imk-13
imk-13
14(௧௪)
சிலைக்கடத்தல்
அந்த இதழ்கள் இரண்டும் ஒன்றோடொன்று சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தன. சமரசத்தோடு ஒரு யுத்தம் புரிந்து கொண்டிருந்தன. காதலின் தாகத்தைத் தீர்க்க மோகத்தின் உச்சநிலையில் மோனநிலையில் உண்ரவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தன.
இந்தப் பரிமாறல்கள் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு…
“இரண்டு நாள்னு சொல்லிட்டு ஒரு வாரம் போய் சென்னையில தங்கிட்ட… போடா நான் உன்கிட்ட பேச மாட்டேன்” என்று விலகிப் படுத்துக் கொள்ள சென்ற தன் சரிபாதியானவளை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான் விக்ரம்!
அவள் அவன் கைக்குள் இருந்து வெளியேறத் தவிக்க, “கோபப்படுற நேரமாடி இது” என்று கொஞ்சலாய் கெஞ்சலாய் தன் ஆருயிர் மனைவியை சமாதனம் செய்ய… அவளோ பிடி கொடுக்காமல் அவனை விட்டு விலகிச் செல்வதிலேயே முனைப்பாய் இருந்தாள்.
“ஏ தமிழச்சி! படுத்தாதடி… ஒரு வாரமாச்சு” என்றவன் கிறக்கமாய் தன்னவளை இன்னும் இன்னும் தன் பிடிக்குள் இறுக்க, “எனக்கு மட்டும்… நீ இல்லாம தூக்கமே வரல தெரியுமா” என்றவள் இறுதியாய் அடங்கி ஒடுங்கி அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டாள்.
“ஆனா எனக்கு நல்லா தூக்கம் வந்துச்சு” விக்ரம் சொல்ல மீண்டும் அவளின் கோபப் பார்வை அவனை முற்றுகையிட்டது.
“நீ பக்கத்தில இருந்தா எனக்குத் தூங்கவே தோணமாட்டேங்குது டார்லிங்!” என்றவன் மீதி வாக்கியத்தை முடிக்க அவள் அவன் அணைப்பை உதறிக் கொண்டு, “போடா ராஸ்கல்” என்று புரண்டு படுத்துக் கொண்டாள்.
“நீ இந்த ஆறு மாசத்துல என்னை ரொம்ப அடிக்ட் பண்ணிட்ட விக்கி… இந்த பெட் சோபா கிச்சன்னு எல்லா இடத்திலையும் நீ மட்டும்தான் தெரியிற… நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்… வீட்டுக்கு வந்தா உன் ஞாபகம் வருமேன்னு ஸ்டேஷன்லேயே எதாச்சும் ஒரு வேலையை இழுத்துப் போட்டுக்்கிட்டு செஞ்சுகிட்டு இருந்தேன்” என்றவள் சொல்ல… அவன் பாற்கடலில் படுத்திருக்கும் ரங்கநாதனைப் போல் ஒரு கரத்தால் தன் தலையைத் தாங்கிப் பிடித்துக்் கொண்டு தன் மனைவியின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்திருந்தான்.
தமிழச்சி பட்டென தன் காதல் புலம்பல்களை அந்தரத்தில் விட்டுவிட்டு, “என்னடா நான் மட்டும் பேசிட்டே இருக்கேன்… நீ பேசவே மாட்டேங்குற… உனக்கு என்கிட்ட சொல்ல எதுவுமே இல்லையா” என்று கேட்டு அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
“நிறைய இருக்கு…” என்றவன் அவளைக் கிறக்கமாய் பார்த்தபடி சொல்ல, “அப்போ சொல்லு” என்றாள்.
“இல்ல… நீ முதல்ல பேசி முடி… அப்புறம் நான் ஆரம்பிக்கிறேன்” என்றதும், “அது ஏன்?” என்று அவள் தன் புருவங்களை உயர்த்தினாள்.
