id-16

35

நீதானே என் உயிர்

விந்தியா அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றாள். இருவேறு உறவுகளில் எதை இழப்பாள். மனதில் புரியாத கற்பனைகள் அவளை வேதனைப்படுத்தின. இப்படி அலைப்பாய்ந்து கொண்டிருந்த மனதின் நினைவுகளைக் கடிவாளம் போட்டு நிறுத்தி விட்டு வருணை அழைத்தாள்.

அவள் கையிலிருந்த போனில் சிவாவிற்கு முயற்சி செய்தாள். அதே நேரத்தில் இறங்கி வந்த வருணிடம் ஆதித்தியாவிற்கு ஃபோன் செய்யச் சொன்னாள்.

சிவாவிற்கு இணைப்பு கிடைத்த போதும் அவன் அந்த அழைப்பை ஏற்கவில்லை. ஆதித்தியாவின் ஃபோன் அணைப்பில் இருந்ததாக வருண் சொல்ல விந்தியாவிற்கு பதட்டம் அதிகரித்தது.

அவளின் பதட்டத்துக்கான காரணத்தை வருண் கேட்டுக் கொண்டிருக்க, அவன் சொல்வதைக் காதில் கூட வாங்காமல் விந்தியா சுபாவுக்கு ஃபோன் செய்தாள்.

“சொல்லுங்கண்ணி”

“சுபா நீ எங்க இருக்க?”

“கோர்ட்டிலிருந்து கிளம்பி வீட்டுக்குப் போய்டிருக்கேன்”

“ஆதி உன் கூட இருக்காரா?”

“இல்ல அண்ணி… அவரு தனியா கிளம்பிட்டாரு”

“ஒ… சிவா… பத்தி தெரியுமா?”

“அவரு கமிஷனர் ஆபிஸ் போணும்னு சொல்லிட்டிருந்தாரு”

“சரி… சரி ஓகே” என்று சொல்லி வேகமாக அழைப்பினை துண்டித்தாள்.

“கமிஷனர் ஆபிஸுக்கு ஃபோன் பண்ணு வருண்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வருணின் ஃபோன் ஒலித்தது.

விந்தியா போனை அவனிடமிருந்து பறித்து, “ஹெலோ” என்றாள்.

மறு புறத்தில் அவள் தான் எதிர்பார்த்த குரல் ஒலிக்கிறதா என கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் குரல் எதுவும் கேட்காமல் மெளனமாகவே இருந்தது.

ஆதித்தியாவிற்கு விந்தியாவின் குரல் தெரியாமல் போகுமா என்ன? திடீரென்று அவள் குரல் கேட்டதும் வார்த்தைகள் வராமல் அமைதியானான்.

விந்தியாவின் தவிப்பு அதிகரிக்க, “ஹெலோ சிவா… பேசுடா” என்றதும் ஆதித்தியா ஃபோனை அருகில் நின்றிருந்த சிவாவிடம் கொடுத்தான்.

“சொல்லு விந்தியா”

“சிவா உனக்கு ஒண்ணும் இல்லயே?”

விந்தியாவின் குரலில் இருந்த பதட்டம் அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பது புரிய ஒரே வரியில், “வீ ஆர் ஆல் ரைட்” என்றான்.

“ஆதித்தியாவையும் சேர்த்து சொல்றியா?”

“ஆமாம் விந்து… நான் வீட்டுலதான் இருக்கேன்… நீ கிளம்பி வா. நேரில் பேசிக்கலாம்” என்றான்.

அவனின் வார்த்தைகளைக் கேட்ட பின்புதான் விந்தியா நிம்மதி பெருமூச்சே விட்டாள்.

விந்தியா சிவாவின் வீட்டை அடைந்தாள். என்னதான் விந்தியாவிற்கு நிம்மதி ஏற்பட்ட போதும், நேரில் நடந்ததைத் தெரிந்து கொண்ட பின்புதான் அவளுக்கு முழுமையான தெளிவு ஏற்படும்.

