mu-21

mu-21

சூர்யா

சூர்யா மதியிடம் பேசி முடித்தப் பின் அவர்கள் பயணம் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை வரைக்கும் நீண்டது. அங்கிருந்து அலெக்ஸ் மட்டும் மும்பைக்குப் புறப்பட்டான். அவன் எந்த உண்மையையும் உளறிவிடக் கூடாதென தான் சொன்ன பொய்யையே அப்படியே சொல்லச் சொன்னாள். அவன் ஏன் என்று காரணம் கேட்டதற்கு இன்னும் சில முக்கியமான விஷயங்களை சேகரித்தப் பின் தானே அவந்திகா மேடமிடம் முழுவதுமாய் எல்லாவற்றையும் சொல்வதாகச் சொல்லி அவனை சமாளித்து அனுப்பி வைத்தாள்.

சூர்யா வளர்ந்ததும் அவளின் வசிப்பிடமும் மும்பைதான் எனினும் அவள் பிறந்த இடம் சென்னைதான். இன்று அவள் சென்னையில் தங்குவதற்காக அவள் தன் தாய் சந்தியாவும் சகோதிரி ரம்யாவும் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

அந்த வீட்டின் விசாலமான முகப்பு அறையில் பல பெண் பிள்ளைகள் நாட்டியம் பயின்று கொண்டிருக்க சந்தியா அவர்கள் முன்பு அமர்ந்தபடி ஜதி சொல்லிக் கொண்டிருந்தார். சந்தியாவின் அபிநயமாய் அசையும் விழிகளும் அவர்களோடு சேர்ந்து நாட்டியமாடிக் கொண்டிருக்க

உள்ளே அனுமதியின்றி நுழைந்த சூர்யா அந்த நாட்டியமாடும் பெண்களைப் பார்த்து, “ஹாய் கேர்ல்ஸ்!!” என்று உற்சாகமாய் விளித்து அந்தப் பெண்களின் கவனத்தைச் சிதறடித்தாள். அவர்கள் ஒரு சேர சூர்யாவைப் திரும்பிப் பார்த்தனர்.

எல்லோரின் முகமும் பிரகாசமடைய சந்தியாவின் கண்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டது. எழுந்து வந்து மகளை ஆரத்தழுவிக் கொள்ள ஆவல் எனினும் அவர்களின் நடனப்பயிற்சியை பாதியில் விட்டு எழுந்திருக்காமல் அங்கே நடனமாடிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்னை தன் சார்பாய் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு எழுந்துக் கொண்டார்.

சந்தியா தன் மகளை அணைத்துத் தலையை வருட, “ஒரே ஸ்வெட்டா இருக்கு மா… ப்ரஷாயிட்டு வந்திடறேனே” என்று சூர்யா விலகிக் கொள்ளப் பார்த்தாள். என்றாவது ஒரு நாள் ஆபூர்வமாய் வரும் தன் மகளைத் தழுவிக் கொள்ள இந்த காரணங்கள் எல்லாம் அவர் அன்பிற்குத் தடை விதித்துவிட முடியாது.

“ரொம்ப தூரம் ட்ரேவல் பண்ணி வந்ததுல டையர்டா இருக்கேன் மா” என்றாள்.

“ப்ளைட்டிலதானே சூர்யா வந்த” என்று சந்தியா கேள்வி எழுப்ப,

“இல்லமா… கார்ல… ” என்றாள்.

“கார்லயா?!” என்று அவர் அதிர்ச்சியுற “மா அது வேற மேட்டர்… நான் டீடைல்லா அப்புறம் சொல்றேனே… ” என்றாள்.

“சரி நீ போய் குளிச்சிட்டு வா… நான் டிபன் ரெடி பண்ணி வைக்கறேன்” என்றார்.

“ம்ம்ம்…” என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தவள், “ரம்யா இன்னும் வரலயா?!” என்று குரலை உயர்த்தி கேட்டாள்.

