துவிட்டான்.

தீரனோ மிதுரா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு ராஜ்ஜின் முகத்தில் இன்னொரு குத்துவிட்டான்.

இவர்கள் இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்ள அதுவரை சிலையென சமைந்து நின்ற அபி, அந்த ரெஸ்ட்லிங் போட்டியின் ரெஃப்ரியாக நடுவில் நின்றுக் கொண்டு கையைக் காட்டி நிறுத்த முயன்றான்.

அதுவரை அடித்துக் கொண்டிருந்த தீரனும் ராஜ்ஜூம் ஒரு சேர அபியை கோபத்தில் எட்டி உதைக்க சிற்பிகா அவனை விழாமல் பிடித்துக் கொண்டாள்.

“சிற்பிமா என் உயிரைக் காப்பாத்திட்டேடா தங்கமே” என்றான் அவளது கைகளை இறுகப் பற்றியபடி.

தீரன் ராஜ்ஜின் காதுகளில் குசுகுசுப்பாக “மச்சான் இந்த அக்காளும் தங்கச்சியும் சேர்ந்துக்கிட்டு நம்மளை உண்மையாவே அடிச்சுக்க வைச்சுடுவாங்க போல. சண்டை போட்டது போதும் எழுந்துக்கலாம்” என்று சொல்ல ராஜ் முதலில் எழுந்து நின்று  தீரனை நோக்கி  கையை நீட்டினான். 

அவன் அந்த கைகளை இறுகப் பிடித்தபடி எழுந்து நின்றுவிட்டு ராஜ்ஜின் கசங்கிய சட்டையை சரி செய்ய ராஜ்ஜோ தீரனின் கசங்கிய சட்டையை சரி செய்தான்.

சிறிது நேரத்திற்கு முன்பு இவர்கள் அடித்துக் கொண்டார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாதபடி அப்படியொரு அன்னியோன்யம் இருவரது செயலிலும் விரவிக் கிடந்தது.

“சிற்பி, இதுக்கு முன்னாடி தானே பாட்ஷா – ஆன்டனி மாதிரி சண்டைப் போட்டுக்கிட்டாங்க. இப்போ ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் படத்துல வர விஜய் – சூர்யா மாதிரி இருக்காங்க. என்ன தான் நடக்குது இங்கே” என்று அபி குழம்பியபடி கேட்க மிதுராவோ சின்னசிரிப்போடு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் வெளியே செல்வதைப் பார்த்த தீரன் வேகமாக மிதுராவின் பின்னால் சென்று, பக்கத்தில் காலியாக இருந்த கான்ஃபரென்ஸ் அறையில் அவளைத் தள்ளிக் கொண்டு போனான்.

“தீரா இப்போ எதுக்கு என்னை இந்த ரூம்க்குள்ளே தள்ளிட்டு வந்தே. ஒழுங்கா வழியை விடு” என அவள் நகர முயல அவனோ அவளது முன்பு இரு கையை நீட்டித் தடுத்தான்.

“மிது, எதுக்காக ராஜ்ஜை என்னை அடிக்க சொன்னே?” என்றுக் கோபமாக கேட்க அவள் விழிகளை சுருக்கி ஒரு பார்வைப் பார்த்தாள்.

அதைப் பார்த்து தடுமாறியவன், “ஏன் அடிக்க சொன்னேனு கேட்டதுக்கு இப்படி சந்தேகமா குறுகுறுனு என்னையே பார்த்தா என்ன அர்த்தம்” என்றான் முகத்தை எங்கோ பார்த்தபடி.

“தீரா உனக்கு நடிக்க வராதுல. அப்புறம் ஏன் நடிக்க ட்ரை பண்ற. எனக்கு பச்சையா தெரிஞ்சது நீ தான் உன்னை அடிக்க சொல்லி ராஜ் கிட்டே சொன்னேன்றது”

“அவ்வளவு பச்சையாவா தெரிஞ்சது” என்றான் அசட்டு சிரிப்பு சிரித்தபடி.