விந்தியா உள்ளே நுழைந்ததும் சற்றும் எதிர்பாராமல் ஆதித்தியா ஹாலிலே அமர்ந்து கொண்டு காபி குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

விந்தியாவை ஆதித்தியா பார்த்த பார்வையில் ஏக்கத்தோடு நிரம்பிய காதல் மொத்தமும் அவனின் கண்களில் வெளிப்பட்டது. அவள் அவனைக் கண்ட தருணத்தில் இதயத்தில் ஏற்பட்ட காதல் ஊற்றை மறைத்தபடி கடந்து வந்தாள். அந்த நேரத்தில் அவள் முன்னே வந்து நின்ற சிவாவை பார்த்தவுடன் அவளுக்குக் கண்ணீர் பொங்கியது.

“என்னாச்சு விந்து… ஏன்டி அழற?”

அவளுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. உயிர் போய் உயிர் வந்தது போல் இருந்தது அவளுக்கு. கண்ணீரோடு அவனின் தோள் மீது சாய்ந்து கொண்டவளை தட்டி சமாதானப் படுத்தினான்.

“ஏய்… நாங்க நல்லாதனே இருக்கோம்”

அவள் சிவாவின் மீது சாய்ந்து கொண்டு அழுவதை வனிதா, வருண், சரோஜா, தனசேகரன் எல்லொருமே பார்த்து புரியாமல் நின்றனர். அவர்களின் கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான நட்பு எல்லோருக்கும் புரிந்த போதும் ஆதித்தியா அங்கே அமர்ந்திருப்பது கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தியது.

ஆனால் ஆதித்தியா முகத்தில் சலனமோ பொறாமையோ இல்லை. அந்த அழகான நட்பை அவன் நன்றாகவே புரிந்து கொண்டான்.

ஒரு பெண்ணிற்கு அன்பான கணவன், பண்பான காதலன் அமைவது அத்தனை கடினமல்ல. ஆனால் அவளைச் சக உயிராய் பாவித்து, வெறும் தூய்மையான அன்பை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டு, துவண்டு போகும் போது தோள் கொடுக்கும் தோழன் அமைவது அபூர்வமானது என்பதை ஆதித்தியா அன்று உணர்ந்து கொண்டான்.

விந்தியா கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைக்க, “உனக்கெப்படி தெரிஞ்சுது… எங்க இரண்டு பேருக்கும் ஆபத்துனு?”

“அப்படின்னா உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுச்சா?” என்றாள்.

“அது தெரிஞ்சதுனால தானே நீ பதட்டமாய் இருக்க”

அப்பொழுதுதான் விந்தியா மனோஜ் சொன்னவற்றை விளக்கமாக உரைத்தாள்.

“பாத்தியா ஆதி… நம்ம இரண்டு பேரையும் போட்டுத்தள்ள மனோஜ்தான் ஏற்பாடு பண்ணிருக்கான்”

ஆதித்தியா எழுந்து நின்று கொண்டு, “அதான் அவன் நினைச்சது நடக்கலயே”என்றான்.

அவர்கள் இருவரும் இயல்பாகப் பேசிக் கொண்டது விந்தியாவிற்குக் குழப்பமாய் இருந்தது. அவர்கள் கார சாரமாய் மனோஜை பற்றிப் பேசிக் கொண்டிருக்க விந்தியா பார்க்காத அதிசயத்தைப் பார்ப்பது போல அவர்களையே பார்த்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் ஆதித்தியா புறப்படுவதாகச் சொன்னதும் அவர்கள் இருவரும் கட்டியணைத்து கொண்டனர். விந்தியாவின் கரு விழிகள் அசையவே இல்லை. ஆதித்தியா சிவாவை கட்டிக் கொண்டே விந்தியாவை அவன் நோக்கிய போதுதான் அவள் மீண்டும் சுயநினைவு பெற்றாள்.

ஆதித்தியா சிவாவிடம் சொல்லிவிட்டு விந்தியாவைக் கடந்து சென்றவன் மீண்டும் அவளை நோக்கி திரும்பி வந்தான். அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு விந்தியா தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

“பாத்து பத்திரமா இரு… ஏன்னா நீதான் என்னுடைய உயிர்” என்று சொன்ன மறுகணமே ஆதித்தியா வாசலை அடைந்தான். மின்னலைப் போலக் காரில் மறைந்து போனான்.

