41
படத்தை பார்க்கும் போது இதயம் தாங்க முடியாத வலியில் துடித்தது. வேதனையும் அவமானமுமாக உணர்ந்தாள். அது அத்தனை நெருக்கமான புகைப்படம். சௌஜன்யா போதையில் கண் சொருக அரைகுறை ஆடைகளோடு இருக்க, அவளை முத்தமிட்டு கொண்டிருந்தான் ஷ்யாம்.
எவரெஸ்ட் சிகரத்திலிருந்து கீழே யாரோ தள்ளி விட்டது போன்ற ஒரு பிரம்மை அவளுள்!
தலை சுற்றியது. வயிற்றை பிசைந்தது.
கண்கள் கலங்க அந்த புகைப்படத்தை டெலீட் செய்தாள்.
மீண்டும் அந்த எண்ணிலிருந்து கால் வர, கைகள் நடுங்க பேசியை அணைத்து வைத்தாள்.
துக்கம் தொண்டையை அடைத்தது. அடிவயிற்றிலிருந்து ஒரு கேவல்… வெடித்து எழ, அவசரமாக வாயை மூடிக் கொண்டாள். சப்தம் யாருக்கேனும் கேட்டு விட போகிறதோ என்று!
கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமாக வழிந்தது.
துடைக்கக் கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள், படுக்கையின் மீதே!
என்ன மாதிரியாக உணர்கிறாள் என்பதைக் கூட அவளால் உணர முடியவில்லை. தோழியாக மட்டும் இருந்தால், இந்த வேதனையும் அவமானமும் வலியும் இருந்திருக்கப் போவதில்லை. ஆனால் எப்போது தோழி என்பதை தாண்டி காதலி, வருங்கால மனைவி என்ற எல்லைக்குள் அடியெடுத்து வைத்தாளோ, அன்று முதலே நித்தம் கொடுமையாகத்தான் இருந்தது.
அவன் இப்படித்தான் என்பது தெரிந்தது தான், அவன் வாய்மொழி வாயிலாக!
பழக்கம் உண்டு என்றும் கூறிவிட்டான் தான். அதையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தோம் என்று நினைத்தவளுக்கு இந்த புகைப்படத்தை சற்றும் ஜீரணிக்க முடியவில்லை.
தன்னை முத்தமிட்ட இதழ்கள் இன்னொருத்தியை அதே மயக்கத்தோடு முத்தமிடுவதை பார்த்த பின்னும் அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ள முடியுமா என்ன?
அவளால் முடியவில்லை… முடியவே இல்லை!
தலையை பிடித்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தாள்!
யாரோ கதவை தட்டும் ஓசை!
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள்!
அழுது கண்கள் சிவந்து முகம் வீங்கியிருந்தது!
மெல்ல எழுந்து முகத்தை முழுவதுமாக துடைத்துக் கொண்டு, முகத்தை சீர் செய்து கொண்டு கதவை திறந்தாள்.
கார்த்திக் தான் நின்றுகொண்டிருந்தான். கையில் அவனது செல்பேசி…
“என்னண்ணா?” என்று இயல்பாக கேட்பது போல காட்டிக் கொண்டாலும் அவளது கனத்த குரலை அடையாளம் கண்டுக்கொண்டான் அவளது தமையன். முகம் சுருங்கியது. இயல்பான மனநிலையில் அவள் அண்ணாவென்று அழைத்ததே கிடையாது. ‘வாடா போடா’ வோடு முடிந்து விடும். அவளுக்கு தோள் தேவைப்படும் சமயத்தில் மட்டுமே அண்ணா என்றழைப்பாள்.
“ஏன்டா ஒரு மாதிரியா இருக்க?” என்றவனின் கேள்விக்கு என்ன பதில் கூற?