“என்ன ஆனாலும் உன் நண்பனை விட்டுக் கொடுக்காத நீ, இந்த சின்ன விஷயத்துக்காக சண்டை போடுறதை எப்படி என்னாலே நம்ப முடியும். அதான் ராஜ் கிட்டே நல்லா நாலு போட சொன்னேன்” என்றாள் சிரித்தபடி.

“மிது, என்னையும் என் நட்பையும் புரிஞ்சுக்கிட்ட  நீ என் லைஃப் பார்ட்னரா வரதுக்கு நான் எவ்வளவு கொடுத்து வெச்சு இருக்கனும் தெரியுமா” என்றான் அவளை தன்னருகில் இழுத்தபடி.

“ஹலோ ஹலோ எனக்கு உன் மேலே இருக்கிற கோபம் இன்னும் போகல. அப்புறம் எப்படி லைஃப் பார்ட்னர் ஆக முடியும். நம்ம தான் எப்பவோ ப்ரேக் அப் பண்ணியாச்சே” என்றாள் அவனைத் தள்ளிவிட்டபடி.

சட்டென அவளது கைகளைப் பிடித்தவன் அங்கே இருந்த பிரதிபலிக்கும் கண்ணாடி சுவரருகே கொண்டு சென்று நிறுத்தி பின்னால் இருந்து இறுக்கி அணைத்தவாறே மெதுவாக அவளது காதுமடலைத் தீண்ட அவளது உடல் முழுக்க சட்டென வெட்க நதி பாய்ந்தது.

“தீராமா” என்று மென்மையாக ஒலித்த அவன் குரலைக் கேட்டு “ஹ்ஹ்ம்ம்” என ஈனஸ்வரத்தில் முனங்கியது அவள் உதடு.

“நீ என்னோட லைஃப் பார்ட்னர் இல்லையா?” என்றுக் கேட்டபடி அவளது கழுத்தை வருடினான். இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த சின்ன சின்ன பூனை முடிகள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றன.

அந்த சிலிர்ப்பை ரசனையாய்ப் பார்த்தவன் வேகமாக அவளைத் தன் பக்கம் திருப்பினான்.

இருவரி ஹைக்கூ கவிதையாய் இருந்தது அவளது உதடுகள். செவ்வரியோடிய இதழ்களைப் பார்த்ததும் படிக்கத் தூண்டியது மனது.

சித்தாரின் கம்பியாக அவனது விரல்கள் மெல்ல அவள் இதழை மீட்டிப் பார்க்க அதில் இருந்து காதலின் ஸ்வரங்கள் கசிந்தது.

அவள் முகமெங்கும் குங்குமத்தைக் கொட்டியதைப் போன்ற சிவப்பு.

அவளது நாணத்திலும் முகச்சிவப்பிலும் தீரன் மெல்ல மெல்ல தன்னை இழக்கத் துவங்கியிருந்தான்.

இருவருக்கிடையே இருந்த அந்த மெல்லிய தூரத்தை தன் இதழ்களால் கடக்க நினைத்தவன் மெல்ல அவளை நெருங்கியவாறே “இவ்வளவு காதலை கண்ணுலே வெச்சுக்கிட்டு ப்ரேக்-அப் பண்ணிக்கலாம்னு இனி சொல்லுவியாடி” எனக் கேட்டபடி அவள் இதழ்களை தன் உதடுகளால் சிறைப்பிடிக்க முனைந்த நேரம் அவன் நாசியில் விழுந்து உடைந்தது அவள் கண்ணீர்.

மின்னல் தாக்கிய மரமாய் சட்டென்று அவனது உணர்வுகள் எல்லாம் ஒரே நொடியில் கருகிப் போக ஸ்தம்பித்து நின்றவனின் சட்டைக் காலரை மிதுரா அழுகையோடு பிடித்து இழுத்தாள்.