“நான் பேச ஆரம்பிச்சா நீ பேச முடியாதுடி என் தமிழச்சி”
“அவ்வளவு விஷயம் இருக்கா உனக்கு சொல்றதுக்கு?” என்றவள் ஆச்சர்யமாய் கேட்க,
“ஹ்ம்ம் … சொல்லிக்கிட்டே இருக்கணும்… நிறுத்தாம… முடிக்காம … நீட்டி மொழக்கி” என்றவன் மெல்ல மெல்ல அவளிடத்தில் இறங்கி ஓசைப்படாமல் புதுவிதமாய் பேசத் தொடங்கினான்… அவள் இதழ்களோடு இதழ் வைத்து! அவள் அவன் வசமாக அவன் அவள் வசமானான். காலம் அவர்கள் காதலின் வசம் கரைந்து மடிந்து போனது.
ஆனால் இப்போது அவள் விழிகள் கண்ணீர் வசமானது. அவள் காதல் அதில் கண்காணாமல் கரைந்து போய் கொண்டிருந்தது. அவனின் கண நேரப் பிரிவைக் கூடத் தாங்க முடியாத அவளுக்கு காலம் முழுதுமாய் அவன் பிரிவை ஏற்கும் சக்தி இல்லையென்று நன்றாகத் தெரியும்.
இருந்தும் அவனிடம் அவளால் இறங்கிப் போக முடியவில்லை. அள்ள அள்ளக் குறையாதக் காதலை அவன் கொடுக்காமல் இருந்திருந்தாலாவது அந்தத் துரோகம் அவளைப் பெரிதாய் பாதித்திருக்காது. ஆனால் அந்தளவுக்குக் காதலில் அவளைத் திளைக்க வைத்துவிட்டு ஒரு நொடியில் அவன் அரசியல் வாழ்க்கைக்காக அவளைத் தூக்கி எறிந்ததை அவளால் மன்னிக்கவும் முடியவில்லை. இன்றளவில் மறக்கவும் முடியவில்லை.
அவசரத்திலும் கோபத்திலும் எடுக்கும் முடிவுகள் தவறாகத்தான் போகும் என்று தெரிந்தும் அவள் அந்தக் காரியத்தை செய்தாள். தன் கன்னங்களில் வடிந்து வரி கோடுகளாய் இருந்த கண்ணீர் தடயத்தைத் துடைத்துவிட்டு வேக வேகமாய் அவள் தேடி எடுத்த பான்ட் பேப்பரில் அவளின் கையெழுத்தைப் போட்டு வைத்தாள். அந்த ஒரு கையெழுத்து அவள் தலையெழுத்தையே மாற்றிவிடும் என்று தெரிந்து செய்தாளோ?
********
சிம்மா தன் தங்கையிடம் இவானைப் பற்றிய உண்மையை சொன்ன அந்தத் தருணம்… வாஷிங்க்டனில்…
ஐந்து பேர் கொண்ட குழு அந்தப் பெரிய அறைக்குள் தங்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்க, எல்லோரும் இயல்பாய் நண்பர்கள் போல் பேசிக் கொண்டனர்.
அதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில் அவர்கள் யாரும் ஒத்த வயதுடையவர்கள் கிடையாது. இளமை ஊஞ்சலாடும் இருபதுகளில் இருவர் இருக்க, இருவர் முதுமையின் முன்னுரையான நாற்பதின் விளிம்பிலும் ஒருவர் தாடியும் தொந்தியுமாய் அறுபதைத் தொட்ட வயதில் இருந்தார்.
அந்தச் சமயம் அவர்களுக்கு இடையில் ஏதோ ஒரு சுவாரசியமான சம்பாஷணை நிகழ்ந்து கொண்டிருந்தது போலும். சிரிப்பு சத்தமும் பேச்சு சத்தமும் அந்த அறை முழுக்க எதிரொலித்தது.
அவர்களின் சிரிப்பு சத்த்ததைக் கேட்டும் கேட்காமலும் பால்கனியில் நின்று கைபேசி அழைப்பை முடித்துவிட்டு திரும்பினான் நம் நாயகன் சிம்மபூபதி!
