Naan Aval Illai – 21

Naan Aval Illai – 21

உண்மையான முகம்

அன்று இரவு வீட்டிற்கு வந்ததிலிருந்து புகழ் தன் கதா காலட்சேபத்தை ஆரம்பித்திருந்தான். நடந்த நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் அவன் சொல்லிக் கொண்டிருக்க, வேந்தனுக்கு அதீத எரிச்சல் மூண்டது. வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றான். 

நகைக்கடையில் இருந்து புகழை அழைத்துக் கொண்டு புறப்பட்டவன் அத்தனை இறுக்கமாய் முகத்தை வைத்திருந்தான். 

சாக்ஷியின் முகமே அவனை பைத்தியமாக மாற்ற, அவள் நின்று திமிராய் பேசிய விதத்தில் அவன் மனம் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

அதோடு அலைச்சல் வேறு. புகழை எங்கெல்லாமோ தேடி தேடி ஓய்ந்து மனம் நொந்துப் போயிருந்தான். 

அதோடு முடிந்ததா ? புகழை அழைத்துவந்தவன் அவன் கைப்பேசியை மறந்தான். 

தியாகாராய நகரிலிருந்து பாதி தூரம் கடந்த பின்னே அவனுக்கு இந்த விஷயம் நினைவுக்கு எட்ட, புகழை வார்த்தைகளாலயே கடித்து துப்பிக் கொண்டிருந்தான். 

ஆனால் மீண்டும் அங்கே திரும்பி சென்று அந்த வாகன நெரிசலில் சிக்க அவனுக்கு எண்ணமில்லை. 

அதோடு சாக்ஷியை திரும்பவும் எதிர்கொள்ளும் தைரியமும் அவனிடமில்லை.

ஆதலால் தன் கைப்பேசியை பிறகு பெற்றுக் கொள்ளலாம் என்று முன்னேறி பயணித்தான். 

அவள் சாக்ஷி அல்ல என்று இன்னும் நம்ப அவன் முட்டாளா?

வேதனையில் உழன்றிருந்தவன் லாவண்யாவிடம் கூட ஒரு வார்த்தை பேசாமல் அவளை இறக்கி விட்டு அவசரமாய் புறப்பட்டான்.

லாவண்யாவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவனிடம் கைப்பேசியில் பேசிய போது அவள் வடித்து வைத்திருந்த பிம்பம் இன்று தூள்தூளாய் நொறுங்கியிருந்தது. இவனுடன்தான் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தாக வேண்டுமா? 

அவளை மீறிக் கொண்ட எழுந்த சலிப்புக்கும் தவிப்புக்கும் அவள் மனம் மௌனம் சாதித்தது.

வேறென்ன செய்ய முடியும் ? இன்னும் இரண்டொரு நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு. 

அதனால் வீட்டில் உள்ள யாரிடமும் தன் மனநிலையை காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டாள். 

தன் திருமண வாழ்க்கை மிகுந்த ஏமாற்றத்தையே தரப் போகிறது என்பதை மட்டும் அவள் மனம் உறுதியாய் நம்பியது.

வேந்தன் வீட்டையடைந்த நொடி புகழை ஒரு வழி செய்துவிடலாம் என்று எண்ணியிருந்தான். 

ஆனால் அவன் நினைத்தது நடக்கவில்லையே. புகழின் தந்தை அருண் வீட்டிலிருந்தான். அவன் இருக்கும் போது புகழை எப்படி கண்டிக்க முடியும் ?

தன் உணர்வுகளை பூட்டிக் கொண்டு அழுத்தமாய் இருந்துவிட்டான். 

ஆனால் புகழின் துடுக்கான செயலைஒருத்தர் விடாமல் கண்டிக்க, அவனை அடிக்குமளவுக்கு யாரும் போகவில்லை. வீட்டின் முதல் பேரன் என்ற செல்லம்தான்.

எழில் மட்டும் அவன் முதுகில் அடிக்க, அப்போது பீறிட்ட கோபத்தோடு “அதென்ன மாமாவும் அடிக்கிறாரு… நீங்களும் அடிக்கிறீங்க” என்று அப்போது ஆரம்பித்தவன் நடந்ததை ஒன்றுவிடாமல் விவரித்தான்.

அதுவும் காரிலிருந்து ஓடி ராகவை பார்த்ததில் தொடங்கி சாக்ஷியினை சந்தித்த கதையையும் முழுதாய் சொல்லி முடிக்க, எல்லோருமே ஆச்சர்யப் பார்வை பார்த்திருந்தனர்.

