VNE48(4)

VNE48(4)

“மஹாதான் சாரி சூஸ் பண்ண இவ்வளவு லேட் பண்றான்னா நீயாவது ஹெல்ப் பண்ணேன் ஷ்யாம்… நீயும் வெளிய வெய்ட் பண்றன்னு போனா எப்பதான் வேலைய முடிக்கறது?”

“ம்ம்மீ…”

“ஷ்யாம்… முடிச்சுட்டு போலாம்…” சற்று கறாராக ஜோதி கூற, எழ போனவன், அப்படியே அமர்ந்தான்.

“சரி… ஆனா உங்களுக்கு தேவையான சாரீஸ் மட்டும் எடுங்க… மகாவுக்கு டிசைனர் பார்த்துக்கட்டும்… என்னென்ன வேணும்ன்னு மட்டும் லிஸ்ட் கொடுங்க…” என்றவன், மிகப் பிரபலமான அந்த டிசைனருக்கு அழைத்தான்.

அவர் மிகவும் பிரபலமான டிசைனர் என்பதோடு, அவரது உடைகள் உலக அளவில் புகழ் பெற்றவை. அதிலும் அவர் மணப்பெண்கள் உடை வடிவமைப்பில் மிகவும் பெயர் பெற்றவர். பாலிவுட்டில் அவரது உடைகள் இல்லாத நபர்கள் இல்லை என்பதோடு, தன்னிடம் அவரது டிசைன்ஸ் இருக்கிறது என்பதை பெருமையாக கூறிக் கொள்ள ஒரு கூட்டமே இருக்கிறது.

ஆனால் இந்த குறுகிய கால இடைவெளியில் அவரது டிசைன்ஸ் சாத்தியமா என்று ஜோதி யோசிக்க, அவரிடம் பேசி, ஒப்புக்கொள்ளவும் வைத்து விட்டே நிமிர்ந்து ஜோதியை பார்த்து புன்னகைத்தான்.

கார்த்திக்கையும் ஜோதியையும் பார்த்தவன்,

“அவர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கியாச்சு… மும்பை போறீங்க… எல்லாத்தையும் முடிச்சுட்டு வர்றீங்க… அவ்வளவுதான்… இங்க என்னென்ன எடுக்கணுமோ, எடுங்க…” என்று ஷ்யாம் முடிக்க,

“அவர் கிட்ட டிசைன் பண்ணி வாங்கனும்ன்னா அட்லீஸ்ட் சிக்ஸ் மன்த் ஆகுமே ஷ்யாம்…” கார்த்திக் சந்தேகமாக கேட்டான்.

“யார் யாருக்கு என்ன வேணுமோ அதை மட்டும் சொல்லிட்டு வாங்க… மீதிய நான் பார்த்துக்கறேன்… எத்தனை ட்ரெஸ்னாலும் நாம சொல்ற டைமுக்கு கொடுப்பார்… அவரோட பிசினஸ் எக்ஸ்பான்ஷன்க்கு நம்ம கிட்ட பணம் வாங்கி இருக்கார் கார்த்திக்…” என்று சிரிக்க,

“எத்தனை பேரை தான் வளைச்சு போட்டு வெச்சு இருக்க நீ?” என்று கார்த்திக் சிரித்தான்.

“உன் தங்கச்சியை தவிர யாரை வேணும்னாலும் வளைச்சு போட்டுடலாம்… மசியாத ஒரே ஆள் இந்த பிசாசு மட்டும் தான்யா…” என்று சிரித்துக் கொண்டே அவளை காட்டியவாறு கூறினாலும், அதில் தெறித்த ஆற்றாமையை கார்த்திக் உணர்ந்து கொண்டான்.

பெண்ணின் மனதை பெண் தான் புரிந்து கொள்ள முடியும் என்பதை போல, ஆணின் மனதை ஒரு ஆணால் மட்டுமே உணர முடியும். அதனால் தானோ என்னவோ, ஆண்களுக்குள் நட்பு என்பது ஒரு முறை அழுத்தமாகிவிட்டால், காலத்துக்கும் அது மாறுவதில்லை!

“ஓகே… அப்படீன்னா முறைக்கு ஒன்னு எடுத்து காமாக்ஷி அம்மன் கிட்ட வெச்சு பூஜை பண்ணிடலாம்…” என்று ஜோதி யோசனை கூற,

“ஆமா… ஒரு புடவை கண்டிப்பா வெச்சு பூஜை பண்ணனும்…” பைரவியும் கூற,

“மற்றபடி சங்கீத், ஹல்டி, மெஹந்திக்கு டிசைனர் பண்ணிடட்டும்…” என்றார் ஜோதி.

“நம்ம முறைப்படி செய்யலாமே அண்ணி…” என்று பைரவி தயங்கிக் கொண்டே கேட்க,

“இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி நாமளும் மாறிக்கலாமே பைரவி… எல்லாம் கிரான்ட்டா செய்யனும்ன்னு ஜோதிம்மாவும் நினைச்சு இருப்பாங்கள்ல…” என்று முருகானந்தம் கூறினார்.

