வெண்பனி 12

IMG-20220405-WA0023-e578100a

வெண்பனி 12

பனி 12

ஒளியிலே தெரிவது தேவதையா

ஒளியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீ இல்லையா

இது நெசமா நெசம் இல்லயா

உன் நெனவுக்கு தெரியலையா

கனவிலே நடக்குதா கண்களும் கண்கிறதா கண்கிறதா

ஓடையிலிருந்து திரும்பியவர்கள், மொபைல் டார்ச்சின் வெளிச்சத்துடன் தட்டு தடுமாறி மரவீட்டை அடைந்தனர். இப்போதுதான் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

இந்த காட்டில் பெரிய விலங்குகள் இல்லை என்றாலும், விஷ பூச்சிகள் நிச்சயம் இருக்கும். பொதுவாக வெளிச்சத்தில் ஒளிந்து கொள்ளும் பூச்சிகள் இருளில் மகிழ்ச்சியாக நடமாடும். அதன் நடமாட்டம் ஆரம்பிக்கும் முன் மரவீட்டை பாதுகாப்பாக அடைந்தது பெரும் நிம்மதி. 

ஒரு ஆள் வசதியாக படுத்துக்கொள்ளும், அளவிலிருந்த அந்த மர வீட்டின் சுவற்றில், முதுகை நன்றாக சாய்த்து, காலை நீட்டி, அமர்ந்து கொண்டான் கதிர். 

“ஏய்! நீ நல்லா ஜாலியா காலை நீட்டி உக்காந்துட்டா, நான் என்ன பண்றது?”

“உனக்காக ஓடோடி வந்தேன்ல எனக்கு கால் வலிக்காதா?”

“நானா உன்ன வர சொன்னேன்? இப்ப நான் எங்க உக்காருறது?” என சலித்தாள்.

அவள் முகத்தை சில நொடிகள் குறுகுறுவென பார்த்தவன் , எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், அவளது கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான். அவன் இழுப்பான் என்பதை எதிர்பார்க்காதவள், அவன் மடியிலேயே விழுந்தாள். அதில் பயந்து போனவள் அவன் மார்பில் முகம் புதைத்தாள். 

கதிர் சுகமாக அதிர்ந்தான். தன்னவளை இறுக்கி அணைக்க கைகள் பரபரத்தது. அதை கட்டுப்படுத்திக் கொண்டவன்,”பனி” என்றான் பட்டுப்போன்ற மென்மையான குரலில். ஆனால் குரலுக்கு மாறாக இதயம் முரசு கொட்டியது.

“ம்” வெறும் காற்று தான் வந்தது. இதுவே முதல் முறை ஒரு ஆணின் இத்தகைய நெருக்கம். அவளை தடுமாற வைத்தது. அன்புவுடன் சிறுவயது முதல், நெருங்கி பழகிருந்தாலும் அவளை தடுமாறவைத்ததில்லை.

“என்னை பாரு”

“ம்கும்” காதில் ஜிமிக்கி அசைந்தாட மறுத்து தலையாட்டினாள். அவள் முகம் அவனின் மார்பை உரச, உரச உயிரில் தீப்பற்றிக் கொண்டது. இதை இப்படியே தொடர்ந்தால், எங்கு முடியும்? என்பதை உணர்ந்தவன்,

“என் நெஞ்சை உனக்கு வாடகைக்கு கொடுத்திருக்கேனா? அப்படியே தூங்கிடலாம்னு ஐடியாவா?” சீண்டினான். இந்த சீண்டல் வேலை செய்தது. தடுமாறிக் கொண்டிருந்த பெண் விழித்தாள். 

இதுவரை அவனது இதயத்துடிப்பை ஆராய்ந்து கொண்டிருந்தவள், இப்போது அவன் முகம் பார்த்து,”ரொம்ப ஆசைதான்”என நொடித்தாள். 

“ஏன் நான் ஆசைப்படக் கூடாதா?” சரசம் பேசினான்.

“படலாமே நல்லா ஆசைப்படலாமே.” என ராகம் பாடினாள்.

“இல்லனு சொல்லி பாரு, அப்பறம் என்ன பண்ணுவேன்னு தெரியும் ” வீரம் பேசினான்.

“?” புருவமுயர்த்தினாள்.  