தொலைக்காட்சியில் வந்த விளம்பரம் வள்ளியம்மை எழில் உட்பட எல்லோருக்குமே அத்தகைய சந்தேகம் எழுந்தது உண்மைதான்.

அதுவும் புகழ் சொல்வதை பார்த்தால் அது சாக்ஷிதானோ என ஊர்ஜிதமானது.

இருந்தும் சாத்தியக்கூறுகளை அலசிய எழில் மகனிடம் “இல்ல புகழ்… அவங்க சாக்ஷியா இருக்காது… உனக்குதான் தெரியுமே! சாக்ஷி அக்காவுக்கு ஹய் ஸைட் இல்லையே” என்ற வாதத்தை எடுத்துரைக்க,

அவன் அப்போதும் நம்பாமல் “நீங்கதானேம்மா சொன்னிங்க… நம்ம குட் டா இருந்தா காட் நம்ம கேட்கிறதெல்லாம் செய்வார்னு… அப்படி சாக்ஷியக்காவுக்கும் கண்ணு கேட்டிருப்பாங்க… அவங்க ரொம்ப நல்லவங்க ல… அதான் கடவுள் அவங்களுக்கு கண்ணு கொடுத்திட்டாரு போல” என்றான்.

குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் நமக்கே ஒருநாள் பாடமாய் திரும்பி வருகிறது.

சாக்ஷிக்கு விழியில்லை என்ற காரணத்துக்காகவே தன் மகனுக்கு தகுதியற்றவள் என்று அவர்கள் ஓதுக்க, இன்று அவள் அருகில் நிற்கவே தகுதி தேவையாயிருந்தது.

வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரியான கோணங்களில் பயணிப்பதில்லை. 

அதன் கால சுழற்சியில் மேலிருப்பவன் கீழே வர, கீழ் இருப்பவன் மேலே செல்வான்.

அதுதான் இந்த உலக நியதி.

இன்று சாக்ஷி அவர்கள் யாரும் எட்டிப்பிடிக்காத உயரத்தில் நின்றிருந்தாள்.

*-*-*-*
தினமும் இருளை கடந்து, ஓர் விடியல் பிறக்கவே செய்கிறது.

ஜென்னி அன்றிரவு அவள் கொண்டிருந்த மனப்போராட்டங்களை கடந்து அவள் மீண்டும் இயல்புதன்மையை மீட்டுக் கொண்டாள்.

அவள் அழுகையோ வேதனையோ வலியோ, எதுவுமே அவள் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. அவள் ஒருவாறு அத்தகைய இயல்புக்கு அவள் பழகக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

அதே நேரத்தில் விரக்தியான பார்வையோடோ புன்னகையோடோ அல்ல.

உயிரோட்டமான பார்வையோடும் மாறாத கம்பீரத்தோடும். 

ஜென்னி சோபாவில் அமர்ந்தபடி காபியை பருகிக் கொண்டு ஆங்கில செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தாள். 

“எழுந்திட்டீங்களா ஜென்னி?” என்று கேட்டபடி வந்து நின்றாள் ரூபா.

“ஜஸ்ட் நவ்” என்றபடியே படித்துக் கொண்டிருந்தவளை ரூபா குழப்பமாய் பார்த்தாள். 

நேற்று அவளிடமிருந்த சோர்வு இன்று துளிக் கூட தென்படவில்லை. 

தெளிவுப்பெற்றிருந்தவளை வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே செய்தி தாளின் பின்னிருந்த செய்தி அவளை ஈர்த்தது.

“ஜென்னி” என்றழைக்க

“சொல்லு ரூப்ஸ்” என்றவளிடம் செய்தி தாளை திருப்பி காண்பித்தாள்.

ஜென்னியின் புருவம் உயர்ந்து இறங்கியது.

ஜென்னி ராகவோடு நெருக்கமாய் நிற்பது போலிருந்த படம், அதோடு நகைக்கடை திறப்பு விழா குறித்த செய்தி ‘ட்ராஃபிக் ஹிட் இன் டீ நகர்… ஆக்டர் ராகவ் & மாடல் ஜென்னித்தா இனாகுரேட் தன்யா ஜீவலர்ஸ் க்ராண்ட் ஷோ ரூம்’ என்ற தலைப்பில் இருந்த செய்தியை இருவரும் பார்த்தனர்.

