AOA- 17

AOA- 17

அவனன்றி ஓரணுவும் – 17

இரத்தப்புற்று நோய் அல்லது லுகேமியா எலும்பு மச்சையில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய். இது வெள்ளை அணுக்களின் அபிரிமிதமான வளர்ச்சியால் உண்டாகும் கோளாறாகும்.

இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையானது கதிரியக்க, கதிர்வீச்சு எக்ஸ்ரே கதிர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக சேதுவின் எதிர் வீட்டிலிருந்த பத்து வயது குழந்தை இரத்த புற்று நோய் காரணமாக இறந்து போனது. அந்த குழந்தையின் பெற்றோர்களின் கதறல் இன்னும் அவன் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. ஒரே மகளை அநியாயமாக ஒரு கொடிய நோயிற்கு பறிகொடுத்த,  அந்த தாய் தந்தையின் வேதனையும் வலியும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை!

அவர்களை மட்டுமல்ல. அந்த குழந்தையின் மரணம் அவன் மனதையும் உலுக்கிவிட்டது. எந்தளவுக்கு அந்த சம்பவம் அவனை பாதித்ததென்றால் கிட்டத்தட்ட ஒரு மாதம்வரைக்கும் அவனுக்கு இரவு உறக்கமே இல்லாமல் போனது. கள்ளமில்லாத அந்த குழந்தையின் புன்னகையில் விஷத்தை கலந்தது யாரோ?! என்று அவன் மனம் ஒவ்வொரு இரவிலும் வெதும்பியது.

பின்னர் மெல்ல அவன் அந்த மரணத்திலிருந்து மீண்டு வந்திருந்த சில நாட்களில் அவன் வேலை பார்த்து கொண்டிருந்த கல்லூரியில் படித்து கொண்டிருந்த மாணவன் ஒருவன் நீண்ட நாட்களாக கல்லூரிக்கு வரவேயில்லை.

சேது சென்று காரணம் விசாரித்த போது அவனும் லுகேமியா…  அதாவது இரத்தபுற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பது தெரிய வந்தது. அந்த தகவலையறிந்து சேது ரொம்பவும் அதிர்ச்சியடைந்தான்.

அப்போதுதான் சேதுவிற்கு இதன் பின்னணியில் வேறெதோ ஆழமான காரணமிருக்கிறது என்பது பிடிப்பட்டது. கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? கல்பாக்கம் அணுமின் நிலையம் சுற்றி அவர்கள் வசிக்கும் ஒரு காரணம் போதாதா?

ஆனால் அதுதான் காரணம் என்று வெறும் யூகத்தின் அடிப்படையில் அவனால் தீர்மானத்திற்கு வர முடியவில்லை. அதற்கு சரியான ஆதாரம் வேண்டுமே. அந்த தேடலை அவன் தொடர்ந்த போதுதான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அவனுக்கு கிடைத்தன. கல்பாக்கத்தில் மின் உற்பத்தியின் போது உருவாகும் கடைநிலை அணுக்கழிவுகளை பாலாற்றிலும் கடலிலும் கலந்து விடுகிறாகள் என்று! பாலாற்றின் மணலை கைகளில் எடுத்தாலே அணுகதிர் வீச்சின் பாதிப்பு ஏற்படுமளவுக்கு அதன் தாக்கம் இருந்தது.

ஆனால் இது பற்றி அங்கே வசிப்பவர்களுக்கு அந்தளவு விழிப்புணர்வு இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அதுவும் அவர்கள் ஊரை சுற்றி மீனவ மக்கள்தான் அதிகம் வசித்து வந்தனர். அவர்கள் இந்த தண்ணீரை பருகியதன் காரணமாக  கதிர்வீச்சின் தாக்கத்தில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றி பிறந்துள்ளன.

இது பற்றி சேது அரசாங்கத்திற்கும் கல்பாக்கம் அணுமின் நிலை இயக்கனருக்கும் எழுதிய கடிதங்கள் எந்தவித பயனுமின்றி குப்பைக்குதான் சென்றன. யாரிடமிருந்தும் சரியான பதில் கூட வரவில்லை. ஒரு சாதாரண குடிமகனாக அவனால் அதற்கு மேல் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யவும் முடியவில்லை.

அதே நேரம் அங்கு வசிக்கும் மக்களிடம் அவர்களை சூழ்ந்துள்ள ஆபத்தை பற்றி தெளிவாக விளக்கினான். ஆனால் அவர்களாலும் அந்த இடத்தை விட்டு வேறிடம் நோக்கி செல்ல முடியவில்லை. அந்த இடமும் மீன் பிடிப்பதுமே அவர்கள் வாழ்வாதாரம் எனும் போது அவர்கள் வேறெங்குதான் செல்வார்கள்?

