imk-14

imk-14

15(௧௫)

பெண் சிலை

அந்த அறையில் நிலவிய மௌனத்தைக் கலைத்தான் அஜீஷ்!

“கண்டிப்பா நாம எதாச்சும் செய்யணும் சகோ!” தீர்க்கமாய் கோபமாய் துடித்து வெளிவந்தன அவன் வார்த்தைகள்!

விஜயன் அப்போது சந்தேகமாய், “எனக்கும் கோபம் கோபமா வருது… எதாச்சும் செய்யணும்னு துடிக்குது” என்று பொங்கினார்.

அப்போது எழில்வாணன், “நீங்கள் இவ்வளவுத் தெளிவாக பேசுறீங்கள் எனில்… உங்களுக்கு அந்தக் கடத்தல் கும்பலைப் பற்றி முன்னமே தெரிந்திருக்கு… சரிதானே?!” என்று கேட்க,

“அது தெரியாமலா நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன் சகோ!” என்றான் சிம்மா கம்பீரத்தோடு!

அப்போது ராமநாதன் தான் கொண்டு வந்த பையில் இருந்து ஒருப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்து, “இந்த ஆர்டிக்கிளைப் பாருங்க” என்று சொல்ல, அதனை மற்ற நால்வரும் ஆர்வமாய் பார்த்தனர்.

அது ஆஸ்ட்ரேலியன் மேகஸின்… சிலைக் கடத்தல் பற்றியும் அதில் தொடர்புடைய ஒரு முக்கிய செல்வந்தரைப் பற்றியும் எழுதியிருந்தது.

எழில்வாணன் தலையை நிமிர்த்தி, “சைத்தன்யா பட்டேல்… இவன் இங்கண்ட  பெரிய பிஸ்னஸ் மேன் ஆச்சே” என்று அவர் சொல்ல,

“அவனோட முக்கியமான பிஸ்னஸ் இந்த சிலைக் கடத்தல்தான்… இவனுக்கு அரசியல் செல்வாக்கு ஜாஸ்தி… அவ்வளவு சீக்கிரம் எந்த நாட்டு போலீஸும் இவன் மேல கை வைக்க முடியாது” என்று ராமநாதன் உரைத்தார்.

“இப்படிப் பட்ட ஒருத்தன் கிட்ட நாம எப்படி மோதி ஜெயிக்க முடியும்… அதுவும் உலகம் பூரா இவனோட கடத்தல் நெட்வொர்க் இருக்குன்னா…  நாம எப்படி சகோ இவனைத் தடுக்க முடியும்… இதென்ன சினிமாவா?!” என்று அவர் எதார்த்தத்தைப் பேச,

“உங்க பாயிண்ட் கரெக்ட்தான்… இது சினிமாவும் இல்ல… நாமெல்லாம் சினிமால வர்ற ஹீரோக்களும் இல்ல… அந்தக் கடத்தல் கும்பலை எல்லாம் வரிசையா கடத்திக் கொலை பண்ணி பஞ்ச் டைலாக் பேசுறதுக்கு… நாமளும் அப்படியெல்லாம் பண்ணப் போறதில்ல… பண்ணவும் முடியாது

சிம்பிளா… ஒரு டாகுமெண்டரி பண்ணப் போறேன்… அதாவது இந்தக் கடத்தல் கும்பலோட நெட்வொர்க்கை உலகத்துக்கு அறிமுகப்படுத்தப் போறோம்… ரகசியமா இவங்க நம்ம நாட்டில இருந்து  கடத்திட்டு வர்ற சிலைகளைப் பத்தின விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தப் போறோம்… அதாவது விளம்பரப்படுத்தப் போறோம்… கடத்தல் சிலைன்னு தெரிஞ்சா அதை யாரும் வாங்க மாட்டாங்க… அதன் மூலமா கடத்தல் சிலையை வாங்குற மார்க்கெட்டை  நாம உடைக்கலாம்…  அப்புறம் இந்தக் கடத்தல் சிலைகளை எங்க எப்படி ஏலம் விடறாங்கங்கற விவரத்தையும் நாம தெரிஞ்சுக்கணும்” என்றவன் சொல்லிக் கொண்டே,

“கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு… புரியாத மாதிரியும் இருக்கு” என்று தேஜா சொல்ல, “உன்னை இப்போ கேட்டாங்களா?!” என்று அஜீஷ் அவனை முறைத்தான். அங்கிருந்த எல்லோரும் சிரிக்கத் தொடங்கினர்.

