am31pf

am31pf

ஆசை முகம் 31 (ஈற்றியல் பதிவு)

 

கதிரவனின் கதிர்கள் மறையும் முன் பண்ணைக்கு வந்திருந்தார்கள்.  எழுபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து பச்சைப் பசேலென கம்பளம் விரித்தாற்போலிருந்தது.

அதற்கிடையே கேரளத்து பாணியில் வீடொன்று நடுவில், ஒடுபோல மேற்கூரை தரித்து வரவேற்றது.

வந்ததும், அங்கு வீடு பராமரிப்பிற்காக தங்கியிருந்தவர்களை அழைத்து, “பத்து நாள் லீவு.  பகல்ல வேலையிருந்தா மட்டும் ஆளு கூட்டிட்டு வந்து விடுங்க. அவங்க பகல் வேலைய வழக்கம்போல பாக்கட்டும்” என அனுப்பியிருந்தான் வேந்தன்.

வாணியிடமும் அன்பாய் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, விடைபெற்றிருந்தனர்.

பளிச்சென இருந்தது.  வேண்டிய அனைத்து வசதிகளும் இருந்தது.

வீட்டைச் சுற்றிலும் இருந்த மலர்களைப் பார்வையிட்டவாறு இருந்தவளை நோக்கி, “காலையில போயி சுத்திப் பாக்கலாம் வாணி.  இந்த நேரம் பூச்சி எதனா வரும்.  அதனால வீட்டுக்குள்ள வந்திரு”

“பூச்சின்னா பாம்பெல்லாமா?”

“எல்லாந்தான்…” என்றவனை பார்த்தபடியே, “பயமா இருக்காதா?”

“என்ன பயம்? அதுங்க வழிக்கு நாம போகலைன்னா நம்ம எதுவும் தொந்திரவு பண்ணாது” என்றிட அதற்குமேல் அங்கு நிற்கும் தைரியம் இல்லாதவளாய் வீட்டிற்குள் வந்திருந்தாள்.

அடுக்களைக்குள் சென்று வாங்கி வந்திருந்த பொருள்களை உரிய இடங்களில் எடுத்து வைக்கத் துவங்கிட, வாணியும் உடன் சென்று உதவினாள்.

“நான் பாத்துக்கறேன் மாமூ.  உங்களுக்கு எதாவது வேலை இருந்தா போயி பாருங்க”

“இருக்கறது ரெண்டே பேரு.  ஆளுக்கொரு திசையில இருக்கவா இங்க வந்தோம்” என்றவன் இரவு சமையலுக்கான பணியைத் துவங்க, வாணி எவ்வளவோ மறுத்தும் அகலவில்லை வேந்தன்.

இருவரும் இணைந்தே இரவு உணவுக்கான பணிகளைச் செய்தார்கள். 

ஆனாலும் இன்னும் வாணியை நெருங்காமல், நெருஞ்சி முள்ளாய் அவளை வருத்தியது வேந்தனது ஒதுக்கம்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் அதே இயந்திரத் தொனியில் சென்றிட, மூன்றாம் நாள், “நான்தான் அப்பவே சாரீ கேட்டுட்டேன்ல.  இன்னும் எவ்வளவு நாளுக்கு இப்டியே இருக்கப் போறீங்க” வாணி

“…”

“தெரியாமயோ, தெரிஞ்சோ நான் உங்கள ஹர்ட் பண்ணிட்டா சொல்லுங்க.  நான் புரிஞ்சிப்பேன். அடுத்து என்னைத் திருத்திப்பேன்.  ஆனா இப்டி விலகிப் போனா என்ன அர்த்தம்.  என்னால முடியல!” அழத் துவங்கியிருந்தாள்.

சற்று நேரம் அமைதி.

வாணியின் தலையில் தனது இடதுகை விரல்களைக் கொண்டு வருடியவன், முதுகில் இதமாய் தட்டிக் கொடுத்துவிட்டு, உடனே அங்கிருந்து சென்றுவிட்டான்.

