AOA-4
AOA-4
அவனின்றி ஓரணுவும்- 4
உயிரிகள் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்வதும் மாறுவதும் பரிணாமம்( evolution)
ஆனால் மனித ஆதிக்கம் சூழ்நிலையை தனக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்கிறது. புரட்சி( revolution)
காலச்சுழற்சியில் இடைவிடாமல் இயங்கி கொண்டிருக்கும் இந்த பூமியில், அதன் தகவமைபுக்கு ஏற்ப வாழும் உயிரிகள் படிப்படியாக தங்களை மாற்றி கொள்வதற்கு பெயர்தான் பரிணாமம்.
எந்த உயிரினங்களின் மரபணுக்களும் மொத்தமாக அழிவு நிலையை எய்துவிடுவதில்லை. அது அந்த சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப தன்னை செதுக்கி கொள்கிறது. புது ரூபத்தை அடைகிறது.
அத்தகைய பரிணாமத்தின் படிமங்கள்தான் அந்த அறை முழுக்கவும் காணப்பட்டன. புகைப்படங்களாக ஓவியங்களாக மட்டுமில்லை. சில விசித்திரமான பிராணிகளின் எலும்பு கூடுகளாக கூட அவை இருந்தன.
நீள வாக்கில் ஒரு மண்டை ஓட்டில் கூரிய அதிபயங்கரமான பற்கள் பார்க்க சற்றே கொடூரமாகத்தான் இருந்தது. அதற்கு தேகமில்லாமல் தலை பாக ஓடுகள் மட்டும் ஒரு கூச்சியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அந்த இருளில் நடந்து வந்து ஏற்கனவே உச்சபட்ச அச்சத்திலிருந்த சத்யாவிற்கு நுழைந்த மாத்திரித்தில் அந்த எலும்பு கூடு முகமன் கூறினால் எப்படியிருக்கும்?
அரண்டு மிரண்டு நடுநடுங்கிபோனான் சத்யா. அவன் சத்தத்தில் உள்ளே சென்ற ஷெர்லியும் கிட்டத்தட்ட நடுங்கித்தான் போனாள். சத்யாவின் கதறல் அந்த அறையின் மூலைமுடுக்குகளில் எல்லாம் எதிரொலிக்க, திரும்பி வந்து ஷெர்லி அவன் தரையில் சரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்தேவிட்டாள்.
“சத்யா… ஏன் இப்படி?” என்றவள் கேட்க இடுப்பை பிடித்து கொண்டு சிரமப்பட்டு எழுந்து நின்ற சத்யா அந்த பயங்கரமான எலும்புகூட்டை காண்பிக்க,
“ஐயோ! சத்யா… அது வெறும் ஸ்பெசிமன்… ஜஸ்ட் அ மாடல்… அதுக்கு போயா இப்படி அலறுவீங்க” என்று அவள் கடுப்பானாள்.
அவன் இதயத்தின் மீது கை வைத்து மூச்சு வாங்கி கொண்டு அருகே சென்று பார்க்க அவள் பின்னோடு வந்து அவன் தோளில் கை வைத்து, “அது அபாட்டோசரஸ்(Apatosaurus) மாடல்” என்றாள்.
“என்னது சப்போர்ட்டா…?!” என்று அவளை பார்க்க,
“அபாட்டோசரஸ்… பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வடஅமெரிக்கா காடுகளில் வாழ்ந்த உயிரினம்… டைனோசரஸ் இனம்“ என்றாள்.
அவன் முகத்தில் ஈயாடவில்லை. அவள் சொல்வதை பயபக்தியோடு கேட்டு கொண்டிருந்தவனுக்கு அச்சஉணர்வு ஏறிகொண்டே இருந்தது.
“அமெரிக்கா மியுசியம்ல இருக்கே… நீங்க பார்த்ததில்ல” என்று ஷெர்லி கேட்டு கொண்டே அவள் முன்னே நடந்து சென்றாள்.