“ஒன்னும் இல்ல ண்ணா… ஐ ஆம் ஆல்ரைட்…” என்று முடிக்க பார்க்க, அவளது கையைப் பிடித்து அழைத்து வந்து அறைக்கு வெளியே இருந்த சிறு சோபாவில் அமர வைத்தான்.
“என்னடா குட்டி? வாட் ஈஸ் ஈட்டிங் யூ?” என்று கேட்க,
“நத்திங் ண்ணா… ஐ ம் ஓகே…” என்று கூறியவள் எப்படியாவது தப்பித்துக் கொள்ள மாட்டோமா என்ற மனநிலையில் இருந்தாள். அப்படியே சொல்வதென்றாலும் என்ன சொல்ல?
மிகவும் அவமானமாக இருந்தது.
ஷ்யாமை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு தான் யாரோ இதில் விளையாடியிருப்பது புரிந்தது. ஆனால் அது தனக்குமான அவமானம் அல்லவா! அவனுக்கு ஒன்று என்றால் அவனை விடுத்து தனியாக தன்னை யோசிக்க முடியுமா என்று நினைத்துப் பார்த்தாள்.
முடியாது… கண்டிப்பாக முடியாது என்று தான் தோன்றியது….
ஆனால் அவனது வாய் வார்த்தைகளை ஜீரணிக்க முடிந்தவளுக்கு அந்த புகைப்படத்தை ஜீரணிக்கவே முடியவில்லை என்பதும் உண்மை.
குழப்பமாக இருந்த முகத்தை படிக்க முயன்றான் அவளது தமையன்.
எதுவோ ஒரு குழப்பம் என்று மட்டும் புரிந்தது. ஆனால் என்னவென புரியவில்லை. செல்பேசியை மகாவுக்கு ஷ்யாம் கொடுத்ததை அறிவான். கொடுத்தபோதே சொல்லியிருந்தான்.
“அவளை கல்யாணத்துக்கு கூட சம்மதிக்க வெச்சுட்டேன்… ஆனா போனை யூஸ் பண்ண வைக்க முடியல மச்சான்…” என்று நொந்து கொண்டதை பார்த்து அப்போது சிரித்தான்.
“ஏன் மச்சான்? என்ன வம்பு பண்ணி வெச்ச?” என்று கேட்க,
“என்ன? நமக்குதான் வாய்ல வாஸ்து சரியில்லையே… முன்ன எப்பயோ சொன்னதெல்லாம் மனசுல வெச்சுகிட்டு போனை தொட்டுக் கூட பார்க்க மாட்டேங்குது உன் பாசமலர்…” எனவும்,
“ஷப்பா… இதுல என்னை இழுத்து விடாத மச்சான்… இன்னைக்கு இப்படி சொல்லுவ… நாளைக்கு என்னோட டார்லிங்க திட்ட நீ யார்டான்னு கேப்ப…” என்று நழுவவும், அவன் சிரித்தான்.
அதை மனதில் கொண்டுதான் செல்பேசியை ஆப் செய்து விட்டாளா? என்று அவளை பார்த்தான்.
“அப்புறம் ஏன் மஹா போனை ஆப் பண்ணி வெச்சு இருக்கியாம்?” என்று கேட்க, அவள் திடுக்கிட்டு விழித்தாள்.
“ஏன் ண்ணா?”
“இல்ல… மச்சான் ட்ரை பண்ணிட்டே இருந்தாராம்… கிடைக்கலைன்னு எனக்கு கூப்பிட்டு சொன்னார்… அதான் ஆன் பண்ண சொல்லலாம்ன்னு உன்னை எழுப்பினேன்…” என்று கூறவும்,
“இருக்கட்டும் ண்ணா காலைல ஆன் பண்ணிக்கறேன்… இப்ப படிக்கணும்… இன்னும் டூ டேஸ்ல எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது… போன் ஆன்ல இருந்தா டிஸ்டர்பா இருக்கும்…” என்று கூறிவிட்டு எழுந்து போனவளை ஆழ்ந்து பார்த்தான் கார்த்திக்.
