IM-12

IM-12

IM 12

அன்றைய தினசரியை இளம்பரிதி பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டில் அமர்ந்து, தியா காலை உணவினை தயார் செய்வதாய் கூற…. இவன் தினசரியை திருப்பிக் கொண்டு இருந்தான்…அதில் நேற்று முன்தினம், இவனுக்கும் தியாவுக்குமான, வரவேற்பு நிகழ்ச்சி குறித்தான செய்தி கால் பக்க புகைப்படத்துடன் வந்திருந்தது. அதில் தியா ஜரிகை, ஸ்டோன் ஒர்க் செய்த புடவையில் தேவதையாய் ஜொலித்தாள்.. அருகில் ஷெர்வானியில் இளம்பரிதி.. அவனை பார்த்து அவனுக்கே சிரிப்பு வந்தது. இந்த உடை அவன் மனைவி தெரிவு.. நன்றாகத்தான் இருந்தது. அவனுக்கென்றே ப்ரத்யேகமாய் வடிவமைத்து தைத்த உடை..

“ஒரே ஒரு டைம் போடப் போற. ட்ரெஸ் க்கு .”, என்று ஆரம்பித்தவனிடம்… “ஒட்றகுச்சி, இதுக்கு ஏதாவது லெக்ச்சர் குடுத்த .. கிழிச்சுடுவேன்..”

“ஏய்.. இது என்னடி…? இப்படி ரௌடி ஆகிட்ட ? அதுவும் பப்ளிக்-ல. நான் போலீஸ் டீ ..” என்று கெஞ்சி கொஞ்சியது நினைவு வர சிரித்தான்….

நன்றாகத்தான் நடந்தது.. ஒன்றிரண்டு கசப்பான நிகழ்வுகள் தவிர….. SNP -யை எந்தவிதத்தாலும் எதிர்க்க முடியாதவர்கள், வம்பு பேசவென , “ஏதாவது கசமுசா நடந்திருக்கும், அதான் காத்து காதும் வச்சா மாதிரி கல்யாணம் வச்சிட்டாங்க ” – என்பது போல் பேச்சு அடிப்படவும்… பரிதியும் பாஸ்கரும் கோபமுற .. SNP இருவரையும் சமாதானப் படுத்த வேண்டியதாகியது..

பேசுபவர்கள் வாயை அடக்க.. SNP, “இளம்பரிதியும் தியாவும் , ஸ்கூல்ல படிக்கும்போதே ப்ரெண்ட்ஸ்.. ரெண்டு பேரும் வெல் மெச்சூர்ட். லட்சியத்துக்கப்பறம் தான் கல்யாணம்-ன்னு ஒரே பிடியா நின்னுட்டாங்க..,”, பெருமையாய் மேடையிலிருந்த அவர்களை பார்த்தவாறே, “சிம்பிளா மேரேஜ் பண்ணிக்கணும்-கிறது அவங்க கொள்கை.. நல்ல கொள்கை-கிறதால நாங்களும் ஒத்துக்கிட்டோம், பரிதி வீட்லயும் ஓகே பண்ணிட்டாங்க … எங்க சொந்தபந்தங்கள்,நட்புக்கள் ஆசீர்வாதத்தோட, மாப்பிள்ளை வீட்டு முறைப்படி திருப்பதி-ல நடந்தது.”,  ஆம். உண்மைதானே.. புறம் பேசிய அனைவரும்.. வெட்கும் வண்ணம், அழகாய் பரிதியின் தோளின் மீது கைபோட்டு அணைத்தவாறே SNP பேச.. பாதி வாய் மொழியாயும், பாதி உடல் மொழியிலும்.. அது மற்றவர்களுக்கு , “பரிதி எங்கள் சாய்ஸ்”, என்பதை உணர்த்தியது .

தியாவின் தோழி ப்ரியசகியும் வர.. அந்த இடமே கலகலத்தது. அறிமுகமே சரவெடியாய்….. “ஹெலோ இளம்பரிதி சார் .. என்னை தெரியுதா, நானும் உங்க ஸ்கூல்மேட் தான்.. என்ன ?, ஸ்போர்ட்ஸ்-க்கும் எனக்கும் தூரம் அதிகம்.. படிப்பு அபவ் ஆவெரேஜ்.. உங்க ரெண்டு பேர் மாதிரி பெரிய்ய படிப்ஸ் கிடையாது.. சோ தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை..”

