sippayinmanaivi 15
sippayinmanaivi 15
யார் வீரன்
திருகோணம், வணிகர்களின் கனவு உலகம். அது மீதி நாகர் ஊர்கள் போல் அல்லாமல் எப்பொழுதும் பரபரப்புடன் ஏதேனும் ஒன்றை தேடிக்கொண்டே அலையும் விட்டில் பூச்சி போல் மக்கள் திரிந்துக் கொண்டே இருப்பார்கள். பொற் காசுகளும் செம்பு பொருட்களும் முத்துக்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் விலங்குகள், அடிமைகள் மற்றும் கலை பொருட்கள் என வெளிச்சத்தில் ஒளிரும் நகரமாக இருக்கும். ஐநுறுவர் மாநாட்டில் இருக்கும் ஆடம்பரத்திற்கு கொஞ்சம் கூட குறையாமல் இருக்கும் திருகோணம்.
கடற்கரை எங்கும் மீன் மற்றும் கடல்விலங்கு கடைகள். அதே கடல் விலங்ககுகளை சமைத்து வைத்திருக்கும் சிற்றுண்டி கடைகள். கடலில் நீர் காண முடியா அளவிற்கு கலன்கள் நிறைந்திருக்கும் திருகோணம் கடல் பகுதி. திருகோணத்திலிருந்து மேற்கு கடலில் சிறிது நேரம் பயணித்தால் ஒரு சிறு தீவு அங்குதான் மார்த்தாண்டன் இருக்கிறான் மற்றும் அவன் கடல் படை அங்குதான் இருக்கும். ரோம நாடு, யுவன நாடு மற்றும் அதை கடந்து இருக்கும் ஏகபு நாடு மற்றும் பிராங்கா நாட்டிலிருந்து வரும் போர் கலன்கள் மற்றும் கடல் கொள்ளையர்களை இந்த தீவை தாண்டி வரவிடுவதில்லை. நாகரின் பாதுகாப்பு அரண் மார்த்தாண்டன் இருக்கும் லக்கோ தீவு தான்.
பொருள் பலமும் ஆள் பலமும் நிறைந்த மார்த்தாண்டன் நினைத்தால் ஒரே திங்களில் நாகரை இரண்டாகப் பிரிக்கமுடியும் ஆனால் திருகோணம் விடுதலைக்காக காத்திருந்தான். போர் அனைத்திற்கும் பதில் அல்ல என்பதை உணர்ந்தவன் மார்த்தாண்டன். கணியனுக்கு மார்த்தாண்டன் மேல் பெரிய மதிப்பு உள்ளது. கணியனை விட நிறைய நாடுகள் பயணித்திருக்கிறான் மற்றும் உலகம் அறிந்த மனிதன். மார்த்தாண்டன் பேசுவது குறைவு ஆனால் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதிந்துவிடும்.
ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் பலம் கொண்ட வார்த்தைகள்- மார்த்தாண்டம் சொல்லும் வார்த்தைகள். ரோம கவிஞர்கள் மற்றும் அவர்களின் நாடகம் மேல் பெரும் ஆர்வம் கொண்டவன். ரோம நாடு மற்றும் யுவன நாடு இலக்கியங்கள், கவிதைகள் மற்றும் நாடகங்களை நாகர் மொழிகளில் மாற்றி தெரு கூத்தாகவும், மேடை நாடகங்களாகவும், குறுவ கூத்தாகவும் பரப்பினான். நாகர் நாட்டின் வாய் வழிக் கதைகளை பிற நாட்டிற்கும் பிற நாட்டு கதைகளை நாகருக்கும் வழங்கியதில் மார்த்தாண்டன் பங்கு மிக அதிகம். மார்த்தாண்டன் தன் வாழ்க்கையையே ரசனை மிகுந்ததாக மாற்றிக் கொண்டான். தனக்கென ஒரு மனைவி இல்லை, ஆனால் தீவு எங்கும் தோழிகள் தான்.
