VET23

VET23

சகோதரத்துவம்

வீரேந்திரன் அவளின் கைப்பேசியை கையில் எடுத்து பார்க்க, அதில் ரகு என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அவனுக்கு உடனே நினைவுக்கு வந்தது இன்ஸ்பெக்டர் ரகுவின் முகம்தான். அவனாகதான் இருக்கும் என்று சந்தேகமும் வலுத்தது.

தான் செய்வது இங்கீதமற்ற செயல் என்று தெரிந்தும் அதை செய்ய சொல்லி மனம் நிர்பந்தித்தது.

அந்த குரல் ரகுவினுடையதுதானா என தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

கணவனாக தான் செய்ய நினைக்கும் செயல் தவறெனினும் போலிஸ்காரனாக தன் செயலில் தவறில்லை என்று தனக்குத்தானே ஒரு நியாயத்தை 
கற்பித்து கொண்டான்.

எப்போதும் தன் கணிப்பு தவறாகாது என பெருமிதம் கொள்பவன், இன்று தன் கணிப்பு தவறாகிவிடக் கூடாதா என்ற எண்ணத்தோடே அந்த அழைப்பை ஏற்க,
எதிர்புறத்தில் ரகுவின் குரல் அழுத்தமான பாணியில் கேட்டது.

“ஏ தமிழச்சி… என்னடி நினைச்சிட்டிருக்க… ?!” ‘தமிழச்சி’ என்ற ஒற்றை அழைப்பே வீரேந்திரன் இதயத்தை இரண்டாய் பிளந்துவிட்டது.

அதுவும் இன்ஸ்ப்பெக்டர் ரகுவின் குரல் என்பது அவனுக்கு அடுத்த பேரிடி. 

ரகு தன் தோழியிடம்தான் பேசுவதாக எண்ணி கோபமாக “ஆமாம்… யாரை கேட்டு நீ நான் பேசிட்டிருக்கும் போதே போஃனை கட் பண்ண ?… நீயா கால் பண்ணுவன்னு பார்த்தா அதுவும் இல்ல… நான் சொல்றதை ஒழுங்கா கேளு… அந்த டைரியை என்கிட்ட கொடுத்திரு… அப்புறம் உனக்குதான் பிரச்சனை” என்றான்.

வீரேந்திரனுக்குஅதிர்ச்சி ஒரு பக்கமும் கோபம் ஒரு பக்கமும் ஆட்டிப்படைக்க, அவன் உள்ளம் கொதிப்படைந்தது.

“…….”

“ஏன்டி ஸைலன்ட்டா இருக்க…?!” 

‘எத்தனை டி போடுவான் ?… ராஸ்கல்’ என வீரேந்திரன் மனதிற்குள் திட்டியபடியே மௌனமாய் இருந்தான்.

ரகு மேலும் “ஏ தமிழச்சி பேசுடி” என்றான்.

“…..” வீரேந்திரன் உடலெல்லாம் உஷ்ணம் ஏறியது. 

“தமிழ்” என்று அழைக்க அப்போதும் பதில் இல்லை.

கடைசியாய் கோபம் குறைந்து அமர்த்தலாய் பேசினான்.

“என்னாச்சுடி ?!… போன தடவையும் பதில் பேசாம கட் பண்ணிட்ட…. உன் ஏசிபி புருஷன் பக்கத்தில இருக்கானா ?!… அதனாலதானா !… சரி நீயா அப்புறமா கால் பண்ணி பேசு… ” என்று சொல்லிவிட்டு ரகு அழைப்பை துண்டிக்க வீரேந்திரன் விழிகள் எரிமலை குழம்பமாய் மாறியிருந்தது. அவன் எதிரே வந்து யார் அப்போது நின்றாலும் அடுத்த நொடியே சாம்பல்தான்.

*****
தமிழ் சத்தமின்றி தேவியின் அறைக்குள் நுழைந்து தங்கையை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தலாம் என எண்ணியிருந்தாள்.