அங்கே இருந்த எல்லோர் முன்னிலையிலும் அவன் அப்படிச் சொன்னதும் விந்தியாவிற்கு வெட்கத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் சொல்ல முடியாத உணர்வு முகத்தில் தென்பட்டது.

சிவா அவள் அருகில் வந்து, “ஹீ இஸ் மேட்லி லவ்விங் யூ” என்றான்.

விந்தியா அந்த எண்ணங்களைத் தவிர்த்தபடி, “அத விடு சிவா… என்ன நடந்ததுனு முதல்ல சொல்லு” என்றாள்.

“என் வாழ்கையில நான் பார்க்காத ஹாரிபிள் அக்ஸிடன்ட்…”

“அக்ஸிடென்டா?”

“நான் கமிஷனர் ஆபிஸ் போயிட்டு இருந்த போது ஆதி திடீர்னு என் பைக்கை ஓவர்டேக் பண்ணி நிறுத்தினான்… ஏதோ பிரச்சனை பண்ண போறான்னு நினைச்சேன்…

ஆனா என் முன்னாடி வந்து ‘சாரி… நான் உங்களைச் சரியா புரிஞ்சிக்கல’னு சொன்னதுமே… எனக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு… அப்புறம் ஆதித்தியாக்கிட்ட பேச பேச எனக்கும் ஆதி மேலே இருந்த கோபம் மனவருத்தம் எல்லாம் சுத்தமா காணாமா போச்சு…

எப்படியோ இரண்டு பேரும் பேசிட்டிருந்துட்டு கிளம்பினோம்… அந்தப் பெரிய ரோட்டில ரொம்ப நிறைய வண்டிங்க கூட வரல. ஆதித்தியாதான் முதல்ல காரை ஸ்டார்ட் பண்ணான்… நானும் பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது ஒரு ஃபோன் வந்துச்சுப் பேசிட்டிருந்தேன்.

அந்த நேரத்தில் ஆதி சைட் மிரர்ரில் ஸ்பீடா வந்த பெரிய கண்டய்னர் பார்த்திருக்கான்… ஏதோ மனசுக்குத் தப்பா பட்டிருக்கு… ஆதித்தியா நினைச்சிருந்தா அவன் தன்னை மட்டுமே காப்பாத்திட்டு இருக்கலாம். பட் ஆன் தி ஸ்பாட் இறங்கி ஓடி வந்து என்னையும் பைக்கில இருந்து கீழே தள்ளி… ஜஸ்ட் ஒன் செகண்டில் நடந்து போச்சு.

அந்தக் கண்டய்னர் வந்த ஸ்பீடுக்கு என் பைக்கை அடிச்சி தூக்கிடுச்சு… ஆதித்தியாவோட காரையும் மோதி கம்பிளீட் டேமேஜ்… இரண்டு பேரும் மயிரிழையில் உயிர் தப்பினோம்”

விந்தியாவிற்கு சிவா சொல்வதெல்லாம் படக் கதை போலத் தோன்றிற்று. அப்படியே திகலாய் அமர்ந்திருந்த விந்தியாவின் தோளை சிவா தட்டினான்.

“என்ன விந்து பயந்திட்டியா?”

“பின்ன… ஏதாவது தப்பா நடந்திருந்தா?”

“நடந்திருக்கலாம் பட் நடக்கலியே… ஆனா இந்த ரணகளத்திலும் நீ ஆதித்தியாக்கிட்ட பேசல. என்னதான் இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாதுடி. ஆதித்தியாவுக்கு ஏதாவது நடந்திருந்தா அப்பவும் இப்படிதான் இருப்பியா விந்து?”

“நிறுத்து சிவா… அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது”

“நடந்தா?” என்றான் சிவா.

“நடக்காது…” என்றாள் விந்தியா.

உடனே வருண் முன்னாடி வந்து, “அப்படி எல்லாம் நடக்காது மாமா… ஏன்னா ஆதி மாமாவோட உயிர்தான் இங்க இருக்கே”

விந்தியா அவர்கள் பேசுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோபித்துக் கொண்டு எழுந்து சென்றாள்.

மாளிகை போல ஒரு வீட்டில் சதிகார கூட்டம் நடைப்பெற்று கொண்டிருந்து. சமுத்திரன், வேணு மகாதேவன், வி. டி என்கிற வித்தியாதரன், மனோஜ்.