“ஸ்கூல் டேஸ் -ல இவ , உங்களை ரொம்பவே திட்டிருக்கா.. ஒட்றகுச்சி, மண்டைகணம், வளந்துகெட்டான் -ன்னு இன்னும்.. என்னென்னவோ…. இப்போ பஃபெ வாசம் என்னை வா வா -ன்னு கூப்பிடுது .. ஒருநாள் ஆற அமர சொல்றேன்..”, என்றவள் தியாவிடமும் வளவளத்தாள், “ஆமா.. பிளாட்-க்கு போறீங்களாமே?, அதுவும் இவளை நம்பி..? ஒரு சுடுதண்ணீ கூட இவளுக்கு வைக்க தெரியாது.”, நன்றாய் வாரினாள்.. அவள் தோழிகளுடன் செல்ல.. “ப்ப்பா .. புயல் அடிச்சு ஒய்ஞ்சா மாதிரி இருக்கு”, என்ற பரிதியின் கிண்டலுக்கு.. “யா.. ச்சோ ஸ்வீட்.. நான் என்ன பண்ணினாலும் அவளுக்கு பிடிக்கும்.. “,என்ற அதிதிசந்த்யாவிற்கு, “எனக்கும்தான்டீ..”, என்று பரிதி கிறங்க…”அய்ய போதும், வழியுது …வர்றவங்கள பாருங்க”.. கத்தரித்தாள்…

இவனது மேலதிகாரிகள் அனைவரையும் மரியாதை நிமித்தம் அழைத்திருந்தான்.. ஒருவர் பின் ஒருவராய் வந்து வாழ்த்து கூறி சென்றனர்.. அதில் ஒருவராய்.. இவனை பணி இடை நீக்கம் செய்தவரே வரவேற்பிற்கு வர.., பரிதி உஷ்ணமானான்.. அவன் முக மாற்றத்தில் இருந்து வருபவர் வம்பானவர் என்பதை அறிந்த தியா…, பாஸ்கரை அழைத்து பரிதியின் அருகில் இருக்கப் பணித்தாள்…

அனுமானித்தது போலவே, “இளா … இனி யூனிஃபார்ம் போட வேண்டிய அவசியமே இல்ல… நாலு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடற அளவு சொத்து பத்தோட பொண்ணு.. அப்டியே கெத்தா வீட்டோட மாப்பிள்ளையா சுத்தி சுத்தி வரலாம்.. புடிச்சாலும் புடிச்ச… பெரிய்ய புரியம்கொம்பா பிடிச்சிட்டே.? இன்னும் எதுக்கு இந்த ECR ரோட்ல துரத்தறதும், சஸ்பெண்ட் ஆகறதும் ? “. எனவும்…

இவ்வார்த்தைகளில் கோபமுற்றது ..இளம்பரிதி அல்ல… பாஸ்கர் ஆதித்யா தான். எதிரில் நின்ற பாஸ்கர், எட்டி அவர் சட்டையை பிடிக்க வர… அதைத் தடுத்து.. “நீ சும்மா இரு பாஸ்கர்… “, என்று இவனை அடக்கியவன், மேலதிகாரியிடம் திரும்பி, “கோர்ட் டைரக்ட் ஆர்டேரோட வர்றேன்.. இனி எவனுக்கும் நான் ரிப்போர்ட் பண்ண வேணாம்-னு ஹை கோர்ட்-டே சொல்லிடிச்சு… எந்த கொம்பனும் எனக்கு ஆர்டர் கொடுக்க முடியாதுன்னும் சொல்லிடிச்சு.. படிக்கலையா .?”, கிண்டலாய் கேட்டு, “இப்போ நான் லீவ்-ல இருக்கேன்… இன்னும் அஞ்சே நாள்ல சார்ஜ் எடுத்துட்டு வருவேன்..,  ECR -ல ரேஸ் போற.., உனக்கு அப்பப்போ எலும்புத்துண்டு போடற எல்லா கொழுப்பெடுத்த பணக்காரனுக்கும் சொல்லி வை… “, என்று இளா மீசை முறுக்க…. அவன் ஆளுமையில், கம்பீரத்தில்.. தியாவை விட பாஸ்கர் அதிகம் ஈர்க்கப்பட்டான்…