“எனக்கு தான் அதுக்கான ஃபுல் ரைட்ஸும் இருக்குடி” தன் சட்டை காலரை பெருமையாக துக்கினான். 

உடல் இறுக்கியவள், அவனை இகழ்ச்சியாக பார்த்து,”போ போய் உன்னோட அத்தை பொண்ணுகிட்ட அந்த ரைட்ஸ காமி.”

நிதர்சனம் மண்டையில் உரைத்து, முகம் சுருங்கியது ஆண் அவனுக்கு. அதை மறைத்துக்கொண்டவன்,”என்னோட மாமா பொண்ணு, உன்கிட்ட எல்லாத்துக்கும் எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு.” என அழுத்தி சொன்னான்.

“ரொம்ப கனவு கானாத” உதடு சுழித்தாள். 

“ரொம்ப சுழிக்காதடி, ஏடாகூடமா ஏதாவது பண்ணிட போறேன்.”

“நீ எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட. எனக்கு தெரியாதா?” என கண்ணடித்தாள். நொடியில் அவளது இறுக்கும் மறைந்திருந்தது.

“அதுக்கு சரிப்பட்டு வருவேனா? மாட்டேனா? இப்பவே புரூஃப் பண்ணவா?” என அவள் இதழ்களை நெருங்கினான்.

“ச்சீ போ! நீ ஒன்னும் புரூஃப் பண்ண வேண்டாம்” அவன் மடியிலிருந்து இறங்கி கீழே அமர்ந்தாள். 

மொபைல் வெளிச்சத்தில் தேவதையென தெரிந்தவளை கள்ள புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

“ரொம்ப நேரம் லைட் எரிஞ்சா, பேட்டரி சுத்தமா டவுனாயிடும். அப்புறம் டவர் கிடைச்சா கூட யாரையும் காண்டாக்ட் பண்ண முடியாது.” என சொல்லி இருந்த சிறிது வெளிச்சத்தையும் அணைத்தான். 

அந்த இடத்தில் காரிருள் சூழ்ந்தது. அச்சம் கொண்ட பெண், அவனை நன்றாக நெருங்கி அவன் கையிடுக்கில் தன் கைகோர்த்து அமர்ந்தாள். அவளின் இருட்டு பயத்தைப் பற்றி தெரிந்த கதிர், மெல்ல பேச்சு குடுத்து அவளின் கவனத்தை தன் மேல் வைத்துக் கொண்டான். 

ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவன் திடீரென,”பனி நான் சொல்றத கேளு, அந்த கௌதம் நல்லவன் இல்லை. அவன் உன்னை விரும்புறேன்னு சொன்னது காதல் இல்லை. அவனுக்கு நீ வேணும் அவ்வளவுதான். உன்கூட நட்புன்னு சொல்லி பழகுறதும் அதுக்குதான். உன்னை தடுக்க முயன்றால், நான் சொல்றதுக்காகவே அவன் கூட பழகுவ. அதனால இத்தன நாள் பேசாமலிருந்தேன். இப்ப குற்றாலம் வரைக்கும் வந்து, அவன் கூட தனியா வேற இருக்க. ஏதாவது தப்பா நடந்திருந்தால் என்ன பண்றது? இனி நீ ஜாக்கிரதையாக இரு.” நீண்ட நேரம் தனியாக பேசிக் கொண்டிருந்தான். 

‘அவளிடம் ஒரு சத்தமுமில்லை’ அதை உணர்ந்து திரும்பி பார்க்க, அந்த இருளில் அவள் முகம் காண முடியவில்லை. அவன் தோளில் முகம் சாய்த்திருந்தவளின் கன்னத்தை தட்டி,”பனி” என்றான். 

“ம்” என்ற முனகல். அவள் உறங்கியிருந்தாள்.

‘சுத்தம் இவ்வளவு நேரம் பேசுனது, அத்தனையும் வேஸ்ட்’ என தலையில் அடித்துக் கொண்டவன்,”இம்ஸ புடிச்சவ” என சுகமாக அலுத்து, அந்தக் குறுகிய இடத்தில் அவளை வசதியாக படுக்க வைத்தான்.

அவனும் அமர்ந்தவாறு கண்ணயர்ந்தான். குளிர் ஊசியாக எலும்பை ஊடுருவியது. திடீரென அவன் உடல் உஷ்ணம் ஏறிதியது, பனிமலர் அவனை நெருங்கி படுத்ததாள்.

