சமர்ப்பணம் 6
சமர்ப்பணம் 6
(அமிலம் வீசுதல்/acid attack – விட்ரியால் தாக்குதல் அல்லது விட்ரியோலேஜ் என்றும் அழைக்கப்படுகிறது, இந்த தாக்குதல்களின் நீண்டகால விளைவுகளில் குருட்டுத்தன்மை, தீக்காயங்கள், முகம் மற்றும் உடலில் கடுமையான நிரந்தர வடு, சிதைவு, உள் உறுப்புக்கள், எலும்புகள், நரம்புகள் பாதிப்பு மட்டும் இல்லாமல் சமூக, உளவியல் மற்றும் பொருளாதார சிரமங்களுடன் ஆசிட் அட்டாக் விக்டிம்ஸ் சந்திக்க வேண்டி இருக்கிறது. தாக்குபவரின் நோக்கம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரைக் கொல்வதை விட அவமானப்படுத்துவதாகும்.)
அரசியலில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் நிரந்தர நண்பன், பகைவன் என்று யாரும் இல்லை. நம்முடைய நண்பர்கள் எதிரிகளாவதும், எதிரிகள் நண்பர்கள் ஆவதும் காலத்தின் கைகளில் தான் இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் அந்தப் பள்ளி வளாகத்தில் அரங்கேறி கொண்டு இருந்தது.
கல்லூரி காலத்தில் இணை பிரியாத தோழிகள் என்று பெயர் வாங்கியவர்கள் காவ்யாவும் தனுவும். இவர்கள் இருவருக்கும் சீனியர் சுமித்ரா.
அப்படி உயிர் தோழிகளாய் இருந்தவர்களில் ஒருத்தி தன் தோழியின் உயிரைப் பறிக்கத் துணிந்து நிற்பது காலத்தின் கொடுமையே!
உடலும் உயிரும் போல நகமும் சதையும் போல இருந்த காவ்யா இன்று யாரோ ஒருத்தன் செய்த பாவத்திற்கு அத்தனை வருடம் பிராயசித்தம் செய்து கொண்டு இருக்கிறாள்.
உண்மை அறியாத தனு ஆலகால விஷமாய் மாறித் தோழியின் உயிரை எடுத்து விட முயன்று கொண்டு இருக்கிறாள்.
ஒருவிதமான வெறி, excited ஸ்டேட், உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம், நல்லது எது, கெட்டது எது என்று புரியாத ஒரு நிலையில், மனப்பிறழ்வில் காவ்யாவை கொல்வது ஒன்றே குறிக்கோளாக அவள் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்தாள் தனு.
மினிஸ்டர் விடை பெரும்போது அவரிடம் முரளிகிருஷ்ணா, ரேணுகா, விஷ்ணு பேசிக் கொண்டு இருக்க, கிடைத்த சந்தர்ப்பத்தில் நழுவி இருந்தாள் தனு.
தன் அண்ணனிற்கு மேடையில் இருக்கும் போதே அழைத்துக் காவ்யாவை பற்றிச் சொல்லி விட்டு இருந்தாள்.
பள்ளி முழுவதும் காலியாகி இருக்க, மினிஸ்டர் முரளிகிருஷ்ணா குடும்பத்திற்கு மிகவும் தெரிந்தவர் என்பதால் வெகுநேரம் பேசிக் கொண்டு இருந்தது தான் காவ்யாவிற்கு வினையாகி போனது.
விஷ்ணுவும் அவர்களைக் கிளப்ப எவ்வளவு முயன்றும் நடக்காமல் “ச்சே போங்கடா” என்ற மன நிலையில் இருந்தவன் தூங்கி கொண்டு இருந்த அவன் குழந்தை சாதனா மேல் கவனத்தை வைத்திருக்க, தனுஸ்ரீ அங்கே இல்லை என்பதை கவனிக்க தவறினான்.
ஏதோ ஒன்று தவறாய் படக் காரை விட்டு இறங்கிய விஷ்ணுவின் கண்கள் மத்திய அமைச்சரோடு பேசிக் கொண்டிருக்கும் மாமனார், மாமியார் அருகே தனு இல்லயென்பதை கண்டு எடுத்தான் ஓட்டம் பள்ளி வளாகத்தை நோக்கி.
மினிஸ்டரும் கிளம்பி விட அப்பொழுது தான் புரிந்தது நடந்து கொண்டு இருக்கும் விபரீதம்.
மகளைக் காணாமல் மருமகன் தேடி ஓடி இருப்பதை கண்டவர்கள் அவர்களும் பள்ளி நோக்கி ஓடினார்கள்.
அவர்கள் வந்து சேர்ந்த நேரம் சுமித்ரா, சந்தோஷ், விஷ்ணு மூவரும் அஞ்சலியைத் தனுஸ்ரீயின் கை பிடியிலிருந்து காப்பாற்ற போராடி கொண்டு இருந்தார்கள். முரளிகிருஷ்ணா, ரேணுகா சேர்ந்து முயன்றார்கள்.
ஆனால் தனுவின் ‘அந்த நேர பலம்’ அதிகமாகவே இருந்தது.
“எங்கே எங்கடீ அவன்? அவன் வேணும் எனக்கு… அவன் எனக்கு மட்டும் தான்… சொல்லு… சொல்லு… எங்கே உன் அண்ணன்? எங்கே என் ராம்சந்தர்? சொல்லுடீ… சொல்லு.
