Poovanam- 7

Poovanam- 7

பெருங்கோபத்துடன் வந்தவனை மிகவும் அமைதியாகவே வரவேற்றான் கிரிதரன்.

“வாங்க சிவா நீங்க வருவீங்கன்னு எதிர் பார்த்தேன்”

“அப்போ நான் உன்னை கொலை பண்ண போறதையும் நீ எதிர்பார்த்துருப்பே தானே” என்று கர்ஜித்தவனிடம்

“ஹாஹா… நல்ல ஜோக் சிவா”

“என்னோட கோபம் உனக்கு ஜோக்கா இருக்கா கிரி?”

“இல்ல சிவா இப்போ என்னோட டர்ன்”

“அன்னைக்கும் சரி, உங்க தங்கச்சிய தனியா பார்த்து பேசினப்பவும் சரி இதே கோபம் தான் எனக்கும் வந்தது.”

“இப்ப எதுக்காக கவுன்சிலிங்னு ஆரம்பிக்கிறீங்க கிரிதரன்?”

“அதான் அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து சொன்னேனே, அதுக்குள்ள மறந்து போச்சா? நீங்க முடிஞ்சுருச்சுன்னு சொன்னத திரும்பவும் ஆரம்பிக்க தான் இந்த கவுன்சிலிங்.”

“வேண்டாம் கிரி… இன்னொரு தடவை என் தங்கச்சி வாழ்க்கையில வராதீங்க, திரும்பவும் அவ உடைஞ்சு போறத பாக்குற சக்தி எங்களுக்கு இல்ல”

“இப்படியே அவளை பொத்தி வச்சு தான் தனக்கு தேவையானதா கூட வாய தொறந்து கேக்காம இன்னைக்கு இந்த நிலமையில இருக்கா. அத மாத்தணும்னு ஏன் நீங்க நினைக்க மாட்டேங்குறீங்க சிவா?”

“அவ உருக்குலைஞ்சு போனதுக்கு காரணமே நீங்க தான். உங்களால ஆரம்பிச்ச வினை அவளோட சுயத்தையே தொலைச்சு பார்த்துருச்சு.அவபட்ட கஷ்டத்த நேர்ல பாத்திருந்தா இப்படி பேச மாட்டிங்க கிரி”

“என்னோட விரோதிக்கு கூட இந்த கஷ்டம் வரகூடாது கிரி. வெளியே இருந்து பாக்குறவங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா படாது. ஆனா அனுபவிச்சவங்களுக்கு தானே தெரியும் அதோட வலி”

தங்கை அனுபவித்த துயரை நினைத்தவனின் மனதின் பாரம் கண்களில் தெரிய துக்கத்தில் பிதற்றியவனை தேற்றும் வழி அறியாது

“உங்க கஷ்டம் எனக்கு நல்லாவே புரியுது சிவா. என்னை மன்னிச்சிருனு சொல்ல மாட்டேன். என்னோட பொறுப்பை தட்டிக் கழிச்சதால வந்த வினை தான் இது.

நானும் அந்த நேரத்துல ஏதோ ஒரு கோபத்துல வீட்டுல சொல்ற பேச்ச கேக்க வேண்டிய சூழ்நிலை. மீற முடியலை என்னால.

இவ்வளவு கஷ்டம் அவளுக்கு வந்திருக்கும்னு நான் நினைச்சு பாக்கல சிவா. எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் குடுங்க”

“எதுக்கு மறுபடியும் அவ மனசு உடைஞ்சு போறத பாக்கவா? போதும் கிரி, நீங்க உங்க வழிய பார்த்து போங்க. எங்க பொண்ணை நாங்க பாத்துக்குறோம்” என்று சிவா சீற

“அப்போ என் பொண்ணை நான்தானே பாத்துக்கணும். என் குழந்தைய என்கிட்டே குடுத்துருங்க, அவ அம்மா இல்லாம வளரக்கூடாது. அவ அம்மாவையும் என்னோட அனுப்பி வைங்க. மொத்தத்துல என்னோட குடும்பத்த எனக்கு திருப்பி குடுங்க சிவா” என்று கிரி மன்றாட

“வேண்டாம் கிரி… இந்த ரெண்டு வருசமா தான் ரம்யா கொஞ்சம் சகஜமா நடமாடிக்கிட்டு இருக்கா. வெளியே அவ தைரியமா நடமாடனும், எல்லோரையும் போல சாதாரண வாழ்க்கை முறைக்கு திரும்பனும்னு தான் வேலைக்கு அனுப்புறது

உங்கள மறுபடியும் பார்த்த அன்னிக்கே பழைய வாழ்க்கை வேணாம்னு புலம்ப ஆரம்பிச்சுட்டா, அவளோட கண்ணீரை பாக்குற சக்தி எங்க வீட்டுல யாருக்கும் இல்ல.

