Aval throwpathi alla – 3

Aval throwpathi alla – 3

மாதவம்

“யம்ம்ம்ம்ம்மா” என்று வீரா வலியோடு முதுகை தேய்க்க,

“அந்த விளக்குமாறு எங்க?!” என்று சுற்று முற்றும் தேடினார் சொர்ணம்.

வீரா உள்ளூர நடுங்க,

“ம்மோவ்.. வேணா… நான் சும்மாகாட்டியும்தான்” சொல்லும் போதே அடுத்த அடி முதுகில் விழவும்,

வீரா வலியோடு அந்த வீட்டின் மூளைபுறத்தில் ஒண்டி கொண்டாள்.

“என்ன எழவுடி பார்த்திட்டிருக்க?!”

“சும்மா பாட்டுதான்” தயங்கியபடி வீரா உரைக்க,

“என்ன கன்றாவி பாட்டோ?! இந்த மாதிரி எழவெல்லாம் பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல” என்றவர் மிரட்டலாய்  கேட்க,

“அதுல நீ நினைக்கிற மாறி ஒண்ணுமே இல்ல ம்மா!” அவள் சொன்ன பதிலுரைக்கு  ஆவேசமான சொர்ணம், அவளை வெலத்து வாங்கிவிட்டார்!

“அடிக்காதே ம்மா… ப்ளீஸ் ம்மா… வலிக்குதும்மா” என்றவள் கதறி துடிக்க, அந்த காட்சியை வெகுஆர்வமாய் அங்கிருந்த குடித்தனவாசிகள் நின்று பார்த்து கொண்டிருந்தனர்.  அது ஒன்றும் புதிதாய் நடப்பதல்ல!

இருந்தும் அதனை நின்று பார்த்து ரசிப்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு!

அப்போது வெளியே நின்றிருந்த ஓர் பெண்மணி, “வயசுக்கு வந்த புள்ளயா எதுக்கு மே இப்படி மாட்டை அடிக்கிற மாறி அடிக்கிற” என்க,

“நான் அப்படிதான் அடிப்பேன்… உன் வேலை பார்த்துட்டு போவியா?!” பதிலுக்கு எகத்தாளமாய் சொர்ணம் பதிலளிக்க,

“ம்க்கும்” என்று முகத்தை கோணி கொண்டு அங்கிருந்து அகன்று விட்டார் அந்த பெண்மணி!

அதோடு விடாமல் சொர்ணம் திரும்பி, “இங்க என்ன ஷோவா காட்டிறாங்க” என்று சீற்றமாய் உறைத்துவிட்டு  வெளிகதவை படாரென மூட,

கண்ணீரும் கம்பளையுமாக காட்சியளித்த வீரா, “இனிமே நான் டிவியே பார்க்க மாட்டேன்ம்மா… அடிக்காதம்மா… ரொம்ப வலிக்குது” என்றவள் கெஞ்ச சொர்ணம் உக்கிரமாய் பார்த்தார்.

“அந்த டிவியை ஒரு நாள் நான் தெருவில போட்டு உடைக்கல” என்றவர் வீராவேசமாய் சொல்ல,

இருவருமே ஒருநாளும் அவரவர்கள் சொன்னதை செய்ததேயில்லை. வெறும் வார்த்தையளவில்தான்!

அத்தோடு சொர்ணம் அமைதியாகி தலைமுடியை வாறி சுருட்டி தன் வேலையில் இறங்க, வீராவுக்கு அப்போதே மூச்சு வந்தது. நல்ல வேளையாக அன்று விளக்குமாறு தப்பித்தது. சே! வீரா தப்பித்தாள்.

“தருதலை தருதலை… அப்படியே அப்பனை மாறி… ஒரு வேலையும் செய்யாம உட்கார்ந்துக்கிட்டு இருக்கு பாரு… வெளிய வேலை செஞ்சிட்டு வந்து வீட்டிலயும் வேலை செய்யனும்…எல்லாம் என் தலையெழுத்து” என்றவர் புலம்பி கொண்டே சாமான்களை தாறுமாறாய் உருட்ட,

“நான்தான் படிக்காம உங்க அப்பனை கட்டிக்கிட்டு நாலு வூட்டுல பத்து பாத்திரம் கழுவி பொழச்சிட்டிருக்கேன்… நீயாவது படிச்சி பெரிசா வருவன்னு பார்த்தா” என்று தன் புடவை முந்தானையில் கண்ணீரை துடைத்து மூக்கை சிந்தி கொண்டிருக்க,

“இனிமே இப்படி செய்யமாட்டேன் ம்மா… கோச்சிக்காதே” என்று அம்மாவின் தோளை தொட்டாள் வீரா!

