Rose – 10

0b919940aa3aba79dd3825952abdb2f5-aff197e8

அத்தியாயம் – 10

ஊட்டியில் கோகுலம் எஸ்டேட் பெயர் சொன்னாலே போதும், அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். அதன் உரிமையாளரான கோகுல்நாத்திற்கு உறவென்று சொல்ல யாரும் கிடையாது.

மற்றவர்களைப் போல சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டு முன்னேறியவர், தன்னைப் போலவே கஷ்டப்பட்ட பெண்ணை மணக்க விரும்பினார். அவருடைய டீ எஸ்டேட்டில் கணக்குவழக்கு பார்க்கும்  பிரிவில் வேலைக்கு சேர்ந்தவர் தான் மீனலோட்சனி.

தன்னுடைய சொத்தைப் பார்த்து, ஏராளமான பெண்கள் கடைக்கண் பார்வையால் வலை வீசினர். இளமை துள்ளும் வயதில் யோசிக்காமல் செய்கின்ற தவறுகள் வாழ்க்கையின் போக்கையை மாற்றிவிடும் என்பதால், தன்னைச் சுற்றி ஒரு வட்டம்போட்டு அதில் நின்றார்.

மீனலோட்சனி மற்ற பெண்களைப்போல் இல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கின்ற ரகம். கண்ணியமான உடையும் தேவதையாக வலம்வரும், அவளிடம் இருக்கின்ற பொறுமையும், நிதானமும் கோகுல்நாத்தை வெகுவாகக் கவர்ந்தது.

“திருப்பூர் டீலருக்கு பொருள் அனுப்பி ஒரு வாரமாச்சு சார். அவங்க இன்னும் பேமெண்ட் அனுப்பல” அவள் கூற, கோகுல்நாத் அந்த நபருக்கு போன் செய்து பேசினார்.

“………………” மறுபக்கம் என்ன பதில் வந்ததோ, கோகுல்நாத் முகம் கடுகடுவென்று மாறியது.

“இதெல்லாம் சரிபட்டு வராதுங்க. தொழிலில் நேர்மை ரொம்ப முக்கியம். நீங்க சொன்ன டைம்க்கு பணம் அனுப்பல. உங்களோட டீலிங் வச்சுக்கவும் எனக்கு விருப்பமில்லை” அழைப்பைத் துண்டித்து நிமிர, அப்போதுதான் மீனலோட்சனி அங்கே நிற்பதைக் கண்டான்.

மெல்ல நெற்றியை வருடிவிட்ட கோகுல், “இனி அந்த டீலருக்கு பொருள் அனுப்பாதீங்க!” அவன் கோபத்துடன் கூற, மீனலோட்சனி சரியென்று தலையசைத்து அறையின் வாசல் வரை சென்றாள்.

இந்நிறுவனத்திற்கு வந்த நாளில் இருந்தே, அந்த டீலரிடம் மட்டும் சரியாக பணம் வந்துவிடும். இந்த முறை மட்டும் தாமதமானது ஏனென்ற கேள்வி மனதில் எழுந்தது. அதை உரியவனிடம் கேட்டுவிடலாம் என்ற முடிவுடன், “சார் அவர் ஏன் பணம் அனுப்பல. ஏதாவது காரணம் சொன்னாரா?” என்றாள் மெல்லிய குரலில்.

அவளிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்காத கோகுல்நாத், “அவங்க மகனுக்கு திடீர்னு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சாம். அதனால் பணம் அனுப்ப முடியலன்னு சொல்றான். இதெல்லாம் நம்பும்படியாக இல்ல” என்றான்.

அவனது முகத்தில் வந்துப்போன உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்த மீனலோட்சனி, “ஏன்” என்றாள்.

“அவர் என்னிடம் பேசும்போது பின்னாடி பிள்ளைகள் விளையாடும் சத்தம் கேட்டுச்சு, ஒரு அம்மா கிளம்பலாமான்னு கேட்கிறாங்க! மருத்துவமனை வந்திருக்கேன்னு என்னிடமே பொய் சொல்றாரு… பெத்த மகனுக்கு அடிப்பட்டிருக்கும் நிலையில் ஒருவரால் எப்படி நிதானமாக பேச முடியும்?!” அவர் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுவிட்டு, சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