இவ்வளவும் பல்லைக் கடித்தபடி புன்னகையுடனே கூறினான் இளம்பரிதி.. இப்படி ஒரு பேச்சு வருமென அவன் நினைத்ததுண்டு.. அவன் தியா-வை பார்த்து பேச தயங்கிய காரணங்களில் இதுவம் ஒன்று.. ஆனால், இத்தனை விரைவில், இப்படி நேரடியாக வருமென தெரியாது.

ஆனால், SNP இதற்கு தயாராகவே இருந்தார் போலும்.. காரணம், இவர் அழைப்பின் பேரில் கிரைம் பிரான்ச் ஐ.ஜி. வந்திருக்க…, அவரை சரியாக அந்த நேரத்தில், SNP மேடைக்கு அழைத்து வர,  பரிதியிடம் வம்பு வளர்த்த அவன் மேலதிகாரி மிரண்டு அவசரமாய் விடை பெற்றார்… பரிதியும் இயல்பானான்..

மேடைக்கு வந்த அந்த காவல் துறை ஐ.ஜி. ,  நேர்மைக்கு பெயர் போனவர்.. பரிதியின் மரியாதைக்கு உரியவரும் கூட… “சார்” … , இளம்பரிதி போலீஸ் mode -க்கு சென்று விரைத்து, சல்யூட் வைத்தது, இயல்பிற்கு திரும்ப.. அதென்னவோ சில நொடிகளில். நடந்தது… ஆனால், அந்தோ பரிதாபம்.. அவன் மேனரிஸத்தில், வேகத்தில், ஸ்டைலில் ..அந்த நொடியே அவனை முத்தமிடத் தோன்றிய உணர்வினை கட்டுப்படுத்த திணறினாள், அவனின் சகதர்மினி.. பார்வை மட்டும் மாறாமல் அவனை நோக்கியபடி… கூடவே சின்னதாய் அனல் மூச்சு..

“ஈஸி மேன்.. கங்கிராஜுலேஷன்.. , ஹாப்பி மேரீட் லைப் “, என்று கை குலுக்கி அந்த ஐ.ஜி. விடைபெற.., மனையாளின் பார்வை உணர்ந்து, சற்றே தலை திருப்பி, புருவம் உயர்த்தி என்ன? என்பது போல் பார்க்க.. உடல் ரத்தம் முழுதும் முகத்திற்கு வந்து முகம் சிவக்க. தியா வெட்கினாள், பெண்ணவள் மயக்கம் கண்களில் தெரிய, அதன் காரணமும் தான் எனது புரிய.. கொண்டவனாய் கர்வம் கொண்டான்.. வழமைபோல் இடது கை மீசையை நீவி, “என்ன பாக்கற?”…. சின்ன சிரிப்புடன் கேட்க… “என் புருஷன், பாக்கறா மாதிரி இருக்காரு.. நான் பாக்கறேன் ” என பதிலாய் சிரிப்புடன் திருப்ப… மெல்லிய வெட்கம் அவன் முகத்தில். படர…. ஆஹா …அது ஒரு ஹைக்கூ கவிதை..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கல்பலதிகாவும், அவள் தோழியும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தே இருந்தார்கள். தோழி இவளுடன் புறப்படும் முன்பே கூறி விட்டாள் “அங்க வந்து உடனே கிளம்புன்னு ஏதாவது ட்ராமா பண்ணின கொன்னுடுவேன் .. நின்னு நிதானமா சாப்பிட்டுத்தான் கிளம்பனும்..நமக்கு முக்கியம் சோறு டாட். இதுக்கு ஓகே-ன்னா வர்றேன்.”, என்ற கண்டிஷனோடு. சிரித்தவாறே சரி என்று தான் அழைத்து வந்திருந்தாள்….

