Rainbow kanavugal-39

Rainbow kanavugal-39

39

தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! எங்கு பார்த்தாலும் தண்ணீர்!

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக தொடரும் தீவிரமான மழை பொழிவால் ஏரி குளங்கள் யாவும் நிரம்பி வழிந்தன. சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலைகள் எங்கும் தண்ணீர் ஆறாக பெருகி ஓடின. புயல் காற்றில் மரங்கள் பலவும் சாயந்து விழுந்ததில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன..

இயற்கைக்கு… பணம் படைத்தவன், ஏழை என்று எந்த பாகுபாடும் இல்லை. அது எல்லோரையம் படாதபாடு படுத்தி எடுக்க, அஜயும் நிலைமையும் கிட்டத்தட்ட அதேதான்.

மது அவனை வரகூடாது என்று சொன்னாலும் அவளுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்ய தன்னால் இயன்றவரை முயற்ச்சித்தான். அவனது பணபலம் பதவிபலம் என்று அப்போதைக்கு எதுவுமே அவனுக்கு உதவவில்லை.

அவ்வப்போது அவன் தன் மாமனாரை தொடர்பு கொண்டு அப்போதைய நிலவரத்தை பற்றி விசாரித்து அறிந்து கொண்டிருந்தான் அவருடன் உதவிக்கு சரவணன் இருப்பதாக சொல்லும் போது அவன் மீது அவனுக்கே எந்தளவு கோபம் மூண்டது என்று விவரிக்கலாகாது.

தன் மனைவிக்கான சின்ன சின்ன தேவைகளை கூட தான்தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஒரு கணவனாக அவன் கொண்டிருந்த ஈகோவின் மீது விழுந்த மிக பெரிய அடி அது. இதனால் அவன் மனதளவில் ரொம்பவும் நொந்து போயிருந்தான். அந்த மனநிலையோடே அவன் காவல் நிலையத்திற்கு பல இன்னல்கள் இடையுறுகளை கடந்து படாதபாடுபட்டு வந்து சேர்ந்த போதும் அவனுக்கு உள்ளே செல்ல மனம் வரவில்லை.

அப்போதைக்கு அவனுடைய எதிர்பார்ப்பு கவலை எல்லாம் மது நல்லபடியாக குழந்தையை பெற்று எடுக்க வேண்டுமென்பதுதான். அந்த தகவலை கேட்டறிந்த பின்னரே காவல் நிலையத்திற்கு சென்று குற்றத்தை ஒப்புக்கொள்வது என்று வெகுநேரமாக காத்திருந்தான்.

கடைசியாக தாமுவிடம் பேசும் போது, மருத்துவரை அழைத்து கொண்டு செல்வதாக அவர் சொன்னதில் அவன் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

சில நிமிடங்களில் மீண்டும் தாமு அவனுக்கு அழைத்து பேசினார்.

“குழந்தை பிறந்துடுச்சு அஜய்… மதுவும் நல்லா இருக்கா…  உங்களையும் அணுவையும் மாதிரியே ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கு” என்று அவர் சொன்னதை கேட்டு

அந்த நொடி உலகமே அவன் காலடிக்கு கீழே கிடத்தப்பட்டது போன்ற ஒரு அசாத்திய உணர்வு ஏற்பட்டது. அப்பா என்ற ஸ்தானம் ஆண்மகன்களுக்கே உரித்தான கர்வ நிலை அல்லவா? அஜயும் அதற்கு விதிவிலக்கில்லை.

அவன் அந்த நொடி எந்தளவு சந்தோஷம் கொண்டான் என்று சொல்லவே முடியாது. அவனுடைய அத்தனை நேர தவிப்பெல்லாம் மாயமாகி போனது. ஆனால் தற்போது மதுவையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டுமே என்று அவனுக்கு பேரவா உண்டானதில் அவன் விழியோரம் நீர் கசிந்திருந்தது.

சந்தோஷம், துக்கம் என்று இருவேறு உணர்வுகளையும் ஒரு சேர கண்ணீராக சுரந்தன அவன் விழிகள்!