மருத்துவமனை வளாகத்தை மனதினுள் கொண்டு வந்த மீனாவிற்கு விஷயம் புரிய, தன்னையும் அறியாமல் கலகலவென்று சிரித்தாள்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த கோகுல்நாத் அவளை முறைக்க, “சார் மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் விளையாடுவது சகஜம்தான். அப்புறம் கிளம்பலாமான்னு ஒரு அம்மா குரல், ஒரு வேலை அவங்க மகள் செக்கப்பிற்கு ஹாஸ்பிட்டல் வந்திருப்பாங்க” இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“அவர் உங்களிடம் சொன்னது பொய்ன்னு நீங்க நம்பினால், ஒரு மணிநேரம் கழிச்சு போன் பண்ணி பாருங்க சார். உங்களுக்கே உண்மை புரியும்” அந்த அறையைவிட்டு வெளியேறிட, அந்த விஷயத்தை மறந்து வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் கோகுல்.

மாலை ஐந்து மணியளவில் மீண்டும் அந்த டீலருக்கு அழைத்து அவரின் மகனின் உடல்நலன் பற்றி விசாரித்தான். அவரும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர் சொன்னதாக கூற, ‘ஒரு மனிதரை எவ்வளவு துல்லியமாக எடைபோடுகிறாளே’ மனதினுள் நினைத்தபடி கேபினைவிட்டு வெளியே வந்தார்.

மீனலோட்சனி வீட்டிற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருக்க, “உன்னால் எப்படி அவ்வளவு சரியாக கணிக்க முடிஞ்சிது” என்ற கேள்வியுடன் அவளின் எதிரே போய் நின்றான்.

அவனின் வரவை எதிர்பார்த்திருந்த மீனாவோ எந்தவிதமான பதட்டமும் இல்லாமல், “சிம்பிள் சார்! போனில் பேசும்போது மறுப்பக்கம் இருக்கும் நபரின் சூழ்நிலையை தவறாக கணிப்பது மனித இயல்புதான். உங்களிடம் சொன்ன பொய்யை அவரே கொஞ்ச நேரத்தில் மறந்து போயிருவார்” இலகுவாகக் கூற, அவரின் பார்வை அவளைவிட்டு அசைய மறுத்தது.

“நீங்க மறுபடியும் விசாரிக்கும்போது, திக்கி திணறி மூச்சுமுட்டி போயிடும். அதிலிருந்தே அவர் சொல்வது பொய்ன்னு நம்ம கண்டுபிடிக்கலாம். இது எதுவும் நடக்கலதானே சார்!” அவள் அடக்கபட்ட சிரிப்புடன் கேட்க, கோகுல் இதயத்தில் காதல் மலர்ந்தது.

“நீ சொன்னதுதான் நிஜம்” என்ற கோகுல்நாத் நிதானமாக மீனாவின் முகத்தை ஏறிட்டார். இத்தனை நாளாக இல்லாமல் இன்று அவனின் பார்வையில் தெரிந்த மாற்றம் கண்டு, அவளது இதயம்  முரசு கொட்டியது.

அவரது கண்ணியமான குணமும், பெண்களை மதிக்கும் விதமும் மீனாவின் மனத்தைக் கவர்ந்தது. அவர் பணக்காரர் என்ற காரணத்தால், முடிந்தவரை மனதை மூடி மறைக்க நினைக்க, “உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மீனா, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” நேரடியாக கேட்டுவிட்டான் கோகுல்.

திடீரென்று அவன் இப்படி கேட்டதும், “சார்! நமக்கு சரிபட்டு வராது…” அவள் விலகிச்செல்ல நினைக்க, மீனாவின் மன சஞ்சலத்தை அவளின் விழிகள் காட்டிக் கொடுத்தது.

“என் மனசை பணத்தோடு மதிப்பிடாதே மீனா! நான் உன்னை மனசார விரும்பறேன். நீ என்னை நம்பு, இந்த உடலில் உயிர் இருக்கும் வரை உன்னை நான் நல்லபடியாக வச்சுக்குவேன்” அவளின் கையைப் பிடித்து அதில் சத்தியம் செய்ய, மீனா அதிர்ச்சியில் சிலையாகி உறைந்து நின்றாள்.

ஒருவன் காதலை இப்படிகூட வெளிப்படுத்த முடியுமா என்ற திகைப்பில் நின்றிருந்தவளிடம், “இப்போதாவது என்னை நம்பலாமே” தலையைச் சரித்து குறும்புடன் சிரித்த கோகுலின் முகம், அவளின் மனக்கதவைத் திறந்தது.