நம் கதையின் பெரும்புள்ளி என்பதால் ரொம்பவும் தாமதமாகவே வித்தியாதரனை பார்க்கிறோம். ஆஜானுபாகுவான உடல், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கறுப்பு கலந்த வெள்ளை முடி, பார்பவர்களை மிரட்டும் தோரணை, நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து கொண்டு மக்களோடு சேர்த்து கடவுளையும் ஏமாற்றுகின்ற வேஷம்.

இப்படியாக ஒரு பெரிய சோபாவில் நடுநாயகமாய் உட்கார்ந்திருக்க இரு பக்கங்களில் வேணுவும் சமுத்திரனும் அமர்ந்திருந்தனர். மனோஜ் மட்டும் இப்படியும் அப்படியுமாய் நடந்து கொண்டிருக்க முதலில் வித்யாதரனின் கர்ஜனை மிகுந்த குரல் அவன் மீது பாய்ந்தது.

“முட்டாள்… போலீஸ்காரனை கொல்றது என்ன விளையாட்டு காரியமா? அது நமக்கு நாம வைச்சிருக்கிற கொல்லி”

“போதும் நிறுத்துங்க… அந்த ஆதித்தியா சிவா இரண்டு பேரில ஒருத்தனாவது செத்திருந்தா அந்த விந்தியாவைக் கதிகலங்க வைச்சிருப்பேன்” என்றான் மனோஜ்.

“போயும் போயும் ஒரு பொம்பளைக்காக…” என்று வித்யாதரன் சொல்ல சமுத்திரன் பதில் சொன்னான்.

“ஒருத்தியா? அவ ஒரு ஒன் உமன் ஆர்மி… இந்த கேஸில நமக்கு எதிரா பெரிய பிளான் போட்டிருக்கா” என்றான் சமுத்திரன்.

“அதுக்கு உங்க மனைவியும் உடந்தையா?” என்று வேணு கேட்க,

“அவளால எல்லாம் நம்மள ஒண்ணும் பண்ண முடியாது” என்றான் சமுத்திரன்.

வித்தியாதரன் இவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டு,

“இப்போ என்னோட ஒரே கவலை இந்த கேஸ் மட்டும்தான்… அதை முதலில் முடிக்கணும்… என் பக்கம் பார்வை திரும்பாம இந்த கேத்ரீன் கேஸ் முடியணும். அப்புறம் மனோஜ் நீ செய்யுறது ஏதாவது என்னோட அரசியல் சமாராஜ்யத்துக்கு பிரச்சனையா இருந்துச்சு… மகன்னு கூடப் பார்க்க மாட்டேன்”

அந்த மிரட்டல் சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து மிரட்டியது.

இவர்களின் சதிகார கூட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், ஆதித்தியா சோபாவில் படுத்துக்கொண்டு எதைப் பற்றியுமே கவலை இல்லாமல் விந்தியாவைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். இருளில் சிகரெட் பாக்கெட்டை தேடி அவள் மீது தான் விழுந்ததும், அவள் தன்னைக் கடிந்து கொண்டதை பற்றி எண்ணி தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

இந்தச் சத்தம் சந்திரகாந்த்திற்குக் கேட்க அவர் உள்ளே வந்து “ஆதி” என்று அழைத்தார்.

“டேட்” என்று சோபாவிலிருந்து எழுந்து கொண்டான்.

“நீ ரொம்ப நல்ல மூடுல இருக்க போல”

ஆதித்தியா லேசாகப் புன்னகை புரிந்தான்.

“அப்படின்னா சரி… நான் கேட்க வேண்டியதை கேட்டுறேன். ஏன் இன்னமும் நீயும் விந்தியாவும் பிரிஞ்சி இருக்கீங்க”

“அத நீங்க உங்க மருமகள் கிட்டதான் கேட்கணும்”

“அப்போ இந்தப் பிரச்சனையில உன்னோட பங்குனு எதுவும் இல்லையா ஆதி?”

ஆதித்தியா மெளனமாக நின்றான்.

