Rainbow kanavugal-32

Rainbow kanavugal-32

32

அன்று நிகழ்ந்தவற்றை குறித்து இந்துமதி சொன்ன அனைத்தையும் அமைதியாக உள்வாங்கி கொண்ட சரவணன் இன்னும் சில விளக்கங்களை அவளிடம் கேட்டறிந்து கொண்டான்.

“இல்ல மாமா… அந்த நகையை நான் எடுத்துட்டு வரல…  போலிஸ் விசாரிக்க கூட்டிட்டு போன போது அந்த நகையை அவங்க காண்பிச்சு… அது என்னோடதான்னு கேட்டாங்க … என்ன எதுன்னு எனக்கு புரியல… இருந்தாலும் நான் உண்மையை மறைக்காம ஆமான்னு சொன்னேன்

ஆனா அதெல்லாம் அவங்க கேட்கும் போது கூட வேற ஏதோ பிரச்சனைன்னுதான் நினைச்சேன்… சீதா இறந்து  போயிருப்பானு நான் நினைக்கவே இல்ல” என்றாள்.

அவனுக்கு அப்போதும் குழப்பமாக இருந்தது. எப்படி கொலை நடந்த இரண்டாம் நாளே சரியாக போலிஸ் அவளை தேடி வந்தது என்று அவன் வினவ சில நொடிகள் தயங்கியவள் அதற்கான பதிலை சற்றே தாமதித்து  சொன்னாள்.

“காலேஜ் படிக்கும் போது நானும் சீதாவும் ஒண்ணா எடுத்துக்கிட்ட போட்டோ ஒன்னு அவன் பர்ஸ்ல இருந்திருக்கு”

இந்த பதில் அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அதற்கு பிறகு அவன் முகம் எந்தவித உணர்வுகளையும் பிரதபலிக்காமல் வெறுமையாக காட்சியளிக்க, அவளுக்கோ பயம் உண்டானது.

‘மாமா நம்ம சொன்னதை எல்லாம் கேட்டு தப்பா நினைச்சிக்கிட்டிருப்பரோ?’ என்று உள்ளுர அவள் தவித்த போதும் அவளுக்கு அது குறித்து அவனிடம் கேட்க கூட பயமாக இருந்தது.

இப்போதைக்கு அவளை நம்பும் ஒரே ஜீவன் அவன் மட்டும்தானே! அவனும் தன்னை நம்பாமல் போனால் தன் நிலைமை என்ன என்று எண்ணி அவள் உள்ளம் கலங்கினாள்.

அந்த சமயத்தில் வீணா, சரவணனை பார்க்க வீட்டிற்கு வரவும் இந்து மௌனமாக பின்கட்டிற்கு சென்றுவிட்டாள். அவளோடு சாதராண நாளிலேயே இந்துவிற்கு ஒத்துவராது. அதுவும் இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையோ, வீணாவிற்கு சலங்கை கட்டிவிட்டது போலதான்.

‘என் மாமியார் வீட்டுல என் மானம் போச்சு மரியாதை போச்சு’ என்று ஆரம்பித்து ஆடு ஆடு என்று ஆடி தீர்த்துவிட்டுதான் போனாள். துர்காவும் கூட ஒத்துஊத அவனோ இம்மியளவுக்கும் அவர்கள் பேச்சை மதிக்கவில்லை.

ஆனால் இந்துவின் மனம்தான் தவியாய் தவித்தது. அவன் தான் சொன்னதை சரியாக புரிந்து கொண்டிருக்க வேண்டுமே என்ற கவலை அவளுக்கு!

இரவு உணவு முடிந்த பின் தம் வேலைகளை அனைத்தையும் முடித்து இந்து அவனிடம் பேசலாம் என்று ஆர்வமாக அறைக்குள் நுழைந்த போது சரவணன் தீவிரமாக எதையோ எழுதி கொண்டிருந்தான். அதுவும் அடிப்பட்ட அந்த கையோடு!

அவன் என்ன எழுதுகிறான் என்று கொஞ்சம் நேரம் குழம்பி நின்றவள், பின் அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் தன் தலையணையையும் போர்வையையும் எடுக்க போக, எழுதி கொண்டிருந்தவன் சட்டென்று அந்த தலையணையை பிடித்து கொண்டான்.

அவள் அவளை நிமிர்ந்து பார்க்க மேலேயே படுக்கும்படி சைகை செய்துவிட்டு மீண்டும் அவன் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான்.

இந்த ஆறு மாதத்தில் ஒருமுறை கூட இருவரும் படுக்கையில் சேர்ந்து படுத்ததில்லை. அவள் தயங்கியபடி நிற்க, அவன் மீண்டும் அவளை நிமிர்ந்து பார்த்த நொடி அந்த பார்வைக்கு பணிந்து படுக்கையில் அவள் படுத்து கொண்டுவிட்டாள்.

