துருவம் 17
Faiq, துபாய் வந்ததில் இருந்து அவன் அவனாக இல்லை. அங்கு அவளுடன் மதுரையில் இருந்த நான்கு மாதங்களும், அவனுக்கு சில நேரங்களில் சந்தோஷத்தையும், சில நேரங்களில் துக்கத்தையும் விதி வழங்கி கொண்டு இருந்தது.
இங்கு வந்து இன்றோடு ஆறு மாதமாகியும், அவனால் எந்த ஒரு வேலையையும் உருப்படியாக செய்ய முடியவில்லை. மனது அவளை தேடுகிறது, மூளையோ இங்கு தான் உன் வாழ்வு, அவளை நினையாதே என்று அழிச்சாட்டியம் செய்கிறது.
தூக்கம் வராமல், அந்த நள்ளிரவில் பாலைவனத்தில் டென்ட் அமைத்து, வெளியே தெரிந்த நிலவை வெறித்து கொண்டு இருந்தான்.
முன்பு, இங்கே அவளை அழைத்து வந்த தருணத்தை நினைத்து, பெருமூச்சு விட்டான். அவனுடன் வந்த அவன் நண்பன் ரசாக், நண்பனின் நிலையை பார்த்து வருந்தினான்.
இன்று அவன் இந்த நாட்டின் பிரின்ஸ், அதுவும் அரசனின் மூத்த மகன் என்று அரசரே அறிவித்து, அவனை கெளரவப்படுத்தி மகிழ்ந்தார்.
அவன் தாய்க்காக, அவன் நடத்திய போராட்டத்தில் என்ன தான் வெற்றி கண்டாலும், மனதின் ஓரத்தில் அவளை பிரிந்த சோகமும், வலியும் அவனை அவனாக இருக்க விடவில்லை.
இங்கே இவன் இப்படி இருக்க, அங்கே காவ்யஹரிணி தலையணையில் கண்ணீரை நனைத்து கொண்டு இருந்தாள்.
“faiq! எனக்கு நீ வேணும், ஆனா என்னால நீ நினைக்கிற வாழ்க்கையை கொடுக்க முடியும்னு தோணல. நீ இல்லாம, இங்கு எனக்கு ஒன்னும் பிடிக்கல, என்னை புரிஞ்சிக்க” என்று கண்ணீர் விட்டு அழுது புலம்பி கொண்டு இருந்தாள்.
அவள் மனம் அவளை கேட்காமல், இங்கு அவன் வந்த நாளுக்கு அழைத்து சென்றது.
கோபத்துடன், மேலே ஏறி சென்றவளை பார்த்து குழம்பிக் கொண்டு நின்று இருந்த faiqகை, அவளின் தம்பி மனோகர் தான் அவனை வரவேற்று ஹாலில் தாத்தா அருகே அமர வைத்தான்.
தாத்தாவின் கண் ஜாடையை புரிந்து கொண்ட மனோகர், அவனும் அங்கேயே அமர்ந்து faiqயிடம் அவர் கூறுவதை மொழி பெயர்க்க தொடங்கினான்.
“இவர் பெயர் சடகோப நாயர், என்னுடைய சினேகிதர். இவர் தான், என் பேத்தி காவ்யஹரிணிக்கு, வர்ம கலை எல்லாம் கற்று கொடுத்தது” என்று அறிமுகம் செய்து வைத்தார்.
அவரை பார்த்து வணங்கியவன், அவரிடம் எதற்காக இவள் கோபம் கொண்டு இருக்கிறாள்? அவரின் வயதிற்காகவது, அவள் சற்று பொறுமை காத்து இருக்கலாம் என்று எண்ணாமல் அவனால் இருக்க முடியவில்லை.
அதற்கு ஏற்றாற் போல், தாத்தா அவனுக்கு எதனால் என்று விளக்க தொடங்கினார்.
“உங்களுக்கு, அவளோட ஆராய்ச்சி எது பற்றி அப்படினு ஏதும் யுகம் இருக்கா தம்பி?” என்று கேட்டார்.
“ம்ம்.. கிட்ட தட்ட” என்று அவன் கூறிவிட்டு அவர் முகத்தை பார்த்தான்.
“அந்த ஆராய்ச்சியை முதலில் ஆரம்பிச்சது, என் மனைவியுடைய அப்பா தான் தம்பி. அப்போ அவரை பைத்தியக்காரன் மாதிரி தான், எல்லோரும் பார்ப்பாங்க”.
