28
உடைந்து போனதோ!
ஆதித்தியாவும் சமுத்திரனும் வீட்டு வாசலில் வந்து இறங்கினர். ஆதித்தியாவின் முகத்திலிருந்த வேதனையைப் பார்த்து சமுத்திரன் சொன்னான்.
“உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் ஐம் தேர் பாஃர் யூ… நீ ஏன் கவலைப்படற…” என்றான் சமுத்திரன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… விந்தியாவிற்கு இந்தப் பிரச்சனையை எப்படி புரிய வைக்கப் போறேன்னு நினைச்சாதான் பயமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
அவனை எதிர்பார்த்திருப்பது போலவே அவன் வந்தவுடன் வாசலில் நின்று அழைத்து வந்தாள் விந்தியா.
“நீங்க வருவீங்கன்னு மாமா இப்பதான் ஃபோன் பண்ணாரு… ஆர் யூ ஓகே?” என்று அவள் கனிவாக விசாரித்த விதம் அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. எந்த பதிலும் சொல்லாமல் அவளின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன அப்படி பார்க்கிறீங்க? வாங்க சாப்பிடலாம்”
“எனக்குப் பசிக்கல… வேண்டாம் விந்தியா”
“நானும் உங்களுக்காகச் சாப்பிடாம காத்திருக்கேனே… பரவாயில்லையா?”என்று விந்தியா சொன்னதும் படிக்கெட்டு ஏறச் சென்றவன் மீண்டும் விந்தியாவை நோக்கி திரும்பி வந்தான்.
அதற்குள் பின்னாடியிருந்து கை தட்டும் ஓசை கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் பார்த்த திசையில் சமுத்திரன் நின்று கொண்டு ஏளனமாய் சிரித்தபடி கைதட்டி கொண்டிருந்தான்.
“சூப்பர் விந்தியா… பிரமாதமான நடிப்பு… ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்” என்றான் சமுத்திரன்.
ஆதித்தியாவிற்கு அவன் செயலின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் விந்தியா அவன் எண்ணத்தை யூகித்து விட்டாள்.
“நடிச்சு நடிச்சு இன்னும் எத்தனை நாளைக்கு ஆதித்தியாவை ஏமாத்த போற?”
“நீ உன் வேலையைப் பாத்துட்டு போ… தேவையில்லாம பேசாதே” என்றாள் விந்தியா கோபமாக.
“இன்னைக்கு நான் பேசியே தீருவேன்… உன்னால என்ன செய்ய முடியும்னு நானும் பாக்குறேன்” என்று சமுத்திரன் பேசியதும் ஆதித்தியா தலை கால் புரியாமல் விழித்தான்.
“என்ன நடக்குது இங்க… உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?” என்று இருவரையும் பொதுவாக ஆதித்தியா கேட்டான்.
“நத்திங் ஆதி… நாம இதைப் பத்தி அப்புறம் பேசலாம்” என்றாள் விந்தியா.
ஆனால் சமுத்திரன் விடுவதாக இல்லை.
“என்ன விந்தியா… உன்னோட வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்னு பயமா இருக்கா?”
விந்தியா எரிச்சல் அடைந்தளாய், “ஹி இஸ் டோட்டலி மேட்” என்றாள்.
ஆதித்தியா இம்முறை கொஞ்சம் தெளிவு பெற்றவனாய், “வெயிட் பண்ணு விந்தியா… அப்படி என்னதான் சொல்றான்னு கேட்போமே” என்று ஆதித்தியா உரைத்ததும் சமுத்திரன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
விந்தியா எதுவும் பேசாமல் மாடிக்குச் செல்லும் படிக்கெட்டுகளில் அமர்ந்து கொண்டு சமுத்திரன் முகத்தைப் பாராதது போல் திரும்பிக் கொண்டாள்.
விந்தியா ஹோட்டலில் இருந்து ஆதாரத்தை எடுத்து வந்தது… ஆதியை மருத்துவமனையில் பார்க்க வராமல் சிவாவிடம் அந்தச் சீடியை கொடுத்தது வரை சமுத்திரன் சொல்லி முடித்தான்.
ஆதியின் முகத்தில் லேசான சலனம் ஏற்பட அவன் விந்தியாவை நோக்கினான்.
“இதெல்லாம் என்ன கதை விந்தியா? சமுத்திரன் சொல்றதெல்லாம் கொஞ்சம் கூட நம்புகிற மாதிரி இல்லையே”
எவற்றை எல்லாம் அவள் சொல்ல தயங்கினாளோ அவற்றை அனைத்தும் சமுத்திரனே சொல்லி முடித்தான்.
“ஹி இஸ் ரைட் ஆதி. நான் என்ன சொல்ல தயங்கிட்டு இருந்தேனோ… அதை எல்லாம் மிஸ்டர். சமுத்திரனே சொல்லி முடிச்சிட்டாரு. தேங்க் யூ வெரி மச்… நீங்க வந்த வேலை முடிஞ்சுதா… கிளம்புங்க” என்று வாசலை காண்பித்தாள் விந்தியா.
ஆதித்தியாவிற்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அதிர்ச்சிக்கு மேல் அதர்ச்சி அவனைச் சில நிமிடங்கள் இயங்க விடாமல் செய்தது.
“நான் கிளம்பணுமா… இருக்கணுமா என்பதை பத்தி ஆதி சொல்லட்டும்… அத பத்தி நீ ஏன் கவலைப்படற? உன் முன்னாள் காதலன் பத்தின ரகசியத்தைப் பத்தி சொல்லிடுவேனோனு பயமா இருக்கா?”
விந்தியா அவன் பேசியதை கேட்டுப் படிக்கெட்டில் இருந்து எழுந்து கொள்ள ஆதி அவள் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.
“வேண்டாம் சமுத்திரன்… உன் பேச்சு சரியில்ல… நீ புறப்படு“ என்றான் ஆதித்தியா.