உனக்குத் தெரியும் என் ராம் எங்கிருக்கிறான் என்பது, உனக்குத் தெரியாமல் இருக்காது, சொல்லு, எங்கே என் ராம்? எனக்கு என் ராம் வேண்டும்.” என்று உச்சஸ்தாயில் வெறி கொண்டவளாய், பைத்தியம் பிடித்து, தனு கத்த, விஷ்ணு மனதால் அடி வாங்கினான். அவளைப் பிடித்து இருந்த கைத்தானாகக் கீழ் இறங்கி விட, விரக்தி புன்முறுவல் அவன் உதட்டில் எழுந்தது.
மனதால் அடிவாங்கிய விஷ்ணு நான்கு எட்டு தள்ளாடி நின்றான்.
தன் மனைவியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளால் ஸ்தம்பித்து நின்ற, அவன் காதுகளில் என்றோ கேட்ட ஏளன சிரிப்பு மீண்டும் ஒலித்தது.
“எனக்கும் தனுவிற்கும் திருமணம். சொன்னதை செய்து காட்டிட்டேண்டா.” என்றான் விஷ்ணு.
“வாழ்த்துக்கள். இது உனக்கு ரொம்பவே தேவைப்படும். ஏன்? சொல்றேன் என்றால் நீ வாழ்ந்து காட்ட வேண்டுமே அதற்குத் தான்.” என்றான் அவன் ஏளனத்துடன்.
“உன் கண் முன்னால் என் தனுவோடு வாழ்ந்து காட்டுவேன். சாலஞ்ச்.” என்றான் விஷ்ணு.
ஆனால் அவன் போட்ட சேலஞ்சில் ஜெயிக்க அவனுக்கு முழுதாய் ரெண்டு வருடம் பிடித்தது. மனம் ஒற்றி தனு விஷ்ணுவோடு வாழ ரெண்டு வருடம் தேவைப்பட்டது.
“வாழ்ந்து காட்டிட்டேன். இன்னைக்கு எங்க மகளின் ரெண்டாவது பிறந்த நாள்.” என்றான் விஷ்ணு சாலெஞ்சில் ஜெயித்த கர்வத்துடன்.
அவன் கர்வத்தை பொடி பொடியாக்கியது அவன் சிரிப்பு “தூங்கும் எரிமலைகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறே விஷ்ணு? அது வெடிக்கவே இல்லை என்றால் உறங்குகிறது என்று அர்த்தம் இல்லை, உள்ளே குமுறி கொண்டே தான் இருக்கும்.
தனுவும் அதே போல் தான். ‘டிக்கிங் டைம் பாம்/TIKKING TIME BOMB’ போன்றவள். எத்தனை வருடம் ஆனாலும் என்மேல் அவளுக்கு இருக்கும் காதல் குறையாது.” என்ற அவன் குரலில் உறுதியில், தனு நிச்சயம் தன்னை மறக்கமாட்டாள் என்ற அவன் கூற்றில் விஷ்ணு கொதித்து போனான்.
“தனு என் மனைவி….”என்றான் விஷ்ணு கோபத்துடன்.
“இந்த எண்ணம் உன் மனைவிக்கு இருந்தால் எல்லோருக்கும் நல்லது…ஆனால் இருக்குமா விஷ்ணு?”என்றான் அவன் வெகுநக்கலாக.
“என் காதலால் அவள் மனதில் இருக்கும் உன் காதலை அழித்துக் காட்டுவேண்டா.” என்றான் விஷ்ணு.
“வெறும் பகல் கனவு.” என்றான் அவன்.
“இல்லை அதை நிஜமாக்கி காட்டுவேன். என் தனு எனக்குத் தான்.” என்றான் விஷ்ணு.
“இல்லை எத்தனை வருடம் ஆனாலும் அவள் என் தனுவாகத் தான் இருப்பாள்.” என்றான் அவன்.
“நடக்காது… என் அன்பால் அவளை மாற்றிக் காட்டுவேன்.” என்றான் விஷ்ணு.
“நடந்தால் பார்க்கலாம்.” என்றான் அவன்.
“நிச்சயம் நடத்தி காட்டுவேன்.” என்றான் விஷ்ணு.
“அதற்கு தான் ஆல் தி பெஸ்ட் சொன்னேன். உனக்கு ரொம்ப தேவைப்படும் விஷ்ணு. எனக்கு தனுவை பற்றி, உன்னை விட மிக நன்றாய் தெரியும். நீ ஜெயிக்க முடியாது. உன்னை குப்பை போல் ஒரு நாள் தூக்கி எரிய தான் போகிறாள், அதுவும் எனக்காக. அப்பொழுது உனக்கு தெரியும் ஏன்? நான் இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்று சொன்னேன் என்பது.” என்றான் அவன்.
“நிச்சயம் ஜெயிப்பேன், என் காதல் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்றான் விஷ்ணு.
“தனுவின் எனக்கான காதல் மேல், எனக்கு நம்பிக்கை அதை விட மிக மிக இருக்கிறது விஷ்ணு நீ ஜெயிக்க மாட்டே.” என்றான் அவன் .
“என்ன சாலஞ்ச்?” என்றான் விஷ்ணு, அவன் நம்பிக்கையை கண்டு பல்லை கடித்தவாறு.
“நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் விஷ்ணு.” என்றான் அவன்.
“நிலா மேல் சத்தியமாய் நான் ஜெயித்தால், நான் சொல்வதை நீ கேட்பாய் தானே?” என்றான் விஷ்ணு.
