id-final

id-final

47

நீதிபதி தீர்ப்பு

நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட கேத்ரீனின் லேப்டாப்பில் இருந்த ஆதாரங்கள் முழுவதையும் ஷபானா தெளிவாகப் பிரித்துக் காண்பித்தாள். அதில் எம். விடி லிக்கர் பாஃக்டரியில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் உடலுக்குக் கேடானது என்பதற்கான ஆதாரங்களும்… கேத்ரீனை வித்யாதரன் மிரட்டியதற்கான வீடியோ ஒன்றும் பதிவாகியிருந்தது.

இவற்றை எல்லாவற்றையும் விவரமாய் படித்துப் பார்த்து தெரிந்து கொண்ட பின்னர், நீதிபதி தான் வழக்கு சம்பந்தமாய் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாய் எழுதி கொண்டார்.

பின்னர் எல்லோரையும் பார்த்து கேத்ரீன் வழக்கின் விசாரணையைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

“கேத்ரீனின் வழக்கு ஆரம்பக் கட்டத்தில் விபத்து எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் வேறு சில முக்கியக் காரணங்களுக்காக இதை கொலை வழக்கென தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இதன் விசாரணையின் இறுதிக்கட்டத்தில் ஹோட்டல் அதிபரின் மகன் ஆதித்தியாவை கொலை குற்றவாளி என ஆஜர்படுத்தியது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற பலதரப்பட்ட விசாரணையினாலும், ஆதித்தியாவிற்காக வாதாடிய வக்கீல் சுபாவின் வாதத் திறமையினாலும் ஆதித்தியா கொலை குற்றவாளி அல்ல என்பது தெள்ளத் தெளிவாய் நிரூபணமானது.

அதுமட்டுமின்றி… நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அசம்பாவிதத்தில், மனோஜின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்ததைப் பார்க்கும் போது அவர் நிச்சயம் கொலை குற்றவாளியாய் இருக்க முடியாது என முடிவு செய்து அவரை இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.

மேலும் இந்த வழக்கின் போக்கு பெரிய பெரிய திருப்பங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் தன் வாதத் திறமையால் வக்கீல் சுபா தெளிவுபடுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி மனோஜ் தான்தான் கேத்ரீனின் சுயநினைவு இல்லாத போது கற்பழித்ததாக ஒத்து கொண்டிருக்கிறார்.

மேலும் கேத்ரீனின் கொலைக்குத் தானும் உடந்தை என வாக்குமூலமும் தந்திருக்கிறார். அவரின் சாட்சியும் சமர்ப்பிக்கப்பட்ட கண்கானிப்பு கேமராக்களில் பதிவான ஆதாரங்கள் யாவும் சமுத்திரன்தான் கொலையாளி என நமக்கு தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறது.

கேத்ரீனின் கொலைக்குப் பிண்ணனியில் முக்கியக் காரணமாக தற்போது மத்திய அமைச்சராய் பதிவியில் இருக்கும் வித்யாதரன் எனக் கேத்ரீனின் லேப்டாப்பில் உள்ள ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எம். வி. டி லிக்கர் பாஃக்டரியின் உண்மையான நிறுவனரும் வித்யாதரன்தான் என கிடைத்த ஆதாரங்களின் மூலமாக நமக்கு வெட்ட வெளிச்சமாகிறது.

அதுவல்லாது அங்கே உற்பத்தியாகும் மதுபானம் உடல் நலத்திற்கு கேடானது என்ற சுபாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட இந்த நீதிமன்றம் அதைப் பற்றிய உண்மை தன்மையை ஆராய்ந்து விளக்கமளிக்குமாறு அது சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிடுகிறது.

அதுவரை அந்த நிறுவனத்தின் மதுபானத்திற்கான விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கிறேன். மேலும் கொலைக்கு உடந்தையாய் இருந்த மனோஜையும், மற்றும் கொலை குற்றவாளி சமுத்திரனையும் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்.