‘நான் எங்க ஊரு செத்த காலேஜ் பக்கமே போனதில்ல… இவ என்னடான்னா அமெரிக்கா மியுசியம் பார்த்தீங்கல்லானு கேட்குற… ஆமா… மியுசியம்ல வைக்க வேண்டியதெல்லாம் இவ ஏன் வீட்டுல வைச்சிருக்கா?’ என்று மைன்ட் வாய்ஸிலேயே பேசி கொண்டிருந்தவன் அதற்கு மேல அவளை பின்தொடர தைரியமில்லாமல் தேங்கி நின்றான்.
திரும்பி செல்லலாம் என்று பார்த்தால் அந்த அபாடோசரஸ் கோர பசியோடு விழுங்குவது போல் அவனையே வைத்து கண்வாங்காமல் அதிபயங்கரமாக பார்த்து கொண்டிருந்தது. ஆனால் அபாட்டோசரஸோ தாவரங்களை மட்டுமே உண்ணும் சாகபட்சிணி வகை என்று சத்யாவிற்கு தெரியாது. அவனோ அந்த உயிரினத்தின் வடிவமைப்பை பார்த்து பயந்து நடுங்கி கொண்டிருந்தான்.
ஷெர்லி பாட்டுக்கு அவன் நிலைமையறியாமல் பேசி கொண்டே முன்னே நடந்தவள் அவன் காலடி சத்தம் கேட்காமல் பின்தொடராமல் போக திரும்பி பார்த்துவிட்டு, “சத்யா வாங்க” என்றழைக்க,
‘இவ விடமாட்ட போலயே… ஏன்டா இவளை பத்தி கேட்டோம்’ என்றாகிவிட்டது அவனுக்கு. வேறுவழியில்லை அவள் பின்னோடு நடந்து சென்றுவிடுவோம் என்று எண்ணி கொண்டு அவன் நடக்க,
அப்போது அங்கிருந்த கண்ணடிக்குள் படுத்து கிடந்த நான்கடி நீளத்திலிருந்த ஒரு ராட்சத மீனினத்தின் வடிவத்தை பார்த்து அரண்டு பின்வாங்கியவன், “ச்சே… இதுவும் மாடலாத்தான் இருக்கும்” என்று தனக்குதானே சொல்லி கொள்ளும் போதே,
“நோ… அது மாடல் இல்ல” என்று அவனை திரும்பி பார்த்தாள்.
“அப்படின்னா இது செத்த மீனா? எப்போ செத்துச்சோ” என்று பயத்தோடு விலகி நின்று கொண்டான் சத்யா. சிறுவயதிலிருந்தே இது போன்ற விஷயங்களை பார்த்தாலே அவன் மிரண்டு பல காத தூரம் ஓடுவான். ஆனால் இப்போது அருகாமையில் இப்படி ஒரு காட்சி?
அவன் முகம் வெளறி போக ஷெர்லி, “அது *ஃபாஸில்ஸ் சத்யா… இது அப்படியே ஐஸ்ல் ஃப்ரோஸனாகி இறந்திருக்கு… ஸோ அதோட ஆவுட்டர் பாடி டீகம்போஸ் ஆகவே இல்ல… இப்படி நடக்கிறது ரேர் கேஸ்… இயற்கையே நமக்கு இப்படி ஒரு மாடலை உருவாக்கி தந்திருக்கு…. இது ரொம்ப அரிதான மீன் வகை?”
‘எனக்கு சாப்பிடுற மீன் வகைங்கதான் தெரியும்’ என்று சத்யா மனதிற்குள் அவள் பேசியதை கேட்டு கடுப்பாகி புலம்பி கொண்டிருக்க,
“இது கடலையும் வாழ்ந்து நிலத்துலயும் வாழ்ந்த அரிதான வாகை… அதோட கில்ஸ் எல்லாம் அப்படிதான் இருக்காம்” என்று அவனுக்கு ஆர்வமாக விளக்கமளித்து கொண்டிருந்தாள்.