“இன்னும் வரல சூர்யா… பட் வர்ற நேரம்தான்” என்று சந்தியா பதிலுரைக்க அதனைக் காதில் வாங்கியவள், தன் தொலைதூரப் பயணத்தின் களைப்பிலிருந்து மீளக் குளியலறைக்குள் நுழைந்தாள்.

திடீரென்று எந்தத் தகவலுமின்றி சூர்யா வந்திருக்க அதனால் உண்டான ஆச்சர்யத்தின் மிகுதியால் சந்தியா செய்வதறியாது திகைத்திருந்தாள். இத்தனை அளவில்லா திகைப்புக்குக் காரணம் சந்தியாவும் அவளின் கணவன் சுந்தரும் பிரிந்து இருபது வருடங்களுக்கு மேலானது. மூத்த மகள் ரம்யா தாயின் பராமரிப்பில் வளர, செல்ல மகள் சூர்யா சுந்தரின் கவனிப்பில் இருந்தாள்.

சுந்தருக்குப் பணம் ஈட்டுவதும் ஈஷ்வர் குடும்பத்தின் விசுவாசியாகவே இருப்பதுமே பிரதானமான ஒன்று. ஆனால் சந்தியாவிற்கு நடனம்தான் உயிருக்கு மேலான ஒன்று. இருவருமே முற்றிலும் ஒத்துப்போகாதத் துருவங்களாய் இருந்தனர்.

எப்படியோ சில காலங்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை சுமூகமாக நடத்தினாலும் ஒரு சூழ்நிலையில் இருவருமே அவரவர்கள் விருப்பங்களை நிராகரிக்கத் தொடங்கினர். இருவரும் ஒருவருக்காக மற்றொருவர் தங்கள் விருப்பத்தை விட்டுக் கொடுக்கத் துணியாத போது அவர்கள் இருவரும் ஒரு சேர விட்டுக்கொடுத்தது திருமணம் என்ற பந்தத்தை.

அந்தத் தருணத்தில் தன் செல்ல மகள் சூர்யாவை விட்டுக் கொடுக்க மனமின்றி பிடிவாதமாய் சுந்தர் மும்பையிலேயே இருந்துவிட்டார். சந்தியா வேறுவழியின்றி ரம்யாவுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டார். இவர்களின் இந்த முடிவின் விளைவாய் ரம்யாவும் சூர்யாவும் சகோதரத்துவ உணர்வை  அனுபவிக்க முடியாமலே போனது.

சூர்யாவிற்கு மும்பை வாழ்க்கையும் தந்தையின் கவனிப்பும் முற்றிலும் இயந்திரத்தனமானதாகவே இருந்தது. சுந்தரோ சௌந்தராஜனுக்கு வலது கரமாய் திகழ்ந்து அவரின் இறப்பிற்கு பின்னர் அவந்திகாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். இதை எல்லாம் விட முக்கியம் அவர் அங்கே ஊழியம் செய்வது இன்று நேற்றல்ல. அவர்களின் முன்னோர்கள் வழிவழியாய் மகாதேவனின் அரசக்குடும்பத்தினருக்கு தொடர்ச்சியாய் விசுவாசிகளாய் பணியாற்றி வந்திருந்தனர்.

சந்தியாவின் கவனிப்பில் இருந்த ரம்யாவிற்குப் பெருமளவில் வசதி கிடைக்காது போனாலும் அம்மாவின் அரவணைப்பும் உறவுகளும் துணையாய் இருந்தனர். ஆனால் சூர்யாவின் உலகம் வேறு. சுந்தர் வேலையிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க சூர்யாவோ தனிமையின் பிடியில் வளர்க்கப்பட்டாள்.

யாரும் பரிதாபப்பட வேண்டிய அளவு தனிமைக்குள் சிக்கிக் கொண்டவள் அல்ல. முதலில் அந்தத் தனிமை அவளுக்கு வேதனை அளித்தாலும் பின்னர் அவள் அதன் மூலம் பெற்றது அளவில்லா சுதந்திரத்தை.

