அணிமா-40
கேனரி வார்ப்! ‘ஸ்கை ஸ்க்ராப்பர்ஸ்’ எனப்படும் விண்ணைத் தொடும் மிக உயரமான கட்டிடங்களை தன்னுள் அடக்கிய பகுதி.
இரு தினங்களாக அங்கேதான் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.
ஈஸ்வர் அங்கே சென்ற பிறகு கிட்டத்தட்ட பன்னிரண்டு நாட்கள் லண்டன் மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் படத்தைப் பதிவு செய்தவர்கள், இறுதியாக சில காட்சிகளை அந்த இடத்தில் படமாகிக்கொண்டிருந்தனர்.
படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவர்க்கும் அங்கேயே இருக்கும் ஒரு உணவகத்திலிருந்து உணவு வரவழைக்கப்பட்டது.
மதிய உணவை உண்ணும் பொழுதுதான் அந்த வாலிபனைக் கவனித்தான் ஈஸ்வர்.
ஈஸ்வருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தான் அவன்.
ஒரு பதினெட்டிலிருந்து இருபது வயது இருக்கலாமோ என எண்ணவைக்கும் தோற்றம்.
கிட்டத்தட்ட வெள்ளையர்களுடைய நிறத்திற்கு இணையான நிறத்தில், வெட வெடவென ஆறடிக்கும் வளர்ந்திருந்தான் அவன். அவனுடைய முக அமைப்பு, அவன் இந்தியன் என்பதைச் சொல்லாமல் சொன்னது. அவனது முகத்தில், மெல்லிய கோடாக மீசை முளைத்திருந்தாலும் குழந்தைத்தனம் இன்னும் மீதம் இருந்தது.
அவனைப் பார்க்கும் பொழுதே மனதை எதோ செய்தது ஈஸ்வருக்கு.
அவனிடம் எதாவது பேசியே தீரவேண்டும் என்ற உந்துதலில், “ஹை யங் மேன்! லெட் மீ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்!” என்று ஈஸ்வர் கேட்க, ஏனோ பதட்டம் கூடியது அவனது முகத்தில். கைகள் நடுங்கியதால், மிகவும் முயன்று அவன் கொண்டுவந்த ‘மீசோ சூப்’பை கவனத்துடன் ஈஸ்வருக்குப் பரிமாறிக்கொண்டே, சுற்றும் முற்றும் பார்த்தவாறு, “சாம்! ஐ ஆம் சாம் சர்! என்றான் கொஞ்சம் கொச்சையான ஆங்கிலத்தில்.
பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கே உரித்தான வித்தியாசமான அவனது குரலால், ஈஸ்வரின் மனதில் ஒரு நெருடல் உண்டானது.
அவன் சென்ற பிறகும் கூட அந்த புதியவனின் முகம் ஈஸ்வரின் கண்ணிற்குள்ளேயே நின்றது.
இரவு வெகு நேரம் உறக்கம் வராமல் தவித்த ஈஸ்வர், போராடி ஒரு கட்டத்தில் உறங்க, அவனுடைய கனவு முழுவதும் ஜீவனின் முகமும் சில ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்த டிப்புவின் முகமும் மாறி மாறி வந்து இம்சிக்க, தொடர்ந்து…”ஹீரோ! என் பிள்ளையை எப்படியாவது என்கிட்ட கொண்டுவந்து சேர்த்திடுங்க… ப்ளீஸ்! ப்ளீஸ்!” என்ற மலருடைய கெஞ்சல் குரலில் பதறி எழுந்தான் ஈஸ்வர்.
அவனுடைய மனதின் நெருடலுக்குக் காரணம் புரிந்தது அவனுக்கு.
அடுத்த நாள் உணவு இடைவேளைக்காகக் காத்திருந்தான் ஈஸ்வர்.
‘ஜூப்ளி பார்க்’ என்ற பூங்காவில் அன்றைய படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.