“பாஸில்ஸ்ல நிறைய வகை இருக்கு… இது கூட ரேர் கேஸ்” என்று ஒரு தரையில் ஊரும் பல்லி இனம் போன்ற ஒரு எலும்பை அவள் கையிலெடுக்கவும்,
“உவேக்… அதை கீழ்ழ்ழ்ழே… வை… பார்க்கவே சகிக்கல… அருவருப்பா இருக்கு” என்று தள்ளி நின்று கொண்டான்.
ஷெர்லி சாதாரணமாக அதனை அவனிடம் நீட்டி, “நான்தான் சொன்னேனே… இது ஸ்கெலிட்டன் இல்ல… பாஸில்ஸ்னு… அதுவும் இது ஸ்டோனா மாறிடுச்சு… *இந்த விலங்கினம் மணுக்குள்ள ஆழமா புதைஞ்சு வருஷங்கள் ஆக ஆக… நிறைய ரசாயன மாற்றங்களால இது அதோட பாடி ஸ்ட்ரக்சர்லையே ஸ்டோனா மாறி இருக்கு” என்றாள்.
அவன் வியப்போடு அதனை பார்க்க அவள் சிரித்து கொண்டே, “தொட்டு பாருங்க சத்யா” என்றாள்.
“வேண்டவே வேண்டாம்… என்னை விட்டுடுங்க… நான் போறேன்” என்றவன் சொல்லி திரும்பி நடக்க,
“போறீங்களா? அப்போ நான் எப்படி உங்க தமிழ் பொண்ணுங்க மாதிரியே இருக்கேன்னு நீங்க தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று அவள் கேட்க அவன் அசையாமல் நின்றான்.
“என் கிரேன்ட் மா போட்டோ பாருங்க… அப்போ உங்களுக்கு புரியும்” என்று அவள் சொன்ன நொடி சத்யா ஆவலோடு, “எங்கே எங்கே?” என்று ஆவல் பொங்க கேட்டான்.
அவள் அந்த அறையின் இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைய நிறைய புகைப்படங்கள் இருந்தன. அவை எல்லாவற்றிலும் ஒரு ஆறு ஐந்து பேர் கொண்ட குழு அவள் சில ஜீவராசிகளின் எலும்புக்கூடுகளை வைத்து கொண்டு சாகசம் செய்தது போல் போஸ் கொடுத்து கொண்டிருந்தனர்.
இன்னும் சில படங்களில் இயற்கை காட்சிகளினூடே தனியாக ஒரு நபர் நின்றிருந்தார். ஷெர்லி அந்த படத்திலிருந்த நபரை சுட்டிகாட்டி,
“என்னோட கிரேன்ட பா… கிறிஸ்டோபர் எட்வர்ஸ்… *நேச்சரலிஸ்ட்… அன் *ஜியாலஜிஸ்ட் “ என்றதும் அவரின் படத்தை சத்யா வியப்பாக பார்த்து கொண்டிருந்தான்.
உயரமாகவும் கம்பீரமாகவும் அனைத்து படத்திலும் தனித்துவமாக காட்சியளித்து கொண்டிருந்த அவரின் முகத்தில் தேஜஸ் நிரம்பியிருந்தது. அதோடு இளமையோடு மிளிரிய அவரின் கட்டுடலான தேகத்தை சத்யா புருவங்களை உயர்த்தி வியப்பாக பார்த்து கொண்டிருந்தான்.
அப்போது ஷெர்லி அதிலிருந்த இன்னொரு படத்தை அவனிடம் சுட்டிக்காட்டினாள். “இத பாருங்க சத்யா” என்றதும் அவன் திரும்ப, அதில் நிறைய மலைவாழ் மக்களோடு கிறிஸ்டோபர் தனித்துவமாகவும் உயரமாகவும் தெரிந்தார். அந்த மலைவாழ் மக்களின் தோற்றம் உடையெல்லாம் பார்க்கும் போது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான் என்று.
அவன் அதனை அவளிடம் கேட்க எண்ணும் போதே அவள் பேச தொடங்கினாள்.