பெருமூச்சை வெளியிட்ட அவன், “நீ எதைக் கேட்கப் போகிறாய் என்பது எனக்குத் தெரியும். நிச்சயம் அது நடக்க போவதில்லை. தனுவின் எனக்கான காதலை ஜெயித்து விட்டு வந்து பேசு விஷ்ணு. காத்திருப்பேன்.” என்ற அவனின் பேச்சு இன்று விஷ்ணுவின் காதில் ரீங்காரமாய் கேட்டது.
‘ஜெயித்து விட்டதாய் நினைத்தேனே!… கடைசியில் எல்லாம் கானல் நீர் தானோ! அவன் சொன்னது போல் அவனே தான் ஜெயித்து இருக்கிறான். இன்னும் என் மனைவியின் மனதில் இருப்பவன் அவன் தான்.’ என்றவன் பார்வை மேல்தளத்தை நோக்க, கீழ் நடப்பதை எல்லாம் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
யாரை தனுவும் அமெரிக்காவில் உள்ள அவள் அண்ணணும் நான்கு வருடமாய் உலகம் முழுக்க தேடி கொண்டு இருக்கிறார்களோ அவன் அதே பள்ளி வளாகத்தில், மேல் மாடியில் நின்றவாறு கீழே நடப்பதை எல்லாம் கண்களில் கண்ணீர் வழிய நின்று பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
விஷ்ணுவின் கண்களும் அவன் கண்களும் ஒரு முறை சந்திக்க, விஷ்ணுவின் கண்கள் தோல்வியோடு நிலம் நோக்கியது. அதைக் கண்டு அதிக வேதனை பட்டது என்னவோ மேலிருந்த அவன் தான்.
“தோத்துட்டேண்டா.” என்ற விஷ்ணுவின் உதட்டசைவு அவனைப் பதற வைத்தது.
ஒருவாறு தன்னை தேற்றி கொண்ட அவன், ஏதோ சைகை செய்ய, அதைப் புரிந்து கொண்ட விஷ்ணு, தனுவிற்காக என்று எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கும் மயக்கமருந்து அவள் புஜத்தில் செலுத்த, மயங்கிச் சரிந்த மனைவியைத் தாங்கிக் கொண்டான் விஷ்ணு.
தனு கையில் சிக்கி, கரும்பு சக்கையாய் மாட்டி இருந்த காவ்யா நிற்காமல் இரும்பியவாறு தரையில் சரிந்தாள். அவளைத் தாங்கிக் கொண்டனர் சந்தோஷும், சுமித்ராவும். சுமித்ரா ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, தொடர்ந்து வந்த இரும்மல்களுக்கு நடுவே ஒரு பாட்டில் முழுவதும் காலி செய்தாள்.
மயங்கி விழுந்த மனைவியைக் கைகளில் ஏந்தி கொண்ட விஷ்ணு யாரிடமும் பேசாமல் காரை நோக்கி நடக்க, ஒரு கணம் தாமதித்த முரளிகிருஷ்ணா, ரேணுகா, மருமகனை பின் தொடர்ந்தனர்.
“மாமா!… சாவி பேண்ட் பாக்கெட்டில் இருக்கு. கதவை திறங்க. அத்தை பின்னால் ஏறுங்க” என்றவன் அவர்கள் ஏறியதும் தனுவை அவர் மடியில் கிடத்தி விட்டு, “மாமா நீங்க ஓட்டுங்க. என்னால் முடியாது. நேரே உங்க ஹாஸ்பிடலுக்கு விடுங்க” என்றான்.
முரளிகிருஷ்ணா இருந்த கலக்கத்தில், மருமகனின் ஒட்டாத பேச்சையோ, அவன் முகம் இறுகி போய் விடத்தையோ, அவன் கண்களில் அதுவரை இல்லாத புது தீயொன்று பற்றி எரிவதையும் கவனிக்க தவறி விட்டார்.
கவனித்து இருந்தால் மட்டும் அவரால் என்ன செய்து விட முடியும்?
போன் எடுத்த விஷ்ணு தன் நண்பனுக்கு அழைத்து, “திலீப்!… தனுவை அட்மிட் செய்ய வந்துட்டு இருக்கோம். டிரீட்மென்ட் ஏற்பாடு செய்டா.” என்றவன் எதையும் சொல்லாமல் போன் அணைத்து வைத்தான்.
அவன் கண்களிலுருந்து வழிந்த கண்ணீர் உறங்கிக் கொண்டிருந்த அவனின் ரெண்டு வயது மகள் தலைமேல் பட்டு வழிந்தோடியது. மௌனமான குலுங்களில் விஷ்ணு உடல் அதிர, அவன் கைகள் தானாகச் சாதனாவை அணைத்து கொண்டது.
இவர்கள் தனுவை ஹாஸ்பிடலில் சேர்க்க செல்ல, அங்கே இன்னொரு விபரீதம் நடந்து இருந்தது.
தனு காவ்யா கழுத்தை பிடித்து நெறிக்க ஆரம்பித்தவுடன், மற்றவர்கள் உறைந்து நிற்க, தூக்கம் களைந்து எழுந்திருந்த குழந்தை நிலாவுக்கு ‘தன் காவ்யாவிற்கு ஆபத்து’ என்று புரிந்ததோ என்னவோ, காரிலிருந்து இறங்கி, தனுவை தன் பிஞ்சு கைகளால் அடித்துக் கொண்டிருந்தாள்.
“மா… விடு… என் கவிமாவை விடு…” என்று நிலா தனுவை அடிக்க, வெறியேறி இருந்த தனு தான் நிதானத்திலேயே இல்லையே!