நீண்ட நேரத்திற்குப்பின் வாணியின் அரவம் எதுவும் இன்றி இருக்க, வாணியைத் தேடி வந்த வேந்தன், பெண் எங்கும் இல்லை என்பதை அறிந்து, “வாணீஈஈ…” என அழைத்தபடியே ஒவ்வொரு இடமாய் பார்வையிட்டான்.

புதர்போலிருந்து செடியின் அருகே சென்று கால்களைக் கட்டியபடி அமர்ந்திருந்தவளின் அருகே சென்றவன், “இங்க எதுக்கு கீழே உக்காந்திருக்க.  வா வீட்டுக்குள்ள” அழைக்க

“…”

“வாணீ…”

“…”

குண்டுக்கட்டாய் பெண்ணைத் தூக்கிக்கொண்டு லிவிங் ஏரியாவில் இருந்த சோபாவில் வந்தமர்ந்தவன், பெண்ணை விடாமல் கைவளைவில் வைத்தபடி, ‘அவளை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டோமோ’ என எண்ணியவன், “உன்னோட ரூம்ல வந்து நீ தூங்கும்போது பாப்பேன்.  தூக்கத்துல நீ என்னை எவ்வளவு தேடுறேங்கறதை உன் வாயால கேக்கும்போது சந்தோசமா இருக்கும்” வேந்தனாக துவங்கியதை அமைதியாகக் கேட்கத் துவங்கினாள்.

“….”

“நீ என்னை ரொம்பத் தேடுவ! ஆனா மற்ற நேரத்தில அதைக் காட்டிக்கவே மாட்ட. அதேபோல நானும் உன்னை தேடுனேன்.  ஆனா பகல்ல, உன்னோட விலகல், உங்கிட்ட நெருங்க விடாம என்னை யோசிக்க வச்சிது.  அதனால நானும் உங்கிட்ட இருந்து தள்ளியே நின்னேன்.  நீ புக் ரீட் பண்றதைப் பாத்ததும் எனக்குள்ள சந்தோசம்.  நம்மளைப்போலவே புக் வாசிக்கிறானு. அன்னிக்கு உன்னைக் கூப்பிட்டது, நம்ம ஃப்ளோர்ல வச்சிருக்கற மினி லைப்ரரியை உனக்குக் காட்டணும்னுதான். அப்ப வேற எந்த இன்டென்சனும் எனக்கு நிச்சயமா இல்லை. ஆனா…” மெல்லிய குரலில் கூறியவன் அதற்குமேல் நிறுத்தி அமைதியாகியிருந்தான்.

“….”

“உங்கிட்ட இருந்து, எல்லாமே… எனக்கே எனக்குனு இனி வேணும்னு நினைச்சுத்தான் மேரேஜ் பண்ணேன்.  அதுல உனக்கு எதாவது அசௌகரியம்னா தாராளமா நீ சொல்லலாம்”

“…”

“இதுக்காகத்தான் அன்னைக்கு கூப்டீங்களானு கேட்ட….”

“…” 

“தனியா இருந்த உன்னோட ரூமுக்குள்ள, நான் வந்ததே தெரியாம, அதைக் கனவுனு நினைச்சிட்டுருந்த உன்னை வேற மாறி யூஸ் பண்ணிருக்க எவ்வளவு நேரமாகியிருக்கும்னு யோசிச்சுப் பாத்தியா?”

“…”

“கல்யாணம் பண்ணிக்கங்கனு நீ வந்து கேட்டதும், நாந்தான் வேணானு சொன்னேன்.  எல்லாம் உன்னோட ஃபியூச்சரை யோசிச்சு.  அப்பவே சரினு சொல்லிட்டு, எல்லாத்தையும் முடிச்சிட்டு அம்போனு விட்டிருந்தா என்ன செய்திருக்க முடியும் உன்னால”

“…”

“வேற மாதிரி யூஸ் பண்ணணும்னு ஒரு ஆம்பளை நினைச்சா அது நிச்சயமா முடியும்.  ஆனா உனக்காகன்னு ஒவ்வொன்றையும் யோசிச்சு, தள்ளி நின்னவனைப்பாத்து அப்டிக் கேக்கலாமா?”

