Rainbow Kanavugal-31

Rainbow Kanavugal-31

31

சுரேஷ் சொன்ன விலாசத்திற்கு எப்படியோ தேடி பிடித்து இந்து வந்து சேர்ந்தாள். அங்கே வரும் பேருந்து விவரங்களை குறித்தும் அவன் விவரித்திருந்தால் மருத்துவமனையிலிருந்து அவள் நேரடியாக வேலை முடிந்த கையோடு கிளம்பிவந்துவிட்டாள்.

ஏதோ ஒரு தைரியத்தில் அவ்விடத்திற்கு வந்துவிட்ட போதிலும் அங்கு வந்து சேர்ந்த நொடி அவளுக்கு உள்ளுர நடுங்கியது. இதயத்துடிப்பு தடதடவென உயர, சுரேஷ் அவளை பார்த்துவிட்டு, “உள்ளே வா இந்து” என்றான்.

அவன் முகத்தில் என்றுமில்லாமல் ஒரு ஒளிவட்டம் வேறு தெரிந்தது. இத்தனை நாட்கள் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். அவன் முகம் அத்தனை பொலிவாக இருந்தது. பார்க்கவும் ரொம்பவும் மகிழ்ச்சியாக தெரிந்தான்.

காரணம் புரியாமல் குழம்பி நின்றாள்.

‘அவன் இங்க நம்மல வர சொன்னதுல எதாச்சும் உள்குத்து இருக்குமோ?’ தாமதமாக வந்த யோசனை.

நகையை வாங்க வேண்டும் என்பதை தவிர வேறு எது பற்றியும் யோசிக்காமல் புறப்பட்டு வந்தவளுக்கு தற்போது நாம் செய்யும் காரியம் சரிதானா என்ற சந்தேகம் உதித்தது.

அவள் தயங்கி நிற்பதை பார்த்த சுரேஷ், “வா இந்து” என்று மீண்டும் அழைத்தான்.

“நான் உள்ளே எல்லாம் வரல… நீ நகையை கொடு… நான் கிளம்பனும்” என்றாள் அவள்.

“இங்கயேவா? எப்படி இந்து” என்று இழுத்தவன்,

“உள்ளே வா… பேசிக்கலாம்” என்றவன் சொல்ல என்ன செய்வதென்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.

இத்தனை தூரம் வந்துவிட்டு யோசிப்பானேன். நகையை பெற்று கொண்டு உடனடியாக புறபட்டுவிடலாம் என்ற எண்ணியவள் உள்ளே செல்வதற்கு முன்னதாக அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டாள்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருவாகவே தெரிந்தது. அதுவுமில்லாமல் அந்த விலசாத்தில் இருப்பது வீடு இல்லை. அது ஏதோ கடை என்றே தோன்றியது.

அவளும் உள்ளே நுழைந்தாள். வெளியே கடையின் தோற்றத்தில் இருந்த போதும் உள்ளே அதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை. பொருட்கள் ஏதுமின்றி  அந்த இடமே காலியாக கிடந்தது. உட்கார கூட நாற்காலிகள் இல்லாமல் வெறிச்சோடி இருந்த அந்த முகப்பறையை அவள் நோட்டம் விட்டு கொண்டிருக்க,

“நான் சென்னை வந்த புதுசுல இந்த கடையிலதான் தங்கி வேலையும் செஞ்சேன்… ஒனர் என் பிரெண்டுக்கு பழக்கம்… நான் இங்கேயே தங்கிக்க ரூம் கூட கொடுத்தாரு… நல்ல மனுஷன்… எல்லோர்கிட்டயும் ரொம்ப நல்லா பழகுவாரு… அவர் குடும்பத்தோட வெளிநாட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலை… என் மேல அவருக்கு ரொம்ப நம்பிக்கை… கடை சாவியை என்கிட்ட கொடுத்துட்டு போனாரு… வேற யாருக்காச்சும் வாடகைக்கு விட சொல்லி இருந்தாரு… கொஞ்ச நாள் ஒரு சூப்பர் மார்கெட் இருந்துச்சு… அவங்க காலி பண்ணி போன பிறகு இங்க வேற யாரும் இதுவரைக்கும் வாடகைக்கு வரல” என்றவன் சொல்லி முடிக்கும் வரை மௌனமாக இருந்தவள்,

“இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத கதையெல்லாம்… என் நகையை கொடு நான் போகணும்” என்றாள்.