அப்போது அவர்களின் பேச்சு சத்தம் குறைந்து அவர்கள் பார்வை அவன் புறத்தில் திரும்பியது. அவன் அருகில் வர எல்லோரின் பார்வையும் அவனைப் பெருமிதமாகவும் மரியாதையாகவும் எதிர்கொண்டது.
“மன்னிக்கணும்… கொஞ்சம் முக்கியமான கால்” என்று அவன் சொல்லவும்,
“என்ன சகோ? நமக்குள்ள என்ன மன்னிப்பெல்லாம்” என்று அங்கிருந்த ஒருவன் சொல்ல, “அதானே!” என்று மற்றவர்களும் புன்னகைத்தனர்.
“நீங்க வருவீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல ராமநாதன் சார்!” என்று சிம்மா அந்த வயதானவருக்கு மரியாதை நிமித்தமாய் முதலில் கைகுலுக்க அவர் அவனை அணைத்துக் கொண்டு, “வாக்குக் கொடுத்தா மாற மாட்டான்… தமிழன்டா!” என்று அவர் ஆரவாரமாய் உரைக்க மீண்டும் அவர்களின் சிரிப்பு சத்தத்தால் அந்த அறை நிரம்பியது.
சிம்மா பின் புன்னகையோடு மற்றவர்களை எதிர்கொண்டு, “நீங்க விஜயன்… எழுத்தாளார் சரியா?” என்று நாற்பது வயதுடைய ஒரு உயரமானவரைப் பார்த்துக் கேட்க, “எழுத்தாளர் எல்லாம் இல்ல சகோ… சும்மா பொழுது போகாம… ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு நான் படிச்சு வியந்த தமிழ் பாரம்பரியத்தைப் பத்தி சின்னதாய் கட்டுரை எழுதிட்டிருக்கேன்… எனக்கு இருக்குற வேலைப் பளுல எனக்கு அது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்” என்றார்.
“அதுக்குப் பேர்தான் சகோ எழுத்தாளுமை… இவ்வளவு வேலைக்கு இடையில் எழுதுறேன்னு சொல்றீங்களே… அது உங்க எழுத்தின் மீதான, தமிழின் மீதான காதலைக் காட்டுது!” என்று சொன்ன சிம்மா அடுத்து அங்கு வந்திருந்த இளைஞர்களைப் பார்த்து, “நீங்க … அஜீஷ் இல்ல… அப்புறம் இவரு” மற்றவனைக் கை காட்டி யாரென்று யோசிக்க,
“என் கூடத் தங்கியிருக்குற ஃப்ரென்ட் தேஜா… தேஜேஸ்வரன்!” என்று அறிமுகம் செய்வித்தான் அஜீஷ்.
“இவர் நம்ம க்ரூப்ல இல்லையோ?!” என்று கேட்க, “இல்ல சகோ… இவன் தெலுங்கு… தமிழ் எழுதப் படிக்க வராது… ஆனா நல்லா பேசுவான்… உங்களைப் பத்தி நான் சொன்னதெல்லாம் கேட்டு உங்களைப் பார்க்கிற ஆர்வத்துல வந்திருக்கான்” என்றான்.
சிம்மா தேஜாவிற்குக் கை குலுக்க, “உங்க ஓவியமெல்லாம் மார்வலஸ்… சிம்ப்ளி சூப்பர்” என்று அவன் பாராட்ட, “நன்றி சகோ!” என்று சிம்மா அவனிடம் முறுவலித்து அடுத்தவரைப் பார்க்க, அவர் புன்னகையோடு அவனைப் பார்த்தார்.
“நீங்க எழில்வாணன்… ஈழத் தமிழர்… கரெக்டா?” என்று கேட்டான்.