அவன் எதிர்பார்த்த உணவு இடைவேளையும் வந்தது. ஆனால் அன்று ‘சாம்’க்கு பதிலாக அவனை விடவே இளையவனாகத் தோன்றிய வேறு ஒருவன் வந்திருந்தான். மனம் குறுகுறுக்க உணவை உண்டு முடித்தான் ஈஸ்வர்.
ஆனால் எதிர்பாராதவண்ணம் அவன் உண்ட தட்டுக்களை எடுக்க அங்கே வந்தான் சாம்.
ஈஸ்வர் தன்னை பார்க்கிறானா என அவனுடைய முகத்தையே சாம் கூர்ந்து கவனிக்க, கொஞ்சம் அவனைக் கண்டுகொள்ளாத பாவத்திலிருந்தான் ஈஸ்வர்.
தட்டுக்களை எடுத்துக்கொண்டு தயக்கமும் ஏமாற்றமுமாகி, திரும்பத் திரும்ப ஈஸ்வரைப் பார்த்துக்கொண்டே அவன் அங்கிருந்து செல்லவும், “டிப்பு!” என்றான் ஈஸ்வர் அழுத்தமாக!
அவனுடைய கையிலிருந்த பீங்கான் தட்டுகள் கீழே விழுந்து சிதற… “ஈஸ்வர் சின்நாணா (சித்தப்பா)!” என்றவாறு அவனை வந்து அணைத்துக்கொண்டான் அந்த பதினான்கு வயது சிறுவன் டிப்பு!
அவன் தட்டுகளைக் கீழே போட்டு உடைத்ததை தொலைவிலிருந்து பார்த்த, அந்த உணவகத்தின் மேற்பார்வையாளர் அங்கே வந்து டிப்புவை ஆங்கிலத்தில் திட்டத்தொடங்க, இடை புகுந்த ஈஸ்வர், “இட்ஸ் மை ஃபால்ட்! ஐ வில் பே போர் இட்!” என்று சொல்லவும், மரியாதையுடன் அங்கிருந்து சென்றான் அவன், டிப்புவை கோபப் பார்வை பார்த்தவாறே.
அன்று இரவே, யாருக்கும் தெரியாமல் டிப்புவை, அவன் வேலை செய்யும் உணவகத்தின் அருகிலேயே சென்று சந்தித்தான் ஈஸ்வர்.
ஒரு வருடத்திற்கு முன்பாக, சந்தோஷ்(சந்தீப்) அவர்களுடைய ஊருக்கு வந்த பொழுது, அவன் கையில் வைத்திருந்த கைப்பேசி டிப்புவின் கவனத்தைக் கவர, அதில் விளையாட கற்றுக் கொடுப்பதாக அவன் ஆசை வார்த்தை காட்டவும், அதற்காகவே அவனுடன் பழகத் தொடங்கினான் டிப்பு.
ஒரு சில நாட்கள் கடந்த நிலையில், அங்கே வந்த புதியவனை டிப்புவிற்கு ‘சங்கர்’ என்று அறிமுகம் செய்த சந்தோஷ், “அவனுடன் சென்று சில தினங்கள் வேலை செய்தால் அதே போன்ற ஒரு கைப்பேசியை உன்னாலும் வாங்க முடியும்” என்று ஆசை வார்த்தை காட்டவும், வேறு எதுவும் தோன்றாமல் அவனுடன் சென்றான் டிப்பு.
அதன் பின் அவன் டிப்புவை அஞ்சு மேத்தாவிடம் ஒப்படைத்துவிட்டான்.
அவன் நிலைமையின் தீவிரத்தை உணரும் முன்னதாகவே லண்டன் வந்து சேர்ந்திருந்தான் டிப்பு.
அவனுடன் சேர்த்து சூர்யா என்ற சிறுவனும் அங்கே கொண்டுவந்து வேலைக்காக விடப்பட்டிருப்பதையும் சொன்னான் டிப்பு.