“என் பேச்சு சரியாதான் இருக்கு… உன் மனைவியோட கேரக்டர்தான் சரியில்ல” என்று சமுத்திரன் சொன்ன மாத்திரத்தில் ஆதித்தியா கோபம் கொண்டவனாய் கை ஓங்கி கொண்டு போக, சமுத்திரன் துளி கூடப் பயமின்றி தொடர்ந்து பேசினான்.
“நீயே விந்தியா கிட்ட கேளு… சிவா அவளோட முன்னாள் காதலனா இல்லையானு”
சமுத்திரனின் பேச்சை கேட்டு ஆதித்தியா கொஞ்சம் யோசனையோடு அடிக்காமல் கையினை இறக்கினான். சிவா என்ற பெயர் அவன் மனதில் வெறுப்பை உண்டாக்கியிருந்தது.
ஆதித்தியா அமைதியாய் சோபாவில் தலையை மேலே சாய்த்தபடி அமர்ந்து கொண்டான். விந்தியா சமுத்திரனின் வார்த்தைகள் கேட்டு அவனை எதுவும் செய்ய முடியாத இயலாமையோடு அங்கிருந்த தூணில் சாய்ந்து கொண்டாள்.
சீதையென வாழும் ஒவ்வொரு பெண்ணுமே வார்த்தை என்ற நெருப்பால் பற்ற வைக்கப்படுவாள் என்பதுதான் இந்தச் சமூக நியதி என்று விந்தியா மனதில் எண்ணிக் கொண்டாள்.
ஆதியின் அமைதி சமுத்திரனுக்கு சாதகமாய் அமைந்தது. அவன் ஆதித்தியாவின் அருகில் அமர்ந்தான்
“கேத்ரீன் பற்றிய விஷயம் முன்னாடியே தெரிஞ்சதை பற்றி உன் பொண்டாட்டி கேட்டாளா? இல்ல சீடியை கொடுப்பதற்கு முன்னாடியாவது இத பத்தி ஏதாச்சும் பேசினாளா? அவ வாழ்கையில் சிவாவுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தில் பாதியாவது உனக்குக் கொடுக்கிறாளானு யோசிச்சியா ஆதி?” என்று அவன் இஷ்டத்துக்கு விந்தியாவின் மீது குற்றங்களைச் சுமத்தி கொண்டிருந்தான்.
விந்தியா சமுத்திரனின் பேச்சை கேட்கக்கேட்க அவனை அறைய வேண்டும் போல் கோபம் பொங்கி கொண்டு வந்தது. ஆதித்தியாவின் மெளனம் விந்தியாவை எதுவும் செய்ய முடியாமல் தடுத்தது.
ஆதித்தியா மீண்டும் எழுந்து விந்தியாவின் அருகில் வந்து நின்றான்.
“கேத்ரீன் பத்தி உனக்குத் தெரிஞ்சது… அத பத்தி நீ என்கிட்ட சொல்லாம மறைச்சது… அப்புறம் அந்த சீடியை நீ போலிஸ்கிட்ட கொடுத்தது… இது எல்லாதுக்கும் நிச்சயமா உன்கிட்ட நியாயமான காரணம் இருக்கும். அதை நீ விளக்க வேண்டிய அவசியமும் இல்ல… நானும் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமுமில்ல… நான் உன்னை முழுசா நம்புறேன்டி” என்று ஆதித்தியா சொன்னதும் சமுத்திரனின் முகம் கறுத்துப் போனது.
அத்தனை நேரம் தன் நிலைமையைப் புரிய வைக்க முடியாமல் வாடிக் கொண்டிருக்க இந்த வார்த்தைகள் விந்தியாவை உயிர்ப்பித்தன.
விந்தியா விவரிக்க முடியாத ஆனந்த்துடன், “தேங்க் யூ… ஆதி… தேங்க் யூ சோ மச்…” என்று சொல்லியபடி ஆதியின் தோள்களின் மீது சாய்ந்து கொண்டு கண்ணீர் வடித்தாள். ஆதித்தியா அவளின் தலையை வருட சமுத்திரன் அங்கே நடப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் வெளியே சென்றான்.
விந்தியா சாய்ந்தபடி இருக்க ஆதித்தியா அவளிடம் தன் மனதில் தோன்றிய எண்ணத்தை உரைத்தான்.
“நாம இப்படியே சந்தோஷமா இருக்கணும்னா… அந்த சிவா நம் வாழ்கையில் இருக்கக் கூடாது” என்றான்.
உடனே விந்தியா அவனின் கைகளை விலக்கி விட்டு நிமர்ந்து கொண்டாள். கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி அவனை உற்றுப் பார்க்க ஆதி மேலும் சொன்னான்.
“உன்னுடைய பாஸ்ட் பத்தி எனக்குக் கவலையில்ல… அதுல சிவா என்ன ரோல் வேணா பிளே பண்ணி இருக்கட்டுமே… ஐ டோன்ட் கேர்… பட் இனிமே அவன் நம்ம லைஃப்ல வரவே கூடாது”
ஆதித்தியாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அவனை விட்டு விலகி வந்தாள்.
“நமக்கு அதுதான் நல்லது விந்தியா” என்று மீண்டும் அவள் அருகில் சென்றவனிடம் இருந்து விலகி நின்றாள்.
“அங்கயே நில்லுங்க ஆதி… என்கிட்ட வராதீங்க…”
“ஏன்?” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.
“சிவாவை விட்டுக்கொடுத்தால்தான் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னா… அப்படி ஒரு லைஃப் எனக்கு வேண்டவே வேண்டாம்… சாரி” என்றாள்.
“இதுக்கு என்ன அர்த்தம்… என் கூட வாழ உனக்கு விருப்பமில்லையா?”