மெல்ல தரையை நோக்கிய மீனாவோ, “எனக்கு சம்மதம்” கன்னங்களில் ரோஜாக்கள் எட்டிப் பார்த்தது. அவளின் சம்மதம் கிடைத்த ஒரே வாரத்தில், அந்த ஊரே வியக்கும் வண்ணம் தன் மனையாளைக் கரம்பிடித்தார் கோகுல்நாத்.

இருவரின் காதல் வாழ்க்கைக்குப் பரிசாக யாதவ் பிறந்தான்.  சிறுவயதில் இருந்தே கஷ்டத்தை அனுபவித்த இருவருமே, தங்களின் மகன் கஷ்டப்படவே கூடாது என நினைத்தனர். அவனது பேச்சும், சிரிப்பும் தான் அவர்களை உயிர்ப்பிக்கும் கருவியாக மாறியது.

ஒரு பக்கம் தொழிலை கவனித்தாலும், மனைவி மற்றும் மகனின் மீது தன் உயிரையே வைத்திருந்தார். மீனாவிற்கு தன் குடும்பம் தான் உலகம். கணவனின் அன்பினில் நனைந்துகொண்டே, பெற்ற மகனின் மீது பாசத்தைப் பொழிவாள்.

***

இதற்கிடையே, சனிகிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால், காரமடை அரங்கநாதசாமி கோவிலில் வழக்கத்தைவிட கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தன்னுடன் வர மறுத்த தங்கையை இழுத்து வந்த அகல்யாவைப் பார்த்து சிரித்தார் ரவீந்தர்.

“இவ என்னோட தங்கையா? இல்ல உங்களுக்கு மகளான்னு தெரியலங்க. நீங்க கொடுக்கும் செல்லம் தான், இத்தனைக்கும் காரணம்” கணவனை திட்டி தீர்க்க, சௌந்தர்யா நல்ல பிள்ளையாக அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்தாள்.

“அப்பா ஸ்தானம் என்றால், நான் அவருக்கு மகள். சோ அப்பா எப்போவுமே மகளுக்கு சாதகமாகத் தான் பேசுவாங்க” அக்காவிடம் தொடங்கிய சௌந்தர்யா, “என்ன மாமா நான் சொல்றது சரிதானே” ரவீந்தரையும் பேச்சுக்குள் இழுத்தாள்.

ஏற்கனவே மனைவியிடம் வாங்கிய மண்டகப்படி ஞாபகம் வரவே, “உங்க அக்கா, தங்கை சண்டைக்குள் என்னை இழுக்காதே!” அவர் எச்சரிக்கை உணர்வுடன் கூற, “ச்சே! மாமா சிக்காமல் தப்பிச்சிட்டாரே!” கையை நம்பியார் போல பிசைந்தவளின் குழந்தைதனத்தை பின்னோடு வந்த ஒருவன் ரசித்தான்.

வழக்கத்திற்கு மாறாக கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்க, “இதுக்குதான் கோவிலுக்கே வர மாட்டேன்னு சொன்னேன்! நீயும், அத்தானும் அடம்பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டீங்க. எவ்வளவு கூட்டம் பாருக்கா” என்றாள் சொந்தர்யா.

ரவீந்தர் சிரிப்பை அடக்கியபடி நடக்க, “ஏய் உனக்கும் கல்யாண வயசாகுது! என்னடி சின்ன பிள்ளை மாதிரி கோவிலுக்கு வரக்கூட இப்படி அடம்பிடிக்கிற! பாவம் உனக்கு வாக்கப்பட போகும் பையன்” சொந்தர்யாவை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தாள் அகல்யா.

அக்காவின் கையை உதறிவிட்டு விலகி சின்னவளோ, “எனக்கு வாக்கப்பட போகும் அப்பாவியைத் தான், நானும் ரொம்ப நாளாகத் தேடுறேன். இன்னும் கைக்கும் சிக்காமல் இருக்காரு, அவர் மட்டும் வரட்டும்” பல்லைக் கடிக்க, ‘அம்மாடியோவ்! ரொம்ப கோவக்காரியா இருப்பாளோ?!’ பின்னோடு வந்தவனின் சிந்தனை எங்கோ சென்றது.