“என்ன ஜென்னி போட்டோ இது?… ராகவ் சார் உங்க பக்கத்தில இவ்வளவு நெருக்கமா நிக்கிற மாதிரி… நான்ஸென்ஸ்…” என்று ரூபா எரிச்சலடைய,

“இதெல்லாம் போட்டோ ட்ரீக்ஸ்… ” என்றவள் பின் அதிலிருந்த செய்தியை
படித்தாள். 

அதன் பிறகு அவள் பதில் பேசாமல் மௌனமாகிட,

ரூபாவும் அந்த செய்தியை படித்துவிட்டு “என்ன ஜென்னி ?…இப்படி எழுதியிருக்காங்க? ராகவ் சார் உங்களுக்காகதான் ரீஓபனுக்கே வந்தாராம்.. இரண்டு பேரும் ஆல்ரெடி பழக்கம் அது இதுன்னு” என்று எரிச்சலடைந்தான். 

ஜென்னி ரூபாவின் புறம் நிமிர்ந்து “ரூப்ஸ்… மிஸ்டர். ராகவ் ஷாப்ல என்னை மீட் பண்ணனும் சொன்னாருல்ல… அவரை பேசாம இன்னைக்கு டின்னருக்கு வீட்டுக்கு கூப்பிட்டா என்ன?” என்றாள்.

ரூபா அதிர்ந்தபடி, 

“என்ன சொல்றீங்க ஜென்னி ? இந்த மாதிரி நீயூஸ் பேப்பர்ல வந்திருக்கும் போது அவரை நீங்க வீட்டுக்கு இன்வைட் பன்றது” என்று சொல்லி யோசனையோடு பார்த்தாள்.

ஜென்னி செய்தி தாளை மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து கொண்டு “என்ன சொல்ல வந்தியோ அதை முழுசா சொல்லி முடி ரூப்ஸ்” என்க,

அவள் தயக்கமாக “நீங்க மேல் மாடல்ஸ் யாரையும் உங்க கூட விளம்பரத்தில நடிக்க கூட சம்மதிக்க மாட்டீங்க… அந்தளவுக்கு இமேஜ் பார்ப்பீங்க… ஆனா இது”

ஜென்னி சிரித்த முகத்தோடு “சரியில்லங்கிறியா … இல்ல தப்புன்னு சொல் வர்றியா?!” என்று கேட்டு கூர்மையாய் பார்த்தாள். 

ரூபா மௌனமாய் நிற்க ஜென்னி நிதானத்தோடு “இத பாரு ரூப்ஸ்… சரி தப்புங்கிறதெல்லாம் பார்க்கிற பார்வையிலதான் இருக்கு… அன் இது மீடியா… இங்க இந்த மாதிரியான நீயூஸஸெல்லாம் சகஜம்… உண்மையை சொல்லனும்னா இதுல நான் ப்ஃல் பண்ண எதுவும் இல்லை… தமிழ் இன்டஸ்டிரீஸ்ல கொடி கட்டி பறக்கிற மிஸ்டர். ராகவைதான் எல்லோரும் கேள்வி கேட்பாங்க… இந்த நீயூஸ் ட்ரூவான்னு” என்று ஜென்னி சொல்லும் போது ரூபாவுக்கு லேசாய் தெளிவு பிறந்தது.

ஜென்னியே மேலும் “நீ மறக்காம மிஸ்டர். ராகவை வீட்டுக்கு இன்வைட் பண்ணிடு.. அப்புறம் குக் கிட்ட ஸ்பெஷல் சவுத் இண்டியன் டிஷஸ் பண்ண சொல்லு… எல்லா ராகவுக்கு பிடிச்சதா ?” என்று சொல்லிவிட்டு ஜென்னி அகன்று விட ரூபாவுக்கு குழப்பமாய் இருந்தது.

ஜென்னிக்கு ராகவ் மேல் ஏதோ ஈர்ப்பிருக்கிறதோ என்று. அந்த எண்ணத்தை மனதோடு வைத்து கொண்டவள், அவள் சொன்னவற்றை செய்ய முனைந்தாள்.

ரூபா ராகவின் செகரட்டிரி மனோவுக்கு அழைத்து போது அங்கேயும் இதே போல விவாதம்தான் போய் கொண்டிருந்தது. 

ராகவ் தன் உடற்பயிற்சியெல்லாம் முடித்துவிட்டு வியர்த்து போய் பின்புறம் இருந்து கதவு வழியே நுழைந்தவன் சுழற்சியான படிக்கெட்டு வழியே மேலே செல்ல “ராகவ்” என்று ஒரு குரல் அழுத்தமாய் அழைத்தது.