“அந்த காலத்துல, அந்த அளவுக்கு தான் தம்பி இங்க மக்களுடைய ஞானம். அவ்வளவு ஏன், நானே அப்போ அவரை அப்படி தான் பார்த்தேன்”.
“நான் ரௌடியா திரிஞ்ச காலம் அது, ஊருல நான் ஒரு பெரிய தாதா. அப்போ இவ மேல எனக்கு எந்த ஒரு லவ்வும் இல்லை, இப்போ இந்த பிள்ளைங்க சொல்லுற மாதிரி, நான் அப்போ முரட்டு சிங்கிள் தம்பி” என்று கூறி சிரித்தார்.
அவர் சொல்லுவதை கேட்ட faiq, நம்ப முடியாமல் அவரை பார்த்தான். ஏனெனில், அவர் எந்த அளவு தன் மனைவியை பார்த்துக் கொண்டார் என்று கண் கொண்டு பார்த்தவன் ஆயிற்றே.
அதுவும் அவர் ரௌடியாக இருந்தார் என்று சொல்லுவதை தான், இன்னும் நம்ப முடியாமல் பார்த்தான். அவனின் முகம் போன போக்கை வைத்து, அதை அறிந்தவர் அவனுக்கு விளக்கம் கொடுக்க தொடங்கினார்.
“தம்பி! உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனா இதான் உண்மை, அதுவும் அப்போ நான் ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்து இருக்கேன்” எனவும், மேலும் திடுக்கிட்டான்.
அவனோ, மேலும் இதை கேட்டு அதிர்ந்தான். கிளற, கிளற ஏதோ பூதம் வருவது போல், அவனுக்கு அப்பொழுது தோன்றியது.
“அப்புறம் ஒரு நாள், என் மாமனாரை நாலு தடியனுங்க துரத்தவும், இவரை ஏன் துரத்துறாங்கன்னு நானும் பின்னாடியே போனேன். அப்புறம் தான் தெரிஞ்சது, அவனுங்க அவரை கொல்ல தான் துரத்தி இருக்காங்கன்னு”.
“அப்போ அந்த நேரத்துல நானும், என்னோட கூட்டாளி ஒரு ஆளும் தான் அவனுங்களை அடிச்சி விரட்டினோம். அவரை விசாரிக்கும் பொழுது தான் தெரிஞ்சது, இந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபடுறதில் பெரிய தலைங்களுக்கு பிடிக்கலன்னு”.
“அப்போ தான் அவர் எங்க கிட்ட, எது பற்றிய ஆராய்ச்சி அப்படினு விளக்கமா சொன்னார். கொஞ்ச நாளைக்கு இதை மூட்டை கட்டுங்க, உங்கள் குடும்பத்துக்கு நாளைக்கு யார் பதில் சொல்லுவா அப்படினு சொல்லி, நான் அப்புறம் அவங்களுக்கு தெரியாம அவங்களை எல்லாம் காவல் காத்தேன்”.
Faiqகிற்கு, அவரின் இந்த பரிமாணத்தில் ஒரே வியப்பு. எப்படி அவ்வளவு பெரிய ரௌடியாக இருந்தவர், இப்பொழுது எப்படி பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆளுகிரார் என்று குழப்பமும், வியப்பும்.
அப்பொழுது அங்கே வந்த நாட்சியார், இவர்களுக்கு சாப்பிட வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்டுவிட்டு, கணவரிடம் எப்பொழுதும் அவர் அந்நேரத்தில் பருகும் சுக்கு காபியை கொடுத்து உபசரித்தார்.
மேலோட்டமாக பார்த்தால், அவர் காபி மட்டும் கொடுத்தது போல் ஒரு தோற்றம் இருக்கும். ஆனால், அவர்கள் இருவரும் பழைய நினைவுகளில் தத்தளித்து, காதல் பார்வையை பரிமாற்றம் செய்து கொண்டு இருக்கின்றனர் என்று காதலை புரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
காவ்யஹரிணி, அவனின் உயிர் அல்லவா. அவனுக்குள், காதல் விதையை தூவி, கண்களால் காதல் பாஷை கற்றுக் கொடுத்த அவனின் உயிர் அல்லவா.
இப்பொழுது, இங்கே இவர்களின் காதலை புரிந்து கொண்டு, மேலும் ஆச்சர்யம் அடைந்தான். இந்த வயதிலும், அவர்களின் காதலை கண்டு வியந்தான்.
தானும், இவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதற்கு காரணம், அவனின் தந்தை.