“ஏன் இந்து யாருன்னே தெரியாதவன்கிட்ட பேசுற மாதிரி பேசுற?”

“நீ யாரு எனக்கு? உன்கிட்ட நான் பேச என்ன இருக்கு” அவள் எடுத்தெறிந்து பேச,

“நம்ம பேச எதுவுமே இல்லையா இந்து?” என்று வாஞ்சையான பார்வையோடு கேட்க,

“இல்லை” என்று அவள் முகத்திலறைந்தது போல் பதில் கொடுத்தாள்.

“உனக்கு இல்லாம இருக்கலாம்… ஆனா எனக்கு இருக்கு… உன்கிட்ட நான் நிறைய பேசணும்… பேசியே ஆகணும்” என்று அழுத்தத்துடனும் பிடிவாதமாகாவும் சொன்னான்.

அவளும் பதிலுக்கு, “நான் என் நகைக்காகதான் இங்க வந்தேன்… மத்தபடி உன்கிட்ட பேசவோ உன் பேச்சை கேட்கவோ இங்க வரல” என்றாள்.

“ஏன் ஏன் கேட்க மாட்ட? அப்படி என்னடி நான் உனக்கு செஞ்சுட்டேன்… உன்னை காதிலிச்சு கர்ப்பமாக்கி கை விட்டுட்டு போனேனா? இல்லை உன்னை கல்யாணம் பண்ணிட்டு நடுரோட்ல விட்டுட்டு ஓடி போயிட்டேனா? என்னவோ ரொம்ப ஓவராத்தான் பண்ற” என்றவன் ஆக்ரோஷமாக கேட்க. இந்து வாயடைத்து நின்றுவிட்டாள்.

சுரேஷ் அதே கோபத்தோடு, “ஆமான்டி தப்புதான்… என்னை நம்பி வந்த உன்னை அப்படி விட்டுட்டு போனது தப்புதான்… ஆனா நான் வேணும்னா அப்படி செஞ்சேன்

என் சூழ்நிலை அப்படி… அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியல” என்றான்.

“செய்றதெல்லாம் நீ செஞ்சுட்டு சூழ்நிலை மேல பழியை போட்டு தப்பிச்சிக்கலாம்னு பார்க்கிறியா?” என்றவள் எரிச்சலும் கோபமுமாக கேட்க,

“என்ன? எல்லாத்துக்கும் நான் மட்டும்தான் காரணம்னு என் மேல மட்டும் பழியை போடுற?… நடந்த எல்லா தப்புலையும் உன்னோட பங்கும் இருக்கு இல்ல” என்றான் அழுத்தமாக!

அவள் அதிர்ந்து நிற்க அவன் மேலும் தொடர்ந்தான்.

“நீ என் கூட வராதன்னு நான் அப்பவே உன்கிட்ட சொன்னேன்… கேட்டியா? சொல்ல சொல்ல கேட்காம என் கூட வரன்னு அடம்பிடிச்ச… அப்ப கூட நான் உன்னை நகையெல்லாம் எடுத்துட்டு வரவே சொல்லல… நீயாதான் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்த…

அந்த டைம்ல எனக்கு நீ நகை எடுத்துட்டு வந்த விஷயம் கூட தெரியாது… பேக் மாறினது… அதுக்குள்ள உன் நகை இருந்ததெல்லாம் எனக்கே தெரியாம நடந்த விஷயம்… அப்ப கூட உன் நகைகளை பார்த்ததும் உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்துடனும்னு நினைச்சேன்… ஆனா அப்ப இருந்த சூழ்நிலை… என்னால முடியல” என்றவன் சொல்லி முடிக்கும் போது அவள் திகைத்து  நின்றாள்.

