எனை மீட்க வருவாயா! – 19B
வீடு முழுக்க வந்திருந்தவர்களின் பேச்சால் அதுவரை கலகலவென்றிருந்தது, அவர்கள் அனைவரும் கிளம்பியதும் அமைதியை குத்தகைக்கு எடுத்திருந்தது அவ்வீடு.
ஜெகன் சளைக்காமல் அனைத்தையும் ஒழுங்குபடுத்தினான்.
மனைவிக்கு ஏதுவாய் இருக்கும்படியாய் எண்ணி, அவளிடம் கேட்டுக் கேட்டு ஒவ்வொன்றையும் செய்ய
“எங்கையோ எடுத்து வைக்க வேண்டியதுதான. எதுக்கு ஒவ்வொன்னையும் வந்து, எங்கிட்ட கேட்டுகிட்டு இருக்கீங்க?” சலிப்போடு கேட்டாள்.
“நான் இருக்கும்போது, எங்க இருக்குனு கேட்டா சொல்லிருவேன். இல்லைனா நீ தேடிட்டு இருப்பல்ல. அதான் உங்கிட்ட கேட்டுட்டு வைக்கிறேன்” என தன்மையாய் பதில் கூற
ஜெகனது அமைதியான, அனுசரித்திப் போகும் செயலால், ஏனோ திவ்யாவின் மனதில் பீதியாய் உணர்ந்தாள்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காண எண்ணி பேசிக் கொண்டிருந்த தினத்தன்று, தன்னிடம் வந்த பேசியவனை உதாசீனப்படுத்தி அனுப்பிய பிறகு, இன்றுதான் கணவனைத் தனிமையில் சந்திக்கிறாள்.
‘என்ன சொல்லப் போறாங்களோ.. ரொம்பப் பேசுறேன்னு எதாவது சொன்னா… என்ன செய்யறது. தனியா வந்து இப்டி மாட்டிகிட்டேனே’ மனம் பதற்றத்தில் இருந்தது.
கணவனை எவ்வாறு எதிர்கொள்வோம் என்கிற தயக்கமும் வந்தது.
செல்லும்போது அவளின் தாய், “இனியாது புத்திசாலித்தனமா இருக்கற வழியப் பாரு. இன்னும் தும்ப விட்டுட்டு வாலைப் புடிச்சா… என்னால எதுவும் செய்ய முடியாது. ஆமாஞ் சொல்லிப்புட்டேன்” என நறுக்கென மகளின் தலையில் கொட்டி, கூறிவிட்டுக் கிளம்பியிருந்தார்.
திவ்யாவின் அம்மாச்சி, “ஆம்பளை நம்மைச் சுத்தி வரான்னா, அவனுக்கு வேற எந்த நாதியும் இல்லாமன்னோ, இல்லை… வேற எவளும் கிடைக்கலின்னோ ஒரு பொண்டாட்டி தப்பா நினைக்கக் கூடாது”
“…”
“என்னைக்கு ஒரு பொம்பளைக்கு அம்புட்டு திமிரு வருதோ, அப்ப அவன் பொண்டாட்டி கைய விட்டுப் போயிருவான். அதுனால, அவனை அனுசரிச்சு, கைக்குள்ள போட்டுக்க பழகிக்கோ. அவனா, நானான்னு எப்பவும் மனசுல எண்ணம் வரவே கூடாது.”
“…”
“…பகல்ல அடிச்சிக்கிட்டாலும், அது அடுத்த நாளு வரை போகக்கூடாது. அன்னைக்கு ராவுலயே அதை எல்லாத்தையும் பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டு, அடுத்து வம்பில்லாம அவங்கூட ஒத்துப் போயிரணும். ஆனா அந்தப் பிரச்சனை இனி வராம வாழப் பழக்கிக்கணும்”
“…”
“…உன்னோட வாழ்க்கை உன்னோட சாமார்த்தியத்துலதான் அடங்கி இருக்கு. யாரும் நாக்கு மேலப் பல்லைப் போட்டுப் பேசுற அளவுக்கு நடக்காமப் பாத்துக்கோ” என நீண்ட ஒரு அறிவுரையோடு திவ்யாவின் அம்மாச்சி கிளம்பியிருந்தார்.
