Kalangalil aval vasantham 30

Kalangalil aval vasantham 30

“ஓகே. நமது பேட்டிங் லைன் அப், பவுலிங் லைன் அப்பில் எந்தவிதமான குறையும் வரக் கூடாது. பேட்டிங்கில் கவனத்தை செலுத்துவது போல பவுலிங்கிலும் கவனத்தை செலுத்த வேண்டும். ஆல் ரவுன்டரும் நமக்குத் தேவை. அதை அனைத்தையும் மனதில் வைத்து கொண்டு ஏலத்துக்கு செல்வது நல்லது…” என்று ஷான் முடித்தான்.

ஒருவித மனதிருப்தியோடு எழுந்தான் ரவி, சந்திப்பு முடிந்தவுடன்! அனைவரும் விடைபெற்று சென்று கொண்டிருந்தனர்.

மாதேஸ்வரனிடம் திரும்பியவன், “அப்பா நீங்க உங்க ரூம்ல வெய்ட் பண்ணுங்க. நான் வரேன்.” என்று கூற,

“சரிப்பா.” என்று கூறிவிட்டு நாயரோடும், சாலமனோடும் தனதறையை நோக்கிப் போனார்.

“மாமா… ஒரு நிமிஷம்…” என்று ரவியை அழைத்தவன், சில சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள விழைவதாக கூறி அவனைப் பிடித்து வைத்தான்.

ஒவ்வொருவராக வந்து ஷானிடம் மரியாதை நிமித்தமாக அறிமுகப்படுத்திக் கொண்டு, ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடமெல்லாம் இயல்பாக பேசியவன், ப்ரீத்தியையும் உடன் சேர்த்துக் கொண்டான். அனைத்தையும் அவளும் அறிந்து கொள்ள செய்துகொண்டிருந்தான்.

“சென்னை டீம் அம்பாசிடரா ஸ்வேதா வேண்டாம் மாமா.” ரவியிடம் ஷான் கூற,

“அது நான் டிசைட் பண்ணல ஷான். டீம் சஜஷன். எனக்கும் அவ வேண்டாம் தான்.” பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்றவாறு இவன் சொன்னது மற்ற இருவருக்குமே புரிந்தது ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

“ஓகே அப்படீன்னா, அவளோட அக்ரீமென்ட் கேன்ஸல் பண்ணிடலாம்…” ஷான் முடித்து விட்டான்.

“சரி. அப்ப டீம் அம்பாசிடர் யாராம்?” அடுத்த கேள்வியை கேட்டான் ரவி.

“ஒய் நாட் சம் மேல் ஆக்டர்ஸ்?” என்று ப்ரீத்தி கேட்க,

“ஆமா மாமா. ஒய் நாட் லீ மின் ஹோ?” என்று சிரித்தபடியே கேட்டான் ஷான்.

“நான் சீரியசா கேக்கறேன்.” என்று அவனைப் பார்த்து முறைத்தாள் ப்ரீத்தி.

“நானும் தான் சீரியஸா கேக்கறேன்.” என்றவனின் குரலிலிருந்த நக்கல் புரியாதவளா ப்ரீத்தி?

“ஓ ப்ரீத்தி ஃபேவரிட்டா?” ரவியும் சிரித்தான்.

“எஸ்.” என்றவன், “நிஜமாவே ஒய் நாட் மாமா? இப்ப பிடிஎஸ் தானே ட்ரென்டிங்?”

“ஹேய்… செம ஐடியா ஷான். நான்லாம் சந்தோஷத்துல செத்தே போய்டுவேன். என்னை மாதிரி எவ்ளோ பேர் இருக்காங்க தெரியுமா? டீம் அம்பாசிடரா ஜங்கூக் மட்டும் இருந்தான், யூத்தெல்லாம் அவுட்டு. எல்லாமே நம்ம டீமைத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க. அது எவ்வளவு பெரிய ஈவன்ட்டாகும் தெரியுமா?” என்று ப்ரீத்தி சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தாள்.

