Enna kodumai sir ithu 8

Enna kodumai sir ithu 8

அந்த நள்ளிரவு இரண்டு மணிப் பொழுதில்.. விஷ்வாவின் வீட்டின் முன் நின்றிருந்தனர்.. ப்ரியனும், ஆதவனும்..! வேலூரில் ஒதுக்குப்புறமாக இருந்தது ஒற்றை படுக்கையறையைக் கொண்ட விஷ்வாவின் சின்னஞ்சிறிய வீடு..

கொட்டாவியை வெளிப்படுத்திக் கொண்டே, “எப்டிடா உள்ள போறது..? வழியவே காணுமே..” என்றான், ஆதவன்.

ப்ரியன், கண்களால் வீட்டின் உள்ளே செல்ல வழியைத் தேடிக் கொண்டே.. “வெண்மதியப் பார்க்க மொட்டை மாடிக்கு எப்டி வந்தியோ அதே மாதிரி போய்.. விஷ்வாவையும் பார்த்துட்டு வா..” என்றான்.

“எது? டேய்.. என்ன நக்கலா? உன் ஃப்ராடு ஃப்ரெண்டும்.. என் ஆளும் ஒண்ணா..?”

“உன் மனசாட்சியத் தொட்டு சொல்லு.. உன் ஆளு ஃப்ராடு இல்லனு..? நீயே அவள போங்குனு தான் கூப்பிடற..”

“அது… அது நான் செல்லமா அப்டிக் கூப்டுவேன்.. அதுக்காக..? இவன் மூஞ்சியப் பாக்கறதுக்கு நான் பைப் ஏறி வேறப் போகணுமாக்கும்..? காலக் கொடுமைடா சாமி..” என்று நோகாமல் நெற்றியில் அறைந்து கொண்டான்.

அவன் நெற்றியில் இருந்து கையை எடுத்து விட்ட ப்ரியன்.. “அது அப்டி இல்லடா.. என்ன கொடுமை சார் இதுனு சொல்லணும்.. அது தான் நம்ம செலக்ட் பண்ணிருக்க டைட்டில்..” என்றான், கொஞ்சமும் சிரிக்காமல்..!

“இப்டிலாம் மொக்கயா கடிக்கக் கூடாதுனு சஷி மேம் சொல்லிருக்காங்க மச்சி.. ரூல்ஸ ஒழுங்கா படிச்சியா இல்லயா நீ..?” என்று சுட்டு விரலை ப்ரியனின் மூக்கிற்கு நேரே நீட்டிக் கேட்டான், ஆதவன்.

“என் கம்பெனி ரூல்ஸயே ஒழுங்கா படிக்காம தானடா.. இப்டி ராத்திரி நேரத்துலயும், ப்ருந்தாவ விட்டுட்டு உன் கூட சுத்தற நிலைமைல இருக்கேன்..? ஆனாலும் ஆதவ்.. நான் உன்னை விட அதிகமா மொக்க போட்டுட மாட்டேன்..”

உர்ரென முகத்தை வைத்து கொண்ட ஆதவன், “இப்ப உள்ள எப்டி போறதுனு சொல்லப் போறியா? இல்லயாடா..?” என்று கேட்டான்.

“ஸீ ஆதவ்.. விஷ்வா வீட்ல மொட்டை மாடிலலாம் வழி இல்ல.. எனக்கு தெரியும்.. பின்னாடி கிச்சன் பக்கம் ஒரு வாசல் உண்டு.. அது வழியா போக முடியுமா பாக்கலாம்..”

ஆதவன், “சரி வா.. என் தகுதிக்கு இந்த குட்டி சுவரெல்லாம் தாண்ட வேண்டிருக்குது.. எல்லாம் என் நேரம்..” என்று புலம்பிக் கொண்டே அந்த குட்டி காம்பௌண்ட் சுவரைத் தாண்டினான்.

அவனைப் பின்பற்றி ப்ரியனும் சுவரைத் தாண்டிய பின்.. இருவரும் வீட்டின் பின்பக்கம் சென்றனர்.

பின்புறம் முழுவதும் காய்கறி செடிகளும், கீரைகளும் நன்றாக செழித்து வளர்ந்து கிடந்தது. நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இருந்த இடத்தைப் பார்த்து.. ஆதவன், “சூப்பர்ல..?” என்றான்.

“விஷ்வாம்மா வளர்க்கறாங்க.. ‌அவங்களுக்கு கார்டனிங்ல ரொம்ப இஷ்டம்..” கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டே.. கதவைத் தள்ளிப் பார்த்தான்.