திவ்யாவின் அத்தையோ, “இன்னும் அவன் பொறுமையச் சோதிக்க நினைக்காதடீ. அப்புறம் போடி ம..றுன்னு அவம்பாட்டுக்கு கிடைக்கறவளோடப் போயிரப் போறான்” என பயமுறுத்திவிட்டுச் சென்றிருந்தார்.
ஹாலுக்கு ஜெகன் சென்றால், அங்கிருப்பவள் அடுக்களைக்குள் சென்று அடைந்து கொண்டாள். அவன் அவளைத்தேடி அங்கு வர, “லட்டு… எதாவது இன்னும் வேலை கிடக்கா இங்க?” என வந்தவனிடம், தலையை அசைத்து மறுத்தாள்.
“இங்க பாரு. இந்த மளிகை சாமானெல்லாம் இந்த பாட்டில்ல போட வேண்டியதைப் போட்ரலாம்” என அவனாகவே எடுத்து வேலைகளைச் செய்தான்.
அவளும் தேமே என வேலையைப் பார்த்தவள், அவனின் வளவளத்த கேள்விகளுக்கு, ஒற்றைப் பதிலாய் கூறிக் கொண்டிருந்தாள்.
இன்னும் சொற்ப வேலைதானே என அவள் அங்கிருந்து நகர்ந்து, அவர்களின் படுக்கை அறைக்குள் சென்றாள்.
அடுக்களையில் இருந்த பணிகளை முடித்தவன், அடுத்து அவளைத் தேடி படுக்கை அறைக்கு வந்திருந்தான்.
படுத்திருந்தவளைக் கண்டவன், “டயர்டா இருக்கா. சரி கொஞ்ச நேரம் படுத்துரு” என்றவன், அங்கிருந்த வார்ட்ரோப்களில், இருவரின் ஆடைகள் மற்றும் இதர பொருள்களை அதற்கான இடங்களில் எடுத்து வைக்கத் துவங்கினான். வந்தது முதலே அவன் மட்டும் அதிக வேலை செய்ய, அவனது ஓயாத உழைப்பைக் கண்டவளுக்கே அதனால் அசதி வந்திருந்தது. அத்தோடு கண்ணயர்ந்திருந்தாள்.
கண்ணயர்ந்தவளின், கண்ணிமைகளில் அவன் இதழ் கொண்டு பூ போல ஒத்தனம் கொடுத்தான்.
பட்டென எழுந்தவளை, “எதுக்கு பதறுற… நாந்தான்” என அவளை கனிவோடு அரவணைத்திட, அவனிடமிருந்து அனிச்சை செயலாய் விலகினாள்.
லட்டு, லட்டு என மற்றவர்கள் கிளம்பியபின், நூறு முறையேனும் அழைத்து திவ்யாவிடம் பேசியவனை, சில மாத இடைவெளியில் நெருங்கவிடவே தயக்கமாய் இருந்தது திவ்யாவிற்கு.
அவனைக் காணும்முன் அவனைத் தேடிய உள்ளம், அவனருகில் ஒடுங்கிப் போவது எதனால் என இன்னும் அவளுக்குப் புரியவில்லை.
பேசாமல், விலகியபடி தன்னையே அச்சத்தோடு பார்த்தவளைக் கண்டவன், “என்ன லட்டு… இந்தக் கொஞ்ச நாள்ல, உனக்கு நான் அந்நியனா தோணுதா?”
அப்படித்தான் என்றாலும், “இல்லையே!”
“அப்புறம் ஏன் ஒதுங்கி, ஒதுங்கிப் போற?”