“அப்படீன்னா ஓகே. நமக்கு பிடிஎஸ் ஸ ஒரு தீம் சாங் பண்ணி தர சொல்லலாம். தென் அவங்களை பிரான்ட் அம்பாசிடராக்கலாம். எப்படி மாமா ஐடியா?” என்று கேட்டான்.

“நல்ல ஐடியா தான் ஷான். ஆனா செலவு எவ்ளோ ஆகும்ன்னு தெரியலையே. நம்ம பட்ஜக்ட்ட இடிக்கக் கூடாது ஷான்.” என்று தயங்கினான் ரவி. ஸ்வேதாவை கேன்சல் செய்வதையே மாயா ஒப்புக்கொள்ள மாட்டார். அதற்கு எத்தனை நாடகமாடுவாளோ என்று இருந்தது.

“ட்ரை பண்ணலாம். நமக்கு செட் ஆகலைன்னா நெக்ஸ்ட் ஆப்ஷன் போகலாம்.” என்று ஷான் கூற,

“நெஸ்ட் ஆப்ஷன், லீ மின் ஹோ ஷான். ப்ளீஸ்…” மூக்கை சுருக்கி ப்ரீத்தி கேட்டதை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“இன்னும் நீ குட்டி பொண்ணாவே இரு…” என்று அவளது மண்டையில் தட்ட,

“ப்ளீஸ் ஷான். லீ மின் ஹோ கூட ஒரு செல்பியாவது எடுக்கணும். அதுதான் என்னோட வாழ்க்கை லட்சியமே…” என்று அவள் சூளுரைக்க,

“அப்பா கேட்டப்ப, அதை கட்ட போறேன் இதை கட்ட போறேன்னு சொன்ன. அதெல்லாம் பொய்யா கோப்ப்பால்?” சிரித்தான் ஷான்.

“இல்லை லதா இல்லை. அது வேறு டிப்பார்ட்மென்ட்…”

“அப்ப லீ மின் ஹோ கோப்பால்?”

“அது சைட்டிங் டிப்பார்ட்மென்ட் லதா. இதுவும் முக்கியம் அதுவும் முக்கியம்…”

“தாங்கள் சைட் அடிப்பதற்காக கம்பெனியை திவாலாக்க நினைக்கிறீர்களே கோப்பால். இது நியாயமா?”

“லீ மின் ஹோவுக்காக எதையும் செய்வேன் லதா…” என்றவளின் தலையை பிடித்து ஆட்டியவன்,

“விட்டா என்னை கூட வித்துடுவா மாமா.” என்று ரவியிடம் கூறியவன், அவள் மண்டையில் கொட்ட, ‘ஸ்ஸ்ஸ்’ என்று மண்டையை தேய்த்து விட்டுக் கொண்டாள்.

“விக்கலாம்… ஆனா யார் வாங்குவா?” கிண்டலாக கேட்டவளை, புன்னகையோடு பார்த்தவன்,

“என்னோட வால்யுவே தாங்களுக்கு தெரியவில்லை கோப்பால்…” என்று சிரித்தான்.

“தெரியவே வேண்டாம் லதா. தாங்கள் பெரிய ப்ளக்கராகவே இருந்து விட்டுப் போங்கள்…” என்று கூறியவள், சிரித்தபடி லேப்டாப்பை எடுத்துக் கொண்டாள். மற்றதனைத்தும் இருக்கிறதா என்றும் சரி பார்த்துக் கொண்டாள்.

“ரெண்டு பேருக்கும் முடிஞ்சுதா? வர்றீங்களா? இல்லைன்னா வம்பு பேசிட்டேத்தான் இருக்கப் போறீங்களா?” ரவி தீவிரக் குரலில் கேட்டான்.

“முன்னாடி போயிட்டே இருங்க மாமா. வந்துடறோம்…” என்று ஷான் கூற, அவனை உள்ளுக்குள் வெப்பமாக பார்த்தவாறே கிளம்பினான்.