அவனைப் போன்ற மேலும் சிலரும் அங்கே வேலை செய்வதைப் பற்றிச் சொன்னவன், அந்த உணவகத்தின் ஒரு பகுதியிலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஊதியம் எனப் பெயருக்கு ஒரு தொகையைக் கொடுக்கும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனம், தங்குவதற்கும், உணவிற்கும் என்று அதையும் பறித்துக்கொள்ளும்.
அவர்களுடைய வயதிற்கு அதிகமாக வேலையைக் கொடுப்பதுடன், அவர்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்வார்கள் அங்கே இருப்பவர்கள்.
பாஸ்போர்ட், விசா என எதுவும் இல்லாமல் அவர்கள் அங்கே தங்கி இருப்பதால், வெளியில் எங்காவது சென்றால் மிகவும் ஆபத்தாக மாறிப்போகும் சூழ்நிலை இருக்கவே, வேறு வழி தெரியாமல், பெற்றோரின் நினைவில் அதிகம் தவிப்பதாக சொல்லி முடித்தான் டிப்பு.
அனைத்தையும் வேதனையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஈஸ்வர், “அஞ்சு மேத்தாவைப் பற்றி உனக்கு எதாவது தெரியுமா?” என ஆங்கிலத்தில் கேட்க, “அந்த லேடி கொஞ்ச நாளா லண்டன்லதான் இருக்காங்க! அவங்க ஃப்ரெண்ட்ஸ் கூட நான் வேலை செய்யும் ரெஸ்டாரண்டுக்கு, அடிக்கடி வருவாங்க!” என்று ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி முடித்தான் டிப்பு.
அவள் அங்கே வந்தாள் என்றால் தன்னை தொடர்பு கொள்ளச் சொல்லிவிட்டு, அவனுடைய எண்ணைக் கொடுத்தான் ஈஸ்வர்.
அவர்களுடைய உரையாடலுக்கு இடையில், விபத்தில் இறந்து போன மல்லிக்குடைய நண்பனின் மகன்தான் டிப்புவுடன் வேலை செய்யும் சூர்யா என்பதைப் புரிந்துகொண்டான் ஈஸ்வர்.
டிப்புவை அப்பொழுதே தன்னுடன் அழைத்துச்செல்லும் ஆவல் இருந்தாலும் அது ஆபத்தை விளைவிக்கும் என்பது தெளிவாகப் புரியவும், அதைக் கைவிட்டவன், உடனடியாக ஜெய்யை தொடர்பு கொண்டு அனைத்தையும் சொல்லி, அங்கே இருக்கும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கும் வழிவகை செய்யுமாறு வலியுறுத்தினான்.
அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவகாரம், அதுவும் இரு நாடுகள் சம்பந்தப்பட்டது என்பதால் பிள்ளைகளை மீட்பதில் தாமதம் ஆகலாம் என்பதினாலும், விஷயம் சிறிது வெளியே கசிந்தாலும் அனைவருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினாலும், அவனுடைய படப்பிடிப்பு முடிந்து, அந்த குழு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்ட பிறகும், அங்கேயே தங்கியிருந்தான் ஈஸ்வர், உடன் தமிழும்
அரசாங்கத்தில் மேலிடத்தில் பேசி, இரு நாட்டுத் தூதரகத்திலும் இந்த விஷயத்தைக் கொண்டு சென்று, இன்டர்போல் உதவியுடன், அந்த அஞ்சு மேத்தாவை, குறி வைத்துப் பிடித்தனர்.
அவள் மூலமாக அவர்களுடைய கும்பலின் தலைவனின் பெயர் கஜ்ஜூ பாய்! என்பதும் தெரிய வந்தது.
அதற்குள்ளாகவே சமூக விரோதமாக அங்கே தங்கவைக்கப்பட்டிருந்த பிள்ளைகள் எல்லோரும் மீட்கப்பட்டிருந்தனர்.