“நீங்க வேறண்ணா… இவன் ஒரு கல்யாணத்தை பண்ணாலே போதும்ன்னு தான் நினைச்சேன்… அந்தளவு எங்களை படுத்தி வெச்சுட்டான்… இப்ப பிள்ளைங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது எல்லாமே பண்ணி பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு…” என்ற ஜோதியை ஆதூரமாக பார்த்தார் நாதன். இவளும் தான் எத்தனை ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு இருந்திருக்கிறாள் என்று தோன்றியது அவருக்கு. சிறு வயதில் ஷ்யாமை போல கட்டுக்கடங்காமல் திரிந்தவர். அவரை ஒரு நிலைக்கு கொண்டு வர ஜோதியும் எவ்வளவோ பாடுபட்டார்.

இப்போது மகன்!

“கண்டிப்பா பண்ணி பார்க்கலாம் அண்ணி… நம்ம பிள்ளைங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம்?” என்ற பைரவியை பார்த்து சிரித்த ஜோதி,

“அதுவும், இந்த மாதிரி ஒரு கல்யாணமான்னு எல்லாருமே மூக்கு மேல விரலை வைக்கணும்… ரொம்ப கிராண்டா… ஒரு மெகா ஈவன்ட்டா இருக்கணும்…” என்று அவர் தன் ஆசையை தெரிவிக்க,

“அதெல்லாம் ஜமாய்ச்சுடலாம் அத்தை… என்னென்ன பண்ணனும்ன்னு மட்டும் சொல்லுங்க… அத்தனையும் பண்ணிடலாம்…” கார்த்திக் சந்தோஷமாக வாக்கு கொடுக்க,

“எல்லாமே சேர்ந்தே பண்ணலாம் மருமகனே… கலக்கிடலாம்…” என்று நாதன் அவர் பங்குக்கு சந்தோஷித்தார்.

“உங்க ஆசைப்படி எல்லா ரிச்சுவல்ஸ்ஸும் தமிழ் முறைப்படியும் பண்ணிடலாம்… எந்த குறையும் இருக்கக் கூடாது… நான் பண்றது தான் சரி… நீங்க பண்றது தப்புன்னு எந்த ஈகோவும் நான் பார்க்க மாட்டேன்… என்னன்னாலும் சொல்லுங்க…” ஜோதி புன்னகையோடு கூற, பைரவிக்கு வெகு திருப்தியாக இருந்தது.

பெற்று வளர்த்த பெண்ணுக்கு எப்படியெல்லாம் திருமணத்தை செய்வித்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார். இப்போது அத்தனையும் நிறைவேற்றி வைக்க காத்திருக்கும் சம்பந்திமாரை நினைத்து உள்ளுக்குள் ஆனந்தமாகினார் பைரவி. எவ்வளவுதான் வசதி இருந்தாலும், அத்தனையும் ஈகோ இல்லாமல் ஏற்றுக் கொள்ள சம்பந்திகள் அமைவது வரம் தானே!

கண்களோரம் பளபளப்பு… இந்த அன்பையெல்லாம் இந்த பெண் புரிந்து கொள்ள வேண்டுமே என்று தோன்றியது அவருக்கு!

“ஓகே… அப்படீன்னா எல்லாருடைய ட்ரெஸ்ஸும் அவர்கிட்டவே கொடுத்துடலாமா?” என்று பொதுவாக ஜோதி கேட்க,

“ஒரு டிசைனர் போதாது பெரியம்மா… ஒரு மூணு நாலு பேர் கிட்ட பிரிச்சு கொடுத்துக்கலாம்… மகாவுக்கு மட்டும்  ஷ்யாம் அண்ணா சொல்ற இடத்துல கொடுக்கலாம்…” என்று பிருந்தா கூறினாள்.

ஜோதி பிருந்தாவை பெரியம்மா என்று தான் அழைக்க வேண்டும் என்று செல்லமாக உத்தரவே போட்டிருந்தார். எப்படி இருந்தாலும் கார்திக்கை மணக்க போகிறவள் என்ற உரிமையோடு, தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவருக்கு மிகவுண்டு. ஷ்யாமுக்கு அதே ஏக்கம் மனதின் அடி ஆழத்தில் உண்டு என்பதையும் அவர் எப்போதும் கவனித்து இருக்கிறார்.

தாயற்ற பிருந்தாவுக்கு அந்த அழைப்பு மிகவும் பிடித்து போய்விட்டது. இப்போதெல்லாம் ஜோதி வரும் போதெல்லாம் பெரியம்மா என்று அவர் பின்னாலேயே சுற்றுவதை வாடிக்கையாகவே கொண்டு இருப்பதை பைரவியும் கூட சிரித்தபடி பார்த்திருக்கிறார்.

“எஸ்… கரெக்ட்…” என்று ஜோதி ஒப்புக்கொள்ள,

“வெட்டிங் பிளானர்ஸ வர சொல்லலாம்… ஆரம்பத்துல இருந்து முழுசா அவங்க பார்த்துக்கட்டும்… நம்ம ரிச்சுவல்ஸ் மட்டும் நாம பார்க்கலாம்…” கார்த்திக் தன் கருத்தை கூற,

“ஓகே… அவங்க கிட்ட தீம் டிசைனிங், புட், அகாமடேஷன், லாஜிஸ்டிக்ஸ் எல்லாம் கொடுத்துடலாம்…” என்றான் ஷ்யாம்.