குளிரில் அவள் நடுங்கி கொண்டிருப்பதை, இவனால் உணரமுடிந்தது. “இம்ஸ” என தலையை இருபுறமும் சலிப்பாக ஆட்டி, வசதியாக படுத்துக்கொண்டு, அவளை தன் கையனைவிற்கு கொண்டு வந்தான். 

அவளும் இவனின் உடல் கதகதப்பில், அவனை நன்றாக நெருங்கி, அவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி, வஞ்சியவள் துயில் கொண்டாள். வஞ்சியின் நெருக்கத்தில், காளையவன் தடுமாறினான். இப்போது அவன் உடல் நடுங்கியது, அது குளிரினால் அல்ல.

தவறு என தொரிந்தே அவளின் இடையோடு கையிட்டு, தன் உடலோடு நெருக்கி அணைத்தான். ‘கொள்றடி கண்ணம்மா’ என முனுமுனுத்தவன், அவள் நெற்றியில் தன் முதல் முத்தத்தை மென்மையாக பதித்தான். 

காற்று கூட நுழையாதளவு, அவளை நெருக்கமாக அணைத்தவன், உணர்வுகளின் பிடியில் அவளுக்கு போர்வையாக மாறினான். இது எதையும் அறியாத வஞ்சியோ ஆழ்ந்த உறக்கத்தில். 

†††††

இவர்களின் நிலை இப்படி இருக்க, அங்கு வீட்டில் பெரிய போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. மாலை வீட்டிற்கு திரும்பிய அன்பு, அவர்கள் இன்னும் திரும்பாததை கண்டு திகைத்துப் போனான்.

ஜோடி புறாவில் ஒரு புறாவை காணாமல் கேள்வி எழுந்தது. அன்பரசனும் நடந்ததை சுருக்கமாக கூறினான். “காலேஜ கட் அடிச்சுட்டு அப்படி என்ன ஊர் சுத்த வேண்டி கிடக்கு?” என ஆளாளுக்கு அவனை போட்டு வறுத்து எடுத்தனர். 

அவர்களின் வசவு மொழி எதுவும் அவன் செவியை தீண்டவில்லை. அவன் கவலை முழுவதும் அவனின் மொட்டுவின் மேலிருந்தது. ‘சும்மாவே அவங்க ரெண்டு பேத்துக்கும் ஆகாது. இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலையே?’ என அவன் மனம் தவித்தது. ‌‌

இருள் ஆரம்பிக்க அனைவர் மனதிலும் பயம் கவ்வியது. இருவரையும் தேடி தந்தைமார்கள் ஐந்தருவியை நோக்கி கிளம்பிவிட்டனர். அங்கு கதிரின் பைக் மட்டும் அனாதையாக நின்றது. 

சில நம்பிக்கையான ஆட்களை கொண்டு காட்டில் அவர்களை தேடும் முயற்சியில் இறங்கினர். அதன் பலன் என்னமோ பூஜ்ஜியம். இருள் சூழ்ந்து விட்டதால் டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன், அதிகம் தேட முடியவில்லை. காலை பார்த்துக் கொள்ளலாம் என பின்வாங்கினர்.

‘என் மாமாவுடன் இந்த பனிமலர், எப்படி ஓரிரவு தனியாக தங்கலாம்?’ என தீப்தியின் மனம் வஞ்சத்தை வளர்த்தது. 

‘ஐயோ! நான் போட்ட கணக்கு எல்லாம், தவறாய் போய்விடுமா?’ என சுகந்தியின் மனம் பயந்தது.

‘இருவரும் பத்திரமாக திரும்பி வரவேண்டும்’ என மற்ற அனைவர் மனமும் வேண்டிக் கொண்டது.

விடிந்தது

முதலில் கண்விழித்த பனிமலர் தன் மேலுள்ள பாரத்தை உணர்ந்து, தலையை நிமிர்த்தி பார்த்தாள், அவள் கண் முன் தெரிந்தது கதிர் அரசனின் முகம்.

பாதி தூக்கத்திலிருந்தவள் தன்னை மறந்து,”குட் மார்னிங் கதிர் மாமா” என்றவள், பிறகே அவன் அணைப்பில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, பதை பதைத்து விலகினாள். அவளின் விலகலில் அவன் கண் விழித்தான். 