என்னோட வாழ்க்கையே ரம்யாவும் பாப்பாவும் தான். இடையில நீங்க வராதீங்க. ரம்யாவை மறந்துட்டு வேற புது வாழ்க்கைய அமைச்சுக்கோங்க கிரி”

“என்னாடா சொன்ன… அவள மறக்கணுமா நான்? மொத உனக்குனு ஒரு வாழ்க்கை அமைச்சுகுற வழிய பாரு சிவா, அப்புறமா எனக்கு அட்வைஸ் பண்ணலாம். எந்த காலத்துலயும் என் பொண்ணையும், பொண்டாட்டியையும் விட்டு கொடுக்க முடியாது.” சீறிவிட்டான்.

“இப்ப கோபப்பட்டு ஒண்ணும் பிரயோசனம் இல்ல கிரிதரன், இன்னைக்கு இந்த அளவுக்கு யோசிக்கிறவங்க ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி என்ன செஞ்சீங்கனு ஞாபகம் இருக்கா?

என் தங்கச்சி கூட ஒண்ணா சேர்ந்து வாழ முடியாதுன்னு வாய் வார்த்தையா இல்லாம சட்டப்பூர்வமா விவாகரத்து பண்ணிருக்கீங்க, அது மறந்து போச்சா உங்களுக்கு?” எள்ளளுடன் சிவா கூற

“யார் மறந்து போனது? எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு, அது தற்காலிக விவாகரத்து தான். வீட்டுல போய் அந்த பத்திரத்த நல்லா படிச்சு பாருங்க; மறுபடியும் நாங்க ஒண்ணா சேர்ந்து வாழ சட்டத்துல இடம் இருக்கு.

அதோட நான் குடுக்குற இன்னொரு பைலையும் சேர்த்து படிங்க சிவா. அப்ப புரியும், நான் எந்த அடிப்படையில மறுபடியும் கோர்ட்க்கு போயிருக்கேன்னு தெரியும்” என்று அந்த கோப்பினை அவன் கைகளில் திணித்தான் கிரிதரன்.

அதனை படித்து பார்த்தவனுக்கு கோபம் ஏகத்துக்கும் ஏறியது.

“எல்லாத்துக்கும் சட்டம் இருக்குன்னு தெரிஞ்சு தான் அன்னைக்கு அந்த வேலைய பார்த்தீங்களா? என் தங்கச்சி என்ன நீங்க விளையாடுற பந்தா? வேணும் போது விளையாட்டிடு தூக்கிபோட?” என்று சீறியவனிடம்

“அப்படி எல்லாம் இல்ல சிவா… அந்த நேரத்துல என்னோட நிலைமை அப்படி.” என்று தன் நிலையை எடுத்துக் கூறியும் சமாதானமடையாமல் கோபத்துடன் தான் அவனிடம் விடை பெற்றான் சிவா…

“இப்படி ஒரு சட்டம் இருக்குறதே எனக்கு தெரியாதுப்பா. கரெக்டா லாக் பண்ணிருக்கான். அது போக அன்னைக்கு விவாகரத்து ஆனது கூட தற்காலிகம்னு சொல்லிக்கிட்டு இருக்கான், உண்மையாப்பா?” தந்தையிடம் சிவா கேட்க

“தெரியலையே சிவா, நானும் கவனிக்கலையே… உன் தங்கச்சிய பாக்கவே நமக்கு அப்போ நேரம் சரியா இருந்தது. இதுல அந்த பத்திரத்துல என்ன இருக்குனு கூட நல்லா படிச்சு பாக்கலையே” என்று சண்முகம் கவலையுடன் கூற

“நான் படிச்சு பார்த்திருக்கேன், அதுல மாப்பிள்ளை சொல்ற மாதிரி தான் இருக்கு” அமைதியாய் செல்வி தொடங்க

“அம்மா என்ன சொல்றே நீ? இத அன்னைக்கே சொல்றதுக்கென்ன?”

