VNE521

VNE521

52

திருமணம் முடிந்து ஒரு வாரத்திலேயே மீண்டுமாய் இண்டர்ன்ஷிப்பை தொடர்ந்தாள் மஹா. ஒரு வார விடுமுறையில் விருந்து கேளிக்கைகள் என கழிய, ஷ்யாமும் வீட்டை போயஸ் கார்டனுக்கு மாற்றுவதில் பிசியாக இருந்தான்.

உத்தண்டி பார்ம் ஹவுஸ் கல்லூரியிலிருந்து வெகு தூரம் என்பதோடு, அந்த வீட்டில் தங்கள் வாழ்க்கை ஆரம்பிப்பதை அவன் விரும்பவில்லை. அவனது பல கருப்பு பக்கங்களை ஞாபகப்படுத்தக் கூடிய வீடு அது. எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் நினைவலைகள் தேயும் போது அவை மறக்கப்படலாம், ஆனால் இப்போதைக்கு அந்த வீட்டை அவனால் ஏற்க முடியவில்லை.  கார்த்திக், நாதன், ஜோதி, பைரவி என்று அனைவருமாக வீட்டுக்கு தேவையானதை வாங்கிக் குவித்துக் கொண்டே இருந்தனர், இவர்கள் இருவரையும் இழுத்துக் கொண்டு போய்!

இன்டீரியர் டெக்கரேட்டரை வைத்து முதலிலேயே வீட்டை அலங்கரித்து இருந்தான். முன்னர் போயஸ் கார்டன் வீடு அலுவலகமாக உபயோகப்படுத்தப் பட்டு வந்ததை, இப்போது முழுவதுமாக வீடாக மாற்றியிருந்தான்.

திருமணம் முடிந்த கையோடு ஹைதராபாத் அழைத்துக் கொண்டு போகலாம் என்று ஜோதி திருமணத்திற்கு முன்னரே ஆசைப்பட, மகாவின் படிப்பைக் காரணம் காட்டி நாதன் அதை சற்று தள்ளி வைத்திருந்தார்.

ஆனாலும் முறையை கைவிட முடியாது என்பதால் முதலில் ஹைதராபாத்துக்கு அழைத்துப் போக பைரவி கூறியிருந்தார். அதன் படியே அழைப்புகளை போயஸ் கார்டன் வீட்டிற்கும் பெசன்ட் நகருக்குமாக முடித்து விட்டு ஹைதராபாத் கிளம்பியிருந்தனர்.

முருகானந்தம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இறுக்கமாகவே இருக்க முயன்றாலும் அவரால் முடியவில்லை. பக்கத்து வீட்டில் தான் மாப்பிள்ளை என்றாலும் திருமணம் முடிந்து, தன்னுடைய மகள் அடுத்த வீட்டுக்கு போவது என்பது ஒரு தந்தையை பொறுத்தவரை தாள முடியாதவொன்று. தாய் என்பவள், தனது திருமணத்தின் போது அதை அனுபவித்து விடுவதால் அவளை அந்த நிகழ்வு பெரும்பாலும் பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால் தந்தைக்கு, அதுநாள் வரை, தன்னுடைய மகளை கூடவே இருந்து, தான் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த மகளை பிரிவது என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு!

பிரிந்து செல்லும் மகளை பார்க்க முடியாமல் அவர் தனியறையில் அழ, தேடி வந்த கார்த்திக் சமாதானப்படுத்தி மகாவிடம் அழைத்து வந்தான்.

எப்போது பொங்கி அழலாம் என்று காத்திருந்த மஹாவுக்கு தந்தையை அதுபோல பார்த்ததில் கண்ணீர் கரையுடைத்தது.