“….”

“நீ சொன்ன மாதிரி அந்த விசயத்தை பெரிசுனு நினைச்சி நான் வாழ்ந்திருந்தா, இந்தளவு நான் வளந்திருக்க முடியாது”

“…”

“கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சிட்டாலே எல்லாத்தையும் அந்தப் பொண்ணுகிட்ட இருந்து எக்ஸ்பெக்ட் பண்ற சராசரி மனுசன்தான் நானும்” வேந்தன்

“…”

“நம்ம மேரேஜ்கு முன்ன உங்கிட்ட வரம்பு மீறி நடந்ததில்லை.  நான் எப்டினு தெரியும். ஒரு லிமிட்டோடதான் உங்கிட்டயும் பழகியிருக்கேன்னு நினைக்கிறேன்”

“…”

“…”

“இப்டியெல்லாம் எனக்கு யோசிக்க நேரமே இல்லாம, ஏதோ அப்ப இருந்த நிலையில தெரியாமக் கேட்டுட்டேன்.  அதுக்கு சாரியும் அப்பவே கேட்டுட்டேன்.  அதுக்கப்புறமும் நானா வந்து கேட்கவும் செய்துட்டேன். இன்னும் அதையே புடிச்சுத் தொங்கினா நான் என்ன பண்ண” அழுகையோடு வாணி கூற

“அன்னைக்கு சொன்ன மாதிரி இடம் பொருள் புரியாம மறந்துபோயும் வார்த்தையை விட்றக் கூடாது.  நீ பேசுனதால உண்டான காயம் மாற எவ்வளவு நாள் ஆகுதோ அவ்ளோ நாள் பொறுமையாதான் இருக்கணும்.  வேற வழியில்லை” தீர்மானம்போல கூறினான்.

தனது வார்த்தை அவனைக் காயப்படுத்தியிருக்கிறது என்பதை அவனது வார்த்தைகள் மூலமே அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சற்று நேரம் அமைதிக்குப்பின் வாணி, “இனி இதுபோல நடக்காது மாமூ!” வாணியது கம்மிய குரல் வருத்தமாய் ஒலித்தது.

அன்னியோன்யமான தருணங்களின்போது மட்டுமல்லாது, மற்ற நேரங்களிலுமே, தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்தல் உத்தமம் என்பதை புரிந்து கொண்டிருந்தாள்.

அதன்பிறகு சற்று இலகுவானான்.  ஆனாலும் அதில் இன்னும் வித்தியாசம் உணர்ந்தாள் பெண்.

வேந்தனது பயண அனுபவங்களைப் பறைசாற்றும் ஆல்பம் அங்கு இருக்க, அதை பெண்ணிடம் எடுத்து வந்து தந்தான்.

இருவருமாகவே இணைந்து பார்வையிட்டிருந்தார்கள்.

அதன்பின் வேந்தனது ஒரு பக்க அணைப்பில் இருந்தபடியே, அவன் அந்த நிழற்படம் எடுத்த தருணத்தைப் பற்றிக் கூற, இவள் அதைச் சார்ந்த வினாக்களை எழுப்ப என அனைத்தையும் பார்த்தவளுக்கு சிறு நிறைவு.

அதுபோல அடுத்து வந்த நாளும் சென்றிருந்தது.

இலேசாய் மழைச்சாரல் வந்து நின்றிருந்தது. அலைபேசியில் வந்த அழைப்புகளோடு வேந்தன் இருக்க, பெண் வெளியில் வந்திருந்தாள்.

மலர்களின் மீது இருந்த மழைத்துளியோடு தனது மொபைலில் படம் எடுத்தவள், எதேச்சையாக வானில் தெரிந்த வானவில்லைப் பார்த்திருந்தாள்.

