id -19

id -19

41

ஆபத்தின் அறிகுறி

இருள் விலகி கதிரவன் காலை பொழுதை பிரகாசமாய் மாற்றிக் கொண்டிருக்க சுபாவின் மனதில் சூழ்ந்திருந்த இருள் மட்டும் விலாகமலே இருந்தது. திருமூர்த்தி அவளைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொள்ள, பலரிடம் இருந்து பாராட்டுக்கள் அவளின் வாதத்திற்கு குவிந்த வண்ணம் இருக்க, அவள் மனம் களிப்படையவில்லை. அப்படி அவளைச் சூழ்ந்து கொண்டிருந்த கவலை எதை பற்றியது என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த உண்மை.

இவை எல்லாவற்றையும் மீறி நீதிமன்றத்திற்கு புறப்படத் தயாரானாள்.

சுபாஷ் மழலை மொழி மாறாமல்,. “அப்பா எங்கே… காணோம்?” என்று சுபாவிடம் கேட்க நேற்று இரவு சமுத்திரன் அவளிடம் கோபமாய் சண்டை போட்டு விட்டு கூடிய சீக்கிரத்தில் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப போவதாக சொல்லிவிட்டு சென்றதை நினைவுப்படுத்தியது. அதற்குள் சுபாவின் அம்மா கையில் பூஜை தட்டோடு வந்து நெற்றியில் குங்குமம் இட்டுவிட்டாள்.

“முதல்முறையா கடவுள் கிட்ட போய் நிற்கும் போது நான் என்ன வேண்டிக்கணும்னு குழப்பமா இருக்கு சுபா” என்றாள் சுபாவின் அம்மா.

“இனிமேயாவது உன் பொண்ணு யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு வேண்டிக்கோ” என்றாள் சுபா.

“என் மகள் ஜெயக்கிணும்னு எனக்கும் ஆசைதான்… அது உன் வீட்டுக்காரரை தோற்கடிச்சிதான் நடக்கணுமா சுபா?” என்றாள் அவளின் அம்மா.

சுபா சிரித்தபடி, “யாரு ஜெயிக்க போறோம் என்பதெல்லாம் முக்கியமில்லம்மா… தப்புச் செஞ்சவங்களுக்குத் தண்டனை கிடைக்கணும்… அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு சுபா திருமூர்த்தியுடன் புறப்பட அவளின் அம்மாவின் கண்களில் நீர் தேங்கியிருந்து.

கணவன், குடும்பம், குழந்தைகள் என்ற வரையறைக்குள் தேங்கி கிடந்தவள் இன்று ஆற்றுவெள்ளமாய்ப் பெருகி ஓட தொடங்கும் போது பாதை கொஞ்சம் கரடுமுரடானதாகவே இருக்கும் என்பதே சுபா அம்மாவின் மனதில் உள்ள கவலை.

உண்மை இல்லாத உறவுகள் என்றாவது ஒரு நாள் அதன் சுயவடிவத்தைப் பெறும் போது நிச்சியம் பிரிவை சந்தித்தே தீரும். அதே போல் நிதர்சமான அன்பு கொண்டவர்களின் உறவு எத்தனை பிரிவை கடந்தும் நிலைத்து நிற்கும். நம் விந்தியா ஆதித்தியாவின் காதலைப் போல.

கடந்து வந்த பிரிவுகளைத் தாண்டி அவர்களுக்கு இடையில் நெருக்கம் அதிகமானது.

ஆதித்தியா விந்தியாவைக் கண்இமைக்காமல் இடது புற கன்னத்தை கைககளில் தாங்கி பிடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க… அவள் கருநீல நிற புடவையை உடுத்தி கொண்டு கண்ணாடியை பார்த்தபடி நெற்றியின் வகுட்டில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள்.

“ஆதி டைமாச்சு. ஏர்போர்ட்டுக்கு போய் ஷபானாவை பிக்அப் பண்ணனும்… அப்புறம் கோர்ட்டுக்கு வேற போகணும்”என்று அவள் சொல்லிவிட்டு திரும்ப அவன் இருந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தான்.

அவன் அசையாமல் சிலை போல் உட்கார்ந்திருக்க விந்தியா அவன் முன்னே கைகளை அசைத்து பார்த்தாள்.

“ஹெலோ மிஸ்டர்… கோர்ட்டுக்கு போணும் வர்றிங்களா இல்லையா? அப்புறம் ஜாமீன் கேன்ஸலாகும்… போலிஸ் தேடி வரும்… சொல்லிட்டேன்”

அவள் அருகில் நின்றதை அவன் சாதகமாய் மாற்றிக் கொண்டு இழுத்து மடியில் அமரவைத்து அணைத்துக் கொண்டான்.

“விடுங்க ஆதி… டைமாச்சுன்னு சொல்லிட்டிருக்கேன் விளையாடிட்டு இருக்கீங்களே”

“என் கண் முன்னாடி இப்படி தேவதை மாதிரி அலங்கரிச்சிட்டு… போயும் போயும் வா கோர்ட்டுக்கு போகலாம்னு கூப்புடுற…”

“வேற சாய்ஸே இல்ல… இப்ப கோர்ட்டுக்கு கிளம்பித்தான் ஆகணும்… அந்த மனோஜ் என்ன சொல்லப் போறான்… சமுத்திரன் உங்க மேல என்னவெல்லாம் பழி போட போறானோன்னு நினைச்சா கவலையா இருக்கு”

“இன்னிக்கு எதைப் பத்தியும் எனக்குக் கவலை இல்ல… எனக்கு நம்பிக்கை இருக்கு… இனிமே எல்லாமே நல்லதாகவே நடக்கும்” என்று சொல்ல அவனை உதறி விட்டு எழுந்து கொண்ட விந்தியாவின் மனதில் ஒருவிதமான படபடப்பும் பய உணர்வும் ஏற்பட்டிருந்தது.

ஏதோ தப்பாக நடக்கப் போகிறதென அவள் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டிருந்தது. அவளின் இந்த எண்ணங்களுக்கு இடையில் ஆதித்தியா அவள் நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தை நேர்த்தியாகச் சரி செய்துவிட்டான். அதற்குள் நந்தினி கதவை தட்டி காலை உணவு சாப்பிட அழைக்க விந்தியா அவன் கைகளைப் பிடித்து இழுத்தபடி

“நேரமாச்சு ஆதி… சாப்பிட்டு கிளம்பலாம்”என்றாள்.