சகோதிரியின் நுழைவை கூட கவனிக்காமல் தேவி தீவிரமாய் படுக்கையில் தலையணை மீது கைவைத்து கன்னங்களை தாங்கி பிடித்தபடி ஏதோ செய்து கொண்டிருக்க, தமிழ் பின்னோடு சென்று அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

அந்த கணமே தேவி தன் சகோதிரியின் தொடுகையை உணர்ந்து “அக்கா” என்றழைக்க , இருவரும் ஆரத்தழுவி கொண்டனர். 

சட்டென்று தேவியின் முகம் மாற்றம் அடைந்து தவிப்போடு தலையணையை பார்க்க, தமிழின் பார்வையும் அந்த திசையில் திரும்பியது. 

அப்போது இருவருமே தலையணை மீதிருந்த புத்தகத்தை எடுக்க யத்தனிக்க, அதனை தமிழின் கையில் எடுத்துவிட தேவியின் முகமும் விழயும் சுருங்கி போனது.

தமிழ் அந்த புத்தகத்தை புரட்டிய நொடி கீழே விழுந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சியானாள்.

தங்கையை நோக்கி “என்னடி இது ?” என்று மிரட்டலாய் கேட்கவும் தேவி தயங்கியபடி “உன் ஞாபகவே இருந்துச்சா ?” என்று சொல்லும் போதே தமிழ் போட்டோவை குனிந்து எடுத்திருந்தாள். 

அது தமிழும் ரகுவும் சேர்ந்திருந்த புகைபடம்.

தமிழ் தேவியிடம் அந்த போட்டோவை அவள் முன்னே நிறுத்தி “என் ஞாபகமா வைச்சுக்க உனக்கு இந்த போட்டோதான் கிடைச்சுதா?” என்று கேட்டாள்.

தேவி தலைகவிழ்ந்தபடி நின்றிருக்க
“பதில் சொல்லுடி” என்று தமிழ் அவள் முகத்தை நிமிர்த்தினாள். அவளிடம் பதிலில்லை.

தமிழே தொடர்ந்தபடி “உனக்கு ரகுவை பிடிச்சிருக்கா தேவி?” அழுத்தமாய் கேட்கவும் தேவியின் துருதுருப்பான விழிகள் மின்ன, உதடுகள் புன்னகையிக்க முடியாமல் நாணத்தால் துடித்தன.

அவள் முகமே அவள் எண்ணத்தை வெளிக்காட்டிவிட தமிழ் பெருமூச்செறிந்தபடி யோசனையில் ஆழ்ந்தாள்.

தேவி தன் சகோதிரியின் மனநிலையை உணர முடியாமல் மௌனமாய் நிற்க தமிழ் தீர்க்கமான பார்வையோடு “இது சரி பட்டு வராது தேவி… வேண்டாம்” என்றாள்.

தேவியின் முகம் வாடி வதங்கி கண்ணீரை உதிர்க்க காத்திருக்க, தமிழ் மேலும் “ஸ்டேட்டஸ்… இல்ல சாதி மதம் இப்படி எதையும் நினைச்சி சொல்லல… பிராக்டிக்கலா இந்த ரிலஷன்ஷிப் சரியா வராது… புரிஞ்சிக்கோ” என்றாள்.

தேவிக்கு சகோதரியின் வார்த்தைகள் பேரதிர்ச்சியாய் இருக்க “ஏன்? ” என்று கேட்டபடியே அவள் விழியின் அணை உடைந்தது.

அதோடு நிறுத்தாமல் கண்ணீரோடு “நீங்க இப்படி சொல்வீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல” என்றாள். 

“இப்ப என்ன சொல்லிட்டாங்கன்னு இப்படி அழற” மிரட்டலாய் ஒலித்தது தமிழின் குரல். 

தேவி பேசாமல் தேம்பியபடி இருக்க அவளின் அழுகையை பார்க்க முடியாமல் அவள் தலையை தடவி “சரி அழாதே… நாம இதைபத்தி ரகுகிட்ட பேசலாம்” என்றாள்.