முக்கியக் குற்றவாளி எனக் கருதப்படும் அமைச்சர் பதவியிலிருக்கும் வித்யாதரனை உடனடியாகக் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இந்தக் குற்றங்கள் நிரூபிக்கபட்டுத் தீர்ப்பு வழங்கும் வரை வித்யாதரனின் பதவி மற்றும் சொத்துக்களை இந்த நீதிமன்றம் முடக்கி வைக்கிறது.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்பிய குற்றத்திற்காகவும், தன் பதவியைத் தவறாய் பயன்படுத்திய குற்றத்திற்காகவும் அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவனின் மீது விசாரணை நடத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிடுகிறேன்.

வக்கீல் சுபா திறமையோடு வாதாடி இந்த வழக்கின் விசாரணையை இத்தனை துரிதமாய் முடித்ததிற்காக இந்த நீதிமன்றம் அவரைப் பாராட்டுகிறது. மேலும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சிவாவின் திறமையான விசாரணையைப் பாராட்டி காவல்துறை அவருக்குப் பதவி உயர்வு வழங்க இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கின்றது.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும் 28ம் தேதி நடைபெறும். அன்று இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாய்க் கருதப்படும் வித்யாதரன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கான விளக்கத்தை அளித்த பின்னர், இந்த வழக்கில் சமிர்க்கப்பட்ட ஆதாரங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து… கேத்ரீன் கொலை வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படும். இத்துடன் இந்த நீதிமன்றம் கலைகிறது” என்று சொல்லி நீதிபதி அவர் எழுதிய வைத்திருந்த பக்கங்களை எடுத்து வைத்துவிட்டு எழுந்து சென்றார்.

நீதிபதியின் வாசிப்பை கேட்ட சுபாவின் மனதிலிருந்த இறுக்கம் ஒருவாறு தளர்ந்தது.

அவளுக்கு ஆதித்தியாவை பற்றிய கவலை அதிகரிக்கத் தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவளை சமுத்திரன் கோபத்தோடு பார்த்தான்.

கான்ஸ்டபிள்ஸ் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அழைத்து வர அவன் சுபாவின் அருகில் வந்ததும், “நீ என்ன பெரிய பொது நலவாதியா?” என்று கேட்டான் கோபத்தோடு.

“நான் பொதுநலவாதி எல்லாம் இல்ல… ஆனா உன்னை மாதிரி ஊரையே சுடுகாடாய் மாத்திட்டு தான் மட்டுமே வாழணும்னு நினைக்கிற சுயநலவாதி இல்ல” என்றாள்.

அங்கே வந்த சிவா அவளைப் பார்த்து, “இவன்கிட்ட எதுக்குமா நீ பேசிட்டிருக்க… சீக்கிரம் புறப்படு” என்றான்.

சமுத்திரனின் முகத்தில் கோபம் தெறிக்க, “இவன் இருக்கிற தைரியத்திலதான் நீ என்னைச் சிக்க வைச்சிட்ட இல்ல… இவன்தான் உன் கூட கடைசி வரைக்கும் துணைக்கு வரப் போறானா?” என்றதும் சிவாவிற்குக் கோபம் வர தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தான்.

“ரொம்ப பேசற நீ… இப்ப நான் உன்னைச் சுடறேன்… யார் உன் கூட துணைக்கு வரான்னு பாக்கலாமா?”

சுபா உடனே, “அண்ணா விடுங்க… நீங்க சுடற அளவுக்குக் கூட இவனுக்கெல்லாம் தகுதி இல்ல”என்றாள்.

சமுத்தினின் முகம் கறுத்துப் போக, சிவா நெற்றியில் வைத்த துப்பாக்கியை எடுத்து உள்ளே வைத்தான்.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளூத்துவோம். படிச்சிருக்கியா? ஜெயிலுக்குப் போய் படிச்சு தெரிஞ்சிக்கோ” என்றான் சிவா.

பின்னர்,  “இவனை இழுத்திட்டு போங்க” என்று கான்ஸ்டபிளிடம் சொன்னான்.