அவளை கண்டவன், எப்போதும் சீண்டுவது போல்,”நீ என்னை தூங்கவே விடல.  நைட் ஃபுல்லா செம்மயா கம்பெனி குடுத்த. அப்பா உடம்பு ஃபுல்லா வலிக்குது. மாமாக்கு வலி போக ரெண்டு கிஸ் குடு செல்லம்.” என உடலை முறுக்கி அவளை நெருங்கினான்.

அவனிடமிருந்து அவசரமாக விலகி தன்னை ஆராய்ந்தாள். ஒன்றும் கண்டுபிடிக்க முடிவில்லை. முகம் ஆளுகைக்கு தயாரானது.

அவளது முக மாற்றத்தை கண்டவன்,”ஹே டோன்ட் பேனிக். குளிருக்காகதான் அப்படி… ஜஸ்ட் கட்டிபிடுச்ச. தப்பா எதுவும் நடக்கல. பயப்படாத.”

அவன் வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலித்தது. இருந்தாலும் ,”இதுவே தப்பு. இதுக்கு மேல வேற நடக்குனுமா? என்ன தைரியம் இருந்தா என்னை கட்டிப்பிடிச்சிருப்ப?” என சீரினாள். 

“ஏய் எதுடி தப்பு. என்னமோ நான் உன்னை கட்டிபிடிச்சது மாதிரி சொல்ற? நீ தான் முதல்ல….” தொடர முடியாமல் திணறினான். அவளை குறை சொல்வது போலாகிவிடும். 

“ஏன் நிறுத்திட்ட? சொல்லு முழுசா சொல்லி முடி. நான் தான் உன்கிட்ட மிஸ் பிகேவ் பண்ணினேன்னு.”

“ஏய் இப்படி எல்லாம் பேசாதடி மனசு வலிக்குது”

“உனக்கும் எனக்கும் எப்பவும் ஆகாதுல்ல? அப்பறம் எதுக்கு என்னை கட்டிப்பிடிச்ச? இனி என் கூட பேசாத.” 

“பனி நான் சொல்றதை கேளுடி” என இறஞ்சினான். அவளோ அவன் சொல்வதை கேட்க மாட்டேன் என காதை மூடிக்கொண்டாள். அதில் நொந்து போனவன் அவளை கூட்டி சென்று ஓடையில் முகம் கைகள் கழுவி, மீண்டும் பாதையை தேட தொடங்கினர். 

இவர்களது நல்ல நேரம், தந்தை அனுப்பிய, காட்டை பற்றி தெரிந்த மனிதர்கள் இவர்களை கண்டு கொண்டனர். 

†††††

மதியம் நெருங்கும் நேரம் இவர்கள் வீட்டில் நுழைந்தனர். இவர்களைக் கண்டவுடன் அன்பரசன் ஓடி சென்று பனிமலரை அணைத்துக் கொண்டான். அதை கண்ட கதிரின் மனதிலோ கோபம் கொழுந்து விட்டெறிந்தது.

‘நான் கட்டிப் பிடிச்சா தப்பு, அவன் பண்ணா சரியா?’ என கோபத்தில் மனம் வெம்பியது.

அவளைக் கட்டிக் கொண்டிருந்த அன்பரசோ,”சாரிடி மொட்டு. நான் உன்னை விட்டுட்டு வந்திருக்கக் கூடாது. என்ன ஆச்சு? நான் ரொம்ப பயந்துட்டேன்.”

“எனக்கு ஒன்னும் இல்லை அரசு. நல்லா இருக்கேன்.” என அன்புவை சமாதானப்படுத்தியவள், அனைவருக்கும் பொதுவாக,”எங்களை ஒரு குரங்கு துரத்துச்சு. அதுல பயந்து காட்டுக்குள்ள ஓடிட்டோம். வழி தெரியாம மாட்டிக்கட்டோம்.” என ஒரு புதிய கதையை புனைந்தாள். பாவம் இவள் சொன்ன கதையை அனைத்து அப்பாவி ஜீவன்களும் நம்பியது.

“சரி போங்க, போய் குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம். நேத்தும்  எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க.” என்ற தாத்தாவின் கணீர் குரல் அங்கு ஓங்கி ஒழித்தது.