அவர்கள் இருவரும் உணவு உண்ணும் போது பேசிக் கொண்ட விதம் விந்தியாவின் முகத்தில் கோபம் மறைந்து வெட்கத்தால் பொலிவடைத்த அழகைக் கண்ட நந்தினி ஒருவாறு யூகித்து விட்டாள். அதை மாதவியிடம் சொல்லி மகிழ்ச்சி அடைந்தாள். மாதவிக்கும் அவர்கள் இருவரின் நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர விந்தியாவைத் தனியே அழைத்தாள்.

“நீயும் மாப்பிள்ளையும் சமாதானம் ஆயிட்டீங்களா?” என்று மாதவி கொஞ்சம் தயங்கியபடி கேட்க விந்தியா மெளனமாகச் சிரித்தாள்.

“எவ்வளவு தடங்கலுக்கு அப்புறம் உனக்குக் கல்யாணம் கூடி வந்தது… உன் பிடிவாத குணத்தை எல்லாம் தாண்டி எப்படி வாழப் போறியோ பயந்துட்டே இருந்த விந்தும்மா… ஆனா மாப்பிள்ளை உன்னை இந்தளவுக்கு புரிஞ்சிக்கிட்டு நடந்துக்குறது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு…” என்று மாதவி உணர்ச்சி பொங்க பேசினாள்.

“போதும்மா உன் மாப்பிள்ளை புராணம்” என்றாள் விந்தியா.

“சரி சரி… இனிமேயாச்சும் சண்டை கிண்டை போடாம ஒழுங்கா இரு“ என்றாள் மாதவி

“உன் மாப்பிள்ளை என்னவோ மகாத்மா மாதிரியும், நான்தான் எல்லாம் பிரச்சனைக்கும் காரணம் மாதிரி பேசிட்டிருக்க”

ஆதித்தியா பின்னாடி வந்து அவள் தலையில் தட்டினான்.

“அம்மா ஏதோ சொல்றாங்கன்னா அதைக் கேட்டு நடந்துக்கோ… அதை விட்டுட்டு ஏன் விதண்டாவாதம் பண்ற” என்றான்.

“நீங்க ரொம்ப ஒழுக்கம்… எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க” என்று கோபித்துக் கொண்டு விந்தியா அந்த இடத்தை விட்டுக் கோபமாக அகன்றாள்.

ஆதித்தியா மாதவியைப் பார்த்து, “அத்தை… உங்க பொண்ணால என் கூடச் சண்டை போடாம இருக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ… அவ்வளவு உண்மை என்னால உங்க பொண்ணைப் பிரிஞ்சு இருக்கவே முடியாதுங்கறது… நீங்க அதனால எதுக்கும் கவலைப்படாதீங்க” என்று உரைத்தான்.

மாதவியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவர்கள் இருவரையும் ஆனந்தமாய் வழியனுப்பி வைத்தாள்.

விமான நிலையத்தில் இருந்து ஷபானாவையும் அவள் மகன் ஆஷிக்கையும் அழைத்துக் கொண்டு விந்தியாவும் ஆதித்தியாவும் காரில் நீதிமன்றத்தை நோக்கி விரைந்தனர்.

ஷாபானாவை ஆதித்தியாவிற்கு முன்னாடியே கேத்ரீன் மூலமாக அறிமுகம் என்பதால் காரை ஒட்டிக் கொண்டே இயல்பாக அவளிடம் பேசிக் கொண்டு வந்தான். விந்தியா முன்புற இருக்கையில் அமர்ந்திருக்க ஷாபானாவும் ஆஷிக்கும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

“இவங்கதான் உங்க மனைவியா?” என்று ஆதித்தியாவிடம் ஷபானா வினவினாள்.

“சாரி ஷாபனா… அறிமுகப்படுத்தவே மறந்துட்டேன்… இவங்கதான் என் மனைவி விந்தியா” என்றான்.

“எப்படி ஆதி சார்? ஆச்சர்யமா இருக்கு… நீங்க காதல் கல்யாணத்தில் எல்லாம் எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொல்வீங்க” என்றாள் ஷபானா

“விதி யாரை விட்டுச்சு” என்றுஆதி சொல்ல விந்தியா அவன் புறம் திரும்பி கோபமாய் பார்க்க ஆதித்தியா சமாதனமாய், “சும்மா டார்லிங்” என்று அவள் புறம் திரும்பி கண்ணடித்தான்.

ஷபானா அவர்களைக் கவனிக்காதது போல் அமர்ந்திருக்க ஆதித்தியா கேத்ரீன் பற்றி அவன் மனதில் ரொம்ப நாள் தேங்கியிருந்த சந்தேகத்தைக் கேட்டான்.

“ஷபானா… கேத்ரீனுக்குச் சென்னையில் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் போது அவ ஏன் ஹோட்டலில் ஸ்டே பண்ண முடிவு எடுத்தா?”

“மேடமுக்கு உங்களை மீட் பண்ற ஐடியா இருந்திருக்கலாம்”

“நிச்சயமா அப்படி இருக்காது… கேத்ரீனுக்கு என் மேல இருந்த கோபம் அவ்வளவு சாதாரணமானது கிடையாது”

“இல்ல சார்… மேடம் வெளிப்படையா சொல்லல… இருந்தாலும் அவங்க மனசில் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கு.

அன்னைக்கு ஹோட்டலில் கிளைன்ட் மீட்டிங் நடந்துட்டு இருந்த போது நீங்க மேடம பாத்துட்டு கிராஸ் பண்ணி போனீங்க இல்ல… அப்போ மேடம் கண்ணில் உங்கள பாத்து பேசணும்னு தவிப்பு இருந்துச்சு” என்றாள் ஷபானா.

“கேத்ரீன் ஆதித்தியாவை பாத்துப் பேசியிருந்தால் தப்பா எதுவும் நடக்காம இருந்திருக்குமோ என்னவோ?” என்றாள் விந்தியா.

“நடத்து முடிஞ்சதை பத்தி நாம என்ன பேசி என்ன ஆகப் போகுது?” என்று ஆதித்தியா சொல்ல விந்தியா “தட்ஸ் ரைட்” என்றாள்.

நீதிமன்ற வாசலில் வந்து கார் நிற்க ஷபானா தன் முகத்தைக் கருப்பு துணியால் மூடி பர்தாவை உடுத்திக் கொண்டாள்.

“விந்தியா… நீ முன்னாடி போ… நம்ம கேஸ் ஹியரிங் ஆரம்பிக்கும் போது நான் ஷபானாவை கூட்டிட்டு வர்றேன்” என்று ஆதித்தியா சொல்ல விந்தியா நீதிமன்றத்தில் சுபா நின்றிருந்த திசை நோக்கி நடந்து சென்றாள்.