அவள் தள்ளி விட, நிலா சென்று காரில் இடித்து விழுந்தாள். விழுந்த வேகத்தில் அவள் தலை பூமியில் மோதக் குழந்தையின் நினைவு தப்பியது.
ஏற்கனவே இதயம் பலவீனமான, பல்வேறு கோளாறுகளுடன் உள்ள குழந்தை நிலா. தனுவின் அந்த வெறி, வேகம் தாள முடியாத பிஞ்சு மயக்கத்திற்கு சென்றது.
காவ்யாவை கவனிப்பதா, இல்லை குழந்தையிடம் ஓடுவதா என்று புரியாமல் திகைத்து நின்ற சந்தோஷ், நிலாவை வாரி எடுத்துத் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியவில்லை என்றதும், தன் காரை அசுர வேகத்தில் இயக்கி ஹாஸ்பிடலை நோக்கி விரைந்தான்.
தனு மயங்கியதும், காவ்யா தன்னை சமாளித்து கொண்டு விட, சுமித்ரா அவளை இழுத்து கொண்டு காருக்கு ஓடினாள். காவ்யாவிற்குமே மயக்கம் வந்து கொண்டு இருந்தாலும், தன்னை சமாளித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஹாஸ்பிடல் வந்ததும் சுமி கைத்தாங்கலாய் காவ்யாவை உள்ளே அழைத்துச் செல்ல அங்கு அரக்கன் போல் நின்றிருந்தான் சேகர்.
“யாரை கேட்டு இங்கே வந்தே? கெட் லாஸ்ட்.” என்ற அவன் முதல் பேச்சே எரிமலையைக் கக்கியது காவ்யாவை நோக்கி.
“நிலா!…” என்று காவ்யா குரல் மெலிந்து ஒலிக்க,
“இன்னும் சாகலை. உயிரோடு தான் இருக்கா. இனி மொத்தமாய் கொன்று விட்டு போ.” என்றான் சேகர் அமிலத்தை வார்த்தைகளாய் மாற்றி.
அதில் துடித்து போனாள் காவ்யா. “என்ன பேச்சு பேசறீங்க? நிலா எனக்கும் குழந்தை தான்.” என்றாள்.
“அப்படி தோன்றவில்லையேமா… அவளை உன் குழந்தை என்று நினைத்து இருந்தால், மேடை ஏறும் துணிவு உனக்கு வந்திருக்காது. நீ இப்போ மேடையேறி பாடவில்லை என்று எவன் அழுதான்?
என்ன சொன்னார் முரளிகிருஷ்ணா? போன வருடம் பள்ளி கலை விழாவை youtubeல் பார்த்து விட்டு வந்தோம் என்று… இந்த முறையும் பதிவாகி இருக்கு. இதை அவன் பார்த்து இருக்க மாட்டான் என்று நினைக்கிறாயா, இல்லை தனு தான் அவனிடம் உன்னை இங்கே பார்த்ததை சொல்லாமல் இருக்க போகிறாளோ?
நிலாவையும் ஒரு முறை கொல்ல அவர்கள் முயன்று தோற்றது மறந்து விட்டதா? நாலு வருஷம் போராடி நிலா உயிரை மீட்டு இருக்கோம். அதை ஒரேடியா எடுக்க வழி செஞ்சுட்டே ரொம்ப சந்தோசம்.” என்று கடித்து குதறி எடுத்தான் சேகர் காவ்யாவை வார்த்தைகளால்.
காவ்யா என்ன இப்படி நடக்கும் என்று கனவா கண்டாள்! லைட் மியூசிக் என்று ஆண்டு விழா அழைப்பிதழில் போட்டு இருந்தார்கள். பாட வேண்டிய ஆசிரியர் மெடிக்கல் எமர்ஜென்சி என்று வரவில்லை என்றதும் குழப்பத்தில் இருந்த காவ்யா, பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல், டெக்னாலஜி பற்றி யோசிக்காமல் மேடை ஏறி விட்டாள்.
அவர்கள் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் சேகர் முடிவு மாறவேயில்லை.
“நீ இருந்தா உன்னை வச்சி அவன் மோப்பம் பிடித்து நிலாவை கண்டு பிடித்து விடுவான். இதில் பலர் வாழ்க்கை அடங்கி இருக்கு. எங்க வாழ்க்கையை விட்டு போ. நீ இருந்தா எதுவும் நடக்காது. நீ இங்கே இருந்தா எங்க உயிர் போய்டும்
ஏற்கனவே ஒருமுறை ரெண்டு உயிர் சாவின் விளிம்பிற்கு போனது உனக்கு போதலையா? எங்க உயிர் தான் வேண்டுமா? நாங்க செத்தாதான் உனக்கு நிம்மதியா?
நீயே உன் கையால் எங்களை கொன்னுடு. போ… போ… எங்க கண்ணில் படவே படாதே” என்று உறுமி விட்டு,”நீங்களும் அவளுடனே செல்வதாய் இருந்தால் போங்க.” என்று சுமித்ராவிற்கும், சந்தோஷிற்கும் வார்னிங் கொடுத்து விட்டு அகன்றான் சேகர்.
சுமியும், சந்தோசும் தயங்கி நிற்க, “நீங்க போங்க சுமி. நிலா கண் விழித்தால் உங்களை தான் தேடுவானு தெரியும் தானே? போங்க சுமி. என்னை பற்றி கவலைபடாதே போ…” என்றவள் சுமியை உள்ள அனுப்பினாள்.
