VNE42(2)

VNE42(2)

“விட்டா நீங்களே கண்ணு வெச்சுடுவீங்க மாமா… இரண்டு பேரையும் உத்து பார்க்காதீங்க சொல்லிட்டேன்…” என்று வார,
“போடீ… நான் கண்ணு போட்டுத்தான் என் பொண்ணு கெட்டுட போறாளா? என் பொண்னையும் மாப்பிள்ளையையும் பார்த்துட்டு இருந்தாலே போதும்டீ… எனக்கு சாப்பாடு கூட வேண்டாம்…” என்று உண்மையைக் கூற,
“அடடா பைத்தியம் முத்தித்தான் போச்சு…” என்று சிரித்தார்.
“ஆமா பைரவி… இப்பதான் மஹா பொறந்த மாதிரி இருக்கு… அதுக்குள்ள பாரேன்… அவளுக்கு கல்யாணமே பண்றோம்… நாளும் பொழுதும் ஓடுது பைரவி…” பெண்ணை பார்த்தபடியே ஆதூரமாக கண்கள் பணிக்க கூறினார்.
“இப்பவே கண் கலங்காதீங்க மாமா… இன்னும் உங்க புத்திரியை புகுந்த வீட்டுக்கு அனுப்பனும்… அதுவரைக்கும் ஸ்டாக் வெச்சுக்கங்க…” என்று கிண்டலடிக்க, பெற்ற தகப்பனாக சற்று கலங்கித்தான் போனார்.
என்னதான் திருமணம் செய்வித்து புகுந்த வீட்டுக்கு அனுப்பித்தான் ஆக வேண்டும் என்றாலும், பெண்ணை பிரிவதை நினைத்தால் அவருக்கு வலிக்கத்தான் செய்தது.
ஆனாலும் பெண்ணை அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடியுமா என்ன? அவளை சீரும் சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்து, அவள் அங்கு சந்தோஷமாக வாழ்ந்து குடும்பம் பெருகினால் தானே பெற்றவருக்கு மகிழ்ச்சி.
அதை நினைத்துக் கொண்டார்.
மஹாவுக்காக அத்தனை தூரம் நின்றவன் ஷ்யாம். அவன் கைகளில் தானே பெண்ணை ஒப்படைக்க போகிறோம் என்பதே மனதுக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது. மகிழ்ச்சியில் விகசித்தது அவரது முகம்.
அவர்களின் அத்தனை மகிழ்ச்சியையும் தான் ஒரே நொடியில் நாசம் செய்ய போகிறோம் என்ற வேதனையில் வெறித்துக் கொண்டிருந்தாள் மஹா.
“மஹா… எல்லாரும் காஞ்சீவரத்துக்கு கிளம்பிட்டாங்க… நீ என்ன இப்படியே உட்கார்ந்துட்டு இருக்க?” என்று பைரவி திரும்பவும் கேட்க, டைனிங் ஹாலுக்கு வந்த கார்த்திக், தங்கையின் கோலத்தை பார்த்து மனம் துணுக்குற்றான்.
ஆத்மநாதனும் ஜோதியும் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. ஷ்யாம் இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவான். ஆனால் இந்த பெண் என்ன இப்படி அமர்ந்திருக்கிறாள்?
சற்று முன் தான் அவனுக்கு வாட்ஸ்அப் செய்திருந்தாள்.
‘ப்ளீஸ் ஸ்டாப் தி மேரேஜ்…’ என்று!
அதை அவன் பார்த்து விட்டதாக டபுள் டிக் காட்டினாலும், அழைக்கவில்லை.
“ஏய் எருமை… மாப்பிள்ளை வந்துட்டாங்க… எந்திருச்சு போய் ட்ரஸ் மாத்திட்டு வா…” எப்போதும் போல அர்ச்சனையை ஆரம்பிக்க, நேராக டைனிங் டேபிளுக்கு வந்தான் ஷ்யாம்.
வந்தவனை நிமிர்ந்து பார்த்தவள், தலை குனிந்து கொண்டாள்.