சேதுவிற்கு இதன் விபரீதம் தெரிந்த போதும் தன் இனத்து மக்களை சுயநலமாக அங்கே விடுத்து செல்ல விருப்பமில்லை.

மக்களின் நலன் பற்றி துளியளவும் யோசிக்காத அரசாங்கம் இருக்கும் வரை இதற்கெல்லாம் தீர்வு ஏது? ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவனும் இது குறித்து மெல்ல மறந்துபோயிருந்தான். மனதை ஒருவாறு சமன்ப்படுத்தி கொண்டு சேது தன் வேலைகளில் கவனத்தை திருப்பியிருந்தான் .

ஆனால் பிரச்சனை இப்போது தலைக்கு மேல் வெள்ளமாக போய்விட்டது. ஒரு சிறியளவிலான அணுக்கசிவே இத்தனை பெரிய விபரீததிற்கும் வித்திடுமெனில் இப்போது நடக்க போகும் கொடூரத்தை குறித்து அவனால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

பிரபஞ்சன் கனவு மட்டும் உண்மையாகிவிட்டால் பல உயிர்களை அந்த அணுமின் நிலையும் காவு வாங்கிவிடும். அதோடு சென்னை மற்றும் காஞ்சிபுர மாவட்ட மக்களின் வருங்காலத்தையும் அவர்கள் சந்ததிகளின் எதிர்காலத்தையும் அது மொத்தமாக கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

நினைக்கும் போதே அவன் முதுகுத்தண்டு சில்லிட்டது.

இருப்பினும் சேது தன் மனிதின் ஏதோ ஓர் மூலையில் இருந்த துளியளவு நம்பிக்கையின் காரணமாக பிரபாவிடம்,

“உன் கனவு கண்டிப்பா பளிச்சிருமா டா?” என்று கேட்டு வைத்தான். அவ்வாறு கேட்கும் போதே சேதுவின் குரல் உடைந்தது.

பிரபஞ்சன் பதில் பேசவில்லை. நடக்காது என்று அவனால் உறுதியாக கூறவும் முடியவில்லை. நடக்கும் என்று சொல்லி தன் நண்பனை வேதனைப்படுத்தி பார்க்கவும் அவன் விரும்பவில்லை. ஆதலால் பிரபஞ்சன் மௌனமாகவே நின்றான்.

ஆனால் சேது விடாமல், “அப்போ நடந்திரும் அப்படித்தானே?!” என்று கேட்டு நண்பனை உலுக்கினான். பிரபா அப்போதும் தன் மௌனத்தை கலைக்கவில்லை.

சேது அதிர்ச்சியிலும் பயத்திலும் அப்படியே ஒடுங்கி போய் அங்கிருந்த தென்னை மரத்தின் மீது சரிந்துவிட்டான். மனதின் நம்பிக்கையெல்லாம் வடிந்து போகும் போது நம் உடலின் சக்தியும் சேர்ந்தே வடிந்துவிடும்.

சேதுவின் நிலைமையும் அதுதான். பிரபா அந்த நொடி தன் மௌனத்தை கலைத்து, “சேது” என்று அவன் தோள்களை பிடித்து கொள்ள, அவன் உடனடியாக தன் நண்பனை இறுக்கமாக கட்டி கொண்டான். அவனுக்கு அந்த நொடி ஏதோ ஒரு பற்றுகோல் தேவைப்பட்டது.

நண்பனின் தோளில் தலை சாய்த்து குலுங்கி குலங்கி அழ பிரபா அவனை தேற்றி கொண்டே ஷெர்லியை பார்த்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வர சொல்லி சமிக்ஞை செய்தான். அவள் உள்ளே சென்றுவிட,

பிரபா தன் நண்பன் முகத்தை நிமிர்த்தி பிடித்து, “இப்ப ஏன் இவ்வளவு  உணர்ச்சி வசப்படுற நீ? இன்னும் எதுவும் நடக்கல… அதை முதல நீ புரிஞ்சிக்கோ… என் கனவு நடந்தே ஆகணும்னு எந்தவித அவசியமும் இல்ல” என்றான்.

சேது உடனடியாக நிமிர்ந்து, “நீதானே டா நடக்கும்னு சொன்ன” என்று கேட்க,

“ஹ்ம்ம் சொன்னேன்… ஆனா ஏதோ ஒரு மூலையில ஒரு நம்பிக்கை… அது நடக்காது… நடக்க விடகூடாதுன்னு தோணுது… ஆனா அது எப்படின்னு தெரியல” என்ற போது பிரபாவின் விழிகளிலும் கண்ணீர் தளும்பியது.