உள்பக்கமாய் பூட்டப் பட்டிருந்தது. எப்படி திறக்க முற்பட்டாலும் சத்தம் கேட்டு உள்ளிருப்பவர்கள் எழுந்து விடக் கூடும். என்ன செய்வதெனப் புரியாமல்.. மீண்டும் ஒருமுறை இருவரும் வீட்டைச் சுற்றி வந்தனர். ம்ஹூம்.. எங்கும் வழியில்லை..

வீட்டின் வலப்புற ஜன்னலின் வழியே உள்ளே ஹாலில் பார்வையை செலுத்தினர். விஷ்வாவின் அம்மா..‌ நல்ல தூக்கத்தில் இருந்தார். அருகே அவர் கணவர் ஒழுங்கில்லாத கோணத்தில் படுத்திருந்தார். அவரின் தலைமாட்டில் ஃபுல் மதுபாட்டில்..!

ஆதவன் ஒருமுறை ப்ரியனைப் பார்த்து விட்டு.. கீழிருந்து சிறு கல்லை எடுத்து.. உள்ளே விட்டெறிந்தான். அவன் கல்லையெடுத்து குறிபார்க்கையில் அவன் நோக்கத்தை புரிந்து கொண்ட ப்ரியன்.. “டேய் டேய்.. நோ ஆதவ்‌.. நோ..” என்று ஆட்சேபித்துக் கொண்டிருக்கும் போதே.. ஆதவன் விட்டெறிந்த கல் மிகச் சரியாக தன் வேலையை செய்து.. மதுபாட்டிலை வீழ்த்தியது.

தட்டென்று தன் தலையில் என்னவோ விழுந்ததை உணர்ந்து.. எழுந்தமர்ந்தவர்.. கீழே சாய்ந்திருந்த மதுபாட்டிலைப் பார்த்து.. “செல்லம்.. என்னாச்சு செல்லம்? எப்டி கீழ விழுந்த? அடிகிடிபட்ருச்சா..?” என்று கண்களில் போதையோடு பாட்டிலைத் தூக்கி மேலும் கீழும் பார்த்தார்.

“ஹ்ம்ம்.. அடிலாம் ஒண்ணுமில்ல.. என்னை எழுப்ப தான் கீழ விழுந்துக் கூப்ட்டியா? என் மேல தான் உனக்கு எவ்ளோ அக்கறை செல்லம்..?” என்று மூடியைத் திறந்து.. இன்னும் கொஞ்சம் குடித்துக் கொண்டவர்.. மெதுவாக எழுந்து தள்ளாடிக் கொண்டேப் பின்பக்கம் வந்தார்‌.

இவர்கள் இருவரும் மெதுவாக பின்பக்க பக்கவாட்டு சுவரில் சாய்ந்து நின்று கொண்டனர். நினைத்தது போலவே விஷ்வாவின் தந்தை.. கதவைத் திறந்து பின்பக்கமிருந்த பாத்ருமை நோக்கிப் போனார்.

கிடைத்த இடைவெளியில் இருவரும் உள்ளே புகுந்து விட்டனர். வேகமாக திறந்திருந்த விஷ்வாவின் அறைக்குள் போய் சற்றே மூச்சு வாங்கிக் கொண்டு.. சத்தம் வராமல் இருவரும் அறையைப் புரட்டிப் போட ஆரம்பித்தனர்..

கால்மணி நேரத் தேடலுக்கு பின்.. ஆதவன், “ஆஃபீஸ்ல வச்சிருப்பானோ..?” என்று.. அந்த சின்ன மர பீரோவின் சாவியைத் தேடிக் கொண்டிருந்த ப்ரியனிடம் கிசுகிசுத்தான்.

வாயில் விரல் வைத்து.. இல்லை எனத் தலையாட்டிய ப்ரியன்.. ஆணியில் மாட்டியிருந்த ஜூட் பையிலிருந்து மர பீரோவின் சாவியைக் கைப்பற்றியிருந்தான்.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த விஷ்வாவை ஒரு பார்வை பார்த்து விட்டு மெதுவாக பீரோவைத் திறந்தான். உள்ளே துணிமணிகளையும், லாக்கரில் சொற்ப நகை மற்றும் பணம் தவிர.. வேறொன்றுமில்லை.