“ஏய் என்னடி… காலைல சாப்பிட்டது பத்தலையா? அத்தை டிபன்ல கை வெச்சுட்டீங்களா?” அவளை கிண்டலடித்தவன், பைரவியிடம் திரும்பி அவரையும் கேலி பேச,
“ஆமா… கை வெச்சாலும் சும்மா விட்ற போறா?” என்று நொடித்தவர், “ஆனா ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னைக்கு இன்னும் சாப்பிடவே இல்ல…” என்று கூற,
“எங்க இருந்து மழை கொட்டப் போகுதுன்னு தெரியல… ஒரு நேரம் உங்க மக சாப்பிடாம இருக்கா…” என்றவன், “சரி எனக்கு டிபன் கொடுங்க…” எனவும், கிச்சனுக்குள் விரைந்தார்.
அவள் அருகில் அமர்ந்தவன், “குல்பிக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?” என்று சிறுபிள்ளையை கேட்பது போல கேட்க,
கார்த்திக் தலையிலடித்துக் கொண்டான்.
“யோவ்… அது மொதல்லையே ரொம்ப பண்ணிட்டு இருக்கு… ஏன்டி இப்படி இருக்கன்னு கேளுன்னு சொன்னா… தடவிக் கொடுத்துட்டு இருக்கியே மச்சான்…” என்று கார்த்திக் சிரிக்க,
“மச்சான்… என் பொழப்புல மண்ணள்ளி போட்டுடாத… ஏதோ அப்படி இப்படி பேசி உன் தங்கச்சிய கரெக்ட் பண்ணிட்டு போயிட்டு இருக்கேன்…” என்று வேண்டுமென்றே கிண்டலாக கூறவும்,
“இதெல்லாம் ஒரு பொழப்பா மச்சான்?” சிரித்தான்.
“யோவ்… நானும் தான பார்க்க போறேன்… நீ தோப்புக்கரணம் போடப் போறியா இல்ல மொத்தமாவே படுத்தற போறியான்னு…” என்றவனை வெட்கமாக பார்த்தான் கார்த்திக்.
“இப்ப நீ தான் மச்சான் எங்களுக்கு எக்ஸ்பெரிமெண்டல் ரேட்… நம்மளை அப்புறமா தான் கவனிக்கணும்…” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பைரவி டிபனை எடுத்து வந்துவிட,
அவள் புறம் திரும்பியவன், தோசையை பியைத்து சாம்பாரில் குழைத்து, “சாப்பிடு மஹா…” என்றான்.
அவனுக்கு புரிந்திருந்தது, அவளது மனது.
ஏதோ பிரச்சனை, ஏதோ தவிப்பு என்று!
அதை தன்னிடமும் கூறாமல் தவிர்க்கிறாள் என்று புரிந்து கொண்டான்.
இரண்டு நாட்களாக அவள் அழைக்காமல் அவனை தவிர்த்ததே அதற்கு சாட்சி!
அதோடு இன்று அவனுக்கு வாட்ஸ்அப்பில் திருமணத்தை நிறுத்து என்று மெசேஜை அனுப்பிய போது அவனுக்கு அவளது சிறுபிள்ளைத்தனத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
கார்த்திக்கும் அவ்வப்போது அழைத்து இவளது நிலையை கூறிக்கொண்டிருந்தான்.
“சாப்பிடு மஹா… அப்புறமா பேசலாம்…” என்று மீண்டும் அழுத்திக் கூறி ஊட்ட, பதில் பேசாமல் அவள் வாங்கிக் கொண்டாள்.
உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது. ஷ்யாமை விட்டுக் கொடுப்பதை நினைக்கவும் முடியவில்லை. அவன் நேர்மையாக அனைத்தையும் ஒப்புக்கொண்டு இருக்கிறான். ஆனால் அத்தனை படங்களையும், கடைசியாக விஜய் அனுப்பிய வீடியோவையும் பார்த்த பிறகு, அவனை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.
கண்கள் கலங்கியது.
“என்னடி ரொம்ப காரமா?” என்று கேட்க,
“இந்தம்மா காரத்தை விட்டு வெளாசுவா… அவ கிட்ட போய் காரமான்னு குப்புற விழுந்து கேக்கறியே மச்சான்?” அருகில் அமர்ந்திருந்த கார்த்திக், இருவரையும் ரசித்தபடி கலாய்த்தான்.