அந்த நேரத்தில் ஷபானா தன் பேக்கில் இருந்த லேப்டாப்பை ஆதித்தியாவிடம் கொடுத்தாள்.

“இந்தாங்க சார்… இது கேத்ரீன் மேடமோட லேப் டாப். மேடம் லாக்கரில் இருந்த ஆதாரத்தை எல்லாம் எப்படியோ எடுத்துட்டாங்க… இதைப் பத்தி தெரிஞ்சிருந்தா நிச்சயம் இதையும் விட்டு வைச்சிருக்க மாட்டாங்க”

ஆதித்தியா குழப்பத்தோடு அதனைக் கையில் வாங்கிக் கொண்டான்.

“நான் சென்னையில் இருந்து கேத்ரீன் மேடமை தனியா விட்டுட்டு கிளம்பும் போது, ‘நான் வரவரைக்கும் இந்த லேப்டாப்பை பத்திரமா வைச்சுக்கோ’னு சொல்லி கொடுத்தாங்க… பட் நவ்… ஷீ இஸ் நோ மோர்” என்று சொல்லி கண்கலங்கியபடி மேலும் தொடர்ந்தாள்.

“இதை நான் யார்கிட்ட கொடுப்பேன்? நீங்கதான் மேடமுக்கு ரொம்ப நம்பிக்கைக்குரியவர்… அதனால்தான் உங்கக்கிட்ட கொடுக்கிறேன் “ என்று ஷபானா சொல்லி முடிக்க ஆதித்தியா அந்த லேப்டாப்பை வாங்கி இயக்கி பார்த்தான். ஆனால் அது பாஸ்வார்ட் கேட்டது.

சுபாவை பார்த்த சமுத்திரன் அவள் அருகாமையில் வந்து நின்றான்.

“உனக்கு ரொம்பதான் தைரியம்… என்னை ஜெயிக்க முடியும்னு எந்த நம்பிக்கையில் கோர்ட்டு வரைக்கும் வந்திருக்க?” என்றான் சமுத்திரன்.

சுபா அவனிடம் எதவும் பேச விருப்பப்படாமல் மௌனமாகவே நின்றிருந்தாள்.

“பூனை சூடு போட்டுக்கிட்டாலும் புலியா மாறிட முடியாது… தெரியுமா?” என்று மீண்டும் அவளைச் சீண்டும் விதமாகப் பேச விந்தியா அவர்களை நோக்கி வந்தாள்.

“பூனை தன்னை புலினு நினைச்சிக்கிட்டா பரவாயில்ல… எலி விவஸ்த்தையே இல்லாம தன்னை புலினு நினைச்சுக்குது” என்றாள் விந்தியா நக்கலாக!

“என்ன சொன்ன?” என்று சமுத்திரன் விந்தியாவை நோக்கி கேட்க… அவள் சிரித்தபடி, “இதுவே உனக்கு விளங்கல… நீ எல்லாம் வாதாடினா எங்க விளங்கப் போகுது?” என்று சொல்லிக் கொண்டே சுபாவை அங்கிருந்து நகர்த்திச் சென்றாள்.

நீதிமன்றத்தில் கேத்ரீன் வழக்குக்கான விசாரணை தொடங்க மனோஜை அழைத்துக் கொண்டு சிவா உள்ளே சென்றான்.

வழியில் நின்றிருந்த சமுத்திரன் சிவாவை நோக்கி, “நீ விளையாடுகிற விளையாட்டு உனக்கே வினையா முடியப் போகிறது சிவா… ஜாக்கிரதையா இரு “என்றான்.

சிவா அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் போனாலும் அது ஏதோ ஆபத்தின் அறிகுறியாய் அவன் மனதில் உறுத்தியது.

42

சவால்

நீதிமன்றத்தில் நுழைந்த பின்னும் சுபா கொஞ்சம் தெளிவு இல்லாதவளாகவே தோன்றினாள். அதற்கு நேர்மாறாக சமுத்திரனின் முகத்தில் தன்னம்பிக்கை மிளிர்ந்து கொண்டிருந்தது.

ஆதித்தியாவும் சிவாவும் தங்களுக்குள்ளேயே ஏதோ ஒன்றை பற்றி ரகசியமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். மனோஜிடம் சமுத்திரன் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று அவன் பாடம் எடுத்துக் கொண்டிருக்க மனோஜின் கண்கள் கோபத்தோடும் சலனத்தோடும் விந்தியாவையே கவனித்துக் கொண்டிருந்தன.

தன் கணவன் மீது இத்தனை பெரிய பழி இருக்கும் போதும் அவள் இயல்பாய் அமர்ந்திருப்பது அவனைப் பெரிதும் குழப்பமடையச் செய்தது. அதுவும் இல்லாமல் சமுத்திரன் மீது மனோஜிற்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது.

இதற்கிடையில் நீதிபதி கம்பீரமாய் வந்து தம்முடைய இருக்கையில் அமர, எல்லோருக்குள்ளும் ஒவ்வொரு விதமான பதட்டம் தொற்றிக் கொண்டது சமுத்திரனை தவிர. அவன் மட்டும் ஒருவிதமான அதீத நம்பிக்கையோடு காட்சியளித்தான்.

நீதிபதி இன்ஸ்பெக்டர் சிவாவை பார்த்து, “முன்பு நடந்த இந்த வழக்கின் விசாரணையில் சொன்னது போல் மனோஜை ஆஜர் படுத்தினீர்களா?” என்று கேட்க

“எஸ் யுவ்ர் ஆனர்”என்று சிவா சொல்லி அவனைக் கூண்டின் மீது ஏறி நிற்கும்படி சொன்னான்.

“இப்போது இந்த வழக்கு சம்பந்தபப்பட்ட வாதங்களைத் தொடங்கலாம்”.

சமுத்திரன், “எனது கட்சிக்காரர் மனோஜுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இருப்பினும் எதிர்க்கட்சி வக்கீல் தம்முடைய வாதத்திறமையால் எமது கட்சிக்காரரை குற்றாவாளி என்ற பிரம்மையை உருவாக்கி நீதமன்றத்தில் ஆஜர் படுத்த வைத்திருக்கிறார்.

ஒரு பொய்யை உண்மை முலாம் பூசி எல்லோரையும் ஏமற்றும் கைதேர்ந்த வித்தையை தெரிந்தவர் எதிர்க்கட்சி வக்கீல் என்பதில் எனக்கு ஐயப்பாடில்லை.

