paadal thedal-4

paadal thedal-4

4

மரணவலி

அன்புச்செழியன் தன் அறையின்  பால்கனி வழியாக நின்று  மகளுக்கு இரவு உணவை ஊட்டி கொண்டிருந்தான். அப்போது அறைக்குள் நுழைந்த அவன் தாய் சந்தானலட்சுமி, “என்ன அன்பு நீ? அவ என்ன குழந்தையா… அவளே சாப்பிடுவா டா” என்று சொல்ல,

“இருக்கட்டுமே ம்மா… ஸ்கூலில்தான் அவளே சாப்பிடுறா இல்ல… இந்த ஒரு வேளை நான் ஊட்டிறனே!” என்று வாஞ்சையோடு சொன்ன மகனை தவிப்போடு பார்த்தார். மகன் மனதிற்குள் தேக்கி வைத்திருந்த துக்கத்தை எல்லாம் மொத்தமாய் தன் மகளிடம் அன்பாக காட்டி கொண்டிருந்தான் என்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அதற்கு மேல் மகனை எதுவும் கேட்காமல் வெளியேறியவர் தன் கணவன் தோள் மீது சாய்ந்து கொண்டு, “அன்புவை என்னால இப்படி பார்க்கவே முடியலங்க? எப்படி துறுதுறுன்னு இருப்பான்…ஓரிடத்தில இருக்கவே மாட்டேனே… ஆனா இப்போ” என்று அவர் வார்த்தை வராமல் திக்கி அழவும்,

“அழாதே லட்சு… கொஞ்ச நாள் போனா எல்லாம் மெல்ல மெல்ல சரியாயிடும்” என்று மனைவியை சாமாதனம் செய்ய பாண்டியன் அவ்விதம் சொன்னாலும் அவருக்கே அந்த நம்பிக்கை இல்லை.

அந்த வீடு இந்த ஆறு மாதமாய் சோகமயமாகத்தான் இருந்தது. யாராலும் பழையபடி இயல்பாக இருக்க முடியவில்லை. எப்படி இருக்க முடியும்? ரஞ்சனின் மரணம் ஒரு பக்கம், தாயில்லாமல் தவிக்கும் அன்புச்செல்வி மறுப்பக்கம், இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனைவியை இழந்த செழியனின் மனவலியோடு சேர்ந்து அவன் உடலில் ஏற்பட்ட குறை என்று அந்த கோர விபத்து அவர்கள் குடும்பத்தின் மொத்த சந்தோஷத்தையும் குழிதோண்டி புதைத்திருந்தது.

மகளிடம் முடிந்தளவு இயல்பாக இருக்க அன்புச்செழியன் முயன்றாலும் ஒரு நிலைக்கு மேல் அவனாலும் அந்த பொய்யான முகமூடியை போட்டிருக்க முடியவில்லை.

அன்புச்செல்வி தன் தந்தை கையால் சாப்பிட்டு கொண்டே, “ப்பா! அம்மா இனிமே வரவே மாட்டாங்களா?” என்று ஏக்கம் நிரம்பிய குரலோடு கேட்க, அவன் விழிகளில் நீர் நிரம்பி நின்றது.

எத்தனை முறை அவள் இந்த கேள்வியை கேட்ப்பாளோ? அவனும் சலிக்காமல் ஏதாவது ஒரு  பதிலை சொல்லி அவளை ஆறுதல்படுத்தி கொண்டிருந்தான். ஆனால் இன்று அவனால் பதில் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.

அன்புச்செல்வி விவரம் தெரிந்த குழந்தையாக இருந்தால் அவளிடம் தன் அம்மாவின் மரணம் குறித்து புரிய வைத்திருக்கலாம். விவரம் தெரியாத சிறு குழந்தையாக இருந்தாலாவது சுலபமா மறக்கடித்துவிடலாம்.

ஆனால் அவளோ அந்த இரண்டு ரகமும் இல்லை. தன் அம்மாவின் மரணத்தை புரிந்து கொள்ள முடியாத வயது அவளுக்கு. அன்புசெல்வியின் கேள்வி அவன் மனதை பிசைய சில நொடிகள் மௌனம் காத்தவன் தன் விழிகளில் வழிந்த நீரை அவளிடம் காட்டி கொள்ளாமல் துடைத்து கொண்டே,

“உனக்கு ஒன்னு தெரியுமா குட்டிமா… நான் காலைல உன் பிரெண்ட் மீனாவை பார்த்தனே!” என்று பேச்சை மாற்றினான்.