சூர்யாவைக் கேள்வி கேட்பாரென்று ஒருவரும் கிடையாது. தடைகள் கிடையாது. எல்லையில்லா பரந்து விரிந்த வானையே தன் வசப்படுத்திப் பறக்கும் சுதந்திரப் பறவை. யார் சொல்வதையும் கேட்கக் கூடாதென்ற திமிர், தான்தான் எல்லாம் என்ற கர்வம், நினைத்ததை செய்துவிடும் துணிவும், ஆசைப்பட்டதைப் பெற்றுவிட வேண்டும் என்ற பிடிவாதம்,இவையெல்லாம் கடந்து நினைத்ததை எல்லாம் தேடித் தேடிக் கற்றதினால் விளைந்த புத்திக்கூர்மை என சூர்யா எத்தகைய கலவை என்று விவரிக்கலாகாது.

எப்போது எத்தகைய நேரத்தில் எத்தகைய குணாதிசயம் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை அவளே தீர்மானிப்பாள்.

சுந்தர் அவளுக்கு அறிவுரை சொன்னதுமில்லை. அப்படியே சொன்னாலும் அதை அவள் கேட்பவளும் இல்லை.

கல்லூரி படிக்கும் போதுதான் சுந்தரிடம் சண்டைப் பிடித்துவிட்டு அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தாள். அதிலிருந்து அவ்வப்போது சென்னைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களை வந்து பார்த்துவிட்டுப் போவாள்.

சூர்யா யாரேனும் ஒருவரின் வார்த்தைக்கு மதிப்பளிப்பாள் எனில் அது அவந்திகாவிற்கு மட்டும்தான். அவரின் ஆளுமைத் திறனும் புத்திக்கூர்மையும் சூர்யாவைப் பிரமிக்க வைத்தது. அவரையே தன் முன்னோடியாய் கொண்டிருந்தாள். ஆதலாலேயே அவந்திகாவிடமே அவளின் விருப்பம் போல் பணியில் சேர்ந்தாள்.

சூர்யா வேலைக்கு சேர்ந்து சில மாதங்களில் அவந்திகாவின் காரியதரிசி என்பதைத் தாண்டி அவளின் சகலமுமாக மாறியிருந்தாள். சூர்யா சுந்தரையும் விட ஒரு படி மேலாக அவந்திகாவின் நம்பிக்கைக்குரியவளாகத் திகழ்ந்தாள். ஆனால் சூர்யா இத்தனை அருகாமையில் இருந்தும் ஈஷ்வர் அவளை சந்திக்காமலே இருந்ததெல்லாம் விதியின் செயலோ அல்லது வினையின் பயனோ.

ஆனால் சூர்யாவை ஈஷ்வர் நேரில் பார்க்கவில்லையேத் தவிர ஈஷ்வரை சூர்யா பலமுறைப் பார்த்திருக்கிறாள். அவனைப் பற்றியும் அவனின் குணாதிசயங்கள் பற்றியும் நிறைய அறிந்து வைத்திருந்தாள். ஆனால் ஏனோ எல்லோரையும் வசீகரிக்கும் அவனின் கம்பீரமான தோற்றம் அவளுக்கு இனம்புரியாத வெறுப்பையே உண்டாக்கியிருந்தது.

ஆதலாலேயே அவன் கண்முன்னே வருவதில் அவளுக்கு விருப்பமில்லை. அப்படி ஒரு சூழல் உண்டானாலும் அவள் அதை வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டிருந்தாள். அவளின் தந்தை சுந்தர் அவனை வாய் ஓயாமல் புகழ்ந்து பேச அதுவும் அவளுக்குள் கோபத்தை சுரந்த காரணத்தை இதுவரை அவள் ஏனென்று அறிந்திருக்கவில்லை. மொத்தத்தில் ஈஷ்வரின் பார்வை அவள் மீது பதிவதற்கு முன்னதாக அவளின் முழுமையான வெறுப்பை அவன் பெற்றிருந்தான்.