“அப்டியெலாம் இல்லை” என்றபடி தன்னை திருதிருத்துப் பார்த்தவளின் இருபுறம் தனது வலிமையான கரங்களால் சிறை செய்தவன், அவள் ஒடுங்கி நிற்பதைக் கண்ணுற்று “அப்டியெல்லாம் இல்லைனா, எனக்கு அதை ப்ரூஃப் பண்ணு”
“நீங்க என்ன குழந்தையா? போங்க” எனச் சிணுங்கியவள், அதே இடத்தில் குனிந்து அரணாய் தன்னைச் சிறை செய்திருந்தவனின் கரங்களில் சிக்காமல் விலகிச் செல்ல எத்தனிக்க
“ஏய்… என்னடீ. இத்தனை நாளுதான் ஆளுக்கொரு இடத்துல இருந்தோம். இப்பதான் ஒன்னா இருக்கோம். இப்பவும் எங்கூட இருக்காம, என்னை விட்டு ஓடுனா என்ன அர்த்தம்?” குனிந்து எழுந்தவளை அவள் எதிர்பாரா தருணத்தில் சட்டென, அவன் மார்போடு அணைத்துப் பிடித்தபடிக் கூற
திவ்யாவிற்கு அதற்குமேல் பேச்சே எழவில்லை.
அவனின் அன்பை, நேசத்தை, மோகத்தை, தாபத்தை மொத்தமாக்கிய அவனது இறுகிய அணைப்பில், இதத்திற்கு பதிலாய் இதயத்தில் மாறி உருவாகியிருந்த ஸ்வரத்தால் தடுமாற்றமே வந்திருந்தது திவ்யாவிற்கு.
நீண்டு நேரத்திற்குப்பின் “கொஞ்சம் விடுங்களேன்” என கெஞ்சியவளிடம், “இனியெல்லாம் விடற ஐடியாவே இல்லை”
“ப்ளீஸ்ங்க”
மனைவியின் பேச்சைக் கண்டு கொள்ளாமல், தலையில் சூடியிருந்த மல்லிகையின் நறுமணம் அவளின் கூந்தலின் ஒவ்வொரு முடியிலும் கமழ, அதை நுகர்ந்தபடியே காது மடலின் அருகே வந்திருந்தான்.
திவ்யாவின் ஒவ்வொரு செல்லும் சிலிர்த்து, வெக்கம் பூசிக் கொள்ள, கழுத்து வளைவில் முகம் புதைத்தவன், புதையல் தேடத் துவங்கினான்.
கணவனின் செயலில் கிறங்கிப் போனவள், பேச முடியாமல், கால்கள் துவள நின்றவளை அவனது கைகளில் ஏந்திக் கொண்டான்.
துவண்டவளைச் சிரித்தபடியே கைகளில் ஏந்திக் கொண்டவன், அவனின் அண்மையில் எழுந்த மயக்கத்தில் கண் மூடிக் கிடந்தவளைத் தாபத்தோடு பார்த்தபடியே, மனைவியை மெதுவாய்க் கட்டிலில் கிடத்தினான்.
பரவசமாய் அவளை புயல் வேகத்தோடு ஆக்ரமித்தவனை, எதிர்கொள்ள இயலாமல் தடுமாறினாள்.
அணைப்பு, முத்தம் என்கிற அளவில் மட்டுமே இதுவரை தன்னிடம் இருந்தவன், இன்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியதும், பெண்ணால் எதிர்க்க இயலவில்லை.
மேலும் அனைவரின் அறிவுரைகளும் செவியில் ஒலித்து, கணவனை மறுக்க நினைத்தவளைக், கட்டிப்போட்டது.
அதேநேரம் “திவ்யா, நேரமாச்சு எழுந்திரு” எனும் சத்தம் அருகே கேட்க, அடித்துப் பிடித்து எழுந்தவளுக்கு… இதுவரை தனக்கு நடந்ததாகத் தோன்றிய நிகழ்வு அனைத்தும் நினைவில் வர… செவ்வானமாய் சிவந்திருந்த வதனம் கூறியது… நடந்த என்னவென்று.
அதைக் கண்டாலும் காணாததுபோல மனைவியின் வதனத்தை வாசிக்க முயன்றான் ஜெகன்.
திவ்யாவிற்கு நடந்த அனைத்தும் கனவு என்பது உரைக்க, திருதிருவென விழித்தாள்.