“எப்போ எங்க?” என்று அவள் ஆச்சரியமாக,

“பிரின்சிபால் ரூம்லதான்… அவங்க அம்மாவும் கூட இருந்தாங்க… அவ லேட்டா வந்ததால உங்க பிரின்சிபால் அவளை கூப்பிட்டு வார்ன் பண்ணிட்டு இருந்தாங்க”

“ஆமா! ஆமா அவ சொன்னா…. அவங்க அம்மாவை கூட திட்டினாங்களாமே” என்றவள் மேலும்,

“இன்னைக்கு இல்ல… எப்பவுமே மீனா லேட்டு” என்றாள்.

“ஏன் அப்படி?”

“அவங்க அம்மா அவளை லேட்டா லேட்டா கூட்டிட்டு வந்து விடுறாங்க” என்று மீனாவின் பதிலை அப்படியே ஒப்பித்தாள் அன்புச்செல்வி.

மகள் சொல்வதை கேட்டு செழியன் சிரித்தான். அம்மாவை பற்றி கேட்ட அன்புச்செல்வி மீனா என்றதும் மொத்தமாக தான் கேட்ட விஷயத்தை மறந்து அவளை பற்றியே பேச ஆரம்பித்துவிட்டாள்.

மீனா என்ற ஒற்றை வார்த்தைக்குத்தான் அந்த சக்தி. தன் தோழி மீனாவை பற்றி பேசும் போது அவளிடம் உற்சாகம் கூடிவிடும். அவள் கவனம் திசை திரும்பியதில் செழியனின் மனம் லேசாக நிம்மதி அடைந்தது.

தன் தாய் இறந்த பிறகு அன்புச்செல்விக்கு ஏற்பட்ட வெறுமையை  நீக்கியதில் மற்ற யாரையும் விட மீனாவின் தோழமைக்கு அதிக பங்கு உண்டு.

அன்புச்செல்வி அமைதி பேர்வழி என்றால் மீனா அப்படியே நேர்மார். சரியான சேட்டை பேர்வழி. வாய் திறந்தால் மூடவே மாட்டாள். மீனாவின் சேட்டைகளில் அன்புச்செல்வியின்  துயரம் மறந்து போனது. தன் அம்மாவின் இழப்பிற்கு மாற்றான ஒன்றாக அன்புச்செல்வி தேர்ந்தெடுத்தது மீனாவின் நட்பை. இதனால் அன்புச்செல்வி முன்பு விட தன் தோழியை அதிகம் சார்ந்திருக்க தொடங்கினாள்.

அவர்களின் நெருக்கம் அதிகரித்தது. பள்ளியில் தன் மகளை அழைத்து வர செல்லும் போது செழியன் மீனாவிடம் பேசி பழகியிருக்கிறான். அதனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகம். அன்புசெல்வி வீட்டில் இருப்பதை விடவும் பள்ளியில் அதிக சந்தோஷமாக இருந்தாள். அதற்கு காரணம் மீனாதான் என்று அவனே நாளடைவில் புரிந்து கொண்டான்.

இதன் காரணத்தால் வீட்டில் கூட அன்புச்செல்வியின் வார்த்தைகளில் மீனாவின் பெயர்தான் அதிகம் வலம் வரும். செழியனுக்கு ஜானவியை நேரடியாக தெரியாவிட்டாலும் மீனாவின் மூலமாக பேசாமலே அவளும் அவனுக்கு அறிமுகம்தான். ஏன் அவர்கள் குடும்பத்தை பற்றியே அவனுக்கு அத்துப்படி!

அந்த சின்ன வாண்டுகள் இரண்டும் பேசி கொள்வதோடு அல்லாமல் வீட்டிலேயும் அதை அப்படியே பிரஸ்தாபித்து விடுவார்கள்.