“நீ தப்புச் செஞ்சிருந்தா கொஞ்சமும் யோசிக்காம அவ கிட்ட போய் மன்னிப்பு கேள்… அப்பதான் இந்தப் பிரச்சனை சால்வ் ஆகும்… புரியும்னு நினைக்கிறேன்” என்று சொல்லி அவன் தோள்களைத் தட்டி விட்டு அறையை விட்டு வெளியேறினார்.

அப்போழுதுதான் ஆதிக்கு தோன்றியது. இன்றளவில் தான் அவளிடம் மன்னிப்பே கேட்கவில்லை…

பாவம்! ! !

ஆதித்தியா நாளை நடக்கப் போகும் விபரீதத்தைப் பற்றி யோசிக்காமல் ஏதேதோ நினைவுகளில் இருந்தான்.

36

ஊடலும் மோதலும்

விடிந்தவுடன் ஆதித்தியா விந்தியாவை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தயாராகிக் கொண்டிருந்தான். அவள் நிச்சியம் அத்தனை சுலபத்தில் மன்னிக்க மாட்டாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அவளைப் பார்க்க அவனுக்குக் கிடைத்த ஒரு காரணம்.

ஆதித்தியா தன் அறையில் இருந்து இறங்கி வந்தவன் சந்திரகாந்த் எப்போதும் போல் ஹாலில் இல்லாததினால் சண்முகத்திடம், “டேட் எங்கே?” என்று கேட்டான்.

“அவரு இன்னும் எழுந்திருச்சே வரலய்யா?” என்றான் சண்முகம்.

“இவ்வளவு நேரம் தூங்க மாட்டாரே” என்று சொல்லிக் கொண்டே சந்திரகாந்த்தின் அறை கதவை திறந்தான்.

அவர் ரொம்பவும் ஆழமான உறக்கத்தில் இருந்தது போல் ஆதித்தியாவிற்குத் தோன்றியது. அவர் உறக்கத்தைக் கலைக்க வேண்டமென்று ஆதித்தியா எண்ணமிட்டு வெளியே செல்ல எண்ணியவன் மீண்டும் திரும்பி வந்து சந்திரகாந்தை எழுப்ப யத்தனித்தான்.

தொட்டதும் ஆதித்தியா அதிர்ச்சியோடு சுவற்றோரமாய் விழுந்து விட்டான். சில்லென்று இருந்த அவர் உடல் அவனுக்கு எதிர்பாராத சந்தேகங்களை எழுப்ப அதை நம்ப முடியாமல் சந்திரகாந்தின் அருகில் சென்று “டேட்… டேட்”என்று உலுக்கினான். ஆனால் எந்த வித எதிர் விளைவுகளும் ஏற்படவில்லை. ஆதித்தியாவிற்குப் புரிந்து போனது. அங்கே உறங்குவது போலத் தெரிவது சந்திரகாந்தின் உயிரற்ற உடல் மட்டுமே.

ஆதித்தியா தன் தந்தையின் பாசத்திற்காக இளம் வயதிலிருந்து ஏங்கியவன். பெரும் பிரிவிற்குப் பிறகு புரிதலால் கிடைத்த அன்பு ஒரு நொடியில் தோன்றிய வானவில் போலக் கரைந்து போனதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சிலையெனவே அமர்ந்திருந்தான்.

மரணத்தின் வலி மரணிப்பவர்களை விட அதனை எதிர்கொள்பவர்களுக்கே பெரும் துயரை ஏற்படுத்தும் என்பதை ஆதித்தியா அவன் வாழ்வின் பேரிழப்பின் மூலம் உணர்ந்து கொண்டான்.

விந்தியாவிற்கு சந்திரகாந்தின் மரணம் அதிர்ச்சியையும் சொல்ல முடியாத பேரிழப்பையும் ஏற்படுத்தியது. கண்ணீரோடு கரைந்தவளை யாராலும் தேற்ற முடியவில்லை. சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழுதவளின் முன்பு சாக்ஷி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வந்து நின்றார்.

“என்ன விந்தியா இது? உன் தைரியத்தைப் பார்த்து நான் எவ்வளவு வியந்திருக்கேன். நீயா இப்படி ஓரே நிமிஷத்தில் உடைந்து போயிருக்கிறது? நோ… நீ எப்பவும் போல் அதே மன உறுதியோட இருக்கணும்… அதுதான் உன் மாமனாரோடு விருப்பமும் கூட.