மனைவியின் பார்வையைக் கண்டவன், “என்ன? கனவு ஏதும் கண்டு, பயந்துட்டியா? புது இடமில்ல. எல்லாம் போகப் போகச் சரியாகிரும்” நடந்ததை அப்டி கேட்கும் திராணி நிச்சயமாய் ஜெகனுக்கு இல்லை. ஆகையால், அப்படியே மாற்றிக் கேட்டிருந்தான்.
அவனுக்கான இடம் இன்னும் தன்னவளால் அங்கீகரிக்கப்படாததால் எழுந்த தடுமாற்றம் அது.
“முகத்தை கழுவிட்டு வா லட்டு. நான் போட்ட கழனித் தண்ணிய குடிச்சிட்டு, அது டீயா, இல்ல காபியானு சொல்லுவியாம்” எனச் சிரித்தபடியே ஹாலுக்குச் சென்றான்.
கணவனது பேச்சிற்கு மறுவார்த்தை கூறாமல், தன்னை சீர் செய்து கொண்டு வந்தவளுக்கு காத்திருந்தது அவன் தயாரித்த கழனித் தண்ணீர்!
குடித்தவளுக்குத் தோன்றியது, ‘நான் போடுறதைவிட நல்லாத்தான் டீ போடறாங்க’ என்பதுதான்.
பதில் கூறாமல் குடித்து முடித்தவளுக்கு, அவனோடு அங்கு இருப்பது சங்கோஜத்தைத் தர, அங்கு இருந்த இரண்டு டம்ளர்களையும் எடுத்துக் கொண்டு எழ, அவளின் வலக்கையை பிடித்து நிறுத்தியிருந்தான் ஜெகன்.
…………………
“என்னாச்சு.. லட்டு! ஏன் ஒரு மாதிரியாவே இருக்க?” மனைவியின் முகம் பார்த்து வினவினான்.
“நல்லாத்தான் இருக்கேன்” தயங்கி உரைத்தாள்.
தலையை அசைத்து மறுத்தவன், “உன்னை எனக்குத் தெரியுண்டீ. உங்கூட ரெண்டரை மாசம் இருந்திருக்கேன்”
“…”
“ஏன்? என்ன பிரச்சனை?”
“…”
“எங்கூட வந்ததுல உனக்கு இஷ்டமில்லையா?” தயங்கியபடியே கேட்டான்.
தலையை அசைத்து மறுத்தாள் திவ்யா.
“முன்ன மாதிரி எங்கூட பேசவே மாட்டீங்கற”
“என்ன பேச?”
“முன்னல்லாம் எதாவது பேசுவியே.. அப்டி எதாவது பேசு”
“…”
“எம்மேல அவ்வளவு வெறுப்பா?”
இப்போதும் தலையை அசைத்து மறுத்தாள்.
“அப்புறம் ஏன் ரொம்ப அமைதியாவே இருக்க?”
“…”
“எங்கூட வாழப் புடிக்கலையா?” என தன்னை சமாளித்துக் கொண்டு கேட்டான்.
“ச்சே, ஏன் இப்டியெல்லாம் கேக்குறீங்க” என அவசரமாய் கேட்டாள்.
“இல்ல… எங்க அம்மா பேசுனப்ப நான் எதுவும் உனக்காகப் பேசலைன்னு.. இப்டி ஆகிட்டியா?”
மறுத்து தலையசைப்பு
“என்னதான் இப்ப உனக்குப் பிரச்சனை?”
“ரெண்டு நாள் அப்டித்தான் இருப்பேன். அப்புறம் இந்த இடம், நீங்க, எல்லாம் பழகிட்டா, நார்மல் மோடுக்கு வந்திருவேன்” என உண்மையை உரைத்தாள் திவ்யா.
“உண்மையாத்தான சொல்ற”
“…” கணவனை முறைத்தாள்.
“சரி.. சரி நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்” என்றவன், எதாவது பேச வேண்டுமே என, தன்னைப் பிரிந்து சென்றது முதல் தற்போது வரை அவளின் பொழுதுகள் எப்படிச் சென்றது? என்ன செய்தாள்? இப்டி பேச்சைத் துவங்க…
திவ்யாவும் இலகுவாய் பதில் கூறத் துவங்கினாள்.