தந்தையை கட்டிக் கொண்டு கதறி அழுதவளை கண்ட பைரவி,

“ஏய் மஹா… அப்பாவும் பிள்ளையும் ரொம்ப தான் சீனப் போடறீங்க… என்னமோ இப்பவே ஹைதராபாத் போய்டற மாதிரி? இங்க இருக்க போயஸ் கார்டன்… எகிறி குதிச்சா போய் நிற்கலாம்… அப்படியே ஹைதராபாத் போனாலும் தான் என்ன? ஒரு ப்ளைட் பிடிச்சா சென்னை… அதுக்குள்ள என்னமோ அடுத்த செவ்வாய் கிரகத்துக்கு போற மாதிரி சீனைப் போடறீங்க ரெண்டு பேரும்…” கிண்டலாக கூறுவது போலவே இருவரையும் சமாதானம் செய்தாலும் அவருக்கும் அந்த வலி இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை.

கார்த்தியும் அவரும் இந்த விஷயத்தில் ஒன்று போலத்தான் சிந்திப்பார்கள்.

ஆனால் மகளின் மேல் உயிரை வைத்திருந்த முருகானந்தம் உணர்வு பூர்வமானவர், அதிலும் மகள் விஷயம் என்றால் உயிரை விட்டுவிடுமளவு!

“உனக்கு கொஞ்சம் கூட என் மேல பாசமே இல்ல… போம்மா…” என்று தாயைக் கோபித்துக் கொண்டவளை புன்னகையோடு பார்த்தான் ஷ்யாம்.

“ஆமா… கிளம்பும் போது என்னமோ போர்களத்துக்கு அனுப்பற மாதிரி உங்கப்பாவும் பீல் பண்ணுவாங்க… நீயும் அதுக்கேத்த மாதிரி பண்ணுவ… நானும் பண்ணனுமா? அழவே கூடாதுன்னு நானும் சொல்லிட்டு இருக்கேன்ல பாப்பா?”

“அழுகை வருதே… நான் என்ன வேணும்னே அழறனா?” இடது பின் கையால் கண்ணை துடைத்துக் கொண்டு அவள் கூற,

“அப்படீன்னா நான் தான் பீல் பண்ணும்டி… என்னை எப்படியெல்லாம் கொடுமை பண்ண போறியோன்னு நினைச்சு…” என்று ஷ்யாம் வெகு தீவிர குரலில் கூறினாலும், குறும்பு சிரிப்பு அவனது முகத்தில் ஒட்டியிருக்க, அவனைப் பார்த்து இவள் முறைக்க, சுற்றியிருந்த அனைவருமே வாய்விட்டு சிரித்தனர்.

“இப்ப நீ பீல் பண்ணி நோ யூஸ் மச்சான்… உனக்கு எப்பவோ ஸ்டாச்சுவரி வார்னிங் கொடுத்தாச்சு…” என்ற கார்த்திக்கை பார்த்து சிரித்தவன்,

“என்ன? மேரேஜ் இஸ் இஞ்சுரியஸ் டூ ஹெல்த் ன்னு நீ சொன்னியே மச்சான்… அதான?” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க, மஹா ஒருபுறம் முறைக்க, பிருந்தாவுக்கு கோபத்தில் முகம் சிவந்தது.

‘அடப்பாவி இப்படியெல்லாம் சொல்லி வைத்திருக்கிறானா? அதுதான் திருமணமென்றால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுகிறானா?’ என்று பல்லைக் கடித்தவளையும், ஷ்யாமையும் மாறி மாறி பார்த்த கார்த்திக்,

“மச்சான்… கிளம்பும் போது கூட ஒரு குண்டை தூக்கிப் போட்டுட்டு தான் போவேன்ங்கற…” என்று புலம்ப,

“நாராயணா நாராயணா… இன்னும் ரெண்டு நாள் என் தங்கச்சி கிட்ட அடி வாங்கு நாராயணா… நான் மட்டும் வாங்கினா என்னாகறது நாராயணா?” என்று கலாய்க்க,

“நீ வாங்கறன்னா அது உன் விதி…” என்று வேண்டுமென்றே கலாய்த்து சிரிக்க,

“அப்படீன்னா உனக்கு அந்த விதி இல்லைங்கற… பாசமலரே… உனக்கு கேட்டுச்சா?” என்று பிருந்தாவை பார்த்து கேட்க,

“நல்லாவே கேட்டுதே… கேட்டுதே…” என்று கையை நம்பியாரை போல முறுக்கிக் கொண்டு கூற, அவளது தந்தை உட்பட அனைவரும் சிரித்து விட, கார்த்திக் பரிதாபமாக பிருந்தாவை பார்த்தான்.