தாய், தன் தந்தை மீது அவ்வளவு காதலை கொட்ட அவர் தயாராக இருந்தும், அவர் ஏனோ திரும்பி கூட பார்க்கவில்லை. இப்பொழுது காதல் மனம் கொண்டு, அவரின் காதலியை மணந்து இருந்தாலும் அந்த காதல் இப்பொழுது அவர்கள் இடையில் இருக்கிறதா என்று கேட்டால், அவனுக்கு அது புரியாத புதிர்.
அவனுக்கு அப்படி இருக்க பிடிக்கவில்லை, இதோ அவளின் தாத்தா, பாட்டி போல் தான் இருக்க பிடித்தம். இங்கே இவன் இப்படி எண்ணங்களுகுள் பயணிக்க, அவனின் எண்ணத்தை கலைத்து அவர் மேலும் தொடர்ந்தார்.
“அப்போ தான், இவ என்னை பார்த்தாள். எதுக்கு, இங்க எங்க வீட்டை காவல் காக்குறீங்கனு கேள்வி கேட்டா. யாரும் பார்க்கல அப்படினு நான் நினைக்க, இவ பார்த்துபுட்டா”.
“நான் காவல் தான் காக்குறேன்னு, உனக்கு எப்படி தெரியும் அப்படினு நான் கேட்க, பதிலுக்கு அவ சொன்னதை கேட்டு தான் அவளை நான் கவனிக்க ஆரம்பிச்சேன்”.
“அப்புறம் எங்களுக்குள்ள, படி படியா காதல் மலர்ந்தது. எப்படியோ தெரிஞ்சுகிட்ட இவ அப்பா, எங்க காதலை ஏத்துக்கல. அதனால, அப்போவே வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிகிட்டோம்”.
இதை கேட்டு, மேலும் அதிர்ந்தான். அவர் கூறியது, கிட்டத்தட்ட ஒரு அறுபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. அப்பொழுதே, இவர் இப்படி எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே, இதை தைரியமாக செய்து இருக்கிறார் என்று அவர் மீது இப்பொழுது பிரமிப்பு.
“எதிர்த்துக்கிட்டு வந்தாச்சு, இனி மேல் அவங்க அப்பா இவளை பார்த்ததை விட, நாம இவளை நல்லா வச்சு இருக்கணும் அப்படினு ஒரு வைராக்கியம். அப்போ உழைக்க ஆரம்பிச்சது தான், இப்போ என் பிள்ளைங்க, என் பேர பசங்க இன்னும் நல்லா முன்னேற்றி விட்டு இருக்காங்க” என்று பெருமை பொங்க பார்த்தவரை, அவன் கை தன்னால் கை தட்டியது.
“தாத்தா, உங்களை பார்த்து எங்க பொறாமை பட்டுடுவேனோனு இப்போ பயம் எனக்கு” என்று கூறிய faiqகை பார்த்து சிரித்தார்.
“எங்களை பார்த்து பொறாமை படாம, நீங்களும் என் பேத்தியும் உங்களை பார்த்து பொறாமை பட வைக்க வழியை பாருங்க” என்று அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்.
அதில், அவன் முகம் சிவந்தது வெட்கதினால். அதை பார்த்து, அங்கு உள்ளவர்கள் சிரித்தனர். இப்பொழுது அவனுக்கு அவளின் மேல், எந்த அளவு காதல் இருக்கிறதோ, அதே அளவு கோபம் இப்பொழுது அவள் நடந்து கொண்டு இருப்பது.
வீட்டில், இத்தனை பேர் இங்கு சூழ இருக்கும் பொழுது, இவள் இவரை வரவேற்க கூட இல்லாமல், மேலே அவள் கோபத்துடன் சென்றது ஏனோ மனதிற்கு பிடிக்கவில்லை அவளின் இந்த செயல்.
அதை தாத்தா புரிந்து கொண்டார் போல், மேலும் தொடர்ந்தார்.
“இவ்வளவு வசதி வந்த பிறகு, என் மாமனார் ஆரம்பிச்சு வச்ச ஆராய்ச்சியை இப்போ தொடங்கினா என்னனு ஒரு பத்து வருஷம் முன்னாடி தோணுச்சு. அப்போ, இதை பத்தி இதோ என் நண்பர் சடகோபன் கிட்ட தான் சொன்னேன்”.
“ஆராய்ச்சி பத்தி முழுசா கேட்டுட்டு, உடனே என் கூட சேர்ந்து உதவி பண்ண தயாரானான். இதை பத்தி யார் கிட்டையும் நாங்க மூச்சு விடல, ஆனா விதி அதை இவர் பையன் காதுக்கு போய்டுச்சு”.