அதை மொபைலில் எடுப்பதும், தெளிவில்லாதிருக்கவே, மேலே பார்த்தபடி இருந்தவளின் அருகே வந்தவன், “மேல என்ன பாக்கற வாணீ” கேட்க

“ரெயின்போ வந்துது.  அது மொபைல்ல எடுத்தா க்ளியராவே தெரியல. திருப்ப எடுக்கறதுக்குள்ள மறைய ஆரம்பிச்சிருச்சு” சோகமாகச் சொன்னவளை,

“இன்னொரு நாள் நல்ல டிஜிடல் கேமராவுல ட்ரை பண்ணலாம்” என்றவன், “வா…” என பட்டும், படாமல் தீண்டி அழைத்தவனிடம்

“முன்ன மாதிரி நீங்க இல்ல மாமூ”

முகம் சுருக்கி கேள்வியாகப் பார்த்தான். “எப்டி இருக்கேன்”

“என்னைய கண்டுக்கறதே இல்லை”

“இப்ப வந்து என்ன செஞ்சேன்”

“அப்ப இப்டி என்னை ஹக் பண்ணுங்க” என வேந்தனைப் பிடித்துக் காட்டியவள், சிறுபிள்ளைபோல இருகைகளையும் உயர்த்தி, வேந்தனை நோக்கி நீட்ட, சிரித்தபடியே அணைத்துக் கொண்டான்.

முன்புபோல இல்லை அந்த அணைப்பு.  வாணி கூறிவிட்டாளே என பெயருக்கு அணைத்திருந்தான்.

ஆனாலும் அடுத்தடுத்த தருணங்களில் இயல்பாய் இருப்பதுபோல தோன்றியது வாணிக்கு.

வாணிக்கு ‘ஒரு வார்த்தை சொன்னதுக்கு, ஒரு வாரம் வச்சிப் பண்றாருய்யா இந்த மனுசன்’ எனத் தோன்றாமல் இல்லை.

ஆனாலும் மானங்கெட்ட மனது, அவனையும், அவனது அணைப்பையும் அல்லவா எண்ணி ஏக்கம் கொள்கிறது என தன்னையே சாடிக் கொண்டாள்.

தனது வீம்பை மானங்கெட்ட மனதிற்கு பலியாக்கியிருந்தாள்.

முடிவே செய்து விட்டாள்.  வேந்தனிடம் இதுபோன்ற பேச்சுகள் இனி அறவே கூடாதென.

அன்று இரவு உணவிற்கான பணி துவங்கியது முதலே பெண்ணைத் தீண்டுவதும், சீண்டுவதுமாய் வேந்தன் இருக்க, வாயே திறந்தாளில்லை. அத்தோடு உணவிற்கான பணியும் சீராகச் சென்றது.

அரும்பாய் இருந்தவளின், நனை தீண்டி உள்ளும், புறமும் இளக்கம் கொணரச் செய்து, முகை வழி தனது அருகாமைக்கு பெண்ணை ஏங்கச் செய்திருந்தான்.

உணவு தயாரானதும் டைனிங்கில் வந்தமர்ந்திட, ஒரு தட்டில் மட்டும் பரிமாறுமாறு கூறினான்.

வேந்தன் கூறியதைக் கேட்டவள், தட்டை வேந்தனிடம் வந்து தந்திருந்தாள்.

நின்றிருந்தவளை அருகே அமரச் செய்து, வேந்தன் ஊட்டியதை வாணியும், வாணி ஊட்ட வேந்தனுமாக பேசியபடி உண்டார்கள்.

உணவு உண்டதும், முதல் தளத்தோடு அமைக்கப்பட்டிருந்த பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.

பண்ணையைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது.

வரும் வழி நெடுகிலும் மின்கம்பங்கள் இருக்க, வெளிச்சம் இருந்தது.

மற்றபடி வெகுதூரத்தில் விளக்குகள் புள்ளியாகத் தெரிந்தது.

பால்கனியில் தொங்கவிடப்பட்டிருந்த மூங்கில் நாற்காலியில் வேந்தன் அமர்ந்திருக்க, அவனது மடியில் வாணியை இருத்தியவாறு, கூடலுக்கு முன்னுரை எழுதத் துவங்கியிருந்தான்.