சில நொடிகள் மௌனம் காத்தவள், “நீ சொல்றது என்னவோ சரிதான்… எல்லாத்துக்கும் நான்தான் காரணம்… உன்னை காதலிச்சது… உன் பின்னாடி பைத்தியக்காரி மாதிரி சுத்தினது… நீதான் என்னோட எல்லாமேன்னு உன்னை நம்பி என்னை பெத்த அப்பா அம்மாவை கூட தூக்கி போட்டுட்டு வந்ததுன்னு எல்லாமே என்னோட தப்புதான்… என்னோட தப்பு மட்டும்தான்” என்று உணர்ச்சி பெருக்கோடு சொல்லி முகத்தை மூடி அழுதவள் விசும்பி கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்து,

“இந்த தப்பை எல்லாம் கொஞ்சமே கொஞ்சமாச்சும் சரி செஞ்சிட முடியாதாங்கிற நப்பாசையிலதான் அந்த நகை வேணும்னு உன்கிட்ட நான் கேட்டது கூட” என்றாள்.

அவள் முகமெல்லாம் கண்ணீர் வழிந்தோடிய தடங்கள். அவள் வலிகளை பார்த்து சுரேஷ் மனமுருகி, “அழாதே இந்து… எனக்கு கஷ்டமா இருக்கு” என்றான்.

அவனை ஏளன பார்வை பார்த்தவள், “நான் இன்னைக்கு நேத்து அழல… நீ என்னை விட்டுட்டு போன நாளில இருந்து இப்படிதான் அழுதிட்டு இருக்கேன்… இந்த மூணு வருஷத்துல ஏமாற்றமும் அழுகையும் எனக்கு பழகி போச்சு?” என்றாள் விரக்தியோடு!

“இல்ல இந்து… இனிமே உனக்கு அந்த மாதிரி எந்த கஷ்டமும் வராது… நான் வரவும் விடமாட்டேன்… உன் கூடவே இருந்து உன்னை கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துக்கிறேன்”

அவனை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்தவள், “என்ன பேசுற நீ? இப்படியெல்லாம் பேச உனக்கு அசிங்கமா இல்ல… கல்யாணம் ஆகி ஒரு புள்ளைக்கு தகப்பனா இருந்துக்கிட்டு… சை!” என்று முகம் சுளிக்க,

“ஐயோ இந்து… அனு என் மனைவி கிடையாது… அருண் என் சொந்த மகனும் கிடையாது…

ரெண்டு பேரும் ஊருக்காக கணவன் மனைவியா நடிச்சோமே ஒழிய மத்தபடி எனக்கும் அனுவுக்கும் இடையில எந்த உறவுமே இல்ல… அது ஒரு சின்ன அக்ரீமென்ட்… அவ்வளவுதான்” என்று அவன் சொல்லி முடிக்க, அவள் பேச்சற்று போனாள்.

அவள் புரியாமல் குழம்பி நிற்க அவன் மேலும், “நான் சொன்னதை நம்பலன்னா அனுவுக்கு நான் போன் போட்டு தரேன்… நீ நேரடியா அவங்ககிட்ட கேட்டு பாரு” என்றான்.

அதிர்ச்சிக்கு எல்லாம் பேரதிர்ச்சியாக அவன் சொன்னவற்றை உள்வாங்கியவள் ராஜிமா அன்று அனுவை பற்றி சொன்னவற்றையும் சேர்த்து யோசித்து பார்த்தாள்.

அவன் சொன்னதில் அதிகம் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே அவளுக்கு தோன்றியது.

அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எதுக்கு இப்படி ஒரு நடிப்பு? யாருக்காக இந்த போலியான வாழ்க்கை… யாரை ஏமாத்த இப்படியெல்லாம் பண்ணி இருக்கீங்க?” என்று கேட்க,

“யாரையும் ஏமாத்தணும்னு நாங்க இப்படி செய்யல இந்து… ஆனா எங்க ரெண்டு பேருக்கும் தனிப்பட்ட முறையில சில தேவைகள் இருந்துச்சு… எனக்கு சினிமால நடிக்கணும்… அனுக்கோ சினிமால இருக்க அவங்க ஸ்டேட்டஸ் பாதிக்கபட கூடாது… அதனாலதான் இப்படி ஒரு அக்ரீமென்ட்” என்று முடித்தான்.