என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டே லிப்டில் நுழைந்தான். அப்போதுதான் அந்த லிப்ட்டிலிலிருந்து ‘லிப்ட் அண்டர் மெயின்டனன்ஸ்’ பதாகை எடுக்கப்பட்டிருந்தது. அது போர்ட் உறுப்பினர்களுக்கான லிப்ட் என்பதால் வேறு ஒருவரும் இல்லை. லிப்ட் கதவு தானாக மூடிக் கொண்டது.

சுற்றிலும் தங்க நிற கண்ணாடி சுவர். பார்க்கையிலேயே ஆடம்பரம் தெளிவாக தெரிவதைப் போல தான் இருந்தது அந்த லிப்ட்.

எதிரில் தெரிந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டான். கண்களில் கண்ணாடி மட்டுமில்லையென்றால் முப்பத்தி ஐந்தை தாண்டாது வயது. இந்த கண்ணாடியை முதலில் காலி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

செல்பேசி ‘பீப் பீப்’ என்றது. மெசேஜ் வந்த ஒலி அது.

யார் என்று பார்த்தான். சரண் தான்.

‘எவ்ரிதிங் வென்ட் ரைட்?’ அவசரமாக கேட்டிருந்தார்.

‘எஸ் நோ ப்ராப்ளம்’ என்று பதில் கொடுத்தான்.

‘கிரேட். ஐ ஷால் கன்பர்ம் தி நியுஸ் வித் தி சோர்ஸ்’ என்று அவர் முடித்துவிட, சற்று நிம்மதியாக உணர்ந்தான்.

“ஓகே” என்று இவன் முடித்துவிட, லிப்ட்டின் கதவுகள் விசித்திரமாக இயங்கத் துவங்கின. முதலில் கண்டுகொள்ளாதவன், அடுத்ததடுத்த முறைகளில் சற்று எச்ச்சரிக்கையானான்.

விளக்குகளும் ஒளிர்ந்து அணைய, ஒளிர்ந்து அணைய என்று இருக்க, சட்டென லிப்ட் நின்றது.

“வாட் எ ஷிட்?” என்று அவன் கூறுவதற்கும் லிப்ட் மின்சாரம் நிற்பதற்கும் சரியாக இருந்தது.

ஹெல்ப் பட்டனை அமுக்கிப் பார்த்தான். அது வேலை செய்யவில்லை. அவசர கால தொலைபேசியை எடுத்து காதில் வைத்துப் பார்த்தான். அது உயிரோடு இல்லை.

செல்பேசியில் எமெர்ஜென்சியை அழைக்கலாம் என்று பார்த்தான். அது முற்றிலும் சிக்னல் இல்லாமலிருந்தது. இது எப்படி சாத்தியம்? லிப்ட் தொலைபேசி கூட பழுதாக சாத்தியமிருக்கிறது. ஆனால் அவனது செல்பேசி, ஜாமர் வைத்திருந்தாலே தவிர, சிக்னல் இல்லாமல் போக வாய்ப்பே இல்லையே. அதுவுமில்லாமல் இப்போதுதானே சரணுடன் உரையாடிக் கொண்டிருந்தான். அதற்குள் என்னவாயிற்று?

நேரமாக நேரமாக, அவனது பதட்டம் கூடியது.

லிப்ட்டில் மூச்சடைத்து இறந்தவர்கள் பற்றிய நினைவெல்லாம் வந்தது.

“ஏய் யார் அங்க இருக்கா?” தன்னுடைய ஈகோவை தள்ளி வைத்துவிட்டு கத்தினான்.

யாரும் பதில் கூறவில்லை.

பொதுவாக இந்த லிப்ட் பக்கம் ஆட்கள் மிகவும் குறைவு, அரிது!

காரணம் மரியாதை!

இந்த பக்கத்து லிப்டை உபயோகிக்க மாட்டார்கள்.

சட்டென செல்பேசியில் சிக்னல் வந்தது, மிகவும் பலவீனமாக!

அப்போது தோன்றியது ஷானுக்கு அழைக்க மட்டும் தான்!

