Aval throwpathi alla – 1

Aval throwpathi alla – 1

வீரமாக்காளி

அந்த பிரமாண்டமான வீட்டின் முன்புறம் இருந்த விஸ்தரமான தோட்டத்தில் முகம் சுருங்கி போய் அமர்ந்திருந்தார் நாராயணசுவாமி!

அவர் தோற்றமும் உடலமைப்பும் வழுக்கையான தலையும் தொந்தியும் ஐம்பதை தொட்டிருக்கும் அவர் வயதென்று சொன்னது!

அவமானத்தில் அவர் உதடுகள் துடித்து கொண்டிருக்க விழியெல்லாம் சிவந்து சற்றே கடூரமாய் காட்சியளித்தது அவரின் சாந்தமான முகம்!

நாராயணசுவாமி!
பல வருட பாரம்பரியமான  மங்களம் சில்க்ஸின் ஒரே நிறுவனர் ! அவரின் தந்தை ஆரம்பித்து இன்று அவரின் ஆளுமையில் செவ்வனே சிறப்பாகவே நடந்து கொண்டிருந்தது மங்கள் சில்க்ஸ்!

சென்னை, காஞ்சிபுரம், திருச்சி என பல பிரதான இடங்களில் கிளைகள்  இருக்க, அவர்கள் குடும்பத்துக்கும் கடைக்குமே மக்களிடையில் புகழ்மிக்க பெயரும் தனிஅங்கிகாரமும் இருந்தது.

ஆனால் இந்த சில நாட்களை போல் அவர் வாழ்வில் ஓர் மோசமான அவமானத்திற்குரிய நாட்களை சந்தித்ததேயில்லை.

அவர் கடையின் தற்போதைய விளம்பர மாடல் இஷிகா அவர் பெயரை மொத்தமாய் துவ்மசம் செய்துவிட்டாள்.

நாராயணசுவாமி அவளை பலவந்தப்படுத்துவதாக அவள் சமூக வளைதாளங்களில் கொடுத்த பேட்டி அவரின் மரியாதையை சுக்குநூறாய் நொறுக்கியிருந்தது. மனைவி சாரதாவை தவிர்த்து வேறெந்த பெண்ணையும் தவறாய் ஓர் பார்வை பார்த்திராத மனிதன்!

அதுவும் அவருக்கு திருமணமான இரு மகள்கள் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் ஒரு மகன் இருக்க,

இவர்கள் முன்னிலையில் இனி எப்படி விழிப்போம் என்று மனம்நொந்து கொண்டிருந்தார்.  அதுவும் மருமகன்களிடம் நேருக்கு நேராய் இனி பேச முடியுமா?!

இதற்கு பிறகும் உயிர் வாழ வேண்டுமா?!

அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் அருவருப்பாய் பார்க்கும் ஒற்றை பார்வையில் உயிருடன் தான் இன்னும் ஏன் வாழ்ந்து கொண்டிருக்கும் என்றிருந்தது.

அதற்கேற்றாற் போல் அவரின் புத்திரன் அரவிந்த் வீட்டின் வாயிலுக்கு வந்து நின்று, அவரை பார்க்கவும் விரும்பாமல் முகத்தை சுளித்து கொண்டு செல்ல, தாய் சாரதாவின் முகத்தில் அபரிமிதமான வேதனை வலி!

கணவனை பற்றி அவருக்கு நன்றாக தெரியும். இதெல்லாம் பொய் வதந்தி என  மகன் மகள்களிடம் அவர் சொன்னாலும் அது நம்பகதன்மை கொண்டதாக இல்லையே!

சுற்றத்தாரின் பார்வைக்கும் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் அவமானபப்பட்டு நிற்கும் நிலையில் எது உண்மை பொய் என்று அவர்கள் ஆராயும் நிலைமையில் இல்லை!

