காதல் சதிராட்டம் 26a
காதல் சதிராட்டம் 26a
ஆதிராவிற்கு அன்று ஏனோ வினய் புதியதாக தெரிந்தான்.
இதுவரை அவள் அவனை வெறும் நண்பனாக மட்டும் தான் பார்த்து இருக்கின்றாள்.
அவள் அவனது முக வடிவையோ இல்லை அவனுடைய கம்பீரத்தையோ கவனித்தது இல்லை.
ஒரு வேளை அவளுடைய எண்ணம் முழுக்க முழுக்க படிப்பினில் இருந்ததால் கூட இருக்கலாம்.
ஆனால் இன்று அந்த மலர்த்தோட்டத்தில் இருந்த பெண்கள் எல்லாம் ஒரு கணம் அவனின் மீது பார்வையை அழுத்தமாக பதித்தபடி பார்வையால் விழுங்கி சென்றது அவளுடைய கவனத்தை இழுத்தது.
பெண்கள் பலரது கண்கள் இவன் மீது விழுந்தாலும் இவனுடைய கண்கள் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் நோக்கவில்லை.
அவன் கவனம் எல்லாம் பூக்களின் மீது தான் குவிந்து இருந்தது. ஆதிராவின் கவனம் எல்லாம் வினய்யின் மீது குவிந்து இருந்ததைப் போல்.
இருவரின் கவனத்தையும் ஒரு சேர கலைக்கும் படி ஒரு குரல் இடையில் புகுந்து ஒலித்தது.
“எக்ஸ்க்யூஸ் மீ சார். என்னை இந்த பூக்களுக்கு இடையிலே போட்டோ எடுத்து தர முடியுமா?”என்று
சேலை அணிந்த ஒரு பெண் கேட்க வினய்யும் லேசான தலையசைப்புடன் கைகளில் அந்த கேமராவை வாங்கினான்.
அந்தப் பெண் பூக்களின் இடையில் நின்றுக் கொண்டு இருக்க, வினய் ஃபோட்டோ எடுத்துவிட்டு அவளிடம் திரும்பக் கொடுக்கப் போகும் போது சாமரமாய் வீசிக் கொண்டு இருந்த தென்றல் கொஞ்சம் வேகமாய் வீசத் தொடங்கிவிட்டது.
அதில் அந்த பெண்ணின் சேலை விலகி இடை அப்பட்டமாக தெரிய ஆதிராவோ, வினய்யின் முகத்தையே கூர்ந்துப் பார்த்தாள்.
அவன் பார்வை அந்தப் பெண்ணின் முகத்தை தவிர வேறு இடத்தில் தவறிக் கூட விழவில்லை.
ஆதிராவுக்கே அந்த பெண்ணின் இடுப்பின் மீது பார்வை குறுகுறுவென்று சென்றது, ஆனால் வினய்யோ கொஞ்சம் கூட தடுமாறவில்லை. அந்த செயல் ஏனோ ஆதிராவை தடுமாற வைத்தது.
இவன் பார்வை வேறு ஒரு பெண்ணிடம் தவறிக் கூட செல்லவில்லையே, அவன் செயல் கொஞ்சம் கூட தடம் புரளவில்லையே.பிறகு ஏன் கல்லூரியில் அந்த செயலைச் செய்தான்?
ஆக இவன் ஆசை எல்லாம் மற்ற பெண்களை அறிவதில் அல்ல.
இவன் இச்சை எல்லாம் என்னை அறிவதில் மட்டும் தான் என்று நினைத்தவள் மனதினிலோ ஒரு விரக்தி கீற்று.
அந்த பெண்ணிடம் கேமராவைக் கொடுத்துவிட்டு திரும்பிய வினய் ஆதிராவின் முகத்தைப் பார்த்தான்.
அதில் ஏகப்பட்ட சிந்தனை வரிகள்.
“என்ன ஆச்சு ஆதிரா?” என்ற அவனது குரல் இவள் முகத்தின் சிந்தனை கோடுகளை அழித்தது.
“இல்லை வினய், ஒன்னுமில்லை.. ” என்று அவள் சமாளித்துக் கொண்டு இருக்கும் போதே வினய்யின் அலைபேசி ஒலித்தது.
எடுத்துப் பேசியவன் முகத்திலோ கவலையின் தீவிரம் தெரிந்தது.