அந்தரங்க அறிமுகம் உடல் உரசி, உணர்வு பகிர்ந்து, உணரப்பட்டது. காதல் மௌனம் துவங்கியிருந்தது. இதழ்களின் சேவையால், மொக்குள் எனும் மணம் வீசும் நிலைக்கு வாணியை மாற்றியிருந்தான்.

பூவாகும் நிலைக்கு தயாரானவளை, தனது கரங்களின் ஸ்பரிசத்தின் வழியே ஜீவநெருக்கம் கொண்டபடி, மோனநிலைக்கு கொண்டு வந்திருந்தான். பேச்சுகள் குறைந்து, மௌன பாசையை பஞ்சேந்திரியங்களின் (தோல், நாக்கு, மூக்கு, செவி, கண்) துணையோடு துவங்கியிருந்தனர்.

கர்ம இந்திரியங்கள் கடனே என கடமை செய்திட, காதல் மௌனத்திற்கான நேரம் நிறையவடையும் தருவாயில், கலவி மௌனத்திற்கு தயாராகியிருந்தார்கள்.

கைகளில் மனையாளை பொக்கிஷமாகத் தாங்கியபடி, பள்ளியறை வந்தவன், பெண்ணைப் படுக்கையில் கிடத்த, கலவி மௌனத்தின் முதல்நிலையான மயக்க நிலையில் இருந்தாள் பெண்.

வேந்தன், பெண்ணது இதழில் தேனைப் பருகி, புகட்டத் துவங்க, பூவிதழ்கள் விரியத் துவங்கியது.

தடைகள் விலகி, உறுப்புகள் இளகி, உணர்வுகள் உருகி, உருமாற உவகையோடு காத்திருந்த சூலகத்தினை முற்றுகை இட்டு, மகரந்த தாளின் துணையோடு வசப்படுத்தி, வாகாய் தூளைப் பரவச் செய்திட, பரவசமிக்க கலவி மௌனம் இனிதே அரங்கேறி இருந்தது.  பரவசத்தின் பாரம் தாங்காது, பூவிதழ்கள் சோர்வடையத் துவங்கியிருந்தது.

வாடிய பூவிதழை கரங்களில் தாங்கிக் கொண்டவன், வதங்குமுன் மார்பில் ஏந்திக் கொண்டான். மாயவனின் மார்பெனும் மஞ்சத்தில் வதங்கிக் கிடந்தாள் பூவை.

மெத்தைமேல் மெத்தையாகிப் போனவனின் மீது மெய்மறந்து கிடந்தவளின், முதுகை இதமாய் தட்டிக் கொடுத்து உறங்கச் செய்திருந்தான்.

கலவி மௌனம் விடியல்வரை நீடித்திருக்க, மாரனின் ஆதிக்கம் பள்ளியறையெங்கிலும், ஓங்கி, சூழ்ந்திருந்தது.

…………………….

ஒருவரையொருவர் அறிய, புரிய வெகுவாய் நேரம் இருந்தது. வேந்தனைப் பற்றி வாணியும், வாணியைப் பற்றி வேந்தனும் புரிதல், அறிதல், புணர்தல் அனைத்திலும் பட்டங்களாக வாங்கி, அங்கிருந்த சூழலில் மெய்மறந்திருந்தவர்கள், நடப்பிற்கு வரும் நாளும் விரைந்து வந்திருந்தது.

சென்னைக்கு திரும்பியிருந்தனர்.

வந்ததும் பழையபடி, வேலை வேலை என ஓடத் துவங்கினான் வேந்தன்.

வாணி கல்லூரி செல்லும் நாளும் வந்திட, தோழிகளை, இதர மாணாக்கர்களை எதிர்கொள்வதை பற்றி எண்ணியவாறு கல்லூரிக்கு வேந்தனோடு வந்தாள்.

துறைத்தலைவரைச் சந்தித்து, அதன்பின் தேர்வுக் கண்காணிப்பாளரிடம் சென்று அவள் எடுத்திருந்த விடுப்புகளைக் கணக்கிட்டு, பருவத் தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்புகளை அறிந்து கொண்டு, வாணியை விட்டுவிட்டு அலுவலகம் சென்றிருந்தான்.