ஆனால் ராமநாதன் யோசனைக்குறியோடு, “நீ சொல்ற மாதிரி செய்றதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்ல… அதுவும் சைத்தன்யாவைப் போலீஸ் நெருங்குறதே ரொம்பக் கஷ்டம்… இதுல அவன் கடத்தல் சிலையை எங்க… எப்படி வைச்சிருப்பான்… ஏலம் எல்லாம் எப்படி நடத்துவான்னு நாம எப்படிக் கண்டுபிடிச்சு… அதை நம்ம மக்களுக்குத் தெரியப்படுத்துறது” என்று சொல்ல,

“முடியுமா முடியாதான்னு நான் ஆராய்ச்சி பண்ணப் போறதில்ல… முயற்சி செய்யப் போறேன்… முயற்சி செய்யாமத் தோல்வியை ஒத்துக்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க… இதுல நிறைய ரிஸ்க் இருக்கு… அதனால நீங்கெல்லாம் எனக்கு நேரடியா உதவ வேணாம்… பின்னாடி இருந்து சில உதவிகள் செஞ்சா மட்டும் போதும்” என்று சிம்மா தீர்க்கமாக உரைத்தான்.

“கண்டிப்பா செய்வோம்!” என்று அங்கிருந்தவர்கள் ஒரு சேர உரைக்க,

சிம்மா எழில்வாணனிடம், “நீங்க இந்த நாட்டிலேயே வளர்ந்ததால எனக்கு சில இடங்களுக்குப் போக உங்க கைடன்ஸ் வேணும் சகோ!” என்றதும், “நிச்சயமா” என்றார் எழில்!

“அஜீஷ் தேஜா.. இந்தச் சின்ன வயசுல நீங்க சாப்ட்வேர் கம்பனில பெரிய போஸ்டிங்கல இருக்கீங்க… எனக்கு நீங்க சில டெக்னிகல் சப்போர்ட் பண்ணனும்” என்று சிம்மா சொல்ல, “சூப்பரா பண்ணிடலாம்” என்றனர்.

அடுத்ததாய் விஜயனிடம், “டாகுமெண்டரியை ரெடி பண்றதுல உங்க உதவி எனக்குத் தேவை” என்று முடிக்க ராமநாதன் வருத்தமாக, “என்ன சிம்மா! என்னை டீலில் விட்டுட்ட… என்ன… வயசாயிடிச்சுன்னு ஒதுக்கிட்டியா?” என்று கேட்டார்.

“என்ன சார்? உங்களுக்குதான் மெய்ன் டாஸ்கே… நீங்க சைத்தன்யா பத்தி நிறைய தெரிஞ்சு வைச்சிருக்கீங்க… அதனால நீங்களும் நானும் சேர்ந்துதான் அந்த சைத்தன்யாவோட ஆக்டிவிட்டீசைக் கண்காணிக்கப் போறோம்” என்று சிம்மா சொல்ல, “தமிழன் டா!” என்று சிம்மாவைப் பார்த்து உற்சாகமானார் ராமநாதன். எல்லோரும் அப்போது சத்தமாய் குரலையுயர்த்தி சிரித்தனர். அந்த அறையே அதிர்ந்து கொண்டிருக்க அப்போது ஒரு வெளிநாட்டுப் பெண்மணி கதவைத் தட்டி உள்ளே நுழைந்தாள்.

“சிம்மா! உங்க ஸ்பீச் ஓவர்ன்னா எல்லாரும் லஞ்ச் சாப்பிட வரலாமே” என்று அவள் தீந்தமிழில் சொல்லிவிட்டுச் செல்ல, “அதெல்லாம் வேண்டாமே” என்று விஜயன் முதலில் மறுக்க எல்லோருமே அடுத்தடுத்து மறுத்தனர்.