அவசரமாக எண்களை அழுத்தியவன், “ஷான்… இங்க லிப்ட் வொர்க் ஆகல. என்னன்னு கொஞ்சம் பாரேன்…” என்று அவசரமாக கூற,

“எந்த லிப்ட் மாமா?” அவனது குரலில் பதட்டம் வந்திருந்தது.

“டைரக்டர்ஸ் லிப்ட் தான் ஷான்.”

“ஐயோ, அதுல ஒன்னு இரும்பு கம்பி வீக்கா இருக்குன்னு நிறுத்தி வெச்சு இருந்தாங்களே…” என்றபடி பதட்டத்துடன் அவன் ஓடுவது கேட்டது. ஒரு நிமிடம் ரவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டது போல தோன்றியது. ரிப்பேர் என்றால் ஏன் ‘மெயின்டனன்ஸ்’ பதாகை இல்லை?

“என்ன சொல்ற ஷான்?” என்றவனின் குரலில் அத்தனை அதிர்ச்சி.

“மாமா. டோன்ட் பேணிக். அஞ்சு நிமிஷத்துல சரி பண்ணிடலாம்.” என்றவனின் பதட்டம் ரவியையும் பற்றிக் கொள்ள,

“ஷான்…” குரலில் ஆயிரம் வாட்ஸ் நடுக்கம்! காரணம், லிப்ட் அசாதாரணமாக ஆடத் துவங்கியது.

“சம்திங் வியர்ட் ஷான்…” என்று அவன் நடுங்கினான்.

அவன் நடுங்குவதற்கும் காரணம் உண்டு. மொத்தமுள்ள பதினைந்து மாடியில், பத்தாவது மாடியின் நடுவிலிருந்தான் அவன். ஏதேனும் நடந்தால், அவனது நிலையை நினைத்துப் பார்க்கவே சில்லிட்டது.

“என்னாச்சு மாமா?” என்றவனின் குரலில் அதீத பயம்.

“லிப்ட் ஒரு மாதிரி ஆடுது டா…”

“மாமா. ஒரு டூ மினிட்ஸ் மாமா. சரி பண்ணிட்டே இருக்காங்க. நான் வந்துட்டே இருக்கேன். பயப்படாதீங்க…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, லிப்ட் தானாக அசையத் துவங்கி, இறங்க துவங்கியது.

“இறங்குது ஷான்…” என்று ஆசுவாசப்பட, இறங்க ஆரம்பித்த லிப்ட் அந்த கட்டுபாட்டை இழந்து மின்னல் வேகத்தில் இறங்க துவங்கியது.

கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான் ரவி. எப்படியும் பிழைக்க போவதில்லை என்று தோன்றியது. இதற்கும் மேல் என்ன இருக்கிறது என்ற எண்ணம் அவனை ஆட்கொண்டது. அவனது இலட்சியங்கள் எல்லாம் என்னாவது என்று அவனது மனம் அவனைப் பார்த்துக் கேள்வி கேட்டது. மனதுக்குள் வைஷ்ணவியும் வைபவ்வும் வந்து போனார்கள். செய்ய வேண்டியவை எல்லாம் எவ்வளவோ இருக்க, இதுதான் தனது இறுதியா என்ற கேள்வி பிறந்தது அவனுக்குள்!

இவ்வளவும் ஒரே நொடியில் நினைத்து முடித்தான்.

“ஷான்ன்ன்ன்…” அவனறியாமல் கத்தினான் ரவி!

மின்னல் வேகத்தில் தலைதெறிக்க இறங்கிக் கொண்டிருந்த லிப்ட் சட்டென நிற்க, அந்த அதிர்ச்சியில் தடுமாறி கீழே விழுந்தான். மண்டை லிப்ட் ப்ளோரில் இடித்தது. காதிலிருந்த செல்பேசி தெறித்து கீழே விழுந்தது.

“மாமா…” என்று அலறியவனின் குரலைத்தான் கடைசியாக கேட்டான். கண்கள் இருட்ட, மயங்கி சரிந்தான் ரவி.