அம்மாவை சமாதானப்படுத்த வேண்டுமென்பதைவிட அவரின் புலம்பலை நிறுத்த வேண்டுமே என்பதே வீராவின் எண்ணம்! ஆனால் அது அத்தனை சீக்கிரத்தில் சாத்தியப்படாது. சொர்ணம் புலம்ப ஆரம்பித்தால் அப்போதைக்கு நிறுத்த மாட்டார்.

“அந்த பக்கத்துவீட்டு கீதா எவனோ ஒரு கழிசடையை இழுத்துட்டு பிள்ளையா வாங்கிட்டு வந்து நிக்கிறா… பார்த்தியா?!” என்று அக்கம்பக்க கதையை எல்லாம் இழுக்க,

“அய்யோ யம்மோவ்… நான் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன்” என்று பதறினாள்.

“என் விதி! மூணு பொட்ட புள்ளைங்கள பெத்துட்டு… வயித்துல நெருப்பு கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு” என்று எப்பவும் பேசும் அதே வசனத்தை பேச வீராவுக்கு கடுப்பானது.

“ம்மாவ்” வீரா பாவமாய் பார்க்க,

“விளக்குமாத்துக்கு புடவை காட்டினா கூட பின்னாடியே வந்திருவாங்கன்னு… பரதேசி பசங்க… நீதான்டி பார்த்து உஷாரா இருந்துக்கனும்” என்று சொர்ணம் அடுத்த நிலைக்கு முன்னேறி அறிவுரை செய்ய,

“சரிம்மா” என்று சலித்து கொண்டு மூச்சை இழுத்துவிட்டாள் வீரா. எத்தனை தடவைதான் இந்த யூஷ்வல் டயலாக்கை கேட்டு கொண்டிருப்பது என்றிருந்தது அவளுக்கு!

அதோடு சொர்ணம் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு, “சரி போய் நீ படி… உன் சோமாரி அப்பனை நம்பி ஒரு பிரயோசனமும் இல்ல… நீதான் படிச்சி உன் தங்கச்சிகள கரைசேர்க்கனும்…  நான் உன்னையதான்டி மலை போல நம்பிருக்கேன்” என்று சொர்ணம் வீராவிடம் பேசி கொண்டு சமையல் வேலையை பார்க்க வீரா சலித்து கொண்டே படிக்க அமர்ந்தாள்.

அவள் கல்லூரி பேகில் இருந்த  புத்தகத்தை பார்த்து பெருமூச்சுவிட்டவளுக்கு ஆங்கிலத்திலும் மற்ற எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தைகள் “C++ java digital”

“சே! என்ன கர்மம்டா ஒரு எழவும் புரியல” என்று புலம்பி கொண்டே புத்தகத்தை திருப்பியவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. விளக்குமாறு என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் அவள் கல்லூரி வாசலையே தாண்டியிருக்க மாட்டாள்.

ஏதோ ஒரு உலக அதிசயம் நிகழ்ந்து  அவளும் பத்தாவது பன்னிரெண்டாவது தேர்ச்சி பெற்றுவிட்டாள். ஆதலால் அப்போதைக்கு விளக்குமாறிடம் இருந்தும் சொர்ணத்திடம் இருந்தும் தப்பித்து கொண்டாள்.

ஆனால் அதற்கு பிறகு சொர்ணத்தின் காதில் எல்லோரும் கம்பூயூட்டர் படித்தால் நல்ல எதிர்காலம் என்று ஓத, அதற்கு பலிகடாவானது வீராதான்.

அவள் தலைவிதி Bca சேர்ந்து C++ javaவுடன் மல்லுகட்ட வேண்டியிருந்தது.

அவள் முடிந்தவரை போராடி பார்த்துவிட்டாள்.  ஆனால் ஒன்றும் ஏறவில்லை. இதுவரையில் பத்து அரியர்! அனேகமாய் அவள் எழுதிய தேர்வுகளே பத்தாகதான் இருக்கும். இந்த விஷயம் இன்னும் சொர்ணத்திற்கு தெரியாது. தெரிந்தால் என்ன நிகழும் என்று சொல்ல  தேவையில்லை.