“எல்லாம் சரியாகிடும் கவி.அவர் இப்போ நிலாக்கு என்னவோ ஏதோ என்ற பயத்தில் இருக்கிறார்.நிலா என்றால் அவருக்கு உயிர் என்று தெரியும் தானே! குழந்தை சரி ஆனதும் நான் பேசிப் பார்க்கிறேன் கவி.” என்று அவளை இழுத்து அணைத்த சுமி வேகமாய் குழந்தை இருந்த அறைக்குள் சென்று மறைந்தாள்.
“வா போகலாம்.” என்றான் சந்தோஷ்.
“இருங்க டாக்டர் சார்… நீங்க எங்கே வரீங்க! உள்ளே போங்க. சுமி, சேகர், நிலா நீங்க இல்லாமல் தவித்து போய் விடுவாங்க.” என்றாள் காவ்யா.
“ஏன் நீ நான் இல்லாமல் தவித்து போக மாட்டியா என்ன?” என்ற சந்தோஷ் குரலில் எதை உணர்ந்தாளோ, பெருமூச்சை வெளியிட்ட காவ்யா,
“வேணாம் சந்தோஷ்… இந்த குடும்பத்திற்கு ஒரு சுமி போதும். நீங்க வாழ வேண்டியவங்க… உங்க வாழ்க்கை என்னோடு இணைய முடியாது. இணையவும் கூடாது.” என்றாள் காவ்யா.
“ஹ்ம்ம்!… தெரியும் அதான் பாடினியே! ‘கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னர் முகம் காண்பதில்லை. கண்ணனுக்கு தந்த உள்ளம், இன்னொருவர் கொள்வதில்லை’ என்று…. இன்னும் அவனை நீ மறக்கவேயில்லை அப்படி தானே!” என்றான் சந்தோஷ்.
“என்னையே நான் எப்படி மறக்க முடியும் சந்தோஷ்? இங்கே இருப்பவள் என்றோ அவராகி போனவள். இந்த உடலை விட்டு உயிர் வேண்டும் என்றால் போகும்.” என்றாள் காவ்யா.
“ஹி இஸ் லக்கி… ஆனா கையில் கிடைத்த வைரத்தின் மதிப்பு தெரியாத முட்டாள் அவன். உனக்காக காத்திருப்பேன் கவி.” என்றான் சந்தோஷ்.
“வேண்டாம் சந்தோஷ்….எனக்காக காத்து இருக்காதீங்க….வேஸ்ட். நல்ல பெண்னை பார்த்து.” என்ற காவ்யாவை கை காட்டி நிறுத்திய சந்தோஷ்,
“நீ முதலில் உன் வாழ்வை பாரு கவி. எனக்காக, ‘கல்யாண மாலை’ வேலை எல்லாம் உனக்கு வேண்டாம். உனக்கு உன் காதல் முக்கியம் என்றால் எனக்கு என் காதல் முக்கியம். எங்கே போறே? வா நான் ட்ராப் செய்யறேன்.” என்றான் சந்தோஷ்.
“வேண்டாம். நிலாவை கவனிங்க.” என்ற காவ்யா அதற்கு மேல் அங்கு நில்லாதவளாய் வெளியேறியவள், பெங்களூருவை விட்டே கிளம்பி விட்டாள்.
அது தான் காவ்யாவை அவர்கள் கடைசியாக பார்த்தது. அவள் எங்கே சென்றால் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை மூன்று வருடங்களுக்கு மேலாக.
உயிரோடு இருக்கிறாளா என்ற விவரம் கூடச் சுமித்ரா, சந்தோஷ், சேகர் அறியாவண்ணம் தான் ஆண்டுகள் கடந்து சென்றது.
அவர்கள் மட்டுமல்ல இன்னொருவனும் காவ்யாவை தான் தேடி அலைந்து கொண்டு இருக்கிறான்.
முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வெச்சேனே
வெச்சதிப்போ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நீரு நிலம் நாலு பக்கம்நான் திரும்பி பாத்தாலும்
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பாஆட்டுகிற எம் மனச
யாரவிட்டு தூது சொல்லி நான் அறிவேன் உம் மனச?
உள்ளமும் புண்ணாச்சு காரணம் பெண்ணாச்சு
என்று இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த ஒருவனின் மனம் துடித்து கொண்டு இருந்தது.
இன்று-2019 ஆம் ஆண்டு.
இடம் -கோயம்பத்தூர்.
அஞ்சலியின் ஏற்பாடுபடி ரகு, கதிரை சுமந்த கார் தமிழ்நாட்டின் ரெண்டாவது பெரு நகரமான கோயம்புத்தூரை அடைந்து, அன்னை இல்லம் என்ற பெயர் தாங்கி இருந்த அந்த பிரம்மாண்ட மாளிகையின் முன் நின்றது.
தங்க முலாம் பூசப்பட்ட ரெண்டு வெளி கதவுகள் காலை சூரிய ஒளியில் தகதகக்க, நீண்டு இருந்த ஓடு பாதையில் பல உயர் ரக கார்கள் அணிவகுத்து நின்றிருக்க, இன்னொரு புறம் நீச்சல் குளம், தோட்டம், சிறிய கோயில் என்று ருத்ரமூர்த்தியின் செல்வ வளத்தை பறைசாற்றி கொண்டிருந்தது அந்த மாளிகை.
ருத்ரமூர்த்தி சட்டென்று பார்க்க, அந்த கால தெலுங்கு நடிகர் ‘கிருஷ்ணாவை’ போல் இருந்தார்.
