ANIMA 12

ஜெகதீஸ்வரன்… அவசரமாக அழைத்ததன் பேரில் தனது வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு… ECR வந்திருந்தான் ஜெய்…

சமீப காலமாக மலரின் நடவடிக்கைகள் ஈஸ்வர் சொல்லித்தான் அவனுக்குத் தெரியவந்தது… அவளது இதுபோன்ற வினோதமான நடவடிக்கைகளுக்குக் காரணம்தான் என்ன என்று யோசிக்கத் தொடங்கினான் ஜெய்…

அவளை மாமி வீட்டில் ஒப்படைத்த பின்புதான் அவளது உடைமைகளைப் பற்றிய நினைவு வந்தவனாக… ஈஸ்வரை தொடர்புகொண்டு அவன் கேட்க… அவனுமே அவசரத்தில் அதைக் கவனிக்கவில்லை… அனிச்சை செயலாக… அவளது கைப்பேசியை மட்டும் தனது சட்டைப் பைக்குள் போட்டிருந்தான்… அதை ஜெய்யிடம் கொடுக்க மறந்து போனான் ஈஸ்வர்…

மேலும் மலர் பிரச்சனையில் சிக்கக் கூடாதே என்ற அக்கரையில்… தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என்றெல்லாம் அடையாளம் காட்டிக்கொள்ளாமல் அந்த விடுதிக்குச் சென்றான் ஜெய்…

முதலில் அங்கே… வரவேற்பில் சென்று அவன் விசாரிக்க… அவர்கள் சரியான பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பவும்… தன்னைப் பற்றி சொல்லியவன்…

“இங்கே நடக்கும்… சட்டத்துக்குப் புறம்பான வேலைகளெல்லாம் எனக்குத் தெரியும்… இப்ப உடனே நீங்க எனக்குச் சரியான தகவல் கொடுக்கலன்னா… இன்னும் கொஞ்ச நேரத்துல… இங்கே பக்காவா… ரெய்டு நடக்கும்… பரவாயில்லையா?” என்று அவன் மிரட்டிலில் இறங்கவும்… வேறு வழியின்றி… அவர்கள் இறங்கி வந்தனர்…

இரவு நேரம் வேறு நெருங்கிக் கொண்டிருக்க… பாலியல் வியாபாரத்திற்குப் பெயர் போன அந்த விடுதியில்… அவர்கள்  பிரச்சினையை மேலும் வளர்க்க விரும்பவில்லை…

மலரைக் கடத்த முற்பட்ட அந்த பெண்களைப் பற்றி ஜெய் விசாரிக்க… கணினியை ஆராய்ந்து… அவர்கள்… கனகம்மா… ஸ்ரீ துர்கா… என்ற ஆந்திராவைச் சேர்ந்த சகோதரிகள் என்றும்…  ஊரை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளாக வந்து… மூன்று நாட்களாய் அங்கே  தங்கியிருப்பதாகவும் சொன்னார் அந்த விடுதியின் மேலாளர்…  மேலும்… மதியம் முதலே அவர்கள் அங்கே இல்லை என்பதையும் தெரிவித்தார் அவர்…

தொடர்ந்து… அங்கே பொருத்தப் பட்டிருக்கும் கண் கணிப்பு கேமராக்களின் பதிவுகளைப் பார்க்க அவன் முற்பட்ட போது… அந்த கேமராக்களை இணைக்கும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (DVR) சில தினங்களாக பழுதுபட்டிருப்பதாகச் சொன்னார் அந்த மேலாளர்…

பொதுவாகவே இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான வேலைகளுக்கு அந்த விடுதி பேர்போனதால்… அது அவன் முன்பே எதிர்பார்த்து வந்த விஷயம்தான்…  எனவே… மலர் காணொளிகளில் சிக்கி இருக்க வாய்ப்பில்லை என்பதனால்… அவன் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்…

அவருடன் மலரை அடைத்து வைத்திருந்த அறைக்குச் சென்ற ஜெய்… அங்கே அவள் தவறவிட்டிருந்த அவளது கைப்பையை எடுத்துக்கொண்டான்…