அப்படியே எனது கட்சிக்காரரே குற்றவாளி                                                                                                                                                                                                                                                    என வைத்துக்கொண்டாலும், எதிர்க்கட்சி வக்கீல் அது சம்பந்தமாக எந்தவித வலுவான ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இனிமேலும் முடியாது.

ஆதித்தியாவிற்கு ஏற்கனவே என் கட்சிக்காரர் மீது தனிப்பட்ட முறையில் வன்மம் இருப்பதைத் தீர்த்துக் கொள்ள இப்படி ஒரு நாடகத்தை அவருடைய வக்கீலின் துணையோடு அரங்கேற்றியுள்ளார்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க கேத்ரீனின் இறப்பு கொலையா தற்கொலையா என்ற பெரும் குழப்பத்தோடு இருக்கும் எதிர்க்கட்சி வக்கீல் கொலையாளி என என் கட்சிக்காரர் மனோஜை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்று சமுத்திரன் சொல்லி முடித்தான்.

நீதிபதி சுபாவை பார்த்து “நீங்கள் உங்கள் வாதங்களை எடுத்துரைக்கலாம்” என்றார்.

“இந்த வழக்கை பொறுத்தவரை என் கட்சிக்காரர் ஆதித்தியாவை குற்றாவாளி என போலீஸ் தரப்பு ஒருதலைபட்சமாய் விசாரித்துக் கூண்டில் ஏற்றி விட்டது. ஆனால் காவல்துறை மனோஜிடம் இதுவரையில் எந்தவித விசாரணையும் நடத்தவில்லை.

ஏனென்றால் பணம் செல்வாக்கு பதவி என சேரக்கூடாதது எல்லாம் ஒன்றாய் சேர்ந்த மொத்த வடிவமாய் நிற்கிறார் இந்த மனோஜ். வழக்கின் உண்மை குற்றவாளியை தோலுரித்துக் காட்டுவதன் மூலமாகத்தான் என் கட்சிகாரர் ஆதித்தியாவை நிரபராதி என நிருபிக்க முடியுமே எனில் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இது கொலையா தற்கொலையா என்ற குழப்பம் எனக்கு மட்டுமில்லை. இங்கிருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. கேத்ரீன் தனித்து வாழ பழகியவள். பெரும் நிர்வாகத்தைக் கட்டிக்காப்பவள். தைரியத்தின் மறுவுருவம் என்று சொல்லலாம்.

இருப்பினும் ஒரு பெண்ணிற்கு அவளால் தாங்க முடியாத துன்பம் நேரிடும் போது… அதை அவளால் சகித்துக் கொள்ள முடியாமல் போகும் போது… மனக்குழப்பத்தின் காரணமாக தற்கொலை என்பது தீர்வாய் அவளுக்குத் தோன்றி இருக்கலாம். அப்படி ஒரு நிலைக்கு கேத்ரீனை தள்ளியவனும் கொலைக் குற்றம் செய்யும் கொலையாளிக்கு நிகரானவனே.

அந்த உண்மையைக் கண்டறிய வேண்டுமெனில் கூண்டில் நிற்கும் இந்த மனோஜை சில கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும் யுவர் ஆனர்”

நீதிபதி, “ப்ரொசீட்”என்றார்.

சுபா மனோஜ் நிற்கும் கூண்டின் அருகில் வந்து நின்றாள்.

“நீங்கதானே மனோஜ்?”

“ஆமாம்”

“உங்களுடைய அப்பா பெயர் என்ன?”

“வித்யாதரன்”

“சென்டிரல் மினிஸ்டர் வித்யாதரன்தானே”

உடனே சமுத்திரன், “அப்ஜக்ஷன் யுவர் ஆனர்… என் கட்சிக்காரர் குற்றவாளியா இல்லையா என்று விசாரிப்பதை விடுத்து அவரின் குடும்ப வரலாறை கேட்டு அவரின் சமுதாய அந்தஸ்த்தை குலைக்கும் நோக்கில் செயல்படுகிறார் “

சுபா நீதிபதியின் புறம் திரும்பி, “மனோஜின் தந்தையின் செல்வாக்கை தெரிந்து கொண்டால்தான் காவல்துறை இவரை விசாரிப்பதில் தயக்கம் காட்டுவதின் பிண்ணனி உங்களுக்கு புரியும் யுவர் ஆனர் “

நீதிபதி, “அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்… நீங்க விசாரணையைத் தொடரலாம்”  என்றார்.

சமுத்திரன் கோபக் கனலோடு அமர்ந்து கொள்ள சுபா தன் விசாரணையை மனோஜிடம் தொடர்ந்தாள்.

“நீங்க சொல்லுங்க மனோஜ்… சென்ட்ரல் மினிஸ்டர் வித்யாதரன்தானே உங்க அப்பா”

“ஆமாம்”

“உங்க அப்பாவோட பதவியும் பெயரும் இருக்கிற அகந்தையில் பல பெண்கள் கிட்ட நீங்க அநாகரிகமா நடந்துக்கிட்டு இருக்கீங்க… இல்லையா?”

“நான் அந்த மாதிரியானவன் இல்லை… அதே போல் பதவி பெயர் புகழுக்கு எல்லாம் என் அப்பா மயங்குகிறவர் இல்லை… என்னையும் அப்படி வளர்க்கல… அவருக்கு மக்கள் சேவைதான் முக்கியம்…

அதனாலதான் என் மேல விழுந்த அபாண்டமான பழியை பொய்யாக்க ஒருநாளும் அவருடைய பதவி பெயரை பயண்படுத்தக்கூடாதுனு கண்டிப்பா சொல்லி இருக்காரு” என்று அவன் ரொம்பவும் பவ்யமாய் நடித்துக் கொண்டிருப்பதை சுபாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“இத பாருங்க மனோஜ்… இது கட்சி மீட்டிங் இல்ல… இங்க இருக்கிறவங்க யாரும் ஏமாந்த பொது ஜனமும் இல்ல… அதனால கொஞ்சம் உண்மையே பேசுங்க”

“நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் இதுதான் உண்மை”

“உண்மைன்னே நம்புறேன்… இவ்வளவு ஒழுக்கமா இருக்கிற உங்களை ஏன் கல்லூரியை விட்டு நீக்கினாங்க?”

“என்னைத் தப்பானவனும்… பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கிறேன்னும் வாய் கூசாம ஒரு பொய்யான பழியை என் மேல போட்டு கல்லூரியை விட்டு நீக்கிட்டாங்க”

“அத்தனை பெரிய கல்லூரி நிர்வாகம் உங்க மேல ஆதாரம் இல்லாம பொய்யான பழியைப் போட்டுட்டாங்கன்னு நீங்க சொல்றது நம்பும்படியாக இல்லை” என்றாள்

“அப்படின்னா எனக்கு ஒரு சந்தேகம்… உங்கக்கிட்ட கேட்கலாமா” என்றான் மனோஜ்

“கேளுங்க” என்றாள் சுபா.