நிசப்தநிலையில் ஆழ்ந்த அமைதியை சுமந்திருந்தது அந்த அறை. அவள் திரும்பி படுத்திருந்ததால் அவன் என்ன செய்கிறான் என்று ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை. என்ன எழுதுகிறான் என்று கேட்கவும் தைரியம் வரவில்லை.

இறுக்கமாக தன் கண்களை மூடி கொண்டு தன் மனதை அவள் அமைதிப்படுத்தி கொள்ள முயற்சிக்கும்போது அவன் கரம் அவள் தோள்களின் மீது படிந்தது.

பதறி கொண்டு அவள் திரும்ப, இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான் அவன். அவன் விழிகள் அவளிடம, தான் அவளை முழுமையாக நம்புவதாகவும் எப்போதும் அவளுடன் துணையாக நிற்பதாகவும் என்றும் சமிஞ்சை மொழியில் உறுதி கூற, அவள் விழிகள் பனித்தன.

அவள் சொல்லாமலே அவள் மனதிலுள்ள பயத்தை அவன் புரிந்து கொண்டதில் அவள் உள்ளம் நெகிழ்ந்து, “இது போதும் மாமா… இனிமே நடக்கிறது என்னவாயிருந்தாலும் எனக்கு அதைபத்தி எந்த பயமும் இல்ல… நீங்க என் கூட இருக்கீங்க” என்க, அவன் தன் கரங்களை விரித்தான்.

தன் துயரம் வலி அனைத்தையும் இறக்கிவைத்தது போல அவன் தோள்களை தலையணையாக்கி கொண்ட பெண்ணவள் தன்னை அவனுக்குள்ளாக ஆழமாக புதைத்து கொண்டாள்.

திருமணம் முடிந்த கணமே அவர்களுக்குள் இந்த இணக்கம் ஏற்பட்டிருந்தால் கூட அது இந்தளவு ஆழமாகவும் நெருக்கமாகவும் அமைந்திருக்குமா என்பது கேள்விகுறிதான்!

ஆனால் அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏற்பட்டிருந்த புரிதல் அவர்கள் உறவை இன்னும் அழகாக மாற்றியிருந்தது.

அவள் கண்ணீரால் பேசியதற்கு அவன் மௌன மொழியில் பதில் சொல்ல, நிசப்தமான அவர்கள் அறையில் காற்று போல காதல் எங்கும் பரவியது. அவர்களின் சுவாசத்தில் கலந்தது.

அதன் பின் மெல்ல இந்து அவன் தோளில் சாய்ந்தபடியே உறக்க நிலைக்கு சென்றுவிட சரவணன் கண்ணயரவில்லை. இந்து சொன்ன அனைத்தையும் தன் கைப்பட கடிதமாக எழுதி வைத்திருந்தவன் மதுவிடம் அதை எப்படி சேர்ப்பது என்று தீவிரமாக யோசித்திருந்தான்.

மதியை இந்த வழக்கிலிருந்து காப்பாற்ற மதுவால் மட்டுமே முடியுமென்று தன் தோழியின் மீது அபிரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தது.

ஆனால் அதே மது அந்த நொடி மொத்தமாக அவநம்பிக்கை நிலையிலிருந்தாள். மயான அமைதியில் மூழ்கியிருந்த அந்த வீட்டில் அவள் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்துபோயிருந்தது.

ரேவதியின் அறையில் அமர்ந்து கொண்டு அவர் கையினை பற்றியிருந்தவள், “மாமாகிட்ட ஜம்பமா எல்லா பிரச்சனையும் சரி செஞ்சிடுறேனு சொல்லி இருக்கேன்… ஆனா என்னால அது முடியும்னு தோணல… ரொம்ப சோர்ந்து போயிட்டேன்… யாரையுமே என்னால இயல்பு நிலைக்கு கொண்டு வரவே முடியல.

அஜய் எப்பவும் முறுக்கிட்டு சுத்திட்டு இருக்கான்…. பாஸ் மாமா ரொம்ப உடைஞ்சு போயிருக்காரு… இதுல அனுவோட நிலைமையை பார்த்தா இன்னும் பாவமா இருக்கு… வெளியே வராம ரூம்லயே  அடைஞ்சிட்டு இருக்காங்க… யார்கிட்டயும் மனசுவிட்ட பேச மாட்டிறாங்க… எல்லோரும் இப்படி இருந்தா நான் மட்டும் ஒருத்தியா என்னதான் செய்ய முடியும்… சொல்லுங்க”

“ஒருவேளை நீங்க எழுந்து வந்தா இந்த பிரச்சனை எல்லாத்தையும் உடனே சரி செய்ய முடியாட்டியும் இந்த வீட்டோட சூழ்நிலையை மாற்ற முடியலாம்…

நிச்சயம் நீங்க எழுந்து வந்தா எல்லாமே மாறும்…. அது நீங்க நினைச்சா மட்டும்தான் அத்தை முடியும்

ப்ளீஸ் அத்தை எழுந்து வாங்க… எனக்கு தெரியும் உங்களுக்கு அனு மேல ஏதோ கோபம்… அது என்னன்னு எனக்கு தெரியாது… அஜய் கூட அதை பத்தி என்கிட்ட சொன்னதில்லை… ஆனா இப்போ அந்த கோபம் முக்கியமில்ல… நம்ம குடும்பம்தான் முக்கியம்… அது நிலைகுலைஞ்சிடாம பார்த்துக்கணும்

என்னை விட அதிகமா அந்த பொறுப்பு உங்களுக்குதான் இருக்கு… ப்ளீஸ் அத்தை எழுந்து வாங்க”

அவளின் வார்த்தைகளுக்கு எந்தவித சலனமுமின்றி ரேவதி கல்லை போல படுத்துகிடந்தார்.