பின்பு… அங்கே பணியில் இருந்த காவலாளியிடம்… அவனது கைப்பேசியில்… மலருடைய  படத்தைக் காண்பித்து… அவளைப் பற்றி ஜெய் விசாரிக்கவும்… ஈஸ்வரைப்பற்றி நடிகர் என்று தெளிவாகக் குறிப்பிட்டு… முழு போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த மலர் அவனுடன் காரில் சென்றதை சொன்னார் அவர்…

உண்மை தெரிந்திருந்த போதும்… அதைக் கேட்டு அளவுகடந்த வேதனை உண்டானது அவனுக்கு… அதே மனநிலையுடன்… நேரே அலுவலகம் சென்றான் ஜெய்…

ஆனால் அன்று இரவே… அந்த விடுதியை ஒட்டிய கடற்கரை பகுதியில்… அந்தப் பெண்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு… அரைகுறையாக எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர்…

ஏற்கனவே இவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில்… இதே போன்ற கொலை நடந்திருக்கவே… இவனை அழைத்த காவல் துறை ஆணையர்… அவனை அங்கே நேரில் சென்று ஆய்வு செய்யும்படி சொல்லவும்… அங்கே மறுபடியும் சென்றான் ஜெய்…

அவனைக் கண்டு திடுக்கிட்ட அந்த விடுதியின் மேலாளர்… அந்தப் பெண்களின் பிணங்களை… கனகம்மா… ஸ்ரீ துர்கா… என்று அடையாளம் காட்டினார்…

அந்த நேரம்… அவர் என்ன நினைத்தாரோ… அணிமா மலரைப் பற்றி ஏதும் பேசவில்லை… ஆனால் ஜெய்க்கு மட்டும் புரிந்து போனது… அந்தக் கொலைக்கு பின்னால் எதோ ஒரு விதத்தில் மலருக்குத் தொடர்பு இருக்கிறது என்று… ஆனால் எவ்வாறு அவள் இதில் சம்பந்தப் படுகிறாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை…

ஜெய்யுடன்… அந்தப் பகுதியின் துணை ஆணையரும்… அந்த ஊர் காவல் நிலைய ஆய்வாளரும் கூட அங்கேதான் இருந்தனர்…

அந்தப் பெண்கள் தங்கியிருந்த அறையைச் சோதனை செய்யும் பொழுது அங்கே… அவர்கள் உடைகள் அடங்கிய பயணப் பெட்டிகளும்… ஒரு கைப்பையில்… கொஞ்சம் பணமும்  மட்டுமே இருந்தன… குறிப்பிட்டுச் சொல்லும்படியாக… வேறு எதுவும் கிடைக்கவில்லை…

பிணங்களைக் கைப்பற்றி… அவற்றை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு… வீட்டிற்குப் போனான் ஜெய்…

இந்த வழக்கில்… மலரை இழுக்க வேண்டாம் என்று அவன் எண்ணியிருக்க…  அடுத்த நாளே… அந்தக் கொலைகளை துப்பு துலக்க… சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து… அதற்கு ஜெய்யை தலைமை பொறுப்பில் நியமித்தது காவல்துறை…

முழுமையான பொறுப்பும் அவனுக்கு வந்துவிட… மலரைத் தொடர்பு படுத்தாமல்… அந்த வழக்கை விசாரிக்க இயலாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான் ஜெய்…

அடுத்த நாள்… அவளுடைய வாய் வார்த்தையாக அவளது செயல்பாடுகளை அறிந்தால் மட்டுமே மேற்கொண்டு அவளுக்கு உதவியாக எதாவது செய்ய முடியும் என்ற சூழலில் அவளைச் சந்திக்க வந்த ஜெய்… அவள் மவுனம் சந்திக்கவே… கோபத்துடன் அங்கிருந்து சென்றான்…

இதற்கிடையில் அவளது கைப்பேசியை தமிழ் மூலமாக அவளிடம் சேர்த்திருந்தான் ஈஸ்வர்…

கோபத்துடன் வந்துவிட்டாலும் மனது கேட்கவில்லை ஜெய்க்கு… அவனது வேலையிலும் முழு மனதுடன் ஈடுபட இயலவில்லை… அவன்… கடமைக்கும்… பாசத்திற்கும் இடையில் பரிதவித்துக் கொண்டிருந்தான்…