“என்னைக்கு சொல்லியிருக்கனும்னு நீ நினைக்கிற சிவா? விவாகரத்து பத்திரம் கைக்கு வந்த நாள்ல சொல்லிருந்தா இன்னும் கொஞ்சம் டென்சன் கூடி போயிருக்கும்.

அதுமட்டுமில்ல, அந்த சமயத்துல உங்க அப்பாவும் தானே குதிச்சுகிட்டு அந்த வீட்டு மனுசங்க கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தாரு.

இத சொன்னா, கூட கொஞ்சம் சண்டை போட்டு நிரந்தரமா பிரிச்சு வைக்க என்ன செய்யணுமோ அத செஞ்சுட்டு தான் மறுவேலை பார்த்துருப்பாரு” என்று செல்வி நொடித்துக்கொள்ள

“இருக்கட்டுமேம்மா, ஒரேடியா முடிஞ்சுருக்குமே. இப்போ பாரு திரும்பவும் ஆரம்பிக்குது” சிவா சலித்துக்கொள்ள

“ஆரம்பிக்கட்டும் சிவா… எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுப்போம்” என்று செல்வி கூறி விட, ஒரு வித தர்ம சங்கடத்துடன் ரம்யாவை எதிர் கொண்டான்.

“நீ ஸ்டராங்கா கிரி கூட வாழ முடியாதுன்னு சொல்லிடும்மா அது போதும். நாம பேசுறதுல தான் எல்லாமே அடங்கியிருக்கு. உன்னோட முடிவு தான் இங்கே முக்கியம்.

குழந்தைய மட்டும் கேட்டா கூட வாரத்துல ஒரு தடவ வந்து பார்த்துட்டு போக சொல்லலாம். ஆனா இவன் மறுபடியும் உன் கூட சேர்ந்து வாழணும்னு சொல்றான் அதான் இங்கே சிக்கல்” யோசித்தப்படியே அமர்ந்திருக்க

“இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் உக்கார போறீங்க, எல்லோரும் வந்து சாப்பிட்டு முடிச்சா எனக்கு வேலை முடியும். டேய் சிவா! பாப்பாவ கூட்டிட்டு வா… உன்கூடன்னா உக்கார்ந்த இடத்துலேயே அவளுக்கு சாப்பாடு இறங்கிரும். என்னால திரும்பவும் அவ பின்னாடி அலைய முடியாது” என்று சகஜமாய் பேசிக்கொண்டே செல்வி தன் வேலையை தொடர்ந்தார்.

ரம்யாவிற்கு ஆத்திரமும் ஆச்சரியமும் ஒன்றாய் வந்தது தன் அன்னையின் மீது. நீதிமன்ற முடிவினை தனக்கு தெரிவிக்காமல் இருந்ததும் அல்லாமல், அடுத்து என்ன செய்வது என்ற மனநிலையில் எல்லோரும் இருக்க, அவர் மிக இயல்பாய் நடமாடியது சற்றே மனதை நெருடவும் செய்தது. அதை தன் அண்ணனிடம் சொல்லவும் செய்தாள்.

“பார்த்தியான்னா… நாங்க எல்லோரும் இங்கே தவிச்சிக்கிட்டு இருக்கோம், ஆனா அம்மாக்கு அவங்க வேலை முடியலைங்கிற வருத்தம் மட்டும் தான் போல.”

“அப்படி இல்லை ரம்யா… அந்தந்த நேரத்துக்கு என்ன நடக்கணுமோ அது ஒழுங்கா நடந்தா தானே, அடுத்து நாம என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும். அதை தான் அம்மா செய்றாங்க” என்று தங்கைக்கு விளக்கம் அளித்தபடியே தன் செல்லக்குட்டியுடன் உணவு மேஜைக்கு வந்தான்.

“எனக்கு கலரிங் புக் வேணும் சிவா மாமா. அம்மா கிட்ட கேட்டா “நோ” சொல்லிட்டா” குழந்தை தன் பஞ்சாயத்தை ஆரம்பிக்க

“அடிக்கழுத… மாமாவ பேர் சொல்லி கூப்பிட்ரே… உதை படுவே ராஸ்கல்” என்று ரம்யா அதட்ட

“என்ன பாப்பா… சாப்பிடற நேரத்துல குழந்தைய திட்டறே” என்று சண்முகம் ரம்யாவை கடிந்து கொண்டிருக்கும் போதே

“இங்க நான் மட்டும் தான் பாப்பா… நீ ஒண்ணும் பாப்பா கிடையாது. தாத்தா நீ என்னை மட்டும் தான் பாப்பா சொல்லணும் சரியா” சின்னவள் கட்டளையிட

“போடி… அவர் எங்க அப்பா, என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவாரு” வம்பை வளர்த்து தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள் ரம்யா.