“ஆப்ரிக்காவில ரிசர்ச் பண்ணும் போது அங்கே இருக்கிறது போலவே மண் புழு வகை சவுத் ஏஸியால இருக்குன்னு தெரிய வந்துச்சு…மண்புழுக்கள் கடல் தாண்டி செல்ல வாய்ப்பே இல்ல… ஒரே மாதிரியான மண்புழு வகைகள் அத்தனை ஆயிரம் மைல்கள் தாண்டி இரண்டு வெவ்வேறான கண்டங்களில் இருக்கவும் முடியாது…
அப்பதான் ஒரு விஷயம் நிரூபணம் ஆச்சு… பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெரியளவிலான நிலபரப்பு ஆப்ரிக்கா சவுத் ஏஸியாவுக்கு இடையில கடலுக்கு அடில மூழ்கியிருக்கு… அதை பத்தி ஒரு டீடைல் ரிசர்ச் பண்ணனும்னு அம்பது வருஷத்துக்கு முன்னாடி இந்தியா போயிருந்தார் என் கிரேன்ட் பா…
அப்போ அவருக்கு ஏஜ் ஃபார்ட்டி… அந்த டைம்ல அவரோட தாட்ஸ் முழுக்க ரிசர்ச் ரிசர்ச் ரிசர்ச் மட்டும்தான்… அவருக்கு மேரேஜ்ல எல்லாம் சுத்தமா இண்டரஸ்ட் இல்ல… ஆனா எல்லாமே அப் சைட் டவுனா மாறிடுச்சு… என் கிரேன்ட் மாவை பார்த்த பிறகு… அவங்க பேர் செல்லா… பார்த்து பிடிச்சு அங்கேயே கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு… என் டேட் ஜான்சனும் அங்கேதான் பொறந்தாரு…” என்று அவள் சொல்லி கொண்டே அந்த மலைவாழ் மக்களுக்கு இடையில் இருந்த ஒரு பெண்ணை காண்பித்தாள்.
அந்த பாரம்பரியமான மலைவாழ் மக்கள் உடையில் பார்க்க அத்தனை அழகாக தீட்சண்யமாக இருந்தாள் அந்த பெண். உயிரம் குறைவாக இருந்த போதும் அந்த கூட்டதிற்கு இடையிலும் அந்த பெண்ணின் முகம் தனி ஈர்ப்புவிசையை கொண்டிருந்தது. அதுவும் ஷெர்லியிடமும் இருப்பது போலவே!
அந்த ஈர்ப்பு செல்லாவிடமிருந்துதான் ஷெர்லிக்கு வந்தது போலும் என்றெண்ணி சத்யா அந்த படத்தை பார்த்து கொண்டே, “இப்போ உங்க கிரேன்ட் மா எங்கே?” என்று கேட்க ஷெர்லி ஆழ்ந்த பெருமூச்செடுத்து,
“ஷி இஸ் நோ மோர்… அவங்க இருந்த ஃபாரஸ்ட் முழுக்க ஃபைரானதுல அங்கே வாழ்ந்த நிறைய பேர் இறந்துட்டாங்க… அந்த டைம்ல என் கிரண்ட பா அங்கே இல்ல… ஒரு ரிசர்ச் சம்பந்தமா வேற ஒரு இடத்துக்கு போயிருந்தாரு… வந்து பார்த்த போது கிரேண்ட் மாவோட கருகிய உடலைத்தான் பார்க்க முடிஞ்சுது… ஆனா கிரண்ட மா என் டேட்டை காப்பாத்திட்டுதான் இறந்து போனாங்க… அப்போ என் டேடுக்கு ஒரு மூணு வயசு இருக்கும்…. அதுக்கப்புறம் என் கிரேன்ட் பா அங்கே இருக்கல… டேடையும் அழைச்சிக்கிட்டு திரும்பி கலிபோர்னியாவுக்கே வந்துட்டாரு… யாரையும் அவர் செகண்ட் மேரேஜ் கூட பண்ணிக்கல” என்று நெகிழ்வாக கூறியவளின் விழிகளில் எட்டி பார்த்த நீரை துடைத்து கொண்டு மேலும் தொடர்ந்தாள்.