அன்று அவளை மாமியின் வீட்டில் விடச் சென்றபொழுது…  “தான் பிரச்சனையே தலைக்கு மேல இருக்கறப்ப… ஊர் பிரச்சனையெல்லாம் இழுத்து விட்டுண்டு இருக்கா…” என்று மாமி சொன்ன வார்த்தைகள் அவனது செவிகளில் ஒலித்தது…

மலரைப் பொறுத்த மட்டும்… பாதுகாப்பான குடும்பச் சூழல்… வசதியான வாழ்க்கை முறை என அனைத்தும் கிடைக்கப்பெற்றவள்… குறிப்பிடும்படியாக பிரச்சினை என்று அவளுக்கு ஒன்றும் இல்லை..

ஆனால் அவளது சொந்தப் பிரச்சினை என்று மாமி குறிப்பிட்டது… அந்தக் கொலை வழக்குகளாக மட்டுமே இருக்க முடியும்…

அது ஜெய்யைத் தவிர… அவனது அத்தை சூடாமணிக்கு கூடத் தெரியாது…

மேலும் வேறு யாரோ ஒருவருக்காக  மலர்… எதோ  உதவி செய்து கொண்டிருக்கிறாள்… அதுவும் மாமிக்குத் தெரிந்தே இருக்கிறது…

எனவே மலரின் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்த நபர் மாமி ஒருவர்தான் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது…

அடுத்த நாள் மலர் அலுவலகம் சென்றுவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு… அவள் இல்லாத நேரமாக… மாமியைச் சந்திக்க அவர் வீட்டிற்கு வந்தான் ஜெய்…

“மாமி! மலர் இல்ல?” என்று தெரியாதது போல அவன் கேட்க…

அவனை அந்த நேரத்தில் எதிர் பார்க்காதவர்… முதலில் மிரண்டாலும்… பின்பு சமாளித்துக் கொண்டு…”வாப்பா… உக்காரு…” என்று சொல்லிவிட்டு…  “நேத்தே மலர்… உங்க அத்தை ஆத்துக்கு போயிட்டாளே… உனக்குத் தெரியாதா?” என்று மாமி கேட்க…

இருக்கையில் உட்கார்ந்தவாறே…  “இல்லையே மாமி… அவ என்னிடம் சொல்லல…” என்று சொல்லிவிட்டு… “பரவாயில்ல… ஆனால் நான் உங்களிடம் கொஞ்சம் பேசணுமே…” என்று ஜெய் சொல்லவும்…

“ஒரு நிமிஷம் இரு…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று… மாமி அவனுக்கு காஃபி கலந்து வந்து கொடுக்க… அதைப் பருகியவரே… “மாமி… மலர் இப்ப ஒரு பெரிய பிரச்சனைல மாட்டியிருக்கா… அது உங்களுக்கும் தெரியும்னு எனக்குத் தெரியும்…” என்று தீவிரமாக ஜெய் சொல்ல… அவன் முகத்தை யோசனையுடன் மாமி பார்க்கவும்… தொடர்ந்தவன்…

“நான் கேட்டதுக்கு… அவ ஒரு வார்த்தை கூட பதில் சொல்லல… நீங்களாவது சொல்லுங்க… அவ என்னதான் செஞ்சுட்டு இருக்கா?” என்று கேட்டான் ஜெய்…

“ஜெய்… உன்னைவிட மலரைப் பற்றி நன்னா தெரிஞ்சு வெச்சுண்டு இருக்கறவா யாரும் இல்ல… அதனால நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்ல… மலர் ஏதோ ஒரு காரணத்துனாலதான் உங்கிட்ட எதுவும் சொல்லல… இல்லையா…”

“அவ சொல்லாத ஒரு விஷயத்தை… அவ இங்க இல்லாதப்ப… நான் எப்படி உங்கிட்ட சொல்ல முடியும்… தப்பா நினைக்காதேடா கண்ணா!” என்று மாமி மென்மையாகச் மறுத்துவிட…