தேவியின் கண்ணீர் உறைந்து போய்விட தன் தமக்கையை நோக்கி “கண்டிப்பா பேசி சம்மதிக்க வைச்சிருவீங்க இல்ல” என்று கேட்க,

தமிழ் கோபத்தோடு “ஏய் என்ன விளையாடிறியா ?… நாம பேசலாம்னு சொன்னேன்… சம்மதிக்கிறதெல்லாம் அவன் பாடு… உன் பாடு” என்றாள்.

தேவி தவிப்போடு நிற்க தமிழ் யோசனை குறியோடு “ஆமாம்… அவனை போய் உனக்கு எப்படிறி பிடிச்சிது… அப்படி என்னடி பண்ணான் ?… எனக்கு தெரியாம உன்கிட்ட நூல் விட்டானா ?!… செஞ்சிருப்பான்… கேடி” என்று கோபமானாள்.

“ச்சே… அப்படி எல்லாம் இல்லக்கா… இன்னும் கேட்டா அவரோட அந்த கேரக்டர்தான் என்னை இம்பிரஸ் பண்ணிடுச்சு… நேத்து என் காலேஜ் ப்ரண்டு ஒருத்தன் பிரப்போஸ் பண்ணிட்டான்… நான் அவன்கிட்ட ப்ரண்ட்லியா பேசினதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டான்… இடியட்… ஆனா ரகு உங்களோட இத்தனை வருஷ நட்பை எவ்வளவு கண்ணியமா பார்த்திருக்கிறாரு… ஹீ இஸ் கிரேட்” என்று சொன்னதுதான் தாமதம்.

தமிழ் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள்.

தேவிக்கு ஒன்றும் புரியவில்லை. 

தமிழ் சிரித்து சிரித்து வயிற்றை பிடித்து கொண்டவள் “முடியல” என்று சொல்லியபடி பெரும்பாடுபட்டு சிரிப்பை நிறுத்தினாள்.

“ஏய் லூசு… நீ பார்க்கிற ரகு வேற… அவன் ஊருப்பட்ட பொண்ணுங்கள என் கண் முன்னாடியே ஸைட் அடிச்சி சுத்தி இருக்கான்… இன்னும் கேட்டா… ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் ஏகப்பட்ட பொண்ணுங்கிட்ட ரோஸ் கொடுத்து பல்ப் வாங்கி இருக்கான்” என்று சொல்லி மீண்டுமே சிரித்தாள். 

ஆனால் தேவி திர்க்கமான பார்வையோடு “அதெல்லாம் சரி… ஆனா அவர் உன்னை ஸைட் அடிச்சிருக்காரா ?… இல்லை எப்பையாச்சும் உன் கிட்ட பிரப்போஸ் பண்ணி இருக்காரா ?!” என்று கேட்ட நொடி தமிழ் புருவங்கள் சுருங்க “அதெப்படிறி பண்ணுவான்… நாங்க ப்ரண்ட்ஸ்” என்றாள் அழுத்தமாக.

“அது… அதுதான் விஷயம்….. உன் நட்பையும் நம்பிக்கையையும் இத்தனை வருஷமா காப்பாத்திறாரே… அப்படிப்பட்டவர் நிச்சயம் எல்லா உறவுக்கும் மதிப்பு கொடுப்பாரு… பெண்களை மரியாதையா நடத்துவாரு… இதைவிட ஒருத்தருக்கு வேறென்னகா தகுதி வேணும்… கல்யாணம் செஞ்சிக்கிட்டா அவரை மாதிரி ஒருத்தரை செஞ்சிக்கனும்… இல்லக்கா… அவரைதான் செஞ்சிக்கனும்… ” என்று தீர்க்கமாய் அவள் சொன்ன விதத்தில் ரகு எந்தளவுக்கு அவள் மனதில் உயர்ந்து நிற்கிறான் என்பது நன்கு புரிந்திருந்தது.

தங்கைக்கு இருப்பது வெறும் ஈர்ப்பு என்று எண்ணியே தமிழ் எப்படி எல்லாமோ அவள் மனதை மாற்ற யத்தனித்தாள். ஆனால் தேவியின் பதிலில் இருந்த உறுதி தமிழை யோசிக்க செய்தது. 