ஏமாற்றமாய் நிமிர்ந்தவனின் கண்களில் பட்டது.. அந்த பரண்.. பரண் மேலிருந்த ட்ரங்கு பெட்டி.. அது விஷ்வாவின் தாத்தாவினது என்று ப்ரியனுக்கு தெரியும். தாத்தாவின் பொருட்களை அவர் மீதுள்ள அலாதி ப்ரியத்தால்.. தான் சேகரித்து வைத்திருப்பதாக முன்பு ஒரு முறை விஷ்வா கூறியதாக ஞாபகம்..

ஒருவேளை.. அதனுள் இருக்குமோ..? யோசித்ததை செயல்படுத்த ஆதவனுக்கு கண்ணைக் காட்டினான். மேலே பார்த்த ஆதவன்.. ‘சத்தம் கேட்கும்’ என்று சைகை செய்தான்.

முகத்தில் பிடிவாதம் காட்டி.. ‘பரவாயில்லை வேண்டும்’ என இவன் சைகை செய்தான். ‘தம்ப்ஸ் அப்’ காட்டிய ஆதவன் அங்கிருந்த நாற்காலியில் ஏறி.. பரணில் இருந்து பெட்டியை மெதுவாக நகர்த்தினான். ‘க்றீச் க்றீச்’ என்ற சத்தத்தில்.. விஷ்வா விழித்து விடுவானோ என்ற கவலை கொஞ்சமுமில்லாமல்.. சிறிது சிறிதாக நகர்த்தி வெளியே எடுக்கும் சமயம்.. விஷ்வாவிடம் அசைவு..! சட்டென ஆதவனையும் இழுத்து கொண்டு கட்டிலின் பின்புறம் குனிந்து அமர்ந்து கொண்டான் ப்ரியன்.

மெதுவாக கண்விழித்த விஷ்வா.. சிறு கொட்டாவியுடன் எழுந்தமர்ந்தான். தலைமாட்டில் இருந்த அலைபேசியில் நேரம் பார்த்தவன்.. அருகிலிருந்த சின்ன டீபாயில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடித்து விட்டு.. வெளியே செல்ல எண்ணி.. கட்டிலை விட்டு இறங்கினான்.

இறங்கியவன் வெளியே செல்லாமல்.. நாற்காலி எப்படி இடம் மாறியதென்ற சிந்தனையுடன்.. அதன் அருகே சென்றான்.

ஒன்று.. இரண்டு.. மூன்று..

‘டமால்’ என்ற பெரும் சத்தத்துடன் விஷ்வாவின் தலைக்குள் இருக்கும் கிரிமினல் மூளையைப் பரிசோதிக்க எண்ணி.. அவன் தலை மேல் வந்து விழுந்தது, ஆதவன் ஸ்லாபின் முனை வரை நகர்த்தி வைத்திருந்த.. தாத்தாவின் ட்ரங்கு பெட்டி..!

சிறு அலறல் கூட இல்லாமல் தலை சுற்றி சரிந்து விழுந்தவனைப் பார்த்து.. வாயில் கை வைத்த ஆதவன், “போச்சு.. போச்சு.. ஃப்ரெண்டோட லட்சியத்துக்காக நம்ம திருடனா மாறுறது ஒண்ணும் தப்பே இல்லனு உன்னை நம்பி வந்தேன் பாரு.. இப்டி அநியாயத்துக்கு என்னை கொலகாரனா மாத்திட்டியேடா கொலகார பாவி..!!!” என்று பயந்தவன் போல் படபடவென பொறிந்தான்.

“டேய் கத்தித் தொலையாதடா.. வா.. என்னாச்சு பார்ப்போம்..”

“என்னத்த பார்க்க போற? உசுரு இருக்கா இல்லையான்னா? அவன் தான் சயனைட் முழுங்குனவன் மாதிரி கிடக்கறானே..”

“யூ…” என்று திட்டுவதற்கு வாய் திறந்த ப்ரியன்.. “ச்சு.. போ..” என்று விட்டு, விஷ்வாவின் அருகே சென்று பார்த்தான். விஷ்வா லேசாக கண்களை அசைத்து.. மென்மையாக முணங்கிக் கொண்டிருந்தான்.

“விச்சு.. விச்சு.. என்னடா சத்தம்? இன்னைக்கும் அந்த மாமனார் கெழவனோட ட்ரங்கு பெட்டிய நோண்டிட்டு இருக்கியா? இம்சை..” – வெளியிலிருந்து விஷ்வா அம்மாவின் சலிப்பானக் குரல்.