என்னவோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது…
ஹைதராபாத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் ஷ்யாம். அவனது பெற்றோர்கள் முன்னமே சென்றிருக்க, இவன் இங்கு இருந்த வேலைகளை முடித்துவிட்டு இரவு விமானத்தில் செல்ல முடிவு செய்திருந்தான். மகாவிடம் செல்வதாக கூற வேண்டும் என்பதற்காக தான் அத்தனை முறை அழைத்து ஓய்ந்து விட்டு, கார்த்திக்கு அழைத்திருந்தான்.
ஷ்யாமுக்கு அழைத்த கார்த்திக், “தூங்கிட்டா போல இருக்கு மச்சான்… காலைல பேசிக்கயேன்…” என்று கூற,
“அதுக்குள்ளவா தூங்கிட்டா?” என்று மணியை பார்க்க, அது பத்தரையை தொட்டிருந்தது.
“ஓ டென் தர்ட்டி ஆகிடுச்சா? நமக்குதான் இது லேட் ஈவினிங் ஆச்சே…” என்று சிரிக்க, கார்த்திக்கும் சிரித்தான்.
“அவளுக்கு இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸாம் ஸ்டார்ட் ஆக போகுது போல… சீரியஸா படிச்சுட்டு இருக்கா…” எனவும்,
“ஓகே… நான் ஒரு ஒன் வீக் டிஸ்டர்ப் பண்ணலை… ப்ரீயாகிட்டு மஹாவே போன் பண்ணட்டும்…” என்று வைத்துவிட, மனதுக்குள் கனமாக உணர்ந்தான்.
ஷ்யாம் இயல்பாக அதே காதலோடு தான் இருக்கிறான் என்பது புரிந்தது. மகாவுக்கு தான் எதுவோ குழப்பம் பிடித்து ஆட்டுகின்றது என்பதும் புரிந்தது.
இது எதுவரை போகும் என்பது கார்த்திக்கு புரியவில்லை.
ஆனால் ஷ்யாமின் திருமண முடிவு சரிதான் என்று தோன்றியது. இவளது குழப்பங்களை எல்லாம் திருமணம் நீக்கிவிடும் என்று உறுதியாக நினைத்துக் கொண்டான்.
****
காலை எழுந்தது முதலே தலை கனக்க ஆரம்பித்து இருந்தது. மைக்ரேன் தலைவலி அதன் தாக்கத்தை ஆரம்பித்து இருந்தது. எழ முடியாமல் தலையை பிடித்துக் கொண்டுதான் எழுந்தாள்.
கண்கள் இரண்டும் செக்க செவேலென சிவந்திருந்தது. இரவு முழுவதும் அழுததை கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடும் என்று எண்ணியவள், முதல் வேலையாக சில்லென நீரில் குளித்தாள்.
வலி சற்று குறைந்து தேவலாம் என்பது போல தோன்றியது.
ஸ்டடி டேபிளின் மேல் வீற்றிருந்த செல்பேசியை பார்த்தாள்.
உள்ளுக்குள் திகிலாக கூட இருந்தது.
கைகள் நடுங்க பேசியை ஆன் செய்து வைத்து விட்டு, புத்தகத்தை எடுத்து அடுக்கத் துவங்கினாள்.
அன்றைக்கு அவளுக்கு தியேட்டர் டியூட்டி இருந்தது. டெலிவரி பார்த்து அதை கணக்கெழுத வேண்டும். அவளுக்கு இருந்த தலைவலியிலும் மனநிலையிலும் முடியுமா என்பது தெரியவில்லை. நண்பர்கள் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு தான் டெஸ்க்கில் கவிழ்ந்து விட வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டாள்.
இது அவர்களுக்குள் நட்பு ரீதியிலான ஒப்பந்தம். யாருக்காவது முடியவில்லை என்றால் அவர்களது டியூட்டியை இன்னொருவர் பார்த்து விட்டு ப்ராக்சி கொடுத்து விட்டு போவது.