அதுவரை அது சம்பந்தமாக அலைந்துகொண்டிருக்கவே, கைப்பேசியைக் கூட உபயோகிக்க இயலவில்லை ஈஸ்வரால்.
சட்டரீதியான அனைத்து விதிமுறைகளும் முடித்து, அஞ்சு மேத்தா மற்றும் மீட்கப்பட்ட சிறுவர்கள் எல்லோரும், சென்னை வந்து சேர சில தினங்கள் பிடிக்கலாம் என்ற காரணத்தினால், சிறுவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்கிற உத்திரவத்தின் பேரில் சென்னை வந்து சேர்ந்தான் ஈஸ்வர், மகளை தன் கைகளில் ஏந்த.
***
அடுத்து வந்த நாட்கள், அனைத்து திசையிலிருந்தும் மகிழ்ச்சியை வாரி வந்து இறைத்துக்கொண்டிருந்தது ஈஸ்வருடைய வாழ்க்கையில்.
மகளைத் தொட்டிலில் போடும் வைபவம், வெகு சிறப்பாக நடந்தேறியது.
அவர்கள் வாழ்க்கையின் முக்கிய பங்கு வகிக்கும் நல்ல மனிதர்கள் அனைவரும், கருணாகரன் உட்பட அதில் கலந்து கொண்டு அவனது செல்வ மகளை வாழ்த்திச் சென்றனர்.
குமாருடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்று, தெளிந்த மன நிலையில் சோமய்யாவும், முகம் நிறைந்த புன்னகையுடன் சக்ரேஸ்வரியும், தாய் தந்தையைச் சேர்ந்த நிம்மதியில் டிப்புவும், நிறைத்த மனதுடன் மல்லிகார்ஜூனும் அந்த வைபவத்தில் மகிழ்வுடன் கலந்து கொண்டனர்.
அஞ்சு மேத்தாவை ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்த கையுடன், பிள்ளைகளைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் பரபரப்பான வேலைகளுக்கு நடுவிலும் அங்கே வந்திருந்தான் ஜெய்.
அந்த தளிரை மடியில் வைத்துக்கொண்டு அதன் நெற்றி, காது, கை விரல்கள், பாதம் என மென்மையுடன் வருடியவன், அதில் மெய் சிலிர்த்துபோனான்.
பாட்டிகளும், கொள்ளுப்பாட்டிகளும் அத்தைகளுடன் சேர்ந்து, அந்த குட்டி தேவதையின் ஜாடை யாரைப் போல இருக்கிறது எனப் பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருந்தனர்.
கண்டிப்பா அவ ஈஸ்வர், சுபா ஜாடைதான் என அதற்குத் தீர்ப்புக் கூறினார் சுசீலா மாமி.
அப்பொழுதுதான் நினைவு வந்தவராகச் செங்கமலம் பாட்டி, “மாமி, நீங்க எங்க குடும்பத்துக்காக எவ்வளவோ நன்மை செஞ்சிருக்கீங்க.
அதுக்கெல்லாம் நான் உங்களுக்கு நிறைய நன்றி சொல்லணும்… முக்கியமா ஈஸ்வர் கல்யாணம் நடந்ததற்கு ஒரு வகையில் நீங்கதான் காரணம்!” என்றவர்,
“ஈஸ்வருக்கு மலரிடம் ஒரு விருப்பம் இருக்குன்னு என் மனசுக்கு புரிஞ்சது. ஆனால் எனக்கு மலரின் விருப்பத்தைப் பத்தி ஒரு முடிவுக்கு வர முடியாம, நான் குழம்பிட்டு இருந்த சமயம், ஈஸ்வர் மலரிடம் போன் பேசிட்டு, அந்த கால் கட் ஆகாமலிருந்ததால், நீங்க அவகூட பேசியதை கேட்க நேர்ந்தது!
மலர் ஜீவனை கொஞ்சிட்டு இருந்தா.
அந்த நேரத்தில் ஜீவனை பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. யாரோ ஒரு குழந்தைன்னு நினைச்சேன்.