பிரபா உடனடியாக தன் விழிகளை துடைத்து கொண்டு,

“ப்ளீஸ் சேது! அடுத்து என்ன செய்றதுன்னு யோசிப்போம்” என்று சொல்லும் போது பிரபாவின் விழிகளில் பிரகாசித்த அந்த துளியளவு நம்பிக்கை சேதுவின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அப்போது ஷெர்லி தண்ணீர் எடுத்து வந்து சேதுவிடம் நீட்டினாள்.

அப்போதுதான் சேது அவளை பார்த்தான். “யாரு” என்பது போல் சேது பிரபாவை பார்க்க, “கெஸ்ட்” என்பது போல் ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டான்.

பிரபா தெளிவுபெற்று தன் நண்பன் சேதுவை பார்த்து, “ஏன் சேது? கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் எல்லா பாதுக்காப்பு ஏற்பாடுகளும் பண்ணியிருப்பாங்கதானே?” என்று கேட்டான்.

“ஹம்ம் பண்ணியிருப்பாங்க” என்றவன் உடனடியாக ஏதோ யோசனையோடு, “எனக்கு அங்க வேலை பார்க்கிற ஒரு டெக்னிஷ்யனை தெரியும்… நான் அவன்கிட்ட இது பத்தி கேட்டு பார்க்கிறேன்” என்றான். அதேபோல அவன் தன் பேசியை எடுத்து அழைப்பு விடுத்தான்.

எதிர்புறத்தில் அவர் அழைப்பை ஏற்றுதும், சேது நிதானமாக அங்கிருந்த பாதுக்காப்பு ஏற்பாடுகளை பற்றி விசாரிக்க, எல்லாமே சரியாக இருப்பதாகவே அவர் தெரிவித்தார். ஆனாலும் இயற்கை சீற்றத்தில் எதுவும் நம்பிக்கையாக சொல்வதற்கில்லை என்று ஒரு இக்கு வைத்தே முடித்தார்.

அதேநேரம் அவசர நிலை அறிவித்து அங்கிருந்த மக்கள் எல்லோரையும் இடம்பெயர சொன்னதாகவும் உரைத்தார். சேதுவின் மனதில் லேசாக நிம்மதி படர்ந்தது. அவன் குடும்பத்தினர் இரண்டு நாட்கள் முன்னதாகவே திருப்பதி சென்றுவிட்டனர்.

சேது இறுதியாக அவரிடம், “இருந்தாலும் மனசுக்கு எதுவோ சரியா படல… பார்த்து ஜாக்கிரதை” என்று முடித்து அழைப்பை துண்டித்த போது அவர் மனதிலும் அச்சம் பற்றி கொண்டது.

ஏனோ அந்த வார்த்தை அவருக்கு சாதாரணமாக ஒலிக்கவில்லை. ஏதோ எச்சரிக்கையை மணியடித்தது போன்ற உணர்வு! அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னதாக அவர் வேலை செய்து கொண்டிருந்த யூனிட் பக்கம் ஒருமுறை சரி பார்த்துவிட்டு வர திரும்பினார். அங்கேதான் அந்த இயந்திர கோளாறு காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டு கொண்டிருந்தது.

சேது பேசி முடித்ததும் தன் கல்லூரி மாணவர்கள் நண்பர்களிடம் பேசினான். அவன் பின்னர் பிரபாவை பார்த்து, “கல்பாக்கம் மட்டும் இல்லாம அவுட் ஆஃப் டவுன்ல இருக்கவங்களையும் பாதுக்காப்பான இடத்துக்கு போக  வைக்கணும்… அவங்களுக்கு இந்த ஆபத்தோட தீவிரம் தெரியுமோ தெரியாதோ? அதான் என் ப்ரெண்ட்ஸ் ஸ்டூடண்ட்ஸ் சில பேரை கூட வர சொல்லியிருக்கேன்” என்றவன், “நீயும் என் கூட கிளம்பி வர்றியா பிரபா” என்று கேட்டான்.

பிரபாவிற்கு அண்டசராசரமே ஆடி போனது.  உடனடியாக அவன் முடியாது என்று தலையசைத்து மறுத்துவிட்டான். கனவில் பார்த்த அந்த பயங்கரமே அவன் நினைவை விட்டு இன்னும் நீங்கமால் இருக்க, அப்படியொரு நிகழ்வை நேரில் பார்ப்பதா?

அவன் முகத்தில் வியர்வை துளிர்த்தது. அவன் அங்கே வந்தாலே அந்த விபத்து நேர்ந்துவிடுமோ என்று உள்ளுர நடுங்கி கொண்டிருந்தான்.