“பரவாயில்லை மாமி… நான் கிளம்பறேன்…” என்று சொல்லிவிட்டு ஜெய் எழுந்துகொள்ள…

“ஜெய்… ஒரு விஷயம் மட்டும் சொல்றேன்…”

“மலர் எல்லாருக்குமே நன்மை தரக்கூடிய ஒரு காரியத்தைத்தான் செஞ்சுண்டு இருக்கா…”

“பலபேரோட நிம்மதி அதில் அடங்கியிருக்கு! மத்தபடி… இந்தக் கொலை விஷயமெல்லாம் அவளுக்கும் ஒண்ணுமே புரியலடா… நீதான் பார்த்துக்கணும்…” என்று தெளிவாகச் சொல்லி முடித்தார் மாமி…

இந்த இக்கட்டில் இருந்து மலரை எப்படி வெளியில் கொண்டுவருவது என்று சிந்தித்தவன்… ஒரு முடிவுக்கு வந்தவனாக… ஈஸ்வரை கைப்பேசியில் தொடர்பு கொண்டு… அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஜெய் கேட்கவும்… அன்று மாலையே ‘கிராண்ட் டேஸ்’ நட்சத்திர விடுதியின் உணவகத்தில்… அவனைச் சந்தித்தான் ஈஸ்வர்… உணவை ஆர்டர் செய்துவிட்டு…

“சாரி…ண்ணா… உங்களைத் தொந்தரவு செய்யறேன்…” என்று ஜெய் சொல்ல…

“பரவாயில்ல ஜெய்… ஏதோ முக்கியமான விஷயமாக இருப்பதால் தானே நீ என்னைக் கூப்பிட்டிருக்க…” என்று ஈஸ்வர் சொல்லவும்… அதில் நெகிழ்ந்தவன்… நெற்றிப் பொட்டில் விரலால் தேய்த்தவாறே…

“இந்த மலர் செஞ்சு வெச்சிருக்க வேலை… புலி வாலை பிடிச்ச கதையா ஆகிப்போச்சு ணா!” என்றான் ஜெய்…

அதற்கு “ஏன் ஜெய்! அவளை யாராவது பிளாக் மெயில் செய்யறாங்களா? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்…” என ஈஸ்வர் நிதானமாகச் சொல்ல

அதற்குக் கொஞ்சம் நக்கல் கலந்த குரலில்… “நீங்க வேற அண்ணா… அவளையாவது… ப்ளாக் மெயில் செய்யறதாவது… பிறகு செய்யறவங்க உருப்படியா வீடு போய் சேரமாட்டாங்க…” என்று சொன்ன ஜெய்…

“இது வேற பிரச்சனை அண்ணா…” என்று சொல்லிவிட்டு… சமீபமாக நடந்துகொண்டிருக்கும் தொடர் கொலைகளையும்… அதில் மலரின் பெயர் சிக்கி இருப்பதையும்… குடும்பத்திற்குத் தெரியாமல் அவளை முன்பே ஒரு முறை அலுவலக ரீதியாக விசாரித்திருப்பதையும் சொன்னவன்…

“அவளோட மொபைலை நாங்க ட்ராக் பண்ணிட்டுதான் இருக்கோம்… ஆனால்… அஃபிசியல் கால்… பேமிலி கால் தவிர… சந்தேகப் படுற மாதிரி… அதில் அவ எதுவுமே பேசல…”

“அவளை நாங்க இன்னும் பெர்சனலா… ஃபாலோ பண்ண ஆரம்பிக்கல…” என்றவன்…

“அண்ணா… அந்த ரிசார்ட்ல நடந்த கொலைகள்ல… எங்களோட அடுத்த கட்ட விசாரணைல… அவ நேரடியா மாட்ட நிறைய சான்ஸ் இருக்கு…”

“அப்படி அவளோட பேரை சொல்லிட்டாங்கன்னா…… அரெஸ்ட் பண்ணி… ரிமேண்ட்ல எடுத்துதான் விசாரிக்க வேண்டியதாக இருக்கும்… வேற வழியே இல்ல…”