அவளின் குழந்தைத்தனம் கண்டு சிரித்த ரவீந்தர், “அகல் பாவம்டி! இன்னும் கொஞ்சநாள் தானே, அவளைக் கொஞ்சம் திட்டாமல் இரு” மனைவியைக் கடிந்துக்கொண்டு நிமிரும்போது மூலவரின் சன்னிதானம் வந்திருந்தது.

மூவரும் சாமியை வழிபட்டுவிட்டு கோவிலின் பிரகாரத்தில் வந்து அமர, தூரத்தில் நின்றிருந்தவனைக் கைகாட்டி, “அகல்யா நான் சொன்னே இல்ல, ஆனந்தன்.” தன் மனையாளுக்கு விழிஜாடையில் விஷயத்தைப் பகிர்ந்தார்.

அகல்யாவின் மனமோ புதியவனைப் பார்வையால் அளவிட, தன் கணவனிடம் ஆனந்தனின் படிப்பு, வேலை பற்றி விசாரித்தாள். தனக்கு மாப்பிள்ளைப் பார்க்கும் விஷயம் அறியாத சௌந்தர்யா, இதற்கும் தனக்கும் எந்தவிதமான சம்மதமும் இல்லை என்ற ரீதியில் புளியோதரையை ஒரு கை பார்த்தாள் சௌந்தர்யா.

ரவீந்தர் பார்த்த மாப்பிள்ளை சொந்தர்யாவிற்கு பொருத்தமானவராக இருக்க, “எனக்கு சம்மதம். நீங்க ஒரு வார்த்தை மச்சினிச்சிட்ட கேளுங்க. அப்புறம் மத்த விஷயத்தை பேசலாம்” என்றாள்.

“அக்கா புளியோதரை முடிஞ்சிடுச்சு! நான் இன்னொரு முறை போய் வாங்கிட்டு வரவா?”  ஆனந்தனின் பார்வை சுவாரசியமாக சொந்தர்யாவை அளவிட, அகல்யா தலையில் அடித்துக் கொண்டாள்.

அவள் ரவீந்தரைக் கேள்வியாக நோக்கி, “இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு? காலையில் இருந்தே ரெண்டு பேரின் பேச்சு, நடவடிக்கை எதுவும் சரியில்ல” என்றபடி அக்கா – மாமாவை பார்வையால் அளவிட, அங்கே வந்து நின்ற புதியவனை ஏறெடுத்தும் பாராமல் புளியோதரையில் கவனமாக இருந்தாள்.

“அவ எப்போதுமே அப்படித்தான்! நீங்க தப்பா நினைக்காதீங்க” ரவீந்தர் கூற, அப்போதுதான் புதியவனை நிமிர்ந்து பார்த்தாள் சொந்தர்யா. ஏனோ முதல் முறை பார்த்தும் அவளுக்கு அவனைப் பிடித்துப் போனது.  மீண்டும் அவனைத் தூண்டும் மனதிற்கு கடிவாளமிட, சின்னவளின் பார்வையை வைத்தே மனதைப் படித்து விட்டார் ரவீந்தர்.

அதை அவளின் பார்வையை வைத்தே புரிந்துகொண்ட ரவீந்தர், “அகல்யா தங்கை என்றாலும், எனக்கு இவ மகள்தான் ஆனந்த்” என்று தொடங்கிய கணவனைக் கனிவுடன் ஏறிட்டாள் அகல்யா.

“நான் அடுத்த மாதம் வெளிநாடு போகணும், இவளை தனியாக விட முடியாது! அதற்காகவே இந்த திருமணத்தை ஏற்பாடு செய்யறேன். நீங்க அவளை நல்லபடியாக வச்சுப் பார்த்துக்கணும்” அந்த புதியவன் தனக்கு பார்க்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை என்ற விஷயமே சௌந்தர்யாவிற்கு தெரிந்தது.

அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, “தாய் – தகப்பன் இல்லாத பொண்ணு. நாங்களும் அங்கே போயிட்டால், இவளுக்கு நீங்க மட்டும்தான்” ரவீந்தர் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச, ஆனந்தன் அவரின் கையைப் பிடித்தான்.

தன்னவளின் மீது பார்வையைப் படரவிட்டு, “நீங்க என்னை நம்பலாம் சார்! கடைசிவரை சொந்தர்யாவை நான் நல்லபடியாக வச்சுக்குவேன்!” உறுதியாகக் கூற, ரவீந்தர் – அகல்யா இருவரின் விழிகளும் கலங்கியது.