அவன் திரும்பி வந்து “சொல்லுங்க டேட்” என்றான்.

அவர்தான் வாசன். ராகவின் தந்தை. சினிமா உலகை ஆளும் ஜாம்பாவான்களில் ஒருவர்.

“என்ன ராகவ் இதெல்லாம் ?” என்று கூர்மையாய் செய்தி தாளை ஏந்தியபடி அவர் கேட்க

“என்ன ?” என்று புரியாமல் பார்த்தான்.

“நம்ம இமேஜ் ஸ்டேட்டஸ் என்ன.. உன் பிஸி ஷெட்யூல்லா ஷாப் ஓபனிங்கெல்லாம் போகனுமா? அதுவும் இல்லாம நீ இந்த மாதிரியான பங்க்ஷன்ஸில கலந்துக்க மாட்டியே?!” என்று கேட்கவும் ராகவ் தன் மனோ எண்ணத்தை காட்டிக் கொள்ளாமல்

“ர்க்வஸ்ட் பண்ணாங்க… போனேன்… வாட்ஸ் ராங் இன் இட் ?” என்றான்.

“வாட்ஸ் ராங்கா ? பேப்பரை பாரு… நீ யாரோ ஒரு மாடலுக்காகதான் அந்த இனகுரேஷ்ல்யே கலந்துக்கிட்டியான்” என்க,

அவன் ஆர்வமாய் செய்தி தாளை வாங்கிப் பார்த்தான். அதனை பார்த்த மாத்தரித்தில் மதிமயங்கி ஜென்னியோடு அவன் இருக்கும் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருக்க,

அவன் தந்தையோ “அந்த சென்டிரல் மினிஸ்டர் பொண்ணுக்கு உனக்கும் சம்பந்தம் பேசி டிசைட் பண்ணிட்டிருக்கேன்… அதுக்குள்ள இந்த மாதிரி நீயூஸெல்லாம்… நான்ஸென்ஸ்” என்று உக்கிரமாய் மாறினார்.

அவனோ உலகம் மறந்து அந்த போட்டோவிற்குள்ளேயே போய்விட்டான்.

“அந்த மனோ எங்கே போய் தொலைஞ்சான் ?” என்று வாஸன் கேட்கும் போதே உள்ளே நுழைந்தான் மனோ.

“சாரி பாஸ் லேட்டாயிடுச்சு” என்க,

‘நீ இன்னும் கொஞ்சம் லேட்டாவே வந்திருக்கலாம்’ என்று ராகவ் எண்ணிக் கொள்ளும் போதே வாஸன் “அறிவில்லை மனோ உனக்கு…” என்று வசைமழையை தொடங்கினார்.

காரணம் சொல்லாமல் திட்டுவது அவருக்கு வழக்கம். 

மனோ என்னவென்று புரியாமல் நின்றபடி ராகவின் புறம் திரும்ப அவனோ தன் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்.

இறுதியாக வாஸன் சுற்றி வளைத்து அவனிடம் “இந்த ரீபோர்ட்ர் என்ன தைரியம் இருந்தா இப்படி ராகவ் இமேஜை ஸ்பாயில் பன்ற மாதிரி எழுதியிருப்பான்… எப்படி இப்படி அவங்களா கற்பனை பண்ணிக்கிட்டு ஒரு நீயூஸ் எழுத முடியும்” என்று கேட்க

மனோ அதிர்ச்சியோடு ராகவின் புறம் திரும்பினான். 

அவன் சொல்ல கூடாது என்று கண்ணசைத்துவிட்டு தன் தந்தையின் புறம் திரும்பி “விடுங்க டேட்… இதெல்லாம் நம்ம இன்டீஸ்ட்ரீஸ்ல சகஜம்தானே… இதை போய் ஏன் சீர்யஸா பேசிட்டிருக்கீங்க… உங்க டைம்தான் வேஸ்ட்” என்று சமாளித்தான்.

வாஸன் யோசனையோடு மகனை நோக்கி “சரி அது இருக்கட்டும்.. மினிஸ்டர் செழியன் வீட்டுக்கு போய் மேரேஜ் விஷயமா பேசிட்டு வரலாம்” என்றார்.