“ரகு கண்டிப்பா கன்ஃபார்ம் பண்ணிட்ட தானே. இது உண்மை தானே. ” என அவன் பதற்றமாக கேட்டுக் கொண்டு இருக்க எதிர் முனையில் இருந்து ஆம் என்ற பதில் தான் வந்து இருக்க வேண்டும்.
இல்லை என்றால் வினய் இவ்வளவு சோர்வாக அலைபேசியை வைத்து இருக்க மாட்டான்.
அவன் நெற்றி சுருங்கி சிந்தனையின் பிடியினில் இருக்க ஆதிரா அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
வினய் தயக்கமாக ” ஆதிரா ஒரு ரெண்டு நாள் என் கூட தனியா இருக்கிறதுல உனக்கு பிரச்சனை இல்லையே. ப்ரணவ்வையும் உத்ராவையும் நான் ஒரு இடத்துக்கு அனுப்ப போறேன். இது ப்ரணவ்வோட வாழ்க்கைப் ப்ரச்சனை” என்று சொல்ல ஆதிரா குழப்பத்துடன் ” என்ன ப்ரச்சனை?” என்று கேட்டாள்.
அதற்கு வினய் சொன்ன பதில் எந்த மறுப்பும் சொல்லாமல் அவளை சம்மதிக்க வைத்தது.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
“டேய் ப்ரணவ் நான் இவ்வளவு காமெடி சொல்லிட்டு இருக்கேன். நீ எதுக்கும் சிரிக்காம இப்படி உம்முனு இருந்தா என்ன அர்த்தம்?”
“இது காமெடி இல்லைனு அர்த்தம் உத்ரா. அதனாலே தான் சிரிப்பு வரல.”
“சரி அது வரலனா என்ன, நாம பஸ் ஏத்தி போய் சிரிப்பைக் கூட்டிட்டு வரலாம். ” என அவள் சொல்ல அவன் தலையின் மீது கை வைத்துக் கொண்டான்.
“உத்ரா என்னை விட்டுடி ப்ளீஸ். என்னாலே முடியல.. “
“சரி சரி என் கையை காலா நனைச்சுலாம் விழ வேண்டாம். டைரக்டா என் காலயே விழுந்துடு. நான் உன்னை விட்டுடுறேன். ” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து நக்கலாக புன்னகைத்தவளை “மவளே நீ இன்னைக்கு செத்த டி.” என்று துரத்த ஆரம்பித்தான்.
வேகமாக ஓடியவளை தடுத்து அணைக்கட்டியவன் அவளது இருகைகளையும் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து ஓடவிடாமல் சுவற்றில் சாய்த்துப் பிடித்தான்.
இதுவரை அவர்களுடைய கால்கள் தான் ஓடிக் கொண்டு இருந்தது, ஆனால் இப்போது இதயம் பந்தயக்குதிரையை விட வேகமாக ஓட ஆரம்பித்தது.
அவன் அவளுடைய கண்களைப் பார்க்க அவளும் தன்னை மறந்து அவனுடைய கண்களைப் பார்த்தாள்.
இருவரது கண்களும் அவர்களை எங்கோ கடத்திச் சென்ற நேரம் காலடி சப்தம் இருவரையும் மீட்டுக் கொண்டு வந்தது.
பதற்றமாக விலகினர் இருவரும்.
ஆதிராவும் வினய்யும் வீட்டிற்குள் வந்துக் கொண்டு இருந்தனர்.
இருவரது வெளிறிப் போன முகத்தையும் வினய் குழப்பமாக பார்த்துவிட்டு ப்ரணவ்வை உள்ளே அழைத்தான்.
அவன் எந்த மறுப்பும் சொல்லாமல் வினய்யைப் பின்தொடர்ந்தான்.
அறைக்குள் நுழைந்ததும் வினய் கண்ணைக் காட்ட ப்ரணவ் கதவைச் சாத்தினான்.
“ப்ரணவ் உன் கிட்டே ஒன்னு சொல்லணும்?” என்று வினய் பீடிகையுடன் ஆரம்பிக்க அதற்குள் வினய் முந்தினான்.
“அண்ணா அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.” என்று ஆரம்பித்தவன் மடமடவென தான் வெளிநாட்டுக்கு செல்ல எடுத்து இருக்கும் முடிவை சொல்ல வினய் தீர்க்கமாக அவனைப் பார்த்தான்.