தமிழ் தங்கையின் கைகளை பற்றி “இன்னமும் நீ சின்ன பொண்ணுன்னு நான் நினைச்சிட்டிருக்கேன் தேவி… ஆனா நீ வளர்ந்திட்டன்னு இப்ப எனக்கு நல்லாவே புரியு வைச்சிட்ட… நிச்சயம் உன் வாழ்க்கை பத்தின முடிவை தனியா நீயே எடுக்கிற தெளிவும் தைரியமும் உன்கிட்ட இருக்கு… ஸோ கோஹெட்… ஆனா…. இப்பவும் சொல்றேன்… இதுல என்னை கூட்டு சேர்க்காதே… ரகுவாச்சி நீயாச்சி” என்றாள்.

“இப்படி சொன்னா என்னக்கா அர்த்தம் ?… நான் அவர்கிட்ட பேசினதே இல்ல… அப்புறம் எப்படி இந்த விஷயத்தை பத்தி”

“தேவி…வெற்றியோ தோல்வியோ… முயற்சி பண்ணனும்… நீ பேசி பாரு… அவன் மனசில என்ன இருக்குன்னு நீயே கேட்டு தெரிஞ்சிக்கோ… அது என்னவாயிருந்தாலும் ஏத்துக்கோ” என்றதும் தேவி ஆழ்ந்த யோசனைக்குள் போனவள் மீண்டும் தமக்கையை நோக்கி “எனக்கு பயமா இருக்குக்கா ?” என்றாள்.

தமிழின் முகத்தில் மீண்டும் குறும்புத்தனம் குடியேற “பயமா இருக்கா… அதுவும் ரகுவை பார்த்தா… நீ வேற… அவன் சரியான மாங்காடி… உன்னை மாதிரி ஒருத்தி லவ் சொன்னா… கும்பிடு போட்டு கல்யாணம் பண்ணிப்பான்… ஆனா இப்பவும் சொல்றேன் ஒரு முறை நல்லா யோசிச்சிக்கோ… நீயா போய் புதைகுழில விழுந்திட்டு என் பேர்ல பழி போட கூடாது” என்றாள்.

images (5).jpeg

 

“விளையாடதீங்க… கொஞ்சம் ஸீர்யஸா யோசிச்சி பேசுங்க… சித்தியும் ரவியும் சேர்ந்துக்கிட்டு ரகுவை எப்படி எல்லாம் இன்ஸல்ட் பண்ணி இருப்பாங்க… இன்னும் கேட்டா… உங்க இரண்டு பேரையும் சேர்த்து வைச்சி… சே… அப்படி இருக்கும் போது அவர் எப்படி என்னை” என்று கேட்டு வருத்தமுற்றாள். 

“ஹ்ம்ம்ம்… கரெக்ட்தான்…இதை நினைச்சுதான் நானும் உன்கிட்ட முதல்ல வேணாம்னு சொன்னேன்… “

தேவி கோபமாக “அவங்க இரண்டு பேரும் செஞ்ச தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கனுமா? ” என்று கேட்டதும

ரவி கதவருகில் வந்து நின்று “நீ தண்டனை அனுபவிக்க வேண்டாம் தேவி… நான் செஞ்ச தப்பை நானே சரி செய்றேன்… ரகுகிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்றான்.

சகோதிரிகள் இருவரும் வியப்புகுறியை வெளிப்படுத்த, ரவி உள்நுழைந்ததும் தேவி “நிஜமாதான் சொல்றியா?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம்” என்று தலையசைக்க தமிழ் புன்னகையோடு “மன்னிப்பு கேட்கிறவன் மனிஷன்… மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனிஷன்… என் தம்பி பெரிய மனிஷனாகிட்டான்” என்று அவன் தோள்களை தொட்டு பெருமிதம் கொண்டாள்.

“என்னை அப்படி நீங்க மாத்திட்டீங்கக்கா” என்றான் ரவி.