“உன் கனவு லட்சியத்துக்கு என்னை நடுரோட்ல விட்டுட்டு போன… இப்போ அதே லட்சியதுக்க்காக உன் சுயமாரியாதையை  அடமானம் வைச்சிட்டு அடுத்தவன் புள்ளைக்கு அப்பாவாகி இருக்கு பாரு… என்ன மாதிரி கேவலாமான பிறவி நீ சை!” என்று சொல்லி அவனை அசூயையாக அவள் பார்த்த பார்வையில் அவன் உக்கிரமாக, “இந்து” என்று கத்தினான். ஆனால் துளியளவும் அவன் உணர்வுகளை அவள் பொருட்படுத்த்மால் தொடர்ந்து பேசினாள்.

“நல்ல வேளை… அன்னைக்கே நீ என்னை விட்டுட்டு போயிட்ட… ஒரு வேளை நான் உன் கூட வந்து நமக்கு கல்யாணம் ஆகி இருந்தா… அப்புறம் உன் லட்சியத்துக்காக என்னை கூட எவன்கிட்டயாச்சும் வித்திட்டு போயிருப்ப” என்று அவள் சொன்ன மாத்திரத்தில் அவளை அவன் பளாரென்று அறைந்துவிட அவள் தரையில் வீழ்ந்தாள்.

அடித்த பிறகே தான் என்ன காரியம் செய்துவிட்டோம் என்று நிதானித்து யோசித்தவன் தரையில் வீழ்ந்திருந்த இந்துவின் அருகில் செல்ல அவள் பயந்து போயிருந்தாள்.

காயம்பட்ட கன்னத்தை பிடித்தபடி அவனை அச்சத்தோடு நோக்க, “சாரி இந்து… நீ அப்படி பேசுனதும் எனக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு… ஏன் இந்து? ஏன் நீ என்னை புரிஞ்சிக்காம வார்த்தையால இப்படி என்னை குத்தி காயப்படுத்துற” என்றவன் மேலும் அவளின் பயந்த முகத்தை பார்த்து நிறுத்தி நிதானித்து பேசினான்.

“உனக்கு தெரியுமா? இந்த நிமிஷம் வரைக்கும் உன்னை தவிர வேறெந்த பொண்ணையும் நான் திரும்பி கூட பார்த்ததில்லை…

என் லட்சியம் நிறைவேறன பிறகு நானே உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கணும்னு நினைச்சேன்… உன்னை கல்யாணம் பண்ணி நீயும் நானும் ஒரு குடும்பமா சந்தோஷமா வாழனும்னு பெருசா ஆசையெல்லாம் வைச்சிருக்கேன்… ஆனா என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டிட்டியே இந்து?” என்று அவன் வலியோடு சொன்னதை கேட்டு அவள் உள்ளம் நிலைகொள்ளாமல் தடுமாறியது.

அவன் பேசிய அந்த சில கணங்களில் அவனுடனான அந்த பழைய காதல் நினைவுகள் அவள் மனக்கண் முன்னே காட்சிகளாக விரிய தொடங்கின.

இதெல்லாம் இனி சாத்தியமா? என்ற ஒரு கேள்வி அவள் மனதில் எழ, காட்டாற்று வெள்ளமாக பெருகிய அவள் சிந்தனைகள் தடுப்பணைகளை உடைத்து கொண்டு வெளியேறின.

என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் அவள் மௌனசிலையாக அமர்ந்திருக்க சுரேஷ் அவளின் நகை பையை எடுத்து வந்து அவளருகில் அமர்ந்தான்.