ஆனால் வீரா படிப்பில் மட்டும்தான்  மந்தம். மற்றபடி விளையாட்டு மற்றும் மிமிக்ரி, நடிப்பு, நடனம் போன்ற விஷயங்களில் அவளை மிஞ்ச ஒருவள் பிறந்து வர வேண்டும். ஆனால் அந்த திறமைகளெல்லாம் மார்க் லிஸ்ட்டில் எடுத்து கொள்ளபடமாட்டாது என்பது மிகவும் கசப்பான உண்மை!

இதெல்லாம் ஒருபுறமிருக்க புத்தகத்தை வைத்து கொண்டே அவள் தூங்கி வழிய நங்கென்று தலையில் கொட்டு விழுந்தது. அம்மாவோ என்று அவள் பதறும் போது கேலியாய் சிரித்து கொண்டே பள்ளி சீருடையில் வந்து நின்றாள் நதியா!

“நீயா” என்று வீரா நெட்டி முறிக்க, அடுத்ததாய் வந்து நின்றாள் சின்னவள் அமலா. இவர்கள் இருவரும் அவர் தந்தைக்கு பிடித்தமான நடிகைகளின் பெயர்கள்.

விதி! அத்தகைய அதிர்ஷ்டம் வீராவுக்கு இல்லை. முதலில் பிறந்ததால் குலதெய்வம் பெயர்தான். ஏன் முதலில் பிறந்தோம் என்று அதற்காகவே அவள் நொந்து கொள்வாள்.

சின்னவள் அமலா தன் தமக்கையின் காதோரம், “என்ன க்கா… இன்னைக்கு கோட்டா ஓவர் போல… சொர்ணம் பின்னி பெடலடுத்துச்சான்” என்க,

“யாரடி சொன்னது?” என்று சீற்றமானாள் வீரா!

“அந்த பொட்டி கடை சரோஜா” என்றதும்

“அந்த சவுண்டு சரோஜாவுக்கு ஒருநாள் இருக்கு” என்று வீரா கோபமாய் சொல்லும் போதே,

“என்னடி வந்ததும் வராததுமா அங்க குசுகுசுன்னு?!” என்று குரல் கொடுத்தார் சொர்ணம்.

“ஏ போ போ” என்று குரலை தாழ்த்தி வீரா அவர்களை விரட்டிவிட்டு புத்தகத்திற்குள் தலையை நுழைத்து அறிமுக பக்கத்தை படித்து கொண்டிருந்தாள். அது தேர்வு தாளில் வராது என்பதெல்லாம் வேறு விஷயம்.

“டிரஸ்ஸை மாத்திட்டு வந்து சோத்தை கொட்டிக்கோங்கடி” என்று அவர்களை சொர்ணம் மரியாதையாய் அழைக்க,

நதியாவும் அமலாவும் வேகவேகமாய் துணிமணிகளை மாற்றி கொண்டு சாப்பிட அமர்ந்தவர்கள், “இன்னைக்கும் இதேதானா?!” என்று அந்த புளிசாதத்தை பார்த்து முகம் சுளிக்க,

“ஆமான்டி இங்கே வகை வகையா ஆக்கி வைக்க… உன் மாமன் என்ன பேங்கில வேலை செய்றனாக்கும்… கம்முனு துன்னுட்டு போய் படிக்கிற வேலையா பாருங்க” என்றதும் வேண்டா வெறுப்பாய் அதை அள்ளி அள்ளி வாயில் தினித்தனர் அந்த இரு சகோதிரிகளும்!

அந்த காட்சியை பார்த்து சிரிப்பு தாங்க முடியாமல் வீரா வாயை மூடி கொள்ள,

அப்போது வாசல் கதவு தடல்புடலென தட்டும் சத்தம் கேட்டது.

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, “வீரா” என்று அழைப்பு ஒலிக்கவும் அவள் முகம் அத்தனை பிரகாசமானது. மற்ற இரு தங்கைகளின் முகங்கள் கூட. ஆனால் சொர்ணத்தின் முகத்தில் அத்தனை பிரகாசம் இல்லை.

வீரா ஓடி சென்று வாசல் கதவை திறந்து, “யப்பா” என்று அவரை கட்டி கொள்ள மற்ற இரு சகோதிரிகளும் கூட அந்த நொடி ஓடி வந்து தந்தையை அணைத்து கொள்ள,

“கண்ணுங்களா!” என்று மகள்களை கட்டி கொள்ள போகும் போதே வீரா விலகி வந்தாள்.