தமிழ் வியப்போடு “இப்போ அக்கான்னு கூப்பிட்டியா ரவி” என்று கேட்க “ஹ்ம்ம்ம்” என்றான்.

“வேண்டாம் ரவி… நீ என்னை தமிழ்னே கூப்பிடு”

தேவி குறுக்கிட்டு “கூப்பிடட்டுமே… இப்ப எதுக்கு வேண்டாங்கிறீங்க” என்றாள்.

தமிழ் அவள் புறம் திரும்பி “அப்போ நீ அவனை அண்ணான்னு கூப்பிடிறி” என்றாள்.

தேவி தோள்களை குலுக்கியபடி “கூப்பிட்டா போச்சு… என்னடா அண்ணா” என்றாள்.

தமிழ் தேவியின் தலையில் நங்கென்று கொட்டினாள். ரவி புன்னகையோடு “நல்லா போடுங்க” என்றான். 

இத்தனை வருடங்களுக்கு பிறகு மூவருமே இன்றுதான் அவர்களின் சகோதரதுவத்தை முழுமையாய் உணர்ந்து கொண்டனர். 

நிர்மூலமானது

தமிழின் மனம் ஆனந்தத்தில் உயர உயர பறந்து கொண்டிருக்க அவளின் விதி விரைவிலேயே அவளை அகலபாதாளத்தில் தள்ள காத்திருந்தது.

சந்தோஷத்தில் திளைத்திருந்தவளுக்கு கணவனின் நினைவு வரவும் ரவியை நோக்கி “அவரை தனியா விட்டுவிட்டு வந்திட்டியா ரவி ?” என்று யோசனைகுறியோடு கேட்டாள். 

ரவி அவளிடம் “இல்ல… உன் ரூமை பார்க்கனும்னு சொன்னாரு…” என்றதும் அதிர்ந்தவள் 

தேவியின் புறம் திரும்பி “என் ரூம் கீ உன்கிட்டதானே இருக்கு” என்று கேட்டாள்.

“அது நீ வரப் போறன்னு அம்மா சொன்னாங்க… க்ளீன் பன்றதுக்காக ரூமை நான்தான் திறந்தேன்… அப்பதான் இந்த போட்டோ கிடைச்சது?” என்று இழுத்தவளை கோபமாய் முறைத்தவள் தன் அறை நோக்கி வேகமாய் நடந்தாள்.

ஏதோ தவறாய் நடக்க போவதாய் அவள் உள்ளுணர்வு உரைத்து கொண்டிருக்க, பதட்டத்தோடு தன் அறைக்கு விரைவாய் ஓடினாள்.

அப்போது அவள் விழிகள் கண்ட காட்சியை அவளால் நம்பவேமுடியவில்லை. 

தன் அறை முழுவதையும் பார்வையை படரவிட்டவளின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.

அவள் அதிர்ச்சியோடு தலையின் மீது தன் கரத்தை வைத்து பிடித்து கொண்டிருக்க,

அப்போது அவனின் குரல் கனிரென்று அந்த அறை முழுக்கவும் எதிரொலித்தது.

“வாடிடிடிடி… என் தமிழச்சி… வா… உனக்காகதான்டி… காத்திட்டிருக்கேன்” என்று பற்களை கடித்து கொண்டு அழுத்தம் கொடுத்து அழைத்தான்.

jdwmSLcbhbdsi.jpg

 

அவனை பார்த்ததுமே அவள் திடுக்கிட்டு நின்றாள். 

மறவாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்களே. அதற்கு நன்றி.

ஆதி கதைநாயகியாக இடம்பெற்ற ஆதியே அந்தமாய் கதை இனி தொடர் நாவலாக தம் தளத்தில் இடம் பெற போவதை வாசகர்களிடம் பெருமிதத்தோடு தெரிவித்து கொள்கிறேன்.

Aadhiye anthamai intro

மறவாமல்வோட் பண்ணவும் கமென்ட் பண்ணவும் 

நாளை அத்தியாயம் உங்கள் கையில்தான்.

Leave a Reply

error: Content is protected !!