சமுத்திரன் நகர்ந்த பிறகு சுபா கண்கள் கலங்க, “ஆதி அண்ணாவுக்கு எப்படி இருக்கோ தெரியல”

“ஆதித்தியா கூட விந்தியா இருக்கும் போது அவனுக்கு ஒண்ணும் ஆகாது. சாவித்ரி புருஷனுக்காக எமன்கிட்ட போராடினா… ஆனா எமனே வந்து விந்தியாக்கிட்ட போராடினாலும் ஒண்ணும் நடக்காது” என்றதும் சுபாவின் சோகம் படர்ந்திருந்த முகத்தின் லேசாய் புன்னகை மலர்ந்தது.

48

பயணம் முடிவடைகிறது

சிவா விந்தியாவை பற்றிச் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

ஆதித்தியா அவன் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக மனதைரியத்தோடு அதிகமாய்ப் போராடியது விந்தியாதான். வலிகள் வேதனைகள் நிறைந்திருந்த அந்த நாட்களை நம் காதல் பறவைகள் ஒருவருக்கு ஒருவர் துணையாய் சேர்ந்தே கடந்து வர… ஒரு மாதம் சில நொடிகளென கரைந்து போனது.

தொலைகாட்சியில் செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது.

உயிர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த கேத்ரீனின் கொலை வழிக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். வழக்கறிஞர் சமுத்திரன் கொலை குற்றாவாளி என தீர்ப்பாகி அவர் பார் கவுன்சிலில் இரூந்து நிரந்தரமாய் நீக்கப்பட்டார்.

கேத்ரீனை கொலை செய்த குற்றத்திற்காகவும் அதனை மறைக்க முயற்சி செய்த குற்றத்திற்காகவும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் குற்றத்திற்குத் துணைபுரிந்ததிற்காக முன்னாள் அமைச்சர் மகன் மனோஜிற்குப் பத்தாண்டு காலச் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி முக்கியக் குற்றாவாளியாய் கருதப்படும் முன்னாள் அமைச்சர் வித்யாதரனின் ஊழல் வழக்கு மற்றும் போலி மதுபான உற்பத்தி செய்த குற்றங்களின் வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது என்று செய்தி வாசிப்பாளர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விந்தியாவிடம் இருந்த ரிமோட்டை ஆதித்தியா பறித்து சேனலை மாற்றினான்.

“எதுக்கு மாத்தறீங்க… நான் பாத்திட்டிருக்கேன் இல்ல” என்று விந்தியா சத்தம் போட்டாள்.

“அவனுங்க பேரை எல்லாம் கேட்டா எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு விந்து”

“சரி மாத்துனு சொல்லி இருக்கலாமே… அதுக்கு எதுக்கு ரிமோட்டை பிடுங்கினீங்க”

“அது பெரிய குத்தமா?”

“நீங்களே எதையாச்சும் பாத்து தொலைங்க” என்று விந்தியா கோபம் கொண்டு அறைக்குச் செல்ல படியேறினாள்.

அவளின் பின்னோடு வந்த ஆதித்தியா அவளை இரு கைகளால் தூக்கி கொண்டான்.

“விடுங்க ஆதி”

“நீ பிரக்னன்டா இருக்க இல்ல டார்லிங்?!”

“அதுக்கு???”

“படிகெட்டு ஏறிப் போனா கஷ்டமா இருக்கும்… சேஃபும் இல்லை…”

“நீங்க இருக்கும் போது ஓகே… நீங்க ஆபிஸ் போயிட்டா?”

“அதுக்கு ஒரு வழி இருக்கு… பேசாம நம்ம ரூமை கீழே ஷிஃப்ட் பண்ணிடலாம்…”

“நோ வே… நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்…”

“பிடிவாதம் பிடிக்காத விந்து… நான் உன் நல்லதுக்காகதான் சொல்றேன்…”

“நோ…” என்று ஒற்றை வார்த்தையில் மறுத்தாள்.

“உன் பிடிவாதம் மட்டும் மாறவே மாறாதா?” என்று ஆதி சொல்லிக் கொண்டே அறையில் அவளை இறக்கி விட்டான்.

“மாறிட்டா நான் விந்தியாவே இல்லை” என்று சொல்லியபடி விந்தியா படுக்கை தலையணையை நிமிர்த்திவிட்டு அமர்ந்து கொண்டாள்.

“அதுவும் கரெக்ட்தான்…” என்று சொல்லிக் கொண்டே ஆதி அவளை நெருங்கினான்.