“உன் அண்ணனோட வில்லத்தனத்துல கவுந்துடாத பேபி… நான் ரொம்ப நல்லவன்…” என்று கூற,

“ம்ம்ம்… சொன்னாங்க… அவங்க கிளம்பட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு…” அவன் புறம் குனிந்து பல்லைக் கடித்துக் கொண்டு கூற,

“பிருந்தா… உனக்கு ஏதாவது பாயின்ட் வேணும்னா கேளு… நான் இருக்கேன்…” ஷ்யாம் சிரித்துக் கொண்டே கூற, முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு கண்களில் நீரோடு இருந்த மஹாவே சிரித்து விட, கார்த்திக்கின் முகமும் அவனது பெற்றோர் முகமும் தெளிவானது. மஹாவின் நாடியை கச்சிதமாக பிடித்து வைத்திருக்கும் தங்களின் மாப்பிள்ளையை பெருமையாக பார்த்தார் முருகானந்தம்.

“மாப்பு… போட்ட பிட்டு எல்லாம் போதும்யா… இன்னும் கும்மியடிக்காத…” சிரித்துக் கொண்டே கார்த்திக் கூற, அத்தனை பேரின் முகத்திலும் புன்னகை.

அதே புன்னகையோடு ஹைதராபாத்துக்கு ப்ளைட் ஏறினாள் மஹா, தனது கணவனோடு… புதிய வாழ்க்கையை நோக்கி!

****

கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை ஆழ்ந்து பார்த்தாள் மஹாவேங்கட லக்ஷ்மி. உடலை தழுவிய மென்மையான பிங்க் நிற டிசைனர் சேலை, அதற்கு ஏற்றார் போன்ற சிறு நகைகள், மேக்அப் சிறிதும் இல்லாமல் கண்களுக்கு மட்டும் மையிட்டு, முடியை தளர பின்னி, இருபுறமும் ஜாதி மல்லியை படர விட்டிருந்தாள் பிருந்தா.

பெண் வீட்டின் சார்பில் கார்த்திக்கும் தோழியாக பிருந்தாவும் மட்டும் ஹைத்ராபாத்துக்கு உடன் வந்திருந்தனர்.

“எந்த கோபத்தையும் மனசுல வெச்சுட்டு இருக்காத மஹா… ஃபீல் ஃப்ரீ…” என்றவளுக்கு பதிலெதுவும் கூறாமல் வெறுமையாக பார்த்தாள் மஹா.

“என்னன்னு யோசிக்கறியா?” என்று இவள் கேட்க, மஹா மெளனமாக தலையாட்டினாள்.

“ரொம்ப நாளாவே உன்னோட முகமே சரியில்ல மஹா… எனக்கு புரிஞ்சுது… அதோட கல்யாணம் பேசின நாள்ல இருந்தே நீ சுத்தமா சரியில்ல… எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்க…” என்று நிறுத்தியவள், “ஆனா அண்ணா அப்படி இல்ல… எல்லாத்தையும் ஸ்போர்டிவா எடுத்துக்கறாங்க… ஜாலியா உன்னை இன்ப்ளுயன்ஸ் பண்ணிட்டு போயிட்டே இருக்காங்க… அவங்களுக்கு ஏத்த மாதிரி போய்க்கடி… நம்ம லைப் நமக்கு முக்கியம் மஹா…” என்றவளை தவிப்பாக பார்த்தவள்,

“நானும் ட்ரை பண்றேன் பிருந்தா… ஆனா ரொம்ப பயமா இருக்கு…” சிறு நடுக்கத்தோடு கூறியவளை அணைத்துக் கொண்டாள்.