டெலிவரியை இதுவரை அவள் மிஸ் செய்ததே இல்லை. அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அது. ஒரு உயிர் முதன்முதலில் இந்த உலகத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் அந்த சந்தோஷ நிமிடங்களை அனுபவிக்க அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் இன்றைய மனநிலையில் எதுவுமே செய்ய முடியாது என்று தோன்றியது.
‘இதெல்லாம் தெரிந்து தானே அவனை காதல் செய்கிறாய்?’ என்று அவளது மனம் கேள்வி கேட்க,
‘ஹும்ம்ம்… ஆமா…’ என்று தனக்குத் தானே தலையாட்டிக் கொண்டாள்.
‘அப்புறம் ஏன் இவ்வளவு டென்ஷன் மஹா? எத்தனையோ பேருக்கு அவனைப் பிடிக்காமல் இருக்கலாம்… அவர்களது டார்கெட் இப்போது நீ…’ என்று அவளது அறிவு உரைக்க, ஒருவாறாக குழப்பத்திலிருந்து வெளியே வந்தவள், ஷ்யாமுக்கு அழைக்கலாம் என்று பேசியை எடுக்க,
அந்த எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு!
பேசியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் சிறு நடுக்கம் பரவியது.
அழைப்பை எடுக்கவில்லை…
மனதுக்குள் மெல்லிய பதட்டம் சூழ்ந்தது.
இவர்கள் விட மாட்டார்கள் போலிருக்கிறதே என்று எண்ணியவள், ஒரு நிமிடம் இதை ஷ்யாமிடம் கூறிவிடலாமா என்றும் கூட யோசித்தாள்.
ஆனால் அன்று கார் சம்பவத்தின் போது, அவன் செய்த காரியம் அவளை பெரிதாக அதிர செய்திருந்தது. சற்று பயந்தும் கூட போனாள்.
யாரிடமோ செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தவன்,
“உன்னோட ஆளுங்க அங்க ரீச்சாக எவ்வளவு நேரமாகும் சந்திரா?” என்று கேட்க, அந்த பக்கமிருந்து என்ன செய்தி வந்ததோ,
“வெளிய பார்கிங்ல விஜி கார் இருக்கும்… அவனுக்கு முன்னாடியே அவனோட காரை தூக்கு சந்த்ரா… அவன் அரண்டு போகணும்…” என்று அத்தனை கோபம் அவனது முகத்தில்… ஆனால் வெகு நிதானமாக ஒலித்தது அவனது குரல்.
ஆக வெகு நிதானமாக திட்டமிட்டு அடிக்கின்றான். அப்போதே இதயம் எம்பி வெளியே குதித்து விடும் போல இருந்தது.
அந்த பக்கமிருந்து என்ன பதில் வந்ததோ,
“இல்ல வேண்டாம்… அவன் இருக்கணும்… ஆனா பயம் வரணும்… நம்மளை தொடக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கணும்… மத்தவங்களுக்கு அது தெரியும் சந்த்ரா… இவன் கூடவே இருந்தவன்… அதான் சுலபமா நினைச்சுட்டான்…” என்று கூறிவிட்டு வைக்கையில் அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.
கார்த்திக்கும் அதிர்ந்து, “ஏன் மச்சான்? ஏன் இவ்வளவு கோபம்?” என்று கேட்க,
“மஹாவை ஒருத்தன் அழ வெச்சுருக்கான்… அவனை சும்மா விட சொல்றியா கார்த்திக்?” அத்தனை அழுத்தமாக கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் அப்போது பைரவியும் கார்த்திக்கும் விழித்தது தனி கதை!
இப்போது அதை நினைத்துதான் பயமாக இருந்தது.