சூர்யா குளியளறையில் இருந்து தலைத்துவட்டியபடி கண்ணாடி முன்னாடி வந்து நின்றாள். அப்போது தெரிந்த பிம்பம் அவளுக்குள் அளவில்லாக் கோபத்தை ஏற்படுத்தியது. அவள் அப்படி கண்ணாடியில் பார்த்துக் கோபம் கொண்டது அவளின் பிம்பத்தைப் பார்த்தல்ல. அது அபிமன்யுவின் வெறுப்பை உதிர்த்த முகம்.

அவள் கோபத்தோடு, “எப்படி நீ என்னைப் பார்த்து அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லலாம். பொய்யே உருவானவளா நான்… பணத்துக்காக என்ன வேணா செய்ற மாதிரியான கேரக்டர் மாதிரி தெரியிறேனாடா உனக்கு. போயும் போயும் உன்னைப் பார்த்து இம்பிரஸ் ஆனேனேன்னு சொல்ற… உன்னை யாருடா என்னைப் பார்த்து இம்பிரஸாக சொன்னது. நான் சொன்னேனா. கொஞ்சங் கூட யோசிக்காம நமக்குள் கணவன் மனைவி ரிலேஷன்ஷிப் இருக்கற மாதிரி தோணுதுன்னு சொல்லுற… உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல… உனக்கு எனக்கும் ரிலேஷன்ஷிப்பா… இந்த ஜென்மத்துல இல்ல… எந்த ஜென்மத்துலயும் வொர்க் அவுட் ஆகாது… அன்னைக்கு உன் டைம் நல்லா இருந்துச்சு… தப்பிச்சிட்ட…..

நீ சொன்ன மாதிரி நான் உன் கண் முன்னாடி வராம இருக்கறது உனக்கு நல்லது… அப்படி நீ தப்பித்தவறி என் கண் முன்னாடி வந்துட்ட… அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில நீ ரொம்ப ரொம்ப வருத்தபடுவ… ஏன்டா இவளை சந்திச்சோம்னு கிடந்துத் தவிக்கிற மாதிரி பண்ணிடுவேன்… ஐ மீன் இட் மிஸ்டர். அபி” என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்துவிட்ட போதும் அவள் மனம் நிம்மதி அடையவில்லை.

தன்னை இந்தளவுக்கு அவமானப்படுத்திய ஒருவனை ஒன்றுமே செய்ய முடியாமல் போனதே என்ற இயலாமை அவளை வருத்திக் கொண்டிருந்தது. அவன் தன் கண் முன்னாடி வந்துவிடாமல் இருப்பது நலம் என சொன்னவை எல்லாம் வெறும் வார்த்தையளவில்தான். நேரில் மீண்டும் அவனை சந்தித்து இந்தக் கோபத்தை எப்படியாவது அவனிடம் காட்டிவிட வேண்டும் என அவனைக் காயப்படுத்தும் அந்த ஒரு தருணத்திற்காக அவள் காத்துக்கிடந்தாள்.

ஆனால் சூர்யா காயப்படுத்தும் முன்னரே அத்தகைய நிலையை அபிமன்யு எதிர்கொண்டிருந்தான். ஏன்டா இவளை தான் சந்தித்தேன் என இப்போதே வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தான்.

சூர்யா சென்றதிலிருந்து அவளைத் தவிர்த்து அவன் மனம் வேறெதையும் சிந்திக்கவில்லை. ஈஷ்வரின் உளவாளியாய் நிச்சயம் யாராவது ஒருவர் தன்னைத் தேடி வருவர் என அவன் யூகித்து வைத்திருந்தான். ஆனால் சூர்யாவின் முகம் அத்தகைய சந்தேகத்திற்கு அப்பாற்பட்டிருந்தது. அவற்றை எல்லாம் தாண்டி அவன் மனம் அவளை நேசிக்க ஆரம்பித்துவிட, இறுதியில் சூர்யாவின் டீ7 பற்றிய ஒற்றைக்் கேள்வி மொத்தமாய் அவன் நம்பிக்கையைகர்த்தெறிந்தது.