ஹாலில் அமர்ந்து அவர் பேப்பர் படித்து கொண்டிருக்க, அவரின் சரிபாதியான கற்பகம் சமையல் அறையில் மேற்பார்வை பார்த்து கொண்டு இருந்தார். அவரிடம் நடிகை லக்ஷ்மியின் சாயல்.
இவர்களின் மகள் உஷா யோகா செய்து கொண்டு இருந்தாள்.
‘அவசரக்குடுக்கை’, ‘ரோடு சைட் ரோமியோ’, ‘குரங்கு’ என்று அஞ்சலியால் நாமகரணம் சூட்டப்பட்ட ராகேஷ், ‘நடிகர் விஷ்ணு விஷாலை’ நினைவு படுத்தினான். அதே உயரம், ஹைட்டு, ஜாடை, பணக்காரா கலை என்று மொத்தத்தில் அழகன்.
தன் அறையில் ‘தாடி வைக்காத தேவதாஸ்’ ரேஞ்சுக்கு காயத்ரியின் போட்டோவை அணைத்த படி வாய் விட்டு புலம்பி கொண்டு இருந்தான்.
காதல் என்னும் நோய் முத்தி போய் இருந்தது. விரைவில் ‘குணா’ பட கமல் ‘அபிராமி,அபிராமி’ என்பது போல், இங்கே ராகேஷ் ‘காயு, காயு’ என்று சட்டையை கிழித்து கொண்டு தெருத் தெருவாய் ஓடுவதற்கான அறிகுறிகள் மிக நன்றாய் தெரிந்தது.
அவன் உயிர் நண்பன் கெளதம் பிரபாகர் கூகிள் வீடியோ காலில் அழைப்பதை கூட கவனிக்காத வண்ணம் அத்தனை சோகம். காயத்ரியால் தெலுங்கு பட நடிகன் என்று அழைக்கப்பட்டவன் இவனே.
ஒருவழியாக நண்பன் அழைப்பதை கண்ட ராகேஷ், அந்த அழைப்பை ஏற்றான். பத்து நிமிடத்திற்கு குறையாமல் வந்து விழுந்தது அர்ச்சனை ராகேஷுக்கு.
“எருமை!… எத்தனை தடவை கால் செய்வது! இது நீ வந்திருக்க வேண்டிய வேலை. நீயும் தான் இதில் பார்ட்னர். அது நினைப்பில் இருக்கா இல்லையா?” என்றான் கெளதம்.
“ச்சு.” என்று சலித்தவாறு புரண்டு படுத்தான் ராகேஷ்.
“அடேய்!… படுத்தாதேடா… ஜஸ்ட் மூணு நாள் பொறுத்துக்கோ. பிரான்சில் இருந்து இந்த டீல் முடிந்த உடன் ரிட்டர்ன் ஆகிடறேன். காயத்ரி சிஸ்டரை கடத்தியாவது உன்னிடம் சேர்த்துடறேன்.
உன் தேவதாஸ் பில்ட் அப் தாங்க முடியலை. நீயெல்லாம் ஒரு கம்பெனி ஓனர் என்பது வெளியே சொல்லிடாதே… கேட்பவன் காறி துப்புவான். விடலை பையன் மாதிரி ஏண்டா பீஹேவ் செய்யறே? முடியலை…வேணாம் … வலிக்குது” என்று ‘வடிவேலு’ ரேஞ்சுக்கு கௌதமை புலம்ப வைத்து விட்டான் ராகேஷ்.
காதலிப்பவன் தன் காதலுக்காக புலம்பலாம் தப்பில்லை. தன் காதலுக்கு இன்னொருவனை புலம்ப வைத்து கொண்டிருந்தான் ராகேஷ்.
ஒரு திருமணத்தில் காயத்ரியை பார்த்ததும் இவனுக்கு பிடித்தது உலகின் மிக கொடிய நோயான காதல்.
பாவாடை தாவணியில், ரெட்டை ஜடை போட்டு, குழந்தைத்தனம் மாறாத அந்த குமரி பெண்ணின் அழகில் சொக்கி போனான்.
அவன் துறைகளில் இல்லாத அழகிகளா! இல்லை இவனை நெருங்கதா அழகிகளா! ‘தூரநில்’ என்று அவர்களை நிறுத்திய ராகேஷ், இன்று இவளிடம் நெருங்க பேராவல் கொண்டான்.
எந்த முயற்சியும் எடுக்காமலே காயத்ரி அவன் மனதில் ராணியாய் சிம்மாசனம் இட்டு அமர்ந்தாள்.
ராகேஷும், ‘மணந்தால் காயத்திரி தேவி, இல்லையேல் மரண தேவி’ என்று சபதமே எடுத்தான்.
மகனிடம் எதையோ சொல்ல முயன்ற ருத்ரமூர்த்தி, மகன் ‘தேன் உண்ட வண்டாய்’ ஒரு பெண்ணின் மேல் பார்வை பதித்து இருப்பதை பார்த்து புருவம் சுருக்கினார்.
கண்ணை இமைப்பது கூட பாவம் என்று அந்த பெண்ணையே உற்று பார்த்து கொண்டிருந்த மகனின் மனம் புரிந்து போனது.
எத்தனை ப்ரோபோசல் கொண்டு வந்திருப்பார். எல்லாவற்றையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டி கழித்த மகன் இன்று ஒரு பெண்ணை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பதை கண்ட அவர், அருகில் இருந்த வாசுவிடம் விசாரிக்க, அந்த பெண் அவரின் தூரத்து உறவு என்பதும், தனக்கு சமமான குடும்பம் என்பதை தெரிந்து கொண்டதும் அவர் மனதில் பூரண திருப்தி.