“இத பாரு இந்து… உன் நகையெல்லாம்… நீ கொடுத்த மாதிரி அப்படியே இருக்கு” என்க, அவற்றை நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஆச்சரியம்தான். எப்படி அன்று அவள் எடுத்து வந்திருந்தாளோ அதே பையில் அப்படியே இருந்தது. அத்தனை நேரம் இல்லாமல் அப்போதுதான் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஏன் இந்து? இப்ப கூட என்னை நீ நம்பலையா?” என்றவன் கண்ணீரோடு கேட்க அவளால் எதுவுமே பேச முடியவில்லை. இருதலை கொள்ளி எறும்பாக அவள் தவித்திருந்தாள். அவள் உள்ளம் ஒரு நிலையில் இல்லை. இப்படியா அப்படியா என்று அவள் உள்ளம் ஊசலாடி கொண்டிருக்க,

“இந்து இங்க பாரேன்” என்று வெகுஆர்வமாக அவன் காட்டியதை பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அவன் கரத்தில் மஞ்சள் கயிற்றுடன் பிணைத்திருந்த ஒரு தாலி இருந்தது.

பதறியபடி அவனை அவள் நிமிர்ந்து நோக்க, “இதை நான் உனக்காகதான் வாங்கினேன்… இதுக்கு மேலயும் என்னால நம்ம காதலை விட்டு கொடுக்க முடியாது… இதுவரைக்கும் நடந்தது எல்லாம் போகட்டும்…

இனிமே எல்லாமே நல்லதாகவே நடக்கும்… எனக்கு ஒரு படவாய்ப்பு கிடைச்சிருக்கு… ஹீரோவா நான் புக் ஆகியிருக்கேன்.. எல்லாமே அனுவாலதான்… நாளைக்கே ஷூட்டிங்காக நான் பெங்களூர் போக போறேன்… பேசாம நீயும் என் கூட வந்திரு” என்று அவன் சொல்லி கொண்டிருக்க அவள் கவனம் அங்கே இல்லை. அவள் காதில் அவன் சொன்னது அனைத்தும் அறைகுறையாகவே விழுந்தன.

அவன் கையிலிருந்த தாலி, அப்போது யாருக்காக அல்லது எதற்காக என்று தெரியாமல் அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த அவளின் தாலியை நினைவுப்படுத்தியது.

அந்த தாலியின் மீதும் அதை கட்டியவன் மீதும் அவளுக்கு எந்தவித பிணைப்பும் இதுநாள் வரையில் கிடையாதுதான். தாலி செண்டிமெண்ட் என்பது அணிந்து கொண்டிருக்கும் பெண்ணின் மனநிலையை பொறுத்தது தவிர தமிழ் சினிமாக்களில் காட்டுவது போல அது பெரிய மாய மந்திர கயிறும் அல்ல. அதற்கு மிகபெரிய சக்திகளும் இல்லை. அது அவரவர்களின் எண்ணங்கள் சார்ந்த ஒன்று. அவ்வளவே!

அப்படியிருக்க அது அவளை பொறுத்துவரை சாதாரண மஞ்சள் கயிறுதான். அந்த சிறிய கயிறு அவளை கட்டி போட்டுவிடவும் முடியாது.

சுரேஷ் அவள் தோள்களை பிடித்து உலுக்கிய நொடி அவளின் ஆழ்ந்த யோசனைகள் கலைந்தன. பதறியபடி எழுந்து நின்றவள் இனி தான் ஒரு நொடி கூட இங்கே இருக்க கூடாது என்ற முடிவோடு தன் தோள்பையை மாட்டி கொண்டு எழுந்து விறுவிறுவென  வாயிலை நோக்கி நடந்தாள். அவள் எதற்காக வந்தாலோ அந்த நகை கூட அப்போது அவளுக்கு முக்கியமாக படவில்லை.

ஏற்கனவே யோசனையின்றி ஒரு தவறான முடிவை எடுத்து அதற்காக அவள் பட்டது என்ன கொஞ்சம் நஞ்சமா? வாழ்க்கை அவளுக்கு வலிக்க வலிக்க நிறைய பாடங்களை கற்று தந்திருக்கிறது. இனி ஒரு போதும் அப்படி ஒரு தவற்றை செய்ய கூடாது என்று தெளிந்தவள் விரைவாக வெளியேற எண்ணிய சமயத்தில் சுரேஷ் அவள் கரத்தை பற்றி கொண்டான்.