“இந்த வழக்கில் ஆதித்தியாவிற்கு எதிராக வலுவான ஆதாரம் இருக்கும் போதும் நீங்க அவர் குற்றாவாளி இல்லன்னும்… சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சு போச்சுனு நீங்க வாதாடிறீங்க… ஏன் என்னையும் அதே போல் சந்தர்ப்பும் சூழ்நிலையும் தப்பானவனாய் என் கல்லூரி நிர்வாகம் முன் நிறுத்திருக்கக் கூடாது… உங்க கட்சிக்காரருக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?”

இந்தக் கேள்வி சுபாவிற்குக் கொஞ்சம் நெருக்கடியாகவும் திகைப்பாகவும் இருந்தது. அதே சமயத்தில் ஆதித்தியாவிற்கு மனோஜின் குணம் நன்றாகத் தெரியும். ஆனால் இன்று அவனுடைய தெளிவு ஆதித்தியாவிற்கும் ரொம்பவும் ஆச்சர்யமாய் இருந்தது.

எல்லாவற்றை மீறி சுபா அவன் சிக்கப் போகும் ஒரு தருணத்திற்காகக் கேள்விகளை வரிசையாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“சரி அது போகட்டும்… கேத்ரீனுக்கும் உங்களுக்குமான பழக்கம் எப்படி?”

“கேத்ரீனை நான் மனதார நேசித்தேன்… அவளுக்கும் என் மீது கொஞ்சம் விருப்பம் இருந்தது. ஆனா ஆதித்தியா எங்க இருவருக்குள்ள பிரிவினை உண்டாக்கினது மட்டுமில்லாம என்னைப் பத்தி தப்புத் தப்பா சொல்லி கேத்ரீனை நம்பவும் வைச்சுட்டான்”

“கேத்ரீன் இன்னைக்கு உயிருடன் இல்லாததினால் நீங்க சொல்வதெல்லாம் உண்மையா மாறிடாது மனோஜ்”

“கேத்ரீன் உயரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று கண்ணீர் வடித்தான். சுபாவிற்கு அவன் நிதானமும் பதட்டமில்லாமல் கோர்வையாய் பொய் சொல்லும் விதம் அவளை மிரள வைத்தது.

“கடைசியாய் நீங்க கேத்ரீனை எப்போ சந்திச்சீங்க?”

“அது…” என்று கொஞ்சம் இழுத்தான் மனோஜ்.

“மறந்துட்டீங்களா? நான் வேணும்னா ஞாபகப் படுத்தட்டுமா?”

“அவசியமில்லை… கேத்ரீனோட இறப்பு நடந்த அன்று இரவுதான் கடைசியா அவங்களை ஒரு ப்ரைவட் பாரில் பார்த்தேன்… பேசினேன்…” என்று அலட்சியமாகச் சொன்னான்.

அவன் இல்லை என்று மறுப்பான் அல்லது தடுமாறுவான் என்று எதிர்பார்த்தாள். சுபாவிற்கு இம்முறையும் அவனுடைய தெளிவு மிரட்சியாய் இருந்தது. அவனிடம் கேள்விகளைத் தொடர்ந்தாள் சுபா

“அப்படின்னா அவங்களைக் காயப் படுத்துகிற அளவுக்கு நீங்க ஏதோ பேசியிருக்கீங்க… குடிக்கிறளவுக்கு அவங்களுக்கு நீங்க மனஅழுத்தம் கொடுத்திருக்கீங்க… உங்களுடைய சந்திப்புதான் கேத்ரீனோட தற்கொலைக்கு காரணமாவே அமைஞ்சிருக்கு… சரிதானா மனோஜ்?”

“இல்லை…” என்று திட்டவட்டமாய் மறுத்தான் மனோஜ்.

“அப்போ கேத்ரீன்கிட்ட நீங்க அப்படி என்ன பேசினீங்க?”

“நான் கேத்ரீனை உண்மையா காதலிச்சேன்னு சொன்னேன். ஆதித்தியாதான் நம்ம பிரிவுக்குக் காரணம்னு சொன்னதும்… பாவம் கேத்ரீனால் அதை நம்ப முடியல… ஆதித்தியாவின் சுயரூபத்தைப் பற்றி தெளிவா புரியும்போது கேத்ரீன் அவனைக் காதலிச்சதுக்காக அவமானப்பட்டாங்க…

அதுவே கேத்ரீன் குடிக்கிறதுக்கும் மன அழுத்தத்திற்கு காரணமாய் அமைஞ்சது… ஆனா அதுக்காக எல்லாம் கேத்ரீன் தற்கொலை பண்ணி இருக்கிற ஆள் இல்லை. இந்த ஆதித்தியாதான் கேத்ரீன் கொலைக்கு நிச்சயம் காரணமா இருக்க முடியும்”

“சபாஷ் மனோஜ்… எவ்வளவு பிரமாதமா பொய் சொல்றீங்க! கேத்ரீனை நீங்க காதலிக்கிறேன்னு சொன்னது அப்பட்டமான பொய்… நாலு வருஷத்துக்கு முன்னாடி கேத்ரீன் சுயநினைவு இல்லாத போது அவ வாழ்கையை நீங்க கெடுத்திருக்கீங்க…

பாவம்… அந்த உண்மை தெரியாத கேத்ரீன்கிட்ட நீங்க எல்லாத்தையும் சொல்ல அதை அவங்களால தாங்கிக்க முடியல. ஆதித்தியா மேல பழி போட்டதுனால ஏற்பட்ட குற்றவுணர்வும் தன்னோட வாழ்க்கையை உங்கள மாதிரி ஒருத்தரால் கெட்டுப்போச்சே என்கிற வேதனையும் கேத்ரீனை குடிக்க வைச்சிருக்கு.

அந்த போதையினால் ஏற்பட்ட மனஅழுத்தம் கேத்ரீனை தற்கொலை பண்ணிக்க வைச்சிருக்கு… இதுதான் உண்மை… அதுக்கான ஆதாரமும் என்கிட்ட இருக்கு”

உடனே சமுத்திரன் எழுந்து கொண்டு, “அந்த ஆதாரத்தைக் காண்பீங்க மிஸஸ். சுபா” என்றான்.