வாசுவிடமே தன் எண்ணத்தை அவர் சொல்ல, மறுநாள் ரத்தினம் அய்யாவிடம் பேசலாம் என்று உறுதி அளித்தார் வாசு.
ஆனால் அன்று இரவே வாஞ்சிநாதனுக்கு ஹார்ட் அட்டாக் என்று மொத்த குடும்பமும் கிளம்பி விட்டு இருந்தது. தவிர வாசுவும் திருமண வேளைகளில் இதை மறந்து போனார். காலம் ஓடியதே தவிர, காயத்திரி வீட்டிலிருந்து எந்த பதிலும் இவர்களுக்கு வரவில்லை.
துடித்து போனது ராகேஷ் தான். ஆரம்பமே தகராறாய் இருக்க, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவனின் கண்களின் முன் மோகினியாய் வலம் வந்தாள் அவனின் ராணி.
கோயில், குளம், சினிமா, பார்க், ஷாப்பிங் மால் என்று எங்கு ராகேஷ் சென்றாலும் அங்கு காயத்ரியும் வந்தது யதேர்ச்சையாக நடந்தது தான் என்றாலும், ராகேஷ்ஷின் காதல் கொண்ட மனம் பேயாட்டம் ஆடியது.
காயத்ரி தனக்கு வந்த சம்பந்தம் பற்றியோ, தனக்காக அங்கு உயிர் துடித்து கொண்டிப்பதையோ அறியாதவளாய் சுற்றி கொண்டிருந்தாள். அவனோ அவளை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான்.
டன் கணக்காய் காதலின் பாரம் அழுத்த, பகிர்ந்து கொள்ள காயத்ரியின் துணை இல்லாமல் திணறி போனான் ராகேஷ்.
நண்பனின் நிலையை கௌதமால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவனும் அதே நிலையில் இருப்பவன் தானே!
காதல் என்பது முழுமை பெற அங்கு ரெண்டு மனங்களின் சங்கமம் தேவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று உயிர்க்க முடியாது என்ற நிலை.
“நீ அவங்களை மீட் செய்து பேசு ராகா… அவங்களுக்கு உன்னை பிடித்தால் வீட்டில் சொல்லி தாமதம் ஆவதை தடுப்பார்கள். நாளைக்கு சிஸ்டர் பிறந்த நாள் இல்லையா? மீட் செய்து பேச இதை விட பெஸ்ட் சான்ஸ் கிடைக்காது” என்று பிளான் போட்டு கொடுத்த கௌதமோ, அதை நடைமுறைப்படுத்திய ராகேஷோ அறியவில்லை, காயத்திரிக்கு இந்த ப்ரோபோசல் பற்றி எதுவும் தெரியாது என்பதை.
தவிர காயத்ரி என்ற பெண் பக்கத்துக்கு கோயிலுக்கு போக கூட அம்மா, பாட்டி, அண்ணி என்று புடை சூழ சென்று வரும், ஆயிரம் சட்ட திட்டங்கள் இருக்கும் கிராமத்து பைங்கிளி.
இந்த மீட்டிங், டேட்டிங் என்பதை பற்றிய ஏபிசி கூட அறியாத வெகுளி. ராகேஷின் ‘வெளிநாட்டு அப்ரோச்’ எல்லாம் வேலைக்கே ஆகாது என்பது அவர்களுக்கு புரியவில்லை.
அவர்கள் செய்ய போகும் செயல்களால் ஏற்பட போகும் விபரீதம் அறியாதவர்களாய் பொக்கே, நகை என்று வந்து இறங்கிய ராகேஷை பார்த்து காயத்ரி மிரண்டு தான் ஓடினாள்.
முதலில் ராகேஷ் எண்ணம் காயத்ரி அவனை டீஸ் செய்து விளையாடுகிறாள் என்பதாய் தான் இருந்தது. தன் பின்னணி, பணம், ஆண்மையின் மேல் அவனுக்கு அத்தனை நம்பிக்கை. ஆனால் காயத்திரி கண்களில் அவனுக்காக காதல் மின்னுவதற்கு பதிலாக பயமே இருந்தது. அவளுக்கு அவன் யார் என்பதே தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று யோசிக்க தவறிய ராகேஷும், கௌதமும், விதைத்த வினை அறுவடை ஆக அவர்கள் வீட்டின் வாயிலின் முன் வந்து நின்றது காரில்.
நியூஸ்பேப்பரில் கவனமாய் இருந்த ருத்ரமூர்த்தியை கலைத்தது அவர் அமர்ந்திருந்த சோபாவில் அருகே இருந்த இண்டர்காம்.
“என்ன சோமு?” என்றார் அழைப்பது வெளி வாயில் காவலன் என்பதை அறிந்து.
“சார், சமத்தூர் ரத்தினம் அய்யா வீட்டில் இருந்து வந்திருக்காங்க சார். நம்ம சின்னய்யாவுக்கு அவங்க வீட்டு பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தீர்களாமே.” என்றார்.
“அட என்ன சோமு இது? அவங்க சம்பந்தி வீட்டுக்காரங்க, கதவை திற, கற்பகம் அம்மாடி… கற்பகம்… உஷா வாங்க, டேய் ராகேஷ் எங்கேடா இருக்கே?” என்று அவர் உரத்த குரல் எழுப்ப கற்பகமும், உஷாவும் ஹாலுக்கு வந்தார்கள்.