அன்றைய இரவு ஒருவருக்கொருவர் அருகாமையில் இருந்தாலும், உறங்காமலேயே கழிந்தது.
ஜெகனுக்கு தனது அவசரத்தனத்தால், வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்துவிடக் கூடாதே என்கிற பயத்தோடு, தன்னைக் கட்டுப்படுத்தி அமைதி காத்தான்.
திவ்யாவோ, போருக்குச் செல்லும் வீரனின் மனநிலையில், கணவனது அணுகுமுறையை இலகுவாய் எதிர்கொள்ள தன்னைத் தயாராக வைப்பதிலேயே அவளுக்கு நேரம் போனது.
ஒருவருக்கொருவர், மற்றவரின் மனதை சங்கடப்படுத்தி விடக்கூடாது என்கிற பதைபதைப்போடு அன்றைய தினம் சென்று மறுநாளும் உதயமாகியிருந்தது.
வெள்ளியன்று பால் காய்ச்சி புதுக் குடித்தனம் வைத்துவிட்டு, அனைவரும் சென்றிருந்தனர். திங்கள் முதல் திவ்யா கல்லூரிக்குச் செல்ல எண்ணியிருந்தாள்.
ஜெகனுமே, திங்கள் முதல் தனது பணிகளைத் துவங்க உத்தேசித்திருந்தான்.
விடியலில் சற்று இலகுவாயிருந்தாள். கணவனிடம் வந்து “இந்தாங்க.. நீங்க குடுத்து வச்ச பணம்” என நீட்ட
“எந்தப் பணம்?”
“ம்ஹ்ம்.. வேலைக்குப் போயிட்டு வந்து தந்தீங்கள்ல. அதுதான்”
மனைவியின் கையிலிருந்து வாங்கியவன், எண்ணிப் பார்த்துவிட்டு, தான் கொடுத்தது அப்படியே அதில் இருக்க, “நீ உன்னோட செலவுக்கு இதை யூஸ் பண்ணலையா?”
“இல்லை”
“உங்க அம்மாகிட்ட குடுத்திருக்க வேண்டியதுதான?”
“எதுக்கு?”
“இனி பாக்கும்போது இதை உங்கம்மாகிட்டயே குடுத்துரு” என திவ்யாவிடமே பணத்தைத் தர
“எங்கம்மாகிட்ட எனக்கு அடி வாங்கிக் குடுக்கற ஐடியாவுல இருக்கீங்களா?”
“எதுக்கு அடிக்கிறாங்க”
“அடிக்காம வேற என்ன செய்வாங்க. ம்”
பெற்ற மகள் உண்டதற்கும், இருந்ததற்கும் பணம் கொடுத்தால், எந்த பெற்றோருக்கும் வருத்தம் எழத்தானே செய்யும். அதைத்தான் திவ்யா கூறினாள்.
“தா” என அதை மனைவியிடமிருந்து வாங்கியவன், “நானே குடுத்துக்கறேன்”
“உங்களுக்கு நேரம் எதுவும் நல்லால்லையோ”
“என் அப்டிச் சொல்ற?”
“இல்ல… அதைத் திருப்பிக் குடுத்தா.. நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்ல” என சிரித்த மனைவியை, சிலையாய் நின்று ரசித்தான்.
இதுபோல பேச்சுகள் இலகுவானது. இருவருமாய் சேர்ந்து ஆளுக்கொரு வேலையைச் செய்தனர்.
அன்றைய நாள் சென்றதே இருவருக்கும் தெரியவில்லை.
இரவும் வந்தது.