“நான் கேட்டதுக்காக வேண்டி முகம் கூடத் தெரியாத எனக்காக நீங்க எல்லாம் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க… உங்க எல்லாரையும் சாப்பிடாம அனுப்பறதா… அது நம்ம தமிழ் கலாச்சாரத்துக்கு அழகில்ல… விருந்தோம்பல்தானே நம்ம முதல் முக்கிய பண்பாடு… அதுவும் இல்லாம் ஜெஸ்ஸிகா சௌத் இந்தியன் டிஷஸ் செய்றதுல எக்ஸ்பெர்ட்… உங்க எல்லாருக்காகவும் ஸ்பெஷலா அவங்க நம்ம ஊர் சாப்பாடு செஞ்சிருக்காங்க” என்று சொல்ல, “அப்படின்னா கண்டிப்பா சாப்பிட்டுதான் போறோம்… டாட்” என்றான் அஜீஷ்!

மீண்டும் அங்கே சிரிப்பொலி எழ எல்லோரும் அந்த அறையைவிட்டு டைனிங் ஹால் நோக்கி விரைந்தனர்.

ஜெஸிக்காவும் அவள் உடனிருந்த பணியாளும் அவர்களுக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாற எல்லோரும் அந்த உணவுகளை ருசி பார்த்து ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளினர். ஜெஸிக்காவின் முகத்தில் அத்தனை மலர்ச்சி!

அப்போது சிம்மா அருகில் அமர்ந்திருந்த அஜீஷும் தேஜாவும் ஏதோ தங்களுக்குள்ளாக பேசி  விவாதம் செய்து ரகசியமாய் முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.

“என்னாச்சு அஜீஷ்?” என்று சிம்மா அவன் புறம் திரும்ப, “சார் ஒரு விஷயம் கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே” என்று தயங்க, “ஜெஸிக்கா யாரு? அதானே!” என்று கேட்டு இயல்பாய் புன்னகைத்தான்.

“அதேதான்… அழகா தமிழ் பேசுறாங்க… நம்ம ஊர் சாப்பாடுல வெளுத்து வாங்கி இருக்காங்க” என்றவன் வியப்புற,

“என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் நந்தக்குமாரோட மனைவி… ரெண்டு பேரும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க… நந்து அபீஸ் விஷயமா அட்லாண்டா போயிருக்கான்… அநேகமா  இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “என்ன சீக்ரட் டாக் உங்களுக்குள்ள” என்று கேட்டாள் ஜெஸிக்கா!

“உன்னோட அருமைப் பெருமையதான்  சொல்லிட்டு இருக்கேன் ஜெஸ்சி” என்று சிம்மா சிரித்துக் கொண்டே சொல்ல,

“ஒ! தென்… உன்னோட அருமைப் பெருமையை நான் சொல்லணும் இல்ல” என்று ஆரம்பித்தவள், “எனக்குப் பெருசா ரிலேடிவ்ஸ் இல்ல… நானும் நந்துவும் ஒரு அபீஸ்ல வொர்க் செஞ்சோம்… வீ கெட் இன்டூ லவ்… அன்ட் மேரேஜுக்கு நந்து ஃபேமலில யாருமே ஒத்துக்கவே இல்ல… சிம்மாதான் எங்களுக்காகப் பேசி அவங்களை எல்லாம் சம்மதிக்க வைச்சது” என்றாள். அவர்கள் எல்லோரும் சிம்மாவை மெச்சுதலாய் பார்த்தனர்.

பின்னர் அவர்களின் மதியஉணவு  திருப்திகரமாய் முடிந்தது.

ஜெஸிக்கா அவர்களிடம், “ஃபுட் உண்மையிலேயே நல்லா இருந்துச்சா?!” என்று  விசாரிக்க எல்லோருமே அவளைப் பாராட்டி பதிலுரைக் கொடுக்க அஜீஷ் அப்போது,

“சூப்பர்ங்க… அதுவும் உங்க தமிழ் அத விட சூப்பர்”   என்றான்.