“இது… தொடர் கொலைகளா இருக்கு… சோ… முன் ஜாமீனெல்லாம் வேலைக்கே ஆகாது… சிம்பிளா தள்ளுபடி   செஞ்சிடுவாங்க…”

“அது ஒரு மினிஸ்டருக்கு சொந்தமான ரிசார்ட்… அங்கே பல பெரிய இடத்து பசங்களெல்லாம் வந்து போறாங்க… அதனால… பல விஷயங்களை மூடி மறைக்கத்தான் ட்ரை பண்ணுவாங்க…”

“அவர்கள் தப்பிக்க… மலரைச் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தாலும்… ஆச்சரியப் படுவதற்கில்லை…”

“அன்றைக்கு யாரைச் சந்திக்க… அங்கே போனாள்னு… சொல்ல மாட்டேங்குறா அந்த ராட்சசி…”

“அங்கே வேலை செய்யும் செக்யூரிட்டி… உங்களை மலருடன் பார்த்ததை… தெளிவா சொல்றான்…”

“அவளை சேஃப் சோன் ல கொண்டவந்தால் தான்… என்னால என் வேலையை நிம்மதியாகப் பார்க்க முடியும்…” என்று நிலைமையை விளக்கியவன்…

“அதனால… அவ உங்களோடதான் அங்கே வந்தாள்னு ஓப்பனா சொன்னால்… அவ… தப்பிக்க வாய்ப்பிருக்கு…”

“இந்த விஷயத்தில் உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று நேரடியாக கேட்டான் ஜெய்…

அதில் ஒரு நொடி முகம் கறுத்த ஈஸ்வர்… “இதனால… எவ்வளவு பிரச்சினை வரும்னு… நீ யோசிச்சியா ஜெய்!” என்று கேட்க…

“இதுல நான் யோசிக்க என்ன இருக்கு…ணா…”

“யாராவது கேள்வி கேட்டல்… நீங்க மலரை லவ் பண்றதா சொல்லுங்க…” என்று சர்வ சாதாரமாக ஜெய் சொல்லவும்…

“வாட் டூ யூ மீன் ஜெய்! நீ போய் இப்படி பேசுற?” என்ற ஈஸ்வரின் குரலில் சற்று கடுமை ஏறியிருந்தது…

“உண்மையைத்தானே சொல்லச் சொன்னேன்… அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க அண்ணா?” என்று பதறாமல் ஜெய் சொல்லவும்… வாயடைத்துப் போனான் ஈஸ்வர்… தொடர்ந்த ஜெய்…

“அண்ணா… பேசிக்கலி நான் ஒரு போலீஸ்காரன்… மலர் விஷயத்தைப் பொறுத்த மட்டும்… கண்ணால் பார்க்காமல் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியலியே தவிர… உங்க விஷயம் அப்படி இல்லை”

“நேற்று… மலருக்காக… உங்க கண்ணுல நான் பார்த்த வலி… அது பொய்யில்லையே?”

“உங்க தங்கை… உங்களிடம் சொன்ன பிறகு… அதை அப்படியே விடாமல்… எதுக்காக மலரிடம் பேசினீங்க?”

“எதுக்கு விடாமல்… பின்தொடர்ந்து போய்… அவளை காப்பாற்றினீங்க?”

“நான் கூப்பிட்ட உடனே எதுக்கு… இப்ப இங்க வந்து பேசிட்டு இருக்கீங்க?” எனக் கேள்விகளாய் கேட்டுத்தள்ள…

எந்தக் கேள்விக்கும் விடை இல்லை ஈஸ்வரிடம்… காதல் என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர!