இந்த ஒருவாரமாய் காட்டுதீயாய் பரவி கொண்டிருந்த இந்த செய்தியின் தாக்கம் மெல்ல மெல்ல தணிந்திருக்க,  அதனாலயே அரவிந்த் சற்று இயல்பாய் இன்று கல்லூரிக்கு புறப்பட்டிருந்தான்.

சாரதா அப்போது தோட்டத்தில் வேதனையோடு அமர்ந்திருக்கும் கணவனை பார்த்து,

அவரை நெருங்கி வந்து நின்றார்.

ஆனால் நாராயணசுவாமி தன் அருகில் நிற்கும் மனையாளை கூட நிமிர்ந்து பார்க்க முடியாத நிலையில் கூனி குருகி போய் அமர்ந்திருக்க,

சாரதா அவர் தோளை தொட்டு மிருதுவாய் தடவி கொடுத்தார்.

அந்த சமயம் அவரின் விழியில் நீர் பெருகி ஊற்ற,

“அமைதியா இருங்க! எல்லாம் சரியாயிடும்” என்று சாரதா சமாதானம் உரைக்க அது வெறும் வார்த்தைதான். அதற்கான எந்தவித அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.

மனைவியின் கரத்தை தொட்டு மூச்சை இழுத்துவிட்டு கொண்டார். அந்த ஆறுதலும் இல்லையெனில் அவர் எப்போதோ மரணித்திருப்பார்.

“இன்னும் நான் உயிரோட இருக்கேன்னா அது உனக்காக மட்டும்தான்” என்றவர் சொல்ல,

சாரதா பதறி துடித்து, “அப்படியெல்லாம் பேசாதீங்க… இது ஏதோ நமக்கு கெட்ட நேரம்… நிச்சயம் இதெல்லாம் சரியாயிடும்” என்றவர் மீண்டும் நம்பிக்கை வார்த்தை சொல்ல,

அவரிடமோ நம்பிக்கைவிட்டு போயிருந்தது.

“ப்ச்” என்றவர் உச்சு கொட்ட, சாரதா அவரிடம்

“நீங்க உள்ளே வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்றழைக்க, சிரத்தையின்றி அவர்  மனைவியின் அழைப்பை ஏற்று வீட்டிற்குள் நடந்து வந்தவர் தன் அறையின் படுக்கையில் சாயும் போது அவர் கைப்பேசி ஓலிக்க,

அதனை வேண்டா வெறுப்பாய் பார்த்தார். மரண ஓலமாய் கேட்டது அதன் அழைப்பின் ஒலி!

அவரின் மானத்தை நொடிக்கு நொடி அது கூறுபோட்டு கொண்டிருக்க எடுக்கலாமா என யோசிக்கும் போது சாரதா வேண்டுமென தலையசைக்க,

அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவரின் முகம் சற்றே விசித்திரமாய் மாறியது.

‘(Sarathy calling) சாரதி காலிங்’

இவன் எதற்கு தன்னை அழைக்கிறான் என்ற குழப்பத்தோடு அந்த அழைப்பை  ஏற்று காதில் வைத்தார்.

***************

பேருந்திற்குள் கூட்டம் எக்கசக்கமாய் இருக்க, நடத்துனரின் நிலைமைதான் பரிதாபத்திலும் பரிதாபம்!

அதுவும் அந்த கூட்டத்தில் முக்கால்வாசி கல்லூரி மாணவர்கள். பேருந்தில் உள்புறத்தில் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இளம்  பெண்கள் வரிசையாய் அணிவகுத்து நிற்க,

படிகெட்டுகளில் ஒய்யாரமாய் இளைஞர்கள் பட்டாளமே தொங்கி கொண்டு வந்தது. அதுவும் வாய் நிறைய கானா பாடல் இசைத்து  தாளம் தட்டி கொண்டே அவர்கள் வர, பலரும் அந்த பேருந்தில் ஏற அச்சப்பட்டு பின்வாங்கினார்.

கல்லூரி மாணவர்கள் எல்லாம்  குதூகலாமாய் பயணித்து கொண்டிருந்த அந்த பேருந்தில்தான் நம் நாயகியும் பயணித்து கொண்டிருந்தாள்.