படுக்கைக்கு செல்லும்வரை நல்லவனாய் இருந்தவன், முன்புபோல தன்னவளிடம் தயங்கியவாறு அனுமதி கேட்க, “உங்க பொண்டாட்டிதான நான்?” என மனைவி கேட்ட கேள்வியில் சற்று திகைத்து விழித்தவன், மனைவியின் கேள்வியில் இருந்த உள்ளார்த்தம் பிடிபட
“லட்டு… நிஜமாவாடீ” என ஆசையாகக் கட்டிக் கொண்டவன், தன்னிடமிருந்து பிரித்து மனைவியின் முகத்தை ஏக்கத்தோடு பார்க்க, தலையசைப்பில் தனது சம்மதத்தைக் கூற, “லட்டு… லட்டு… என்னால நம்பவே முடியலைடீ” என இன்னும் தன்னவளை இறுக அணைக்க
“இப்ப உங்க லட்டு பூந்தியாகப் போகுது” எனும் மனைவியின் வார்த்தையில்
“ஏய்… என்னடீ… இப்டியெல்லாம் பேசற?” என ஆச்சர்யமாய், முகமெங்கும் முத்தமழை பொழிய
“ரொம்பப் பேசுனா… எல்லாம் கேன்சலாகிரும். பாத்துக்கங்க” என்ற மனைவியின் பொய்யான மிரட்டலில், புன்னகையோடு, அவனது உணர்வுகளும் கொதிக்கும் பால்போல பொங்கி எழ
பைங்கிளி இரண்டும் மனதளவில் ஒன்றிட, தன்னவளின் வார்த்தையிலேயே தாபமெனும் தாகமெழ, தாகம் தீர்க்க தண்மையாய் பருகத் துவங்கினான்.
நிசப்தம் ஒன்றே விடியல்வரை அங்கு நீடித்திருந்தது.
இடையிடையே சிருங்கார லீலையின்போது எழும் ஒலிகள் மட்டுமே, அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சிகளுக்கு மெருகேற்றி, பரவசம் கூட்டியது.
ஜெகனைப் பொருத்தவரையில், சில காலமாகவே நினைவில் சுமந்தவளோடு, உயிர்கலப்பு கொள்ளும் உன்னதமான தருணம்.
திவ்யாவிற்கோ, மாங்கல்யத்தின் மகிமையினால் உண்டான, தன்னவனின் மீதான ஏக்கத்தினால் எழுந்த எதிர்பார்ப்புகள், பூரணமாய் நிறைவேறிய, புதுப்புது உணர்வுகளின் அறிமுகப்படலத்தின் ஆகர்ஷன தருணம்.
கலவியின் ஆரம்பக் கல்வியின் அரிச்சுவடு அறியாத இருவரும், தேடித் தேடி புதுமைகள் பல கண்டு, உணர்ந்து, உணர்ச்சி மிகுதியால் ஒருவரையொருவர் தேடிய தேடலின் நீளத்தை, வார்த்தைகளின்றி, உணர்வுகள் வழி நின்று கணக்கிட்ட தருணமது.
நெடிய இதழ் தீண்டல்கள், செல்களுக்குள் முடங்கிக் கிடந்த இருவரின் பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.
இனி அவை பொறுமை காக்கா.
சுனாமியைப்போல வெகுண்டெழுந்த உணர்வுகளை, ஒருவரின் அருகாமையில் மற்றவர் தணித்து, மதங்கொண்ட யானையின் திணிவை ஒருவருக்கொருவர் உணர்ந்து, களைத்த நிலையிலும், உறக்கம் ஆட்கொள்ளாமல், ஆலிங்கனத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கி, முத்தெடுத்து, அதில் கிடைத்த வெட்க மணிகளைப் பொக்கிசமாய்ச் சேர்த்து, அதனைக் கோர்த்து, மனைவிக்கு நாணமெனும் மணி மாலையை அணிவித்திருந்தான்.
முதல் தடுமாற்றம் போலல்லாது, அடுத்தடுத்த முற்றுகை இலகுவாய் வெற்றியை ஈட்டித் தந்திருந்தது இருவருக்கும்.
புதுமையாய் தோன்றிய உணர்வுக் கொந்தளிப்பை, மீண்டும் மீண்டும் அறிய, அடைய, இருமனமும் தீரா வேட்கை கொண்டது.
நீரும், வேரும் சேர்ந்து, சோர்ந்தது!
நிலவும், இரவும் பிரிய மனமின்றி ஒன்றையொன்று சார்ந்தது!
தனித்திருப்பதால் யாருக்கென்ன லாபம் என இருமனம், தாபம் தணிக்க முனைய, இனிமை கூடி இன்பங்கள் கோடியானது.
………………………………….