“இதே வேலையா போச்சு…” என்று சொல்லி விந்தியா அவன் தோள்களைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

ஆதி தம் வலது தோள் பட்டையைப் பிடித்து “வலிக்குது…” என்று கத்தினான்.

குண்டு பாய்ந்த இடத்தில் லேசாய் வலி ஏற்பட விந்தியா அவள் தவறை உணர்ந்தவளாய் எழுந்து, “சாரி… சாரி… எக்ஸ்டிரீம்லி சாரி” என்று வேதனையோடு உரைத்தாள்.

அந்த வலியில் இருந்து மீண்டவனாய், “இட்ஸ் ஓகே பேபி…” என்றான்.

அவன் சொன்ன விதம் விந்தியாவிற்கு ஏதோ ஒரு பழைய ஞாபகத்தை நினைவுபடுத்தியது.

ஆதியை பார்த்து, “இப்ப என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“இட்ஸ் ஓகே பேபினு சொன்னேன்”

விந்தியா சிரித்துக் கொண்டே, “நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை நம்ம ஹோட்டலுக்கு வந்தேன். ஒரு சின்னப் பிரச்சனையால மாமாவை பாத்துட்டு வெளியே வரும் போது நான் இதே வார்த்தையைக் கேட்டேன்… சேம் டோன்…”

ஆதி சிறிது நேரம் யோசித்த பின்னர், “எஸ் விந்து… ரைட்… எனக்கும் ஞாபகம் இருக்கு. ஒரு பொண்ணை இடிச்சிட்டு அவ முகத்தைக் கூடப் பார்க்காம… நீயா விந்து அது?”

பதில் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்து சிரித்தாள்.

ஆதி அவள் சிரிப்பை உணர்ந்தபடி, “அன்னைக்கே நான் உன்னைப் பார்த்திருந்தா கதையே மாறி இருக்கும்”

“என்ன மாறி இருக்கும்?”

“உன்னைத் துரத்தி துரத்தி காதலிச்சிருப்பேன்”

“சும்மா கதை விடாதீங்க”

“சத்தியமா… உன்னை முதன் முதலில் பார்த்த போதே நினைச்சேன், ஏன் உன்னை முன்னாடியே பாக்காம போனோம்னு. உண்மையிலேயே சொல்றேன்… நீ என் வாழ்கையை மாற்றிய தேவதைதான்”

“சார்… இப்போ எதுக்கு ஐஸ் வைக்கிறீங்க?”

விந்தியாவைக் கை பிடித்து அருகில் இழுத்தபடி தன் இதழ்களை அவள் கன்னத்தில் பதித்து விட்டு, “நாளைக்கு நான் கான்ஃபரன்ஸ் போகணும் இல்ல டியர்… வர இரண்டு நாள் ஆகும்” என்று ஆதி சொல்ல விந்தியா அதிர்ச்சியானாள்.

“என் கிட்ட சொல்லவே இல்ல…”

“என்ன பண்றது விந்து? நேத்து வரைக்கும் மேனேஜர் ரமேஷைதான் அனுப்பலாம்னு இருந்தேன். ஆனா சூழ்நிலை நானே போகிற மாதிரி அமைஞ்சு போச்சு. ஜஸ்ட் டூ டேஸ்தான் வந்துடுவேன்” என்று ஆதி சொல்ல விந்து அவன் பிடியிலிருந்து விலகி வந்தாள்.

“ஜஸ்ட் டூ டேஸ்னு இவ்வளவு ஈஸியா சொல்றீங்க”

“இல்ல விந்து” என்று அவள் அருகில் போனவனை, “டோன்ட் டச் மீ… ஆதி” என்று கோபித்துக் கொண்டு தலையணையை எடுத்து சோபாவின் மீது போட்டு படுத்து கொண்டாள்.

“விந்து ப்ளீஸ்… டோன்ட் டூ திஸ் டு மீ” என்று ஆதித்தியா கெஞ்சினான்.

“இரண்டு நாள்… நான் இல்லாம இருக்கப் போறீங்க… இன்னைக்கு மட்டும் என்னவாம்?” என்று திரும்பி படுத்தபடி பதில் உரைத்தாள்.