அப்ப நீங்க சொன்னீங்க, ‘ஏண்டி பூக்காரி, இந்த வேலையெல்லாம் விட்டுட்டு, உன் மனசுல இருக்கற எல்லாத்தையும் முதல்ல ஈஸ்வர் கிட்ட சொல்லு!
அவனைப் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரி தெரியறது. உன்னை புரிஞ்சிப்பான்.
சீக்கிரமே உங்க கல்யாணமும் நடக்கும். அதுதான் எல்லாருக்குமே நல்லது!’ ன்னு.
அதுக்கு ‘எல்லாம் நடக்கும்போது நல்ல படியா நடக்கும். இப்ப நீங்க ஃப்ரீயா விடுங்க’ ன்னு மலர் சொன்னாள்.” என அதைக் குறிப்பிட்டவர்,
“அதன் பிறகுதான் மலரோட மனசும் எனக்கு புரிஞ்சது!
ஈஸ்வர் கல்யாணத்தைப் பற்றி பேச்சை எடுக்கவும், உடனே சம்மதம் சொன்னேன்” என அனைத்தையும் சொன்னார், ‘நான் எப்பவுமே கெத்துதான்!’ என்பது போல மலரைப் பார்த்தவாறே!
‘ராஜமாதா இருங்க உங்களை வெச்சுக்கறேன்!’ என மலர் அவரை பதிலுக்கு ஒரு பார்வை பார்த்துவைத்தாள்.
அனைவருமே அவரவர் துணையுடன் இருக்க, ‘இவளைப் பத்தி யோசிச்சாதான் எனக்கு வேதனையா இருக்கு’என சுபாவைப் பற்றி பாட்டி மாமியிடம் குறைபட்டுக்கொள்ளவும், அதை உணர்ந்தவளாக ஈஸ்வரிடம் வந்த சுபா, அவன் அருகில் உட்கார்ந்துகொண்டு,
“எனக்குத் திருமண வாழ்க்கையில் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்ல…
ஆனால் எனக்கு இப்ப அசோக் என் கூட வந்து வாழணும்னு தோணுது!
அவர் எதுக்காக என்னை ஏமாற்றி கல்யாணம் செய்தாரோ, அவருக்கு இனி அது கிடைக்கக் கூடாது.
எதை நினைச்சு அவர் பயந்தாரோ… அவருக்கு அதுதான் கிடைக்கணும்.
அதாவது அவர் என்னைத் தாண்டி வேறு எங்கேயும் போகக்கூடாது.
என் பிள்ளைக்கு அப்பாவாக மட்டும், என் வாழ்க்கையில அவர் இருக்கனும் ஒழுக்கத்தோட!
ஏன்னா என் பிள்ளை நாளைக்கு தலை நிமிர்ந்து இந்த சொசைட்டில வாழணும்.
அதை உன்னால செய்ய முடியும்னு எனக்கு தெரியும்! ப்ளீஸ் புரிஞ்சிக்கோ!” என்றாள் விளக்கமாக, தெளிவாக! அவளுடைய சகோதரன் அதை செய்து முடிப்பான் என்ற நம்பிக்கையுடன்.
“புரியுது சுபா! உன் விருப்பப்படியே நடக்கும்!” என்று ஒரே வரியில் முடித்தான் ஈஸ்வர்.
***
அந்த மிகப் பெரிய அரங்கமே, மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அங்கே நடிகர் நடிகையர் தொடங்கிப் பல தொழில்நுட்ப கலைஞர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட, சிறந்த வில்லன் நடிகருக்கான விருதைப் பெற, ஜெகதீஸ்வரனை மேடைக்கு அழைத்தனர்.