“ஆம்! எங்கண்ட நாட்டை விட்டு நாங்கள் இங்கே புலம்பெயர்ந்து வந்து சந்ததிகள் கடந்துப் போச்சு… நான் பிறந்து வளர்ந்ததெல்லாம இங்கதான்… இதுவே இப்போது எங்கண்ட ஊர் நாடு எல்லாம்… ஆனா தமிழன் என்ற உணர்வை…எத்தனை ஆயிரம் மையில்கள் தாண்டி வந்தாலும் அதை யாரும் மாற்ற இயலாது… அது எங்கட ஒவ்வொரு செல்லிலையும் கலந்து கிடக்கு” என்று அவர் உணர்வுபூர்வமாய் தமிழன் என்ற ஆழமானப் பற்றோடும் அதேநேரம் கொஞ்சம் வலியோடும் சொல்லி முடிக்க, சிம்மா மனம் கலங்கி நின்றான். அங்கிருந்தவர்களும்!
சிம்மா அவரைத் தோளோடு நட்பாய் அணைத்துக் கொண்டு, “உண்மைதான் சகோ! இத்தனை ஆயிரம் மையில்கள் கடந்து வந்தும் உங்கத் தமிழன் என்ற உணர்வு கொஞ்சமும் மாறல… இன்னும் கேட்டா அது இன்னும் ஆழமா இருக்கு… உங்க பெயரா… அடையளமா… பேச்சு வழக்கா… எனக்கு உண்மையிலேயே வியப்பா இருக்கு” என்றான்.
“நம்ம மொழியில் பற்று கொண்டிருப்பதில் என்ன வியப்பு” என்று எழில்வேந்தன் கேட்க,
அப்போது ராமநாதன் அவரைப் பார்த்து, “இருக்கு சகோ… நான் பார்த்த வரைக்கும் தமிழ் நாட்டிலயே நம்ம மொழி கலாச்சாரம் பாரம்பரியத்தோட அருமை பெருமை தெரியாம உதாசீனப்படுத்துறாங்க… நீங்க இந்த நாட்டுல பிறந்து வளர்ந்து நம்ம தாய் மொழில பெயர் வைச்சிருக்கீங்கப் பாருங்க… ஆனா நம்ம தமிழ்நாட்டில… வாயில நுழையாத பெயரெல்லாம் வைச்சுக்கிட்டுத் திரியறாங்க” என்று சொல்லி ஏக்கமாய் பெருமூச்சுவிட்டார்.
“ராமநாதன் சார் சொல்றதும் சரிதான்… பெயர் என்பது நம்மோட அடையாளம்… அதையே நம்ம வேறு மொழில வைக்கறது… நம்ம தமிழ் உணர்வைக் கருவருக்கற மாதிரி… அங்கே தொடங்கி ஸ்கூல் காலேஜ் வேலை செய்ற இடம்னு நம்ம மொழி பண்பாடு பாரம்பரியம் எல்லாமே பின்னுக்குத் தள்ளப்படுது… இதை அறியாமைன்னு சொல்றதா இல்ல அறிவீனம்னு சொல்றதான்னு எனக்குத் தெரியல” என்று சிம்மா வருத்தமாய் அதேநேரம் கொஞ்சம் கோபமாய் உரைக்க, “வெல் செட்” என்று விஜயன் அவனைப் பாராட்ட எல்லோருமே அவன் வார்த்தையை ஆமோதித்தனர்.