“ஆக என்னைப் பார்த்து, என் காதலைப் பார்த்து, நீ தியாகம் பண்ணனும்னு முடிவு பண்ணி இருக்க அப்படி தானே?” என்று அழுத்திக் கேட்டான் வினய்.
ஆமாம் என்று ப்ரணவ்வின் தலை ஆடியது.
“சரி உன் இஷ்டம்.” என்று சொன்னவன் தொடர்ந்து ” எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணணும் ப்ரணவ். செய்ய முடியுமா?”
“அண்ணா இதென்ன கேள்வி? செய்னு சொன்னா செய்யப் போறேன். கேள்வி வேற கேட்கணுமா. சொல்லுங்க அண்ணா நான் என்ன பண்ணனும்?”
“நீயும் உத்ராவும் ஊட்டிக்கு இன்னைக்கு கிளம்பி போங்க. அங்கே Taj resort ல என்னோட PA வெயிட் பண்ணிட்டு இருக்கான். நீ போய் அவனை சந்திக்கணும். ” என சொல்ல இப்போது ப்ரணவ் தயங்கினான்.
“என்னடா ஆச்சு? செய்னா செய்யப் போறேனு சொல்லிட்டு இப்போ எங்கே இருந்து டா தயக்கம் வந்தது?”
“இல்லை, ஆதிரா அண்ணி கிட்டே நானும் உத்ராவும் எப்போவும் கூட இருப்போம் உங்களை தனியா விடமாட்டோம், நீங்க தயங்க வேண்டாம்னு நம்பிக்கை கொடுத்துட்டேன். ஆனால் இப்போ சமையல் கார அம்மாவும் லீவ் நாங்களும் கிளம்பிட்டா அண்ணி வருத்தப்படுவங்க இல்லை. அவங்களுக்கு தந்த நம்பிக்கையை மீறுறதுக்கு கஷ்டமா இருக்கு அண்ணா. “
“அடேய் நல்லவனே. உங்க அண்ணி கிட்டே அதெல்லாம் பேசியாச்சு. என் கூட இந்த வீட்டுல இருக்க சம்மதம் சொல்லிட்டா. நீ கிளம்பி போயிட்டு வா. ” என்று சொல்ல ப்ரணவ்வின் விழிகளில் வியப்பின் விரிவு.
“அண்ணா உண்மையாவா சொல்றீங்க” என்றுக் கேட்க வினய் புன்னகையுடன் ஆமோதித்தான்.
“சூப்பர் சூப்பர் அண்ணா அப்போ இப்போவே கிளம்புறேன். ” என்று ஜெட் வேகத்தில் பேசியவன் ஜெட் வேகத்தில் கிளம்பியும் சென்றான். வினய்யின் வருத்தப்பார்வை அவனைத் தொடர்ந்து அறியாமல்.
எப்போதும் கலகலப்பாக பேசிக் கொண்டு வரும் ப்ரணவ், உத்ராவின் இடையில் இன்று ஏனோ ஒரு மௌனத் திரை விழுந்துக் கிடந்தது.
அந்த காரின் ஏசிக்காற்றைக் கூட சுவாசிக்க முடியாமல் இருவரது மூச்சுக் காற்றும் திணறியது.
அந்த மௌனத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் இருவரும் ஒரே நேரத்தில் மொழிகளைத் திறந்தனர்.
“நீ ஏன் இவ்வளவு அமைதியா இருக்க?” என்ற இருவரது குரலும் ஒரே தொணியில் ஒரே டெசிபலில் ஒலிக்க இருவர் உதடுகளிலும் புன்னகை.
“ப்ரணவ், இப்போ எல்லாம் நாம முன்னாடி மாதிரி பேசிக்கிறது இல்லை வெறுப்பேத்துறது இல்லை. ஏதோ ஒரு மாயத்திரை நடுவுல வந்தா மாதிரி இருக்கு”
“மாயத்திரை லாம் நடுவுல வரல அந்த மாயாவி வைபவ் தான் நடுவுல வந்துட்டான்” என்ற ப்ரணவ்வின் குரலில் ஏகத்துக்கும் எரிச்சல்.
“அப்போ வைஷாலி மட்டும் நடுவுல வரலயாக்கும்?” என்ற உத்ராவின் குரலிலோ ஆற்றாமையின் ஆழம்.
“உத்ரா ப்ளீஸ் அந்த வைபவ்க்கு இனி மெசேஜ் பண்ணாதே. இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோ.”