“பெட்ல வந்து படுறி… சோபாவில சௌகரியமா இருக்காது”

“எனக்கு இதுதான் ரொம்ப சௌகர்யமா இருக்கு” என்று முகத்தில் போர்வையைப் போர்த்திக் கொண்டாள்.

ஆதி படுக்கையில் படுத்து விட்டு சிறிது நேரம் கழித்து “விந்து” என்று அழைத்துப் பார்த்தான்.

“நான் தூங்கிட்டேன்” என்று அவளின் குரல் கேட்டது. ஆதி சிரித்தபடி சோபாவின் அருகில் சென்றவன், மீண்டும் தன் படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான்.

‘நோ ஆதி… கோபமா இருக்கா… விருப்பமில்லாம தொட்டுட்டேன்னு பெரிய பஞ்சாயத்தே வைச்சிடுவா. என்னை விட உனக்கு அந்த சோபாதான் ரொம்பப் பிடிச்சிருக்கு இல்ல… இருக்கட்டும்… கான்ஃபரன்ஸ் போயிட்டு வந்து முதல் வேளையா அந்த சோபாவை இந்த ரூம்ல இருந்து தூக்கிற்றேன்… அப்புறம் நீ கோச்சுக்கிட்டு எங்க படுப்பேன்னு பாக்கிறேன்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே இன்னும் விந்தியாவின் கோபத்தைச் சமாதானம் செய்யும் வழிமுறை தெரியாமல் தனிமையில் தவித்தான்.

நம் கதைநாயகி விந்தியா காதலையும் கோபத்தோடே வெளிப்படுத்துகிறாள். என்ன செய்வது அந்தக் கோபத்தையும் சேர்த்தே நம் கதைநாயகன் ஆதித்தியா காதலித்துவிட்டான்.

காலை வேளையில் சூரியனின் ஓளி பிரகாசமாய் மிளிர்ந்து கொண்டிருந்தது.

அசிஸ்டன்ட் கமிஷனர் என்ற பதவி உயர்வுக்குப் பின் சிவாவிற்குத் தரப்பட்ட குவாட்டர்ஸும் கொஞ்சம் பெரிதாய் இருந்தது. வீட்டின் முன்புறத்தில் தனசேகரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க அதில் வித்யாதரன் மீதான கோபம் மக்களுக்கு அடங்காமல் இருப்பதையும் உருவ பொம்மைகள் எரிப்பதையும் காட்டிக் கொண்டிருந்தன.

வித்யாதரனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற விவாத மேடையில் இது குறித்து விவாதங்கள் நடைபெற்று கொண்டிருப்பதைத் தனசேகரன் மும்முரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் சரோஜா வீட்டைச் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் சிந்துவை துரத்தியபடி உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

சிவா தன் அறையில் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு இன்னும் அதிகரித்த மிடுக்கும் கம்பீரத்தோடும் எதையோ தேடிக் கொண்டிருந்தவன் “வனிதா… வனிதா…” என்று அழைக்க, வனிதா சமையலறையில் இருந்த ஓடி வந்தாள்.

“கேஸ் பைஃலை காணோம்… நீ பாத்தியா?”

வனிதா சிரித்தபடி அந்தப் பைஃலை டிராவில் இருந்து எடுத்து கொடுத்து விட்டு, “ஏ. சி சார் இப்ப கொஞ்ச நாளா எல்லாத்தையும் மறந்திடறீங்க”

“நானா அங்கே வைச்சேன்?” என்று கேட்டான் சந்தேகத்தோடு.

“பின்ன நானா?” என்று வனிதா கேட்க அவன் குழம்பியபடி நின்றான்.

“பிரமோஷன் கிடைச்சதிலிருந்து ஏ. சி சாருக்கு பொறுப்பு குறைஞ்சு போச்சு” என்று கிண்டலடித்தாள்.

“இப்ப எதுக்கு ஏ. சி சார் ஏ. சி சார்னு ஏலம் விட்டிட்டு இருக்க… எப்பவும் எப்படி கூப்பிடுவியோ அப்படி கூப்புடுறி…” என்றான்.