மார்த்தாண்டன் கணியனை பார்த்து மகிழ்ந்தான். வேகமாக நடந்தான், தன் குட்டையான உருவத்தில் அவனின் வேகம் கொஞ்சம் நகைப்பு உரியதாக இருந்தாலும், மார்த்தாண்டத்தின் வீரமும், அறிவு கூர்மையும் அவனை வேடிக்கையாக பார்க்க விடுவதில்லை. அப்படி பார்ப்பார்களே என்ற கவலையும் அவனுக்கு இல்லை.
‘தோழா எப்படி இருக்கிறாய், பார்த்து நிறைய திங்கள்கள் ஆகிறது’ மார்த்தாண்டன் கேட்டான்.
‘நலம் தோழா.! உன் தீவிற்கு வரவேண்டும் என்றிருந்தேன்’ கணியன் சொன்னான்.
‘அங்கே உனக்கு வரவேற்பு இல்லை, அதனால் தான் இங்கே நானே வந்தேன்’ மார்த்தாண்டன் சொன்னான்.
‘மகிழ்ச்சி தோழா! ரோம தேறல் குடிக்கிறாயா?’ கணியன் கேட்டான்.
‘உறுதியாக தோழா’ மார்த்தாண்டன் சொல்லி தேறல் கிண்ணத்தை எடுத்தான்.
‘நாகரிடம் இருந்து பிரிந்ததும் திருகோணம் தான் பொருள் பலம் கொண்ட மிகப் பெரிய ஆளுமையாக இருக்கப் போகிறது’ கணியன் சொன்னான்.
மார்த்தாண்டன் சிறிதாக புன்னகைத்தான் உடலை உலுக்கியவாறு. ‘சொல் தோழா’ கணியன் கேட்டான்.
‘தோழா, பிரிவு எப்பொழுதும் பலவீனம் தான்’ மார்த்தாண்டன் சொல்லிவிட்டு தேறல் கிண்ணத்தில் இருந்து குடித்தான். கணியனும் அதைப் புரிந்து கொண்டு மேலும் வினா எதுவும் கேட்கவில்லை.
‘தலைவரே, பிரம்பி போரில் மார்த்தாண்டன் பங்கும் பெரிதல்லவா?’ மதிமாறன் கேட்டான். மார்த்தாண்டன் புன்னகைத்தான்.
‘ஆம், மார்த்தாண்டன் ஒரு மாயக்காரன், சௌவலய பேரரசை எப்படி அடக்கினான் தெரியுமா ? அதை எல்லாம் பாடமாக்கி வைக்க வேண்டும். தெரு கூத்து கலைஞர்களிடம் இந்த நிகழ்வை நாடகமாக்க சொல்ல வேண்டும்’ கணியன் சொன்னான்.
‘போரை நிறுத்தத் தெரிந்தவன் தான் சிறந்த வீரன்.’ மார்த்தாண்டன் சொன்னான்.
தீயில் கருகிய கூர் மூக்கு நீள நீலமீனை பத்து இலைகள் பரப்பில் கொண்டு வந்து வைத்தனர் அனைவரும் அந்த மீனை உண்ண ஆரம்பித்தனர். மார்த்தாண்டன் அருகில் ஒரு ரோம பெண் வந்து இருந்தாள். மார்தாண்டனை பார்த்தாள், மார்த்தாண்டனும் பார்த்தான் அவளின் கருவிழி எந்தப் பக்கம் திரும்புகிறதோ அந்தப் பக்கம் அவனும் அவன் கருவிழியை திருப்பினான். கண்களை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததால் மங்கலாக அவள் புன்னகைப்பது தெரிந்தது.
‘ஓகுலி சுண்ட பராசெப்டோரேம் டே லிபிடோ’ மார்த்தாண்டன் சொன்னான்
‘கோது வெறும் ஈஸ்ட்’ அந்த பெண் சொன்னாள்.
‘வொலுண்ட் கோங்நோசேரே குஷ்டம் டே லப்ரா’ மார்த்தாண்டன் சொன்னான்.
அவள் சிரித்துவிட்டு ‘குஸ்டரே எம்மா’ என்று சொல்லி அவளின் இதழை மார்த்தாண்டன் இதழில் பதித்தாள்.