“ஆந்திராக்காரனை கட்டிக்க போறா… அப்புறம் காரத்தை வெளாசாம எப்படியாம் மச்சான்… இன்னும் நாங்க மிளகாய அப்படியே கடிக்கற ஆளுங்க… அங்க வந்தா இன்னும் தேறிடுவா பாரு…” என்று ஷ்யாம் சிரிக்க,
அவள் கண்களில் சிரிப்பே எட்டவில்லை.
ஷ்யாம் அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே கார்த்திக்கிடம் வம்படித்துக் கொண்டிருந்தான்.
பெரியவர்கள் அனைவருக்குமே அந்த காட்சி அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது. ஒருத்தியை தவிர!
மஹா!
உள்ளுக்குள் வெதும்பினாள்… வேதனையில் முத்துக் குளித்துக் கொண்டிருந்தாள்… ஆனால் அமைதியாக, அவன் ஊட்ட இவள் உண்டு கொண்டிருந்தாள்.
ஒரு தோசையை முடிக்கும் போதே அவள் போதுமென தலையை இடம் வலமாக ஆட்ட, கையை கழுவிய ஷ்யாம், அவளருகில் அமர்ந்து கொண்டு,
“இப்ப சொல்லு குல்பி… என்ன விஷயம்?” என்று கேட்க, அவள் பதில் கூறாமல் மெளனமாக இருந்தாள்.
“என்ன ஷ்யாம்? என்ன விஷயம்?” என்று கார்த்திக் கேட்டான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஷ்யாமின் நிதானம் அவனை துணுக்குற செய்தது.
“மேரேஜை நிறுத்தறதாம்… எனக்கு மெசேஜ் பண்ணிருக்கா…” என்று இயல்பாக கூற, பைரவி திடுக்கிட்டார். கார்த்திக்கும் அப்படியே! மற்றவர்கள் அனைவரும் வெளி ஹாலில் அமர்ந்து இருந்ததால் இவர்களை பார்க்க முடியுமே தவிர என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாது.
“ஏய் என்னடி? என்ன காரியம் பண்ற?” என்று பைரவி பதற,
“இருங்க அத்தை… என்னனு நான் கேட்கறேன்… டென்ஷன் ஆகாதீங்க…” என்றவன்,
“சொல்லுடா… பயமா இருக்கா?” என்று கேட்க, அதற்கும் பதிலில்லை.
அவளது மௌனம், பிரச்சனை பெரிதென கூறியது.
அவளது கண்கள் மட்டும் கலங்கி கீழ் நோக்கியபடியே இருக்க, அவனுக்கு புரியவில்லை.
விஜய், அவனது எண்களில் அழைத்திருந்தால் சிவச்சந்திரனின் வலையில் விழுந்திருப்பான். ஆனால் ஷ்யாமை பற்றி முற்றிலுமாக அறிந்த விஜய் இப்போது சுதாரித்து இருந்தான். புது நம்பரை வாங்கியவன், புது மொபைலில் அதுவும் ஸ்மார்ட்போன் அல்லாமல் பேசிக் மாடல் போனில் தான் அவளை தொடர்பு கொண்டான்.
ஸ்மார்ட் போனை ஸ்பை செய்வது மிகவும் சுலபம். ஆனால் பேசிக் மாடலில் அது முடியாது. அதிலும் நாம் இருக்கும் இடங்களில் என்னென்ன எண்கள் செயல்படுகின்றன என்பதை வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும் ஆனால் அதுவே அந்த சர்கிளை தாண்டி அந்த எண்னை ஆக்டிவேட் செய்தால் அது இவர்கள் தான் என கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
விஜய், போனை வெளியே வாங்கியவன், வெளியே இருந்தவாறே பேசிவிட்டு வெளியே ஓரிடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டான். வாட்ஸ் அப் அனுப்புவதும் அப்படியே. வெளியிலிருந்து தான். அதற்கு தனி போன்.
இத்தனை திட்டமிட்டுத்தான் இந்த பிளானை அவன் செயல்படுத்தியதும்.
அது சரியான விதத்தில், அதாவது ஷ்யாமின் கண் பார்வையை வெற்றிகரமாக மறைத்திருந்தது.