“அசிஸ்டன்ட் கமிஷனராச்சே… மரியாதை கொடுக்க வேண்டாமா?” என்றாள்.

“கன்னத்திலேயே ஒண்ணு வைச்சேனா பாரு” என்று அவன் கைகளை ஓங்க வனிதா மிரண்டபடி, “வேண்டாம் மாமா” என்றாள்.

சிவா அவளைத் தன் அருகில் இழுத்து “நான் ஒண்ணு சொல்லவா?” என்றான்.

வனிதா புருவத்தை உயர்த்தியபடி, ‘என்ன’ என்று கேட்டாள்.

“அது… உங்க அக்காவுக்கும் ஒரு குழந்தை பிறக்க போகுது… போதாக் குறைக்கு வருணுக்கு வேற பிறக்க போகுது. நமக்கு இன்னொன்னு பிறந்தா நல்லாருக்கும் இல்ல?” என்றதும் வனிதா அவனை விட்டு விலகி வந்து அவனின் சட்டையைச் சரி செய்தபடி,

“நேர்மையான போலீஸ் ஆபிஸர் நீங்க. இன்னைக்குக் காலக் கட்டத்தில செலவை எல்லாம் சமாளிச்சு கணக்கு போட்டு குடும்ப நடத்த வேண்டாமா… அதனால நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்றாள்.

வனிதாவின் பதிலை கேட்ட சிவா, “தெளிவாதான்டி இருக்க” என்று சொல்லிவிட்டு தொப்பியை தலையில் மாட்டிக் கொண்டான். வாசல் வரை அவன் செல்ல அவன் நிழலென வனிதாவும் அவனை பின்தொடர்ந்தாள்.

சிவா தன்னுடைய பைக்கில் ஏறி மின்னலென வேகமாய் வனிதாவின் பார்வையில் இருந்து மறைந்தான்.

சுபாவிற்கு கேத்ரீன் வழக்கிற்கு பிறகு கிடைத்த பாராட்டுக்கள் கணக்கிலடங்கா. ரொம்பவும் குறுகிய காலத்தில் அவள் பிரபலாமாக மாற வேலை பளுவும் அதிகமானது. தன் வழக்கிற்கான விவரங்களைத் தேடியபடி சட்டம் புத்தகங்களுக்கு இடையில் அவள் சிக்கிகொண்டிருக்க சுபாவின் அம்மாவிற்கு பேரன் பேத்திகள் பின்னாடி ஓடுவதற்கே நேரம் சரியாயிருந்தது.

வருண் வேகவேகமாய் ஆபிஸுக்கு புறப்பட அவனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நந்தினியை மாதவி விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தாள்.

“இந்த மாதிரி நேரத்தில் சாப்பிட்டே ஆகணும்” என மாதவி சொல்ல நந்தினி முடியாது என்று தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

வருண் மாதவியின் அருகில் வந்து, “எங்கம்மா என் லஞ்ச் பாக்ஸ்?” என்று கேட்க மாதவியோ “டேபிள் மேல இருக்கு… போய் எடுத்துட்டுச் சீக்கிரம் கிளம்பு” என்றாள் சலித்துக் கொண்டபடி,

“இந்த வீட்டில எனக்கு மரியாதையே இல்லை “ என்று சொல்லி விட்டு புறப்பட்டவன் வாசலில் போய் நின்று கொண்டு “பை மா… பை நந்து “ என்று கிளம்பினான்.

அவனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் மாமியாரும் மருமகளும் உள்ளே பாசமழையை மாறி மாறி பொழிந்து கொண்டிருந்தனர்.

ஆதித்தியா தன்னுடைய வீட்டின் ஹாலில் ரொம்பவும் பாஃர்மலாய் உடை அணிந்து கொண்டு நின்று கொண்டிருக்க விந்தியா அவன் நின்றிருந்த திசையில் நேர்மாறாய் திரும்பி சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

“விந்து” என்றான். அவன் அழைப்பிற்குப் பதில் இல்லை.

“விந்து டார்லிங்” என்றான் கொஞ்சலாக. அப்போதும் அவளிடமிருந்து பதில் இல்லை.