உறக்கத்திலேயே மரணிக்கிற அதிர்ஷடம் அத்தனை சீக்கரத்தில் யாருக்கும் கிட்டாது… ஹி இஸ் ப்ளஸ்ட். நீ இப்படித் துவண்டு போகக் கூடாது.

ஆதித்தியாவை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு… அவனின் நிலைமை ரொம்பவும் கஷ்டமா இருக்கு… வேதனையைத் தேக்கி வைக்கக் கூடாது… அது நம்மையே மூழ்கடிச்சிடும்… டே கேர் ஆஃப் ஹிம்” என்று சொல்லி விந்தியாவின் தலையைத் தடவி சமாதானம் செய்து விட்டு சென்றார்.

அப்பொழுதுதான் விந்தியா ஆதித்தியாவை கவனித்தாள் அவன் உலகமே மறந்த நிலையில் இருந்தான். அவன் கண்களில் அழுகைக்கு பதிலாய் ஏமாற்றத்தின் அதிர்ச்சியே நிறைந்திருந்தது. விந்தியா சுபாவை அழைத்து ஆதித்தியாவிடம் பேசச் சொன்னாள்.

அவள் அவனிடம் சொன்ன எந்த வார்த்தையும் காது கொடுத்த கேட்கவில்லை. சிவா ஆதியை நெருங்கி வந்து அவனுக்கு நிலைமையைப் புரிய வைத்தான். காலம் கடந்த ஞானத்தால் தன் தந்தையின் அன்பை புரிந்து கொள்ளாமல் போனோமோ என்று ஆதியை அழுத்தி கொண்டிருந்த துக்கம் பொங்கி கொண்டு கண்ணீராய் வெளியே வந்தது.

என்னதான் ஆதித்தியா மனதில் இருந்த வேதனை வெளிப்பட்ட போதும் அவன் தந்தையை இத்தனை நாளாய் நிராகரித்ததினால் ஏற்பட்ட குற்றவுணர்வு ஆறாத வடுவாய் அவன் வாழ்வின் இறுதி வரை தங்கி விடப் போகிறது.

சந்திரகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த எல்லோருமே நிலைகுலைந்து போயிருந்தனர். அதிலும் விந்தியா வழிந்த கண்ணீரை துடைத்தபடியே இருக்க ஆதித்தியா எத்தனை மணி நேரம் தன் அறையினுள் அடைந்து கிடந்தானோ?

இந்தத் துயரத்தைக் கடந்து சிவா புறப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தான். மரணம் நிகழ்ந்த வீட்டில் சொல்லி விட்டுப் போகக்கூடாது என மாதவி சொல்ல, சண்முகம் அவர்களின் நிலைமையைச் சொல்லி ஆதித்தியாவை கீழே அழைத்து வந்தான்.

எல்லோருமே புறப்பட விந்தியா அவர்களோடு சேர்ந்து கொண்டாள். அவளின் செயல் எல்லோருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது. இந்நிலையிலும் என்னை விட்டு பிரிந்து போக வேண்டுமா என்று விந்தியாவைப் பார்க்க அவள் அவன் பார்வையை நிராகரித்தாள்.

சிவா உடனே விந்தியாவிடம், “இந்த நேரத்தில் நீதான் ஆதித்தியா கூட இருக்கணும் விந்து… அவரைத் தனியா விட்டு வருவது சரியல்ல” என்றான்.

“நீ வேணும்னா இங்க இரு சிவா… நான் என்ன வேண்டாம்னா சொன்னேன்? எனக்கு இனிமே இங்கு இருப்பதற்கான பிடிப்பும் இல்லை… எந்த உறவும் இல்லை” என்றாள்.

ஆதிக்கு விந்தியாவின் நிராகரிப்பு பழகிப் போனது. விந்தியாவிற்கு கல் நெஞ்சோ என்று நம் வாசகர்கள் யோசிக்கக் கூடும். விந்தியா வனிதாவின் காதலுக்காக சிவாவை நிராகரித்த போதே அவள் மனம் இறுகிய பாறையாகத்தானே இருந்தது. இன்று வரை அவளின் பிடிவாத குணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.