அன்புச்செல்வி இன்றும் அதே போல் மீனாவை பற்றி பேசி கொண்டே உண்டு முடித்துவிட செழியன் அவளை அழைத்து கொண்டு தன் அறைக்குள் வந்தான். அப்போது சந்தானலட்சுமி அவர் கையில் ஒரு உணவு தட்டோடு வந்து நின்றார்.

“நான் சாப்பிட்டிட்டேன்… எனக்கு போதும்” என்று அன்புச்செல்வி தனக்குத்தான் பாட்டி எடுத்து வருகிறாரோ என்று எண்ணி அலறினாள்.

“இது ஒன்னும் உனக்கு இல்லடி… என் பையனுக்கு” என்று சந்தான லட்சுமி பேத்தியிடம் நொடித்து கொள்ள, “நான் அப்புறமா சாப்பிடுறேன் ம்மா… எனக்கு பசிக்கல” என்று உரைத்த மகனை கோபமாக பார்த்தவர்,

“இப்படிதான் சொல்லுவ… அப்புறம் சாப்பிடாமலே படுத்திருவ” என்றார்.

“சரி நானே சாப்பிடுறேன் தட்டை குடுங்க” என்றவன் கையை நீட்ட அவர் மறுத்தபடி,

“முடியாது… இன்னைக்கு நானே உனக்கு ஊட்டி விடுறேன்” என்ற சாப்படை பிசைந்து கொண்டே தன் கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்து கொண்டார்.

“ம்மா… பாப்பா முன்னாடி ஆழாதீங்க ம்மா” என்றவன் குரலை தாழ்த்தி சொல்ல,

“என் வேதனை எனக்கு… அதென்ன உன் பொண்ணுக்கு மட்டும் நீ ஊட்டிர… என் பிள்ளைக்கு நான் ஊட்ட கூடாதா? வாயை திறடா” என்று மிரட்டினார்.

“பாட்டி சொல்றாங்க இல்ல… வாயை திறங்க ப்பா” என்று அன்புவும் பெரிய மனுஷிதனமாய் தன் தந்தையிடம் மிரட்டலாய் சொல்ல, செழியனோடு சேர்த்து சந்தானலட்சுமியும் சிரித்துவிட்டார்.

இந்த காட்சிகளை வெளியே நின்று பார்த்து கொண்டிருந்த பாண்டியன், “அப்படி சொல்லுடி என் தங்ககுட்டி” என்று பேத்தியை வாரி அணைத்து கொண்டார்.

செழியனுக்கு ஊட்டிவிட்டு கொண்டிருக்கும் போதே தாயின் மனம் தாங்காமல் அவன் நிலையை எண்ணி கண்ணீர்விட, “அதான் நான் சாப்பிடுறேன் இல்ல… இப்ப ஏன் நீங்க அழறீங்க?” என்று கேட்டான்.

ஆனால் அவர் பதில் பேசாமல் அழுது கொண்டே இருக்க, “நீங்க இப்படி அழுதீங்கன்னா நான் ஊட்டிக்க மாட்டேன்… சொல்லிட்டேன்” என்று அவன் முகத்தை திருப்பி கொள்ள, “இல்ல இல்ல நான் அழல” என்றவர் சொல்லிய போதும் அவர் விழியில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

“உஹும்… இது சரிபட்டு வராது” என்றவன் தன் மகளை பார்த்து, “அன்பும்மா… நீ போய் அப்பாவோட கேமராவை எடுத்துட்டு வா… பாட்டியை இப்படியே அழுமூஞ்சியா ஒரு போட்டோ எடுத்து பெரிசு பண்ணி ஹாலில் மாட்டிடலாம்” என்றதும், “ஓகே” என்று அன்புசெல்வி கேமராவை எடுக்க போக,

“பிச்சிடுவேன் அப்பாவையும் பொண்ணையும்” என்று சந்தானலட்சுமி அழுவதை விடுத்து கோப நிலைக்கு மாறினார்.

அந்த நொடி சோகமெல்லாம மறைந்து எல்லோருமே சிரித்துவிட்டனர். மனம் ஒருவாறு லேசானது. அவர்கள் எல்லோரும் பேசி சிரித்திருக்க அன்புச்செல்வி சில நொடிகளில் தந்தையின் மடியிலேயே படுத்து உறங்கி போனாள்.