அந்த இளைஞர்களை விடவும்  அவளடிக்கும் கொட்டம்தான் அதிகமாயிருந்தது.

அவள் அடித்த விசில் சத்தத்தில் காது செவிடாகிவிடும் போல!

“வீரா சத்தம் பத்தல” தொங்கி கொண்டே ஒரு மாணவன் உரைத்தான்.

அந்த மாணவன் சொன்னதுதான் அவள் பெயர்! வீரா!

எல்லோரும் அவளை அப்படிதான் அழைப்பார்கள்.

அவளின் முழு பெயர் வீரமாக்காளி!

சென்னையில் இருந்து சிலதூரங்களை கடந்து வந்தால், செங்குன்றத்தில் கோவில் கொண்டுள்ள வீரமாக்காளியம்மன்தான் அவர்களின் குலதெய்வம்!

வீட்டின் மூத்த மகளுக்கு குல தெய்வத்தின் பெயரை வைக்க வேண்டுமாமே!

அப்படி ஒரு சம்பிராதயத்தை எவன் கண்டுபிடித்தனோ அவன் மட்டும் அவள் கையில் கிடைத்தால் அவ்வளவுதான்! துவம்சம் செய்துவிடுவாள்.

அவளுக்கு அந்த பெயரை அந்தளவுக்கு பிடிக்காது. அப்படி யாராவது அவளை விளித்தால் அவள் உண்மையிலேயே பத்ரகாளியாய் மாறிவிடுவாள். 

ஆதலாலயே அந்த பெயரை சொல்லி யாரும் அவளை அழைக்கமாட்டார்கள்.  சுருக்கமாய் வீரா என்றே அழைப்பார்.

விசீல் சத்தம் பத்தல என்று சொன்னதுதான் தாமதம். அவள் மீண்டும் தன் விரலை மடித்து வாயில் வைக்க போனவளை அவள் தோழி மலர்விழி தடுத்துவிட்டாள்.

“கொஞ்சமாச்சம் அடக்க ஓடுக்கமா வர்றியா?!” என்று மலர்விழி  கூற,

“அடக்கமா வரனும்னு நான் சவமானதுக்கு அப்பாலதான்” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் விசிலடிக்க,

அந்த பேருந்தில் உள்ள மற்ற பயணிகள் எல்லாம் அவளை தாறுமாறாய் வாய்க்குள்ளேயே திட்டினர்.

ஆனால் அதை பற்றியெல்லாம் அவள் துளியும் கவலைபடவில்லை. அவள் அவளாக மட்டுமே இருப்பாள். பிறரின் பார்வைக்காக தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி கொள்வது அவளுக்கு வழக்கமில்லாத ஒன்று.

அடுத்த நிறுத்தத்தில்தான் அவர்களின் கல்லூரி வர போகும் நிலையில், மலர்விழி வேகவேகமாய் தன் பர்ஸ் கண்ணாடியை எடுத்து அவள் நெற்றி பொட்டையெல்லாம் சரி செய்து கொள்ள

வீராவுக்கு சிரிப்பு தாங்கவில்லை.

“ஏ! ரொம்ப ஓவரடி இதெல்லாம்…. நீ அவனை பார்க்க போற… அவன் உன்னை பார்க்க போறான்… வெறும் கண்ணும் கண்ணும் நோக்கியாக்கு இவ்வளவு சீனா?!” அவள் சொல்வது போலதான் மலர்விழியின் காதலன் கிரி கல்லூரி வாசலில் நிற்பான்.

நிற்பான்! அவ்வளவேதான்!

ஒருநாளும் தைரியம் வந்து அவளிடம் பேச வரமாட்டான். இவளும் அவனாக பேசுவான் என்று காத்திருந்து வருடங்கள் ஓடிவிட்டது.