அதை மறுக்கவும் இல்லை… அதே சமயம் ‘ஆமாம்’ என்று அதை ஒப்புக்கொள்ளவும் இல்லை ஈஸ்வர்…

‘இப்படி வெளிப்டையாகவா நடந்துகொண்டோம்?’ என்று இருந்தது ஈஸ்வருக்கு…

“எனக்கு ஒரு நாள்… யோசிக்க டைம் குடு ஜெய்…” என்று முடித்துக்கொண்டான் அவன்…

**********************

அடுத்த நாள் முழுவதும் யோசித்து… அணிமா மலரைப் பற்றி ஒருவரும் தவறாக ஒரு வார்த்தை பேச இடம் கொடுக்காத வண்ணம்… ஒரு முடிவை எடுத்திருந்தான் ஈஸ்வர்…

அதைச் செயல் படுத்த… அவனது அம்மாவுடன்…  செங்கமலம் பாட்டியின் அறைக்குச் சென்றவன்… “பாட்டி… ஒரு சந்தோஷமான விஷயம்…” என்றவன்…

“எனக்கு… உங்க தங்கையின் பேத்தியை… ரொம்ப பிடிச்சிருக்கு… அதனால… நீங்களே அவங்ககிட்ட பேசிடுங்க…” என்று சொன்னான் ஈஸ்வர்…

அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சாருமதியோ.. ‘மகனா இப்படிச் சொன்னான்?’ என்று மகிழ்ச்சியில்… அதிர்ந்து போய் நிற்க…

பாட்டியோ… ஆராய்ச்சியுடன் பேரனின் முகத்தைப் பார்த்தவாறே… “யாரைப்பா சொல்ற… புரியலையே?” என்று மலரின் பெயரை ஈஸ்வரின் வார்த்தையாகச் சொல்ல வைக்கும் எண்ணத்தில்… கேட்டார்…

அதைப் புரிந்துகொண்ட ஈஸ்வர்… இதழ் கடையில் அடக்கப்பட்ட சிரிப்புடன்… ‘எல்லாம்… நம்ம மலர்தான் பாட்டி…” என்க…

‘ஐயோ! அவளா… அவ சரியான திமிறு பிடிச்சவ தங்கம்… அவ உனக்குச் சரிப்பட்டு வரமாட்டா! வேண்டாம்… விட்டுடு…” என்று பாட்டி வம்பிழுக்க…

“அவ சரியா வருவாளா… இல்ல வரமாட்டாளான்னு நான் பார்த்துக்கறேன்… நீங்க சரோஜா பாட்டிகிட்ட பேசுங்க… அவ்வளவுதான்” என்று முடித்தான் ஈஸ்வர்…

கலகலவென சிரித்த பாட்டி… “ஐயோ… அந்த ரவுடிகிட்ட மாட்டிட்டு… நாமெல்லாம் என்ன பாடு படப்போறோமோ?” என்றார் மகிழ்ச்சியாகவே…

பாட்டியின் பேச்சில் சாருமதியும் சிரித்துவேட்டார்…

அடுத்த நாள் காலை… அவரது தங்கையான… மலரின் சரோஜா பாட்டியை அழைத்து… பேரனின் முடிவைச் சொன்ன செங்கமலம் பாட்டி… அன்றே நாள் நன்றாக இருப்பதால்… சிறிது நேரத்தில் மருமகள் மற்றும் பேரனுடன்… அவர்கள் வீட்டிற்கே வந்துவிடுவதாகவும்… அனைத்தையும் நேரிலேயே பேசிக்கொள்ளலாம் எனவும் சொல்லிவிட்டார்…

சொன்னதுபோல்… சிறிது நேரத்திற்கெல்லாம்… அவர்கள் வீட்டிற்கு வந்தும் விட்டார்… பேரன் மற்றும் மருமகளுடன்…

ஜீவிதா இரு தினங்களுக்கு முன்பே… அங்கே வந்துவிட்டதால் அவளும் அங்கே இருந்தாள்…

சூடாமணியின் கெஞ்சலினால்… அவளது அத்தை வந்து பெண் கேட்ட தினத்தின் நினைவில்… நிலைமையைச் சுமுகமாக கையாள வேண்டிய கட்டாயத்தில் மலர் இருந்தாள்…

அனைவரையும் பார்த்து… வரவேற்கும் விதமாகத் தலையை ஆட்டி வைத்தாள்… அங்கே வந்த மலர்…

“கண்ணம்மா… நீதாண்டா பதில் சொல்லணும்… எங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோசம் கண்ணு!” என்று தாத்தா சொல்லவும்…