இல்லையென அவள் தலையாட்டினாலும் அவள் இன்னமும் உண்மையை கூறவில்லை என்று தோன்றியது.
“சரி… கிளம்பு… காஞ்சீவரம் போய் வந்துட்டு எதுவானாலும் பேசிக்கலாம்…” என்று அவளை எழுப்ப, அவள் பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.
கண்களில் வெறுமை!
அந்த வெறுமை ஷ்யாமை வெகுவாக தாக்கியது.
“நான் வரலை…” மெதுவாக வாய் திறந்தாள்.
“அப்படீன்னா நாங்களே போயிட்டு வந்துடறதா? உனக்கு பிடிச்ச மாதிரி சாரி வேண்டாமா?” என்று ஷ்யாம் கேட்க,
“எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்றேன்…” என்று தலை குனிந்து கொண்டே கூற, சிரித்தான் ஷ்யாம்.
பைரவிக்கும் கார்த்திக்கும் டென்ஷன் ஏறியது.
சிறுபிள்ளையா இவள்?
“மஹா… ரொம்ப பண்ற! மச்சான் உனக்கு ரொம்ப இடம் கொடுக்கறார்…” கண்டித்தான் கார்த்திக்.
“கார்த்திக்… நான் பேசிக்கறேன்…” என்றவன், “ஏன்? என்ன? வாட் இஸ் ஈட்டிங் யூ… அதை சொல்லு… அதுக்கு சொல்யுஷன் நான் சொல்றேன் குல்பி…” என்று நிதானமாக கூற, அவளுக்கு தான் தொண்டையை அடைத்தது.
“எனக்கு எந்த சொல்யுஷனும் வேண்டாம்… எனக்கு நீ ஜஸ்ட் ப்ரெண்டா இருந்தா போதும்… ஐ டோன்ட் வான்ட் டு மேரி…” என்று பிடிவாதமாக சிறு குரலில் கூற,
அவனது முகம் சுருங்கியது.
“கல்யாணமே வேண்டாமா இல்ல என்னோட கல்யாணம் வேண்டாமா?” என்று கேட்க,
அவள் மெளனமாக இருக்க, “சொல்லு மஹா…” என்றான்.
“ஐ டோன்ட் வான்ட் டூ மேரி எனிபடி…” கோபம் எவரெஸ்ட் ஏறிக்கொண்டிருந்தது.
“என்ன ரீசன்?” அவனது பொறுமை பறந்து கொண்டிருந்தது.
“ரீசன் சொல்லித்தான் ஆகணுமா?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.
“எஸ்…”
“சொல்ல முடியாது…” அழுத்தமான குரலில் கூற, அவளது தீவிரம் புரிந்தது. கார்த்திக் ஒருபுறம் பதற, பைரவி இன்னொரு பக்கம் பதறினார். ஹாலில் அமர்ந்திருந்த தந்தையை காட்டி,
“மஹா… லூசுத்தனமா பேசாத… அப்பாவுக்கு டென்ஷன் கொடுத்துடாத ராஜாத்தி… தயவு செஞ்சு கிளம்பு.. அப்புறமா பேசிக்கலாம்…” என்று முடித்து வைக்க பார்க்க,
“ம்மா… என்னால இவனை கட்டிக்க முடியாது…” வெகு அழுத்தமாக கூற, சேரை தள்ளி விட்டு எழுந்தான் ஷ்யாம். அவனது பொறுமை சுத்தமாக காணாமல் போய்விட்டு இருந்தது.
“ஏய் என்னடி ரொம்ப பேசற? இப்ப என்னாச்சுன்னு இப்படி குதிக்கற?” என்று கோபமாக கேட்க, ஹாலில் இருந்தவர்கள் அதிர்ந்து திரும்பி பார்த்தனர்.
“நான் குதிக்கல ஷ்யாம்… என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தான் சொல்றேன்…”
“அதான் ஏன்னு கேட்கறேன்?” அவனுக்கு புரியவில்லை. இப்போது பொறுமையும் இல்லை.
“வேண்டாம்… நான் சொல்ல விரும்பலை…”
“நான் ஒன்னும் இளிச்சவாயன் இல்ல… லவ் பண்ணுவாளாம்… கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னா முடியாதுன்னு சொல்லுவாளாம்… என்னடி என்னைய பார்த்தா எப்படி தெரியுது?” படு கோபமாக இவன் கேட்க, அவசரமாக அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர் மற்ற மூவரும்.