“சத்தியமா அப்படி இல்ல. என் மனசிலிருந்து சொல்றேன்… நான் உங்களை விரும்புறேன் ஆதி… நான் உங்க கூட வாழணும்னு ஆசைப்படறேன்… யூ ஆர் மை லவ். அதுக்காகவெல்லாம் எனக்கு எப்பவுமே சப்போர்ட்டா இருந்த என் நண்பனை உதறித் தள்ளணும்னு சொன்னா… அது இம்பாஸிபிள் ஆதி” என்றாள்.
“அவனுக்காக நீ என்னை வேண்டாம்னு சொல்ற… அப்போ அவன்தான் உனக்கு ரொம்ப முக்கியம் இல்ல”
விந்தியா சோகம் கலந்த சிரிப்போடு, “மூளை, இதயம் இந்த இரண்டில் முக்கியத்துவம் வாய்ந்தது எதுனு நீங்க சொல்லுங்க… அப்புறம் உங்களில் யார் முக்கியமானவங்கன்னு நான் சொல்றேன்” என்று அவனைக் கேட்டாள்.
ஆதித்தியா மெளனமாக நிற்க விந்தியா படிக்கட்டு ஏறி அவள் அறைக்குள் சென்றாள்.
ஆதித்தியாவும் சிறிது நேரம் கழித்து அவன் அறைக்கு செல்ல விந்தியா அவளுடைய பொருட்களை எடுத்து பெட்டிக்குள் அடுக்கிக்கொண்டிருந்தாள்.
“விந்தியா ஸ்டாப் இட்” என்று அவள் அடுக்குவதை தடுத்தான்.
“இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சனை?”
“அந்த சிவா என் பார்வைக்கு நல்லவனா தெரியல”
“அப்படின்னா உங்க பார்வையிலதான் தப்பு இருக்கு”
“என் வார்த்தையில உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“எனக்கு சிவா மேல நம்பிக்கை இருக்கு”
“அவன் உனக்கு உண்மையான நண்பனா இருந்தா… என்னையும் நண்பன மாதிரிதானே பார்க்கணும்? ஆனா அவன் ஏன் என்னை எதிரி மாதிரி நடத்தணும்? அவனுக்கு என் மேல கோபமா இல்ல உன் மேல விருப்பமா?”
“போதும் நிறுத்துங்க ப்ளீஸ்… எங்க நட்பை புரிஞ்சுக்க ஒரு தகுதி வேணும்… சாரி அது உங்கக்கிட்ட இல்ல” என்று விந்தியா சொல்ல இதே வார்த்தையை அச்சுப் பிசகாமல் சிவா சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.
இதற்கு பிறகு ஆதித்தியா விந்தியாவைத் தடுத்து நிறுத்தவில்லை.
கடைசியாக விந்தியா தன் பெட்டியை எடுத்துக் கொண்டு போகும் போது வழிமறித்து நின்றான்.
“உங்க மாமனார் வந்து உன்னைப் பத்தி கேட்டா நான் என்ன சொல்லணும்? நன்றிக்கடனுக்காக செய்த கல்யாணம் இன்றோடு முறிஞ்சு போச்சுனு சொல்லணுமா?”
அவளுக்குக் குத்தலாக இருக்க வேண்டுமென்றே ஆதித்தியா அப்படி பேசினான்.
“எனக்கான உரிமையையும் சுதந்திரத்தையும் தொலைச்சிட்டு அவரோட மகன் கூட எனக்கு வாழ விருப்பமில்லைனு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு விந்தியா கடந்து சென்றாள்.
அவளுக்காக வாங்கிய ரோஜாக்கள் படுக்கை மீது துவண்டு கிடக்க கோபத்தில் அதை கைகளில் எடுத்து வீசி எறிந்தான். ஏற்கனவே ஆதியின் கைகளில் இருந்து விந்தியா காப்பாற்றிய பூ ஜாடி அந்தப் பூக்கள் பட்டு சாய்ந்து விழுந்து உடைந்தது.
ஈகோ என்ற கண்ணாடி துகள்களால் மென்மையான உறவுகளைக் கையாள்வதால், அது கிழிந்து போகும் என்பதை ஆதித்தியா மட்டுமல்ல நாம் யாருமே உணர்வதில்லை.
29
மீண்டும் சுழற்சி
விந்தியா பெட்டியோடு வீட்டு வாசலில் நின்றிருப்பதை வருண் பார்த்து கலக்கமுற்றான். அவளை உள்ளே கூட அழைக்காமல் ஏதேதோ கேள்விகளை வரிசையாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
விந்தியா என்ன சொல்வதென்று புரியாமல் நிற்க நந்தினி ஓடி வந்து பெட்டியை வாங்கினாள்.
“நல்ல மரம் மாதிரி நின்னுட்டு இருக்கீங்க… வழியை விடுங்க” என்று வருணிடம் சொல்லிவிட்டு நந்தினி விந்தியாவை உள்ளே அழைத்தாள்.
விந்தியா உள்ளே நுழைந்ததுமே சுவற்றில் தரையில் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டாள்.
“மாமாவை ஏன் அரெஸ்ட் பண்ணாங்க? அதைப் பத்தி தெரிஞ்சதிலிருந்து அம்மா ரொம்ப அப்செட்டா இருந்தாங்க. இதுல நீ வேற இங்க வந்திருக்கே… என்னதான் அக்கா நடந்துச்சு?”
“நான் இங்க வரக் கூடாதா? இது என் வீடில்லையா வருண்?”
“சேச்சே… அப்படி இல்லக்கா…”
“அப்புறம் என்ன? காலையில எல்லாவற்றையும் தெளிவா சொல்றேன்… இப்போ போய்ப்படு” என்றாள் விந்தியா அதிகார தொனியில்.
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் அண்ணி… முதலில் வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தாள் நந்தினி.
ஆதித்தியாவை சாப்பிட அழைக்கும் போதுதான் இத்தனை பிரச்சனையும் நடந்து முடிந்தது. அங்கே அவன் சாப்பிட்டிருப்பானோ என்று எண்ணுகையில் அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது.