“என் டேட் பார்க்க அப்படியே என் கிரேன்ட் பா மாதிரிதான் இருப்பாரு… நான் எப்படியோ என் கிரேன்ட் மா மாதிரி பிறந்திட்டேன்… அதனாலயே என்னவோ நான் என் கிரண்ட் பாவுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்… எனக்கு டென் இயர்ஸ் இருக்கும் போது அவர் எனக்கு தமிழ் பேச சொல்லி கொடுத்தாரு… என்னை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு சொன்னாரு… ஆனா அதுக்குள்ள இதே பேஸ்மென்ட் ரூம்ல சூசைட் பண்ணி அவர் இறந்துட்டாரு” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே இறந்து கிடந்த அவள் தாத்தாவின் சடலம் அவள் முன்னே காட்சிகளாக வந்து போனது. இன்னும் அவளால் அவரின் இழப்பை தாங்கி கொள்ளவே முடியவில்லை.
தன் கண்ணீரை துடைத்து கொண்டே அவரின் புகைபடங்களை பார்த்த அவள் மனம் அவளின் சிறுவயது நினைவுகளில் மூழ்கியது. அவர் தேடி சேகரித்த நிறைய தகவல்களையும் அவரின் பயணத்தின் சுவாரிசியமான கதைகளையும் கேட்டுத்தான் அவள் வளர்ந்தாள்.
மீண்டும் அந்த நாட்கள் திரும்ப வராதா என்ற ஆதங்கம் அவளை வெகுவாக வேதனைபடுத்தியது. அப்போது அங்கிருந்த புத்தக அலமாரியின் மீது அவள் பார்வை சென்றது.
அங்கிருந்த பெரும்பாலான புத்தகங்கள் அவள் தாத்தா கிறிஸ்டோபர் எட்வர்ஸ் எழுதியவைதான். அந்த புத்தகங்கள் யாவும் இயற்கையை பற்றிய அரியவகை தகவல்களை கொண்டிருந்தன.
அதனை பார்த்து கொண்டிருந்தவள், இறுதியாக அந்த அலமாரியிலிருந்த ஒரு ஃபைலை எடுத்தாள்.
அந்த முதல் தாளில் ‘டிசேஸ்டர்’ என்று தலைபிடப்படிருந்தது. அதுவும் பெரிய ஆங்கில எழுத்துக்களாக அவை எழுதப்பட்டிருக்க, அந்த தாளின் மேல் சில ரத்தத்துளிகள் காய்ந்திருந்தன. அதனை அப்படியே மார்போடு அணைத்து கொண்டாள்.
கிறிஸ்டோபர் கைப்பட எழுதப்பட்ட காகிதங்கள் அவை. அவர் இறப்பிற்கு முன்னதாக எழுதி கொண்டிருந்த புத்தகம் அது. அதனை முடிக்காமல் பாதியிலேயே அவர் தன் உயிரை துறந்துவிட்டார்.
இதே அறையில் அவரின் வலது மணிக்கட்டில் நரம்புகள் அறுப்பட்டு அவர் இறந்து கிடந்த காட்சியை முதலில் பார்த்தது ஷெர்லிதான். அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயது.
அவளால் அன்று பார்த்த காட்சியை எப்போதும் மறக்கவே முடியாது. “கிரேன்ட் பா” என்று குரல் தழுதழுக்க தாள முடியாத துக்கத்தோடு அந்த பைலை அணைத்து பிடித்து அவள் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கும் போது சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக, “சத்யா” என்று திரும்பி பார்க்க, அவன் அங்கே இல்லை. எப்போதோ ஓடிவிட்டிருந்தான்.
அவள் அந்த அறையில்தான் தன் தாத்தா தற்கொலை செய்து கொண்டதாக சொன்னதை கேட்ட நொடி அவன் பீதியில் அங்கிருந்து அவளிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டான்.