“குடிச்சிருக்கியா?!” என்றவள் முறைப்பாய் கேட்க வீரய்யனின் தடுமாற்றமும் சிவந்த விழிகளும் அதை உறுதிபடுத்தியது.

“என்னிக்கோ ஓரு தபாதான் வூட்டுக்கு வர… அன்னைக்கும் இப்படி குடிச்சிட்டு வந்திருக்க” என்று வீரா கேள்வி எழுப்ப,

சொர்ணம் வாய்க்குள்ளேயே திட்டி கொண்டு விரல்களை கோர்த்து, “வந்திருக்கான் பாரு சோமாரி கசமாலோம்… சாண்டா குடிச்சவன்” என்று கடிந்து கொண்டிருக்க வீரய்யன் உள்ளே நுழையவும்,

முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்தாள் வீரா!

“என்னம்மா ! ஆசையா அப்பா பிரியாணி வாங்கின்னு வந்திருக்கேன்” என்றதும் சின்னவளுக்கு பெருத்த மகிழ்ச்சி! புளிசாதத்திடமிருந்து தப்பித்து வேகவேகமாய் தந்தை கரத்திலிருந்த பார்ஸலை வாங்கி கொண்டு அவள் சாப்பிட அமர,

நதியாவும் வாசனையை முகர்ந்துவிட்டு சாப்பிட தயாராக வீரா மட்டும் கோபத்தோடு அமர்ந்திருந்தாள்.

வீரய்யன் தானே ஒரு பார்ஸலை பிரித்து அவளுக்கு  ஊட்ட செல்ல, “எனக்கு ஒண்ணுயும் வேண்டாம்” என்றவள் முகம் திருப்பியவளை கட்டாயப்படுத்தி ஊட்டி விட்டவர்,

“அப்பா! இப்பெல்லாம் எப்பவும் குடிக்கிறதில்ல தங்கம்… எப்பயாச்சும்தான்” என்று சமாதானம் சொல்ல, வீராவிற்கும் லேசாய் மனமிறங்கியது.

“உனக்காகவே அப்பா லெக் பீஸா வாங்கினுவந்திருக்கேன் பாரு” என்று வீராவிடம் வீரய்யன் அதனை காண்பிக்க,

“அப்போ எனக்கு” என்று சின்னவள் கோபம் கொள்ள,

அடுத்த நொடி அந்த லெக் பீஸுக்காக எனக்கு உனக்கு என அங்கே பெரிய ரணகளமே நிகழ்ந்தேறியது.

அப்போது சொர்ணம் எரிச்சலாகி,

“கழிசடைங்களா!! எதுக்கெல்லாம் சண்டை போடிறதுன்னு விவஸ்த்தை இல்ல… ” என்று கடிந்து கொள்ள அதற்கு பிறகு சிறுசத்தம் கூட எழுப்பாமல் மூவரும் கப்சிப்பென்று சாப்பிடுவதில் மும்முரமாயினர்.

“ஏ சொர்ணம்! நீயும் வந்து சாப்பிடு!” என்று வீரய்யன் அழைக்க,

“ஆமா இங்க சோத்துக்குதான் அலையிறனாக்கும்… அதை நீயே கொட்டிக்கோ” என்று சொர்ணம் கடுப்படிக்க,

“என்னடி ? புருஷன் என்னிக்கோ ஒரு நாள் வர்றேன்…  இப்படி மூஞ்சி காட்டிட்றியா என்னவோ?” என்றவர் குழைய,

“சாப்பிட வாம்மா… சூப்பரா இருக்கு” என்று மகள்களும் அழைக்கவும் சொர்ணம் ஒருவாறு மனமிறங்கி சாப்பிட அமர்ந்தார்.

இரவு அந்த ஒரே அறையில் அந்த மூன்று சகோதிரிகளும் போர்வைக்கும் தலையணைக்கும் சண்டையிட்டு கொண்டிருக்க,

“அங்க என்னடி சத்தம்?” என்ற சொர்ணத்தின் குரல் கேட்டதும்  எல்லோரும் தங்கள் சண்டையை நிறுத்தி சமாதன உடன்படிக்கை செய்து கொண்டு உறங்கும்  நிலைக்கு போக,

வீராவின் விழிகளைதான் உறக்கம் தழுவவில்லை.