அவனுக்கு விருது வழங்குவதற்கென, அவர்கள் அழைத்த நபரின் பெயரைக் கேட்டதும், மனதிற்கு பெருமையாகவும் இதமாகவும் உணர்ந்தான் ஈஸ்வர், காரணம் திரைத்துறையில் அவருக்கு இருந்த பயம் கலந்த மரியாதையும், வெளி உலகிற்கே தெரியாமல் அவரது தொண்டு நிறுவனம் மூலம் அவர் செய்து வரும் பல நல்ல செயல்களும்.
“இந்த விருதை எனது ஆசான் கோல்டன் குமார் மாஸ்டர் அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்” என்று சொல்லிவிட்டு, ‘பாக்கியவதி பைனான்ஸ் ஷ்யாமள பிரசாத்!’ கையால் ஈஸ்வர் விருது வாங்கவும், அந்த அரங்கமே கர ஒலியால் அதிர்ந்தது.
மீண்டும் உயிர்த்தெழு படத்தைத் தொடர்ந்து, லக்ஷ்மி சினிமாஸ் நிறுவனத்திற்காக ஈஸ்வர் கதாநாயகனாக நடித்திருந்த படம், திரையிடப்பட்டு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்க, அவன் எது செய்தலும் அதை கொண்டாடவென, அவனுக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் உருவாகி இருந்தது.
அதுவும் அன்று அவனுடன் ஷியாம் வேறு! இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு மரியாதை நிமித்தம் சில வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளவும், அங்கே எழுந்த ஆரவாரம் அடங்கவே சில நிமிடங்கள் பிடித்தது.
அந்த அரங்கத்திலேயே உட்கார்ந்து, அதை நேரில் பார்த்துக்கொண்டிருந்த குமாருடைய கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீர், காட்சிகளை மறைத்ததென்றால், மலருடன் சேர்த்து, வீட்டிலிருந்தவாறே நேரலையில் அதைப் பார்த்துக்கொண்டிருந்த குடும்பத்தினர் அனைவர்க்கும், விண்ணை முட்டும் அளவிற்கு மகிழ்ச்சி! மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமே.
***
ஐந்து வருடங்களுக்குப் பிறகு.
மனைவியிடம், ‘செஞ்சிடுவோம்!’ எனச் சொன்னதுபோலவே ஈஸ்வர், விவசாயத்தில் பல புதிய முயற்சிகளைச் செய்து, அதில் வெற்றியும் கண்டு பலருக்கும் முன் மாதிரியாக விளங்கினான், திரைப்படங்களில் நடித்துக்கொண்டே.
அந்த வேலைகளில் சுபாவுடன் இணைந்துகொண்டு அவனுடைய மாமனாரும், மாமனாருக்கு மாமனாரும் அவனுக்குத் துணையாக நின்றனர் என்றால் மிகை இல்லை.
சுபா விரும்பியதை போலவே அசோக்கை, அவளுடன் பிணைத்து வைத்திருந்தான் ஈஸ்வர், அவனால் அங்கிருந்து மீள முடியாத அளவிற்கு. சுபாவை மீறிச் செயல்பட இயலாத நிலையில் அசோக் இருந்தான் என்றால், ஈஸ்வரை நேருக்கு நேர் பார்க்கக் கூட பயந்து நடுங்கினான் அவன்.
அவனுடைய வீட்டிற்கு அருகிலேயே ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்து, அங்கேயே சுபாவை குடும்பத்துடன் குடி வைத்து, அவளைத் தனது பாதுகாப்பு வட்டத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டான் ஈஸ்வர்.
தாய்மாமனை மட்டுமே அவனுடைய ஹீரோவாக எண்ணியவன், தகப்பன் அருகிலேயே இருந்த பொழுதும் அவனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல், தன்னையும் அறியாமல் அவனை உச்சபட்சமாகத் தண்டித்துக்கொண்டிருந்தான் ஜீவன்.
ஈஸ்வர் தொடங்கிய தொண்டு நிறுவனத்தை, அதன் நோக்கம் திசை மாறாது திறம்பட நடத்திக்கொண்டிருந்தாள் அணிமா மலர்.