“ம்மா… பாப்பாவைஇன்னைக்கு  உங்க ரூம்லயே  படுக்க வைச்சுக்கோங்க… எனக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்கிற வேலை இருக்கு” என்று செழியன் சொல்லவும், பாண்டியன் தன் பேத்தியை தூக்கி தன் தோளில் கிடத்தி கொண்டார்.

“அன்பு” என்று சந்தானலட்சுமி மகனின் முகத்தை வாஞ்சையாய் பார்க்க, “என்னம்மா?” என்றான்.

“ரொம்ப நேரம் முழிச்சிருந்து உடம்பை கெடுத்துக்காதடா… சீக்கிரம் படுத்து நேரத்தோட தூங்கு” என்றார். “சரிம்மா” என்று அவன் சொல்ல அவன் கன்னத்தை பாசமாக வருடினார்.

தாயின் உள்ளம் மகனின் நிலையை எண்ணி உள்ளுர மருகி கொண்டிருந்தது. அதன் பிறகு செழியன் பன்னிரெண்டாம் வகுப்பு கணினி புத்தகத்தை புரட்டி பார்த்து கொண்டிருந்தான். சில நிமிடங்கள் அவற்றை பிரித்து பார்த்து கொண்டிருந்தவனின் மனம் அந்த சிந்தனையிலிருந்து விலகி அவன் அறையில் இருந்த புகைப்படங்கள் மீது நிலைகொண்டது.

ரஞ்சனி சில குழந்தைகளுக்கு இடையில் பூவாக அவளின் முத்து பல் வரிசை தெரிய அழகாக சிரித்து கொண்டிருந்தாள். அழகு தேவதை என்று சொன்னாலும் அது மிகையல்ல. வெண்மையான தோலும் குழி விழும் கன்னங்களும் அகண்ட மீன் விழிகளும் நீண்ட கரிய கூந்தலும் அவள் உண்மையிலேயே செழியனின் அழுகு தேவதைதான்.

ஒரு முறை பார்த்தால் மறுமுறை திரும்பி பார்க்க வைக்கும் வசீகர அழகு அவளுக்கு. இமைக்காமல் அவளின்  அந்த படத்தை பார்த்து கொண்டிருந்தவன் அந்த நினைவுகளை மனதில் நிறைத்து கொண்டான்.

நெடுஞ்சாலையில் வேகமாய் பறந்து கொண்டிருந்தது அந்த புது நவீனரக பைக்!

“ஸ்லோவா போ அன்பு!” என்று ரஞ்சனி முகமூடி கொள்ளைகாரி போல் தன் முகத்தை மறைத்து கொண்டு அவன் பின்னோடு அமர்ந்து கொண்டு  சொல்லவும், “ரோடே காலியா இருக்கு… இந்த மாதிரி நேரத்திலதான்டி ஸ்பீடா போக முடியும்… அப்புறம் ஒரு லட்சத்துக்கு பைக் வாங்கி என்ன பிரயோஜனம்… இந்த மாதிரி சான்ஸ் கிடைச்சா ரைட்டை என்ஜாய் பண்ணனும் பேபி” என்றான்.

“ஐயோ! அன்பு… பயமா இருக்கு… ஸ்லோவா போடா” என்றவள் கெஞ்ச, “சரி சரி” என்றபடி பைக்கின் வேகத்தை குறைத்தான்.

“முதல்ல அந்த முகமூடியை எடுடி… நம்ம அவுட் ஆஃப் சிட்டி வந்துட்டோம்” என்றவன் சொல்ல, “வேண்டாம் வேண்டாம்… யாரச்சும் பார்த்துடுவாங்க” என்று அவள் அச்சத்தோடு சொல்ல அவன் சத்தமாய் சிரித்தான்.

“என் கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா… என்னை எங்கடா கூட்டிட்டு போற” என்றவள் கோபமாய் கேட்டாள்.

“என்னோட முதல் மாச சம்பளம் வந்திருச்சு இல்ல… அதான் அதை ஜாலியா ஸ்பென்ட் பண்ண போறோம்”

“எங்க… ஹோட்டலுக்கா? சிட்டிக்குள்ளயே நல்ல நான் வெஜ் ஹோட்டல் இருக்குமே”

“சாப்பிடறதுலயே இருடி”

“அப்புறம் எங்கடா?”