“மாமா… என் பேச்சை கேக்காமா நிறைய சேட்டை பண்ணிகிட்டே இருக்கா இந்த அம்மா… எனக்கு இந்த மம்மி வேணாம், வேற அம்மா வாங்கித் குடு” என்று புது விதமாய் பேச்சை ஆரம்பித்தது அந்த வாண்டு.

குழந்தையின் பேச்சில் எல்லோரும் சிரித்திட “இப்படி எல்லாம் சொல்ல கூடாது குட்டிம்மா… இது என்ன புதுப்பழக்கம்” சிவா கடிந்து கொள்ள,

“நீதானே சொன்னே அந்த கடையில இந்த பிஸ்கட் பிடிக்கலனா வேற பிஸ்கட் வாங்கிக்கோனு, அது மாதிரி எனக்கு இந்த அம்மா பிடிக்கல… அதனாலே வேற அம்மா வாங்கி குடு” என்று தெளிவாய் விளக்கினாள் அந்த சின்ன சிட்டு

“சும்மாவாடி உன்ன ராட்சசினு சொல்றேன்… என்னாமா வாய் பேசுற, சாப்பிட சொன்னா மட்டும் வாய பசை போட்டு மூடி வச்சுக்குறே, இப்படியெல்லாம் பேசக்கூடாது செல்லம்… எல்லோருக்கும் எப்போவும் ஒரு அம்மாதான் சரியா?” என்று பிள்ளையின் நெற்றியில் முட்டிகொண்டே சொன்னவனிடம்

“ஏன்டா என் பேத்தி பேச்சுக்கு என்ன குறைச்சல்? எவ்வளவு அழகா பேசுறா, அறிவுகுட்டிடா. இப்படி பேசினா தான் வெளியே நாளைக்கு பழகும்போது தைரியாமா பேச வரும்.

சும்மா எப்பபாரு மனசுக்குள்ளயே அடைச்சுப் போட்டுகிட்டும், பயந்துகிட்டும் இருந்தா ஒண்ணுக்கும் உதவாம போயிருவோம்” செல்வி எதேச்சையாக பேச

“அப்போ நான் அப்படி தான் இருக்கேனாம்மா?” ரம்யா பொரிந்தாள்

தான் பேசியதன் அர்த்தம் முழுதாய் அப்போது தான் செல்விக்கு புரிய “அப்படியேல்லாம் இல்லடி, ஏதோ பேச்சு வாக்குல வந்துருச்சு. கோபப்படாதே” என்று சொல்லிக் கொண்டுடிருக்கும் போதே விருட்டென்று தன்னறைக்கு சென்று விட்டாள் ரம்யா..

“உனக்கு கொஞ்சம் கூட அறிவில்ல, அவள பக்கத்துல வச்சுகிட்டே இப்படி பேசினா தாங்குவாளா அவ?” கோபத்துடன் சண்முகமும் சாப்பிடாமல்  எழுந்து விட,

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஆளாளுக்கு சாப்பிடாம போறீங்க. மனசுல பட்டத பேச கூடாதா? இந்த அளவுக்கு பேச கூட இந்த வீட்டுல உரிமையில்லையா” என்று அழுதபடியே செல்வியும் உள்ள சென்று விட

“என்னாச்சு மாமா? எதுக்காக எல்லோரும் போய்ட்டாங்க? நான் பேட் கேர்ள் மாதிரி பேசிட்டேனா? அதான் என்னை பாக்க பிடிக்காம எல்லோரும் போயிட்டாங்களா?” பிள்ளை தன் பங்கு விசும்பலை மாமனிடம் ஆரம்பிக்க

“அடடா என்னாச்சு என் குட்டிம்மாக்கு? உன்னை யாருக்குடா பிடிக்காமா போகும்? எல்லோருக்கும் தலவலிக்குதாம் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறாங்களாம்.. இப்போ நீயும் நானும் சாப்பிடுவோமா”

“எனக்கு வேண்டாம்” என்று ஒரேடியாய் மறுத்து விட்டு அவள் அன்னையிடம் சென்று விட்டாள்..