***

தரை தளத்துக்கு சற்று மேலே நின்றிருந்த லிப்ட்டின் கதவை உடைத்துத் திறந்து கொண்டிருந்தார்கள்.

மாதேஸ்வரன் முதற்கொண்டு அனைவரும் அங்கே கூடி விட்டனர். அனைவரின் முகத்திலும் அத்தனை பதட்டம். மாதேஸ்வரன் விட்டால் அழுதுவிடுவார் போல… அந்த அளவு நடுங்கி போயிருந்தார். ப்ரீத்தி கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.

லிப்ட் கதவை, பெரும்பாடுபட்டு திறந்த ஷான், மயங்கி சரிந்திருந்த ரவியை பார்த்து, “மாமா… மாமா…” என்று கத்தினான்.

பிரச்சனை என்னவென்றால் லிப்ட் இரண்டு தளத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருந்தது. கதவை திறந்தாலும் உள்ளே இறங்க முடியவில்லை. இது போல எதாவது ஆபத்து என்றால், லிப்ட் இறங்கி மெதுவாக அடுத்த தளத்தில் நின்றுவிடும். அது ஏன் செயல்படவில்லை என்று மாதேஸ்வரனுக்கு புரியவில்லை.

ஷான் கத்தியதற்கு எந்த பதிலும் இல்லை ரவியிடமிருந்து.

“தண்ணி கொண்டு வாங்க…” என்று கத்தினான் ஷான்.

அவசரமாக யாரோ நீரைக் கொண்டு வர, மேலிருந்து ரவியைப் பார்த்தபடி, அவன் மேல் நீரை தெளித்தான். உடல் லேசாக அசைந்தது. மெதுவாக கண்களை திறந்து பார்த்தான் ஷான்.

“கை குடுங்க மாமா…” என்று கையை நீட்டினான்.

ரவி பலவீனமாக இருந்தான்.

“முடியல ஷான்…”

அவன் மிகவும் பயந்து போயிருக்கிறான் என்பது புரிந்தது.

லிப்ட் கதவை இன்னும் கொஞ்சம் உடைத்துத் திறந்தவன், மாடி சுவற்றை பிடித்துக் கொண்டு உள்ளே குதித்தான்.

“ஜாக்கிரதை பாஸ்…” “பாத்துடா தம்பி…” ஏக காலத்தில் மாதேஸ்வரனும் ப்ரீத்தியும் கூற, அதையெல்லாம் கேட்கும் நிலையில் அவனில்லை. எப்படியாவது ரவியை மீட்க வேண்டும். அது ஒன்று மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.

ஷான் குதிப்பான் என்று ப்ரீத்தி கனவிலும் நினைக்கவில்லை. தூக்கி வாரிப் போட்டது. தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பது இதுதானா?

அவன் குதித்ததில் லிப்ட் இன்னும் கொஞ்சம் பலமாவே ஆடியது.

லிப்ட் ஆட, ப்ரீத்தியின் மனதுக்குள் கலவரம் மூண்டது. இந்த ரிஸ்க் தேவையா என்று கேட்க தோன்றினாலும், யார் சொல்வதையும் கேட்பவன் அல்லவே இவன்!

இருவரது கனத்தையும் தாங்காமல் லிப்ட் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியது.

“ஐயோ…” அவளையும் அறியாமல் கத்தினாள் ப்ரீத்தி.

அவளது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் மாதேஸ்வரன்.

“பாத்து ஷான்…” மற்றவர்கள் இருக்கிறார்களே என்றெல்லாம் அவள் பார்க்கவில்லை. அனைத்தையும் மறந்துவிட்டாள். அவன் மட்டுமே அவளது கண்களுக்குத் தெரிந்தான், அர்ஜுனனுக்கு கிளியை போல! அவளது பார்வை வேறெங்கும் போகவில்லை.

கண்களில் நீர் சூழ பார்த்தது!

அதே நிலையில் தான் இருந்தார் மாதேஸ்வரனும்!

பலவீனமாக படுத்திருந்த ரவியை அப்படியே தூக்கிக் கொண்டான். லிப்ட் இன்னும் வேகமாக ஆடியது.