“ப்ளீஸ் விந்தியா… என்னைப் பாருடி… என்கிட்ட பேசுடி” என்று கெஞ்சினான்.

“சரி பேசிறேன்… ஆனா நீங்க கான்ஃபரன்ஸுக்கு போகக் கூடாது” என்றாள் விந்தியா அவன் புறம் திரும்பி.

“அதெப்படி முடியும்?” என்றான்

“முடியாது இல்ல… அப்போ கிளம்புங்க” என்றாள்.

“இப்படி கோபமா வழியனுப்பிச்சா எப்படி… திஸ் இஸ் நாட் பேஃர்” என்றான்.

“ம்… எவிரித்திங் இஸ் பேஃர் இன்… லவ் அன் வார், நீங்க சொன்னதுதானே” என்றாள்.

ஆதித்தியாவின் முகத்தில் புன்னகை மலர அவன் விந்தியாவுடன் சோபாவில் உட்கார அவள் உடனே எழுந்து நின்று கொண்டாள்.

“விந்தியா…” என்று அவளை அருகில் இழுத்து நிறுத்தினான்.

“ஆதி”

“உன் கிட்டதானே பேசக்கூடாது… நான் என் பேபிக்கிட்ட பேசப் போறேன்”

“பாப்பாவுக்கு நீங்க பேசிறெதல்லாம் கேட்க அஞ்சு மாசமாவது ஆகணும்”

“நான் பேசுதை புரிஞ்சிக்க உணர்வுகள் இருந்தா போதும்… காதுகளும் மொழியும் தேவையில்லை”என்றான்

“ம்… அப்புறம்”

அவள் வயிற்றைப் பார்த்தபடி, “பேபி டார்லிங்… ஜஸ்ட் டூ டேஸ்… போயிட்டு வந்துருவேன்… நீதான் உங்க அம்மாவை பாத்துக்கணும்…

என்னைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பா… ஒழுங்கா சாப்பிட மாட்டா… ஒழுங்கா தூங்க மாட்டா… சோ மை பேபி டார்லிங்… டேக் கேர் ஆஃப் ஹர் அன் யுவர்செல்ஃப்… ஓகேவா… ஐ லவ் யூ சோ மச்” என்று சொல்லிவிட்டு ஆதித்தியா தன் பிடியை தளர்த்த விந்தியா அவனை விட்டு நகர்ந்து வாசல் கதவோரமாய் நின்று கொண்டு கண்களைத் துடைத்து கொண்டாள்.

“டைமாச்சுடி… கிளம்பட்டுமா?” என்றான்.

அவள் சரி என்று தலையாட்டினாள்.

“இப்படிக் கடமைக்குத் தலையாட்ட கூடாது… மனசிலிருந்து சொல்லு” என்றான்.

விந்தியா அழகாய் மலர்ந்துவிட்ட இதழ்களோடு, “யூ ஆர் மை ஒன் அன் ஒன்லி லவ் ஆதி… டேக் கேர்…” என்றாள்.

“ஷபானாகிட்ட சொல்லிருக்கேன்… நான் வரவரைக்கும் அவ வந்து உன் கூட இருப்பா… ஓகே வா?” என்றான்

“ ம்” என்று தலையசைத்தாள்.

பின்புறமாய் அவளைப் பார்த்துக் கொண்டே நடந்த போய் காரில் ஏறிக்கொள்ள விந்தியா கை அசைத்து வழியனுப்பினாள்.

கார் கேட் வரை பொறுமையாய் ஊர்ந்து செல்ல விந்தியா அதைப் பார்த்தபடியே வாசல் கதவோரமாய்ச் சாய்ந்தபடி நின்று கொண்டாள்.

வெகுதூரம் சென்றாலும் அவர்களின் அந்தப் பிரிவு மனதளவில் நெருக்கத்தையே அதிகரித்தது. இரு துருவங்களாய் நின்றிருந்தவர்கள் இனி எத்தனை தடங்கல் வரினும் அவர்கள் பயணம் இணைந்தேதான் இருக்கும்.

ஆனால் அவர்களுடனான நம்முடைய இந்த விந்தையான பயணம் இங்கே இந்த இடத்தில் முடிவடைகிறது.

error: Content is protected !!