மது துவண்டு போனாள். அவளின் அப்போதைய நம்பிக்கையும் தளர்ந்து போக கண்ணீர் பெருகியது அவளுக்கு. அதனை அவசரமாக துடைத்து கொணடவள் மீண்டும்,

“சரி … நீங்க யாருக்காக எழுந்து வர வேண்டாம்… உங்க பேரப்புள்ளைங்களுக்காக வாங்க அத்தை” என்று சொல்லி தன் வயிற்றின் மீது அவரின் கைகளை வைத்து அழுத்தி பிடித்து கொண்டாள்.

அந்த நொடி மதுவின் விழிகளில் கண்ணீர் மீண்டும் சொட்டி அவரின் கரத்தை ஈரப்படுத்தியது. அந்த சமயம் பார்த்து, “மது” என்று அஜயின் குரல் கேட்டு அவசரமாக தன் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

அத்தனை நேரம் அசையாமல் கிடந்த ரேவதியின் விரல்கள் மெல்ல அசைந்தன. அவரின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக விழித்து கொண்டிருந்தன.

அஜயும் மதுவும் இரவு உணவு முடித்து தங்கள் அறைக்குள் சென்றுவிட்டனர். அன்று நடுநிசியில் மதுவின் உறக்கம் களைய, அவளுக்கு பயங்கரமாக பசித்தது.

இது பெரும்பாலும் இயல்புதான். அவளுக்கு பசிக்கும் என்று தெரிந்தே ஆப்பிள், கத்தி போன்றவற்றை அறையிலேயே வைத்திருப்பான். இன்னும் சொல்ல போனால் அவள் எழுந்திருப்பது தெரிந்தால் அவனுமே உறக்கத்திலிருந்து எழுந்து கொண்டு அவளுக்காக ஆப்பிளை வெட்டி தருவான்.

உறக்க நிலையிலும் கூட அவன் தன்னை பற்றியே யோசித்திருப்பானோ என்று அவளுக்கு வியப்பாக இருக்கும். அவள் லேசாக உறக்கத்தில் முனகினாலும் கூட அவன் பதறி துடித்து, “என்ன மது? என்னாச்சு?” என்று கேட்பான்.

ஆனால் இன்று என்னவோ அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான். அவன் உறக்கத்தை களைத்துவிட வேண்டாமென்று ஓசைபடாமல் ஆப்பிள் கிண்ணத்தை எடுத்து கொண்டு சிட் அவுட்டிற்கு வந்தாள்.

அப்போது அவள் எதச்சையாக அனன்யாவின் அறை திறந்திருப்பதை பார்த்தாள். அவள் யோசனையோடு உள்ளே எட்டி பார்க்க, படுக்கையில் அருண் மட்டும் உறங்கி கொண்டிருந்தான்.

“அனு எங்கே போன?” என்று சிந்தித்தவள் இந்த மாதிரி நேரத்தில் தனியாக எங்கேயும் போவது நல்லதில்லை என்று எண்ணி அனுவை தேடினாள்.

‘அஜயை எழுப்புவோமா?’ என்று யோசித்தவள் பின் வேண்டாமென அவளே தேட ஆரம்பித்தாள். மேலே முழுவதுமாக தேடி பார்த்துவிட்டு அவள் கீழே வந்து அங்கேயும் சுற்றும் முற்றும் தேடிய சமயத்தில்தான் அந்த காட்சியை பார்க்க நேரிட்டது.

அனன்யா தன் அம்மாவின் அறையில் அவர் கரத்தை பிடித்து கொண்டு தேம்பி தேம்பி அழுதிருந்தாள். அந்த காட்சியை பார்த்து அனுவிற்க்காக மனமிறங்கிய மது அவளை சமாதானம் செய்ய உள்ளே நுழைய எத்தனித்த போது,

“என் மனசுல இருக்கிறது எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி அழணும் போல இருக்கு ம்மா” என்று கதறிய அனுவின் வார்த்தைகளை கேட்ட அப்படியே சத்தமின்றி கதவினோரம் நின்றுவிட்டாள்.

அனு மனதில் இருப்பதை அவளே சொல்லி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த சந்தரப்பத்தை மது நழுவவிட தயாராக இல்லை. இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு ஒரு வேளை அனு சொல்ல போகும் விஷயங்களில் இருக்கலாம் இல்லையா?

error: Content is protected !!