“அப்புறம் ஏன்டா நீ அவ்வளவு காதலை   வெச்சுக்கிட்டு என் கிட்டே ப்ரேக்-அப் சொன்னே? என்னை ஈசியா உன்னாலே தூக்கிப் போட முடிஞ்சுடுச்சுல” என மிதுரா கேட்க தீரனின் முகத்தில் கண்ணீர் கோடாய் வழிந்தது.

அவனிடம் பதில் மொழி இல்லை.

கண்ணீரை துடைத்தபடி செல்லும் மிதுராவையே தடுக்க வார்த்தைகளின்றி மௌனமாய் வெறித்தான்.

அதன் பின்பு வீடு வந்து சேரும் வரை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்த மிதுராவிற்கு தன்னை நினைத்தே கோபமாக வந்தது. அவளுக்கு தீரனின் மீதிருந்த கோபம் போய்விட்டது தான். ஆனால் ஆறாமல் இருக்கும் இந்த வருத்தத்தைத் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.

காதலோடு நெருங்கியவனை கண்ணீரோடு நிற்க வைத்துவிட்டோமே என மனது தவித்துக் கொண்டிருந்த நேரம்
அவளின் விழிகளில் விழுந்தது அந்த பாக்கெட் சைஸ் ரேடியோ.

எப்போதும் சோகமாய் இருக்கும் போது ஆதனின் தோளில் சாய்பவள் இன்றும் சாய விரும்பினாள்.

ஆனால் ஒலியாக அல்ல. ஒளியாக!

தனது அலைப்பேசியை எடுத்தவள் “ஐ வான்ட் டூ மீட் யூ” என்று  குறுஞ்செய்தி அனுப்பிய அடுத்த நொடியே, “பீச் ஓகே வா” என்ற கேள்வி உட்பெட்டியில் விழுந்தது.

ஓகே என்று பதில் அனுப்பியவள் நேராக அந்த கடற்கரையில் வந்து நின்றாள்.

உயர்ந்து தாழ்ந்து அடங்கி கொண்டிருந்தது அலை முத்துகள். இப்படி தானே வாழ்க்கையும் உயர்ந்து தாழ்ந்து அடங்கி கொண்டிருக்கிறது என பெருமூச்சுவிட்ட நேரம் அவளின் முன்பு தீரன் வந்து நின்றான்.

ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தவர்களின் இடையே புகுந்து ஒளிர்ந்தது சந்திரனின் கிரணத்தூறல்கள்.

இருவரிடையே வீசிய அந்த மௌனப்புயலை கரை கடக்க செய்தது மிதுராவின் வார்த்தை.

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் இப்போ என் ஆதன் கூட பேசணும். அவனோட தோளிலே சாஞ்சுக்கனும்.” என்று சொன்னவள் அவனது தோளை சுட்டிக் காட்டி “சாஞ்சுக்கவா?” என்றுக் கேட்டாள்.

அடுத்த நொடியே தனது தோள்களில் சட்டென்று அவளை தாங்கிக் கொண்டான் ஆதன்.

இருவரது கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அதை துடைத்தபடியே எதிரே இருந்த கடற்கரையை வெறித்தனர்.

“உன்னை அந்த தீரன் ரொம்ப கஷ்டப்படுத்தேறான்ல மிதுரா” என ஆதன் கசந்த புன்னகையோடு கேட்டான்.

“ஒரு சின்ன மெயில் எங்க வாழ்க்கையை புரட்டிப் போட்டுடுச்சு ஆதா. தீரன் மேலே இருந்த கோவம் கொஞ்சம் கொஞ்சமா போயிடுச்சு. ஆனால் என்னை ஈஸியா வேண்டாம்னு சொல்லிட்டானேன்ற வருத்தம் மட்டும் என் மனசை குத்திக்கிட்டே இருக்கு . நான் அவனுக்கு முக்கியமில்லாதவளா போயிட்டேன்னு நினைக்கும் போதுலாம் கஷ்டமா இருக்கு. என்னாலே அவனை மன்னிக்க முடியல” என மிதுரா சொல்ல ஆதன் அவளது கைகளை தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான்.