ஜெய் தனது பயணத்தில் நெடுந்தூரம் கடந்திருந்தான்.
நெடிய நான்கு வருட தேடுதல் வேட்டைக்குப்பிறகு, அவனிடம் சிக்கினான் ‘கஜ்ஜூ பாய்’ குழந்தைகள் கடத்தல் கும்பலின் தலைவன்.
படிப்படியாக பல வெற்றிகளும், விருதுகளும், பதவி உயர்வும் அவனை தேடி ஓடி வந்தன இந்த ஐந்து வருடங்களில்.
***
பள்ளி வகுப்புகள் முடிந்து, பிள்ளைகள் பெற்றோரைத் தேடி ஓடிவர, பேருந்துகள் நிறுத்தும் இடத்தை நோக்கிச் சென்றவள், அங்கே ஓரமாகக் குவித்துவைக்கப்பட்டிருந்த கருங்கற்களில் ஒன்றைக் கையில் எடுக்கவும், “ஐயோ! இந்த தாமரை ஏதோ ப்ராப்லம் பண்ணப்போறாபோல இருக்கே!” என எண்ணியவாறே அவளை நோக்கி ஓடிவந்தான் ஜீவன், “தாமரை! எதுவா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கலாம்! வெயிட்!” என்று கத்திக்கொண்டே!
அதற்குள் அவள் வீசிய அந்த கல், பேருத்து ஓட்டுநர் ஒருவரின் நெற்றியைப் பதம் பார்த்து, அருகிலிருந்த பேருந்தின் கண்ணாடியையும் நொறுக்கி இருந்தது!
***
மகளுடைய பராக்கிரமத்தைப் பறை சாற்ற, உடனே பள்ளிக்கு வருமாறு ஈஸ்வரை அழைத்திருந்தார் அந்த பள்ளியின் முதல்வர். பிரச்சினை பெரியது என அவர் நம்பியதால்.
செந்தாமரையைப் பற்றி நன்கு அறிந்ததால், கொஞ்சமும் கலவரம் அடையாமல் அங்கே வந்தான் அவளுடைய அப்பா ஈஸ்வர்.
“உங்க டாட்டர் செஞ்ச வேலையை பாருங்க! அவளுக்கு பேரண்ட்ஸ் பிக் அப் தானே? அவ ஏன் ஸ்கூல் பஸ் நிறுத்தற இடத்துக்கு போகணும்?” என சற்று கடுமையுடன் கேட்டார் அந்த பெண்மணி.
ஒன்றாம் வகுப்பில் படிக்கும் தாமரையும், ஏழாம் வகுப்பில் படிக்கும் ஜீவனும் அவரது அறையில் அலட்சியத்துடன் நிற்க, அங்கே வரவழைக்கப்பட்ட அந்த ஓட்டுநருக்கு நெற்றியில் தையலிட்டு, கட்டுப் போடப்பட்டிருந்தது. பீதியுடன் நின்றிருந்தான் அவன்.
“உண்மைய சொல்லு! நீ என்ன தப்பு பண்ண?” என ஈஸ்வர் அவனை மிரட்டும் தொனியில் கேட்க,
“அவரை ஏன் சார் மிரட்டுறீங்க!” என்றார் பள்ளி முதல்வர் கொஞ்சம் இறங்கிய குரலில்.
அடுத்த நொடி ஈஸ்வரின் பார்வை மகளின் புறமாகத் திரும்பவும், “அப்பா! அந்த ஆளு!” என்றவள் தகப்பனுடைய பார்வையின் மாற்றத்தால், “அந்த அங்கிள்! என் ஃப்ரெண்ட் ஹர்ஷினி கிட்ட ‘பேட்’ஆ பிஹேவ் பண்ணாங்கப்பா! அவளோட மாம்… அதை சொன்னா லிசன் பண்ணவே இல்லயாம். அவ கிளாஸ்ல அழறா…ப்பா! சுபா அத்தைதான் பா…
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
பயம் கொள்ளலாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! ன்னு சொல்லி கொடுத்தாங்க!
