NN 14

NN 14

இரவு கௌதம் தனிமையில் சிவாவிடம் நடந்ததைக் கூறிய பொழுது கோவத்தில் சிவா கையிலிருந்த வீடியோ கேம் கண்ட்ரோல்லரை தரையில் விட்டெறிந்தான்.

“டேய் என்னடா நீ ? கோவத்துல இப்படி புசுக்குன்னு ஒடச்சுப்புட்டே. இது லிமிட்டட் எடிஷன் பீஸ் டா ! ” கௌதம் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் ” போடா ! லூசு உன்கிட்ட சொல்லிருக்கவே கூடாது. என் கண்ட்ரோல்லர்
போச்சு. தடியா ! ” விடாது புலம்பிக் கொண்டே இருக்க

பெருமூச்சுடன் முன்னும் பின்னும் கோவமாய் சிங்கம் போல் நடந்து கொண்டிருந்த சிவாவோ தணிந்த குரலில் ” சாரி டா. உன்னை என்கிட்டேந்து பிரிக்க இப்படி அப்பனும் பொன்னும் திட்டம் போட்றதா ? அதுவும் நிச்சயம் செய்றதுக்கு முன்னாடியே. அவர்கள் இரண்டு பேரையும் சும்மா கதற விடனும். ” என்று ஆக்ரோஷமாகக் கத்த.

” அதுங்க இரண்டையும் விட்டேனா பார் அவங்களால என் கேம் போச்சு ! பழிக்குப் பழி “ என்று போலியாய் கை முஷ்டியை கௌதம் முறுக்க

” டேய் ! நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் ? ” என்று சிவா கொதிக்க.

கௌதமோ ” பின்ன என்னடா ? உன் முகத்திற்கு இந்த ஆக்ரோஷமான டைலாக் எல்லாம் செட் ஆகலை ஒழுங்கா தட்டுறோம் தூக்குறோம் ! ” என்று சொல்லி கண்ணாடிதான்.

” நீ இல்லைனா நான் என்றைக்கோ பைத்தியம் ஆகி இருப்பேன் டா கௌதம் ” என்று சிவா அவனை அணைத்துக் கொண்டான்.

பாதி தூக்கத்தில் விழித்த காயத்ரி முகமெல்லாம் வேர்த்து விறுவிறுக்க விக்கித்து போயிருந்தாள் ‘இதற்கொரு முடிவே இல்லையா ? ‘ மனதில் குமுறியபடி ‘ இல்லை இந்த முறை அஜாக்கிரதையா இருக்கக் கூடாது ‘ டைரியில் முடிந்தமட்டும் அந்த கொடூர கனவினை குறித்துவைத்து மறுநொடி கௌதம் அறைக்கு ஓடினாள்.

“அண்ணா அண்ணா எழுந்துருங்க “ எத்தனை முறை அழைத்தும் உலுக்கியும் கௌதம் எழவில்லை ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான் . ‘வேறுவழி இல்லை ‘ அருகிலிருந்த தண்ணீர் ஜக்கில் இருந்த நீரை அவன் மேல் ஊற்றினாள். ஏஸீ குளிரில் தன் மேல் சில்லெனத் தண்ணீர் கொட்டப்பட “ ஐயோ ! “ என்று துள்ளிக் குதித்து எழுந்தான் கௌதம்.

நடந்ததைக் கிரகிக்க சில நொடி ஆனது அவனுக்கு.” ஹேய் காயு ! க்ரதாகி எதற்கு இப்படி தூங்குறவன் மேல் தண்ணி கொட்டினே ? லூசு ” என்று பொரிந்தவன் விளக்கைப் போட்டு காயத்ரியை கோவமாக நெருங்கினான் .

அவள் முகத்தைப் பார்த்தவன் அவள் கலங்கிய விழிகளைக் கண்டு தன்னை சமன் செய்துகொண்டு ” ஹே என்ன மா மறுபடி ஏதாவது கனவா? இப்போது எவன் என் தலையில் அடிச்சான் ? இல்லை மொத்தமா தீர்த்துக் கட்டிவிட்டானா ? ” என்று சற்று புண்முறுவலுடன் கேட்க.