இவள் சொல்லும் கதையை கையைக் கட்டி பார்த்துக் கொண்டிருந்த கதிர், தோள்களைக் குழுக்கிகொண்டு அவன் அறைக்குள் நுழைந்தான். கதவை சாத்தியது தான் தாமதம், ‘இவள் சொன்ன கதையை நினைத்தும், அதை குடும்பத்தார் நம்பியதை நினைத்தும்.’ விழுந்து விழுந்து சிரித்தான்.

தன் அறைக்கு செல்லும் பனிமலரை வழிமறித்தாள் தீப்தி.”உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? என் மாமா கூட நீ பேசக்கூடாது, பழகக்கூடாது.”

கையை கட்டிக்கொண்டு, அவளை உறுத்து விழித்தாள் பனிமலர்.”அவர் பின்னாடி நான் போய் பேசி பழகுனதை நீ பார்த்தியா?” சீறிப்பாய்ந்தது கேள்வி.

“அதை நான் வேற பாக்கணுமா? அதுதான் ஒரு கதை சொன்னியே, என்னமோ குரங்கு துறத்துச்சாம், காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டாங்களாம். அதை மத்தவங்க வேணா நம்பலாம் நான் நம்ப மாட்டேன். என்ன ஒரு நாள் மாமா கூட இருந்துட்டா, அவரை மயக்கிடலாம்ன்னு நினைப்பா?” வார்த்தைகள் விஷ அம்புகளாக பாய்ந்தது தீப்தியிடமிருந்து.

அவளின் வார்த்தைகளை கேட்ட பனிமலருக்கு, அவளை சப்பென்று அறைய வேண்டுமென தோன்றியது. தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவள்,”வார்த்தையை அளந்து பேசு. எனக்கு உன் மாமாவை மயக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.”

“அப்புறம் எதுக்கு அவர் கூட ஒரு நைட் தங்குன?”

கண்களை இறுக மூடி திறந்தவள்,”சந்தர்ப்பம் அது மாதிரி அமைஞ்சு போச்சு.” என பல்லை கடித்தாள்.

“அந்த சந்தர்ப்பத்தை நீதான் உருவாக்கின?” மீண்டும் குற்றம் சுமத்தினாள்.

“நான் ஒன்னும் அவர் பின்னாடி போகல, அவர்தான் வந்தார். எனக்கும் அவர் என்னை கட்டுப்படுத்துவது பிடிக்காது. என்னை தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு, நீயே அவர்கிட்ட சொல்லிடு.” என அவளின் முகத்தில் அடித்த மாதிரி கூறி சென்றாள் பனிமலர்.

‘இப்படி இருக்கும் போதே இவ்வளவு திமிரா பேசிட்டு போற. இதுல அப்பன் ஆத்தானு இருந்தா எவ்வளவு ஆடுவ? உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டேன்.’ என் மனதில் கருவினாள் தீப்தி.

†††††

அன்று முதல் யாருக்கும் காத்திருக்காமல், நாட்கள் மாதங்களாகி, மாதங்களும் கடந்து இரண்டு வருடத்தை தொட்டது.

பனிமலர், அன்பரசன், தனா கல்லூரியில் நான்காம் ஆண்டில் இருந்தனர். கதிர் அரசன் குற்றாலத்தில் ஒரு ரிசார்ட் அமைக்க, மிகவும் ஆர்வமாக முயன்று கொண்டிருந்தான். தீப்தி தன் மூன்றாம் ஆண்டு கல்லூரி படிப்பை மதுரையில் தொடர்ந்தாள். 

கௌதம் கிருஷ்ணா தன் கல்லூரி படிப்பு முடியவும், தன் தந்தையுடன் இணைந்து தொழிலை நடத்தியவன், இப்போது புது பிரச்சினையை கிளப்பி உள்ளான். 

‘நானும் பனிமலரும் கடந்த மூன்று வருடங்களாக விரும்புகிறோம்’ என கூறி, தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு, அவளை பெண் கேட்டு அவள் இல்லம் நுழைந்தான்.

கௌதம் கிருஷ்ணா விரித்த வலையில் வீழ்வாளா?

தீப்தியின் வஞ்சத்தில் வீழ்வாளா? 

இவர்களிடமிருந்து காக்க முடியுமா நாயகர்களால்?

கதிர்? அன்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!