இன்று மட்டும் புதுசா என்ன நிகழ்ந்துவிட போகிறது. அதே கண்ணும் கண்ணும் நோக்கியாதான்.

“அவனா இப்போதைக்கு லவ்வை சொல்ல மாட்டான்… பேசாம நீயே சொல்லி தொலைஞ்சிடு” என்று வீரா உரைக்க,

மலர்விழி, “அதெப்படிறி?!” வெட்க புன்னகையை உதிர்த்தாள்.

“து… நீயும் வெட்கமும்… போய் சொல்றி” என்றவள் விரட்ட, “கஷ்டம்… அவரை பார்த்து எனக்கு பேச்சே வரல” என்றவள் தலையை கவிழ்ந்து கொள்ள

“என்ன? தேவர் மகன் ரேவதி மாதிரி வெறும் காத்துதான் வருதோ?!” என்று சொல்லி சிரித்தவள்,

“கிண்டல் பண்ணாதடி” என்றாள் மலர்!

வீரா தீவிரமாய் யோசித்துவிட்டு இருக்கையில் அமர்ந்திருந்த பூக்காரம்மா கூடையிலிருந்த ரோஜா பூ ஒன்றை சுட்டுவிட,  “என்னடி பன்ற?” என்று மலர்விழி குழப்பமாய் கேட்க,

“வெயிட்” என்று வீரா தன் கையிலிருந்த நோட்டின் பின்புற பக்கத்தை கிழித்து அதனை அந்த புத்தகத்தின் மீது வைத்து தேடலாய் சுற்றும் முற்றும் பார்த்தவள் கொஞ்சமும் யோசிக்காமல் பின்னோடு நின்றிருந்த ஒரு நபரின் பேக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்து கொண்டு, “ஒன் மினிட்” என்று சொல்லி அந்த வெற்று தாளில் எதையோ எழுதினாள்.

பின்னர் அந்த பக்கத்தை மடித்தவள், “ஒழுங்கா இதை கொண்டு போய் உன் ஆள் கிட்ட கொடு” என்று நீட்ட அதை பின்னோடு நின்றிருந்தவன் பட்டென பறித்து கொண்டான்.

வீரா அதிர்ச்சியடைந்து அந்த நபரை ஏறிட்டு பார்த்தவள் , “நீயா?” என்று அலட்சியமாய் கேட்க,

“ஹ்ம்ம் நான்தான் பேபி” என்று சொல்ல அவளுக்கு எரிச்சல் மூண்டது.

அவன் அவள் கரத்திலிருந்த பேனாவை பறித்தும் தன் பேக்கெட்டில் சொருகி கொண்டு,

“தேங்க்ஸ்” என்றான்.

“ஒழுங்கா அந்த பேப்பரை கொடுத்திரு” என்றவள் முறைப்பாய் கேட்க,

“முடியாது… அது எனக்குதான் சொந்தம்” என்றான்.

“என் பின்னாடி சுத்தாதன்னு அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன் இல்ல!” என்றவள் சீற்றமாய் சொல்ல,

“அதெல்லாம் கஷ்டம் பேபி… இந்த ஒருவாரமா உன் முகத்தை பார்க்காம எனக்கு பைத்தியமே பிடிச்சிருச்சு தெரியுமா?!” என்றான்.

“அப்படியே போய் கீழ்பாக்கத்தில சேர்ந்திர வேண்டியதுதானே” என்று சொல்லும் போதே பேருந்து அவர்கள் கல்லூரி வாசலில் நிற்க,

“வாடி போலாம்” என்று சொல்லி மலர்விழியை விரட்டி கொண்டே இறங்கினாள் வீரா.

பின்னோடு அந்த இளைஞனும் இறங்கி, “ஏ வீராமாக்காளி” என்றழைக்க அவளுக்கு கோபம் கனலாய் எரிய, “டே உன்னை” என்று கீழே கிடந்த கல்லை மலர்விழி தடுத்தும் அவன் மீது  தூக்கியெறிந்தாள்.