” அண்ணா ! இப்படி பேசாதீங்க ! உங்களைக் கொல்ல பிளான் போடறாங்க ! நீங்க போற வண்டியை அடிச்சு தள்ள லாரி காரனிடம் யாரோ பேசிட்டு இருந்தான் ! அலுவலகத்திலிருந்து நீங்கப் புறப்பட்ட உடன் உங்களை பின் தொடர்ந்து இடிக்கும் படி சொல்லி இருக்கான் ! ” என்று அழ

” ஆஹா இந்த முறை மொத்தமா முடிக்கவே பிளான் பண்ணியாச்சா ? நீ இப்படி கனவு மூலமா கிராஸ் டாக் கேட்டு சொல்லுகிற வரை எங்களுக்கு என்ன கவலை சொல்லு ! ஆமா காயு எனக்கு ஒரு சந்தேகம் “ அவன் சீரியசாக கேட்க .

“என்ன அண்ணா ? “ கண்ணிலிருந்து விடாமல் விழும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கேட்டாள் .

“ காயு கண்ணா என்ன அடிக்கப்போகிறது என்ன லாரி ? மண் லாரியா ? தண்ணி லாரியா ? “ என்று குறும்பாய் உலகமகா சந்தேகத்தைக் கேட்க .

“அண்ணா ! “ அவர் ஆத்திரம் போங்க அவனைத் தாறுமாறாக அடிக்க .

” என்னடா கூச்சல் ? ” என்று கண்ணைக் கசக்கியபடியே வந்த சிவா காயத்ரி கௌதமை அடிப்பதைப் பார்த்து “ ஹே ஏண்டி அவனை அடிக்கிறே ? “ அவள் கையை பிடித்து இழுத்து “என்ன இது பழக்கம் ? “ முகம் கடுமையாக அவளை முறைக்க .

“ இவருக்கு அறிவே இல்லை ! நான் சொல்றது அவ்ளோ சாதாரணமா எடுத்துக்குறார் . என்னால முடியலை சிவா . இவருக்கு ஏதாவது ஆனால் என்னால் தாங்க முடியாது ! அப்புறம் என்னால் என்னை மன்னிக்கவே முடியாது ! “ அவள் கனவினை அவனிடம் சொல்லித் துடித்து அழ ஆரம்பித்தாள் .

சிவாவிற்கு பேரதிர்ச்சிதான் ஆனால் வெளிக்காட்டாமல் “என்னடா கௌதம் எதுல விளையாடுறதுன்னு இல்லை ? ” அவனைக் கடிந்து கொண்டான் .

கௌதமோ “ பின்ன என்னடா ? நானும் பாக்குறேன் எப்போ பார்த்தாலும். முதல்ல கட்டையால் அடிவாங்கினேன் லயா கையால . இப்போ என்னடானா தண்ணி லாரியோ மண்ணு லாரியோ . ஒரு கெத்தே இல்லாம இப்படி என்னைப் பத்தி கேவலமாகவே கனவு காணுவாளா ? “

இப்போது உதயாவும் வந்துவிட்டாள் “ என்னடா யாரும் தூங்கலையா ? நீ என்னடா நடுராத்திரியில் குளிச்சுட்டு தலையைக் கூட துவட்டாமல் நின்னுண்டு இருக்கே ? “ உதயா கௌதமை கேட்க

“ஆமா இதோ இந்த புண்ணியவதி தான் என்னைக் குளிப்பாட்டி விட்டா அதுவும் ஐஸ் தண்ணில ! “ கௌதம் காயத்ரியைக் காட்ட.

“ஹே காயு என்னடி ஆச்சு ? “ தோழியை நெருங்கி அவள் கண்ணைத் துடைத்துவிட்டவள் ஓரளவிற்கு யூகித்துக் கொண்டாள்.

சிவாவோ காயத்ரியைப் பார்த்து “ குட்டி பிசாசு ! உனக்கு என்ன இப்படியே கனவு வருது ? நல்ல கனவே வராதா ? ” என்று அவளை வம்பிழுக்க.

“அதானே ? அது என்ன எப்போது பார்த்தாலும் எனக்கே எதோ ஒன்று ஆகிற மாதிரி கனவு ? ஏன் உன் ஆளுக்கெல்லாம் உன் கனவில் ஒன்றும்ஆகாதா ? நல்ல நியாயம் மா! ” என்று கௌதமும் அவளைச் சிரித்துக்கொண்டே வம்பிழுக்க .