இங்கு இருவரும் ஒருவருக்கொருவர் அர்த்தம் பொதிந்தப் பார்வையைப் பரிமாறிக் கொண்டு, விஷ்வாவை விட்டு விட்டு.. கீழே விழுந்ததில் தன்னுள் பொத்தி வைத்திருந்த அத்தனைப் பொருட்களையும்.. சிதற விட்டிருந்த பெட்டியை ஆராய்ந்தனர்.

தாத்தாவின் ரிம்லெஸ் கண்ணாடியில் இருந்து.. கடன் கணக்கு எழுதி வைத்திருந்த டயரி வரை எல்லா பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தான் பேரன். கீழே சிதறயது போக பெட்டியின் உள்ளிருந்தவற்றை ஆராய்ந்ததில் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்த தாத்தாவின் வெள்ளை வேஷ்டியின் அடியில் இருந்தது.. அந்த பேப்பர் ஹோல்டர்.

ப்ரியனின் செல்களில் புது ரத்தம் பாய்ந்து.. அவனிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேகமாக எடுத்து பிரித்து பார்த்து.. முகத்தில் வெளிச்சத்தைப் படர விட்டான்.

வந்த வேலை முடிந்ததென்பதைப் புரிந்து கொண்ட ஆதவன்.. எழ முற்படுகையில்.. “என்னடா விச்சு.. சத்தத்தையே காணும்..?” என்று கேட்டு கொண்டே வந்த விஷ்வாவின் அம்மாவைப் பார்த்ததும்.. இருவரும் ஜெர்க்காகி.. மீண்டும் கட்டிலின் பின்புறம் போய் அமர்ந்து கொண்டனர்.

உள்ளே வந்தவர் விஷ்வா கிடந்த கோலத்தைப் பார்த்து விட்டு.. “அய்யோ விச்சு.. என்னடா ஆச்சு..? ஏண்டா இப்டி விழுந்து கிடக்கற? கடவுளே.. இந்த மனுஷன் வேற இப்டி குடிச்சிட்டு மல்லாந்து கிடக்கறாரே.. நான் என்ன பண்ணுவேன்..” புலம்பிக் கொண்டே விஷ்வாவை உலுக்கினார்.

மிகுந்த பதட்டத்தில் இருந்தவர்.. “தண்ணி.. தண்ணி.. எங்க..?” கேட்டு கொண்டே டீப்பாய் பக்கம் திரும்பினார்.. கட்டிலை ஒட்டி இருந்த டீப்பாய் பக்கம் அமர்ந்திருந்த ஆதவன்.. நொடிக்கும் குறைவான நேரத்தில், வாட்டர் பாட்டிலைக் கைப்பற்றி.. சிலை போல் அமர்ந்து கொண்டான்.

அவனின் செயலைப் பார்த்த ப்ரியன் வந்த சிரிப்பை, உதடுகளை மடக்கி அடக்கிக் கொண்டான். ‘என்னைப் பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்குதா’ என்பது போல் இவன் முறைத்து வைத்தான்.

அம்மா.. தண்ணீர் இங்கில்லை என நினைத்து கிச்சனில் இருந்து எடுத்து வர சென்ற நேரத்தில்.. இருவரும் விஷ்வாவைப் பார்த்து.. சாதாரண மயக்கம் தான்.. ஆபத்தில்லை என்று, வந்ததைப் போல் பின்பக்கம் வழியே வெளியேறி விட்டனர்.

மீண்டும் அந்த குட்டி காம்பௌண்ட் சுவரை தாண்டி குதித்ததும்.. ஆதவனைக் கட்டிக் கொண்டு ஆர்பரித்தான் ப்ரியன்.

“டேய் டேய்.. விடுடா.. பாதி கிணறு தான் தாண்டிருக்கோம்.. அதுக்குள்ள மியூசிக்க போட்டுட்டு இருக்க?”

“அது எப்டியும் நீ சக்ஸஸ்ஃபுல்லா பண்ணிடுவ.. எனக்கு நம்பிக்கை இருக்குடா..”

“பண்ணப் போறது ஃப்ராடு தனம்.. இதுல நம்பிக்கை வேறயா? ஹய்யோ..”

“சரி சரி வா.. நேரமாச்சு.. சீக்கிரம் வீட்டுக்கு போய் தூங்கு.. அப்ப தான் காலைல ஃப்ரெஷ்ஷா போய் விஷ்வாவ மீட் பண்ண முடியும்..”

“ஹ்ம்ம்.. நல்லா கோர்த்து விடறடா..” பேசிக் கொண்டே இருவரும்.. தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த ப்ரியனின் நீல வண்ண ஏமியோவில் ஏறிச் சென்றனர்.

error: Content is protected !!