கண்கள் பாஸ்கர் ஆதித்யாவை தேட, எங்கே? … அவன் இருந்தால் தானே?.. இவளை பார்த்த மறு நொடி… அவன் மண்டபத்தை விட்டே வெளியேறி இருந்தான்.. அது இவளுக்கு தெரியாதே?எல்லா இடத்திலும் கண்களை அலைபாய விட்டு, அவன் கிடைக்காத விரக்தியில் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் .. “சும்மா டைம் பாஸ்-கு வழிஞ்சிருக்கான்… புடிச்சிருக்கு தான?-ன்னு திமிரா சொன்னவன் உனக்காக தேவதாஸாவா திரிவான்?, நீ எப்போடி இவன் மேல இவ்வளவு பைத்தியம் ஆன?”, ஆனாலும் மனம் வலிக்கத்தான் செய்தது.. ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்து பார்த்துவிட்டு கிளம்பினாள்…

பாஸ்கர் ஆதித்யா வேறு எங்கும் போகவில்லை.. வெளியே இருந்த அவன் காரில் தான் அமர்ந்திருந்தான்.. அம்மாவோ அப்பாவோ கூப்பிட்டால் உடனே செல்ல வேண்டுமே?.. இது அவன் அக்காவின் வரவேற்பு நிகழ்ச்சி அல்லவா? அந்த அளவு பொறுப்பில்லாதவனா என்ன?

லதிகா செல்வதை தூரத்தில் இருந்தே பார்த்து… அதன் பின் வரவேற்பு நடக்கும் திருமண மண்டபம் சென்றான்… அரைமணி நேரம் கழித்து எதற்காகவோ வெளியே செல்ல… சற்றும் எதிர்பார்க்காதவாறு அவனுடன், இணைந்து கூட நடந்தாள் லதிகா.. திகைத்து … யாரும் பார்க்கிறார்களோ என அதிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தவன்… வேகமாய்ப் பேசினான்…

“உனக்கு அறிவில்லை ? “, “திட்டினா மட்டும் கோவம் மூக்குக்கு மேல வருது?”, சற்று நிறுத்தி… பல்லைக் கடித்தவாறே…., “இங்க ஃபுல் -ல்லா அப்பாவோட பிசினெஸ் பண்றவங்க வர்ற இடம்.. யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க? யூஸ்லெஸ் ஃபெல்லோ …”

அத்தனையும் கேட்டு கொண்டிருந்தவள், யூஸ்லெஸ் ஃபெல்லோ என்பதில் கோபமாகி.. “அங்க திருப்பதி-ல கைய பிடிச்சு தர தர ன்னு இழுத்துட்டு போனீங்களே? அது பரவால்லையா? அது ரொம்ப அறிவான வேலையோ?” , பொரிந்தாள்.

“ஏய் லூஸு .. அங்க வந்திருந்தவங்க எல்லாம் நம்ம வீட்டு ஆளுங்கதான்.. யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க-ங்கிறத விட.. அவங்களுக்கு எதுவும் தெரியாது-ன்னு விட்டுட்டு போய்டுவாங்க.. இங்க அப்படியா? .. கண்ணு காது மூக்கு வச்சு பேப்பர்-ல்ல கொட்ட எழுத்துல போடுவாங்க.., எனக்கு பரவால்ல, உனக்கு தான் கஷ்டம் ” , இதை சொல்லி முடிக்கையில் , லதிகாவின் கண்களில் விழட்டுமா என்று காத்திருந்த கண்ணீரைப் பார்த்து.., சற்றே பெருமூச்சு விட்டு நிதானித்து .. ” நான் இன்னும் உன்னை அழவைக்க நினைக்கல.. ப்ளீஸ்.. போய்டு “

“எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.. உங்க போன் எங்கிட்ட இருக்கு அதை சொல்லத்தான் வந்தேன்..”

“சரி சொல்லிட்ட தான ? கிளம்பு “, என்று அவளை அனுப்புவதிலேயே குறியாக இருந்தான்..

“என்ன செய்யட்டும்?” , லதிகா கேட்க..

“ம்ம். வச்சிக்க .. இல்ல தூக்கிப்போடு.. எனக்கென்ன?”