“ஐயோ உங்க யாருக்குமே ஏதும் ஆகவேண்டாம். அதானே நான் தினமும் கடவுளை வேண்டுகிறேன் . நான் செத்தா தான் இதெல்லாம் நிக்கும்னா நான் இப்போவே கூட செத்து போறேன் ! என் தலை…..“ அவள் முடிக்கும் முன்பு சிவா அவளை அறைந்து விட்டான் !

அவளோ விடாமல் மேலும் தேம்பித் தேம்பி அழ “ சிவா !! “ என்று சிவாவைப் பிடித்துத் தள்ளிவிட்ட கௌதமின் முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம் . “ என்னடா இது ? கையை ஓக்குற வேலை எல்லாம் வேண்டாம் என் கண்முன்னாடியே என் தங்கையை அடிக்கிறியா நீ ? இன்னொருமுறை அவளை நீ தொட்டே கையை உடைச்சுடுவேன் சொல்லிட்டேன் ! “

“ பின்ன என்னடா அறிவுகெட்ட முண்டம். எத்தனை முறை சொல்லுறது இவளுக்கு? ஏனோ தன்னால்தான் எல்லாமுமென்ற மாதிரி இவளா நெனச்சுக்க வேண்டியது.” கௌதமிடம் பொறுமியவன்.

உதயாவை பார்த்து “ இவளை அழைச்சுட்டு போ. இங்க இருந்தால் என்ன பண்ணுவேன்னு தெரியாது எனக்கு “ என்று கடுகடுக்க. அனைத்தையும் பார்த்து ஸ்தம்பித்துப் போயிருந்த உதயாவோ கட்டளைப் படி இயங்கும் இயந்திரம் போல காயத்ரியை அழைத்துக்கொண்டு அவள் அறைக்குச் சென்றாள்.

சிவாவும் கௌதமும் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

மறுநாள் காலை சிவா காயத்ரியிடம் பேசவே இல்லை. சொல்லிக் கொள்ளாமலே அலுவலகத்திற்குப் புறப்பட “ நான் பாத்துக்குறேன்! “ கிசுகிசுத்து விட்டு கௌதம் புறப்பட

“அண்ணா பத்திரமாக இருங்கண்ணா ப்ளீஸ் “ கையெடுத்து அவனைக் கும்பிட்டே விட்டாள் காயத்ரி.

“என்ன இது ? நான் பத்திரமாக இருக்கிறேன் . நீ கண்டதைப்போட்டு மனசை குழப்பிக்காம காலேஜ் கிளம்பு. பை கண்ணா” கௌதமும் விடை பெற்றான்

கல்லூரியில் இரண்டு வகுப்புகள் முடிந்து இடைவேளையில் ” காயத்ரி ! ராக்கேஷ் என்ன சொல்றான் ? ” என்று அவளை வம்பிழுத்தான் சுப்பு.

” டேய் நானே கடுப்பில் இருக்கேன். நீ ஏன்டா அவனை நினைவு படுத்துறே? அவன் இம்சை தாங்க முடியலை! உண்மையா லவ் பண்ற பையனா இருந்தால் கூட மனசு புண்படாமல் எனக்கு அவனை பிடிக்கலைன்னு பதமா எடுத்துச் சொல்லலாம். அவன் என்னடான்ன டிபார்ட்மெண்ட்க்கு ஒருத்தியென்று சுத்திட்டு இருக்கான்.வர கோவத்துக்கு ” என்று பொறுமிய படியே கையிலிருந்த பென்சிலை உடைத்தெறிந்தாள் காயத்ரி .

சுப்புவோ ” என்ன செய்யுறது காயு ? அவனா உன்கிட்ட வாயைக் கொடுக்கிறவரை வம்புவேண்டாம்னு என்னை கட்டுப்படுத்திகிட்டு இருக்கேன். இல்லைனா அவனை நானும் ஸ்ரீவத்ஸும் என்றைக்கோ அடி பின்னி இருப்போம்! ” என்று சூளுரைக்க

“ கவலையே படாதே சுப்பு ! “ சிரித்துக்கொண்டே வந்தாள் லட்சுமி

“ ஏன்னா காயத்ரியை அந்த ராக்கேஷ் ஈவினிங் மீட் பண்ணணுமாம் ! 5 மணிக்கு நுங்கம்பாக்கம் காஃபி ஷாப்க்கு அவளை வரச் சொன்னான்.” என்ற படி அவர்கள் அருகில் அமர்ந்தவள்.