தாயின் பேச்சில் மனமுடைந்து அழுது கொண்டிருந்தவளின் அருகே வந்த குழந்தை “அழுகாதேம்மா… எனக்கு நீதான் வேணும்… வேற அம்மா வேணாம், நீ மட்டும் தான் குட் மம்மி, இனிமே மாமாவ பேர் சொல்லி கூப்பிடமாட்டேன்” உதட்டை பிதுக்கிக்கொண்டே கண்களில் கண்ணீரோடு சொல்ல மகளை வாரி எடுத்துக்கொண்டவள்

“அச்சோ! உன் மேல எந்த கோபமும் இல்லடா கண்ணா… அம்மாக்கு ரொம்ப தலைவலிச்சுச்சா அதான் வந்து படுத்துட்டேன். வாடா… உனக்கு ஊட்டி விடறேன்”

“நான் எல்லோரையும் கூட்டிட்டி வர்றேன்” என்று நகர்ந்தாள் சிட்டு.

சமையலறையில் அமர்ந்து கொண்டு கண்ணை கசக்கி கொண்டிருந்தவரின் கண்ணீரை தன் பிஞ்சுக் கைகளால் துடைத்துக் கொண்டே “தலை ரொம்ப வலிக்குதா பாட்டி. நான் தைலம் கொண்டு வரவா? அம்மாகிட்ட டைகர் போட்டது இருக்கு”

“ஒண்ணும் வேண்டாம் உங்கம்மாவே அத வச்சுக்கட்டும்”

“அப்போ நீ தாத்தாக்கு செய்ற மாதிரி கசாயம் செய்யவா, நீ சொல்றியா? என்று கேட்டுகொண்டே அங்கிருந்த ஸ்டுலை இழுத்துக்கொண்டு வர அதை தடுத்த வண்ணமே

“சும்மா இருக்க மாட்டியா நீ. இப்ப உன்னை யாரு இங்கே வரச் சொன்னது?”

“தலைவலி போனா தானே நீ சாப்பிட வருவே, அதான் நான் செஞ்சு குடுக்குறேன்”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீங்க போய் சாப்பிட்டு முடிங்க. நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்” என்ற பாட்டியின் சொல்லை கேட்காமல்

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம் சரியா?” என்ற பேத்தியை தூக்கிக்கொண்ட சண்முகம்

“அப்படியே பாட்டிய இழுத்துட்டு வாடா தங்கம். பச்ச புள்ளைய கெஞ்ச வைச்சுகிட்டு இருக்குறவளை எல்லாம் வாயால கூப்பிடக் கூடாது”

“ஆமாம்மா என்னை இழுத்துட்டு போ, உங்க தாத்தாவுக்கு சந்தோசம் பொத்துக்கிட்டு வந்துரும்” என்று முகத்தை சுளுக்கியவாறே உணவு மேஜைக்கு வர அதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியவில்லை பிள்ளையால்

“எனக்கு தூக்கம் வருது மாமா… என்னை ரூமுக்கு கூட்டிட்டு போ… நான் தூங்கணும்” என்று மாமனின் தோள் தேட ஆரம்பித்து விட்டாள். நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்

“குட்டிம்மா ரெண்டு வாய் சாப்பிட்டு அப்புறம் தூங்குவோம் சரியா? இன்னைக்கு புது ஸ்டாரி புக் கொண்டு வந்துருக்கேன், என்னோட செல்ல ராட்சசி குட் கேர்ளா கதை படிச்சுட்டு தூங்குவியாம்” என்று கொஞ்சியவனின் மந்திரம் நன்றாய் வேலை செய்தது.

என்னதான் தாய் சமாதானப்படுத்தினாலும் ரம்யாவின் குழப்பம் கொண்ட மனது அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகவில்லை. தாய் சொன்னவற்றை மீண்டும் மீண்டும் அலச தொடங்கியது.  

மனக்குழப்பம் ஏற்கனவே அதிகரித்திருந்த வேளையில் தாயின் பேச்சு மேலும் அழுத்தத்தை கூட்டிட உணர்ச்சிகளை கட்டுபடுத்தும் வழி அறியாது தன் நிலையை மாற்றி அமைத்த கடந்த காலத்தை எண்ணி அவள் மனது பயணித்தது …

error: Content is protected !!