அவள் ஈஷ்வரின் உளவாளி எனில் அவளுக்கும் கொங்ககிரி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் சம்பந்தம் இருக்கும் என்ற எண்ணத்தை தாங்கிக் கொள்ள இயலாமலே அவன் அவளை வார்த்தைகளால் தாக்கினான்.

எந்தப் பெண்ணின் மீதும் இதுவரையிலும் மையல் கொள்ளாத அவன் மனம் போயும் போயும் இப்படி ஒரு பெண்ணின் மீதா ஈர்க்கப்பட வேண்டும் என எண்ணம் ஏற்பட… அவன் யாரைத்தான் இந்த விஷயத்தில் கடிந்து கொள்வது.

முதல்முறையாய் அபிமன்யு தன் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தான். பாம்பின் கடியால் உடலில் விஷம் பாய்ந்த போது கூட அதனை சர்வசாதாரணமாய் எதிர்கொண்ட அபிமன்யுவிற்கு சூர்யா விளைவித்த ஏமாற்றத்தை சமாளிக்க முடியாததன் காரணத்தை அறிய முடியவில்லை.

அபிமன்யுவின் மனமெல்லாம் சூர்யாவைப் பற்றிய நினைவில் இருந்து மீளமுடியாமல் தவிக்க, சூர்யாவோ அவனின் மீது ஏற்பட்ட ஈர்ப்பை ஒதுக்கி வைத்துவிட்டு வெறுப்பை அழுத்தமாய் பதிய வைத்துக் கொண்டிருந்தாள்.

அந்தச் சமயத்தில் அறைக்குள் நுழைந்த ரம்யா தங்கையைப் பார்த்துப் புன்னகை ததும்பிய முகத்தோடு, “சூர்யா” என்று அழைக்க

“ஏ ரம்யா!” என்று சொல்லி உற்சாகமாய் தன் சகோதரியை கட்டியணைத்துக் கொண்டாள்.

இரு சகோதரிகளும் அன்பை பரிமாறியப் பின் ரம்யா சூர்யாவினை நோக்கி, “கண்ணாடி முன்னாடி நின்னு பேசுறது… என்னடி பழக்கம்?” என்று வினவினாள்.

தான் பேசியயதை எல்லாம் கேட்டிருப்பாளோ என்று யோசித்தவள் பின் தனக்குள்ளேயே’இருக்காது’ என்று எண்ணிக் கொண்டு,

“சின்ன வயசுல இருந்து அது எனக்கு அப்படியே பழகிடுச்சு… தனியாவே இருந்து பழகிட்டேன் இல்ல… அப்பாவுக்கும் எப்பவும் வேலை… என் சந்தோஷம் துக்கம் கோபம் எல்லாத்தையும் நான் யார் கூடயாச்சும் ஷேர் பண்ணிக்கனும்… ஸோ ஐ டாக் டூ மை செல்ஃப்… நான்தான் எனக்கு பெஸட் ஃப்ரெண்ட்” என்று சொல்லியபடிப் படுக்கையில் அமர்ந்து கொண்டுப் புன்னகைத்தாள்.

சூர்யா இயல்பாகவே பேசினாலும் ரம்யாவிற்குதான் அவளின் பதிலைக் கேட்டுக் கண்ணீர் துளிர்த்தது. தன் தந்தை சூர்யாவை அழைத்துக் கொண்டு பிரிந்த சென்ற பிறகு அவர்கள் வாழ்வில் சில இன்னல்கள் வந்தாலும் வாழ்க்கையின் அனுபவம் அத்தனை மோசமானதாக இல்லை.

சுற்றிலும் உறவுகளின் துணை ஓரளவுக்கு இயல்பான வாழ்வை மீட்டுக் கொடுக்க, எப்போதும் ஒலிக்கும் நாட்டியச் சத்தம், அங்கே கற்றுக் கொள்ள வரும் பெண்கள் என அந்த வீடு அப்பா இல்லாத குறையைத் தவிர்த்து அழகாகவே இருந்தது. ஆனால் சூர்யாவுக்குக் கிடைத்தது வசதி வாய்ப்போடு தனிமையின் கொடுமை என்பதை உணர்ந்த ரம்யா அந்த வருத்தத்தில் மூழ்கிவிட,

“ஏ… ரம்யா! என்னாச்சு? ” என்று சூர்யா வினவினாள்.