“ஏன் ப்ரணவ் நீ மட்டும் வைஷாலிக்கு மெசேஜ் பண்ணலாம். ஆனால் நான் வைபவ்க்கு மெசேஜ் பண்ணக்கூடாதா ? “
“உன்னை அவன் கையிலே ஒப்படைச்சுட்டு போறதுல எனக்கு கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. அவன் உன்னை பத்திரமா பார்த்துக்க மாட்டான்.”
“என்னை அப்போ யார் பத்திரமா பார்த்துப்பாங்க?” என்ற அவளது கேள்விக்கு ” நான் இல்லையாடி பைத்தியக்காரி” என்று அவன் அடிமனதினுள் இருந்து ஒரு குரல் எழும்பி வந்தது.
ஆனால் அதை தொண்டையிலே இறுக்கிக் கொண்டவன் இறுக்கமான குரலில் சொன்னான்,
“தெரியல உத்ரா, சீக்கிரமா கண்டுபிடிக்கணும். நான் வெளிநாடுக்கு போறதுக்குள்ளே உனக்கு பொருத்தமானவனை தேடிக் கண்டு பிடிச்சுடுவேன். ” என்று சொன்னவனை திகைத்துப் போய் பார்த்தவள் சட்டென்று சிரிப்பை பூசிக் கொண்டாள்.
“ஓ சூப்பர் ப்ரணவ்.. போ போ. ரொம்ப சீக்கிரமா போ. உன் வைஷாலிப் பின்னாடியே போ… ஆமாம் பாஸ்போர்ட்லாம் எடுத்துட்டியா?” என்றுக் கேட்க அவன் இல்லை என்று தலையாட்டினான்.
“முதலிலே நாலு பாஸ்போர்ட் சைஸ் போட்டு எடுத்துக்கோ. ” என்று சொன்னவள் மீண்டும் அவன் புறம் திரும்பி படபடவென பேசத் தொடங்கினாள்.
“வீட்டுல சொல்லி எப்படி சமாதானப்படுத்துறதுனு கவலைப்படாதே நான் பேசி சமாதானப்படுத்துறேன். நீ ஹேப்பியா இரு. ஜாலியா இரு. எங்களைப் பத்தி கவலைப்படாதே.” என்று சொன்னவள் ஏதோ நினைவு வந்தவள் போல் தலையில் அடித்துக் கொண்டாள்.
“நான் ஒரு லூசு. எங்களைப் பத்தின கவலை இருந்தா எப்படி போக முடிவு எடுத்து இருப்ப? நீ நல்லா ஹேப்பியா தான் இந்த முடிவை எடுத்து இருப்ப.” என்று சொன்னவள் “வினய் அண்ணா சொன்ன இந்த வேலையை முடிச்சுட்டு நாம பாஸ்போர்ட் ஆபிஸ்க்கு போகலாம் ஓகே வா ப்ரணவ் ” என்று பேசிக் கொண்டே இருந்தவளை கவலையாகப் பார்த்தான்.
“ப்ளீஸ் உத்ரா என் மேலே நேரடியாவே கோவப்பட்டுடு. இப்படி இருக்காதே கஷ்டமா இருக்குடி.”
“நான் ஏன் ப்ரணவ் கோவப்படணும். உங்க லைப் நீங்க முடிவு எடுக்கிறீங்க. எனக்கு என்ன ப்ரச்சனை?” என்று சொன்னவள் அவன் வெளிநாடு செல்ல என்ன என்ன எல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றிய பேச்சை மீண்டும் தொடங்க கண்களில் திகிலோடு அவளைப் பார்த்தான்.
சோபாவில் அமர்ந்து இருந்த வினய்யின் எண்ணம் எல்லாம் சமையல் கட்டில் இருந்த ஆதிராவின் மீது தான் இருந்தது.
இப்படி தனியாக கஷ்டப்படுகிறாளே என்று வருத்தமாகக்கூட இருந்தது.
என் உதவியையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டாளே என்று அவன் கவலைப்பட்டுக் கொண்டு இருந்த நேரம் சமையலறையில் இருந்து வந்த கதறல் ஒலி அந்த அறையை அதிரச் செய்வதாய்.
ஆதிராவின் அந்த பதற்றமான குரல் வினய்யை முற்றிலுமாய் ஸ்தம்பித்து நிற்க வைத்துவிட்டது.