“மிது இந்த தீரன் பையன் இருக்கான்ல அவன் நட்புக்காக உயிரையும் கொடுக்கிறவன். அவனுக்கு காதல்  முக்கியமா தெரியாது. அதோட அருமை புரியாது. அதனாலே அவனை நீ மன்னிக்காதே. காதலிக்காதே” என்ற ஆதனின் வார்த்தைகள் மிதுராவுக்குள் திகைப்பை ஏற்படுத்தியது.

“அப்போ நான் தீரனை காதலிக்க வேண்டாம்னு சொல்றியா ஆதா?” என்று அதிர்வுடன் கேட்டவளின் நெற்றியில் இதமாக முத்தமிட்டவாறே ஆமாம் என்று தலையசைத்தான்.

“உன்னை அளவுக்கு அதிகமா காதலிச்சது தீரன் இல்லை, கார்த்திக் தான். உன்னையும் உன் கவிதையையும் அதிகமா ரசிச்சவன் கார்த்திக். எங்கே காதலிச்சுடுவோமோனு பயந்து பயந்தே காதலிலே விழுந்தவன் அவன்.
உனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு யோசிச்சு மனசுக்குள்ளே மருகுனவன் அவன் தான்.
அதனாலே அந்த தீரனை ப்ரேக்-அப் பண்ணிட்டு கார்த்திக்கை லவ் பண்ணு” என்ற ஆதனின் வார்த்தைகள் மிதுராவின் மனதினில் அதுவரை வீசிக் கொண்டிருந்த வருத்தப் புயலை வலுவிழக்க செய்தது.

புன்னகையோடு ஆதனை இறுக அணைத்து கொண்டாள்.

“ஆமாம் இப்போ நீ கட்டிப்பிடிக்கிறது ஆதனையா,தீரனையா இல்லை கார்த்திக்கையா?” என்றுக் கேட்டான் குறும்பாக.

“சந்தோஷத்திலேயும் வருத்தத்திலேயும் என் ஆதனோட தோளிலே தான் எப்பவும் சாய்வேன்” என்றவளின் பதிலுக்கு “ஓ” என்றான் உதடு குவித்து.

“மிஸ்டர். ஆதன் இப்போ நீங்க போயிட்டு தீரனை வர சொல்லுங்க. அவன் கிட்டே பேசணும்.” என அவள்  சொல்ல ஆதனோ நீர்ப்பட்ட கோழியாய் உடம்பை சிலுப்பி நிமர்ந்தான்.

இப்போதோ எதிரில் தீரன்.

மிதுரா தீரனைப் பார்த்ததும் கோபமாய் முறைத்தாள்.

“டேய் தீரா. இனி உனக்கும் எனக்கும் ஒன்னுமில்லை. ப்ரேக்-அப் பண்ணிக்கலாம்” என மிதுரா சொல்ல இருதய நோயாளியைப் போல நெஞ்சைப் பிடித்துக் கொண்டான் தீரன்.

“போதும் போதும் ஆக்டிங் கொடுத்தது. நீ போயிட்டு என் கார்த்திக்கை அனுப்பு” என அவள் சொல்ல தீரன் மீண்டும் உடம்பை சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்தான்.

இப்போது எதிரே கார்த்திக்.

மிதுராவை காதலாகப் பார்த்தவன்  “மிதுமா. நாம மறுபடியும் முதலிலே இருந்து காதலிக்கலாமா?” என கண்களில் காதலைத் தேக்கியபடி கேட்க சட்டென்று மிதுரா அவனது கன்னத்தில் தன் இதழைப் பதித்தாள்.

முதலில் ஆனந்த அதிர்வுக்குள் சிக்கி கொண்டவன் அடுத்த நொடியே அவளது இதழை சிறைப்பிடித்திருக்க காதல் மழைச்சாரல் அவர்களின் மீது மெல்ல வீச துவங்கியது.

காதல் தீண்டியதோ!