“ரொம்ப கஷ்டப்பட்டாளா மாமா” என்றவன் உள்ளதவிப்போடு வினவ,

அப்போது அவர் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடிக்கும் போது அவனுக்கு வியப்பு தாங்கவில்லை.

“யாரு மாமா? இந்துமதியா?” என்று கேட்க, “ஆமா” என்றவர் ஆமோதித்ததில் அவன் குற்றவுணர்வில் ஆழ்ந்தான். ஆழமாக ஏதோ ஒன்று அவன் உள்ளத்தை குத்தி கிழக்க,

“மாமா நான் இந்துமதிகிட்ட பேசணும்” என்றான்.

தாமு உடனே இந்துமதியிடம், “அஜய் உன்கிட்ட பேசணுமாம்” என்று சொல்ல, அவளுக்கு ஏனோ அவனிடம் பேச கொஞ்சமும் விருப்பமில்லை.

சாரங்கபாணி சுரேஷை கொலை செய்ததாக அவன் பெயரை சொன்னதில் அவளுக்கு அவன் மீதான மொத்த நன்மதிப்பும் வடிந்து போனது.

அவள் வெகுநேரம் தயங்கிவிட்டு பின் தாமு காட்டாயப்படுத்தியதில் அவள் பேசியை வாங்கி காதில் வைத்து, “ம்ம்ம்… சொல்லுங்க” என்று வேண்டா வெறுப்பாக பேச,

“நீ செஞ்ச உதவிக்கு வெறும் தேங்க்ஸ் மட்டும் சொன்னா பத்தாது… ஆனா இப்போதைக்கு எனக்கு அதை தவிர வேற வார்த்தை கிடைக்கல… தேங்க்ஸ்… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்றவன் மகிழ்ச்சி பொங்க உரைத்தான்.

ஆனால் அவளோ அவன் சொன்னது எதையும் பொருட்படுத்தாமல், “சரிங்க… போனை மது அப்பாகிட்ட கொடுக்கிறேன்” என்றதும் அவன் உடனே, “ஒரு நிமிஷம்” என்று தொடர்ந்து பேசினான்.

“நான் போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கேன்… சுரேஷை கொலை பண்ண குற்றத்தை ஒத்துக்கிட்டு நான் சரண்டராக போறேன்… இனிமே உனக்கு அந்த கேஸ் பிரச்சனை இருக்காது” என்றான்.

இந்துவிற்கு அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை. பெண்ணவள் அடங்கா வியப்பில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

அவள் வியப்பின் விளம்பில் நிற்க அவன் மேலும், “நான் எப்பவுமே மதுகிட்ட ஒரு விஷயம் சொல்லுவேன்… சம்பந்தமில்லாத யாருக்காகவோ நீ எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுத்து பிரச்சனையை இழுத்து விட்டுக்கிறேன்னு… ஆனா இந்த நிமிஷம் நான் எவ்வளவு சுயநலமா யோசிச்சு இருக்கேன்னு புரியது

எதிர்பார்ப்பு இல்லாம செய்ற உதவியெல்லாம் ஒருநாள் நமக்கே உதவி தேவைப்படும் போது திரும்பி வந்து நிற்கும்… நீ இன்னைக்கு மதுவுக்காக வந்து நின்னது போல

நீ இன்னைக்கு செஞ்ச உதவியை நான் என் வாழ்க்கை முழுசுக்கும் மறக்கவே மாட்டேன்… இனிமே உனக்கு இந்த போலிஸ் கேஸ்னு எந்த பிரச்சனையும் இல்லை… நீ நிம்மதியா இருக்கலாம்… அப்புறம் நான் சரவணனுக்கும் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு” என்றவன் இறுதியாக மது சொல்லித்தான் தான் இதை செய்ததாக தெரிவித்ததில் அவள் பேச்சற்று போனாள்.