“நத்திங்…” என்று தலைகவிழ்ந்தவள் மீண்டும் சூர்யாவை நோக்கியபடி,  “சரி… நீ எங்களைப் பார்க்க வந்தியா இல்ல ஏதாச்சும் வேலை விஷயமா வந்தியா?” என்று வினவினாள்.

“உண்மையைச் சொல்லணும்னா… வேலையாதான் வந்தேன் ரம்யா… அதான் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம்னு”

“நினைச்சேன்… எங்களைப் பார்க்கணும்னு நீ அப்படியே வந்துட்டாலும்”

“இல்ல ரம்யா” என்று ஏதோ சொல்லி சமாளிக்க வாயெடுத்தவளை ரம்யா இடைமறித்து,

“நீயாச்சும் எப்படியோ வேலை விஷயமாவாவது அப்பப்ப வர்ற… ஆனா அப்பாவுக்கு எங்களைப் பார்க்கணும்னு தோணவே மாட்டேங்குது இல்ல… அம்மா மேலதான் கோபம்… ஆனா நான் என்னடி பண்ணேன்” என்று  ரம்யா அவள் வேதனையையும் வலியையும் வார்த்தைகளாக வெளிக்கொணர, சூர்யா அவள் தோளில் கைவைத்தபடி,

“ரம்யா… ரிலேக்ஸ்… மிஸ்டர். சுந்தருக்கு எப்பவும் வொர்க்… வொர்க்… வொர்க்… பேஃம்லி எல்லாம் அவரோட லிஸ்ட்ல இரண்டாம் பட்சம் கூட கிடையாது…

நீ உன்னைப் பார்க்க வரலயேன்னு பீஃல் பண்ற… ஆனா அவர் பக்கத்திலேயே இருக்குற என்னையே  பார்க்க வர்றதில்லங்கிறதுதான் கொடுமையே… இதுதான் பேஃக்ட்… இதுதான் நம்ம பேஃட்… நாம இதை அக்ஸெப்ட் பண்ணிக்கிட்டுதான் ஆகணும்” என்று தோளைக் குலுக்கி இயல்பாகவே உரைத்தாள். ஏனெனில் அது அவளுக்கு ரொம்பவும் பழக்கப்பட்டுப்போனது.

ரம்யா வருத்தத்தோடு, “அப்போ இதுதான் பேஃட் இல்ல… அப்போ அம்மாவும் அப்பாவும் எப்பவுமே மீட் பண்ணிக்கவே மாட்டாங்களா… இரண்டுப் பேரையும் ஒண்ணா சேர்ந்த மாதிரி நாம பார்க்கவே முடியாதா சூர்யா? ” என்று மனதில் தேக்கி வைத்திருந்த ஆதங்கத்தை கேள்வியாய் கேட்க,

“முடியாது ன்னு எதுவுமே இல்ல… அவங்க இரண்டு பேரையும் மீட் பண்ண வைக்க எனக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு… ஆனா… அதுக்கு நீ கொஞ்சம் ஒத்துழைக்கணும்”  என்று சொல்லி சூர்யா தன் சகோதரியைக் கூர்மையாய் பார்த்தாள்.

“அவங்க இரண்டு பேரையும் நீ மீட் பண்ண வைக்கிறன்னா… நான் என்ன வேணா பன்றேன் சூர்யா” என்றாள் ரம்யா ஆர்வமாக!

“குட்… அப்போ மேரேஜ் பண்ணிக்கோ” என்று சூர்யா பளிச்சென்று உரைத்துவிட்டு ரம்யாவைப் பார்த்துக் கண்ணடிக்க , “இதைதான்  ஐடியான்னு சொன்னியா… விளங்கிடும்” என்று ரம்யா சலித்துக் கொண்டாள்.