“ஒரு செடியை பிடுங்கி இன்னொரு இடத்துல நடும் போது, அந்த செடிக்கு கண்டிப்பா ஒரு பிரஷர் இருக்கும்… புது இடத்துல நாம வளர முடியுமான்னு… தண்ணி, காத்து, வெளிச்சம் எல்லாம் சரியா இருக்குமான்னு நினைக்கலாம்… ஆனா அது கவலைப்படவே தேவையில்லை… அதை அந்த இயற்கை பார்த்துக்கும்… ஆனா கண்டிப்பா நாம நல்லா இருப்போம்னு அந்த செடி நம்பனும்… நம்பினா மட்டும் தான் அது வளர முடியும் மஹா. பாசிடிவா திங்க் பண்ணு…

எத்தனையோ விஷயம் அண்ணன் கிட்ட உனக்கு சரி வராம இருக்கலாம்… எத்தனையோ விசயம் அவருக்கு உன்கிட்ட சரி இல்லாம இருக்கலாம்… ஆனா அதிகபட்சமான காதல் எல்லாத்தையும் மாத்திடும்… அதிகமான காதல் இருந்தா சின்ன சின்ன தப்பெல்லாம் பெருசா தெரியாதுடி.. லவ் பண்ணு… ரொம்ப லவ் பண்ணு… முழுசா உன் வீட்டுக்காரரை சுவீகரிக்க அந்த லவ் ஒண்ணுதான் வழி மஹா…” என்று நிதானமாக அழுத்தமாக கூறியவளை மெல்லிய புன்னகையோடு பார்த்தாள்.

“நூத்து கிழவி மாதிரி பேசறடி அண்ணி…” என்று சிரிக்க,

“எல்லாம் உன் அண்ணன் ட்ரைனிங், ஒரு கிழவனை லவ் பண்ணி தொலைச்சுட்டேனே…” சிரித்தாள் பிருந்தா.

“என் அண்ணனை கிழவன்னு சொல்ற நீ…” என்று செல்லமாக கையோங்க, அறைக்குள் வந்தார் ஜோதி.

“என்ன பொண்ணுங்களா… ரெடியாகியாச்சா?” என்று அவர் கேட்க, பிருந்தா லேசாக சிவந்த முகத்தோடு,

“ரெடி பெரியம்மா…” என்று கூற, எழுந்து நின்றிருந்த மஹாவை ஆசையாக பார்த்தார்.

“ஷ்யாமோட செலக்ஷன் என்னைக்கும் பெஸ்ட் தான்…” என்று அவளை ஒற்றைக் கையால் நெட்டி முறித்தவர், “சந்த்ராம்மா…” என்று அழைத்து விட்டு கையிலிருந்த எலுமிச்சையை கொண்டு அவளுக்கு சுற்றி விட்டு, அவரது குரலுக்கு வந்த சந்த்ராம்மாவிடம் அந்த எலுமிச்சையை கொடுத்து, “இதை முச்சந்தில கொண்டு போய் நாலா பக்கமும் போட்டுடு…” என்று தெலுங்கில் கூற, அவர் வாங்கிக் கொண்டு போனார்.

“இவங்க குடும்பம் அவுட் ஹவுஸ்ல இருக்காங்க மஹா… சமையலுக்கு சந்த்ராம்மா… அவங்க ஹஸ்பன்ட் நம்ம கிட்ட டிரைவரா இருக்காங்க…” என்று கூடுதல் தகவலை கொடுக்க, மஹா மெலிதாக தலையாட்டிக் கொண்டாள்.