“ சோ அவன் கண்டிப்பா வாயைக் கொடுப்பான் அப்போது காட்டுத் தம்பி உன் கைவரிசையை ! “ என்று சுப்புவிற்கு சவால் விடுவதுபோல் சொன்னாள் லக்ஷ்மி.

” வரமாட்டான்னு சொல்லிருக்க வேண்டியதுதானே! நீ ஏண்டி ஓத்துக்கிட்டு வந்தே ? ” என்று காயத்ரி அவள் மேல் பாய.

” ஹே நான் எப்படி உனக்காக முடியாதென்று சொல்ல முடியும்?” என்று லட்சுமி அவள் தரப்பை நியாயப்படுத்த.

” சரி இன்னியோட அவன் தொல்லை தீர்ந்தால் போரும் ” என்று காயத்ரியும் ஒப்புக்கொண்டாள்.

மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த பிரபல காபீ ஷாப்பில் அவளுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தான் ராக்கேஷ்.

“ஹாய்! “என்று சொன்னபடி அவன் எதிரில் சென்று அமர்ந்தாள் காயத்ரி.

“என்ன ஆர்டர் பண்ணட்டும் காயத்ரி ? கோல்டு காபி சொல்லவா ? ” என்று அவன் கேட்க

“இட்ஸ் ஓகே நான் காபி குடிக்கமாட்டேன் , எதற்கு வர சொன்னே சொல்லு , காலேஜ் லேயே பேசியிருக்கலாமே. எதற்கு தேவையில்லாமல் இப்படி வெளியில் மீட் பன்னுறதெல்லாம்? ” என்று அவன் வந்த காரியத்திலேயே குறியாய் இருக்க

“அப்போது வேற ஏதாவது ஆர்டர் செய்யவா?” என்று அவன் அவள் கேள்வியைக் கேட்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

“என்ன விஷயமென்று சீக்கிரமா சொல்லு ராக்கேஷ். எனக்கு வீட்டுக்கு போகணும் ! “என்று அவள் விடாப்பிடியாய் கேட்க

“என்ன நீ ? சந்தைக்கு போகணும் ஆத்தா வைய்யும் காசு கொடுன்னு கமலஹாசன் சொல்லுறமாரி சொல்லிகிட்டே இருக்கே ? கொஞ்சம் பொறு சொல்லத்தானே போறேன் ” அவன் சிரித்து காலம் தாழ்த்த முற்பட

“சொன்ன சொல்லு இல்லாட்டி நான் கிளம்பறேன் !” என்று அவன் எழ முயல

“சரி சரி ! சொல்றேன் ! ” ஆழ்ந்த மூச்சொன்றை விட்டவன் “ அது வந்து ! எனக்கு உன்னைப் பிடிக்கும் காயத்ரி நான் உன்னை விரும்பறேன் ” விஷயத்தைப் பட்டென்று உடைக்க.

“சாரி ! நான் வேற ஒருவரை விரும்பறேன் ! நான் பழகின முறை இந்த எண்ணத்தை உனக்கு ஏற்படுத்தியிருந்தால் என்னை மன்னிச்சுடு ! நான் கிளம்பறேன் ” என்று அவள் எழ ராக்கேஷோ விரைந்தெழுந்து அவள் கையை பிடித்து ” பேபி…கூல் டியர். என்ன அவசரம்?”.

“டேய் விடுடா கைய!” அவளோ அவள் கைகளை விடுவித்து கொள்ள முயல.

” சரி வேறு எங்கேயாவது போய் பேசிக்கலாமாஆஆஆஆ” அலறித் துடிக்க ஆரம்பித்தான் ராக்கேஷ்.

அவன் மற்றொரு கையை பற்றி முறுக்கியிருந்தான் சிவா!.

“அவ தான் சொல்றாள்ல , பிடிக்கலைன்னா மனைவியா இருந்தாலும் தொடக்கூடாதென்று உங்க வீட்டில் சொல்லி கொடுக்கலையா ? எடுடா கையை ! ” என்று கண்கள் விரிய முகமெங்கும் இரத்த சிவப்பேறீ உறுமினான் சிவா.