“ஏன்மா… என் ஐடியாவுக்கு என்ன குறைச்சல்… உனக்குதான் டாக்டர். அர்ஜுன் ரெடியா இருக்காரே… அப்புறம் என்ன?” என்று கேட்க,

“போ சூர்யா… நீ வேற வெறுப்பேத்தாதே… டாக்டர். அர்ஜுனுக்கு சதா சர்வகாலமும் பேஷன்ட்ஸ்தான்… வேற எதைப் பத்தியும் அவருக்கு சிந்தனை கிடையாது… இதுல மேரேஜ், லவ்… எதுவும் பாஸிபிள்னு எனக்குத் தோணல” என்று பெருமூச்சுவிட்டவளைப் பார்த்து சூர்யா குலுங்கிக் குலுங்கி சிரித்திவிட்டு,

“வெரி பேத்தெட்டிக் சிட்சுவேஷன்… நீ பேசாம டாக்டரா இல்லாம பேஷண்டா இருந்திருக்கணும்… அப்போ உன்னை அவரு நல்லா கவனிச்சிருப்பாரு… ட்ரீட்மென்ட்டுங்கிற  பேர்ல அப்படி இப்படின்னு ஏதாச்சும் ரொமென்ஸ் நடந்திருக்கும்… நீ மிஸ் பண்ணிட்ட” என்றாள்.

ரம்யா கடுப்போடு, “உனக்கு என் வேதனை கிண்டலா இருக்கா… நீ எவனாயாச்சும் காதலிச்சு அவனுக்காக ஏங்கி ஏங்கித் தவிக்கும் போதுதான்  என் வேதனை உனக்குப் புரியும்” என்றாள்.

சூர்யா இன்னும் அதிகமாய் சிரித்தபடி, “அப்படி ஒண்ணும் புரியவே வேண்டாம் சாமி… காதல்னு ஒண்ணு பண்ணிட்டு காலம் பூரா கண்ணீர் வடிக்க நான் தயாராயில்லை” என்றாள்.

“அப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லயா உனக்கு?” என்று ரம்யா சந்தேகமாய் கேட்டாள்.

சூர்யா இயல்பான புன்னகையோடு, “ஏன் இல்லாம ?… இருக்கே… அது என்னோட பெரிய ட்ரீம்”

“ட்ரீமா?” என்று வியப்போடு ரம்யா பார்த்தாள்.

“பின்ன… மேரேஜங்கறது என்ன சாதாரணமான விஷயமா ?… என் கல்யாணம் எல்லாரும் பிரமிக்கிற மாதிரி பிரமாண்டமா நடக்கணும்… ஆடம்பரமா… வேற லெவலில்…  கரெக்டா சொல்லணும்னா… ஒரு பிரின்ஸஸோட மேரேஜ் மாதிரி” என்று தன் மனதில் உள்ள கற்பனையை விவரித்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ நீ ஒரு ப்ரின்ஸைதான் கல்யாணம் பண்ணிக்கனும் ? ”

“ஒய் நாட்… ஏன் எனக்கு அந்தத் தகுதி இல்லையா என்ன… ஆனா அவன் ப்ரின்ஸ்ங்கறதுக்காக எல்லாம் நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… அந்த பர்ஸன் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏத்துக்கறவனா இருக்கணும்…

உண்மையா என்னை மட்டுமே நேசிக்கிறவனா… எனக்காக எதையும் செய்யத் துணியிறவனா… முக்கியமா எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்காதவனா இருக்கணும்… அப்பதான் அவனை நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றாள்.

“உன்னை நேசிக்கிறவனா இருக்கணும் ஒகே… ஆனா உன் மனசுக்குப் பிடிச்சவன்னு சொல்லவே இல்லயே” என்று ரம்யா அவள் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டாள்.

“ஆப்வ்யஸ்லி… நான் சொன்ன மாதிரி இருந்தாலே அவன் என் மனசுக்குப் பிடிச்சவனாதான் இருப்பான்” என்றாள்.