சுபா பதட்டமாய் சிவாவின் முகத்தைப் பார்த்தாள். சிவா காண்பிக்கச் சொல்லி தலையசைக்க, அவள் நீதிபதியின் புறம் திரும்பினாள். ஏற்கனவே நடந்த விசாரணையின் போது ரகசியமான ஆதாரம் ஒன்றை சமர்ப்பித்தாள்.

அது மனோஜும் கேத்ரீனும் ஒரு பாரில் நின்று பேசி கொண்டதற்கான கண்காணிப்புக் கேமராவில் பதிந்த வீடியோ ஆதாரம். அது எல்லோர் முன்னிலையில் போட்டு காட்டப்பட அதில் மனோஜ் ஏதோ பேச, கேத்ரீனின் முகம் வேதனைப்படுவதையும் கண்கலங்கி நிற்பதும் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த ஆதாரத்தில் அவர்கள் சம்பாஷணைகள் கொஞ்சம் கூட கேட்கவில்லை.

அந்த ஆதாரத்தை சுபா முதலிலேயே நீதிபதியிடம் கொடுத்து ரகசியமாய் வைத்துக் கொள்ளச் சொன்னதன் காரணம் மனோஜ் தான் கேத்ரீனை சந்திக்கவேயில்லை என்று பொய்யுரைப்பான் என எதிர்பார்த்தாள். கடைசியில் எல்லாம் சுபா எண்ணத்திற்கு நேர்மாறாய் அமைந்தது.

சமுத்திரன் ஒருவாறு அந்த ஆதாரத்தை யூகித்திருக்க வேண்டும். அதில் குரல் பதிவாக வாய்ப்பில்லை என்று கணித்துவிட்டு அதற்கு ஏற்றவாறு பொய்யை தயார் செய்து அதில் மனோஜை கச்சிதமாய் நடிக்க வைத்திருக்கிறான்.

சமுத்திரன் மேலும் சுபாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வாதத்தை எடுத்துரைத்தான்.

“இந்த ஆதாரத்தில் மனோஜ் கேத்ரீன் சந்திப்பு மட்டுமே பதிவாகியிருக்கும் நிலையில் எந்த அடிப்படையில் மனோஜ் மீது இத்தனை பெரிய குற்றச்சாட்டைத் திணிக்கிறீர்கள் மிஸஸ் சுபா” என்றான்.

“இந்த ஆதாரத்தில் குரல் பதிவாகாத காரணத்தால் நான் சொல்வது எல்லாம் பொய்யென்று ஆகிவிடாது… மனோஜ் மீதான குற்றத்தை நிச்சயம் நிருபிப்பேன்” என்று சுபா உணர்ச்சிவசப்பட…

சமுத்திரன் தன் இருக்கையில் அமர்ந்தபடி, “முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” என்றான் சவால் தொனியில்.

43

அனல் பறக்கும் விவாதம்

சுபாவின் நிதானமும் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வந்தது. மனோஜிடம் சுபா கண்டிப்புடன் இன்னும் சில கேள்விகளைக் கேட்டாள்.

“இத பாருங்க மனோஜ்… இது வரையில் நீங்க சொன்ன கதை எல்லாம் சரி… இனிமே நீங்க சொல்ல போற ஒவ்வொரு பதிலும் உங்க விதியை தீர்மானிக்கப் போகுது… அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா பதில் சொல்லுங்க…” என்றாள்.

அதற்கு மனோஜ் ‘தன்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது’ என்று மனதில் நினைத்தபடி ஏளனச் சிரிப்புச் சிரித்தான்.

சுபா தன் மனதில் நிரம்பிய கோபத்தை மறைத்தபடி மனோஜின் முன் நின்று கேள்விகள் கேட்டாள்.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி கேத்ரீன் ஆதித்தியா பிறந்த நாளுக்காக ஏற்பாடு பண்ண விருந்துக்கு நீங்க போனீங்களா?”

“ ஆமாம் போனேன்” என்றான் இயல்பாக

“கேத்ரீன் உங்களை அழைச்சாங்களா?”

“இல்லை”

“அப்புறம் ஏன் போனீங்க? அவங்க மேல உங்களுக்கு இருந்த வக்கிரத்தை தீத்துக்கவா?…”

“நோ… நான் மனசில இருந்த காதலை கேத்ரீனை பார்த்து சொல்லலாம்னு போனேன்… அதுல ஏதாவது தப்பு இருக்கா?” என்றான்

“ திஸ் இஸ் டிஸ்கஸ்டிங்” என்று சுபா மனதில் நினைத்துக்கொண்டு பல்லை கடித்துக் கொண்டாள்.

“நீங்க செய்த தப்பிற்குச் சாட்சிகள் இல்லைனு நினைச்சுக்கிட்டு பொய்களை அடுக்காதீங்க”

“நான் எந்தப் பொய்யும் சொல்லல. அன்னைக்கு நான் கேத்ரீனை சந்திக்கப் போனேன்… ஆனா கேத்ரீன் என் கண்முன்னாடியே அந்த ஆதித்தியாவை காதலிக்கிறேன்னு சொன்ன பிறகு என்னால ஒரு நிமிஷம் கூட அங்க இருக்க முடியாம நான் உடனே புறப்பட்டுட்டேன். ஆனா ஆதித்தியா தான் என்ன நினைச்சானோ அதை சாதிச்சிட்டான்”

“நீங்க செய்த குற்றத்தை ஆதித்தியா மேல போடாதீங்க”

உடனே சமுத்திரன் எழுந்து நின்று, “என் கட்சிகாரர்தான் தப்பு செய்தார்னு உங்களால நிரூபிக்க முடியுமா? அதே போல கேத்ரீன் சந்தேகப்பட்டது மாதிரி ஆதித்தியா தப்பு செய்யலனு உங்ககிட்ட ஆதாரம் இருக்கா?”

சுபா சிரித்தபடி, “இருக்கு சமுத்திரன்… ஆதித்தியா தப்பு செய்யலனும் என்னால நிரூபிக்க முடியும்… உங்க கட்சிக்கார்தான் எல்லாத்துக்கும் காரணம்னும் என்னால நிருபிக்க முடியும்” என்றாள்.

சமுத்திரன், “நிரூபிங்க மிஸஸ் சுபா… அதுக்காகத்தான் நானும் காத்திட்டிருக்கேன்”

சுபா நீதிபதியை பார்த்து, “கேத்ரீனிடம் பி. ஏ வாக இருந்த மிஸஸ். ஷபானாவை இந்த வழக்கு சம்பந்தமாய் விசாரிக்க அனுமதி வழங்கணும் யுவர் ஆனர்” என்றாள்.