ஷெர்லி தீவிரமாக தன் தாத்தாவின் நினைவுகளில் மூழ்கியிருந்ததால் அவன் சென்றதை அவளும் கவனிக்கவில்லை. “சத்யா” என்று அழைத்து கொண்டே ஏணி அருகே வரவும், அவனை அங்கேயும் காணவில்லை.
அப்போதுதான் அவசரத்தில் அந்த பைலை கையோடு எடுத்து வந்ததை உணர்ந்து அதனை மீண்டும் திரும்பி வைக்கலாம் என்ற போது அதிலிருந்த தாள்கள் தரையில் சிதறின.
கீழே குனிந்து அந்த தாள்களை ஷெர்லி எடுத்து கொண்டிருந்த போது அதிலிருந்த ஒரு தாளில் வரிசையாக சில வருடங்களின் பட்டியலும் அதற்கு கீழே எழுதியிருந்த வரிகளும் அவளை துணுக்குற செய்தது.
ஒரு முறை கூட அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவள் புரட்டி கூட பார்த்திருக்கவில்லை. சில நொடி ஸ்தம்பித்தவள், அதன் பின் அந்த பைலையும் கையோடு எடுத்து கொண்டு ஏணியில் ஏறி மேலே வந்தாள். முகப்பறையில் வந்து சத்யாவை தேடினாள். அவன் அங்கேயும் இல்லை.
வெளியே வந்து பார்த்த போது டேனி மட்டும் தனியாக குரைத்து கொண்டிருந்தான். ஷெர்லியை பார்த்தும் அவன் இன்னும் சத்தமாக குரைக்க, அவனை கட்டி வைத்ததால் அவன் மிகுந்த கோபத்திலிருந்தான் என்பது அவளுக்கு புரிந்தது. கட்டவிழ்த்து விட்டு டேனியை தன் கரங்களில் தூக்கி கொண்டவள், “சாரி டேனி” என்று பாசமாக அணைத்து கொண்டாள்.
“சத்யா பாவம் டேனி! நீ என்னதான் இருந்தாலும் அப்படி செஞ்சிருக்க கூடாது…ரொம்ப பேட் பாய் ஆயிட்ட” என்றவள் அவனை செல்லமாக கடிந்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.
அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு டேனியை மடியில் கிடத்தி அவள் மிருதுவாக தடவி கொடுக்க, டேனியின் கோபமெல்லாம் பறந்து போனது.
ஆனால் ஷெர்லி மனம் நிம்மதியற்று இருந்தது. சத்யா சொல்லாமல் சென்றது அவளுக்கு மிகுந்த வருத்ததை அளித்தது. அதுவும் அவளின் தாத்தா கிறிஸ்டோபரின் இறப்பிற்கு பிறகு யாரிடமும் இந்தளவு அவள் பேசியதில்லை. ஏன் அவள் குடும்பத்தாரான அவளுடைய பெற்றோர் மற்றும் தங்கையிடம் கூட அவளுக்கு ஒட்டுதல் இல்லை.
ஜான்சன் மற்றும் மியா தம்பதிகளுக்கு ஷெர்லிதான் மூத்த மகள். அவளுக்கு பிறகு பிறந்தவள் லியா. லியா பார்க்க அப்படியே அவள் பெற்றோர் நிறத்தை தோற்றத்தை ஒத்து இருந்தாள். தான் மட்டும் வித்தியாசமாக இருக்கிறோம் என்று ஷெர்லிக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை எப்போதும் உண்டு.
அது பலரின் விசித்திரமான பார்வையால் அவளுக்கு இன்னும் அதிகரித்தது. ஜான்சனும் மியாவும் அவளிடம் அந்த எண்ணத்தை போக்க எவ்வளவோ முயன்றும் அது அவளிடம் எடுப்படவில்லை. கிறிஸ்டோபர்தான் நடந்த விஷயங்களை விளக்கி அவளுக்கு தெளிவாக புரிய வைத்தார்.