ப்ரீத்தியின் உயிர் அவளது கையில் இல்லை. உடல் நடுங்க ஆரம்பித்தது. அவளது நடுக்கத்தை உணர்ந்த மாதேஸ்வரன், அவளது கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டார். அதுதான் அவருக்கும் தைரியத்தை கொடுத்தது. லிப்ட்க்குள் இருப்பது அவரது இரண்டு கண்கள். அவரது வாழ்க்கை!

ரவியின் செல்பேசியை கையில் எடுத்து ஷான் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

“யாராவது வந்து பிடிங்க…” என்று அவன் கத்த, நல்ல திடகாத்திரமான மூவர் அந்த தளத்தில் படுத்தபடி கையை நீட்டினர், ரவியை பிடித்து மேலே இழுக்க!

“ஹர்ரி அப்…” என்று வேகப்படுதினான் ஷான். ரவி கனம் தான் ஆனாலும் சமாளித்துவிட்டான் ஷான்.

லிப்ட் இன்னும் கொஞ்சம் ஆட, “பாஸ் பாத்து…” படுத்துக் கொண்டு ரவியை அந்த வழியாக இழுத்துக் கொண்டிருந்தவர்கள் கத்த,

“ஓகே” என்றான்.

ஒரு வழியாக ரவியை இழுத்து வெளியே கொண்டு வர, தயாராக நின்றிருந்த ஆம்புலன்ஸில் அவன் ஏற்றப் பட்டான். அவனுக்குப் பின்னே, ஷான் சுவற்றை பிடித்து மேலே ஏறி வந்தான்.

மாதேஸ்வரன் ஷானை கட்டிப் பிடித்துக் கொண்டார். அவரது கண்களில் கண்ணீர் வெள்ளம். அவரது முதுகை தடவிக் கொடுத்தான் ஷான்.

“நத்திங் ப்பா. ஹீ இஸ் ஓகே…” என்றவனின் முகத்தில் பதட்டத்தையும் தாண்டியதொரு சிறு புன்னகை.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தியின் முகத்திலும் அதே உணர்விருந்தது, கண்ணீரோடு!

அந்த பத்து நிமிடங்களில் அவள் உணர்ந்தது ஒன்று தான்! அவனே அவளது உயிர்… அவனே அவளது சுவாசம்!

உயிரில்லாத உடல், பிணமல்லவா!

அந்த நிலையை அவளால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. கண்ணீரை துடைத்தவளை பார்த்துப் புன்னகைத்தவன் தன் கையிலிருந்ததை ரகசியமாக காட்டி, கண்ணை சிமிட்டினான்.

அது ரவியின் செல்பேசி! அவளே எதிர்பார்க்காத ஆச்சரியம்!

ப்ரீத்தி அறியாதது ஒன்று இருக்கிறது என்றால், அது விபத்தை ஏற்படுத்தியதும் அவன் தான் என்பதுதான். சொன்னால் பயந்துவிடுவாள் என்பதோடு விட மாட்டாள் என்பது தெரிந்து தான் அவளிடம் கூறவில்லை. மகேஷ் குழுவுடன் மட்டும் கலந்தாலோசித்து செய்திருந்தான். காப்பாற்றுவது போல நடித்ததும் அவன் தான், கிடைத்த சந்தர்ப்பத்தில் செல்பேசியை எடுத்ததும் அவன் தான், எடுத்த சில நிமிடங்களில் அந்த பேசியை ஹேக் செய்ய சொன்னதும் அவன் தான்!

ரவிக்கு மட்டும் தான் உறவாடிக் கெடுக்க தெரியுமா?

அது அவனுக்கும் தெரியும் என்பதை ரவி உணரும் போது?

தன் வினை தன்னை சுடுமென்ற செய்தி ரவிக்கு தெரியாதல்லவா!

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த ரவி, வைஷ்ணவியின் அலப்பறைகளோடு ஷானின் அலப்பறைக்களையும் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.

ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது தலைவரே!

error: Content is protected !!