அவன் அதன் பின் தாமுவிடம் பேசும் போது அவர் மதுவிடம் கொடுக்கவா என்று கேட்டதற்கு, “இல்ல மாமா… அவ ரொம்ப களைச்சு போயிருப்பா… நான் நேர்ல வந்து பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டான்.

ஒருவேளை அவள் பேசும் போது அவனிடம் காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டாயா என்று கேட்டால் அவன் என்னவென்று சொல்லுவான். அதனால்தான் அவளிடம் பேசமால் தவிர்க்க அவ்விதம் சொன்னான்.

இதற்கிடையில் அஜய் பேசியதை கேட்டு இந்து திகைத்து போனாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. சில மணிநேரங்கள் முன்பு வரை அவள் மரணத்திற்கு நிகராக கருதிய ஒரு பிரச்சனை அந்த நொடி ஒன்றுமே இல்லாமல் போனதை என்னவென்று சொல்வது!

அதுதானே வாழ்க்கை! அது நம்மை உச்சாணி கொம்பிலும் ஏற்றி வைக்கும். திடீரென்று அகலபாதாளத்திலும் தள்ளிவிடும். என்ன நடந்தாலும ஒரே  மாதிரியான மனநிலையோடு எந்த சூழ்நிலையையும் ஏற்க கற்றவனே வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறுகிறான்.

இந்துமதிக்கு அஜய் சொன்னதில் நிம்மதி ஏற்பட்ட போதும் மதுவின் செயலை எண்ணி அவளால் மனதளவில் கலங்காமல் இருக்க முடியவில்லை.

களைப்பில் சோர்ந்து விழிகள் மூடி படுத்திருந்த மதுவின் அருகில் வந்து அவள் கரத்தை பற்றி இந்து கண்ணீர் வடிக்க, அவள் கண்கள் திறந்து குழப்பமுற இவளை நோக்கினாள்.

“எப்படி உங்களால் இப்படி செய்ய முடிஞ்சது”

“என்ன சொல்ற?” மது புரியாமல் வினவ,

“நான் இப்பதான் அஜய் சார் கிட்ட பேசுனேன்” என்றவள் சொன்ன நொடி அவளை ஆழ்ந்து பார்த்த மது, “யார் தப்பு  செய்றாங்களோ… அதுக்குண்டான தண்டனையை அவங்கதானே அனுபவிக்கணும்” என்றவள் மெல்லிய குரலில் சொல்ல,

“இருந்தாலும் நீங்க செஞ்சது ரொம்ப பெரிய விஷயம் மது” என்றவள் நெகிழ்ச்சியோடு நன்றியுணர்வு பொங்க பார்த்தாள்.

“அப்ப நீ செஞ்சது” என்று மது திருப்பி கேட்க,

“இல்ல… நீங்க செஞ்சதை விட நான் செஞ்சது ஒன்னும் பெரிய விஷயமில்லை… ஹாஸ்பெட்டிலா இருந்தா இதை நான் அங்க செஞ்சிருப்பேன்” என்றவள் மேலும், “இன்னும் சொல்லணும்னா நான் இதை செஞ்சாலும் செய்யலனாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்லையே… ஆனா இப்படி ஒரு விஷயத்தை செஞ்சா உங்க வாழ்க்கை பாதிக்கும்னு தெரிஞ்சும் நீங்க செஞ்சி இருக்கீங்க” என்று இந்து ஆச்சரியத்தோடு பேச மது இயல்பாக புன்னகைத்தாள்.

“உனக்கு தெரியாது இந்து… உன் புருஷன் எனக்கு செஞ்ச உதவி பத்தி… தெரிஞ்சா நான் செஞ்ச ஒரு சின்ன விஷயத்தை நீ இவ்வளவு பெருசா பேச மாட்ட” என்ற போது இந்து அவளை புரியாமல் நோக்கினாள்.