நண்பனை பார்த்த பிரபா, “தப்பா எடுத்துக்காதே சேது… எனக்கு இங்க ஒரு வேலை இருக்கு… நீ பார்த்து பத்திரமா போயிட்டு வா” என்றான்.

சேதுவும் நண்பனை புரிந்தவனாக தலையசைத்துவிட்டு சென்றுவிட ஷெர்லி மட்டும் அங்கே பிரபஞ்சனோடு நின்று கொண்டிருந்தாள்.

ஷெர்லி அப்போது அவன் மனநிலையை தெளிவாக படித்தவள் போல, “டென்ஷன் ஆகுறதால எதுவுமே ஆகிடபோறதில… நமக்கு மேல ஒரு யுனிவர்சல் பவர் இருக்கு… நாம அதை பிலீவ் பண்ணுவோம்… அது நம்மல கண்டிப்பா சேஃப் பண்ணும்” என்றாள்.

அவளின் அந்த வார்த்தைகள் பிரபஞ்சனுக்கு ஏதோ ஒரு பற்றுக்கோலை தந்தது. கிறிஸ்டோபர் எழுதிய டிசேஸ்டர் அவன் முழுவதுமாக படிக்கவில்லை என்றாலும் கடைசி பக்கத்தில் ஓர் வரி இருந்தது.

அதை நினைவுப்படுத்தி கொண்டான். மனதில் பெருஞ்சுவராக எழும்பி நின்ற அவநம்பிகையை நம்பிக்கை என்ற ஒரு சிறு உளி அடித்து தகர்த்தது.

“யுனிவர்ஸல் பவர்” அந்த வார்த்தையை பிரபா தனக்குள்ளாகவே சொல்லி பார்த்து கொண்டான். நடப்பதை முன்னமே தெரிந்து கொள்ளும் ஆற்றல் தனக்கு இருக்குமெனில் அதை தடுக்கும் ஆற்றல் தனக்கு இல்லாமல் போகுமா?

முந்தைய முறை சுனாமி வந்த போது அவன் தாய் ஒரு சிறு மரக்கட்டையை கொடுத்து அதை விடாமல் பற்றி கொள்ள சொன்னது நினைவுக்கு வந்தது. அத்தனை பெரிய ராட்சச அலைகளிடமிருந்து அந்த சிறு மரக்கட்டை தன்னை காப்பாற்ற முடியும் போது ஏன் இந்த மோசமான விபத்திலிருந்த எம் மக்களை என்னால் காப்பாற்ற முடியாது. அதற்கு அவனுக்கு தேவை அவள் சொன்னது போல் அந்த யுனிவர்சல் பவர்!

இந்த பிரபஞ்சத்தை ஆளும் அந்த உயிரிய சக்தி!

பிரபஞ்சனின் சிந்தனை காட்டாற்று வெள்ளமாக தங்குதடையின்றி அதிவேகமாக முன்னேறி சென்று கொண்டிருந்தது.

பிரபா அப்போது ஷெர்லியின் முகத்தை யோசனையாக பார்த்து, “இஃப் யு டோன்ட் மைன்ட்… எனக்கும் குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்று கேட்டான்.

“ஒ! சூயர்” என்று சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து கொண்டு திரும்ப, பிரபா அங்கே இல்லை.

“ஹென்சம்” என்று அழைத்து கொண்டே அவள் அந்த தோட்டத்தை சுற்றிலும் வலம் வந்துவிட்டாள். ஆனால் அவன் அவள் கண்ப்பார்வையில் தென்படவேயில்லை.

அவள் மனம் அச்சத்தை நிரப்பியது. அவன் இந்த நேரத்தில் எங்கே போனான்? சேது அழைத்த போதும் அவன் வரவில்லை என்று மறுத்துவிட்டானே!

பின் அவன் இப்போது எங்கே சென்றிருப்பான்.அவள் மனம் ஏதேதோ விபரீதமாக யோசிக்க, அவளுக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை. அவள் எடுத்து வந்த தண்ணீரை அங்கேயே வைத்துவிட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

***

மெரினா கடற்கரை!

எப்போதும் ஜனசஞ்சாரத்தோடு இருக்கும் அந்த இடமே இன்று வெறிச்சோடி காணப்பட்டது. அந்த கடற்கரை சாலையில் ஒரு வாகனம் கூட பார்க்க முடியவில்லை.