இவன் எங்கிருந்து வந்தான் என்று காயத்ரி யோசிக்கும் முன்னே

“நீயாருடா நடுவில் ? நகருடா ! ” என்று திமிறிய ராக்கேஷ் , காயத்ரியை நோக்கி ” ஹேய் இரண்டு மூன்று பசங்களை சைடுல டேட் செய்யற்து இப்போது நிறைய நடக்கிறது தானே? என்னமோ ஆஆஆஆஆஆ” திமிராய் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே இடியென அவன் முகத்தில் குத்து விட்டிருந்தான் சிவா . மூக்கில் ரத்தம் வழிய இருந்தவனை நொடிப் பொழுதில் சுவரோடு சுவராய் தள்ளி தன் உயரத்திற்கு உயர்த்தி ” யூ ப்லடீ **** ”

“சிவா! ” அலறி விரைந்து வந்த கௌதம் ” டேய் அவன விடுடா.. பேசிக்கலாம் டா..” சிவாவின் கை பிடியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ராக்கேஷை போராடி விடுவித்தான்.

” சிவா காயுவை கூட்டிண்டு போ ! நான் இவன் கிட்டக் கொஞ்சம் பேசிட்டு வரேன் ! “ என்று கௌதம் சொல்ல

” நீங்க யாருங்கடா நடுவுல? ***** ” கேவலமான வார்த்தைகளை ராக்கேஷ் சொல்லி முடிக்கும்முன். அவனை அடித்து கீழே தள்ளினான் கௌதம்!

” நீயெல்லாம் சொன்னா திருந்தும் ஜென்மம் இல்லை. படிக்கிற பையன் என்ன வார்த்தை பேசுறே ? போனா போகுது சின்ன பையன்னு பாவம் பார்த்தால் ” கௌதம் மொத்தமாக வெறியாகி இருந்தான்.

” அண்ணா பிளீஸ் அவனை ” காயத்ரி சொல்லி முடிக்கவில்லை.

” காயத்ரி!! ” சிவா முறைத்ததில் சர்வ நாடியும் ஒடுங்கிப் போய் நின்றுவிட்டாள் அவள்.

“வா! “ காயத்ரியின் கையை பற்றி சிவா காருக்கு இழுத்துச் செல்ல விக்கித்து நின்றவளோ ஏதும் பேசாமல் அவனுடன் சென்றாள் .

அங்கு காரில் ஏறியவுடன் சிவா ” மேடம் ! என்னதான் சொல்றான் உங்க பாய் பிரென்ட் ?அவன் ஐடியா படியே பிளான் பண்றியா? ” என்று நக்கலாய் கேட்க

” சிவா ! அவன் ஒன்றும் என் பாய் பிரென்ட் இல்ல , நான் பேசத்தான் ..” என்று அவள் இழுக்கும் பொழுதே

“ஷட் அப் ! எல்லாம் தெரியும் . லட்சுமி உதயா சொல்லித்தான் இங்க வந்தோம் , உன்கிட்ட போன் இல்லையா? இல்ல சொல்ல இஷ்டம் இல்லையா? இல்ல மேடம் தனியா சமாளிக்கலாமென்று வந்தீங்களா? அவ்வளவு பெரிய மனுஷியா நீ ? என்கிட்ட சொல்லவேண்டுமென்று தோணலைல ? அறிவுகெட்ட முண்டம்.. திமிரு வேறென்ன ” என்று பொரிந்து தள்ள

“இல்ல சிவா ! சொன்ன புரிஞ்சுப்பான் இதுக்குபோய் உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாமென்று தான் சொல்லலை ” என்று வார்த்தைகளை மென்று விழுங்க

“இதுதான் கடைசி இனி இப்படி முந்திரிக்கொட்டை வேலை செய்தே அவ்வளவுதான் சொல்லிட்டேன் ! தனியாவே எல்லாத்தையும் செஞ்சுப்பேன்னு சீன் போட்டே பிச்சுடுவேன் புரிஞ்சுதா? ” என்று அவன் விடாது மிரட்டிக்கொண்டிருக்கும் பொழுது கார் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த கௌதம்

“போறும்டா ! சும்மா அவளை ஏண்டா திட்டுறே ? பெண்கள் தனியா கொஞ்சம் சமாளிக்க பழகவேண்டும் , எப்போதும் மத்தவங்கள சார்ந்து இருக்கக் கூடாது , நீ எதான செய்து வைக்க போரியோன்னு தான் நான் உன்ன காரில் இருக்கச் சொன்னேன் கேட்டால்தானே ? ஆனால் அந்த பய பேசற பேச்சுக்கு எனக்கே கோபம் வந்து நாலு அரை விட்டேன் , பய இனி இவ பக்கம் வர மாட்டான் !பிரியா விடு ! வா இப்போது மூட் மாற ஐஸ் கிரீம் சாப்பிடப் போவோம் ” என்று நிலைமையைச் சமாளித்தான் கௌதம்.