“உதவி பண்ணுறேன் சொல்லி, பெரிய அரசியல் கட்சி மேலிடத்தில் இதை பற்றி போட்டு கொடுத்துட்டான். அவ்வளவு தான், அதுக்கு அப்புறம் அங்க சுத்தி, இங்க சுத்தி அத்தனை தடை இதை தொடர விடாம”.
“அப்போ பார்த்து எனக்கு அட்டாக் வந்திடுச்சு, எனக்கு இப்படி ஆனதுல என் நாட்சியை விட என் பேத்தி தான் துடிச்சு போய்ட்டா. அப்போ என்னை பார்க்க வந்த என் நண்பன், இதை பத்தி இனி கவலை படாதே, கடவுள் நமக்கு நிச்சயம் ஒரு வழி சொல்லுவார் அப்படினு எனக்கு ஆறுதல் சொல்ல, இவ இவனை பிடிச்சு என்ன விஷயம் அப்படினு கேட்டு குடைஞ்சு எடுத்துட்டா”.
“அப்போ முடிவு பண்ணா, என்ன செய்யனும் அப்படினு. இவன் தான் அவளுக்கு, அப்போ எல்லா வித்தையும் கத்து கொடுத்தான். அப்புறம் அவ, அகழ்வாராய்ச்சி தான் படிப்பேன் சொல்லி, விடாம என்னை சம்மதிக்க வச்சு படிச்சா”.
“சேகரிச்சு வச்சு இருந்த தகவல் அம்புட்டையும், ஒன்னு விடாம அலசி ஆராய்ந்து தனக்கு ஒரு நம்பிக்கையான ஆள் வேணும் அப்படினு இவன் கிட்ட சொன்னா”.
“இவனும் ஒரு பையனை, இவ கிட்ட அனுப்பி வசான். ஆனா, அதுக்கு அப்புறம் தான் பெரிய பிரச்சனை வந்தது”.
“அந்த பையன் இவனோட பையனோட அடியாள், அது இவனுகும் தெரியும். தெரிஞ்சும் இவன் அனுப்பினதுக்கு ஒரே காரணம், அவனோட பேத்தி தான்”.
“அவளை தன்னுடைய பிடியில் வச்சுட்டு தான், இவனை பிடிச்சு ஆட்டி இருக்கான். என் பேத்தி சேகரித்த அத்தனையும், அவன் எரிச்சிட்டு, அவளையும் கடத்திட்டு போயிட்டான்”.
“இவன் தான் சத்தியம் செய்யாத குறையா, அவன் கிட்ட பேசி, இவளையும், அவனோட பேத்தியையும் காப்பாத்தி கூட்டிட்டு வந்தான். அதுல இருந்து, இவன் மேல அவளுக்கு செம கோபம், ஆனா கோபத்தை விட வருத்தம் சொன்னா பொருத்தம்”.
இதைக் கேட்டு மேலும் அதிர்ந்தான், அவள் எந்த மாதிரி சூழ்நிலையை எதிர் கொண்டு இருந்தால், இவர் மேல் கோபம் கொண்டு இருப்பாள். இப்பொழுது, அவள் மீது இருந்த கோபம் கூட கொஞ்சம் மட்டு பட்டு இருந்தது.
“இப்போ தான் அவ கூட படிச்ச பையன் ஸ்டீஃபன் கூட சேர்ந்து, இன்னும் சில விஷயங்களை கண்டுபிடிச்சு துபாய் வந்தா”.
“அங்க நாங்க பார்த்த குறிப்பு எல்லாம், ரொம்ப பிரமிக்க வச்சது. அங்கேயும், இவளை தொடர்ந்தாங்க, ஆனா இவ எப்படியோ அங்க தப்பிசிட்டா உங்க புண்ணியத்தில்” என்று அவர் கூறவும், அவன் இப்பொழுது அவளின் ஆராய்ச்சி பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முனைந்தான்.
“முதல, எனக்கு இவ இதை தொடறதில் இஷ்டமில்லை. ரெண்டு பேருக்கும், வீட்டில் இதனால சண்டை தினமும்”.
“அதனால தான், அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்ய ஏற்பாடு பண்ணேன். ஆனா, அது கடவுளுக்கே பிடிக்கல போல, சூழ்நிலை நின்றுச்சு. உடனே, இதான் சாக்குண்ணு பிடிவாதம் பிடிச்சு துபாய் கிளம்பிட்டா”.
“அவ பாதுகாப்புக்கு தான், நாங்க வந்தது. என் பேரன் கிஷோர் கூட, அங்க வந்தது அவளோட பாதுகாப்புக்கு தான்”.