விந்தியாவிற்கு ஆதித்தியாவின் மீதான காதல் எத்தனை பெரியதோ அத்தனை பெரியதாக இருந்தது அவன் விருப்பத்தை அவள் மீது தினித்ததினால் ஏற்பட்ட கோபம்.

விந்தியா அவர்கள் யார் சொல்வதையும் கேட்காமல் வேகமாய் வெளியேறினாள். சிவா மாதவியின் காதில் ஏதோ சொல்ல, சில மணி நேரங்களில் ஆதித்தியாவையும் பிராயத்தனப்பட்டு சம்மதிக்க வைத்து கூடவே அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டை அடைந்தனர்.

விந்தியா அவர்கள் வரும் முன்னரே வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தாள்.

சற்றும் விந்தியா எதிர்பாராத விதமாய் ஆதித்தியாவும் அவர்களோடு வர அவளின் அழகிய கண்கள் அகல விரிந்தன. நந்தினி ஆதித்தியாவை விந்தியாவின் அறைப்பக்கம் அழைத்துச் செல்ல விந்தியா வேகமாய் வந்து வழிமறித்தாள்.

“நில்லு நந்தினி… எங்க கூட்டிட்டு வந்திருக்க? இப்போ எங்க அழைச்சிட்டு போற?”

“வேறெங்க அண்ணி… உங்க ரூமுக்குத்தான்…” என்று நந்தினி சொன்னதும் பதிலுக்கு ஏதோ சொல்ல இருந்த விந்தியாவை மாதவி இழுத்துக் கொண்டு போனாள்.

“கை விடும்மா… எதுக்கு இங்க அவரைக் கூட்டிட்டு வந்தீங்க?”

மாதவி பதிலுக்குக் கோபமாக, “ஏன் கூட்டிட்டு வரக் கூடாது? நீ செலவு பண்ணி கட்டின வீடுங்கிற திமிரா… இல்ல இங்க நீ வைச்சதுதான் சட்டமா?” என்றாள் மாதவி அதட்டலாக.

“அய்யோ! அப்படி எல்லாம் இல்லம்மா”

“அப்புறம் வேறெப்படி?” என்றாள் மாதவி.

“அவருக்கும் எனக்கும் ஒத்துப்போகாது… நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்க முடியாது” என்று விந்தியா சொல்ல மாதவி பதில் பேசாமல் பளீரென்று கன்னத்திலேயே அறைந்தாள்.

விந்தியா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, “என்னவோ பண்ணுங்க” என்று திரும்பியதும்,

சிவா நின்று கொண்டு, “இதெல்லாம் உனக்குப் பத்தாதுடி… அத்தை இன்னும் இரண்டு கொடுத்திருக்கணும்” என்றான்.

“போடா… எனக்குத் தெரியும்…இதெல்லாம் உன் பிளான்தானே! உன்னை அப்புறம் பாத்துக்கிறேன் “ என்று சொல்லிவிட்டு அவனைக் கடந்து வந்தாள்.

ஆதித்தியா தன் அறைக்குள் சென்றதை பற்றி யோசித்தபடி அவள் தன் அறையை எட்டிப் பார்த்தாள்.

சிந்து ஓடி வந்து ஆதியிடம் பேசிக் கொண்டிருக்க, அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் அவன் பொறுமையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

சிந்து அவனிடம், “நான்தானே உங்க டார்லிங்… நீங்க என் கூட எங்க வீட்டில வந்து இருங்க” என்றாள்.

விந்தியா மகிழ்ச்சியோடு ஆதியை பார்த்து, “இது நல்ல ஐடியா…” என்றாள்.

உடனே ஆதி சிந்துவின் முகத்தைப் பார்த்து, “நீங்க என் குட்டி டார்லிங்… அவங்க என் பெரிய டார்லிங்” என்றான்.

விந்தியா அவனை முறைத்தபடி பார்க்க அவன் முகத்தில் நகைப்பு மாறவில்லை.