“அதுக்கும் சிம்மாதான் காரணம்… மேரேஜ் ஆகி நானும் நந்துவும் சிம்மா வீட்டுக்குப் போயிருந்தோம்… அங்கே நான் பார்த்த தமிழ் ஹிஸ்டாரிக்கல் கலெக்ஷன்ஸ் எல்லாம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு… அப்புறம்தான் நான் தமிழ் பேசக் கத்துக்கிட்டேன்” என்று ஜெஸ்சி சிம்மாவைப்  பார்த்து பெருமிதமாய் சொல்ல, “ஜெஸ்சி போதும்… முடியல” என்றான் சிம்மா!

அஜீஷ் அப்போது சிம்மாவிடம், “ஒரு வெள்ளைகாரியைக் கூட நீங்க தமிழச்சியா மாத்திட்டீங்க சகோ… உண்மையிலேயே நீங்க செம்ம போங்க” என்று பாராட்டினான். அதன் பின் பேச்சு சிரிப்பு என்று நேரங்கள் கழிந்து போக இறுதியாய் அவர்களை வழியனுப்பும் தருவாயில் ஜெஸியின் கணவன்  நந்தக்குமாரும் வீட்டிற்கு வந்திருந்தான். ஒருவழியாய் அவர்கள் சந்திப்பு முடிவடைய எல்லோரும் புறப்பட்டனர்.

அந்த வீடு மீண்டும் நிசப்த நிலைக்கு மாற நந்தக்குமார் சிம்மாவிடம் அவன்  பயணம் குறித்தெல்லாம் விசாரித்துவிட்டு, “நீ என்கிட்ட இப்படி ஒரு உதவி கேட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… அஃப்கோர்ஸ் அதை நான் செய்யக் கடமைபட்டிருக்கேன்… ஆனா இதுல உனக்கு எதாச்சும் ஆபத்து வந்திருமோன்னு எனக்கு பயமா இருக்கு” என்று குரலைத் தாழ்த்தி கவலையோடு சொல்ல, “அச்சம் தவிர்… பாரதி செட்… நீங்க ப்ரோசீட் பண்ணுங்க சிம்மா… ஐம் தேர் வித் யு” என்று ஜெஸிக்கா தடாலடியாய் அவர்கள் உரையாடலுக்குள் இடைபுகுந்து உரைக்க சிம்மா வியப்பாய் அவளைப் பார்த்து விழிகள் அகற்றினான்.

ஆனால் நந்து கடுப்பாகி, “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சேல் அறிவார் தொழில்… திருவள்ளுவர் செட்… யு நோ” என்று ஜெஸிக்கா காதருகில் சத்தமாய் ஓத அவள் விலகிவந்தாள்.

“சிம்மா! வாட் இஸ் தி மீனிங்?” என்று கேட்க,

“பயப்பட வேண்டியதுக்கு… பயப்படாம இருக்கறது அறியாமை… உங்க வீட்டுக்காரர் திருக்குறள் சொல்றாராம்” என்றான்.

“ஒ!” என்று வியப்பான ஜெஸிக்கா, “சூன் ஐ ல் லேன் திருக்குறள் டூ” என்று சவாலாய் கணவனிடம் சொல்லிவிட்டு ஜெஸிக்கா அகன்றுவிட,

“என்னவோ… ஒன்னு ரெண்டு இருக்க மாதிரி இவ அசால்ட்டா சொல்லிட்டுப் போறா… அய்யய்யோ ஆர்வக் கோளாறுல இவகிட்ட போய் திருக்குறளைப் பத்தி சொல்லிட்டனே” என்று நந்து நொந்து கொள்ள, “ஏன் இப்போ சலிச்சிக்கற… திருக்குறள் படிக்கிறதுல என்னடா தப்பு?”  என்று கேட்டான் சிம்மா.