அதன் பிறகு அவர்களின் உரையாடல்கள மும்முரமாய் சிலைக் கடத்தல் பற்றிய விவாதத்தில் மூழ்க அப்போது எழில்வாணன் இடையிட்டு, “எனக்கு விளங்கயில்ல… நம்ம நாட்டுச் சிலைகள் பொக்கிஷங்கள் இதையெல்லாம் கடத்துவதன் மூலம் அவர்களுக்கு அப்படி என்ன லாபம்?” என்று அவர் கேட்க,
“இதுல நிறைய வகை இருக்கு சகோ! சில நாட்டு ஆர்ட் கேலேரிக்கு இந்த மாதிரி ஆன்டிக் பொருட்களை வைச்சுக்கறது ஒருவித ப்ரைட்… அதுக்காக அவங்க…. பழமையான பொருட்களை அவங்க நாட்டு ஆர்ட் கேலரிக்கு தானம் பண்ற பெர்சனுக்கு வரி விலக்கெல்லாம் குடுக்கறாங்க… இதுக்காக வேண்டி பல பணக்காரங்க பழமையான பொருட்களைக் கடத்தி அது அவங்களுக்கு உரிமையானதுன்னு பொய் சொல்லி ஆர்ட் கேலரிக்கு இனாமா கொடுக்கறாங்க…
இன்னும் சில பணக்காரங்களுக்கு இந்த மாதிரி சிலைகளை வீட்டில வைச்சிருக்கறதுல… செல்வம் பெருகும் அப்படி இப்படின்னு சில மூட நம்பிக்கைகள்… கூடவே பணத்திமிரு… அதனால எவ்வளவு பணம் குடுத்தும் வாங்கலாம்ங்கிற எண்ணம்… இது ஒரு வகை …
இதுல இன்னொரு வகை இருக்கு …அதிகப்படியான இல்லீகல் பணமாற்றம் … அதாவது பல கோடி ரூபா கருப்புப் பணப் பரிவர்த்தனையை ஒரு சிலையை வைச்சு முடிக்கறது… நூறு கோடி பணமாற்றம்ன்னா நூறு கோடி மதிப்புள்ள ஒரு சிலையை அவங்க கொடுக்கல் வாங்கலுக்குப் பயன்படுத்திப்பாங்க… இப்படி நிறைய”
“நூறு கோடி ரூபாவா?” தேஜா வாயைப் பிளக்க,
ராமநாதன் சிரித்துக் கொண்டே, “தம்பி சொன்னது கம்மி… இன்னும் அதிகமா கூடப் போகும்” என்றார்.
“ஆமா… அந்த சிலையோட பழமையை வைச்சு விலையை நிர்ணயிக்கிறாங்க… ஆயிரம் வருஷம் பழமையான சிலைன்னா அதோட மதிப்பே தனி… பல மில்லயன் டாலர்ஸுக்கு ஏலம் எடுப்பாங்க சகோ”
“ஒ!’ என்று அங்கிருந்தவர்கள் வியப்பாக, சிம்மா மேலும்,
“சுருக்கமா சொல்லணும்னா இந்த சிலைக் கடத்தல் நம்ம அடிமைப்பட்டு கிடந்த போது அதிகாரப்பூர்வமா நடந்தது… இப்போ கொஞ்சம் மறைமுகமா நடக்குது… இன்னும் நடந்துக்கிட்டே இருக்கு… ஆரம்ப காலகட்டத்தில அறங்காவலர்கள்… இப்போ அறநிலைத்துறை… அவ்வளவுதான் மாற்றம்” என்று சொல்ல, “அப்படியெண்டால் இதைத் தடுக்க இந்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கயில்லையா?!” என்று எழில்வேந்தன் கேள்வி எழுப்பினர்.
“எடுத்தாங்க… ஐநா சபையில 1972ல உலக நாடுகளோட ஒரு உடன்படிக்கை செஞ்சாங்க… அதாவது 1972க்கு அப்புறம் நம்ம நாட்டில் இருந்து வெளியே போகிற பழமையான கலைப்பொருட்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அது கடத்தப்பட்டதுன்னு நம்ம ப்ரூவ் பண்ணிட்டா அது திரும்பவும் நம்ம நாட்டுக்கே எந்தவித அபராதமும் இல்லாமத் திருப்பிக் கொடுக்கப்படணும்… ஆனா இப்ப வரைக்கும் அந்த மாதிரி பெரியளவில எந்த சிலைகளும் மீட்கப்படல… ஏன்னா நமக்குதான் திருடு போனதே தெரியாதே…”
இராமநாதன் அப்போது சிம்மாவோடு சேர்ந்து, “அப்படியே தெரிஞ்சாலும் திருடு போன பொருள் எதுன்னே நமக்குத் தெரியாதே!” என்று சொல்லிக் கேலியாக சிரித்தார்.