என்ன சொல்லுவது என்று புரியாமல்… மலர் அமைதி காக்க… சூடாமணியே பேசினார்… “இதுல… அவ சொல்ல என்ன இருக்கு… எல்லாருக்கும் சம்மதம்னா… அவளுக்கும் சம்மதம்தான்!” என்று சொன்னார்… ‘அதில் நீ சம்மதம் சொல்லித்தான் ஆக வேண்டும்’ என்ற மறைமுக செய்தி மலருக்கு இருந்தது…

உடனே தொண்டையை செருமிக்கொண்டு… “நான்… ஹீ…” என்றவள்… “இவரிடம்… கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள் மலர்…

“பரவாயில்ல மலர்… தனியா பேச என்ன இருக்கு… இங்கேதான் பெரியவங்க எல்லாரும் இருக்காங்களே… எது சொல்வதானாலும் இங்கிருந்தே சொல்லு” என்று அன்று அவள் பேசிய வார்த்தைகளை அவளுக்கே திருப்பினாள் ஜீவிதா…

‘என்ன இருந்தாலும்… நீ இன்னும் கொஞ்சம் வளரனும் கண்ணு’ என்பதுபோல் அவளை ஒரு பார்வை பார்த்தவள்…

“அண்ணீ… இந்த கல்யாணம் நடக்க வேண்டாம்னு நினைச்சா… இங்கேயே பேசிடுவேன்… நடக்கணுமா இல்ல வேண்டாமான்னு முடிவு எடுக்கணும்னா… நான் உங்க அண்ணாவிடம் தனியா பேசணும்” என்று மலர் குறி வைத்துத் தாக்க… அமைதியானாள் ஜீவிதா…

பின்பு பெரியவர்கள் அதற்கு சம்மதிக்கவும்… ஈஸ்வருடன் தனிமையில் பேச…  மாடி தோட்டத்திற்கு அவனுடன் வந்திருந்தாள் மலர்…

அவளையே கண்ணை எடுக்காமல் சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வர்… “சொல்லு மலர்… என்ன பேசணும்?” என்று கேட்க…

“இந்தக் கல்யாணத்துக்கு… இப்ப என்ன அவசரம்? எனக்குக் காரணம் தெரியணும்” என்று காரம் கலந்த குரலில் கேட்டாள் மலர்..

அவளது வலது கரத்தைப் பற்றி… தன் அருகில் இழுத்தவாறு… தலை சாய்த்து… அவளது கண்களைப் பார்த்து… “காதல்தான்… வேற என்ன?” என்று அதே காதலுடன் ஈஸ்வர் சொல்லவும் அதிர்ந்தவள்…

கையை விடுவித்துக்கொள்ள முயன்றவாறே… “என்ன… நக்கலா?” என்று மலர் கேட்க…

“நக்கலா! அதெல்லாம் இல்ல… உண்மையிலேயே காதல்தான்… எனக்கு உன் மேல இருக்கும் காதலை… இப்ப என்னால நிரூபிக்க முடியாது… ஆனால் உனக்கு என் மேல் இருக்கும் காதலை… இப்பவே ப்ரூவ் பண்ண முடியும்” என்றவாறே… பற்றியிருந்த கையை மேலே தூக்கி… அவளது மணிக்கட்டின் அருகில் காண்பித்தவன்… “லவ் இல்லனா… இதுக்கு பேரு என்னம்மா? நீதான் கொஞ்சம் சொல்லேன்!” என்று கேட்டான் ஈஸ்வர்… தீவிரமாக…

தவறு செய்துவிட்டு… ஆசிரியரிடம் மாட்டிக்கொண்ட பிள்ளை போல… சங்கடமாக நெளிந்தாள் மலர்…

அன்றொருநாள்… ஆட்டோகிராப்பாக ஜதீஸ்வரன் இட்ட அவனது    கையெழுத்து… அவள் கையில் டாட்டூவாக மாறியிருந்தது… அதாவது அழியவிடாமல்… அப்படியே அதை பச்சை குத்தியிருந்தாள் அணிமா மலர்…