சிந்துவின் முகம் சுருங்கிப் போக, “உங்களுக்கு என்னைப் பிடிக்குமா… அவங்களைப் பிடிக்குமா?” என்று மழலையாகப் பேச அவன் சொன்ன விதத்திலேயே அவனிடம் கேள்வியாகத் தொடுத்தாள்.

“இப்படிக் கேட்டா…” என்று ஆதி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு,  “சரி… உனக்குச் சாக்லேட் பிடிக்குமா… இல்ல ஐஸ்கீரீம் பிடிக்குமா?” என்று கேட்க சிந்து யோசிக்காமல்

“இரண்டுமேதான்” என்று அவள் சொல்ல அவனும் அவளைப் போலே தலையாட்டியபடி,

“எனக்கும் இரண்டுமேதான்” என்றான் விந்தியாவைப் பார்த்தபடி!

அவன் பார்வையைத் தவிர்க்க விந்தியா அவன் பதிலை கவனிக்காமல் அங்கிருந்து சென்றாள்.

அந்த அறையும் படுக்கையும் சிறியதானாலும் இப்போதைக்கு அதுதான் அவனுக்குச் சொர்க்கம். விந்தியா தன்னோடு படுக்கையில் உறங்க மாட்டாள் என்று ஆதித்தியாவிற்குத் தெரிந்ததால் அவனே தரையில் படுத்துக் கொண்டான்.

அவன் தரையில் படுப்பது விந்தியாவிற்கு நெருடலாய் இருக்க, அந்தக் காரணத்திற்காக அவனிடம் இரவெல்லாம் சண்டை போட்டு கொண்டிருந்தாள். ஊடலும் மோதலுமாய் அவர்கள் காதல் நித்தம் நித்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

மாதவியோ ஆதித்தியாவை மகனை விட ஒரு படி அதிகமாகவே கவனித்துக் கொண்டாள். தந்தையை இழந்தவனுக்கு அன்னையின் அன்பு கிடைத்தது போல் உணர்ந்தான். அவன் மனதை அழுத்திக்கொண்டிருந்த கவலை எல்லாம் காற்றைப் போல் லேசானது.

இதற்கிடையில் ஹோட்டல் ஆதித்தியாவின் நிர்வாகப் பொறுப்புகள் குவிந்திருப்பதாக மேனேஜர் ரமேஷ் நேரில் வந்து ஞாபகப்படுத்த, விந்தியா தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொண்டாள். இறுதியாக விந்தியாவின் பிடிவாதத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் நிர்வாகப் பொறுப்புகளை ஆதித்தியாவே ஏற்றுக் கொண்டான்.

இங்கே நிலைமை இப்படி இருக்க ஆதித்தியாவின் தந்தை இறந்த காரணத்தால்… அவனால் ஆஜாராக முடியாது எனச் சுபா பெட்டீஷன் போட்டதால், அதை ஏற்றுக் கொண்ட நீதபதி கேஸை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

அவளுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சுபா வழக்கிற்கான குறிப்புகளை ரொம்பவும் தெளிவாக எடுத்துக் கொண்டாள். ஆனால் அது சமுத்திரனுக்குப் புரியாத வண்ணம் சுருக்கெழுத்துக்களாய் எழுதி வைத்திருந்தாள்.

அவளுக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் குழந்தைகளின் சின்னச் சின்ன சேட்டைகளையும், சண்டைகளையும் காரணம் காட்டி அவளிடம் எரிந்து விழுந்தான். அவனின் கோபத்திற்கு அர்த்தம் புரிந்த போதும் சுபா மௌனமாகவே இருந்தாள்.

நாட்கள் கடந்து செல்ல அன்று காலை பத்து மணி…

நீதிமன்றத்தில் கேத்ரீனின் வழக்கிற்கான இரண்டாவது அமர்வு.

போனமுறை போல விந்தியா வராமல் தவிர்க்க முடியவில்லை. அவளையும் விசாரிக்க வேண்டி கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் வந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிருபர்கள் கேத்ரீன் கொலை வழக்கின் விசாரணை பற்றிய செய்தியை சேகரிக்க வந்தவர்களுக்கு அதுவரை தெரியாது… இன்னும் சில மணி நேரங்களில் இந்தக் கேஸ் பெரும் சென்சேஷனல் ந்யூஸாக மாறப் போகிறது என்று..