“நான் சின்ன வயசுல கிணத்துல தவறி விழ போன போது சரோ என்னை காப்பாத்த போய்தான் கிணத்துல தவறி விழுந்தான்… அவன் குரலை இழந்து இன்னைக்கு பேச முடியாம இருக்கான்… அவனோட இழுப்புக்கு முன்னாடியும் உதவிக்கு முன்னாடியும் நான் செஞ்சது இழந்ததெல்லாம் ஒண்ணுமே இல்ல”

மது சொன்னதை கேட்ட இந்துவின் விழிகள் அகல விரிந்தன. அந்த நொடி கணவன் மீதிருந்த மரியாதையும் காதலும் வானளவுக்கு உயர்ந்து நின்றது.

அவனை கணவனாக அடைந்ததை எண்ணி அவள் பெருமிதமாக உணர்ந்த தருணம் அது.

***

அஜய் காவல் நிலையத்திற்குள் நுழைந்தான். அந்த இடமே வெறிச்சோடி காணப்பட்டது. ஒரே ஒரு பெண் கான்ஸ்டபிள் மட்டுமே இருந்தார்.

அஜய் வந்த விவரங்களை பற்றி அவர் விசாரித்து கொண்டிருக்கும் போதே ஜெயா பரபரப்பாக வெளியே சென்று கொண்டிருக்க, அவளின் கைபேசியும் வயர்லஸும் மாறி மாறி அலறியபடி இருந்தன.

“இன்னும் கொஞ்ச நேரத்தில போன் ஸ்விட்ச் ஆப் ஆகிடும்… ஏதாவதுன்ன ஸ்டேஷன் லேன்ட் லைனுக்கு வாங்க” என்றவள் குரல் தழுதழுக்க, “பாப்பா பத்திரங்க” என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள்.

அதோடு அங்கிருந்த பெண் கான்ஸ்டபிளிடம், “ஷப்பா முடியல… இப்ப இருக்க நிலவரத்தை பார்த்தா வீட்டுக்கு எப்போ போகவே முடியும்னு தெரியல… போலிஸ் வேலை செய்றவனுக்கு குடும்பம் புள்ளை குட்டி எல்லாம் இருக்கவே  கூடாது” என்று தன்னிலமையை எண்ணி புலம்பி கொண்டே திரும்பிய போது அஜய் நின்றிருப்பதை பார்த்து துணுக்குற்றாள்.

“நீங்க” என்றவள் அவனை கேள்வியாக பார்க்க,

“என் பெயர் அஜய்கிருஷ்ணா… சுரேஷ் கொலை” என்றவன் ஆரம்பிக்கும் போது, “ஒ! நீங்கதான் மிஸ்டர் அஜய் கிருஷ்ணாவா?” என்று எகத்தாளமாக கேட்டுவிட்டு,

“உங்க தங்கச்சி செஞ்ச கொலையை மறைக்க ஒரு அப்பாவி பொண்ணு மேல பழியை போட நினைச்சு இருக்கீங்களே… உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?” என்றவள் எரிச்சலும் கோபமுமாக கேட்க, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அப்போதுதான் காவல் நிலையத்திற்குள் அனு அமர்ந்திருப்பதை கவனித்தான். அனு தான்தான் அந்த கொலையை செய்ததாக ஒப்புகொண்டு சரணடைந்திருப்பதாக ஜெயா தெரிவித்தது அவனை அதிர செய்தது.

***

இருள் விலகி வானம் வெளுத்த போதும் மழை ஓய்ந்தபாடில்லை.

அந்த விடியல் மதுவின் மனசோர்வையும் களைப்பையும் லேசாக அகற்றியிருந்த நிலையில் தாய்மையின் தூய்மையான அழகு அவள் முகத்தில் மிளிர்ந்திருந்தது.

அவள் அந்த இளந்தளிர்களின் பிஞ்சு விரல்களையும் மிருதுவாக சிவந்த குட்டியான பாதங்களையும் தொட்டு பார்த்து ரசித்து கொண்டிருக்க, அந்த சமயத்தில் நந்துவும் தாமுவும் அறைக்குள் நுழைந்தனர்.