தன் பெற்றோர்கள் போடும் சண்டைதான் அவள் காதுகுளிர கேட்க, “சாம்பாத்திக்கிறதெல்லாம் இப்படியே குடிச்சியே அழிக்கிறியே… நல்லா இருப்பியா நீ… மூணு பொட்ட புள்ளயங்கள வேற பெத்து வைச்சிருக்கோம்… அதுங்கள எல்லாம் எப்படி கரை சேர்ப்போம்னு நினைச்சாலே எனக்கு இராவுக்கு தூக்கமே வரமாட்டேங்குது” என்க,

“என்னைக்கு கூடதான்டி நீ இல்லாம தூக்கமே வரமாட்டேங்குது” என்று வீரய்யன் பேசி கொண்டே மனைவியை இழுக்க

“யோவ்… வயசுக்கு வந்த பிள்ளைங்க படுத்திட்டிருக்கு” என்று சொல்லி அவர் விலக,

“எல்லா தூங்கிட்டாளுங்க… நீ வா” என்று சொல்லி தன் மனைவியை வலுக்கட்டாயமாய் அணைத்தார்.

“பெரியவ முழிச்சிட்டிருக்க போறாய்யா” என்று சொர்ணம் அஞ்ச,

வீரா அப்போது தன் காதிரண்டையும் அழுத்தி பிடித்து கொண்டாள்.

அதற்கு பிறகு நடைபெறும் எந்த சம்பாஷணையும் அவள் கேட்க கூடாதென்று பெரும் பிராயத்தனப்பட,

அதெல்லாம் அவளையும் மீறி கொண்ட ஓலிக்க அன்றிரவு அவள் உறங்குவது சிரமம்தான். இதையெல்லாம் அவ்வப்போது நடப்பதுதான்.

இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த வீரா மனக்கட்டுபாட்டோடு வாழ யத்தனித்தாலும் இந்த சமூகம் அவளை விட்டுவிடுமா?!

‘மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்’ என்றார் தேசிக விநாயகம் பிள்ளை.

இங்கே மங்கையராக வாழ்வதே மாதவம் போலதான்! அதுவும் இந்த சமூகம் அவளுக்காக விதித்த கற்பு மற்றும் ஒழுக்க நெறிகளை தூக்கி சுமந்து கொண்டு!

******
விடிந்ததும் அமலாவும் நதியாவும் அவசரஅவசரமாய் பள்ளிக்கு புறப்பட்டுவிட,

வீரா கடமைக்கென்று கிளம்பி கொண்டிருந்தாள். என்ன செய்வது? சொர்ணத்திடம் இருந்து இரண்டு அடியாவது வாங்கினால்தான் அவளுக்கு புறப்படுவதற்கான உத்வேகமே பிறக்கும்.

அப்படியாக அடி உதையெல்லாம் வாங்கி கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டவளை பார்த்து இரண்டு குடித்தனம் தள்ளியிருந்த சுகுமார் படாரென்று கதவை தாளிட்டு பூட்டி கொண்டான்.

இந்த காட்சி தினமும் அரங்கேறுவதுதான்! அவள் பள்ளி படிக்கும் போது அவன் ஒரு முறை ஐஸ்கீரீம் வாங்கி தர்றேன் என்று அவளிடம் செய்த சில்மிஷ
வேலைகளால்,

சொர்ணத்திடம் இருந்து அவன் வாங்கிய விளக்குமாறு உதை இன்றளவும் அவனுக்கு மறக்கவில்லை!

ஆதலாலயே அவளை பார்த்ததும் அவன் பதுங்க, இவள் சும்மா இல்லாமல் அவனை ஜன்னல் வழியாக எட்டி பார்த்து

“சுகுமார்ர்ர்ர்ரு” என்று கலாய்த்து கண்ணடித்துவிட்டுதான் கல்லூரிக்கு போவாள்.

அவள் வாசலிற்கு வந்ததும்,

“ஏ வீரா! உன் குடிகார அப்பனை கூப்பிட்டு வண்டியை நவுத்த சொல்ல… பரதேசி எப்படி நிறுத்திக்கிறான் பாரு… எல்லா வேலைக்கு போ வேணாம்” என்றதும் அவள் மீண்டும் வீட்டை நோக்கி ஓட வெளியே வந்த சுகுமாரு மீண்டும் கதவை மூடி கொள்ள,

“இவன் வேற” என்று தலையிலடித்து கொண்டு சென்றாள்.