“என்ன அண்ணி?” என்று அவள் வேதனையைக் கண்டு நந்தினி பதறினாள்.
“எனக்குப் பசிக்கல நந்தினி. நீ போ… என்னை கொஞ்ச நேரம் தனியா விடு” என்றாள் விந்தியா.
அவளை மேலும் வேதனைப்படுத்தாமல் அவர்கள் இருவரும் அங்கிருந்து அகன்றனர்.
கமிஷனர் ஆபிஸுக்கு போயிட்டு திரும்பி வந்த சந்திரகாந்திற்கு நடந்தவை எல்லாம் சண்முகம் மூலமாக தெரிய வந்தது. கோபத்தோடு ஆதித்தியாவின் அறைக்குச் சென்றவர் ஆதியை பார்த்த மாத்திரத்தில் சிலை போல நின்றார்.
ஆதித்தியா சிதறிய பூக்களுக்கும், உடைந்த ஜாடிக்கும் அருகாமையில் சுவற்றில் தலை சாய்த்தபடி அப்படியே நொறுங்கி போயிருந்தான்.
அவனின் குறும்புதனத்தையும் கோபத்தையும் அதிகாரத்தையும் பார்த்த சந்திரகாந்திற்கு அவனின் இந்த வேதனையும் வலியும் தோய்ந்த முகம் புதிதாய் தோன்றியது. அவனை அப்படிப் பார்க்க முடியாமல் மீண்டும் தன் அறைக்கே சென்றார் சந்திரகாந்த்.
விடிந்து சில மணி நேரங்களில் சிவா தன்னுடைய பைக்கில் போலிஸ் ஸ்டேஷன் வந்து இறங்கினான். சிவாவின் வருகையைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோரும் தங்கள் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர்.
அவன் உள்ளே நுழைந்தவுடன் அங்கே இருந்த கான்ஸ்டபிளை அழைத்து, “வேணு சார் வந்துட்டாரா? “என்று கேட்டான்.
“இல்ல சார்… இன்னைக்கு அவரோட பொண்ணை காலேஜ் சேர்க்கிற விஷயமா போயிருக்காரு” என்றான்.
இதைக் கேட்டதும் சிவா தலையாட்டிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவுடன் அவன் எதிர்பாராமல் கான்ஸ்டபிள் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது.
“அசிஸ்டன்ட் கமிஷனர் ரொம்ப நேர்மையானவர் ஆச்சே… அவர் பொண்ணுக்கு எப்படி வித்யா மெடிக்கல் காலேஜில் சீட் கிடைச்சதுனு புரியலயே”
இதற்கு மற்றொரு கான்ஸ்டபிள் சொன்ன பதில்தான் சிவாவை கலவரப்படுத்தியது.
“ஒவ்வொரு மனிஷனுக்கும் ஒவ்வோரு விதமான விலை இருக்கும்” என்றான்.
சிவாவின் மூளை ரொம்ப வேகமாய் வேலை செய்தது. சட்டென்று லேப்டாப்பை இயக்கி வித்யா மெடிக்கல் காலேஜ் பற்றிய விவரங்களை தேடினான்.
அது சென்டிரல் மினஸ்டர் வித்யாதரனுடையது. அவனைப் பற்றிய விவரங்களைப் பற்றித் தேடிப் பார்த்தான்.
அவனின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் செய்திருந்தான். வி. டி ரியல் எஸ்டேட். ‘வி. டி’ என்ற வார்த்தை எங்கயோ கேள்விப்பட்டதாய் தோன்ற அதை அவன் ரொம்பவும் பிராயத்தனப்பட்டு நினைவுப்படுத்த முயற்சி செய்தான்.
திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்ததும் முன்னாடி இருந்த டேபிள் மீது ஓங்கி ஒரு குத்து குத்தி ”எஸ்” என்றான்.
உடனே கான்ஸ்டபிள் அவனருகில் வந்து “சார்” என்றார்.
“ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
கோவாவில் உள்ள எம். வி. டி லிக்கர் ஃபாக்டரி… அதுவும் வித்யதாரனுடையது என்பது அவனுடைய யூகம். இந்த எம் என்ற வார்த்தை மக்களை ஏமாற்ற அவன் வைத்த குறியா இல்லை அதற்கும் ஏதேனும் அர்த்தம் இருக்குமோ என்று யோசித்தான்.
நம் வாசகர்கள் கூட மறந்திருக்கக் கூடும். ஆனால் சிவாவிற்கு ஞாபகம் பலமாய் இருந்தது. அந்த எம். வி. டி லிக்கர் ஃபாக்டரியை பத்தி வேணுவிடம் சொல்லும் போது ஏதேதொ கதை சொல்லி வேணு அவனை திசை திருப்பியதை நினைவுப்படுத்தினான்.
அதுவும் இன்றி லாக்கரை உடைக்கலாம் என்று சொல்லும் போது அதற்கு மறுப்புத் தெரிவித்தது, லாக்கரின் ரகசிய எண்ணை பற்றி முதலில் வேணுவிடம் சொன்னது, அடுத்த நாள் அவன் லாக்கரை திறந்த போது அதில் முக்கியமான எந்த விஷயமும் கிடைக்காதது, இவை எல்லாம் வேணுவின் லீலைகள் என்று தோன்றிற்று. ஆனால் இவை அனைத்துமே இப்போதைக்கு சிவாவின் யூகம் மட்டும்தான்.
கடைசியாக ஆதியின் விசாரணை நினைவுக்கு வர, அதில் ஆதி கேத்ரீன் தானாக விழுந்ததை அவன் பார்த்ததாக சொன்னது… இந்த கேஸை ஆரம்பித்திலிருந்து தனக்கு ஏற்பட்ட யூகமும் சந்தேகமும் தவறா என்று கேள்வி மனதில் எழுந்தது. ஆதியும் கொலையாளிகளுக்கு உடந்தையா என தவிர்க்க முடியாத கேள்வி மனதில் ஏற்பட்டது. அந்தக் கேஸ் மீண்டும் அவனை சுழற்சியில் தள்ளியது.