“எஸ் ப்ரொசீட்” என்றார்.

“ஷபானா ஷபானா ஷபானா” என்று மும்முறை அழைத்ததும் ஷபானா கூண்டில் ஏறி நின்றாள்.

“நீங்கதானே ஷபானா?”

“ ஆமாம்”

“நீங்க அமரேஷ் லிக்கர் பாஃக்டரியில் கேத்ரீனிடம் பி. ஏவா வேலை பாத்துட்டு இருந்தீங்களா?”

“ஆமாம்”

“எத்தனை வருஷமா கேத்ரீன்கிட்ட வேலை பாத்திட்டிருந்தீங்க?”

“எட்டு வருஷமா” என்றாள்

“அப்போ ஆதித்தியாவை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் தானே?”

“நல்லாவே தெரியும். கேத்ரீனோட கிளோஸ் ஃபிரண்ட்… அஸ் வெல் அஸ் மேடமோட ஃபிலாசஃபர், கைடுனு கூட சொல்லலாம்”

“சரி… கேத்ரீன் நடத்துகிற பார்ட்டி, மீட்டிங்னு எல்லாத்தோட ஏற்பாட்டையும் நீங்கதான் பண்ணுவீங்களாமே?”

“ஆமாம்… மேடம் அந்த மாதிரியான முக்கியமான பொறுப்புகளை என்னை நம்பித்தான் கொடுப்பாங்க”

“அப்படின்னா நாலு வருஷத்துக்கு முன்னாடி கேத்ரீன் ஆதித்தியா பிறந்த நாளுக்காக நீங்கதான் விருந்துக்கு ஏற்பாடு பண்ணி இருந்தீங்க… ஞாபகம் இருக்கா உங்களுக்கு?”

“அத்தனை சீக்கிரத்தில் அன்று நடந்ததை எல்லாம் மறக்க முடியாது… நான்தான் பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணேன்… மேடம் ஆதித்தியா பேரில ஐம்பது பர்சன்ட் ஷேரை மாத்த சொன்னாங்க… அந்த டாக்குமென்ட்டையும் நான்தான் ரெடி பண்ணேன்…

பட் ஆதித்தியா சார் மேடமோட  ப்ரப்போஸல், கிஃப்ட் இரண்டுத்தையும் ரிஜெக்ட் பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் மேடம் டிப்ரஸ் ஆகி ரொம்பவும் அதிகமாகக் குடிச்சி தடுமாறிட்டு இருந்தாங்க… ஆதித்தியா சார்தான் அவங்கள ரூமுக்கு அழைச்சிட்டு போய் படுக்க வைச்சாரு”

“ஆதித்தியா கேத்ரீன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டு இருப்பார் என்ற பழி உண்மையா இருக்குமா? ஏன்னா நீங்க அந்த இடத்தில இருந்திருக்கீங்க… உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்”

“அப்படி ஒரு செயலை ஆதித்தியா சார் செஞ்சிருக்க வாய்ப்பில்லை. மேடமோட ரூமுக்கு போன உடனே சார் திரும்பி வந்ததை நான் பார்த்தேன். பார்ட்டி முடிஞ்சு எல்லோரையும் அனுப்பிட்டு புறப்படும் போது ரொம்ப லேட்டாயிடுச்சு… அன்னைக்கு சார்தான் என்னை வீட்டில டிராப் பண்ணாரு”

“சரி… எதிர்க்கே நிற்கிறாரே மிஸ்டர் மனோஜ்… அவரை நீங்க அந்தப் பார்ட்டில பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கா?”

“நல்லா ஞாபகம் இருக்கு. பார்ட்டில மேடமும் இவரைப் பாத்து டென்ஷன் ஆனாங்க… அப்புறம் தேவையில்லாம பிரச்சினை வேண்டாம்னு அமைதியா இருந்துட்டாங்க”

“மனோஜ் பார்ட்டில இருந்து வெளியே கிளம்பும் போது நீங்க பார்த்தீங்களா?”

“இல்ல பார்க்கல”

“தட்ஸ் ஆல் யுவர் ஆனர்… ஆதித்தியா கேத்ரீன்கிட்ட தப்பா நடந்துக்கல என்பதற்கு இந்த ஆதாரமே போதுமானது”

உடனே சமுத்திரன் எழுந்து நின்று கொண்டு, “ஷபானாவை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் யுவர் ஆனர்” என்றான்.

“எஸ் ப்ரொசீட்” என்று அனுமதி வழங்க சமுத்திரன் ஷபானா நின்றிருந்த கூண்டிற்கு அருகில் வந்து நின்றான்.

“மிஸஸ் ஷபானா… ஆதித்தியா தப்பு செய்யலனு இவ்வளவு தெளிவா சொல்ற நீங்க, கேத்ரீனுக்கு ஆதித்தியா மீது ஏற்பட்ட தப்பான அபிப்ராயத்தை சரி செய்திருக்கலாமே”

“எனக்கு முன்னமே அவர்களுக்குள்ள இருந்த பிரச்சனை பத்தி தெரிஞ்சிருந்தா நான் நிச்சயம் சால்வ் பண்ணி இருப்பேன்… பட் கடைசி வரைக்கும் கேத்ரீன் மேடம் இத பத்தி என்கிட்ட சொல்லாத போது நான் என்ன பண்ண முடியும்?”

“சரி… மனோஜை நீங்க பார்ட்டில பாத்தீங்க… சரி… ஆனா கேத்ரீனோட அறைக்கு போன மாதிரியோ இல்ல திரும்ப வந்த மாதிரியோ பாத்தீங்களா?”

“இல்ல”

“சரி நீங்க போகலாம்” என்று சொல்லிவிட்டு,

நீதிபதியின் புறம் திரும்பிய சமுத்திரன், “ஆதித்தியா தப்பு செய்யலனு திட்டவட்டமா சொல்ற ஷபானா அதே நேரத்தில் மனோஜை தப்பு செய்தார்னு சுட்டி காட்ட முடியல. தேவையில்லாம இந்த வழக்கில் என் கட்சிக்காரர் மனோஜை இழுத்து விட்டிருக்காங்க. அதற்குக் காரணம் மனோஜின் மீது ஆதித்தியாவிற்கு இருக்கும் தனிப்பட்ட கோபமும் வஞ்சமும்தான்” என்றார்.

“அப்படி ஒரு எண்ணம் என் கட்சிக்காரருக்கு நிச்சயமா இல்லை… நீங்க இப்படி எல்லாம் பேசி மனோஜை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கப் பார்க்கிறீர்கள்”

“அப்படின்னா தப்பு செய்தார் என்பதற்கான ஆதாரம் எங்கே?”