“ஹ்ம்ம்… ரீசார்டுக்கு… இன்னைக்கு பூரா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரலாம்” என்றவன் சொன்ன தொனியே

அவளுக்கு திக்கென்றது. “உஹும்… அதெல்லாம் வேண்டாம்… நீ வண்டியை திருப்பு… நான் போனோம்” என்ற அவள் குரல் கம்மியது.

“அதெல்லாம் கிடையாது… நீ என் கூட வர” என்றவன் தீர்க்கமாக சொல்ல, “நோ… நெவர்” என்ற இவளும் பிடிவாதமாக சொல்ல பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு,  “இறங்குடி இடம் வந்தாச்சு” என்றான்.

அவள் தடாலடியாய் இறங்கிவிட்டு, “நான் உள்ளே வர மாட்டேன்… வீட்டுக்கு போறேன்” என்று திரும்பி நடக்கவும், “ஏ லூசு” என்று அவள் மண்டையில் தட்டி.

“நம்ம எங்க வந்திருக்கோம்னு உன் முகமூடியை கழட்டிட்டு பாரு” என்றான். அவள் முகம் மூடியிருந்த துப்பட்டாவை கழற்றிவிட்டு பார்த்தால் அது ஒரு ஆதரவற்றோர் இல்லம். அவள் முகம் வியப்பு குறியை காட்ட அவன் அவளை பின்தொடர சொல்லிவிட்டு முன்னே நடந்தான்.

அவன் முன்னமே அங்கிருந்த குழந்தைகளுக்கு தர வேண்டிய புத்தகம் புது காலணி புது துணிமணிகள் யாவும் ஏற்பாடு செய்திருந்தான்.

போதா குறைக்கு அவனின் நண்பன் பட்டாளமே அங்குதான் இருந்தது. அவர்களுக்கு எல்லாவற்றையும் வழங்கிவிட்டு அந்த தருணத்தை தன் கேமராவில் பதிவும் செய்து கொண்டான். அங்கிருந்த குழந்தைகளுக்கு அவனால் முடிந்த தேவைகளை அவன் பூர்த்தி செய்திருக்க அவனை ஆச்சரியமாக பார்த்த ரஞ்சனி, “உன்னோட முதல் மாச சம்பளத்தையும் மொத்தமா இங்கயே  செலவு பண்ணிட்டியா அன்பு!” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“ஆமா… பண்ணிட்டேன்…”

“இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்” என்றவள் முறைக்க,

“ஏன் ஓவர்? எங்க வீட்டில என்ன…  சம்பளத்தை நம்பித்தான் இருக்காங்களா… அப்பாவுக்கு பென்ஷன் வருது… அம்மாவுக்கு பேங்கல நல்ல சேலரி வருது… போதும் போதுமங்கற அளவுக்கு எனக்கு எல்லாமே கிடைச்சிருக்கு… அதே போல இந்த குழந்தைகளுக்கும் என்னால முடிஞ்சதை செஞ்சி குடுக்கணும்னு நினைக்கிறேன்… நமக்கு கிடைச்சதை எல்லோருக்கும் ஷேரி பண்றதுதானே உண்மையான என்ஜாய்மென்ட் ரஞ்சு” என்றவன் சொல்ல அவனை வியந்து பார்த்து கொண்டிருந்தவள்,

“உன்னோட ஒவ்வொரு சின்ன செயலில் கூட நீ என்னை இம்ப்ரஸ் பண்ணிக்கிட்டே இருக்க அன்பு” என்று சொல்ல அவள் உடனே அவளை தோளோடு அணைத்தபடி, “நிஜமாவா?” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

“போ அன்பு” என்று நாணத்தோடு அவனை விட்டு விலகி அந்த ஆசிரமத்தின் ஓரமாக இருந்த மரத்தில் சாய்ந்து சௌகரியமாக நின்று கொண்டு,

“அன்பு! நம்ம கல்யாணத்தை பத்தி வீட்டுல வந்து அப்பாகிட்ட பேசு டா” என்று சொல்ல, “இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி என்னடி பண்ண போறோம்… கொஞ்ச நாள் பேச்சுலர் லைஃப்பை என்ஜாய் பண்ணலாமே” என்றான்.