சிவா தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்க்கு விரைந்தான். படுக்கையின் மீது அமர்ந்திருந்த வனிதாவிடம் “காபி” என்றான்.
அவன் உடைகளை மாற்றிக் கொண்டு வந்த பின்பும் அவள் அங்கேயே அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“ஏ வனிதா” என்று அவள் தோள்களை உலுக்கியதும் சிவாவை நிமிர்ந்து பார்த்தாள்.
“நீங்கதான் ஆதித்தியா மாமாவை அரஸ்ட் பண்ணீங்களா?” என்று வனிதா கேட்டதும் அவளின் வருத்தம் புரிந்தவனாய், “நீ நினைக்கிற அளவுக்கு ஒண்ணுமில்ல… நான் பாத்துக்கிறேன்” என்றான்.
“என்ன நீங்க பாத்துப்பீங்க? அக்கா அம்மா வீட்டில இருக்கா… தெரியுமா உங்களுக்கு?” என்றாள்.
அப்பொழுது சிவாவிற்கு ஆதிக்கும் தனக்கும் நிகழ்ந்த வாக்குவாதம் நினைவுக்கு வர அதன் விளைவாக ஆதி விந்தியாவிடம் கோபித்துக் கொண்டிருப்பானோ என்று தோன்றியது.
பல நேரங்களில் சிவாவின் யூகம் சரியாகவே இருந்தது. வனிதாவின் கலக்கத்தைத் தீர்க்க அவன் வனிதாவை விந்தியாவிடம் அழைத்து சென்றான்.
விந்தியாவிற்கு காலையிலிருந்து மாதவியைத் தேற்றவே சரியாக இருந்தது. விந்தியாவின் தன்னம்பிக்கையான பேச்சை தவிர்த்து வேறு எந்த வித பிடிப்பும் மாதவிக்கு ஏற்படவில்லை.
ஆதித்தியாவை பார்த்து பேச வேண்டும் என்று மாதவி பிடிவாதமாய் இருக்க, ‘என்ன செய்யப் போகிறோம்’ எனக் குழம்பி கொண்டிருந்த நேரத்தில்தான் வனிதாவும் சிவாவும் வீட்டிற்கு வந்தனர்.
விந்தியா மாடியில் நின்று கொண்டிருக்க வனிதா நடந்தவற்றை எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தாள். வனிதா மாதவியின் அழைப்பிற்கு கீழே செல்ல சிவாவும் விந்தியாவும் பேசத் தொடங்கினர்.
ஒரு சில மணி நேரங்களில் விந்தியா சிவாவை சண்டையிட்டு கீழே இறங்கி போகச் சொன்னாள்.
“இத பார் விந்தியா… ஆதிக்கிட்ட சண்டை போடணும்னு நான் ப்ளான் பண்ணல… அதுவா நடந்து போச்சு”
“அதெப்படி அதுவா நடக்கும்… உனக்கு வாய் ரொம்ப அதிகம்” என்றாள்.
“ஆதிதான் முதல்ல வம்புக்கு வந்தான்”
“சரி இருக்கட்டும்… அதுக்காக நீ வரைமுறை இல்லாம பேசுவியா?”
“பாத்தியா வனிதா… நேத்து வந்தவனுக்காக இவ என்கிட்ட சண்டை போடுறா. இனிமே நாம இங்க இருக்கக் கூடாது… வா கிளம்பலாம்”
வனிதாவின் முகத்தில் ஈயாடவில்லை. சிவாவின் கையைப் பிடித்துக் கொண்டு விந்தியாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே போனாள்.
“இனிமே நீ என் முகத்தில் கூட விழிக்காதே” என்றாள் விந்தியா.
“நீயும்தான்” என்று சொல்லிவிட்டு வனிதாவை அழைத்துக் கொண்டு வாசலை கடந்து போக, அங்கே சந்திரகாந்த் சமுத்திரனுடன் வந்திருக்க அவர்களைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து சென்றான்.
இவர்கள் பிரச்சனையில் சந்திரகாந்தை கவனிக்காத மாதவி தன் தவறை உணர்ந்து மரியாதையுடன் உள்ளே அழைத்தாள்.
விந்தியாவிற்கு சமுத்திரனை பார்க்க பார்க்க எரிச்சலாய் இருந்தது. கண்களால் எரிப்பது போல் அவன் அவளைப் பார்த்த பார்வையும், ‘தான் நினைத்தது போல் ஆதித்தியாவிடம் இருந்து உன்னைப் பிரித்து விட்டேன்’ என அவன் திமிராகப் பார்த்த பார்வையும் யார் பார்வையிலும் படவில்லை.
விந்தியாவை அழைத்துச் செல்ல வந்த சந்திரகாந்தின் எண்ணம் விந்தியாவின் பிடிவாதத்திற்கு முன் நிறைவேறவில்லை. கொஞ்சம் சோகம் கலந்த முகத்தோடு அவர் புறப்படும் நேரத்தில் ஆதித்தியாவின் துறுதுறுப்பு மறைந்து சோகமயமாய் இருப்பதாய் சொன்னார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் விந்தியா உணர்ச்சிவசப்பட்டு அவர்களை வழியனுப்பாமல் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள். எதையும் தைரியமாய் எதிர்கொள்ளும் விந்தியாவின் நிலைமையும் நேரெதிராய் மாறி இருப்பதை சந்திரகாந்த் கண்ணெதிரே கண்டார்.
இவர்கள் இருவருமே வெகு நாட்களுக்குப் பிரிந்திருக்க மாட்டார்கள் என மாதவிக்குத் தைரியம் சொல்லிவிட்டு புறப்பட்டார். முடிந்த வரை அவர்களைச் சேரவே விடக்கூடாது எனச் சமுத்திரன் எண்ணிக் கொண்டான்.