“எஸ்… சரி இப்ப எத்தனை சாரீஸ் வேணுமோ… எடுத்து முடிங்க பொண்ணுங்களா… ஒன்னொன்னா பார்க்க வேண்டாமா?” நாதனும் கூற,

“மஹா… தள்ளி உக்காரு… நீ சூஸ் பண்ண வரைக்கும் போதும்…” என்று அமர்ந்தவன், ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்துக் கொண்டே சென்றான்.

மகாவுக்கு மொத்தமாக முடித்துவிட்டு நிமிர்ந்தவனை பார்த்து ஜோதி சிரித்தார்.

“டேய்… திருட்டுபையா… என்னைக்காவது எனக்கு ஒரு சாரி செலெக்ட் பண்ணி இருப்பியா?” தெலுங்கில் மகனிடம் கலாய்க்க,

“ம்மீ… இப்ப உனக்கு என்ன வேணும்? எத்தனை வேணும்… சொல்லு… வித் இன் எ செக்கன்ட்…” என்று அவனும் தெலுங்கிலேயே மறுமொழி கூறி சொடக்கிட்டு காட்ட,

“இப்ப நீ எத்தனை வேணும்னாலும் எடுத்துக் கொடுப்படா திருட்டு பையா…” என்று சிரித்தார்.

ஆத்மாநாதன் அதை கேட்டு சிரித்தார்.

இவர்களது அலம்பல்களை எல்லாம் வெறும் பார்வையாளராய் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா.

ஒவ்வொன்றாக இவர்கள் திட்டமிடுவதையும் திட்டமிட்டதை நினைத்து சந்தோஷிப்பதையும் பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சியையும் தான் கெடுக்க வேண்டுமா என்றும் இருந்தது!

ஆனால் பத்து சதவிதம் கூட அவளால் அந்த மகிழ்ச்சியில் ஒன்ற முடியவில்லை. உள்ளுக்குள் அத்தனை சோர்வாக இருந்தது. அத்தனை சோர்வையும் மீறி எப்படி ஷ்யாமை கணவனாக ஏற்பது?

புரியாத நிலையில் அமர்ந்திருந்தாள் மஹா!

அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பிருந்தா,

“ஹலோ மேடம்… என்ன? ட்ரீமா?” என்று அவளை கலாய்க்க,

“ப்ச்… அதெல்லாம் ஒண்ணுமில்ல பிருந்தா…” என்று பேச்சை தவிர்க்க முயன்றாள்.

“அப்படீன்னா கொஞ்சமாவது ஆக்டிவா இரு மஹா… எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்து இருக்க…”

“ம்ம்ம்ம்…” என்றவள், கார்த்திக்கை அழைத்து, “கார்த்திண்ணா கொஞ்சம் அண்ணியாரை பாரேன்… நீ வந்தாதான் சாரி எடுப்பேன்னு வேற பிடிவாதமா இருக்கா…” என்றவளை செல்லமாக முறைத்தாள் பிருந்தா. அவளை கார்த்தியிடம் மாட்டிவிட்டதில் அவளது முகம் செக்க சிவந்த வானமாகியது.

பிருந்தாவின் சிவந்த முகத்தை பார்த்து ரசித்தவளை கலைத்தது செல்பேசி அழைப்பு!

எடுத்து பார்த்தவள்,

“சுஷ்ருதால இருந்து தான்…” என்று ஷ்யாமை பார்த்து கூறியவள், போனை ஆன் செய்து காதுக்கு கொடுத்தாள்.

இவளை எதற்காக அழைக்க வேண்டும் என்று யோசித்தவன், அவளை பார்க்க,

“எஸ் டாக்டர்…” என்று ஆரம்பித்தாள்.

“மேம்… அந்த பேஷன்ட்…” என்று அவர் ஆரம்பிக்க,

“எந்த பேஷன்ட் டாக்டர்?” என்று கேட்டாள்.

“விஜய்…” என்றவர், இடைவெளிவிட்டு, “நேத்து மதியத்துல இருந்து எதுவும் சாப்பிடவும் மாட்டேங்கறார்… மெடிசனும் எடுக்கலை…” என்று கூற, அவள் புருவத்தை சுருக்கினாள்.

“ஏன் டாக்டர்?”

“நீங்க வந்தாதான் சாப்பிடுவாராம்…” என்றவருக்கு சற்று பயமாக இருந்தது. ஷ்யாம் அவரிடம் அத்தனை எச்சரிக்கை செய்திருந்தான். அவன் சம்பந்தமாக மஹாவை தொடர்பு கொள்ளக் கூடாது என்று! ஆனால் இப்போது அந்த விஜய்யின் பிடிவாதத்துக்கு முன் தான் எதுவுமே செய்ய முடியவில்லையே!

அதை கேட்ட மகாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. என்ன செய்வது என்றே புரியாமல் ஷ்யாமை பார்த்தாள், பரிதாபமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!