“நீ எதிர்பார்த்த மாதிரி ஒருத்தன் உனக்குக் கிடைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம்… அட் தி சேம் டைம்…  அப்படியே உன் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறதும் நாட் பாஸ்பிள்… ஸோ கொஞ்சம் காம்பிரமைஸும் பண்ணிக்கனும்” என்று வேடிக்கையாக ரம்யா சொல்ல, இத்தனை நேரம் சூர்யா முகத்திலிருந்த புன்னகை மறைந்தது.

அவள் இறுக்கமான முகத்தோடு, “நோ ரம்யா… நான் என்ன நினைச்சனோ எப்படி நினைச்சனோ… அது அப்படிதான் நடக்கணும்… அப்படிதான் நடக்கும்… காம்பிரமைஸ்ங்கிற வார்த்தைக்கே இடமில்லை” என்று  தீர்க்கமாய் உரைத்தாள். அதுவும் காம்பிரமைஸ்ங்கிற வார்த்தை அவளைக் கோபப்படுத்த சூர்யா அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

‘இதுக்குப் போய் ஏன் கோபப்படுறா?’என்று ரம்யா யோசிக்க அவளுக்கு  ஒரு விஷயம்   நன்றாய் விளங்கிற்று. சூர்யா தன் கனவைத் துளியளவும் விட்டுக் கொடுக்கத் தயாராகயில்லை. அதே நேரத்தில் சூர்யா சொன்னது போல் அவளை அப்படியே நேசித்து ஏற்றுகொள்ளும் ஒருவன்  அவளைக்  கண்மூடித்தனமாய் காதலிப்பவனாக இருந்தால் மட்டுமே முடியும் என்று தோன்றிற்று.

ரம்யாவின் எண்ணம் சரிதான். சூர்யா எதற்காகவும் யாருக்காகவும் எதையுமே விட்டுக் கொடுக்கும் மனோபாவம் கொண்டவள் அல்ல. அதுவும் அக்னீஸ்வரி தோற்றத்தில் இப்போது இருக்கும் சூர்யா முற்றிலுமாய் வேறு அவதாரம் கொண்டிருக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்.

அக்னீஸ்வரியின் வாழ்வில் திருமணம் என்ற ஒரு நிகழ்வு அவளின் வாழ்வையே புரட்டிப் போட்டு அவளின் ஆசை  கனவுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சேர்த்தே சிதைத்தது. அந்த இன்பகரமான நொடியை அவள் அனுபவிக்க முடியாமல் எதிர்கொண்ட துயரங்களை அவள் ஆழ்மனம் அப்படியே அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறது.

ஆதலாலயே நிறைவேறாத ஆசையை இப்போது அவள் மனம் நிறைவேற்றிக் கொள்ள பெரும் கனவாய் அந்தத் தருணத்தை உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறாள். இனியும்  ஒரு ஏமாற்றத்தை ஏற்க விரும்பாத அவள் மனம் எதற்காகவும் அவளின் ஆசையை கொஞ்சங் கூட விட்டுகொடுக்க விரும்பவில்லை.

ஏனெனில் முற்பிறவியில் அக்னீஸ்வரி  விட்டுக் கொடுத்தது ஏராளம். உறவுகள் முதல் உணர்வுகள் வரை எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து கடைசியில் பெண்மையை காத்துக் கொள்ள உயிரையும் விட்டுக்கொடுக்க நேரிட்டது.

அதிலும் தன் மனதிற்கு விருப்பமானவன் என்று அவள் சொல்லவில்லை. முற்பிறவியில் அவள் மனதிற்கு விருப்பமானவனே அவள் வாழ்க்கை முற்றிலும் அழியக் காரணமானவன். அதனாலயே அந்த வார்த்தையை அவள் தவிர்த்திருக்கலாம். ஆனால் இப்பிறவியில் அந்த சூட்சமமான வரி மீண்டும் அவள் வாழ்க்கையை சுழற்சியில் தள்ளப் போகிறது.

 

error: Content is protected !!