வனிதா குழப்பத்தோடு வீட்டு வாசலில் இறங்க சிவா தன் அறைக்குள் சென்றான்.
விந்தியாவைப் பற்றி சரோஜாவும் தனசேகரும் விசாரிக்க அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். சிவா தன் கையிலிருந்த ஃபைலை ஆர்வமாய் புரட்டிக் கொண்டிருக்க வனிதா அவன் முன்னே வந்து,
“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என்றாள்.
“ம்…” என்றான் பக்கங்களைப் புரட்டியபடியே…
“நீங்க சண்டை போட்டீங்களா இல்ல நடிச்சீங்களா?” என்றாள்.
சிவா அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“சந்தேகமே வேண்டாம்… நடிப்புதான்”
வனிதா அப்படியே வாயில் கை வைத்து கொண்டாள்.
“நாங்க எல்லாம் எவ்வளவு டென்ஷனாகிட்டோம் தெரியுமா?”
“நீங்க எங்க டார்கெட் இல்ல… வேற ஒருத்தனுக்காக அந்த நடிப்பு.. நம்மை நாமே பலவீனமாகக் காட்டிக்கிட்டாதான் எதிரியோட பலத்தைக் குறைக்க முடியும்” என்றான்.
“அப்படின்னா?”
“ஆமை முயலை எப்படி ஜெயிச்சிதோ அப்படி”
வனிதாவிற்கு அப்போதும் புரியவில்லை. அதற்கு மேல் விளக்கம் கேட்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
சிவா விந்தியாவின் கைப்பேசியில் அழைத்தான். ஆதித்தியாவின் நினைப்பிலிருந்து மனதை தேற்றிக் கொண்டவளாய் அழைப்பை ஏற்றாள்
“சொல்லு சிவா… லிஸ்டை செக் பண்ணியா?” என்றாள்.
“நோ யூஸ்… என்னால கண்டுபிடிக்க முடியல”
“அப்போ என்ன பண்ணலாம்?”
“நீ அந்த ஃபோட்டோவை கொண்டு வா”
“அது ஆதித்தியா ரூம்ல இருக்கு”
“சோ வாட்?”
“நான் அவன் கூட சண்டை போட்டுட்டு வந்திருக்கேன்”
“உன்னை யாரு சண்டை போட சொன்னது? கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமில்ல”
“இதெல்லாம் எனக்கு தேவைதான்” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“நாளைக்கு அந்த ஃபோட்டோ எனக்கு வேணும்”
“முடியாது சிவா. நீ போலிஸ்தானே… நீயே முயற்சி பண்ணி பாரு”
“ஏற்கனவே உன் புருஷனுக்கு என்னைப் பிடிக்காது… இதை வேற செஞ்சா வேண்டாத வம்பு. நான் ஒரு ஐடியா சொல்றேன்… ஆதித்தியா இல்லாத டைமா பார்த்து தூக்கிட்டு வந்துரு”
“நீயும் உன் ஐடியாவும்… அவன் கிட்ட மாட்டினா செத்தேன்”
“என் திங்க்ஸை விட்டுட்டுப் போயிட்டேன்… எடுக்க வந்தேன்னு சொல்லு”
“என்னை மாட்டி விடறதுக்கு முடிவு பண்ணிட்ட… வேற வழியில்ல… போய் தொலைக்கிறேன்”
“உன் புருஷனை காப்பாத்த இருக்கிற பெரிய எவிடன்ஸ்… விட்டுராதே” என்று சொல்லிவிட்டுப் ஃபோனை துண்டித்தான் சிவா.
ஆதியின் வேதனையோ கோபமோ இரண்டுமே தனக்கு பாதிப்பை தரக் கூடியதென மனதில் நினைத்து கொண்டாள் விந்தியா.
30
விஸ்வரூபமாய் நிற்கிறாள்
ஆதித்தியா அன்று காலையில் சமுத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தான். உள்ளே வந்ததும் சுபா அளவில்லா ஆனந்தத்தோடு வரவேற்றாள்.
“இப்பதான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா அண்ணா?” என்று கேட்டாள் சுபா.
“இப்ப கூடச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கு” என்றான் ஆதி.
“பரவாயில்லண்ணா… ஆனா அண்ணியோடு வந்திருந்தால் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் “
“உங்க அண்ணிக்கு யார் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது… முக்கியமா நான்” இப்படி அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே சுபா சமுத்திரன் மகன் மகளான சுபாஷும், சமுத்திராவும் வீட்டைச் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
சுபா அவர்கள் இருவரையும் ஆதியின் அருகில் அழைத்தாள். ஆதித்தியாவை பார்த்ததும் அந்த வாண்டுகள் ஒன்றும் புரியாமல் விழித்தன.
“என் டார்லிங்க்ஸுக்கு மேஜிக்கு பிடிக்குமா?” என்றான்
இருவரையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, “உங்களுக்கு மேஜிக் தெரியுமா அங்கிள்?”என்றார்கள்.
“ம்… உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும்… சாக்லேட்டா பிஸ்கேட்டா?” என்று கேட்டான்.
அவர்கள் இருவருமே சுபாவின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளின் பாவனைக்கு ஏற்றவாறு, “அங்கிள் பிஸ்கேட்” என்றனர்.
“என் கையில இப்போ ஒண்ணுமில்ல… கம்மான் வாட்ச்”, என்று சொல்லிவிட்டு விரல்களைப் பல விதமாய் அசைத்து பிஸ்கேட் பாக்கெட்டை வரவழைத்தான்.
ரொம்பவும் சிலமணி நேரங்களில் அவர்கள் இருவருமே ஆதித்தியாவிடம் ஒட்டிக் கொண்டனர். சமுத்திரனின் வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றான். அவன் உள்ளே நுழைய சமுத்திராவும் சுபாஷும் தெறித்து ஓடினர்.