நான் செஞ்சது தப்பாப்பா?!” என செந்தாமரை கேட்கவும், ‘அப்படியே அணிமாமலர் மினியேச்சர்!’ என மனதிற்குள்ளே மகளுடன் சேர்த்து மனைவியையும் கொஞ்சியவாறு, “இல்லவே இல்லடா தங்கம்!” என்றவன், தோளை அலட்சியமாகக் குலுக்கியவாறு, “இப்ப புரிஞ்சுதா!” எனக் கேட்டுவிட்டு, அவனுடைய மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் ஈஸ்வர்.
***
வீட்டிற்குள் நுழைந்தவுடன், யங் பாட்டி… ஓல்ட் பாட்டி! என்றவாறே பிள்ளைகள் பாட்டிகளை நோக்கி ஓடிவிட… மனைவியை எதிர்கொள்ள அவனது அறை நோக்கிச் சென்றான் ஈஸ்வர்.
அவன் அங்கே வருவதற்கு முன், மல்லிக் மூலமாக அனைத்தும் மலருக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்க, அவன் எண்ணி வந்தது போலவே, கோபம் கொப்பளிக்க, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பது போல் நின்றுகொண்டிருந்தாள் அவனுடைய மனைவி.
அவளுடைய அருகில், அவளை உரசியதுபோல் வந்து நின்றவன், “ஹனீ! நம்ம பொண்ணு ஒரு தப்பும் செய்யலடீ!” எனத் தணிந்த குரலில் சொல்ல,
அவனைத் திருப்பிப் பார்க்காமலேயே, “தப்பை பொண்ணு பண்ணல ஆனா அவளோட அப்பாதான் பண்ணியிருக்காரு!” என்று மலர் சீற,
“ஏய் நான் என்னடீ தப்பு பண்ணேன்?” என்றான் ஈஸ்வர் விளங்காமல்.
“அந்த மேடம்… எதாவது சாக்கு வெச்சு உங்களை அங்க வர சொன்னா… நீங்க போகணுமா?
அந்த கம்ப்ளைண்ட என்கிட்டே சொல்லி இருக்கலாமே! இதுதான் சான்ஸுன்னு உங்கள சைட் அடிப்பாங்க!” என அவள் பொரிய, “ஏய் எங்க அம்மா வயசுடி அவங்களுக்கு! உன் பொண்ணு அந்த ட்ரைவர் மண்டையைதான் உடைச்சா! நீ மட்டும் அங்கே போயிருந்தால், அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்ததுக்கு, அந்த அம்மாவையுமில்ல ஒரு வழி செஞ்சிருப்ப! அதுக்கு பயந்துட்டுதான் என்னைக் கூப்பிட்டு இருப்பாங்க!” என்று கிண்டலுடன் சொல்லிச் சிரித்தே விட்டான் ஈஸ்வர்.
அவனுடைய கேலிப்பேச்சில் அவளது கோபம் தணிய… ஈஸ்வர் அவளை நெருங்க முற்படவும், அதற்குள் அவளை நோக்கி ஓடி வந்து தாவிய, மகளை கைகளில் அள்ளிக்கொண்டாள் மலர்.
மகளுடன் சேர்த்து மனைவியையும் ஈஸ்வர் அணைத்துக்கொள்ள, “நானு! நானு!” என்றவாறு ஓடி வந்த ஜீவன் அவர்களுடைய அந்த அன்பு வளையத்துக்குள் தன்னையும் சிறைப் படுத்திக்கொண்டான் மகிழ்வுடன்!
அவர்களுடைய அன்பினில் மலர்ந்த வாசம் நிறைந்த அந்த மலர்கள் அழகாய் அங்கே மணம் வீசிக்கொண்டிருந்தன அணிமாமலர் மற்றும் ஜெகதீஸ்வரன் என்ற பாதுகாப்பு அரணுக்குள்!!!
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.