“ ஆனா அங்க உங்களை பார்த்த பின்னாடி தான், அதுவும் நீங்க யாருன்னு தெரிஞ்ச பின்னாடி, நம்பிக்கையா நாங்க இங்க வந்துட்டோம்” என்றவரை பார்த்து அசந்து விட்டான்.
தன் மேல் நம்பிக்கை வைத்து, அவர் அங்கு இருந்து சென்று இருக்கிறார் என்று கூறிய பின், அவர் மேல் அவனுக்கு மரியாதை கலந்த பிரமிப்பு உண்டாகியது.
அதற்குள், அவளின் தம்பி அவனை அழைத்துக் கொண்டு மேலே அவனிற்கு ஒதுக்கப்பட்ட அறையை காட்டினான்.
“மச்சான்! உங்க ரூம்க்கு அப்படியே எதிர் ரூம், எங்க அக்கா ரூம் தான். நைட் டின்னர்க்கு, நீங்க தான் அவளை அழைச்சிட்டு வரணும்”.
“அவ கோபம் நியாயம் தான், ஆனா அவரும் பாவம் தான மச்சான். அக்கா மேல, அவருக்கும் பிரியம் எல்லாம் இருக்கு. அதனால தான், அவர் அவனை வச்சு எப்படியாவது அவர் பையன் ஆட்டத்தை க்ளோஸ் பண்ண பிளான் செய்தார், எல்லாம் இப்படி கடைசி சொதப்பும்ன்னு அவரும் நினைக்கல ”.
“கொஞ்சம் அக்கா கிட்ட, நீங்க நேரம் பார்த்து இதை பத்தி பேசுங்க மச்சான். நாங்க எவ்வளவோ சொல்லி பார்த்துட்டோம், நீங்க சொன்னா ஒரு வேளை கேட்க ஒரு சான்ஸ் இருக்குனு தான் சொல்லுறேன் மச்சான்” என்று கூறிவிட்டு உடனே கீழே இறங்கி சென்றான்.
அறைக்குள் சென்று, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு நேராக அவள் அறை கதவை தான் தட்டினான் faiq. அவள் திறந்த அடுத்த நிமிடம், உள்ளே சென்று கதவை அடைத்து, அவளை தன்னோடு சேர்த்து அனைத்து இதழில் நீண்டதொரு முத்தம் பதித்தான்.
ஆஆஆஆஆஆ! என்று அறையில் யாரோ அலரும் சத்தம் கேட்டு அதிர்ந்து அவளிடம் இருந்து விலகி பார்த்தான். அங்கே, அவள் அறையில் ஸ்டீஃபன், மற்றும் வேறு ஒரு பெண் பயத்துடன் நின்றதை பார்த்து தான் செய்த செயலை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.
காவ்யஹரிணிக்கு, வெட்கம் என்றால், ஸ்டீஃபனோ, இது போல் நிறைய என் நாட்டில் பார்த்து இருக்கிறேன் என்று சாதாரணமாக இருந்தான்.
ஆனால், அந்த புதிய பெண் பயத்துடன் சுவரை ஒட்டி நின்று கொண்டு இருந்தாள். யார் இவள், என்று கண்களால் காவியாவிடம் கேட்டான் faiq.
“இவ பெயர் கலைசெல்வி, இப்போ எங்க கூட இந்த ஆராய்ச்சியில் புதுசா சேர்ந்து இருக்கா. ரீசன், அந்த இடம் பற்றி இவளுக்கு நல்லா தெரியும், நம்ம எல்லோரையும் விட”.
“ஸ்டீஃபன், அங்க இவளை பத்தி தெரிஞ்சுகிட்டு, கையோட இன்னைக்கு இங்க கூட்டிட்டு வந்துட்டான். இப்போ, நம்ம ரெண்டு பேருமே, ஒரே இடத்தில் தான் நம்ம ஆராய்ச்சி செய்ய போறோம்”.
“அதுக்கு, இப்போவே பிளான் போடலாம்னு தான் இவங்களை வர சொன்னதே. வாங்க, இங்க உட்காருங்க டின்னர் இங்க கொண்டு வர சொல்லிட்டேன்” என்றவளை பார்த்து முறைத்தான்.
அங்கே ஆரம்பித்தது, திரும்பவும் மோதல். இதை பார்த்த விதி, நாம வச்சு செய்ய தேவையே இல்லை, அவங்களே நல்லா செஞ்சுக்குவாங்க என்று நொந்து போனது.
தொடரும்…