“என்ஜாய் பண்ண போறியா? ஒ! சாருக்கு காதலிக்கணும்னா மட்டும் இனிக்குது… கல்யாணம்னா கசக்குது இல்ல? என்னடா… என் கூட ஊரெல்லாம் சுத்திட்டு வேற எவளையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிற  ஐடியால இருக்கியா?” இந்த கேள்வியை கேட்கும்போது அவள் உக்கிர கோலமாக நின்றாள்.

“என்னடி பேசுற… இந்த ஜென்மத்தில நீதான்டி என் பொண்டாட்டி” என்று அவன் தன் கரத்தை அவள் கழுத்தில் மாலையாய் கோர்க்க, “அப்போ வந்து எங்க அப்பாகிட்ட ஒழுங்கா பேசு” என்று மிரட்டலாய் உரைத்தாள்.

“பேசிடுவோம்… ஆனா நான் கேட்டதை நீ இப்போ தரணும்” என்று கல்மிஷமான பார்வையோடு அவளை நெருங்க, “உஹும்… உன் பார்வையே சரியில்ல… நீ முதல்ல கையை எடு”   என்றாள்.

“பெருசா எல்லாம் எதுவும் இல்ல… சின்னதா… குட்டியா” என்றவன் சொல்லி தன் கண்களை சுருக்கி காண்பிக்க, “என்னது?” என்று குழப்பமாய் பார்த்தாள்.

“இந்த மச்சம்” என்றவள் உதட்டோடு ஒட்டியிருந்த அந்த மச்சத்தை அவன் சுட்டி காட்ட, “லூசாடா நீ… மச்சத்தை என்ன பிச்சியா தர முடியும்” என்றாள்.

“நினைச்சா தரலாம்” என்று அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவள் இதழை அவன் ஆழ்ந்து பார்க்கவும் அவள் உதடுகள் தந்தியடித்தன. மறுத்து பேச முடியாத நிலையில் அவன் பார்வை அவளை கட்டிப்போட்டது. கொஞ்சமே கொஞ்சம் நொடிகள்தான் என்றாலும் அவன் இதழ்கள் அவள் இதழ்களில் விளையாடிய சுவாரஸ்யமான தருணத்தையும் காதலில் கசிந்துருகி வாழ்ந்த நாட்களையும் அவனால் மறக்க இயலுமா அல்லது நினைக்காமல்தான் இருக்க முடியுமா?

அதே நொடி காதலியாய் மனைவியாய் உயிருக்காக நேசித்தவளின் உடல் தன் கண்ணெதிரே இரத்த வெள்ளத்தில உயிருக்காக துடித்து கொண்டிருக்க, வலி உயிர் போக வீழ்ந்து கிடந்த இடத்தில் இருந்து அவனால் எழுந்து கொள்ள முடியவில்லை.

அவளை தூக்கி காப்பாற்ற கூட முடியாத இயலாமையில் கிடந்த அந்த நிமிடங்கள் அவனை இன்றவளவும் உயிரோடு கொன்று புதைத்து கொண்டிருந்தது. இடது காலில் எலும்புகள் நொறுங்கி மரணவலியோடு,

“ரஞ்சுசுசுசுசுசு” என்று கத்தி கதறி கொண்டே கண்விழுத்து பார்த்தான்அன்புச்செழியன்.

தன்னவளின் நினைவுகளோடு இருக்கையில் அமர்ந்தபடி உறங்கி போனவனுக்கு அவன் வாழ்க்யை சீரழித்த அந்த கோர விபத்தா கனவாக வரவேண்டும். உயிரின் அடிஆழம் வரை வலிக்க உடலெல்லாம் நடுங்க மனம் கனத்தது.

“ரஞ்சு” என்று அவள் புகைப்படங்களை பார்த்து கண்ணீர் வடித்தவன் மெல்ல தன் ஸ்டிக்கை பிடித்து எழுந்து வெளியே வந்து தண்ணீரை பருகி தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி கொண்டான். துயர் நீங்காவிடிலும் மனம் அமைதிப்பட்டது.