அவன் விழிகள் சொன்ன செய்தியைக் கேட்டு சொந்தர்யா திகைக்க, “என்னைக் கல்யாணம் செய்ய உங்களுக்கு சம்மதமா?” ஆனந்தன் நேரடியாகக் கேட்டுவிட, அவளும் சம்மதமென தலையசைத்தாள்.

அந்த மாத இறுதியில் அவர்களின் திருமணத்தை நடத்தி முடித்த ரவீந்தர் – சௌந்தர்யா, அமெரிக்கா கிளம்ப திட்டமிட்டனர். கணவனுக்கு அங்கே வேலை கிடைத்திருக்க, வேறு வழியில்லாமல் தான் சௌந்தர்யாவின் திருமணத்தை சீக்கிரமாகவே முடித்தனர்.

அகல்யா துணியை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்க, ரவீந்தர் மற்ற டாகுமெண்ட் அனைத்தையும் சரி பார்த்து கொண்டிருந்தார். இத்தனை நாளாக தன்னை பாரமாக நினைக்காமல், பெற்றவர்களுக்கு நிகரான பாசத்தை பொழிந்த அக்கா – அத்தான் பிரிவு சௌந்தர்யாவைக் கலங்க வைத்தது.

தன் கணவனுடன் அக்காவின் வீட்டினுள் நுழைந்த சௌந்தர்யா, “அக்கா – மாமா” என்ற அழைக்க, இருவரும் முகம் மலர அவளை வரவேற்றனர்.

உடனே ஓடிச்சென்று அக்காவைக் கட்டியணைத்து, “அக்கா ப்ளீஸ் போகதே! நீயும், மாமாவும் இங்கேயே இருங்க. உங்களைப் பார்க்காமல் என்னால் எப்படி…” என்றவள் சிறுபிள்ளைபோல அழுக, அவளைத் தோளோடு சேர்த்து அணைத்த அகல்யாவும் உடைந்து அழுதாள்.

இருவரையும் சமாதானம் செய்ய நினைத்த ரவீந்தர், “சௌந்தர்யா சின்ன லீவ் கிடைத்தாலும், நான் உங்க அக்காவைக் கூட்டிட்டு இங்கே வர்றேன். தைரியமான பெண் நீயே உடைந்து அழுதால் எப்படி?! என் செல்ல மகள் இவ்வளவு கோழையா?” அவர் வேண்டுமென்றே சீண்டிவிட, சட்டென்று தமக்கையைவிட்டு விலகி நின்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

சௌந்தர்யாவின் தலையைப் பரிவுடன் வருடிவிட்டு, “மத்தவங்க கண்ணுக்கு நான் மாமனாக இருந்தாலும், எனக்கு நீதான் முதல் மகள். எனக்கு பிறக்கப் போகின்ற குழந்தை இரண்டாவது தான்” என்று கூற, அவரின் தோளில் சாய்ந்து அழுத மனைவியைப் பார்க்கும்போது, ஆண்மகனான ஆனந்தனின் விழிகூட கலங்கியது.

மறுபக்கம் அகல்யா சாய்ந்து அழுகவே, அவர்கள் பயணத்தை தவிர்க்க முடியாதே என்பதால், மெல்ல மனைவியின் அருகே சென்றான் ஆனந்தன். சௌந்தர்யா வெடுக்கென்று ரவீந்தரைவிட்டு விலகி நிற்க, “நீ கவலைப்படாதே! அவங்க சீக்கிரமாவே இந்தியா வந்திடுவாங்க சௌந்தர்யா” தன் மனைவியை சமாதானம் செய்து, அவர்களை வழியனுப்பி வைத்தான்.

அங்கே சென்றபிறகு கொஞ்சநாள் பேசிய அகல்யா, “நீ சித்தியாகப் போறேடி. நான் இப்போ கர்பமாக இருக்கேன்” சந்தோசமான செய்தி சொன்னாள். 

கொஞ்சம் கொஞ்சமாக பேச்சுவார்த்தை குறைந்து, ஒரு கட்டத்தில் தொடர்பு விட்டுப்போனது. இந்நிலையில் ஆனந்தனுக்கு எஸ்டேட்டில் வேலை கிடைக்க, தன் மனைவியுடன் ஊட்டிக்கு இடம் பெயர்ந்தார்.

***