அவர்கள் வீட்டில் எத்தனை பேர் வேலைக்கு இருந்தாலும் பைரவி தான் சமைத்தாக வேண்டும். மஹாவுமே சமைப்பாள் என்பதால் சமையலுக்கு என்று யாரையும் வைத்ததில்லை.

“இவங்க பையன் நம்ம சென்னை வீட்ல சமையலை பார்த்துக்கறான்… அவன் குடும்பத்தோட அங்க தான் கண்ணா இருக்கான்… சோ நீ எதை பத்தியும் கவலைப்படாம படி, ஷ்யாமை பார்த்துக்க…” என்று அவளது கன்னத்தைப் பற்றியபடி கூற, மஹா நெகிழ்வாக ஜோதியை பார்த்தாள்.

“பெரியம்மா… அநியாயத்துக்கு இப்படி விக்கெட்டை காலி பண்றீங்களே…” என்று பிருந்தா சிரிக்க, மென்மையாக சிரித்தார் ஜோதி. தன் மகனின் இயல்பை எண்ணி உள்ளுக்குள் அவர் தவித்துக் கொண்டிருந்ததை யார் அறிவார்? இந்த பிள்ளைக்கு நல்ல புத்தியை கொடு இறைவா என்று எத்தனை நாள் வேண்டியிருப்பார்.

ஒரு திருமணத்தை செய்து கொண்டால் சற்று நிம்மதியாக முடியும் என்று எத்தனையோ நாள் வேதனையுற்று இருக்கிறார். பாதி நாள் வீட்டை எட்டியும் பாராமல் இருந்து இருக்கிறான். அப்போதெல்லாம் அத்தனை கவலையாக கண்ணீர் விட்டிருக்கிறார். அவனுக்காய் நல்ல எண்ணம் தோன்றி மஹாவை திருமணம் செய்து கொள்ள இருவரிடமும் பேசியபோது அத்தனை சந்தோஷமாக இருந்தது ஜோதிக்கு.

ஆனால் திருமணம் பேசியதிலிருந்தே மஹாவின் முகம் சற்றும் மகிழ்ச்சியை காட்டி விடவில்லை. அதோடு எத்தனையோ பிரச்சனைகள். அத்தனையும் ஓய்ந்து இனியாவது இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதார எண்ணினார் ஜோதி.

மஹாவின் கன்னத்தை பிடித்து, பாசமாக,

“பிருந்தா, இப்படியொரு கல்யாணம் இதுவரைக்கும் நடக்கலைங்கற அளவு பெருமையோட என் மகன் கைய பிடிச்சுட்டு வந்தவ என்னோட மருமக… எனக்கொரு பொண்ணு இல்லையேங்கற குறைய தீர்க்க வந்த தேவதை… வீட்டுக்கு வந்த பொண்ணுங்க சந்தோஷமா இருந்தா தான் அந்த வம்சத்துக்கு கடவுளோட ஆசிர்வாதம் கிடைக்குமாம்…” என்று பிருந்தாவை பார்த்து கூறியவர்,

“அந்த ஆசீர்வாதம் என் வம்சத்துக்கு கிடைக்கணும் மா…” என்று முடிக்க,

“கண்டிப்பா கிடைக்கும் பெரியம்மா…” என்று நெகிழ்ந்து போய் கூறினாள் பிருந்தா. அதே நெகிழ்வோடு ஜோதியை மெளனமாக பார்த்தாள் மஹா.