அவர்களின் இருவரின் முகத்திலும் குழப்ப ரேகைகள்! எப்படி மகளிடம் தாங்கள் நினைத்ததை பேசுவது என்ற தவிப்பு வேறு! ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்து அவதியுற,

“என்ன விஷயம்?” என்பது போல் மதுவே பேச்சை தொடங்கினாள்.

“அது அது வந்து” என்று தாமுவும் நந்தினியும் திக்கி திணறி விட்டு பின் ஒருவாறு தாங்கள் கேட்க நினைத்ததை கேட்டுவிட்டார்கள்.

“ஆமா அஜய் கிட்ட நீ ஏன் வர வேண்டாம்னு சொன்ன… என்ன இருந்தாலும் இந்த மாதிரி சமயத்துல நீ அவரை வர வேண்டாம்னு சொன்னது தப்பு” என்று நந்தினி பொறிந்து தள்ள,

“நான் ஒன்னும் வேணும்டே அப்படி சொல்லல… அவன் செஞ்ச காரியம் அந்த மாதிரி” என்றாள்.

“அப்படி என்ன அவரு செஞ்சிட்டாரு நீ இப்படி எல்லாம் பேசுற” என்று தாமு கோபமாக கேட்க, அவர்கள் இருவரின் முகத்தையும் ஏறிட்டு பார்த்த மது, “சொன்னா தாங்குவீங்களா?” என்று கேட்டாள்.

“எதுவா இருந்தாலும் சொல்லி தொலை… எங்க மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு” நந்தினி கடுப்பாக உரைக்கவும்,

“கொலை… சுரேஷை கொலை செஞ்சு இருக்கான்… இத்தனை நாளா அந்த விஷயத்தை மறைச்சு பொய்யா நடிச்சிருக்கான்” என்றவள் சீற்றமாக சொன்னாள்.

“ஐயோ மது! சுரேஷை கொலை பண்ணது அஜய் இல்ல” என்று தாமு படபடக்க,

மது அதிர்ச்சியாக அவரை நோக்கி, “அவன் செய்யலன்னா அப்போ யார் சுரேஷை கொலை பண்ணதுன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று அவள் ஆழ பார்வை பார்க்க, தாமு திக்குமுக்காடி போனார்.

அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டோமோ என்றவர் தவிப்புற “தாமு பேசு” என்று மது அழுத்தி கேட்டாள்.

“இதுக்கு மேலையும் இந்த உண்மையை மறைக்கிறது சரியில்லை… பேசாம சொல்லிடுங்க” என்று நந்தினி கணவரிடம் சொல்ல சில நிமிட யோசனைக்கு பின் அவர் அன்று நடந்த சம்பவத்தை விவரிக்க தொடங்கினார்.

***

அனு சுரேஷிடம் நேரடியாக பேச முடியாமல் அவனுக்கு ஒளிப்பதிவாக ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டிருந்தாள். அந்த சமயம் சுரேஷுடைய கைபேசி பாஸ்கரன் கையிலிருந்தது.

அருணுடன் விளையாடி கொண்டிருந்த சுரேஷ் தவறுதலாக தன் கைபேசியை தோட்டத்திலிருந்த மேடையில் வைத்துவிட, அதனை அவர் அவனிடம் கொடுக்கலாம் என்று எடுத்த போதுதான் ‘கிளங்’ என்ற ஒலியோடு குறுந்தகவல் மணி ஒலிக்க தெரியாமல் அது அவர் கைப்பட்டு ஒலிக்க தொடங்கியது.

“சுரேஷ் ப்ளீஸ்… என்னை விட்டு போயிடாதீங்க… உங்க கிட்ட இப்படி கேட்க எனக்கு எந்த தகுதியும் இல்லைதான்… நான் நிறைய தப்பு செஞ்சு இருக்கேன்… ஆனா உண்மையிலேயே இப்போ நான் ரொம்ப மாறிட்டேன்… உங்க கூட சந்தோஷமா ஒரு வாழ்க்கையை வாழணுன்னு ஆசை படுறேன்… பெங்களூர் கிளம்புறதுக்கு முன்னாடி நான் சொன்னதை யோசிச்சு பாருங்களேன்” இறைஞ்சுதலாக மகள் கண்ணீரோடு பேசிய ஒவ்வொரு வரியும் பாஸ்கரன் மனதில் இடியாக இறங்கியது.