“ஏ வா ஒடிடலாம்… அப்பா அடிப்பாரு”
சமுத்திரன் ஏதேதொ சட்ட புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்க ஆதித்தியா அங்கே இருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.
ஆதித்தியாவை கவனித்த சமுத்திரன், “பரவாயில்லயே… எங்க ஞாபகம் கூட இருக்கா உனக்கு?” என்றான்.
“ஏன் அப்படி கேட்கிற?” என்று சொல்லியபடி அங்கிருந்த டிவியை ரிமோர்ட்டில் ஆன் செய்தான்.
“நீ விந்தியாவைப் பிரிஞ்ச துக்கத்தில் குடிச்சிட்டு தேவதாஸ் மாதிரி ரோட்டில விழுந்து கிடப்பியோனு…”
சமுத்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டி. வி நியூஸில் ஆதித்தியாவை தரைகுறைவாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். அவன் கேத்ரீனிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததினால்தான் அவள் தவறி விழுந்ததாக தெரியாத உண்மையை மக்களிடம் தெளிவாகச் சேர்த்து கொண்டிருந்தனர்.
இன்னும் ஆங்கில நியூஸ் சேனல்களில் அவனின் ஃபோட்டோவை போட்டு செகக்ஷுவல் ஹராஸ்மென்ட் என்று புதுப்புது வார்த்தைகளைப் பொருத்தி நான்கு பேர் நியாயம் பேசிக் கொண்டிருந்தனர்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தியாவிற்கு கோபத்தைத் தாண்டி வெறி ஏற ரிமோட்டை அடிக்கத் தூக்கினான். அதற்குள் சமுத்திரன் கைகளிலிருந்து ரிமோட்டை பிடுங்கிக் கொண்டான்.
“நீ டிவியை உடைச்சிட்டு போயிடுவ… நான்ல என் மாமனாருக்குப் பதில் சொல்லணும்” என்றான் சமுத்திரன்.
“என்னடா இதெல்லாம்? என்ன மேட்டர்னே தெரியாம அவனுங்க இஷ்டத்துக்கு கதை அளந்துட்டு இருக்கானுங்க” என்றான் ஆதித்தியா வெறியோடு.
“இதுக்கெல்லாம் காரணகர்த்தாவை விட்டுட்டு டிவி மேலயும் சேனல்காரன் மேலேயும் கோபப்படறதுல என்ன யூஸ்?”
“யார பத்தி பேசற?”
“நீ கல்யாணம் பண்ணியே ஒரு உத்தமி… அவள பத்திதான் பேசிட்டிருக்கேன்”
“நீ இன்னும் அந்த விஷயத்தை விடலியா?”
“நல்லவனா இருடா… அதுக்காக இவ்வளவு நல்லவனா இருக்காதே”
“நான் அன்னிக்கு கேத்ரீனை பார்க்க போனதுக்கு அவ என்ன பண்ண முடியும்… எல்லாம் என் விதி” என்று ஆதி தலையில் கை வைத்துக் கொண்டான்.
“விதி இல்லடா… எல்லாம் விந்தியாவோட சதி. தியாகி வேஷம் போட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா… ஹோட்டல் ஆதித்தியாவோட மொத்த அட்மினிஸ்ட்டிரேஷனை தன் கையில வைச்சுகிட்டா…
உனக்கு உரிமையான பணத்தையே கேட்க விடாம, உன்னைப் ப்ரயின் வாஷ் பண்ணி, பேங்கில லோன் அப்ளை பண்ண சொல்லி கடன்காரன் ஆக்கிட்டா… இப்போ அவ முன்னாள் காதலன் மூலமா போலீஸில் உன்னை சிக்கவைச்சிட்டா… நாளைக்கு உன்னை மொத்தமா வெளிய வர விடாம பண்ணி சொத்தை எல்லாம் தான் பேரில மாத்திக்கப் பார்க்கிறா”
என்று சமுத்திரன் சொல்லி கொண்டிருக்க ஆதித்தியா கோபத்தில் அவனை வெளிவரவிடாமல் சமுத்திரன் அமர்ந்திருந்த இருக்கையில் கால் வைத்து அவனின் கழுத்தை பிடித்தான்.
“ஃபிரண்டுனு பார்த்தா ரொம்பத்தான் ஓவரா பேசுற நீ. சொத்து மேல ஆசைப்படறவளா என்னை ஒரு நிமிஷத்தில தூக்கி எறிஞ்சிட்டு போனா…
என் பணத்தைப் பாத்து மயங்கி என் காலடியில் விழுந்த நிறைய பொண்ணுங்கள பாத்திருக்கேன்… ஆனா எப்பேர்ப்பட்ட பணத்தையும் பார்த்து மயங்கி தன்னுடைய தன்மானத்தையும் தன்னையும் விட்டு கொடுக்க மாட்டா…
பணம் முக்கியம்னா அந்த தலைவணங்காத திமிரு எதுக்கு… எவன்கிட்ட வேணா படிஞ்சு போயிடலாமே…
தன்னோட சுயநலத்தை முக்கியமா நினைக்கிறவளா குடும்பத்தை இத்தனை வருஷமா சுகதுக்கத்தை மறந்து தாங்கிட்டிருந்தா… எத்தனை கோடியாயிருந்தாலும் அவளின் சம்பாத்தியம் தவிர மற்ற எல்லோருடைய பணமும் அவளுக்கு கால் தூசிக்கு சமானம்…
இப்ப கூட சிவாகிட்ட தப்பு இருக்குமோனு யோசிச்சேனே தவிர விந்தியாகிட்ட தப்பு இருக்கும்னு ஒரு செகண்டு கூட யோசிக்கல…
எப்பேர்பட்டவனாக இருந்தாலும் தப்பா அவள ஒரு பார்வை பார்த்தானா அத்தோட அவன் செத்தான்…
நீ அவ்வளவு பேசியும் உன்னை விட்டு வைச்சிருக்கானா… நீ என் ஃபிரண்டுங்கிற ஒரே காரணத்தாலதான்… என்ன சமுத்திரன் மண்டையில ஏறுச்சா? இனிமே விந்தியா என்ற பேரை கூட நீ சொல்லக் கூடாது” என்று அவன் சொல்லி முடித்துக் கழுத்தை விடும் போது சமுத்திரன் விழி பிதுங்கி தொண்டை குழி அமுங்கி சாவின் விளிம்பை தொட்டு விட்டு வந்தான்.