ஜான்சனும் மியாவும் வாஷிங்கடனில் இருந்தனர். ஷெர்லின் மட்டும் தன் தாத்தாவோடு கலிபோர்னியாவில் இப்போதிருக்கும் வீட்டில் தங்கியிருந்தாள். அவர் மூலமாகத்தான் அவள் உலகத்தையே பார்த்தாள் என்று சொல்ல வேண்டும். புதுப்புது விஷயங்களை தகவல்களை தெரிந்து கொண்டாள். தமிழ் பேசவும் அவர்தான் அவளுக்கு கற்று கொடுத்தார். அப்போதே ஓரளவு அவள் தமிழ் பேச தெரிந்து கொண்டாள்.
அடிக்கடி தமிழ்நாட்டிற்கு போவது பற்றி அவர் அவளிடம் பேசி கொண்டிருந்தார். அந்த வார்த்தைகள் இயல்பாகவே அங்கே செல்ல வேண்டுமென்ற ஆர்வத்தை ஷெர்லிக்கு உண்டாக்கியிருந்தது.
தன் தாத்தாவோடு இருந்த காலங்கள்தான் அவளுக்கு பொற்காலங்கள். ஆனால் திடீரென்று கிறிஸ்டோபர் தற்கொலை செய்து கொண்டதால் ஷெர்லி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானாள். தன் தந்தையோடு வாஷிங்க்டன் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதை அவள் கொஞ்சமும் விரும்பவில்லை.
யாரிடமும் அதிகம் பேசாமல் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டாள். தன் தாத்தாவின் நினைவையன்றி வேறு அழகிய நினைவுகள் அவள் வாழ்கையில் இதுவரை இல்லை. கல்லூரி முடித்த மாத்திரத்தில் அவள் குடும்பத்தை விட்டு தனியாக வந்து கலிபோர்னியாவில் உள்ள அவள் தாத்தாவின் வீட்டிற்கே மீண்டும் குடிபெயர்ந்துவிட்டாள்.
ஜான்சனும் மியாவும் அவளிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் வார்த்தைகளை அவள் கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்தாள். அதற்கு மேல் அவள் சுதந்தரத்தில் தலையிடும் உரிமை அவர்களுக்கும் இல்லை.
எப்போதாவது குடும்பத்தில் நடக்கும் விருந்து போன்றவற்றிற்கு ஜான்சன் அழைத்தால் அவள் அதில் கலந்து கொள்வாள். அவள் தங்கை லியா கல்லூரி படிக்கும் போதே ஒருவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டாள். ஷெர்லிக்கும் கல்லூரி படித்த காலங்கள் தொடங்கி இன்று வரை நிறைய ப்ரப்போஸல்கள் வந்தன. அவளுக்கு அதில் எல்லாம் விருப்பமோ ஆர்வமோ இல்லை என்பதைவிட அவள் எண்ணமும் எதிர்பார்ப்பும் முற்றிலும் வேறாக இருந்தது.
‘நிச்சயமாக நீயும் என்னை போல் உன்னுடைய சிறந்த துணையை தமிழ்நாட்டில்தான் சந்திக்க போகிறாய்’ என்று கிறிஸ்டோபர் ஒருமுறை அவளிடம் கூறியிருந்தார். அதனை அவர் விளையாட்டாக சொன்னாரோ அல்லது உண்மையாகவே சொன்னாரோ?!
இத்தனை வருடத்திற்கு பிறகும் அந்த வார்த்தைகளை அவள் ஆழமாக நம்பி கொண்டிருக்கிறாள். சத்யாவை பார்த்த போது அந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது. ஆனால் சத்யாவிடம் நட்பு என்ற எல்லையை தாண்டி வேறு எந்தவித எண்ணமும் அவளுக்கு ஏற்படவில்லை.
இருப்பினும் தமிழ் நாட்டிற்கு செல்ல அவன் உதவி தனக்கு பயன்படும் என்று தோன்றியது. அதற்காகத்தான் அவனிடம் அவள் இத்தனை நாட்கள் பழகியதே.