“நான் இப்போ கொஞ்சம் பிஸி நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்”

“இனாகுரேஷன் பங்கஷனுக்கு போக எல்லாம் உனக்கு டைம் இருக்கு” என்று அவர் கேட்டு முறைக்க,

அவன் தன் தந்தையை நேர்கொண்டு பார்க்காமல் “டேட் புரிஞ்சிக்கோங்க” என்றான்.

அவர் கோபத்தோடு மேலே பேசாமல் திரும்பி நடந்தார். 

மனோ அச்சத்தோடு “பாஸ் நாமதான் இப்படி ஒரூ நீயூஸ் போட காரணம்னு வாஸன் சாருக்கு தெரிஞ்சா” என்று கேட்க

“தெரிஞ்சா” என்று கேட்டுவிட்டு தன் அறை நோக்கி அவன் செல்ல மனோ பின்தொடர்ந்தான். 

அவனின் எண்ணமெல்லாம் அவள் இந்த செய்தியை பார்த்து என்ன யோசித்திருப்பாள். 

இந்த சந்தேகத்தை மனோவிடமும் எழுப்பினான்.

“இந்த நீயூஸை பார்த்து அந்த ஜென்னி டென்ஷனாயிருப்பாளா மனோ… ?!”என்க,

“தெரியலயே பாஸ்” என்றான். 

“அவ டென்ஷனாகனும்” என்று ராகவ் அழுத்தமாக கூற,

சரியாக அந்த சமயம் வந்த கைப்பேசி அழைத்தது.

மனோ அதனை பார்த்து “பாஸ் ஜென்னியோட செகரட்டிரி” என்றான்.

ராகவ் ஆவலோடு திரும்பி “அப்போ டென்ஷனாயிட்டா?!” என்றவன் “ப்க் அப் தி கால்” என்றான்.

மனோ எடுத்து பேசிவிட்டு வியப்பான பாவனையோடு “பாஸ் ஜென்னி…இன்னைக்கு டின்னருக்கு உங்களை இன்வையிட் பன்னியிருக்காங்க” என்றான்.

ராகவ் எத்தகைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்று குழப்பமாய் நிற்க மனோ மெலிதாக, “பாஸ்… என்ன சொல்லட்டும் ?” என்று கேட்க, அவன் சமிஞ்சையால் சம்மதம் சொல்ல சொன்னான்.

நகைக்கடையில் அவளை தனிமையில் பார்க்க வேண்டுமென்று சொன்னதெல்லாம் அவளை வெறுப்பேற்றி பார்க்க. அதோடு இந்த செய்தித்தாள் செய்தி அவளுக்கு எரிச்சலை விளைவிக்கும் என்றிருந்தான்.

ஆனால் அவன் எண்ணங்களுக்கு நேர்மாராய் அவள் அவனை வீட்டிற்கு அழைத்திருக்கிறாள்.

அவள் எப்போது எதை செய்வாள் என்ற ஆழ்ந்த யோசனை. 

அவள் கோபம் அலட்சியம் புன்னகை, இவற்றில் எது உண்மை ?

எது அவளுடைய உண்மையான முகம்.

அவள் என்ன எண்ணத்தோடு தன்னை வீட்டிற்கு அழைத்திருப்பாள் என்று சிந்திக்க தொடங்கினான்.

ஆனாலும் இப்படி ஒரு வாய்ப்பு வரும் போது விட முடியுமா? 

அவன் மனதில் அவள் மீது கனலாய் எறிந்து கொண்டிருந்த மோகத்தீயிற்கு அவளின் அழைப்பு எண்ணெய் வார்ப்பது போல இருந்தது.

எப்போது அவளை சந்திப்போம் என்று காத்திருப்பு அவனுக்குள் தவிப்பாய் மாறிக் கொண்டிருந்தது. 

நேரம் கடந்து போகாமல் அவனின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தது.

எதிர்பார்ப்போடு அந்த காத்திருப்பையும் சிரமப்பட்டு கடந்தவன் தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கம்பீரமாய் ஜென்னியின் வீட்டிற்குள் நுழைந்தான். 

எப்போதும் கூடவே இருக்கும் அவனின் காரியதரிசி மனோவை கூட அன்று அவன் அழைத்து வரவில்லை. 

அவளுடனான தன் தனிமையிற்கு இடையூறு இருக்க கூடாதென்று. 

ஆனால் அவன் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று அவனுக்காக அங்கே காத்திருந்தது. அவனின் எதிர்பார்ப்பை எல்லாம் சுக்குநூறாய் உடைத்திருந்தது.

Comments Here

Leave a Reply

error: Content is protected !!