எதற்காக அனு இப்படி ஒரு பதிவை அனுப்பியிருக்கிறாள் என்று யோசித்தவர் மனம் தாங்காமல் அவனின் கைபேசியை ஆராய்ந்து பார்த்தார்.

அதில் இந்துவுடனாக அவன் சேர்ந்திருந்த ஒரு புகைப்படமும் கூடவே அவளை அன்று மாலை அவன் வர சொல்லி அனுப்பியிருந்த விலாசத்தின் தகவலும் கிடைத்தது. அவற்றையெல்லாம் பார்த்த மறுகணமே அவருக்கு தலைசுற்றியது.

சுரேஷிடமும் அனுவிடமும் இது பற்றி பேச அவருக்கு தயக்கமாக இருந்தது. ஏதோ தப்பாக நடக்க போகிறது என்றளவுக்கு அவர் மனம் யூகித்தது.

சுரேஷா இப்படி என்று அவர் தான் பார்த்ததையும் கேட்டதையும் நம்பமுடியாமல் அவரே நேரடியாக விசாரிக்க சுரேஷ் மறுநாள் அவனுக்கும் இந்துவுக்கும் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.

அப்போதே கொதிப்படைந்த பாஸ்கரன் இது குறித்து பேச சுரேஷை தேடி சென்று கொண்டிருந்த போதுதான் வழியில் தாமுவை அவர் பார்க்க நேர்ந்தது.

நண்பனிடம் மனம் தாங்காமல் அனைத்து உண்மையையும் அவர் சொல்லிவிட, “பாஸ் அவசரபடாதே நாம இதை பத்தி பொறுமையா பேசிக்கலாம்” என்றார்.

ஆனால் தாமு சொன்னதை கேட்கும் நிலைமையில் பாஸ்கரன் இல்லை. அவர் அப்போது குடித்து வேறு இருந்தார்.

தாமு எவ்வளவோ தடுத்து பார்த்தும் பாஸ்கரன் கேட்காமல் சுரேஷ் அனுப்பியிருந்த தகவலில் இருந்த விலாசத்திற்கு சென்றார்.

“வேண்டாம் பாஸ்… இப்போ நீ இருக்க நிலமையில எதுவும் பேச வேண்டாம்” என்று தாமு திரும்ப திரும்ப சொன்ன போதும் பாஸ்கரனின் மதி அதை ஏற்கவில்லை. விதி மதியை வென்றது.

பாஸ்கரன் அந்த விலாசம் இருந்த கடைக்குள் நுழைய தாமுவும் அவரை பின்தொடர்ந்தார்.

அப்போது சுரேஷோ கண்ணீரோடு தன் கையிலிருந்த தாலியை பார்த்து கொண்டிருந்தான். அபரிமிதமாக அவன் அடைந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடை அவன் முகம் சொல்லாமல் சொல்ல அந்த காட்சியை பார்த்த பாஸ்கரன் முகம் கடுகடுத்தது.

“என் பொண்ணையும் பேரனையும் விட்டுட்டு அந்த நர்ஸ் பொண்ணு கழுத்துல தாலி கட்டுறளவுக்கு நீ ரெடியாயிட்டியா” என்று அவர் சீற்றமாக, தாமுவிற்கு பதட்டமானது. உடனடியாக அஜயை அழைத்து அவனை அங்கே உடனடியாக வரும்படி சொல்லியிருந்தார்.

பாஸ்கரனின் கோபத்திற்கோ கேள்விக்கோ சுரேஷ் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை. இந்து தனக்கு திருமணமாகிவிட்டதாக சொன்னது மட்டுமே அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு கொண்டிருந்தன. அவன் மனதளவில் ரொம்பவும் பலவீனப்பட்டு போனதில் அவர் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் மௌன நிலையில் நின்றிருந்தான்.