அவளின் இப்போதைய எதிர்பார்ப்பு கனவு எல்லாம் தன் நாயகனை தமிழ்நாட்டில் எங்காவது சந்திப்போம் என்பதுதான். அதில் தன் தாத்தாவின் வார்த்தைகள் என்றுமே பொய்யாகாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடும் தீவிரமாக தெரிந்தது. ஆனால் அவளின் எதிர்ப்பார்ப்பிற்கு முற்றிலும் பொய்யாகும் விதமாக அந்த சம்பவம் அரங்கேறியது.
கடைசியில் தன் மரணம்தான் தமிழ்நாட்டில் நிகழபோகிறது என்று அவள் உள்ளம் அந்த சீறி பாயும் அலைகளுக்குள் சிக்குண்டு படபடத்தது. நீச்சல் தெரிந்த போதும் ஷெர்லியால் அந்த அலைகளின் உக்கிரத்திற்கு முன்னால் தன்னை தற்காத்து கொள்ளவே முடியவில்லை.
அவள் கடலுக்குள் சிக்கி கொண்ட இடம் இயல்பைவிட அதிக ஆழமாக இருந்ததால் அவளின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அந்த அலைகள் அவளை கடலின் ஆழத்தில் அழுத்தி கொண்டிருந்தது.
ஆனால் போராடும் எண்ணத்தை அவள் கைவிடவில்லை. திரும்ப திரும்ப எப்படியாவது அந்த சீறி பாயும் அலைகளை முறியடித்து கொண்டு அவள் மேலே வர தன்னால் இயன்ற முயற்சிகளை செய்து கொண்டே, “ஹெல்ப்… ஹெல்ப்… ஹெல்ப்…” என்று சக்திகளை திரட்டி கத்தவும் செய்தாள்.
ஆனால் அந்த சத்தம் யாருக்கும் எட்ட வாய்பே இல்லாதளவுக்கு கடலின் கூச்சல் அதிபயங்கரமாக இருந்தது. அவளுடைய சக்தியெல்லாம் வடிந்து களைப்புறும் போது ஆபத்பாந்தவன் போல இரு கரங்கள் அவளை கரைக்கு இழுத்துவந்து சேர்த்தன.
_________________________________________________________
*பாஸில்ஸ்- படிமங்கள். சில உயிரினங்கள் பூமியில் வாழ்ந்திற்கான ஆதரங்களே தொல்லுயிர் படிமங்கள்தான்.
*நேச்சுரலிஸ்ட்- இயற்கைவியயலாளர்(செடி கொடிகளையும் விலங்குகளையும் ஆய்பவர்)
*ஜியாலஜிஸ்ட் – புவியியல் வல்லுநர்
*ஊர்ந்து செல்லும் பிராணி ஒன்று சதுப்புநிலத்தில் சிக்கி மடிகிறது. அதன் உடம்பு அழுகுகிறது. எலும்புகள் மட்டும் மண்ணில் படிகின்றன. இறந்த தாவரங்கள் மண்ணுக்குள் கீழே படிந்து அவற்றை மூடுகின்றன. பல நூற்றாண்டுகள் கழித்து மேலும் மேலும் தாவரப்பகுதிகள் குவிந்து படிந்து ‘பீட்’ ஆக மாறுகிறது. கடல் மட்டத்தின் மாற்றங்களால் சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளம் புரண்டு மணல் அடுக்குகள் ‘பீட்’ டின் மேல் படிகின்றன. காலப்போக்கில் பீட் பகுதி அழிந்து நிலக்கரியாக மாறுகிறது. அங்கு புதைந்து போன பிராணியின் எலும்புகள் இன்னமும் அவ்விடத்திற்குள்ளேயே இருக்கின்றன. அடுத்தடுத்து படியும் அபரிமிதமான அழுத்தத்தாலும் தாது பொருட்கள் நிறைந்த திரவியங்கள் அவற்றிற்கிடையே விரவியிருப்பதாலும் அந்த எலும்புகளிலுள்ள கேல்சியம் மற்றும் பாஸ்பேட்டில் ரசாயான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக அவை கல்லாக மாறினாலும் அவை உயருடனிருந்த போது புற வடிவமைப்புகள் நிலைதிருக்கின்றன.