“சார்! சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டாரு… ஆனா அது ரொம்பவும் வலியான உண்மை… கோவில்களில் போட்டோ எடுக்கக் கூடாதுங்கற ஒரு வழக்கத்தால எதுவும் சரியா ஆவணப்படுத்தப் படல… அதனால நிறைய சிலைகள் இருந்த தடமே தெரியாமப் போயிடுச்சு” என்றான் சிம்மா!
“அதெல்லாம் சரிதான் சகோ… இதுல நம்ம பண்ண என்ன இருக்கு… காவல்துறையும் அரசாங்கமும்தான் இதை சரி பண்ண நடவடிக்கை எடுக்கணும்”
“எப்ப்ப்ப்ப்படி எடுப்பாங்க பாருங்க” என்று அஜீஷ் எள்ளி நகையாட, “வேலியே பயிரை மேயும்போது நாம எப்படி வேலிய நம்பறது” என்று ராமநாதன் தன் கருத்தைத் தெரிவிக்க,
“சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுன்னு தமிழ் நாட்டுல இருக்கே!” என்று விஜயன் உரைக்க,
“இருக்கு… 1980 களில் தொடங்கி இப்ப வரைக்கும் பெரிய மாற்றமே இல்லாம இருக்கு” என்று சிம்மா சிரித்துக் கொண்டே சொல்ல எல்லோரின் முகமும் இப்போது கொஞ்சம் இறுக்கமாய் மாறியது.
“இதுல நாம என்ன செய்ய முடியும் சகோ!” என்று அஜீஷ் அழுத்தமாய் கேட்க,
“நம்ம என்ன செய்ய முடியும்!” என்று அவன் சொன்னதை மீண்டும் சொல்லி மெலிதாய் புன்னகைத்த சிம்மா இடைவெளிவிட்டு,
“ஒரு பேச்சுக்கு சொல்றேன்… இப்போ நம்ம வீட்டுக்கு ஒரு திருடன் வந்து கொள்ளை அடிச்சிட்டுப் போறான்… நாம உடனே போலீஸ் கிட்ட சொல்றோம்… போலீஸும் அவனைத் தேடுது… ஆனா கண்டுபிடிக்கல…
இப்போ அதே திருடன் நம்ம வீட்டுக்கேத் திரும்ப வந்து இன்னும் கொஞ்சம் பொருளைத் திருடிட்டு போயிட்டான்… திரும்பியும் நம்ம போலீஸ் கிட்ட சொல்றோம்… போலீஸும் அவனைத் தேடுது… ஹ்ம்ம் தேடுதுன்னு வைச்சுப்போம்…
இந்தத் தடவை அவன் வரப்போறது நமக்கு முன்னாடியே தெரிஞ்சு நாம போலீசுக்கு சொல்றோம்… அவங்களும் வராங்க… அவன் திருடிட்டுப் போன பிறகு… போலீஸ் திரும்பவும் அவனைத் தேடுது… தீவிரமா தேடுது… நம்புவோமே
ஆனா அவன் அப்பவும் மாட்டலை… அந்தத் திருடன் இப்ப திரும்பவும் நம்ம வீட்டுக்கே வர்றான்… மிச்சமிருக்க சொற்பமான பொருளையும் களவாடிட்டுப் போக… இப்ப நாம என்ன பண்ணனும்… போலீசுக்கு போன் பண்ணனுமா? இல்ல அந்தத் திருடன் கிட்ட நாமளே எல்லா பொருளையும் எடுத்துக் கொடுத்துப் போயிட்டு வாடா ராசான்னு வழி அனுப்பணுமா?”
சிம்மா அழுத்தமாய் ஒரு பார்வைப் பார்த்து அங்கிருத்த சகாக்களிடம் வினவினான். ஓர் அழமான மௌனம் அந்த அறையில் குடியேறியது.
இதேக் கேள்வியை என்னோட வாசகர்கள் கிட்ட நான் கேட்கறேன்… நம்ம இப்போ என்ன செய்யணும்???