அவன் அப்படி இருப்பது பாஸ்கரனின் கோபத்தை இன்னும் அதிகமாக தூண்டிவிட, “நான் இவ்வளவு தூரம் கேட்டுட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு எதுவும் பேசாம கல்லூளி மங்கன் மாதிரி நிற்குற” என்றவர் பொங்க,

சுரேஷ் அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்டு அவர் முகத்தை நேர்கொண்டு பார்த்தான்.

அவர் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவன் திகைக்க, “இப்ப நீ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல போறியா இல்லையா?” என்று அவர் உக்கிரமாக கத்தினார்.

அவன் மெதுவாக, “சாரி சார்… உங்களுக்கு என்ன கேட்கிறதா இருந்தாலும் அதை உங்க பொண்ணுகிட்ட கேட்டுக்கோங்க… ப்ளீஸ் என்னை விட்டுடுங்க… நான் போயிடுறேன்” என்று அவன் விரக்தியோடு சொல்ல,

‘சார்’ என்ற அவனின் விளிப்பில் அவர் அதிர்ந்து போனார். அவன் பேசிய விதம் அவருக்கு அவன் தன்னை அலட்சியபடுத்துகிறானோ என்பது போல தோன்ற செய்தது.

“சார்ங்கிற… விட்டுடுங்கங்கிற… என்ன நினைச்சிட்டு இருக்க நீ உன் மனசுல… நீ சொல்றதை எல்லாம் பார்த்தா என் பொண்ணு பேரன் நிலைமை” என்றவர் படுஉக்கிரமாக கேட்க, அவனோ அவர் கேள்விக்கு நிதானமாக பதிலளித்தான்.

“நான் இல்லைனாலும் அவங்க இருப்பாங்க… இன்னும் கேட்டா இனிமே என் தேவை அவங்களுக்கு இல்லை” என்றவன் சொன்ன போது அவரின் கோபம் கட்டுகடங்கமால் போனது.

“ஒ! என் பொண்ணு வேணாம்னு நீ சொல்றதை பார்த்தா  அப்போ அந்த நர்ஸ் பொண்ணு உன்னை அந்தளவுக்கு மயக்கி வைச்சு இருக்கா”

இத்தனை நேரம் அமைதியாக பேசிய சுரேஷ் அந்த நொடி கோபத்தோடு, “இந்துவை பத்தி பேசாதீங்க… அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்க,

“அவளுக்கும் இதுக்கும் எந்த சமபந்தமும் இல்லன்னா நீ எதுக்கு அவளை கூட்டிட்டு பெங்களூர் போக டிக்கெட் புக் பண்ணி வைச்சுருக்க” என்றவர் அவனை மடக்க,

“அது” என்று அவன் தடுமாறினான்.

பாஸ்கரன் மேலும் அவனை எரிச்சலாக பார்த்து,  “கல்யாண ஆன ஒருத்தனை இழுத்துட்டு ஓடணும்னு நினைக்கிறா… அவ எல்லாம் என்ன மாதிரி பொண்ணு” என்றவர் இந்துவை நிந்தித்த மறுகணம் அவன் ஆத்திரம் மேலெழும்பியது.

“இந்துவை பத்தி இதுக்கு மேலயும் ஒரு வார்த்தை பேசுனீங்கன்னா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்றான்.

“என்னடா பண்ணுவ” என்று அவர் கேட்டு அவன் சட்டையை பிடிக்க, அத்தனை நேரம் அவர்கள் உரையாடலுக்குள் நுழையாத தாமு பதறி கொண்டு தன் நண்பனை தடுக்க முற்பட்டார்,

“வேண்டாம் பாஸ்… விட்டுடு” என்றவர் சொல்ல,

“எப்படி பேசுறான் பாரு தாமு… அவன் பொண்டாட்டி புள்ளையை பத்தி கவலை படாம எவளோ ஒருத்திக்கு வக்கலாத்து வாங்குறான்” என்று அவர் சொன்னதுதான் தாமதம்.