வீரய்யனோ போதையில் மல்லாந்து கிடக்க, வீராவும் அவரை எழுப்பி பார்த்து நொந்து போனாள். சொர்ணமும் அப்போது பார்த்து அங்கே இல்லை. இருந்திருந்தால் தன் ஆயுதத்தை கையில் எடுத்திருப்பார்!

வீரா தன் தந்தையின் முகத்தில் தண்ணீர் இறைக்க அப்போதும் அவர் போதை தெளியாமல், “யவடி அவ” என்று புலம்பிவிட்டு மீண்டும் தூங்கிவிட,

வெளியே இருந்து மற்றவர்கள் திட்டும் சத்தம் வீடு வரைக்கும் கேட்க,

வீரா யோசித்துவிட்டு தன் தந்தையின் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து கொண்டு வெளியே ஓடியவள்,

தானே லாரியில் ஏறி அமர்ந்தாள்.

அவளே வண்டியை இயக்கிவிட்டு நகர்த்த, எல்லோரும் பயங்கரமாய் கதறி கொண்டு பின்வாங்கினார்.

ஆனால் அவளோ கைதேர்ந்த ஓட்டுநர் போல வெகுலாவகமாக அதனை ஓட்டி ஓரமாய் நிறுத்திவிட்டு இறங்க,

எல்லோரும் அவளை மெச்சிய பார்வை பார்த்தனர்.

இந்த காட்சியை பார்த்த சொர்ணமோ பதறி கொண்டு ஓடி வந்து அவளை அடிக்க வர, “அப்பா எழுந்திருக்கல அதான்” என்று அச்சப்பட்டு ஒதுங்கினாள் வீரா!

சொர்ணம் அடிக்காமல் சாவியை மட்டும் பறித்து கொண்டு, “இன்னொரு தபா வண்டில கை வைச்சா… அந்த கையை முறிச்சி அடுப்பில வைச்சிருவேன் பார்த்துக்கோ” என்றவர் மிரட்டிவிட்டு செல்ல, வீரா தொங்கிய முகத்தோடு மீண்டும் கல்லூரிக்கு புறப்பட்டாள்.

அப்போது பக்கத்து வீட்டுக்காரம்மா சொர்ணத்திடம், “சும்மா சொல்ல கூடாது சொர்ணம்… உன் பொண்ணு நல்ல திறமைசாலிதான்”என்று பாராட்ட,

“ம்க்கும் ஒரு திறமையும் இல்ல… எல்லாம் அதிகபிரசங்கிதனம்… செய்றதெல்லாம் சேட்டை…”

“பிள்ளை நல்லாதான்டி ஓட்டுச்சு”

“அய்யோ யக்கா! இவ பாட்டுக்கு எங்கயாச்சும் வண்டியை ஓட்டி முட்டி தொலைச்சிட்டா அதுக்கும் நான்தான் அழுவுனும்” என்று சலிப்படைந்தார்.

சொர்ணத்திற்கு அவர் கவலை. குடும்ப செலவுகள் பிள்ளைகளின் படிப்பு செலவு என எல்லாமே அவர் வீட்டு வேலை செய்து ஈட்டுவதுதான்!

வீரய்யன் ஓர் லாரி ஓட்டுநர். ஓட்டுகிறாரே ஒழிய சம்பாத்யம் என்று ஏதாவது வருகிறதா என்று கேட்டால் அது அவருக்குதான் தெரியும்.

ஒரு நாளும் சொர்ணத்திடம் சாம்பாத்யம் என்று ஒத்த பைசா கொடுத்ததில்லை. ஆனால் பிள்ளைகளை மட்டும்  வஞ்சனையில்லாமல் வழங்கிவிட்டார். அந்த சுமை அவருக்கில்லையே!
அதான்!

முதல் மகள் வீராதான் அப்பாவுக்கு செல்ல மகள். அவ்வப்போது பெரியவளை லாரியில் உடன் அழைத்து சென்றவர் அவள் வண்டி ஓட்டுவதில் ஆர்வமாய் கேள்வி எழுப்ப,

அன்று அவர் விளையாட்டாக அவளுக்கு அதனை இயக்க கற்று கொடுத்தார். அவள் அதை கற்பூரமாக பிடித்து கொண்டாள்.

நாம் தெரிந்தும் தெரியாமலும் கற்கும் சில விஷயங்கள் நம் வாழ்க்கையே மாற்றி அமைக்கும். அப்படி வீராவின் வாழ்கையை புரட்டி போட போகிறது,

அவள் விளையாட்டாய் கற்ற இந்த வித்தை!

error: Content is protected !!