ஆதித்தியா அத்தோடு அந்த அறையை விட்டு கோபத்தோடு வெளியேறினான். சமுத்திரனுக்கு கொஞ்ச நேரத்திற்கு யோசிக்கும் திறமை அற்றவனாய் கிடந்தான். சுயநினைவு வந்த போதுதான் தெரிந்தது விந்தியா அவன் மனதில் வானின் உயரத்திற்கு விஸ்வரூபமாய் நிற்கிறாள் என்று.
விந்தியா கொஞ்சம் பயத்தோடே ஆதித்தியா வீட்டை அடைந்தாள். உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த சண்முகம் விந்தியாவை நெகிழ்ச்சியோடு வரவேற்றான்.
விந்தியா வந்தவுடன் ஆதித்தியாவை பற்றியும் சந்திரகாந்த்தையும் பற்றியும் முதலில் விசாரித்தாள். இருவருமே வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் இதுதான் சமயம் என்று மாடி ஏறினாள். சண்முகத்திடம் ஆதித்தியா வந்தால் தான் இங்கிருப்பதாகச் சொல்ல வேண்டாமென சொல்லிவிட்டு போனாள்.
அறைக்குள் நுழைந்ததும் ஆதித்தியாவின் பொருட்கள் இருக்கும் கப்போர்ட்டை திறந்தாள். திறக்க முடியாமல் கதவு பூட்டியிருந்தது.
“இத்தனை நாளா திறந்திருக்கும்… இப்ப மட்டும் பூட்டுவானேன்?” என்று புலம்பியபடி விந்தியா சாவியைத் தேடினாள்.
விந்தியா ஒருமுறை ஆதித்தியா எதையோ அவனுடைய கப்போர்ட்டில் தேடும்போது அவனுடைய கல்லூரி ஃபோட்டோவை தவறவிட்டான். ஆனால் அவள் எடுக்கும் முன் ஆதித்தியாவே மீண்டும் அதை எடுத்து வைத்தான். அந்த ஃபோட்டோதான் சிவா விசாரணைக்காகக் கேட்கும் முக்கியமான ஆதாரம்.
கடைசியில் டிராவில் இருந்த சாவி கப்போர்ட்டை திறக்க உதவியது. கலைந்து போயிருந்த அந்தப் பைஃல்களுக்குள் எப்படி கண்டுபிடிப்போம் என விந்தியாவிற்கு மலைப்பாய் இருந்தது.
“அந்த சிவா இப்படி வம்புல மாட்டி விட்டுட்டானே” என்று புலம்பியபடி எல்லாவற்றையும் வரிசையாக திறந்து பார்த்து நொந்து போனாள். கண்டுபிடிக்கவே முடியாதோ என துவண்டு போன போது அந்தக் கப்போர்டின் அடியில் அந்த ஃபோட்டோ ஒட்டி கொண்டிருந்ததைப் பார்த்து விந்தியாவின் மனம் நிம்மதி அடைந்தவளாய் அதனை தன் ஹேன்ட் பேக்கில் வைத்தாள்.
அப்பொழுதுதான் விந்தியா அந்த அறையைக் கவனித்தாள். முற்றிலும் அலங்கோலமாய் கிடந்தது. ஆஷ் டிரே சிகரெட் துண்டுகளால் நிரம்பி இருந்தது. கலங்கிய கண்களோடு அந்த டிரேயில் இருந்தவற்றை குப்பைத்தொட்டியில் கொட்டினாள். அங்கே படுக்கையில் கிடந்த அவளுடைய ஃபோட்டோ அவனின் மனம் இந்தப் பிரிவால் எத்தனை வேதனை கொண்டிருக்கும் எனப் புரிய வைத்தது.
இந்த யோசனைகளுக்கு இடையில் ஆதியின் பைக் சத்தம் அவளின் காதில் ஒலித்தது. விந்தியா பால்கனி வழியாக எட்டிப்பார்க்க அவன் காற்றைப் போல வேகத்தில் வந்திறங்கி மின்னலென வீட்டினுள் நுழைந்தான்.
ஏதோ கோபத்தில் வருகிறான் என்பதை அவன் நடையில் புரிந்து கொண்டவள், இந்தச் சமயத்தில் அவன் எதிரே போய் இந்நிலையில் நின்றாள் என்னாகுமோ என்றெண்ணி கப்போர்ட்டுக்கு பின்னாடி இருந்த இடைவெளிக்குள் மறைந்து கொண்டாள்.
ஆதித்தியா கோபத்தோடு அறைக்கதவை திறந்து படாரென மூடினான். அந்தச் சத்தம் விந்தியாவைக் கலங்கடித்தது.
சமுத்திரன் மீதுள்ள கோபத்தால் அறையில் அப்படியும் இப்படியும் நடந்தான். திடீரென அந்த ஆஷ் டிரேவை பார்த்து குழப்பம் கொண்டவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். விந்தியாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏன் இப்படி செய்தோம் எனத் தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.
ஆதித்தியாவின் முகபாவனை மாறி அமைதியாக சோபாவின் மீது சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டான். நேரம் கடந்து போக பொறுமை இழந்தவனாய், “எவ்வளவு நேரம் கண்ணாமுச்சி விளையாடுவ… வெளிய வா விந்தியா” என்றான்.
விந்தியாவிற்கு படபடப்பு அதிகமானது.