என்ன சொல்லியும் கோவம் குறையாத சிவா அவளிடம் பேசவே இல்லை மறுநாள் காலையும் சொல்லிக் கொள்ளாமல் அலுவலகம் சென்று விட்டான் .

ஏனோ இருப்புக் கொள்ளாமல் தவித்த காயத்ரி பாதி நாளிலேயே கல்லூரியிலிருந்து சிவாவைப் பார்த்துப் பேச அவன் அலுவலகம் சென்ற பொழுது. கௌதம் கார் அப்பொழுதுதான் வாசலை விட்டு வெளியே சென்றது அது சென்ற சில நொடியிலேயே ஒரு பெரிய தண்ணீர் லாரி அந்த காரை பின் தொடர ஆரம்பித்தது !

அலறியடித்து சிவாவைக் கண்டு விஷயத்தைச் சொல்லே உள்ளே விரைந்தவள் உறைந்து நின்றாள் !

“என்ன காயத்ரி எதற்கு ஆபீஸ் வரை வந்தே மா ? என்ன விஷயம் ” என்று குழப்பமாய் கேட்டான் கௌதம் !

“அண்ணா அண்ணா ! உங்க கார் ! பின்னாடி அதே தண்ணி லாரி ! ” என்று அவள் பதற

“என்ன லாரி ? ஓஹ் அந்த கனவா ? அம்மா ஊரில் இருக்கும் தண்ணி பஞ்சத்திற்கு ஊரெல்லாம் தண்ணி லாரிதான் இதில் அந்த லாரி தான் இதுன்னு தெரியுமா ? ” என்று கூலாக கேட்க.

“அண்ணா சொன்னா கேளுங்க…எனக்கு அந்த லாரியை அடையாளம் தெரியும் ! ” என்று அவள் மேலும் பதற

“என்ன நம்பர் நோட் பண்ணியா? ” என்று அவன் மேலும் சிரிக்க

“அண்ணா அந்த லாரி பின்னாடி திருஷ்டி பொம்மை முகம் பெரிசா வரைந்து இருக்கும் அதோட ஒரு கண்ணுல மட்டும் சாயம் போயிருக்கும் சொல்றேன்ல ! ” என்று அவள் கண்களை இருக்க மூடி சொல்ல.

” இரு சிவாவை வர சொல்றேன் ! ” என்று சொல்லிய படி சிவாவை அழைத்தான்

“அவரை ஏன் வர சொல்றீங்க ? உங்க காரை பிடிக்கணும் வாங்க! ” என்று அவள் சொல்ல

“சிவா தானே காரோட்டிண்டு போறான் ! அவனைத் திரும்பி வர சொல்லிடறேன் பயப்படாதே ! ” என்று அவன் சொல்ல காயத்ரிக்குத் தலையே சுற்றி பூமி கீழே நழுவுவது போல் இருந்தது !

“அவர் ஏன் ஏன் “ வாயில் வார்த்தையே வரவில்லை தள்ளாடி கௌதமின் கையை பற்றிக்கொண்டாள்.

“ஹே ரிலாக்ஸ் ! அவன் வண்டியை சர்வீஸ் கொடுக்க எடுத்திட்டு போரான்மா.” கௌதம் அவளை சமாதானம் செய்ய

“அண்ணா அவருக்கு ஏதாவது ஆனா…” அவள் முடிக்கும் முன்பே “ காயு அவனுக்கு ஒன்னும் ஆகாது . வா போலாம் “ தீர்க்கமாக சொன்னவன் சிவாவின் காரில் காயத்ரியுடன் விரைந்தான்.

விடாமல் காயத்ரி சிவாவின் மொபைலுக்கு அழைக்க அவனோ அழைப்பை ஏற்கவில்லை. “ அண்ணா அவர் என் கால் எடுக்க மாட்டேங்குரார்.”

கௌதம் மனதிற்குள் பதட்டம் இருந்தும் வெளிக்காட்டாமல் ஆழ்ந்த மூச்சொன்றை விட்டு “ பயப்படாதே ! நான் ட்ரை பண்றேன் “ அவன் மொபைலிருந்து பல முறை அழைத்தும் சிவா அழைப்பை ஏற்கவில்லை.

error: Content is protected !!