“என்னாச்சு மாப்பிள்ளை?” என்று முருகானந்தம் கேட்க, 
“என்னாச்சுடா தம்பி? ஏன் இவ்வளவு கோபமா பேசற?” நாதன் கேட்க, ஜோதி மஹாவை ஆழ்ந்து பார்த்தார். அவளது கண்களில் தெரிந்த நிராசையும், வெறுமையும் அவரை தாக்கியது.
“கொஞ்சம் பொறுமையா பேசு ஷ்யாம்…” என்று அவனை அடக்க பார்க்க,
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ஆண்ட்டி… இவன் எனக்கு நல்ல ப்ரென்ட்… அதுவே போதும்… அதுக்கு மேல ஒரு ரிலேஷன்ஷிப் எனக்கு வேண்டாம்…” ஜோதியிடம் மிகுந்த வலியோடு கூற, அவளை தன் புறம் திருப்பினான் ஷ்யாம்.
“லூசாடி நீ? நீயா பேசற? எனக்கு புரியல மஹா… விளையாடாத…” என்று ஷ்யாம் தீவிரமான குரலில் கேட்க,
“இல்ல… எனக்கு கல்யாணம் வேண்டாம்…” ஒரே வார்த்தையில் பிடிவாதமாக இருந்தாள். கண்களில் கண்ணீர்!
“மஹா… கோபத்தை கிளறாதே… அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன்… என்னோட இன்னொரு முகத்தை காட்ட வெச்சுடாத…” என்று கையை ஒங்க வந்தவன், அடக்கிக் கொண்டு பல்லைக் கடிக்க,
“ஷ்யாம்… பொறுமையா இரு… நான் பேசறேன்…” என்று கார்த்திக் வர,
“தயவு செஞ்சு கொஞ்சம் எல்லாரும் ஹாலுக்கு போங்க… ப்ளீஸ்…” என்று சற்று சப்தமாக கூற, அவள் திடுக்கிட்டு பார்த்தாள்.
இருவருமாக பேசிக் கொள்வதுதான் சரி என்று அனைவரும் ஹாலுக்கு சென்று விட, அவளது முகத்தை நிமிர்த்தினான், கோபமாக!
“சொல்லு… ஏன் வேண்டாம்?” என்று கேட்க, அதற்கும் மேல் அவனிடம் மறைத்து வைத்து ஒன்றுமாகபோவதில்லை என்று முடிவு செய்து கொண்டவள், அவளது செல்பேசியை எடுத்து டிவிட்டரை ஓபன் செய்து,
“இது யார் ஷ்யாம்?” என்று அவனது முகத்துக்கு நேராக காட்டினாள்.
அவளது முகத்தில் அத்தனை ரவுத்திரம்!
ஒரு செக்கன்ட் அந்த படத்தை உற்று பார்த்தவனுக்கு உண்மையில் தலை சுற்றியது.
அது அவன் தானே?
அவன் சௌஜன்யாவுடன் இருக்கும் படமா?
ஏதோ அசிங்கத்தை மிதித்து விட்ட உணர்வு!
அவமானமாக இருக்க, “கடவுளே!” என்று தலையை பிடித்துக் கொண்டான்!
தான் இப்படி படம்பிடிக்க பட்டோமா?
எதுவுமே புரியாமல் தலை சுற்ற, தொப்பென்று டைனிங் டேபிள் சேரில் அமர்ந்து கொண்டு தலையை பிடித்துக் கொண்டான்.
“யார் ஷ்யாம் இது?” அவள் கண்களில் நீர் வழிய, வார்த்தைகள் வலியோடு தெறித்து விழ, துக்கம் தாள முடியாமல், அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் ஆனால் பார்த்தபடி,கேட்டாள்.
‘அட்லீஸ்ட் கிராபிக்ஸ்ன்னு பொய்யாவது சொல்லேன்டா…’ என்று யாசித்தது அவளது விழிகள்.  
மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன்,
“நான் தான் மஹா…” உணர்வில்லாமல் கூறினான் ஷ்யாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!