“என்னங்க, எதுக்கு கூப்பிட்டிங்க?” என்றார் கற்பகம்.
“சம்பந்தி வீட்டில் இருந்து வந்திருக்காங்க. என்ன டீ யோசிக்கறே? சமத்தூர் இரத்தின சபாபதி அய்யா வீட்டு சம்மந்தம். அவங்க பேத்தி காயத்ரியை தானே நம்ம ராகேஷ் லவ் செய்யறான்.” என்று அவர் பேசியவாறு வீட்டின் வாயிலுக்கு வரவும், போர்டிகோவில் கார் வந்து நிற்பதற்கும் சரியாய் இருந்தது.
முதலில் ரகு, கமலா, ஈஸ்வர் உடன் இறங்க, பின்னால் இருந்து அஞ்சலி இறங்கினாள். காரை நிறுத்தி விட்டு டிரைவர் சீட்டில் இருந்து இறங்கினான் கதிர்.
காயத்ரியை அவள் தோழியின் வீட்டில் விட்டிருந்தனர். தனியே விட்டு வர அவ்வளவு பயம்.
“வாங்க , வாங்க , வாங்க தம்பி, வாங்கம்மா.” என்று கரம் கூப்பி ருத்ர மூர்த்தி அவர்களை வரவேற்க, மனைவி, குழந்தையுடன் அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்தான் ரகு.
கதிரும்,அஞ்சலியும் கூட அதையே செய்ய ருத்ரமூர்த்தியும், கற்பகமும் நெக்குருகி நின்றார்கள். ‘இந்த காலத்தில் இப்படி பிள்ளைகளா?’ என்ற வியப்பு அவ்வளவு எளிதில் மறைவதாய் இல்லை.
“வணக்கம் அய்யா. என் பெயர் ரகு. இது என் மனைவி கமலா. இது என் தம்பி கதிர். இது என் தங்கை.” என்று அறிமுகம் செய்து வைத்தான்.
“வாங்க… உள்ளே வாங்க…” என்று அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர வைத்து நலம் விசாரித்து, அவர்கள் பருக பழரசம் கொடுத்தனர்.
“மாம்!… அண்ணி சான்ஸ்சே இல்லை… செம்ம கர்ஜியஸ். எனக்கே அவங்களை மேரேஜ் செய்துக்கணும் போல் இருக்கு. இந்த ராகேஷ் தடிமாடு பிளாட் ஆனதில் ஆச்சரியமே இல்லை.” என்று அன்னையின் காதை கடித்தாள் உஷா.
கற்பகமும் அதே உணர்வில் தான் இருந்தார். ‘இந்த அழகு பதுமை தான் என் மருமகளா?’என்று அஞ்சலியை, காயத்ரி என்று தவறாய் நினைத்து இருந்தனர்.
“அய்யா, பெரியம்மா , அப்பா, அம்மா பின்னால் வாரங்களா?” என்றார் ருத்திரமூர்த்தி.
“பெரியய்யாவுக்கு காய்ச்சல். ரெண்டு வாரமாய் உடல் நலம் இல்லை. அப்பா ஆபரேஷன்னுக்கு பிறகு எங்கேயும் இப்போ எல்லாம் வருவதில்லை. பாட்டி, அம்மா இவங்க இல்லாமல் எங்கேயும் போக மாட்டாங்க.
அதான் நீங்க கேட்கும் போது கூட அவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியலை. தவறாய் நினைத்து கொள்ள வேண்டாம் அய்யா. இப்பொழுது நாங்க மட்டும் தான் வந்திருக்கோம்.” என்றான் ரகு சங்கடமாய்.
அவன் சங்கடத்தை உணர்ந்த ருத்ரமூர்த்தி, “இதில் தயங்க என்னப்பா இருக்கு? மூத்தவர்களுக்கு உடல் நலம் இல்லையென்றதும் குடும்பத்தின் வாரிசாக, தங்கைக்கு அண்ணனாய் பொறுப்பெடுத்து நீயும் உன் மனைவியும் வந்திருப்பது கூட பொருத்தம் தான்.” என்றவர், வீட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அஞ்சலியை பார்த்து,
“என்ன மருமகளே!… வீடு எப்படி இருக்கு? உனக்கு பிடிச்சி இருக்கா சொல்லு. நீ இனி வாழ போகும் வீடு.
இது தான் உன் மாமியார் இல்லை உனக்கு இன்னொரு அம்மாவாய் இருக்க போகும் கற்பகம். நீ இது உன் தங்கை உஷா.
உஷா கண்ணு ஓடு, ராகேஷை கூட்டி வா. அவன் கட்டிக்க போகும் தேவதை பெண் வந்திருக்கா, என்று சொல்லு. மூன்று மாதமாய் அவன் தேவதாஸ் கோலம் தாங்க முடியலை” என்ற ருத்திரமூர்த்தியின் பேச்சை கேட்டு அண்ணனை அழைத்து வர உஷா மாடி ஏற, இது என்ன? புது குழப்பம் என்று திகைத்து விழித்தது காயத்ரி குடும்பம்.
தன்னை அவர்கள் காயத்திரி என்று தவறாக நினைத்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட அஞ்சலி, புன்முறுவலோடு அமர்ந்து இருந்தாள்.
இருக்கும் பிரச்சனை போதாது என்று இன்னும் ஒன்றா என்று பேயடித்தது போல் அமர்ந்திருந்தது காயத்திரி குடும்பம்.
இதயம் சமர்ப்பிக்கப்படும்.