மற்ற விசயங்களில் எல்லாம் முதிர்வாக நடந்து கொள்பவள், வேந்தன் விசயத்தில் ‘எல்லாம் எனக்கு எங்க மாமூவே பாத்துப்பாங்க’ எனும் பொறுப்பு துறப்பு நிலைக்கு வந்திருந்தாள்.

வேந்தனது வியாபார அறிவு, அணுகுமுறை இவற்றைப் பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியாத நிலைதான்.

அத்தோடு வயதும் அதிக வித்தியாசம் என்பதால், ‘என்னைவிட எல்லாமே எங்க மாமூக்குத் தெரியும்.  அவங்களுக்கு தெரியாத விசயமே எதுவுமில்லை’ என்பதாய் பெண்ணது மனம் தன்னைக் குறைத்து வேந்தனை உயர்த்தி எண்ணிக் கொண்டது.

இந்த எண்ணம் ஆத்மார்த்தமான, ஈகோ இல்லாத குடும்ப உறவுக்கு வித்திட்டது.

எதையெல்லாம் இழந்து வளர்ந்தாலோ, அவையணைத்தையும் ஈடுசெய்யும் வகையில் உறவுகள் கிடைக்கப்பெற்று சீரான வாழ்வு வாழத் துவங்கியிருந்தாள் எழில்வாணி.

இனிமையும், மகிழ்ச்சியுமாய் பொழுதுகள் வேகமாகச் சென்றன.  எழில்வாணிக்கு சோம்பி இருக்க விருப்பம் இல்லாத காரணத்தால், சத்தியேந்திரனின் கடைக்குச் செல்வதைத் தவிர்த்து, பழைய கடைக்குச் சென்று வருவதை வாடிக்கையாக்கி இருந்தாள்.

வேந்தனுக்கு பெண்ணது வாயிலிருந்து எதுவும் கூறாத நிலையில் யாரையும் நிச்சலனமாக குறைகூற விருப்பமில்லை.  ஆனால் பெண்ணது ஒவ்வொரு செயலும், ஊர்ஜிதம் செய்திட, சத்தியேந்திரனே பெண் இவ்வூரை விட்டுச் செல்லக் காரணம் என்பதைக் கணித்திருந்தான்.

தக்க சமயம் பார்த்து எதிர்நோக்கி காத்திருந்தான். வாய்ப்புகள் அமைந்தாலும், மனையாளின் பெயர் வெளியில் வராதபடி தண்டிக்கத் தகுந்த காலம் பார்த்திருந்தான்.

கல்லூரி நேரம் போக, ஃபைன் ஆர்ட்ஸ் சார்ந்து பயிற்சி வகுப்புகளுக்கு வேண்டிய இடத்தினை தானே ஏற்பாடு செய்து வாணிக்குத் தந்திருந்தான்.

வாணிக்கு ஆச்சர்யம்.  அடுத்து அதன் அருகிலேயே பயிற்சிக்கு வேண்டிய பொருள்களை விற்பனை செய்வதற்கேற்ப வசதியும் செய்து தந்தான்.

இதுபோக, “எனக்கு டூ வீலர் கத்துக்கணும் மாமூ” எனத் துவங்கியவள் கற்றுக் கொண்டபின், “ஃபோர் வீலரும் கத்துக்கணும்”, என்க, அதற்கும் மறுப்பேதும் கூறாமல் தானே அனைத்தையும் பழகித் தந்திருந்தான்.

தனக்காக வேந்தன் நேரம் செலவழிப்பதே பெண்ணுக்கு ஏக சந்தோசம்.

அதற்குமுன் வேந்தன் தனது வியாபார சம்பந்தமாக எப்படி இருந்தான் என்பதைக் கண்கூடாகக் கண்டவள் ஆயிற்றே.

வாணிக்கு அவளது வாழ்வு வண்ண மயமாகியிருந்தது.

………………………..

விட்டுக்கொடுத்தல்

சகிப்புத்தன்மை

தியாகம்

இவற்றால் விளைந்ததே

குடும்பம்!

………………

Leave a Reply

error: Content is protected !!