அந்த கடற்கரை சாலையின் எதிர்புறத்திலிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஒரு கூட்டமே நின்றிருந்தது. எல்லோர் கையிலும் அதிநவீன கேமராவும் அது சார்ந்த மற்ற உபகரணங்களும் இருந்தன. எப்படி ஒரு மோசமான சம்பவத்தையும் நொடி நேரத்தில் செய்தியாக மாற்றவல்ல பத்திரிக்கையாளர்கள் கூட்டம்தான் அது.

ஆனால் அநியாயங்களை தட்டி கேட்பது அவர்கள் வேலையில்லை. அவற்றை தத்ரூபமாக படம் பிடிப்பதே அவர்கள் வேலை. பின்னர் அந்த செய்தியை எந்தளவு பரபரப்பாக மாற்ற முடியுமோ மாற்றி விட்டு பின் சில நாட்களில் அதை சுத்தமாக மறந்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுவார்கள். அதுதான் அவர்களுடைய புனிதமான பத்திரிக்கை துறையின் தர்மம்.

அவர்களின் அப்போதைய பரபரப்பு சுனாமி. அதை பற்றித்தான் அவர்களுக்குள் அப்போது மும்முரமாக உரையாடல் நடந்து கொண்டிருந்தன.

“எவ்வளவு நேரம் வைட் பண்றது… சுனாமி வருமா வராது?”  என்று அவர்களில் ஒருவன் காத்திருந்து காத்திருந்து அலுத்து போய் எரிச்சல் மிகுதியோடு கேட்க,

“ஆமா ஆமா இன்னைக்கு பூரா இதுலயே டைம் வேஸ்ட் ஆகிடும் போல” என்று உடனிருந்த பெண் சொன்னாள்.

“ஆமா… உண்மையில சுனாமி வருமா?” ஒருவன் சந்தேகமாக கேட்க,

“வந்தாதானே டா இன்னும் இந்த நியுஸ் சென்சேஷன்லா மாற்ற முடியும்” என்றான் இன்னொருவன்!

“அட போங்கடா… மழை வரும்னு சொன்னாலே வெயில் கொள்ளுத்தி எடுக்கும்… இதுல சுனாமி வர போகுதாக்கும்… ச்சே! காலையில் ஒரு ஹீரோயின் இன்டர்வியு எடுக்க அபாய்ன்மன்ட் எல்லாம் வாங்கி வீணா போச்சு” அவனுக்கு அது பெரிய கவலையாக இருந்தது.

“அதை விட இதான் சென்சேஷ்னல்”

“இப்படி வெட்டியா நிற்கிறதை விட சுனாமி வந்தாதான்  அது சென்சேஷ்னல்”

“இப்ப என்ன… சுனாமி வரணும்கிறியா வர கூடாதுங்கிறியா ?”

“வந்ததான் நமக்கு செம ஹாட் நியுஸ் கிடைக்கும்… அப்படியே சுனாமி வர சீனை என் கேமரால கேப்சர் பண்ணிப்பேன்”

“அது ஓல்ட் மாடல்… இதை பாரு… எவ்வளவு தூரத்தில இருந்தாலும் செம கிளேரிட்டியோட வீடியோ கேப்சர் பண்ணும்” என்று தன் கேமராவை காட்டி பெருமை அடித்து கொண்டிருந்தான் ஒருவன். சிறியதாக இருந்தாலும் அவன் சொன்னது போல் அதன் செயல்பாடுகள் நவீனமாக இருந்தது.  எல்லோருமே அந்த சிறியளவிலான கேமேராவை பார்த்து வியந்தனர்.

அவன் தன் கேமரா மூலமாக கரைகளை தாண்டி தொலைதூர கடலலைகளை காண்பிக்க

அவர்கள் கூட்டத்தில் ஒருவன், “ஆமா… செம்மயா இருக்கு… செம்ம டெக்னாலஜி” என்று பாராட்டினான்.

எல்லோருமே அந்த காட்சியை கேமராவில் பார்த்து கொண்டிருக்க, அப்போது வெகுதூரமாக கடலலை மலையாக எழும்பிய காட்சி தெரிந்தது. ஓயாமல் அத்தனை நேரம் வாயடித்து கொண்டிருந்த அந்த கூட்டம் வாயடைத்து போனது.

அந்த கேமராவை கையில் பிடித்து கொண்டிருந்தவன் விஸ்வரூபம் எடுத்து சீறி கொண்டு பாய்ந்து வந்த கடலலைகளை பார்த்து நடுநடுங்கி போனான். அந்த நடுக்கத்தில் அவன் கையிலிருந்து அந்த அதிநவீன உயர் ரக கேமரா அந்த உயரமான கட்டடத்தின் மேலிருந்து விழிந்து நொறுங்கி தூள் தூளானது.

 

 

error: Content is protected !!