“இந்து ப்ளீஸ்… என்னை விட்டு போகாதே” என்றவன் கெஞ்ச, அவன் கரத்தை அவசரமாக உதறியவள் மேலே செல்ல பார்க்கும் போது அவளை தடுத்தபடி முன்னே வந்து நின்றான்.

“எனக்கு வழி விடு… நான் போகணும்” என்றவள் அவதியுற, “இல்ல இந்து… இனிமே என்னால உன்னை விட்டு கொடுக்க முடியாது… நீ என்னை விட்டு எங்கயும் போக கூடாது… நான் விடமாட்டேன்” என்றவன் சொன்னதோடு அல்லாமல் அந்த கதவை பூட்ட எத்தனித்தான்.

அவள் மிரண்டு போனாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க நீ… என்னை வெளிய விடு நான் போகணும்” என்றவனை சரமாரியாக தோள்களில் அடிக்க அவன் அவளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கதவை பூட்டிவிட்டிருந்தான்.

அவள் முகமெல்லாம் வியர்க்க நடுக்கத்தோடும் பயத்தோடும் அவனை நோக்கினாள்.

“சாரி இந்து… நீ என்னை விட்டுட்டு போக கூடாதுன்னுதான் நான் இப்படி பண்ணேன்” என்றவன் சொல்ல, அவளால் பேச இயலவில்லை.

அவள் வயிற்றின் அடியில் பயபந்து உருள தலையை பிடித்து கொண்டு தனியாக அவனிடம் வந்து சிக்கி கொண்ட தன் முட்டாள்தனத்தை எண்ணி அப்போதைக்கு அவளை அவளே நொந்து கொள்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

“ப்ளீஸ் இந்து… என்னை நம்பு… நான் முன்னே செஞ்ச தப்பை திரும்பியும் எப்பவும் செய்ய மாட்டேன்… உன்னை எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்… என் மேல சத்தியமா?” என்றவன் கடைசியாக, “நம்ம கல்யாணம் பண்ணிப்போம் இந்து” என்றான்.

அத்தனை நேரம் பயத்தோடு நின்றிருந்தவள் அவன் சொன்ன வார்த்தையை கேட்டு நிமிர்ந்து, “ஐயோ! சீதா… எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு” என்று சத்தமாக கத்திவிட்டாள்.

அதிர்ந்து நின்றவன் அடுத்த நொடியே சுதாரித்து கொண்டு, “இல்ல நீ பொய் சொல்ற… நான் நம்ப மாட்டேன்” என்றான்.

அவள் அந்த நொடியே தன் கழுத்திலிருக்கும் தாலியை வெளியே எடுத்து காண்பித்தவள், “அப்போ இதுக்கு என்ன அர்த்தம் சொல்லு” என்ற நொடி அவன் சப்தநாடிகளும் ஒடுங்கி போக,

“அப்போ நீ மதுகிட்ட கல்யாணம் ஆகலன்னு சொன்னது” என்று அதிர்ச்சி பார்வையோடு கேட்டான்.

“பொய்… புத்திக்கெட்டத்தனமா அப்படி சொல்லி தொலைச்சிட்டேன்… ஆனா அந்த பொய் என்னை இப்படியொரு பிரச்சனையில இழுத்துட்டு வந்துவிடும்னு நான் சத்தியமா எதிர்ப்பார்க்கல” என்ற போது அவனால் ஒன்றுமே பேச முடியவில்லை.

“ப்ளீஸ் சீதா… உன்னை கெஞ்சி கேட்கிறேன்… என்னை இப்பயாச்சும் போக விடு… நான் போகணும்” என்று அவள் இறைஞ்சவும் அவன் மேலே ஒருவார்த்தை கூட பேசாமல் பூட்டை திறந்துவிட்டான்.

அவன் செய்கையை பார்த்து பெருமூச்செறிந்தவள் விரைவாக அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டாள். சுரேஷின் மனநிலையை அவள் கவனிக்கவும் இல்லை. அவனோ இந்து செல்வதை பார்ப்பதபடி உயிரற்று ஜடப்பொருளாக நிலைகுலைந்த நிலையில் நின்றிருந்தான்.

error: Content is protected !!