அவன் நல்ல வேளையாக குனிந்து விட வீராவுக்கு கோபம் ஏகபோகமாய் ஏற, மலர்விழி அவள் கரத்தை தரதரவென பிடித்து கொண்டு கல்லூரி நோக்கி சென்றாள்.

ஆனால் அவன் மீண்டும் அவர்களை வழிமறித்து நின்று, “வீரா நான் உன்கிட்ட தனியா பேசனும்” என்க,

மலர்விழி திருதிருவென்று விழிக்க வீரா எரிச்சலான பாவனையோடு, “யோவ்! ஒரு தபா சொன்னா புரியாது… சும்மா பின்னாடியே வர்றியே என்னவோ?! நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஆள் நான் இல்ல… நீ பார்க்க ஹைக் கிளாஸ் மாறி இருக்கு… ஆனா நான் லோக்கல்… தரைலோக்கல்… வியாசர்பாடிலதான் என் வூடு… வேணா வந்து பாரு… அத்தோட ஓடி போயிடுவ” என்று சொல்லிவிட்டு அவனை அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் செல்ல,

அவன் குரல் அவளை பின்தொடர்ந்தது.

“உன்னோட இந்த உண்மைக்காகவே… உன்னை இன்னும் லவ் பன்றேன் பேபி… ஐ லவ் யூ!” என்க,

மலர்விழி புன்னகையிக்க வீரா வெறுப்போடு அவனை திரும்பி பார்த்து முறைக்க,

அவனோ அலட்டி கொள்ளாமல் பறக்கும் முத்தத்தை காற்றோடு அனுப்பிவிட்டு காரில் பறந்து சென்றான்.

“த்தூ” என்று சொல்லி வீரா தலையில் அடித்து கொள்ள மலர்விழி புன்னகை ததும்ப,

“பேசாம அவனுக்கு ஓகே சொல்லிடே மச்சி… ஆளு வேற செம ஸ்மார்ட்டா இருக்கான்… காரெல்லாம் வேற வைச்சிருக்கான்” என்று இழுக்க,

“விளக்குமாறு பிஞ்சிரும்… சொர்ணம் என்னை  தோளை வுரிச்சி தொங்க விட்டிருவா?! ” என்றாள் வீரா!

சொர்ணம் என்று சொன்னது அவள் அம்மாவைதான்! அவளுக்கு அம்மா என்றால் பெத்த பயம். அத்தனை விளக்குமாறு உதை வாங்கியிருக்கிறாளே!

ஆதலாலயே அவன் காதலை சொன்ன போது அவளுக்கு காதல் உணர்வு வரவில்லை. தன் அம்மாவிற்கு தெரிந்தால் என்னவாகும் என்று பயவுணர்வே வந்தது.

ஆனால் அவளின் பயம் புரியாமல் முகமது கஜினி கணக்காய் அவளை விடாமல் துரத்தி கொண்டிருந்தான் அரவிந்த்!

மங்களம் சில்க்ஸ் நிறுவனர் நாராயண சுவாமியின் கடைசி புதல்வன். அவன் காரை ஓட்டி கொண்டே அவள் யாருக்காகவோ சம்பந்தமில்லாமல் எழுதிய ஐ லவ் யூவிற்கும் அந்த ரோஜா பூவிற்கும் முத்தம் வழங்கி கொண்டிருந்தான்.

“என்னடா! உங்க அப்பா பிரச்சனையில மூடு அப்சட்டா இருப்பன்னு பார்த்தா?!” என்று அருகில் அமர்ந்திருந்த   அவனின் நண்பன் கேட்க,

“நான் நல்ல மூடில இருக்கேன்… நீ அந்த ஆளை பத்தி ஞாபகபடுத்தி என் மூடை ஸ்பாயில் பண்ணாதே” என்று அரிவிந்த் தன் அப்பாவின் மீதிருந்த வெறுப்பை அப்படியே பார்வையில் உமிழ்ந்தான்.

error: Content is protected !!