இந்த விஷயத்தை ஷ்யாமிடம் கூறிவிடலாம்… ஆனால் இதற்கான எதிர்வினையை அவளால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அதோடு இப்படியொரு புகைப்படம் எனக்கு வந்தது என்று அவனிடம் கூற பிடிக்கவில்லை. அந்த படத்தையே ஜீரணிக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில், அவனோடு பேசவே பிடிக்கவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை!
அத்தனையும் தெரிந்து கொண்டவள் தான்… ஆனால் ஜீரணிக்க நேரமாகலாம்… ஆனால் ஜீரணித்து தான் ஆக வேண்டும்…
வேறு வழியில்லை!
முடிவு செய்து கொண்டவள், தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
மைக்ரேன் தலைவலி மண்டையை பிளந்தது…
மீண்டும் அதே எண்ணிலிருந்து கால்…
கட் செய்து விட்டாள்!
வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்ததற்கான ஒலி!
கைகள் நடுங்க திறந்து பார்த்தாள்!
இரண்டு புகைப்படங்கள்….
இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆடைக்குறைப்பு…
ஷ்யாம் ரொம்பவும் கிறங்கியிருந்தான்… சௌஜன்யா அதற்கும் மேலாக…
அவனது உணர்வுகளை அந்தரங்கமாக தான் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்தது அந்த புகைப்படங்கள்…
நிற்காமல் கண்களிலிருந்து வழிந்தது அருவி…
மேஜை மேல் தலை சாய்த்து அமர்ந்தவள் அப்படியே தலையை பிடித்துக் கொண்டாள்.
அவளால் தாள முடியவில்லை…
தனக்கு உரிமையானவனை இன்னொருத்தியோடு பார்க்க அவளால் முடியவில்லை… அதிலும் அத்தனை நெருக்கமாக… மயக்கமாக… கிளர்ச்சியோடு… மகாவுக்கு மயக்கம் வரும் போல இருந்தது… வாயை மூடிக்கொண்டு அழுதாள், சப்தமில்லாமல்!
இந்த புகைப்படங்களை காட்டினால் திருமணம் நிற்பது நிச்சயம்… ஆனால் ஷ்யாம் அசிங்கப்பட்டு விடுவானே!
அவனை எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என்று கேட்ட மனம், இந்த கண்றாவிகளை சகிக்க முடியாமல் உயிர்வலியில் துடித்தது.
“உன்னை விட்டுகொடுக்கவும் முடியல… இந்த கண்றாவியை ஏத்துக்கவும் முடியலடா… நான் என்னடா செய்வேன்?” சப்தமில்லாமல் கதறினாள் மஹா.
அந்த புகைப்படத்தை பார்க்கும் போது உண்மையில் ஷ்யாமை வெட்டிப் போடும் ஆத்திரம் கிளம்பியது.
‘ஒரு தடவை, பைனான்ஸ் கேட்டிருந்த ப்ரொடியுசர் ஒருத்தர் அவளை அனுப்பி விட்டிருந்தார்… அது எப்பவுமே கேஷுவலான ஒன்னு தான்… வேண்டாம்ன்னு சொன்னதில்ல… ஆனா அவ அப்புறமா டேட் பண்ணலாமான்னு கேட்டா… எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டேன்… இவ்வளவுதான் நடந்தது…’ எவ்வளவு இயல்பாக கூறினான். தனக்கு அதில் ஒன்றும் ஒட்டுதலில்லை என்பது போல…
ஒட்டுதல் இல்லாதவனா இப்படி மயங்கி கிறங்கியிருப்பான் என்ற கோபம். அந்த இயல்புக்கு பின்னால் இத்தனை இருக்கிறதா என்ற ஆத்திரம்… அத்தனை கோபமும் அந்த பேசியின் மேல் திரும்ப… அதை போட்டு உடைக்க எண்ணி தூக்கிப் போட போக,
திரும்பவும் அதே எண்ணிலிருந்து அழைப்பு!
இவளுக்கு வெறியே பிடித்து விடும் போல இருந்தது.
Leave a Reply