சுபா கொஞ்சம் தயங்கியபடி சிவாவின் முகத்தைப் பார்க்க, அவனின் கைகடிகாரத்தைக் காண்பித்து சைகையில் ஏதோ சொன்னான்.

சுபாவின் மெளனத்தைச் சாதகமாகக் கொண்டு சமூத்திரன் நீதிபதியின் பக்கம் திரும்பினான்.

“என் கட்சிக்காரருக்கு எதிரான ஆதாரம் என்று இதுவரை எதிர்கட்சி வக்கீல் எதையும் காண்பிக்கவில்லை. இதை கருத்தில் கொண்டு என் கட்சிக்காரருக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என கணம் நீதிபதி அவர்கள் அறிவிக்க வேண்டும்” என்றதும்…

சுபா பதட்டத்தோடு, “என் ஆதாரத்தை உங்கள் முன் நிறுத்த எனக்கு அரைமணி நேரம் அவகாசம் வேணும் யுவர் ஆனர்” என்றாள்

“இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல்“ என்றான் சமுத்திரன் .

“உங்கள் கட்சிக்காரர் குற்றவாளி இல்லாத பட்சத்தில் அரைமணி நேரத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது?”என்று சுபா சமுத்திரனை கேட்டாள்

“என் கட்சிக்காரர் தவறு செய்யாத போது அவர் எதற்காக காத்திருக்க வேண்டும்?”

“காத்திருப்பது அல்ல உங்கள் பிரச்சனை… மாட்டிக் கொள்வோமோ என்ற பயம்தான் பிரச்சனை”

“எங்களுக்கு எதைக் கண்டும் பயமில்லை”

இவ்வாறாகச் சமுத்திரனும் சுபாவும் அனல் பறக்க விவாதம் மேற்கொண்டிருக்க நீதிபதி, “ஆர்டர் ஆர்டர் ஆர்டர்” என்று கையில் உள்ள சுத்தியலால் அடித்தார்.

“இது உங்க வீடில்லை… இது கோர்ட்… அரைமணி நேரம் அவகாசம் கொடுக்கணுமா என்பதை ஒரு நீதிபதியாய் நான்தான் முடிவு பண்ணனும். நீங்க இரண்டு பேரும் உங்கள் இருக்கையில் அமருங்க…” என்றதும் இருவரும் அமைதியாய் தங்கள் தங்கள் இடத்தில் அமர்ந்தனர்.

“இத பாருங்க சுபா… நான் உங்களுக்கு நீங்க கேட்டது போல் அரைமணி நேரம் அவகாசம் தர்றேன்… அதற்குள் மனோஜ் மீது நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டை நிருபிக்கணும்… இல்லன்னா மனோஜ் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றதுனு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டி வரும். இந்த வழக்கின் விசாரணை அரைமணி நேரம் கழித்து மீண்டும் நடைபெறும்” என்று சொல்லி நீதிபதி தம் இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்.

சுபா வேகமாக சிவாவின் அருகில் போய், “ ஃபாதர் அந்தோனி எப்போ வருவார் அண்ணா?”

“கண்டிப்பா வந்துருவாரு. டென்ஷன் ஆகாத சுபா… உன் நம்பிக்கையை விட்டு விடாதே. இப்ப நீ செய்ய வேண்டியதெல்லாம் சமுத்திரனை பேச விடாம பண்ணனும்… மனோஜுக்கும் சமுத்திரனுக்குமான பாண்டிங்கை பிரேக் பண்ணனும்” என்றான்.

“நான் எப்படி அண்ணா?”

“உன்னால மட்டும்தான் முடியும் சுபா” என்று சொல்ல… சுபா தான் செய்ய வேண்டியது என்னவென்று யோசித்து விட்டு சமுத்திரனிடம் சென்றாள்.

சமுத்திரனிடம் சுபா தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றாள். அவளைப் பார்த்தும் ஏளனப் புன்னகை புரிந்தவன்… அவள் அவனிடம் பேச பேச கொஞ்சம் கொஞ்சமாய் டென்ஷனாக ஆரம்பித்தான்.

மனோஜ் சுபாவும் சமுத்திரனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் பார்த்தான் என்பதை விட பார்க்கும் இடத்தில் அவர்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க நம் காதல் பறவைகள் எப்போதும் போல் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அரைமணி நேரம் அவகாசம் முடிய எல்லோரும் தங்கள் தங்கள் இடங்களில் அமர்ந்தனர். மனோஜின் முகத்தில் ஒரு விதமான குழப்பம் தென்பட்டது. சமுத்திரனின் கண்கள் ஒரே இடத்தில் நிலை கொண்டு ஏதோ ஒன்றை பற்றி ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தன. சுபா இம்முறை ரொம்பவும் தெளிவாகவும் உற்சாகமாகவும் இருந்தாள்.

நீதிபதி தம் இருக்கையில் அமர்ந்து விட்டு சுபாவை பார்த்தார்.

சுபா எழுந்து நின்று கொண்டு, “யுவர் ஆனர்… கேத்ரீனுடன் கடைசி வரை துணையாயிருந்த ஃபாதர் அந்தோணியை விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் “ என்றாள்.

“எஸ் ப்ரொசீட்” என்றார்.

சமுத்திரன் எதைப்பற்றியும் கவனிக்காமல் இருக்க, மனோஜ் அவன் முகத்தைப் பார்த்து சலனமுற்றிருந்தான்.

“ஃபாதர் அந்தோணி… ஃபாதர் அந்தோணி” என்று அழைக்க ஃபாதர் அந்தோணி கூண்டில் ஏறி நின்றார்.

சுபா அவர் அருகில் போய் நின்று கேள்விகளைத் தொடுத்தாள். அந்தோணியின் முகத்தில் அமைதியும் நிதானமும் நிரம்பி இருந்தது.

“நீங்கதானே ஃபாதர் அந்தோணி?”

“ஆமாம்”

“கேத்ரீனை உங்களுக்குத் தெரியுமா?”

“நல்லாவே தெரியும்… ஏழைகள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய அந்த ஆண்டவன் அனுப்பிய தேவதை” என்றார்

“நீங்க கேத்ரீன் பற்றிய ஒரு ரகசியத்தை இந்த நீதிமன்றத்தில் மறைக்காம சொல்லணும்”

“அதுதான் கர்த்தரின் விருப்பம்னா… நான் நிச்சியமா சொல்றேன்”

error: Content is protected !!