“என்ன தப்பா?  இவ பாரதியார் கவிதை படிக்கிறேன்னு… ரெண்டு மாசமா அந்த புக்கையே  கட்டிப்பிடிச்சிட்டு தூங்கினா… போதாக்குறைக்கு இது என்ன அது என்னன்னு என்னை இவ டௌட் கேட்டே கொல்லுவா… இவ தமிழ் பற்று முடியலடா சாமி… இவ கைக்கு திருக்குறள் புக் கிடைச்சிடவே கூடாது கடவுளே!” என்று நந்து தெய்வங்களை எல்லாம்  மனமுருகி வேண்ட,

“ஓவரா பேசாதே… ஜெஸிக்கா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீ குடுத்து வைச்சிருக்கணும்… வேற நாடு மொழி இனமா இருந்தும் நம்ம தமிழ் மேல இவ்வளவு பற்றோட இருக்கா” என்றான் சிம்மா!

“நான் பீலிங்க்ஸா பேசிட்டு இருக்கேன்… நீ பெருமை பட்டுட்டு இருக்கியாக்கும்… இதுகெல்லாம் காரணம் நீதான்டா” என்றவன் கோபம் கொள்ள,

“இதுல என்னடா பீலிங்க்ஸ் உனக்கு?” என்று முறைத்தான் சிம்மா!

“கல்யாணம் ஆனவன் கஷ்டமெல்லாம் உனக்கு இப்போ புரியாது… நீ ஓவரா தமிழ் பற்றோட இருக்க… பாரேன்! உன் பீலிங்க்ஸ் கொஞ்சம் கூடப் புரியாத தமிழே தெரியாத ஒரு பொண்ணா உனக்குக் கிடைக்கக் போறா” என்று நந்து சாபமிட, “கிடைக்கட்டுமே? நான் எதுக்கு இருக்கேன்… நான் சொல்லித் தருவேன்” என்று சிம்மா கெத்தாகச் சொல்ல,

“பெட் ரூம்ல கூட பாடம் எடுப்பியாடா… நீ சத்தியமா விளங்க மாட்ட” என்று சொல்ல, “அதெல்லாம் எனக்கு முப்பாலும் தெரியும்… நீ இப்போ போய் உன் பெண்பாலை பாரு… தப்பித்தவறி அவ முதல் பாலில் கை வைச்சிட்டா கடைசிப் பால் உனக்கு கஷ்டம்தான்” என்று சூட்சமமாய் சொல்லி சிம்மா சிரிக்க,

“என்னடா பால்… அது?” என்று நந்து குழப்பமாய் கூடவே அதிர்ச்சியாய் கேட்டான்.

“அதுக்குதான் அரைகுறையா படிக்கக் கூடாதுங்கிறது… தமிழ் முழுசா  கற்றவனுக்கு சகலமும் தெரியும்… காதல், களவு, கடவுள், அறிவியல், அரசியல், பொருளியல், உளவியல், கணிதவியல், வானியல்னு எல்லாம்… தமிழ் வெறும் மொழியில்லை… வாழ்வியல் முறை” என்று சிம்மா கம்பீரமாய் சொல்ல, “அய்யா சாமி… உன் காலை கொஞ்சம் காட்டுறா” என்று நந்து சரண்டராக, “பொழச்சுப் போ” என்று சொல்லிவிட்டு சிம்மா தனது அறைக்குள்சென்று விட்டான்.

அவன் உள்ளே நுழைந்ததும் ராமநாதன் சார் காட்டிய ஆஸ்திரேலியன் மேகஸின் அவன் கண்ணில் பட்டது. அதன் மேல் சிலைக்கடத்தல் பற்றிப் போட்டிருந்த அதேநேரம் அதன் மேல்படத்தில் ஒரு அழகிய பெண் சிலை வளைவாய் பெண்மையின் அஷ்ட இலட்சணங்களையும் ஒருங்கே பெற்றிருந்தது. அந்த செப்புச் சிலையின் நுணுக்கமான முக அமைப்பை வைத்தே அது சோழகால சிற்பியின் கைவண்ணம் என்பதைப் புரிந்து கொண்டான்.