“உங்களோடதுதான ? தேடுவீங்களே-ன்னு …..”

“சரி குடு…”

“இல்ல.. அது வீட்ல இருக்கு “

சுறுசுறுவென ஏறிய கோபத்தை கட்டுப் படுத்த முடியாமல்… ” உன்னை என்ன பண்றதுன்னே எனக்கு தெரில.. இவ்ளோ முட்டாளா இருக்க?.. உன்னல்லாம் வச்சு எங்கம்மா என்ன பண்றாங்க-ன்னு தெரில”… என்றவன் தொடர்ந்து ” எதுல வந்த? “

“கால் டாக்சி “, இப்போது கண்ணில் திரண்ட நீர்.. கன்னத்தில்…

“முட்டாள்… இப்போ மணி என்ன தெரியுமா? ஒம்பதேகால்.. எங்க உன் கூட வந்த பொண்ணு?”

“அவளை அவ வீட்டுக்காரர் வந்தார் .. அவரோட அனுப்பிட்டேன்..”, குரல் உள்ளே போயிருந்தது…

அவளை நிமிர்ந்து பார்த்த பாஸ்கர் ஆதித்யாவிற்கு மட்டும் மூன்றாவது கண் இருந்திருந்தால் லதிகா-வை எரித்திருப்பான்… வாய்க்குள்ளேயே திட்டியவன் பேசுவது நிச்சயமாய் அச்சில் ஏற்ற முடியாதது.. .. போனை எடுத்து, ட்ரைவரை அழைத்தான்..

லதிகாவிடம்… “கார்-ல வீட்டுக்கு போன உடனே .. ரொம்ப புத்திசாலித்தனமா போன் பண்ணாத.. நான் எடுக்க மாட்டேன், ட்ரிங்க்ஸ் பார்ட்டி அரேந்ஞ்சு மெசேஜ் பண்ணு .. போதும்.. ஆனா.. மெசேஜ் மட்டும் வரல… உன்னை தொலைச்சிடுவேன் “

“ம்ம்ம் .. ஒன்னும் தேவையில்லை .. நானே … “, லத்திகா மூக்குறிஞ்சிக் கொண்டே கைப்பையில் கர்சீஃப் தேட ஆரம்பிக்க….

“வாய மூடு .. என்னை டென்ஷன் பண்ணனும்னே வர்றியா நீ ? உனக்கு தான் என்ன பிடிக்காது இல்ல?, என்ன பாத்தா இன் செக்யூர்ட்-ஆ ஃபீல் பண்றதான ? எதுக்கு வர்ற? “, வாய் திட்ட… கை அனிச்சையாய் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்சீஃப் எடுத்து அவளிடம் நீட்டியது.

முகம் சிவந்திருக்க.. தன்போக்கில் கை நீட்டி வாங்கிக் கொண்டாள்.. கார் வந்த பின்னும் அதே கடு கடு முகம்தான்.. இருக்கையில் ஏறி அமர்ந்த பின், நிமிர்ந்து அவன் முகம் பார்க்க.. அவனும் அவளை நேர் பார்வை பார்த்தான்.. ஓரிரு நொடி கூட நீடித்திராத அப்பார்வையில் அவள் நிறைந்தாள்… அவன் உறைந்தான்..

+++++++++++++++++++++++

அனைவரும் அவரவர் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர்.. ஒரே மாற்றம்.. SNP வீட்டிலிருந்த அதிதி சந்த்யா , தற்போது அடையாறு குடிபெயர்ந்திருந்தாள், கணவனோடு..

சரண்யுசாயா-வை, வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ள சொல்லி, அலுவல்களை கவனிக்க கிளம்பினான் SNP .. அதிதிசந்த்யா-வின் தீர்மானத்தின் பொருட்டு .. நிறைய நாட்கள் அலுவலகங்களுக்கு செல்லாததால், வேலை தேங்கி இருக்க… இரண்டு கோப்புகளை பார்த்து பின் , கையெழுத்திட வேண்டிய காசோலைகளை பார்வையிட்டவன் கையில் …. வக்கீலுக்கு கொடுக்க வேண்டிய ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை இருந்தது..

மொழிவோம்..

error: Content is protected !!