ஆனால் அதேநேரத்தில் அமைதி இல்லாமல் தவித்தாள் ஜானவி. அலுவலகத்தில் நடந்த விஷயங்களை பற்றி யோசித்து கொண்டே தன் அறையில் இரவெல்லாம் நடந்து கொண்டிருந்தாள். ராஜன் அவளை மட்டும் மிரட்டவில்லை. வீட்டிற்கும் வந்து தன் கைவரிசையை காட்டியிருக்கிறான்.

மீனாவை அவனுடன் அனுப்பும்படி அவன் செய்த கலவரத்தில் அவர்கள் வீடே மிரண்டு போயிருந்தது. மீனா மிரட்சியில் அழுது கொண்டேஉறங்கி போயிருந்தாள்.

அதேநேரம் ஜானவியின் முகத்தில் இருந்த காயத்தை பார்த்த கிரிஜா, “என்னாச்சு ஜானு?” என்று பதற,

அவரை கோபமாக முறைத்தவள், “நீங்க எனக்கு கட்டி வைசீங்களே ஒரு உத்தம புருஷன்… அந்த ஆளு எனக்கு கொடுத்த பரிசு” என்றாள்.

“உன் ஆபீசுக்கும் வந்து கலாட்டா பண்ணாரா?”

“பின்ன… நான் அவன் கூட வந்து வாழலன்னா அந்த ஆளு என்னை சாகடிச்சிருவானாம்? மிரட்டிட்டு போறான்” என்று அவள் எரிச்சலோடு சொல்ல, கிரிஜா அப்படியே அதிர்ந்து நின்றார்.

ஜானவி மேலும், “என்னம்மா… அப்படியே உரைஞ்சி போய் நிற்கிறீங்க… நான் இதுக்கப்புறமும் அந்த ஆளு கூடதான் வாழணும்னு சொல்ல போறீங்களா?” என்றவள் எள்ளலாய் கேட்க, “ஜானு” என்று சங்கரன் பேச ஆரம்பித்தார்.

“நீங்க எதுவும் பேசாதீங்கப்பா… பேசவே பேசாதீங்க… இன்னைக்கு நான் இந்த நிலமையில இருக்கேன்னா… அதுக்கு நீங்கதான் காரணம்… நீங்க  மட்டும்தான் காரணம்” என்றவள் விழிகள் நீரை சுரக்க வெறுப்போடு தன் தந்தையின் புறம் திரும்பி,

“ஏன் இப்படி பண்ணீங்க… என் வாழ்க்கையை ஏன் இப்படி அழிச்சிட்டீங்க?” என்று அவரை நோக்கி நேரடியாக ஈட்டியாக பாய்ந்தது அவளின் கேள்வி!

அவரால் அவளை எதிர்கொள்ள முடியவில்லை. அப்படியே சோபாவில் அமர்ந்து தலையை கவிழ்ந்து கொள்ள,

“வாயை மூடு ஜானு” என்று அதட்டிய கிரிஜா, “உனக்கு இப்படி எல்லாம் நடக்கும்ன்னு அவருக்கு மட்டும் என்னடி ஜோசியமா தெரியுமா? பார்த்து பார்த்து விசாரிச்சுதான்டி கட்டி குடுத்தாரு… உனக்கு நல்லது செய்யனும்னுதான் அந்த மனுஷன் நினைச்சாரு” என்று கணவனுக்கு அருகில் போய் நின்று கொண்டு அழ தொடங்கினார்.

“இதுவரைக்கும் நீங்க எனக்கு செஞ்சதே போதும் ம்மா… என் வாழ்கையில இனி என்ன முடிவு எடுக்கிறதா இருந்தாலும் அதை நானே எடுத்துக்கிறேன்… என் விஷயத்துல இதுக்கப்புறம்  யாரும் தலையிடாதீங்க…” என்று அழுத்தம் திருத்தாய் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றவள் இரவெல்லாம் தூங்கவில்லை.

இந்த விஷயத்தில் தான் இனி அமைதியாக இருப்பது சாத்தியப்படாது என்று எண்ணினாள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே! அதை போல் ராஜனுக்கு தன் அவாதரத்தை காட்ட வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள்.

 

 

error: Content is protected !!