வளைந்த நேர்த்தியான புருவங்கள்… கூரான நாசி… மெல்லிய கோடாய் இதழ்விரியா ஓர் தெய்வீகப் புன்னகை… கிரீடம் கோபுரமாய் அவள் தலையை அலங்கரிக்க… மல்லிகைச் சரம் தோளில் தவழந்த விதம் அவனை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது… இப்படியும் முடியுமா?

அந்த சோழர் கால சிற்பியின் கலையுணர்வைக் கண்டு சிலாகித்தவன் வேகமாய் ஒரு வெள்ளைத் தாளையும் பென்சிலையும் கையிலேந்தி அவன் வியந்த அழகியை வரையத் தொடங்கியிருந்தான்.

ரசித்து ரசித்து அந்த வெள்ளைத் தாளில் அவன் உருவம் கொடுக்க அந்தி சாய்ந்து இரவு வந்தது கூட அவன் மூளைக்கு எட்டவில்லை. அந்த சிலையின் நுண்ணிய வேலைப்பாடுகளை கூட அவன் பார்த்துப் பார்த்து தன் ஓவியத்தில் வரைந்து கொண்டிருந்தான்… என்று சொல்லிவிட முடியாது… செதுக்கிக் கொண்டிருந்தான். மூச்சுவிடவும் மறந்தானோ என்றளவுக்கு அவன் அந்த ஓவியத்தில் மூழ்கி இருக்க, கதவு தட்டும் ஓசை அவனை இவ்வுலகிற்கு வலுக்கட்டாயமாக இழுத்துவந்தது.

பெருமூச்செறிந்து அவன் கதவைத் திறக்க ஜெஸிக்கா நின்றிருந்தாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க சிம்மா நீ? சீ… வாட்ஸ் த டைம் நவ்? டின்னர் சாப்பிட வா” என்று அவள் உரிமையாய் அழைக்க, “ப்ளீஸ் ஜெஸ்சி… அப்புறம் வரேன்” என்று மறுத்துவிட்டு அந்த ஓவியத்தை முடிப்பதில் அவன் மும்முரமாய் இருக்க, “அப்படி என்ன பண்ணிட்டு இருக்க” என்று ஜெஸிக்கா எட்டிப் பார்த்த நொடி அந்த ஓவியம் அவள் கண்ணில் பட்டது.

“எக்ஸலன்ட் மேன்” என்ற அவள் வியப்பாய் அந்த ஓவியத்தைப் புகழ,

“நான் எதுவுமே புதுசா செய்யல… இதைப் பார்த்துதான் வரைஞ்சேன்” என்று அந்த மேகஸினை சிம்மா அவளிடம் காட்ட இரண்டையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு வியப்பு அதிகரித்தது.

“இந்த போட்டோவை விட இந்த ஓவியம் லைவ்லியா ரியலிஸ்டிக்கா இருக்கு “

“அதெப்படி ஜெஸ்சி?!” என்றவன் நம்பாமல் சிரிக்க,

“சீ த ஐஸ்… இட்ஸ் சோ ரியல்!!” என்றவள் வியப்புக் குறையாமல் அந்த ஓவியத்தை விழி எடுக்காமல் பார்த்தபடி அவள் சொல்ல அவனும் அதைக் கவனித்தான். கண்கள்தான் ஒரு ஓவியத்திற்கு உயிர்… அப்படிப் பார்த்தால் அந்தச் சிலையை விட இவன் ஓவியத்தில் கருவிழிகள் அத்தனை உயிர்ப்பாய்  இருந்தன. அதுதான் ஜெஸிக்காவை வியப்பில் ஆழ்த்தியது.

அவனுமே கூட இப்போதுதான் அதனைக் கூர்ந்து கவனித்தான். ஓவியத்தைத் தாண்டி அதில் உயிரும் உருவமுமாய் இருந்த பெண்ணை! அது… அவளாகத் தெரிந்தது. மதியழகியாக! அதிர்ந்து போனான்.

 

 

error: Content is protected !!