அதன் பின் எந்த உணர்வு அப்போது சுரேஷை அப்படி பேச வைத்ததோ?

“அனு எனக்கு பொண்டாட்டியும் இல்ல… அருணுக்கு நான் அப்பாவும் இல்ல” என்றவன் பட்டென சொல்லிவிட பாஸ்கரன் எரிமலையாக பொங்கினார்.

அவர் விழிகள் சிவக்க, “என்னடா சொன்ன? திருப்பி சொல்லு” என்று அவர் நிதானமிழந்து அவன் சட்டை பிடித்து மேலும் உலுக்கி எடுக்க, “பாஸ் வேண்டாம்” என்று தாமு தடுத்து பாஸ்கரனை பின்னுக்கு இழுக்க அவர் அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு நண்பனின் தோளில் சாய்ந்துவிட்டார்.

பதறி போன தாமு அந்த நொடியே தன் நண்பனை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துவிட்டார். அஜயையும் அங்கே வரும்படி தகவல் சொல்லிவிட்டார்.

ஆனால் இந்த பதட்டத்தில் அவர்கள் கவனித்திராத ஒரு விஷயம்… சுரேஷின் மரணம்!

பாஸ்கரன் ஆக்ரோஷமாக அவனை பிடித்து உலுக்கி கொண்டிருக்கும் போதே தாமு அவரை தடுத்ததில் அவர் பிடி தளர, அவன் தடுமாறி போய் சுவற்றிலிருந்த அணியில் பின்மண்டையில் குத்தி இரத்தம் பீறிட்டு இறந்து போனதுதான் விதி.

பாஸ்கரனுக்கு அப்போது நெஞ்சு வலி வந்த காரணத்தால் உடனடியாக தாமு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டார்.

அஜயும் நேராக தன் தந்தையை காண மருத்துவமனைக்கு வந்துவிட்டான்.

மருத்துவர்கள், ‘மைல்ட் அடக்தான்’ என்று சொன்ன பிறகே அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

ஆனால் அடுத்து அடுத்துதான் அஜயிற்கு வேறு சில அதிர்ச்சிகள் காத்திருந்தன. சுரேஷ் மரணித்துவிட்ட தகவல். அதுவும் அவனை யாரோ கொலை செய்ததாக சொன்ன போதுதான் அவன் தாமுவிடம் நடந்த அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

இருவருக்குமே விஷயம் இன்னதென புரிந்த போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. அரைகுறை சுயநினைவோடு பாஸ்கரன் செய்த காரியம் அது. அவருக்கு இப்போதும் கூட சுரேஷை உலுக்கியதுதான் நினைவிலிருந்தது. கொலை செய்ததாக அவரால் யோசிக்க கூட முடியவில்லை. ஆனால் அஜய் யூகித்தான். தெளிவாக நடந்த நிகழ்வுகளை வைத்து என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தான்.

அதன் பின் தன் தந்தையை இந்த கொலை பழியிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று முடிவெடுத்தான். அதற்கு எந்த எல்லைக்கு போகவும் அவன் தயாராக இருந்தான். இப்போது அவன் அந்த கொலை பழியை தானே ஏற்கவும் தயாரானது அவளுக்கு ஒன்றும் வியப்பாக இல்லை.

அவன் வரையிலான அவனின் நியாயம் அது. ஆனால் அவளுக்கு இப்போதும் அவன் மீது இரக்கம் வரவில்லை. முன்பை விட இன்னும் அதிகமாக கோபம் மூண்டது.

“ஏன் தாமு முன்னாடியே இந்த விஷயத்தை பத்தி என்கிட்ட நீ சொல்லல?” என்றவள் அழுத்தமாக கேட்க,

“அஜய்தான் இதை பத்தி சொல்ல கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டான்” என்றார் அவர்.

error: Content is protected !!