“ஊர் மெச்ச நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்து இந்த குடும்பம் தழைக்கனும் மஹா. சரி செய்ய முடியாத குறைன்னு எதுவுமே இல்லடா… எல்லாமே அன்பால சாதிக்க முடியும்… புருஷன்மாரை கைக்குள்ள போட்டுக்க அன்பை தவிர வேற எந்த ஆயுதமும் இல்ல…” என்று கூற,

“பெரியம்மா… உங்க மருமகளுக்கு நீங்களே பையனை கைக்குள்ள போட்டுக்க சொல்லித் தரீங்க… இது சரியே இல்ல…” பிருந்தா சிரிக்க,

“என் மருமகளுக்கு நான் சொல்லித் தராம வேற யார் சொல்லி தருவாங்க?” என்று சிரித்தவர், “பிருந்தா குட்டி உனக்கும் தான் சொல்றேன்… பொண்ணுங்க செய்ய வேண்டிய முதல் வேலை, புருஷனை கைக்குள்ள போட்டுக்கறதுதான்… ஏன் அவங்க அவங்க புருஷனை தானே கைக்குள்ள போட்டுக்க சொல்றேன்…” என்று கிண்டலாக சிரிக்க,

“தெய்வமே…” என்று வணங்கினாள் பிருந்தா. மஹாவின் முகத்தில் அடக்க முடியாத சிரிப்பு.

“நிஜமா… கல்யாண வாழ்க்கைல வர்ற பாதி பிரச்சனைகளுக்கு காரணம் பொண்ணுங்களுக்கு புருஷனை எப்படி கைக்குள்ள போட்டுக்கனும்ன்னு தெரியாம இருக்கறதால தான்… அதை மட்டும் ஒழுங்கா பண்ணிட்டா போதும்…” என்று சிரித்தவர், மஹாவின் புறம் திரும்பி, “நீ நில்லுன்னு சொன்னா ஷ்யாம் நிற்கணும்… உட்கார்ன்னா உட்காரனும்… அந்தளவுக்கு அவனை நீதான் வழிக்கு கொண்டு வரணும் மருமகளே…” என்று நெட்டி முறித்தவர்,

“வா… முதல்ல விளக்கு ஏத்தி சுவாமியை நமஸ்காரம் பண்ணிடு மஹா…” என்றபடி அவளை அழைத்துப் போக, உள்ளுக்குள் லேசாக நடுங்கியபடி பூஜையறையை நோக்கி போனாள் மஹா.

*****

மெலிதாக தட்டிவிட்டு கதவை திறந்தவளுக்கு வியர்த்தது. உள்ளுக்குள் வெகு படபடப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் அறிவுரையை அள்ளித் தெளித்து இருந்தனர். அப்போதெல்லாம் பதட்டப்படாத மனம், நேரடியாக அவனை பார்க்க வேண்டிய நேரத்தில் பந்தய குதிரையாக படபடத்தது.

இத்தனைக்கும் வாக்கு கொடுத்திருக்கிறான் தான். உனக்காய் எப்போது தோன்றுகிறதோ அப்போது வாழ்க்கையை துவக்கலாம் என்று!

ஆனாலும் கைகள் நடுங்கியது… படபடத்தது… அவனை தனிமையில் சந்திக்காமல் எல்லாம் இல்லை. தலகுப்பாவில் அவனோடு முழுவதுமாக தனிமை தான். மலையேற்றத்தின் போதும் தனிமை தனிமை தான். ஒரே டெண்டில் இருவருமாக உறங்கியிருக்கிறார்கள். ஒரே தட்டில் உணவை உண்டும் இருக்கிறார்கள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் இருவருமாக நெருக்கமாக அமர்ந்தபடி பேசியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் தோன்றாத பதற்றம் இப்போது!

அதிலும் நாள் முழுக்க அவனுடனே கழிந்து இருக்க, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கண்களால் அவளை கண்களால் களவாண்டுக் கொண்டிருந்தவனை உள்ளுக்குள் பயப்பந்து உருள அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கு முன்பாக விளக்கேற்றும் வேளையில், கார்த்திக் உடனிருந்தாலும் அவளையே தொடர்ந்து கொண்டிருந்தது அவனது கண்கள். அதிலும் முன்னெப்போதும் இல்லாததை போல, அவனது கண்கள் தழுவி சென்ற இடங்களை நினைத்து விதிர்த்து போனது நெஞ்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!